அன்று மாலை மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பாத்திரக்கடையில் தனது அறையில் மாலை படம்பிடிக்க வேண்டிய காணொளிக்கான குறிப்புகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீனாட்சியிடம் வந்த ஈஸ்வரன், “ஆல் ஓகேவா?” எனக் கேட்டான்.
“ஆமாங்க! இன்னிக்குக் கிளியரன்ஸ் சேல்ஸ் பத்தி தானே பேசப்போறோம். எந்தெந்த பிராடக்ட்டுக்கு எவ்ளோ ஒரிஜினல் பிரைஸ் எவ்ளோ ஆஃபர் பிரைஸ் அண்ட் ஒவ்வொரு பிராடக்ட்டும் எவ்ளோ பீஸ் இருக்குனும் எழுதியிருக்கேன். நீங்க ஒரு தடவை வெரிஃபை செஞ்சிக்கோங்க” என அவனிடம் தான் குறிப்பெடுத்து வைத்திருந்த தாளை கொடுத்தாள்.
தினமும் சுந்தரேஸ்வரன் மீனாட்சி இருவரும் இணைந்தே யூடியூப் நேரலையில் பங்குபெற்று தங்களது பெருட்களைப் பற்றிப் பேசினர். இருவருமே மதுரையில் பிரபலமான முகங்களாய் மாறியிருந்தனர்.
அவளளித்த தாள் மீது கண் இருந்தாலும், ஏதோ சிந்தனையில் இருந்த ஈஸ்வரனின் தோளை தொட்டு உலுக்கியவள், “என்னப்பா? என்ன யோசனைல இருக்கீங்க? ரஞ்சுவை வீட்டுல டிராப் பண்ணிட்டு வந்துட்டீங்க தானே” எனக் கேட்டாள்.
“ஹான் ஆமா ஸ்கூல்ல இருந்து பிக்அப் பண்ணி வீட்டுல அம்மாகிட்ட விட்டுட்டு வந்துட்டேன்” என்றவனிடம், “அப்ப இதை நீங்க சரி பார்த்துட்டீங்கனா நாமளும் வீட்டுக்குப் போய்க் குழந்தைகிட்ட கொஞ்சம் நேரம் டைம் ஸ்பெண்ட் செஞ்சிட்டு டீ குடிச்சிட்டு கிளம்பி வரலாம்” என்றாள் மீனாட்சி.
“சரி நீ கிளம்பு! டீ குடிச்சிட்டு வந்து நாம இதைப் பார்க்கலாம்” என்றவன் அவளுடன் மகிழுந்தில் ஏறி வீட்டை நோக்கி வண்டியை ஓட்டினான்.
மீனாட்சி தனது முகநூலை பார்த்தவாறே அவனுடன் வண்டியில் பயணித்திருந்தவள், அதில் வந்திருந்த ஒரு பதிவை பார்த்துப் பக்கெனச் சிரித்து விட்டாள்.
அவளின் சிரிப்பில் மென்னகை புரிந்தவனாய், “என்னாச்சு பச்சக்கிளி?” எனக் கேட்டான்.
“இந்த அன்னம் பொண்ணுக்கிருக்க லொல்லு இருக்கே!” என்று மீண்டுமாய்ச் சிரித்தவள், அந்தப் பதிவை வாசித்தாள்.
“பத்து வருடங்களாய் இந்தப் பிராஜக்ட்டில் குப்பை கொட்டும் நீங்கள் எனக்குக் காவியமாகத் தெரிகிறீர்கள்னு அவளோட சீனியருக்கு மீம்ஸ் போட்டுருக்கா” என்று சிரித்தவாறு ஈஸ்வரனிடம் அந்த மீம்ஸ்ஸை காண்பித்தாள். ஈஸ்வரனும் அதைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்திருந்தான்.
அன்னத்தின் முகநூல் பிரோபைலுக்குள் சென்று அங்குள்ள மற்ற பதிவுகளைப் பார்த்தவள், ஒவ்வொன்றாக வாசித்தாள்.
“நாலு மணி நேரம் ஸ்டேட்ஸ் மீட்டிங் வச்சி பேசி தள்ளிட்டு, அடுத்த நாலு மணி நேரத்துல எட்டு மணி நேர வேலையைச் செய்யச் சொல்றீங்க பாருங்க! நீங்களாம் மனுசங்களே இல்லங்க” என்று வாசித்து விட்டு சிரித்தவள், “அய்யோ நான் வேலை செய்யும் போது என் மனசுல தோணினதுலாம் அப்படியே சொல்றாளே! இவ என் கூட வேலைக்குச் சேராம போய்ட்டாளே! நம்ம சுந்தரை ஒரு வழியாக்கிருப்பா” என்று சிரித்தாள் மீனாட்சி.
“ஆமா யாரு இவளோட டி எல்? பாவம் தான் அவரு” என்று ஈஸ்வரன் கூற,
“ஆமா யாருனு தெரியலையே! ஃபேஸ்புக்ல இவளோட ஃப்ரண்ட் லிஸ்ட்ல இருக்க வாய்ப்பு இல்லை. அவரை வச்சிட்டே இப்படிப் போஸ்ட் போடுவாளா என்ன? அவ ஃபோன் செய்யும் போது அவகிட்டயே கேட்கிறேன் யாரந்த பாவப்பட்ட ஜீவன்னு” என்று சிரித்தவாறு உரைத்த மீனாட்சி,
“உன் டி எல் பேர் என்ன?” என்று அன்னத்திற்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள்.
தனது அலைபேசியில் வந்த குறுஞ்செய்தி ஓசையில் அதனை எடுத்து பார்த்த அன்னம், ‘நாமளே கால் செய்யலாம்னு நினைக்கும் போது அவளே மெசேஜ் செய்றாளே’ என்றெண்ணியவளாய் குறுஞ்செய்தியை படித்தவளின் முகம் யோசனையில் சுருங்க,
“இவ எதுக்கு இப்ப என் டி எல் பேரை கேட்குறா? ஒரு வேளை இவளுக்கு நம்ம மேட்டர் தெரிஞ்சிருக்குமோ? அவ்ளோ ஸ்பீடாவா நியூஸ் பரவிடுச்சு?” என்றெண்ணிவளாய்,
“இன்பா” என்று அனுப்பியவள்,
அடுத்ததாய் இரண்டு மூன்று முறை டைப் செய்து அழித்து என வேறு எதையோ அனுப்ப எண்ணி தடுமாறியவள்,
‘இவகிட்ட உண்மையைச் சொல்லிடுவோமா’ என்று யோசித்துக்கொண்டே இருக்க,
அன்னத்தின் முகநூலில் தான் பார்த்த டீம் லன்ச் போட்டோவை அனுப்பி, “இதுல யாருடி உன் டி எல்” எனக் கேட்டாள் மீனாட்சி.
அதனைப் பார்த்து பெருமூச்செறிந்தவளாய், “மீனு நான் ஒருத்தரை காதலிக்கப் போறேன்னு சொன்னேன்ல அவரும் இந்தப் பிக்ல தான் இருக்காரு” என்று அன்னம் அனுப்பிய செய்தியை படித்த மீனாட்சி,
“உனக்கு எப்பவுமே விளையாட்டு தான்டி! லவ் பண்ற மூஞ்சியைப் பாரு! நீ லவ் பண்ணப் போறேன்னு சொன்னதையே நான் நம்பலை இதுல அவர் இந்தப் போட்டோல வேற இருக்காரா! இப்படி நீ விளையாடுறது தெரிஞ்சாலே ஆச்சி உன்னைச் சூப் வச்சிடுவாங்க!” என்று வாய்விட்டு சிரிக்கும் ஸ்மைலிக்களை அனுப்பிய மீனாட்சி,
ஈஸ்வரனிடம், “இந்த அன்னத்துக்கு வந்த மாப்பிள்ளை ஜாதகத்தைப் பார்க்க சொன்னது என்னாச்சுனு ஆச்சிக்கிட்ட கேட்கனும். எப்ப பார்த்தாலும் லவ் பண்ண போறேன்னு ஒரே விளையாட்டு தான்” என்றவாறு அவனுடன் வீட்டின் உள்ளே சென்றாள்.
******
ஜெர்மனியில் சிலுசிலுவென மழை வெளியே தூறிக்கொண்டிருக்க, ராஜன் தனது மகளைப் பார்த்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவள்.
நங்கை ஓய்வறையில் இருந்து இலகுவான உடையை மாற்றி விட்டு வெளியே வர, அவளைக் கைகளில் அள்ளியவன், கட்டிலில் அவளுடன் சேர்ந்து சாய்ந்தான்.
“டேய் பகல் நேரத்துல என்ன வேலை பார்க்கிற” என்று நங்கை அவனை முறைக்க, “அப்புறம் பெருமாள் கிட்ட வச்ச வேண்டுதலை நிறைவேத்த வேண்டாமா! நான் தானே அதுக்கு ஓவர் டைம் வேலை பார்க்கனும்” என்று அவள் முகத்தோடு அவன் மீசை உரச, ஒலித்தது நங்கையின் கைபேசி.
“யார்டா அது கரடி இந்த நேரத்துல” என்று ராஜன் கடுப்பாய் எடுத்து பார்க்க, அன்னம் தான் அழைத்திருந்தாள்.
சிரித்தவாறு அவனைத் தள்ளிவிட்டு எழுந்த நங்கை கைபேசியை எடுத்துப் பேசினாள்.
“மிச்சமிருக்க வாழ்க்கையோட இன்பமும் துன்பமும் நாம தேர்ந்தெடுக்கிற பார்ட்னரை பொறுத்து தான் இருக்கு அன்னம். இந்த முடிவு எடுக்கிறதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சிருப்பனு நம்புறேன். நாங்க சென்னை வந்தப்பிறகு சொல்றோம். பேசலாம்” என்றவாறு இணைப்பைத் துண்டித்து விட்டாள்.
கைபேசியை வைத்தவளின் முகம் யோசனையில் இருக்க, “என்னாச்சு? எனிதிங்க் சீரியஸ்?” எனக் கேட்டான்.
“ஒன்னுமில்லடா! நீ ஏன் இவ்வளோ சீரியஸா என்னைப் பார்க்கிற? அவ யாரையோ லவ் பண்றாளாம்! நாம தான் அவ வீட்டுல பேசி ஒத்துக்க வைக்கணும்னு சொன்னா! யாரு? எந்தப் பையனை லவ் பண்றானு தெரியாம நான் எப்படி நம்பிக்கையா அவகிட்ட பேசுறது! ஊருக்கு வந்ததும் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டேன்” என்றவள் சொன்னதும்,
“ஹப்பா இதுக்குத் தான் இவ்வளோ யோசனையா! யாரை லவ் பண்றாளாம்?” என்று ராஜன் கேட்க,
“தெரியலைடா! எதையும் கேட்டு வெகேஷன் மூடை ஸ்பாயில் செய்ய மனசில்லை. அங்க போனப்பிறகு கேட்டுக்கலாம்னு விட்டுட்டேன். மீனுக்கிட்ட லவ் பண்றதை பத்தி சொல்லப்போறேன்னு சொன்னாள். நாம சென்னைக்குப் போய் அந்தப் பையனை பார்த்து பேசிய பிறகு மத்தவங்ககிட்ட சொல்ல சொல்லிருக்கேன். அந்தப் பையனை பத்தி நாம முதல்ல விசாரிக்கலாம் சுந்தர்” என்றாள்.
“ஓகே பப்ளிமாஸ்! ஆனா நீ ஏன் இவ்வளோ யோசிக்கிற? பதட்டப்படுற” எனக் கேட்டான்.
“தப்பானவனை லவ் பண்ணிட கூடாதேனு பயமா வருது! துருதுருனு வாழ்க்கையோட நல்லது கெட்டது எதுவும் தெரியாத வெள்ளந்தியான பொண்ணு! இப்ப தான் வேலைக்குச் சேர்ந்து ஆறேழு மாசம் ஆகப்போகுது. அதுக்குள்ள லவ் பண்றேன்னு வந்து நிக்கிறாளேனு யோசனையா இருக்கு! நான் லவ் பண்றேன்னு சொல்லும் போது அம்மாவுக்கும் இப்படித் தானே இருந்திருக்கும்” என்று நங்கை ராஜனின் முகத்தைப் பார்த்தவாறு கூற, அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.
“உதை வாங்க போற பாரு! நீ எதுக்கு இப்ப தேவையில்லாததுலாம் யோசிக்கிற?” என்று அவளை அவன் கண்டிக்க, “நீ ஏன்டா முதல்லயே என்னை லவ் பண்ணாம போய்ட்ட!” என்று கேட்டவாறு அவனை இறுக அணைத்துக் கொண்டாள் அவள்.
தேடலின் நிறைவில் முகம் நிறைந்த பொலிவுடனும் வெட்கச்சிரிப்புடனும் மார்போடு சாய்ந்திருந்தவளை அவன் வருடியவாறு இருக்க, “எப்படியாவது என்னை மயக்கிடுறடா நீ!” என்று அவனது கன்னத்தை வருடியவள் சிரிக்க, வெட்கச்சிரிப்பை உதிர்த்தான் அவன்.
*****
“நீ லவ் பண்ற அந்த அன்னம் பொண்ணு வீட்டுக்கு ஒரே பொண்ணு தானே! அவளைக் கட்டிக்கிட்ட பிறகு அவளோட சொத்துலாம் உனக்குத் தானே வரும். அதை வித்து நம்ம கடனைலாம் அடைச்சிடலாம்ல மோகன்” என்றொரு பெண்மணி குரல் கேட்டு அப்படியே நின்று விட்டாள் அன்னம்.
இன்பாவிற்கு விஷயம் தெரிந்து விட்டதை மோகனிடம் கூறுவதற்காக அவனது வீட்டிற்கு வந்திருந்தாள் அன்னம்.
அன்னத்திற்கு ஷிப்ட் இல்லாத பிராஜெக்ட் கிடைத்த மறு வாரமே ருத்ரன் அன்னத்திற்கு இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொடுத்தார்.
தனது வண்டியிலேயே மோகனின் வீட்டிற்குச் சென்றிருந்தாள் அன்னம்.
மோகன் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் அவனது வீட்டை நோக்கி சென்றவள், அந்த வீட்டின் சமையலறை ஜன்னல் வழியாகக் கேட்ட இந்தப் பெண்மணியின் குரலில் அப்படியே நின்று விட்டாள்.
ஸ்பீக்கரில் கைபேசியை வைத்து விட்டு பேசியவாறு அடுப்பில் எதையோ கிண்டிக் கொண்டிருந்த மோகனை ஜன்னல் வழியாகப் பார்த்தவளுக்கு அவனது தாயிடம் பேசிக் கொண்டிருக்கிறான் எனப் புரிந்தது.
சமையலறையில் ஜன்னலின் மறுபுறமாக நின்று வேலை செய்து கொண்டிருந்தவனோ இவளைப் பார்க்கவில்லை.
“அதெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு பார்த்துக்கலாம். இப்ப இந்த மாச வட்டியை எப்படி கட்டுறதுனு பாரும்மா” என்று மோகன் கூறவும்,
மேலும் அதிர்ச்சியாகிப் போனது அவளுக்கு. இப்படிப் பேசாதே எனத் தாயை அதட்டாமல், இவனும் அதற்குச் சம்மதிப்பது போல் பேசுகிறானே எனக் கவலையும் அதிர்ச்சியுமாக அங்கிருந்து சென்று விட்டாள் அவள்.
அன்றிரவு மோகன் அவளை அழைக்க, எடுத்து பேசியவளின் முதல் கேள்வியே, “என் சொத்துக்காகத் தான் என்னைக் காதலிக்கிறியா?” என்பது தான்.
“ஏன் அன்னம் அப்படிக் கேட்குற?” வலிய வரவழைக்கப்பட்ட சோகத்துடன் அவன் கேட்க,
“உங்கம்மா பேசியதை கேட்டேன்” என்று தான் கேட்டதையும் கண்டதையும் அவனிடம் கூறினாள்.
“அம்மா எப்பவுமே அப்படித் தான் அன்னம். அவங்களை அந்த நேரம் சமாதானம் செய்றதுக்காக அப்படிச் சொன்னேன். பொண்டாட்டி சம்பாதிச்சு சாப்பிடுறவன் ஆம்பிளையே இல்லைனு நினைக்கிற ஆள் நான். இதுல உன் சொத்தை வாங்குவேனா!” என்றவன் கூறியதும் மேலும் கோபமாகிப் போனது அவளுக்கு.
“ஓஹோ பொண்டாட்டி காசுல சாப்பிடுறவன்லாம் ஆம்பிளையே இல்லையோ! யூ பிளடி மேல் சாவினிஸ்ட் (male chauvinist) இப்படி ஒரு ஆணாதிக்கவாதியா நீ இருப்பனு நான் நினைக்கலைடா” என்றவள் இணைப்பைத் துண்டித்தாள்.
முதல் முறையாக இவனைக் காதலித்தது தவறோ என யோசிக்கத் தொடங்கினாள் அன்னம்.
அன்றிரவு முழுவதும் தொடர்ந்த அவனது அழைப்புகள் எதையும் அவள் எடுக்கவேயில்லை.