தன் மருமகள் ஒரு வாரிசைப் பெற்று தரப் போகின்றாள் என்ற மகிழ்ச்சி ராகுவை முழுமையாக ஆட்கொள்ள, பிரபாவோடு வந்தார் சர்வா வீட்டிற்கு பழ வகைகள் நிரம்ப.
பிரபாக்கு அது ஒரு அதிர்ச்சியான நியூஸ் தான், எப்பிடி…?என யோசித்தார்.
அன்று பிருந்தா கல்யாணத்தின் நாளில் சர்வா மீனாட்சியிடம் பேசியது பிரபா காதில் விழுந்தது அறைக்கு வெளியில் நின்றவருக்கு.
அதை கேட்டு சந்தோஷமானது அன்று பிரபா மட்டுமே. இனி போட்டி கிடையாது, யுவிக்கு அப்புறம் அன்பு வாரிசுகளுக்கு தான் சொத்து என பேராசைப்பட்டார்.
ஆனால் இன்று அம்லு கர்ப்பமாக இருக்காள..? என சற்று வியந்து, என்ன தான் நடக்குதுனு பார்க்க வந்தார் கணவரோடு.
அம்லு, சர்வா காலேஜ் விட்டு வரவில்லை.
மாலை ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்தனர் இருவரும், சர்வா இருவரையும் பொதுவாக அழைத்து விட்டு, தன் அறைக்கு சென்று உடை மாற்றி வந்தான்.
ராகு மருமகளிடம் தன் சந்தோஷத்தை கொட்டினார் எனலாம், “அம்லு! இனி உனக்கு என்ன தேவையோ ஒரு ஃபோன் பண்ணு மாமா உடனே வாங்கி அனுப்பிடுறேன்”என்றார்.
“ஆமா! ஆமா! உன் மாமனார் அப்பிடியே மைசூர் மகாராஜா, கேக்குறதை வாங்கி வண்டி வண்டியா அனுப்பிடுவார்”என நக்கலடித்தார் பிரபா.
“நீ வேணா மைசூர் மகாராஜா பொண்டாட்டியா இல்லாம இருக்கலாம் ஆனா எம் புள்ள அந்த சர்வானந்தனின் அப்பா, எப்ப எத வேணாலும் வண்டி என்ன கண்டனைரிலே வாங்குவான் மருமகளுக்காக”என்றார் பாட்டி பதிலுக்கு.
“இல்ல! இவ கல்யாணத்தனைக்கு சர்வா உங்க கிட்ட, அத்த கிட்ட, அப்புறம் இவ அம்மா கிட்ட பேசினதைக் கேட்டேன். அந்த கணக்குப்படி தான் யோசிக்குறேன்”என்றார் முகத்தைச் சுளித்து.
அம்லு சர்வாவை மெதுவாகப் பார்த்தாள்.
“என்னம்மா உளரிட்டு இருக்க, அண்ணா என்ன பேசினார்..?”
“ஆமான்டி! நடந்ததை சொல்றேன்.”
பாட்டியும், ராகுவும் செம கடுப்பாகினர்.
சர்வா ஏற்கனவே இருந்த குழப்பத்தில் இந்தம்மா கல்லை விட்டு எரிய, அது மேலும் குழம்பியது.
“அத்த! அதை தான் என்னனு கேக்குறோம்..”என்றான் பரத் சற்று கடுப்பாக.
“ம்ம்ம்! யுவிக்கு அப்புறம் எங்களுக்கு புள்ளையே வேணாமுனு முடிவு எடுத்திருக்கோமுனு என்னமோ வசனம் பேசினான் அன்னைக்கு ஆனா அதிலிருந்து சரியா ரெண்டாவது மாசம் இவ கர்ப்பம் அதான் என்ன கணக்குனு கேட்டேன்”
பிருந்தா கடுப்பாகி”இதான் உன் சந்தேகமா, இப்ப என்ன அன்னையில் இருந்து இன்னைய வரை கணக்கு சரியா தானே இருக்கு, அண்ணி ஒன்னும் அஞ்சு மாசம் கர்ப்பமுனு சொல்லலையே..? இது எல்லாம் ஒரு சந்தேகமா..? அசிங்கமா இல்ல உனக்கு. இது அவங்க வாழ்க்கை காலையில் வேணாம் தோன்றி இருக்கும் மதியம் வேணுமுனு நினைச்சி இருப்பாங்க, அதுக்காக அவங்க சொல்லிட்டா மாறக் கூடாத…? நாங்க கூட தான் ரெண்டு வருசம் கழிச்சு பெத்துக்க பிளான் பண்ணி இருக்கோம். ஒரு வேளை நாளைக்கே ஆசை வந்தா உடனே பெத்துப்போம். அதுக்காக நீ என் கிட்ட வந்து கேப்பீயா..? ஏன்டி பிள்ளை பெத்துக்குறனு..”என்றாள் சாட்டையடியாக.
பிரபா அவளை முறைக்க, “அப்பிடி கேளுடி என் தங்கம், நல்லா சொரணை வரட்டும்”என்றார் பாட்டி.
“இப்ப நான் என்ன தப்பா கேட்டேன், சம்பந்தப்பட்ட சர்வாவே சும்மா இருக்கான்”என்றார் சர்வாவை கோர்த்து விட்டவாறு.
“சித்தி! உங்க கற்பனைகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் வந்தா, நிறைய சொல்ல வேண்டி வரும் சொல்லட்டுமா..? நான் அடுத்த குழந்தை ஏன் பெத்துக்க கூடாதுனு உங்க கற்பனையில் ஓடுறதை சொல்லவா..?” என கேட்டான் அழுத்தமாக.
பிரபா அமைதியாக, “விடுங்க மாமா அத்தையை பத்தி தெரியாத, அம்லு! உன் ரிசல்ட் கேள்விப்பட்டு தான் நானும், பிருந்தாவும் வந்தோம். கங்கிராட்ஸ்” என்றான்.
“தேங்க்ஸ் அண்ணே!”
“ஆமா அண்ணி! சூப்பர் எல்லாம் என் அண்ணன் ட்ரைனிங் கீப் இட் அப்”
“தேங்க்ஸ் பிருந்தா”
“என்னது பிருந்தா..?”என பாட்டி கேட்டார்.
“பாட்டி! அண்ணிக்கு ரிசல்ட் வந்துட்டு நல்ல பெர்சென்ட்டெஜ்”என விளக்கி சொன்னாள் பிருந்தா.
“ஓ! நல்லது அம்லு வாழ்த்துகள்”
“ஆமா மருமகளே! எல்லாம் என் பேரனோ, பேத்தியோ வரப் போற நேரம் தான்.”
“மாமா! இருந்தாலும் இது ஓவர், அம்லு கஷ்டப்பட்டு படிச்சு எழுதியது இது”என கிண்டல் செய்தான் பரத்.
“என்னத்த மார்க் வாங்கி என்ன செய்றது, இப்ப காலேஜ் எல்லாம் எங்கப்போறது புள்ளையை பெத்து வளர்க்க வேண்டியது தான்.”என்றார் பிரபா.
“ஏன்! அது எல்லாம் பிரச்சனையே இல்ல, நீங்க கவலைப்படாம படிங்க அண்ணி, இப்ப எத்தனையோ பேர் இப்பிடி இருக்காங்க”
ராகுக்கும் அது மனசில் சரி என தோன்ற”ஏன் சர்வா, அம்லு காலேஜ் போயே ஆகனுமா..?”என கேட்டார்.
“மாமா! எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல இப்ப”என்றாள் அம்லு உடனே.
“இப்ப எப்பிடி வரும் இன்னும் எட்டு மாசம் இருக்கே..? எப்பிடி வயிறு தள்ளிட்டு காலேஜ் போவீயா? அப்புறம் எல்லாரும் சர்வாவை தான் அசிங்கமா பாப்பாங்க, பேசாம நீ காலேஜை நிறுத்திட்டு வீட்டில் இரு”என்றார் பிரபா.
“இதுல அவனை அசிங்கமா நினைக்க என்ன இருக்கு, உலகத்தில் யாருமே இப்பிடி இல்லாததுப் போல் பேசுற..? ஏன்டா ராகு இவளை எதுக்கு கூட்டிட்டு வந்த இங்க, ஏதோ அவனே மனசு மாறி ஒரு புள்ளை உருவாகி இருக்கு அது பொறுக்கல இவளுக்கு”என திட்டினார் பாட்டி.
“தெரியாம கூட்டிட்டு வந்துட்டேன் இனி கவனமா இருக்கேன்மா”என புலம்பினார் ராகு.
“ஏங்க நான் இப்ப என்ன சொன்னேன், வயித்தை தள்ளிட்டு காலேஜ் போக வேண்டாம் வீட்டில் இருனு சொன்னேன் அதுக்கு நீங்களும், உங்க அம்மாவும் என்னமோ கொலைக்காரி மாதிரி பேசுறீங்க, நான் கிளம்புறேன்”என எழுந்து வெளியில் சென்றார்.
அம்லு”அத்த! இருங்க சாப்பிட்டுப் போகலாம்”என்றாள் செல்லும் அவர் பின்னாலே.
“இருக்கட்டும் நீ ரெஸ்ட் எடுமா, நானும் கிளம்புறேன்”என ராகுவும் எழுந்து சென்றார்.
***
இரவு…
யுவி தூங்கிவிட்டான், சர்வா லேப்டாப்பில் அமர்ந்து வேலைப் பார்க்க, அம்லு காலேஜ் வொர்க் முடித்துவிட்டு பெட்டில் அமர்ந்தாள், அவன் தோளில் சாய்ந்தாள் அம்லு நீண்ட யோசனையோடு.
சர்வா திரும்பி”என்ன ஆச்சு..?”என கேட்டப்படி மறுபடியும் லேப்டாப்பை பார்த்தான்.
“இல்ல யுவிப்பா! இந்த நிலையில் காலேஜ் போறது கஷ்டமா..?”
அவளை திரும்பி கண்களை சுருக்கிப் பார்த்தவன்”சித்தி பேசினதை மனசில் வச்சுட்டு இருக்கீயா..?”
“அவங்க சொல்றதும் தப்பு இல்லையே, இப்ப பிரச்சனையில்ல இன்னும் மாசம் ஆக, வயிறு தெரியுமே அப்ப உங்களை பத்தி தப்பா நினைப்பாங்கள.?”
“ம்ம்ம்! நான் தான் சொன்னேன், மதியம் நீங்க திட்டினதை நினைச்சி எனக்கு சப்போர்ட்டா உங்களை தப்பு சொன்னாங்க, அதான் கோபம் வந்து நான் இப்பிடி இருக்கேனு சொல்லிட்டேன்.”
“ம்ம்ம்!”
அம்லு அவன் கையைப் பிடிச்சுட்டு தோளில் மேலும் ஒன்றினாள்.
“உனக்கு படிக்க ஆசை இருக்கா..? இல்ல கடமையேனு படிக்குறீயா..?”
“நேத்து கேட்டு இருந்தா பதில் யோசிச்சு இருப்பேன் யுவிப்பா, ஆனா இன்னைக்கு என் மார்க் பாத்துட்டு எனக்குமே இன்னும் நல்லா படிக்கனுமுனு தோணுது, என்னால கூட இவ்ளோ மார்க் எடுக்க முடியுமுனு நம்பிக்கை வந்துட்டு” என சிரித்தாள்.
“அம்லு! நான் தப்பு பண்ணிட்டேனு தோணுது, இன்னைக்கு உன் மார்க் பாத்து எனக்குமே ஆச்சிரியம் நல்ல படிக்குற பிள்ளையை இப்பிடி சங்கடத்தில் இருக்க வச்சுட்டேனு.”
அம்லு”நான் பேசாம படிப்பை நிறுத்தவா யுவிப்பா..?”
“ஏய் லூசாடி நீ! அது எல்லாம் வேணாம் நான் இருக்கேன் உனக்கு, நீ படி அது போதும். மத்ததை நான் சரிப்பண்ணுறேன், நீ தூங்கு இப்ப”
“ஒன்னும் வேணாம், ரெண்டும் வேணாம் தூங்கு”என அவளை அணைத்து தூங்க வைத்தான்.
ஆனால் அம்லு மனதில் வந்த கேள்வி இது தான், ‘இந்த குழந்தையை உங்களுக்கு புடிக்குமா இல்லையா..? ஏன் என்னைய மயிலாஞ்சினு சொல்றதை நிறுத்திட்டீங்க…?’
நடுராத்திரி…
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் அம்லு, சர்வா, யுவி.
திடீருனு அம்லு கத்திக் கொண்டு எழுந்தமர்ந்தாள்.
“என் குழந்தை! இல்ல இது என் குழந்தை! என்னோடது தர மாட்டேன்”என புலம்பினாள் வயிற்றில் கைவைத்து.
சர்வா”அம்லு! ஏய் என்ன ஆச்சு..? அம்லு” என அவளை உலுக்கினான்.
அம்லு சுய நினைவிற்கு வந்தாள்.
தன் வயிற்றில் கை வைத்து குனிந்துப் பார்த்தாள்.
“என்ன அம்லு..?”
“இந்த குழந்தையை உங்களுக்கு புடிக்குமா..?”என்றாள் சம்பந்தமே இல்லாமல் நடுராத்திரியில்.
“அம்லு! என்ன உளரிட்டு இருக்க..? இது மிட் நைட். எந்த குழந்தையை..?”என்றான் பாவம் அவனும் தூக்கத்தில்.
“நம்ம குழந்தை தான் யுவிப்பா”என அவளின் வயிற்றில் அவனின் கையைத் தூக்கி வைத்துக் காட்டினாள்.
“என்ன ஆச்சுடா உனக்கு, எதும் கனவு கண்டீயா..?”என கேட்டான் அவளின் வயிற்றில் கை இருந்தாலும்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க யுவிப்பா.?”
மூச்சை இழுத்து விட்டவன், “ஏன் உனக்கு சந்தேகம் அம்லு..? யுவி மாதிரி தானே இந்த குழந்தையும் அப்புறம் எப்பிடி புடிக்காமப் போகும்”
“அப்ப புடிக்குமா..?”
“ம்ம்ம்!”என்று அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.
“நிஜமாவ யுவிப்பா..?”என்றாள் சந்தோஷமாக.
“ஆமா அம்லு!”
“ஐ! உண்மையாவ..? இல்ல எனக்காக சொல்றீங்களா..?”
“இதுக்கு மேல நான் எப்பிடி சொல்றது அம்லு”என அவளை இடையோடு இறுக்கிக் கொண்டு, “உண்மை தான், ஆனாலும் ஏதோ ஒரு குழப்பம் இருக்கு, எப்பிடி எல்லாத்தையும் ஃபேஸ் பண்றதுனு, பட் சீக்கிரம் எல்லாம் சரியாகிடும். நீ எதையும் மனசுல வச்சுக்காம தூங்கு, என் மேல நம்பிக்கை இருக்குல, நான் இருக்கேன் உனக்காக.” என்றான் அவளுக்கு ஆறுதலாக.
அம்லு தூங்கியதும் சர்வாக்கு நிலையான மனம் இல்லை.
****
கல்லூரி…
திரவி வந்துவிட, சர்வாவிடம் பேப்பர்ஸ் கொடுக்க அவன் அறைக்கு சென்றான்.
சர்வா திரவியிடம் பேப்பர்ஸ் பத்தி கேட்டுட்டு, “ஓகே! நான் பாத்துட்டு சொல்றேன் நீ போ”என்றான் சாதரணமாக.
திரவிக்கு வித்தியாசமாக பட கிளாஸ் இருப்பதால் சென்றவன், மதியம் உணவு இடைவேளையில் வந்தான் மீண்டும்.
“சர்வா! வெளியில் போகலாம சாப்பிட.?” என கேட்டான்.
“ம்ம்ம்!”என சற்று நேரத்தில் திரவியோடு கிளம்பினான்.
காரில் செல்ல, “என்ன ஆச்சுடா உனக்கு, ஏன் டல்லா இருக்க..? நம்ம பிரச்சனைக்கு எல்லாம் நீ இப்பிடி இருக்க மாட்ட”
“ம்ம்ம்! திரவி உன் கிட்ட ஒன்னு சொல்லனும்”
“என்னடா..?”
“அம்லு கன்சீவ்வா இருக்கா”
அவன் கேட்டது சரி தானா என சந்தேகம் வர, “டேய்! நீ இப்ப என்ன சொன்ன..?”
“நீ கேட்டது சரி தான்”
“கங்கிராட்ஸ்டா, எவ்ளோ ஹேப்பியா இருக்கு தெரியுமா..? அய்யோ! சூப்பர்டா” என திரவி அவனை போட்டு குலுக்கினான் ட்ரைவிங்கில்.
“டேய்! இருடா”என காரை ஓரமாக நிறுத்தினான்.
“எல்லாம் உன்னால தான் அன்னைக்கு பார்ட்டியில் நல்ல போதையாகிட்டேன் அதன் பலன் அம்லு இப்ப இந்த நிலை” என்றான் நொந்தவாறு.
“எப்பிடியோ சந்தோஷமான நியூஸ் தானே..”
“ஆனா அம்லு படிச்சுட்டு இருக்காட, அதோட எனக்குமே அடுத்த குழந்தை எண்ணமே இல்லடா.”
“அதுக்காக என்ன செய்யப் போற..? அபார்ட் செய்ய போறீயா?”
“டேய்! லூசாட நீ, அது என் குழந்தைடா, அத போய் நானே அழிப்பேனா..? அடிச்சு பல்லை கழட்டிடுவேன்”
“ஹப்பா! இது போதும். டேய்! அன்னைக்கு அம்லு என் கிட்ட ஒரு விஷயம் சொன்னா, நம்ம சண்டைப் போட்டதுக்கு அப்புறம்”என பஸ்ஸில் நடந்ததை சொல்லிட்டு “அதன் பின் யுவிக்கு ஒரு துணையை பெத்துத் தருவேன், யுவிப்பா நான் கேட்டா ஒத்துப்பாருனு நம்பிக்கைக்கா சொன்னாட, அது தானா நடந்துட்டுனு சந்தோஷப்படு சர்வா”
சர்வாக்கு அது புது நியூஸ்..
“என்ன சொல்ற திரவி..?”
“ஆமா! அம்லுக்கு தான் அம்மா ஆகனுமுனு ஆசை இல்லை, யுவிக்கு ஒரு துணை தம்பி, தங்கச்சியை பெத்துக் கொடுக்கனும் ஆசையா சொன்னாட, அவ மனசுக்கு தானா நல்லது நடக்குது. நீ உன் முடிவை மாத்திக்கோடா, அப்பிடி என்ன அழுத்தம் உனக்கு அம்லுவை விட அந்த முடிவு தான் முக்கியமா உனக்கு..”
“திரவி! அம்லுக்கு மேல நான் எதையும் யோசிக்க மாட்டேன்டா கண்டிப்பா, அவ ஆசைனு கேட்டா கண்டிப்பா நான் மறுக்க மாட்டேன், இது அவளுக்கே தெரியும்.”
“அப்புறம் என்ன சர்வா. என்ஜாய் பண்ணு இந்த வாழ்க்கையை..”
சர்வாக்கு திரவியோடு பேசியது, மனம் ஒரு நிம்மதியை உணர்த்தியது.
“ம்ம்ம்! அம்லுக்காக அவ ஆசைனு வரும் போது தடை சொல்ல மாட்டேன் திரவி, கண்டிப்பா அவளுக்கு புடிச்ச மாதிரியே யுவிக்கு எங்க வாரிசு வரட்டும் துணையா, எனக்கு இப்ப தான்டா ஒரு தெளிவு கிடைச்சு இருக்கு..”என திரவியை கட்டிப் பிடிச்சான் சர்வா.
சர்வா ஃபோன் அடித்தது, ஸ்ரீ தான் அது.
“ஹலோ!”
“சார்! நான் ஸ்ரீ பேசுறேன்”
“சொல்லு ஸ்ரீ”
“சார்! அம்லுக்கு வயிறு வலினு ஒரே அழுகை, ஹாஸ்பெட்டல் கூட்டிட்டுப் போறோம் வாங்க, **** ஹாஸ்பெட்டல்”என்று கேட்டவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
உடனே திரவியோடு சர்வா ஹாஸ்பெட்டல் வேகமாக விரைந்தான்.