“என்னை விடப் பணக்காரனா ஒருத்தன் கிடைச்சதும் என்னை விட்டு போய்ட்டு, போலீஸ் வச்சி முட்டிக்கு முட்டி தட்டுவேன்னு மிரட்ட வேற செய்றியா நீ” என்று அவளின் கன்னத்தில் அறைய கை ஓங்கினான். அதீத பயத்தில் மயங்கிச் சரிந்தாள் அவள்.
கண் விழித்து அவள் பார்க்கும் போது எங்கோ ஓர் இருட்டறையில் இருந்தாள். மேற்கூரை வழியாக ஆங்காங்கே சிறு வெளிச்சம் தென்பட்டது.
நாற்காலியில் அமர வைத்து அவளின் கைகள் கட்டப்பட்டிருந்தன.
கதவைத் திறந்து உள்ளே வந்த மோகனின் கையில் தாலி இருந்தது. மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கை வைத்து சுற்றிய தாலி அது.
“நீ முழிச்சதும் கட்டனும்னு தான் காத்துட்டு இருந்தேன். இல்லனா எவன் கட்டுன தாலினு உனக்குத் தெரியாம போய்டும் பாரு” என்றவனாய் அவளை நோக்கி முன் நகர்ந்தான்.
“நோ! கொன்னுடுவேன்டா உன்னை” எனக் கத்தினாள் அவள்.
அவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு முடித்த மறுகணம் அவளின் கையை அவன் அவிழ்த்து விட, அந்தத் தாலியை கழட்டி அவன் மீதே வீசி எறிந்தாள்.
“ஒரு பொண்ணோட விருப்பமில்லாம அனுமதியில்லாமல் கட்டுற எந்தத் தாலிக்கும் வேல்யூவும் (மதிப்பு) இல்ல வேலிடிட்டியும் (செல்லுபடி) இல்லனும் போது தாலியே வேலினு உன் கூட வந்துடுவேன்னு நினைச்சியோ! நான் ஒன்னும் பிராப்பர்டி இல்ல தாலி கட்டி ரிஜிஸ்டர் செஞ்சி கூட்டிட்டு போறதுக்கு. எல்லாப் பொண்ணுங்களும் அன்புக்கும் காதலுக்கும் கட்டுப்பட்டுத் தான் கல்யாணம் முடிஞ்சதும் அந்தக் கணவனோட வீட்டுக்குப் போறாங்க. அந்தத் தாலிக்குக் கட்டுப்பட்டு இல்ல” வீர வசனம் பேசியவாறு அவள் இருக்க,
அவள் தாலியைக் கழட்டிய ஆத்திரத்தில் மோகன் அவளை அறைய முனைய, அந்நேரம் அங்கு வந்த சிவா அவனின் கைகளைப் பிடித்துத் தடுத்திருந்தான்.
அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தவனாகச் சரமாரியாக அவனை அடித்துப் போட்டவன், தன்னுடன் வந்த காவலர்களிடம் அவனை ஒப்படைத்தான்.
“சிவா” என அவனை அணைத்துக் கொண்டாள் அன்னம்.
“சிவா எனக்கு அவன் தாலியை கட்டிட்டான்” என்று அவள் அழுதவாறு சொல்ல,
“அதான் கழட்டி எறிஞ்சிட்டியே! உன் விருப்பமில்லாம கண்டவன் கட்டுறது தாலியாகுமா? என் அன்னத்துக்கு நான் கட்டுறது தான் தாலி” என்று அவளின் நெற்றியில் அவன் முட்ட, புன்னகையுடன் அணைத்துக் கொண்டாள் அவனை.
விருட்டெனத் தனது படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான் சிவா.
உடல் முழுக்க வியர்த்து வழிய அதிர்ந்தவாறு விழித்தவனுக்கு நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது.
‘இந்த மாதிரி நிஜமாவே அவளுக்கு அவன் தாலி கட்டியிருந்தாலும் நீ போய்க் காப்பாத்திட்டு வந்து கல்யாணம் செஞ்சிப்பியா?’ என்றவன் மனசாட்சி கேள்வி கேட்க,
“ஏன் செஞ்சிக்க மாட்டேன். அவளுக்காக அவ எனக்கு வேணும்னு சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டு தானே இந்த மாலையே போட்டேன். அப்புறம் எப்படி அவளை விட்டுக் கொடுப்பேன்” அவனின் மனதோடு கூறிக் கொண்டவனாய்,
“முருகா எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியா எங்க கல்யாணம் நடக்கனும்” கைகளைத் தூக்கிக் கும்பிட்டவாறு வேண்டியவனுக்கு, அன்னத்திடம் உடனே பேச வேண்டும் போல் இருந்தது.
நேரத்தை பார்த்தான். இரவு இரண்டு மணியாகி இருந்தது.
கைபேசியை எடுத்து வாட்ஸ்அப்பில் அவளின் லாஸ்ட் சீன் நேரத்தை பார்த்தான். பத்து மணி என்றிருந்தது.
“ஹாய் அன்னம்! ஹௌ ஆர் யூ (எப்படி இருக்க?) இஸ் எவ்ரிதிங் ஃபைன் தேர் (அங்கே எல்லாமும் ஓகே தானே)” என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு படுத்து விட்டான்.
விடியற்காலை நான்கு மணியளவில் விழித்த அன்னம், கைபேசியை எடுத்து பார்க்க, வாட்ஸ்அப்பில் சிவாவிடமிருந்து குறுஞ்செய்தி வந்ததற்கான நோட்டிபிகேஷன் காண்பித்தது.
கண்கள் தானாகக் கைபேசியில் மேலே இருந்த தேதியைப் பார்க்க, தானாக மனதினுள் எழுந்த எதிர்பார்ப்புடன் அச்செய்தியைத் திறந்து பார்த்தாள்.
அச்செய்தியைப் பார்த்தவளுக்கு எதிர்பார்ப்பு சற்றே வடிய,
‘என்ன நடுராத்திரில நல்லாயிருக்கியானு மெசேஜ் அனுப்பிருக்காரு’ என்றெண்ணியவளாய், “குட் மார்னிங் சிவா” என்றவாறு அதையே கேட்டு அனுப்பி வைத்தாள்.
உடனே சிவா பார்த்ததற்கான நீல நிற குறியீடு வரவும், ‘நைட் முழுக்கத் தூங்கவே இல்லயா இவரு’ என இவள் நினைத்த சமயம், வாய்ஸ் மெசேஜ் அனுப்பினான் அவன்.
‘இவர் என்ன நேரங்காலம் தெரியாம வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வச்சிருக்காரு’ என்றெண்ணியவாறே ஹெட் செட்டை கைகளைத் துழாவியவாறு தேடியவள் எடுத்துக் காதில் மாட்டினாள்.
“நீ நல்லா இருக்கத் தானே! உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே” விடியற்காலை பொழுதின் ஆழ்ந்த அமைதியில் காதினுள் பரிதவிப்பாய் கேட்ட அவனின் குரல் அவளை என்னமோ செய்தது.
“ஏன்ப்பா இவ்வளோ தவிப்பா கேட்டிருக்கீங்க? என்னாச்சு? நான் நல்லா தான் இருக்கேன்” என்று அவனை ஆற்றுப்படுத்தும் ஆவலில் தோன்றியதைப் பேசி அனுப்பினாள் இவள்.
அவளின் ஆறுதலான அக்குரல் அவன் உயிர் வரை தீண்டி அமைதிப்படுத்த, “ஒன்னுமில்லைமா! நைட் ஒரு கெட்ட கனவு கண்டேன். உடனே நீ எப்படி இருக்கனு உன்னை நேர்ல பார்க்கனும் போல இருந்துச்சு. அதான் மெசேஜ் செஞ்சேன். இப்ப தான் நிம்மதியா இருக்கு” என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பினான்.
“இல்ல இதுக்கு மேல தூக்கம் வராது. ஷூட்டிங் இல்லை இன்னிக்கு. நான் அம்மா தம்பி கூட அப்படியே எங்க ஊருக்கு வந்துட்டேன்” என்றவனும் தட்டச்சுச் செய்து அனுப்ப,
“சரி ஓகே! அப்புறம் பேசலாம்” என்றவள் அனுப்பவும்,
அடுத்த நொடி, “இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே” என்று கண்களைச் சுருக்கி கெஞ்சுவது போல் ஒரு பொம்மையை அனுப்பியிருந்தான் அவன்.
அதனைப் பார்த்து சிரித்தவளாய், “யாரோ இரண்டு மாசத்துக்குப் பேச மாட்டேன்னு சொல்லிட்டு போனாங்க” என்றாள்.
“அப்படியா! யாரது? எனக்கே பார்க்கனும் போல இருக்கு” என்று அனுப்பிவிட்டுச் சிரித்திருந்தான் சிவா.
“ஹ்ம்ம் கண்ணாடி முன்னாடி போய் நின்னு பாருங்க. மாலை போட்டு பொய் பேசுறீங்க. சாமி கண்ணைக் குத்திடும்” என்று அனுப்பினாள்.
“இந்தப் பொண்ணை எனக்குக் கட்டி வைங்க முருகானு வேண்டிக்கிட்டு தான் மாலையே போட்டேன். அந்தப் பொண்ணுக்கிட்டயே பேச கூடாதுனு எப்படி முருகன் சொல்லுவாரு” பேசும் ஆர்வத்தில் படபடவெனத் தட்டச்சுச் செய்து அனுப்பி விட்ட பிறகே, தான் உளறி விட்டது புரிந்தது அவனுக்கு.
அந்தக் குறுஞ்செய்தியை அவன் நீக்கிவிடப் பார்க்க, இவன் அனுப்பிய மறுநொடி அதனைப் பார்த்திருந்தாள் அவள்.
படுத்திருந்தவள் அதை வாசித்து விட்டு பட்டென எழுந்து அமர்ந்து விட்டாள்.
‘சிவா என்னை லவ் பண்றாங்களா?’ சந்தேகம் எழுந்தது அவளுக்கு.
அதனை உறுதி செய்ய முற்பட்டவளாய், “சிவா இன்னிக்கு என்ன நாள் தெரியுமா?” எனக் கேட்டாள்.
அவளின் கேள்வியில் தேதியைப் பார்த்தவனுக்கு மூளைக்குள் எந்த அலாரமும் அடிக்கவில்லை.
‘எந்த விசேஷ நாளும் இல்லையே! ஒரு வேளை அவளோட பிறந்தநாளோ’ என்று யோசித்தவாறு இன்ஸ்டாவை பார்க்கும் பொழுது தான் அன்றைய நாளின் சிறப்பினை உணர்ந்தவனாய், “அடடா இதைப் பார்க்கவேயில்லையே” தனக்குள்ளேயே கூறிக் கொண்டான்.
“சிவா யாரையும் லவ் செஞ்சிருக்கீங்களா?” அங்கிருந்து பதில் வராமல் போக நேரடியாகவே இதைக் கேட்டிருந்தாள்.
இக்கேள்வி தன்னை நோக்கி திருப்பப்படும் போது அது தன்னைப் பதம் பார்க்குமெனத் தெரிந்தாலும் பேசி விடலாம் என்ற துணிச்சலில் அவனிடம் கேட்டாள் அவள்.
தனது காதலை கண்டு கொண்டு ஆர்வமாகக் கேட்டவளை எண்ணி சிரித்துக் கொண்டான் அவன்.
அதே சமயம் நேற்று தன்னுடன் நிச்சயம் நடக்காமல் இருந்திருந்தால் இன்றைய நாளை மோகனுடன் கொண்டாடியிருப்பாளோ என்ற எண்ணம் எழுவதைத் தடுக்காமல் இருக்க முடியவில்லை.
அவனைப் பற்றி அறிந்த நாளில் இருந்து அவள் அவனை விட்டு ஒதுங்கி இருப்பதாகத் தானே அவனிடம் தெரிவித்தாள். பின் எவ்வாறு இன்று அவனுடன் சென்றிருப்பாள்.
அவளிடம் இதைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்ட பிறகே தனது காதலை உரைக்க வேண்டுமென எண்ணியவனாய், “நீ யாரையும் காதலிச்சிருக்கியா அன்னம்” எனக் கேட்டான்.
மறுநிமிடம் அவளிடம் இருந்து அழைப்பு வந்து விட்டது அவனுக்கு.
ஒலிவாங்கியைக் காதினுள் பொருத்திக் கொண்டு படுத்தவனாய் அழைப்பை ஏற்றான்.
“நீங்க இந்தக் கேள்வி கேட்க தான் காத்துட்டு இருந்தேன் சிவா. உங்களைக் கல்யாணம் செஞ்சிக்கிறதுக்கு முன்னாடி என்னைப் பத்தி எல்லாத்தையும் நான் உங்ககிட்ட சொல்லனும். அதுக்குப் பிறகு உங்களுக்கு ஓகேனா மட்டும் இந்தக் கல்யாணம் நடக்கட்டும்” என்று கூறியவளின் குரல் தழுதழுத்திருந்தது.
“அவனை நல்ல ஃப்ரண்ட்டா தான் நினைச்சி வச்சிருந்தேன்” என்றவள் கூறும் பொழுதே கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.
மோகன் அவளிடம் நல்ல நண்பனாகப் பழகியது முதல் காதலை முன் மொழிந்தது, சில நாட்கள் கழித்து இவள் அதனை ஏற்றது பின் அவனின் செயல்களைக் கண்டு அஞ்சியது. அவனை விட்டு விலகியது என அனைத்தையும் கூறி முடித்தாள் அன்னம்.
அவளின் விசும்பல் ஒலியும் மூக்கை உறிஞ்சும் சத்தமும் மட்டுமே அவனின் செவியைத் தீண்டிக் கொண்டிருந்தது.
அமைதியாக அவள் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு மோகனை கூறு போடும் ஆத்திரம் வந்தது.
“முருகா” என்று கண்களை மூடி சத்தமாகவே கூறி தன்னை நிதானப்படுத்திக் கொண்டவனாய்,
“வெள்ளப்புறா” என்றான். அத்தனை மென்மை அவன் குரலில்.
“ஹ்ம்ம்” என்றாள் அவள்.
“பக்கத்துல தண்ணீர் இருந்தா எடுத்து குடிமா” என்றான்.
எடுத்து அவள் குடித்து முடித்ததும்,
“கண்ணைத் தொடச்சிட்டியா?” எனக் கேட்டான்.
“ஹ்ம்ம்” எனத் துடைத்தாள்.
“அவனைக் காதலிக்கிறனு சொல்லி பேசி அப்புறம் அவனைப் பத்தி தெரிஞ்சி சண்டை போட்டு எல்லாமே ஒன்றரை மாசத்துக்குள்ள முடிஞ்சிருச்சுல!” எனக் கேட்டான்.
“ஆமா” என்றாள் அவள்.
“ஹ்ம்ம் பிரேக் அப் வலிலருந்து வெளில வரதுக்குள்ள நான் வேற பொண்ணு பார்க்க வந்துட்டேன்” என்றவாறு அவன் அமைதிக் காக்க,
“இப்ப என்ன நினைக்கிறீங்க என்னைப் பத்தி? முந்தா நாள் வரை ஒருத்தனை லவ் பண்ணி கழட்டி விட்டுட்டு மறுநாள் வந்து உங்களைப் பிடிச்சிருக்குனு சொல்லிருக்கேனேனு தோணுதா?” எனக் கேட்டாள்.