ஜெர்மனி வரதராஜ பெருமாள் முன்பு அமர்ந்திருந்தாள் நங்கை.
என்றும் சிரித்த முகமாய் இருக்கும் பெருமாளின் வதனத்தையே பார்த்திருந்த நங்கை, “உங்களுக்குப் பெரிய நன்றி சொல்லனும்” என்றாள்.
“சுந்தர் என்னைக் காதலிக்கிறது தெரிஞ்சதும் உங்ககிட்ட தான் வந்து என்ன செய்றதுனு கேட்டானாமே! நீங்க தான் என் மூலமா பூ கொடுக்க வச்சி அவனுக்கு நம்பிக்கை கொடுத்தீங்கனு சொல்லுவான். நீங்க அந்த நம்பிக்கையைக் கொடுக்கலைனா என்னைக் காதலிச்சிருக்க மாட்டானாம்! என்னை விட்டு விலகி போய்ருப்பான்னு சொல்லுவான். அவனுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்ததுக்கு நன்றி! எங்களைச் சேர்த்து வச்சதுக்கு நன்றி!
நேர்ல வந்து தான் நன்றி சொல்லனும்னு இத்தனை வருஷமா காத்திருந்தேன். சுந்தரை நான் கேட்காமலே எனக்குக் கொடுத்தீங்களே இப்ப நான் கேட்குறதை கொடுப்பீங்களா?” கெஞ்சும் பார்வையுடன் கேட்டிருந்தாள் நங்கை.
அதே புன்சிரிப்புடன் அவர் நின்றிருக்க,
“எப்ப எது கேட்டாலும் அதே சிரிப்பு தான் உங்களுக்கு. அதுக்கான அர்த்தம் ஆமாவா இல்லையானு நாங்க தான் குழம்பனும்! அப்படித் தானே!” என்றவள்,
“என் புருஷன் என்னை எப்படி மாத்தி வச்சிருக்கான் பாருங்க! அவனை மாதிரியே உங்ககிட்ட புலம்பிட்டு இருக்கேன்!” என்று சிரித்தவளின் மேல் மழைத்துளி சரசரவென விழ, சட்டென அங்கிருந்து எழுந்து பெருமாளின் பாதத்தை வணங்கிவிட்டு கோவிலின் உள்ளே செல்ல, மறுபுற கோவில் வாசல் வழியாகச் சிலர் உள்ளே நுழைந்தனர்.
காமாட்சி அம்மனின் சந்நதி முன்பு நந்திதாவை மடியில் அமர்த்தி விளையாட்டு காண்பித்தப்படி அமர்ந்திருந்த தனது கணவன் சுந்தரராஜன் அருகே சென்றாள் மதுரநங்கை.
“என்ன, வேண்டுதல்லாம் பெருமாள்கிட்ட சொல்லியாச்சா?” என்று சிரித்தபடி கேட்டான் ராஜன்.
“ஹ்ம்ம் எங்க! முழுசா சொல்றதுக்குள்ள மழை வந்து கெடுத்துடுச்சு” என்றவளை சிரிப்புடன் பார்த்தவன், “அந்த வேண்டுதலே வேண்டாம்னு நான் சொல்லிட்டு இருக்கேன். நீ தான் வேணும்னு கேட்டுட்டு இருக்க! பெருமாள் பாவம் புருஷன் விருப்பப்படி செய்றதா இல்ல பொண்டாட்டி விருப்பப்படி செய்றதானு குழம்பி போய்ருப்பாரு” என்று சிரித்தான்.
“நீதான் என் ஆசைக்கு முட்டுக்கட்டை போடுற! வரம் கொடுக்க நினைக்கிற பெருமாளையும் ஏன்டா தடுக்குற” என்று முறைத்தவள்,
“பொண்டாட்டியும் புருஷனும் ஒரு மனசா வேண்டிக்கிட்டா தான் கடவுள் வேண்டுதலை நிறைவேத்துவாராம்! அதனால என்ன செய்வியோ தெரியாது நீயும் இதுக்கு ஒத்துக்கிற சொல்லிட்டேன்” இது தான் முடிவு என்பது போல் கூறியவள், தனது மகளைத் தூக்க முனைய, குழந்தையோ தந்தையின் சட்டையைப் பிடித்துக் கொண்டு வர மாட்டேனென அடம் பிடிக்க, “சரியான அப்பா கோந்து!” என்று மகளையும் தந்தையையும் முறைத்தவாறு எழுந்து நின்றாள்.
ஹா ஹா ஹா எனச் சிரித்த ராஜனும் மகளைத் தூக்கி கொண்டு எழும்ப, குடும்பமாய்க் காமாட்சி அம்மனை தரிசித்து விட்டு, கோவிலை சுற்றி வந்த போது ஆங்காங்கே படப்பிடிப்புச் சாதனங்களுடன் அமர்ந்திருந்தவர்களைக் கண்டனர்.
“சுந்தர் ஏதோ தமிழ் படம் ஷூட்டிங் போலடா” அவர்களைப் பார்த்தவாறு சொன்னாள் நங்கை.
மகளை முன்னே நடக்கவிட்டு அவளைக் கண்காணித்தவாறே மனைவியுடன் நடந்து வந்து கொண்டிருந்த ராஜன், அப்பொழுது தான் சுற்றத்தை கவனித்தான்.
“ஆமா! இங்க தான் ஷூட்டிங் நடக்குது போல! மழைக்காக ஒதுங்க உள்ளே வந்திருக்காங்க. ஹீரோ யாராவது வந்திருக்காங்களா என்ன?” எனக் கேட்டான்.
“தெரியலையே” என்றவாறு பிரகாரத்தைச் சுற்றி நின்றிருந்தவர்களைப் பார்த்தவள், முன்னே சென்றிருந்த தனது மகளை ஒருவன் தூக்கி கொஞ்சி கொண்டிருப்பதைப் பார்த்து, ராஜனின் கையினில் இடித்தாள்.
“இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குல! இவர் தான் ஹீரோவா இருக்குமோ?” எனக் கேட்டாள்.
“நீயும் ஆணிமாவும் சீரியலை பத்தி சீரியசா டிஸ்கஸ் செஞ்சி சிரிப்பீங்களே, உனக்கே சீரியல்ல நடிக்கிற இந்தப் பையனை தெரியலையா?” எனக் கிண்டல் செய்தான் ராஜன்.
“என்னது சீரியல்ல நடக்கிற பையனா?” என்று அவனை நோக்கி நடந்தவாறே கேட்டவள், “என்ன தான் இருந்தாலும் டிவில பார்க்கிறதுக்கும் நேர்ல பார்க்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கத் தான் செய்யுதுல சுந்தர்” என்றாள்.
தங்களது மகளைத் தூக்கி கொஞ்சியவாறு நின்றிருந்த அந்தச் சின்னத்திரை நடிகர் அருகே ராஜன் சென்றதும், குழந்தை அவனிடம் தாவினாள்.
“உங்க குழந்தையா? க்யூட் பாப்பா! பாப்பா பேரு என்ன?” என்றவாறு குழந்தையை ராஜனிடம் கொடுத்தான் அந்த நடிகர்.
“நந்திதா” என்றவாறு வாங்கிக் கொண்டான் ராஜன்.
“நைஸ் நேம்” என்றவனை நோக்கி கை நீட்டியபடி, “ஐம் சுந்தரராஜன்” என்று ராஜன் தன்னை அறிமுகப்படுத்தியதும், “ஐம் சிவா” என்றான் அவன்.
“தெரியும்ங்க சீரியல்ல பார்த்திருக்கோம்! இங்க என்ன மூவி ஷூட்டிங்கா சார்” எனக் கேட்டாள் நங்கை.
“ஆமாங்க” என்றவன், “நீங்க என்ன ஜெர்மனி செட்டில்டா” எனக் கேட்டான்.
“இல்லங்க வேகேஷனுக்கு வந்திருக்கோம். கொஞ்சம் வருஷம் முன்னாடி இங்க தான் நாங்க ஐடி கம்பெனில வேலை பார்த்துட்டு இருந்தோம்” என்றான் ராஜன்.
சில நிமிடங்கள் பேசிவிட்டுச் சிவாவிடம் இருந்து விடைப்பெற்றனர் ராஜன் குடும்பத்தினர்.
மழை நின்று குளிரைப் பரப்பிவிட்டிருந்தது.
கோவிலில் இருந்து வெளியே வந்து வரதராஜ பெருமாளைப் பார்த்த ராஜன், “என் பொண்டாட்டி கேட்டதைக் கொடுத்துடுங்க பெருமாளே! ஆனா அவளை ரொம்பக் கஷ்டப்படுத்தாம கொடுங்க! அவ வலியை தாங்கிடுவா, என்னால தான் அவ கஷ்டப்படுறதை தாங்கிக்க முடியாது! அவ கேட்ட மாதிரி பையனாவே கொடுத்துடுங்க! அதுக்கான ஆயத்த பணியில் நான் இறங்குறேன்” அதுவரை ரசனையாய் அவனைப் பார்த்திருந்தவள், அவனின் ஆயத்த பணி என்ற சொல்லில் கையில் இடித்து, “சாமிக்கிட்ட போய் என்ன பேச்சு? பாப்பா வேற கைல இருக்கா” என்று முறைத்தாள்.
“பின்ன பிள்ளை வேணும்னா தானா வந்துடுமாடி! நான் ஓவர் டைம் வேலை பார்க்க வேணாமா” என்றவன் கூறி முடிப்பதற்குள், “பெருமாளே!” என்று அவன் வாயை தனது கைக்கொண்டு மூடியவள், “போதும் கிளம்புவோம்! வரோம் பெருமாளே” என்றவாறு அவனைக் கோவிலின் வெளியே தள்ளிக்கொண்டு சென்றாள்.
அவன் கையில் இருந்த நந்திதாவும் தாயின் செயலைக் கண்டு தானும் இணைந்து தந்தையின் வாயை தனது கைக்கொண்டு மூட, குட்டிப்பெண்ணின் செயலில் சிரித்திருந்தனர் இருவரும்.
வாழ்வின் நிகழ்வுகளை அறிந்தவராய் அதே புன்சிரிப்புடன் இவர்களை வழியனுப்பி வைத்திருந்தார் வரதராஜ பெருமாள்.
இருவரும் தாங்கள் தங்கியிருந்த வாடகை அறையை நோக்கி இரயிலில் பயணித்திருந்தனர்.
மெட்ரோ ரயில் போன்றிருந்த அந்த ரயிலில் அங்குமிங்குமாக ஓடி விளையாடிய மகளைக் கையில் தூக்கி வைத்துக் கொண்டு ராஜனின் அருகில் நங்கை அமர, உடனே தந்தையிடம் தாவினாள் குட்டிப்பெண்.
“நந்துமா இதெல்லாம் டூ மச் சொல்லிட்டேன்! பத்து மாசம் என்கிட்ட தான் இருந்த நீ! இப்ப என்னமோ அப்பா அப்பான்னு அவன்கிட்டயே தாவுற” என்று முறைத்தாள்.
“ஏன்டா பப்ளிமாஸ் குழந்தைக்கிட்ட கூடவா சண்டை போடுவ?” என்று கேலியாய் சிரித்தான்.
அவன் கேலியில் முகத்தைச் சுளித்தாள் இவள்.
ராஜன் குழந்தையைக் கைக்குள் வைத்து தட்டிக்கொடுக்க உறங்க ஆரம்பித்திருந்தாள் நந்திதா.
“சுந்தர், நான் ஒரு தடவை ஒரு கதை சொன்னேன் ஞாபகம் இருக்கா! ஒரு பையன் அப்பாக்கு சர்ப்ரைஸ்ஸா இருக்கனும்னு அவர்கிட்ட போன்ல பேசாம பிசினு சொல்லி டான்ஸ் பிராக்ட்டிஸ் செஞ்சிட்டு, டான்ஸ் ஷோ டிவில வர்றப்ப அவர் இறந்துட்டாருனு ஒரு பையன் கதை சொன்னேன்ல அந்தப் பையன் இந்தச் சிவா தான்” என்றாள் நங்கை.
“அப்படியா” என்று ராஜன் ஆச்சரியமாய்க் கேட்க, “ஆமா சுந்தர்! நம்மளை விடச் சின்ன வயசு தான்! நாலு அஞ்சு வயசு சின்னப் பையன்னு நினைக்கிறேன்” என்றாள்.
“ஹ்ம்ம் ஆமா அப்படித் தான் இருக்கனும். அப்ப பதினெட்டு இருபது வயசு இருக்கும்னு நினைக்கிறேன். இப்ப முப்பது வயசுக்கிட்ட இருக்கும்ல! ஆனா இன்னும் கல்யாணம் செஞ்சிக்கலை போல” என்றாள் நங்கை.
“ஓ சூப்பர்ல நங்கை! அப்படி டான்ஸ் ஷோல ஆரம்பிச்சி இப்ப சின்னத்திரை ஹீரோவா வளர்ந்திருக்கானே பெரிய விஷயம் தான்!” என்று மனதாரப் பாராட்டிப் பேசினான் ராஜன்.
“ஆமாமா இந்தப் போராட்ட உலகத்துல ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் அச்சீவ்மெண்ட் தான்” என்று நங்கை கூற,
“இதுக்குத் தான் ஓவரா மாமா பேச்சை கேட்காதனு சொன்னேன்” என்றவன் கிண்டல் செய்யவும்,
“ஓய் என்ன வயசானவங்க பேசுறவங்க மாதிரி தத்துவம் பேசுறேன்னு கிண்டல் செய்றியா?” என்று முறைத்தாள்.
அவளின் முறைப்பில் சிரித்தான் ராஜன்.
ஜெர்மனியில் முன்பு ராஜன் தங்கியிருந்த அதே வீட்டில், இப்பொழுது குடும்பத்துடன் தங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு அறையை வாடகைக்கு எடுத்திருந்தனர்.
வீட்டை அடைந்ததும் தூங்கிக் கொண்டிருந்த மகளைப் படுக்கையில் கிடத்தி, போர்வையைப் போர்த்தி விட்டு ஓய்வறைக்குள் சென்றான் ராஜன்.
அச்சமயம் அவனின் கைபேசி அலற, எடுத்து பார்த்த நங்கை, அதில் ஒளிர்ந்த உளவாளி என்ற பெயரை பார்த்து சிரித்தாள்.
சிக்னல் இல்லாமல் கைபேசி ஒலிர்ந்து அடங்க, ஓய்வறையில் இருந்து வெளியே வந்த ராஜன் யார் அழைத்தது எனக் கேட்டான்.
“இந்தியாலருந்து வாட்ஸ்அப் கால்! உன் உளவாளி தான்” என்றாள்.
இவன் அழைப்பு வந்த எண்ணிற்கு மீண்டுமாய் அழைப்புவிடுக்க,
“அந்தப் பொண்ணுக்கு எவ்ளோ அழகான பேரு இருக்கு! இப்படி உளவாளினு போட்டு வச்சிருக்கியே” எனக் கேட்டாள் நங்கை.
“நல்லா கேளுங்கக்கா” ராஜன் அழைப்பை ஏற்றதும், அலைபேசி வாயிலாக நங்கையின் குரலை கேட்டவள் கூறினாள். ராஜன் உடனே ஸ்பீக்கரில் ஃபோனை வைத்தான்.
“திவ்யானு தமிழ்நாட்டுல கால்வாசி பேராவது இருப்பாங்க. ஆனா உளவாளினு யாராவது இருப்பாங்களா! எவ்ளோ தனித்துவமான ஒரு பெயரை உனக்கு வச்சிருக்கேன்னு நீ பெருமைப்படனும் திவ்யா” என்று சிரித்தான் ராஜன்.
“அண்ணி உங்க கூடச் சேர்ந்து அண்ணனுக்கு ரொம்ப வாயாகிப்போச்சு! அண்ணா இப்படிலாம் கிண்டல் செய்ற ஆளே இல்லை” என்றாள் திவ்யா.
“அடியேய் நீ என்னைப் புகழ்றியா இல்லை திட்டுறியா? இது என்ன வஞ்சப்புகழ்ச்சியா? உனக்காக என் புருசன் கிட்ட பரிஞ்சி பேசினேன்ல என்னைச் சொல்லனும்” என்று நங்கை கூறவும், சிரித்திருந்தனர் ராஜனும் திவ்யாவும்.
அப்பொழுது தான் திவ்யாவின் அறைக்குள் நுழைந்த திவ்யாவின் கணவனான பிரேம் கைபேசியில் கேட்ட நங்கை ராஜனின் குரலில், “அக்கா அண்ணா எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டான்.
ராஜன் ஜெர்மனியில் ஆன்சைட் வந்து வேலை செய்து கொண்டிருந்த போது அவனுடன் அறையில் தங்கியிருந்தவன் தான் பிரேம். அவனது மனைவியான திவ்யா ஜெர்மனியில் வேலை செய்த போது பிரேமை காதலித்து மணந்து கொண்டாள். பிரேம் வெளிநாட்டிலேயே வேலையைத் தொடர வேண்டிய சூழலில் இருந்த சமயத்தில் திவ்யா தனது சொந்த ஊரான மதுரையில் திருமணத்திற்குப் பின்பு தங்கியவள், அங்கே சுந்தரேஸ்வரனின் கடையில் ஐடி பணியில் சேர்ந்தாள்.
“நல்லா இருக்கோம்டா! யு எஸ் டிரிப் எப்படிப் போச்சுடா! நானே உனக்கு கால் செய்யனும்னு நினைச்சேன்” என்றான் ராஜன்.
“நல்லா போச்சுண்ணா! நீங்க வேகேஷன் முடிச்சிட்டு வந்து பேசுங்க. இப்ப லீவ்வை என்ஜாய் பண்ணுங்க” என்ற பிரேம்,
“எதுக்கு இப்ப அவங்களுக்குப் போன் செஞ்சி டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க?” எனக் கேட்டான்.
“முக்கியமான விஷயம் சொல்லத்தான் ஃபோன் செஞ்சேன்” என்ற திவ்யா,
“மீனாட்சி சுந்தரேஸ்வரர் யூ டியூப் சேனலை டார்க்கெட் செஞ்சி ஏதாவது இஷ்யூவை கிளப்பிக் கடை சேல்ஸ்ஸை குறைக்கப் பிளான் நடக்குதுனு ஈஸ்வர் அண்ணா ஐடி டீம்கிட்ட சொல்லி கேர்புல்லா வாட்ச் பண்ண சொன்னாங்க. அதான் உங்ககிட்ட சொல்லலாம்னு கால் செஞ்சேன்” என்றாள் திவ்யா.
திவ்யா கூறியதைக் கேட்ட ராஜன், ‘ஏன் இன்னும் இந்த அண்ணா அவங்களோட பிரச்சனையை என்கிட்ட சொல்ல மாட்டேங்கிறாரு?’ என மனதோடு புலம்பியவன்,
அதன் பிறகு நால்வரும் அவரவர் பணி, குடும்பம், வாழ்வு எனச் சில நிமிடங்கள் பேசிவிட்டே கைபேசியை வைத்தனர்.
**********
அங்கு சென்னையில் அலுவலகத்தில் இன்பா முன் நின்றிருந்தாள் அன்னம்.
புதுப் பிராஜக்ட் அவளுக்குப் பிடித்திருக்கிறதா? வேலையைக் கற்றுக் கொண்டாளா? ஷிப்ட் இல்லாமல் வேலை செய்வது எப்படி இருக்கிறது எனப் பலவிதமான உரையாடல்களுக்குப் பிறகு,
“உன்னோட பர்சனலை கேட்கிறேன்னு தப்பா நினைக்காதே! உன்னோட வெல் விஷ்ஷரா கேட்கிறேன்! ஆர் யூ இன் லவ் வித் மோகன்” எனக் கேட்டான் இன்பா.
‘இவருக்கு எப்படித் தெரிஞ்சிது’ என்பது போல் அதிர்ந்து நோக்கியவளாய், ஆமெனத் தலையசைக்க, “உங்க வீட்டுல தெரியுமா?” எனக் கேட்டான்.
இல்லையென அவள் தலையசைக்க, “இந்தக் காதல் வேண்டாமே அன்னம்! அது உன்னோட சந்தோஷத்தை பறிச்சிடுமோனு பயமா இருக்கு அன்னம்! மோகன் இஸ் நாட் எ ரைட் சாய்ஸ் ஃபார் யூ” என்றான்.
“ஏன் அப்படிச் சொல்றீங்க இன்பா! மோகன் என்னை நல்லா பார்த்துப்பான். அவனுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அவனோட அம்மாகிட்ட தம்பிக்கிட்ட கூடப் பேசினேன்” என்றாள் அன்னம்.
இதற்கு மேல் அவளது சொந்த விஷயத்தில் தான் தலையிடுவது சரி வராது என்று எண்ணியவனாய், “எனக்குத் தோணினதை சொன்னேன் அன்னம். அப்புறம் உன் விருப்பம்” என்றுரைத்து விட்டான்.
தனது இருக்கையில் வந்தமர்ந்த அன்னத்திற்கு மனம் நிலைக்கொள்ளாமல் தவித்தது.
‘நங்கை அண்ணி, ராஜாண்ணா ஃபோன் நம்பர் லாம் இவர்கிட்ட இருக்கே! அவங்ககிட்ட நம்ம லவ் மேட்டரை சொல்லிடுவாரோ! நான் வேற அவர் கேட்டதுக்கு ஆமானு சொல்லி வச்சிட்டேனே’ தீவிர சிந்தையில் ஆழ்ந்தாள்.
‘அவரா சொல்லிடுறதுக்கு முன்னாடி நாமளே நங்கை அண்ணிக்கிட்ட சொல்லிடனும். மீனுக்கிட்டயும் சொல்லி அப்பா அம்மாக்கிட்ட பேச சொல்லனும்’ என்று யோசித்தவண்ணம் இருக்கும் போது மீனாட்சியின் குறுஞ்செய்தி அவளின் கைபேசியை வந்தடைந்தது.