மாலை ஐந்தரை மணியளவில் அன்னத்தின் இரு சக்கர வாகனத்தில் பின்னே அமர்ந்தவாறு பயணித்தான் சிவா.
“நானே போய்டுவேன்னு சொன்னேனே! நீங்க எதுக்குத் தேவையில்லாம அங்க வந்து, அங்கிருந்து திரும்பப் பஸ்ல வரனும்” வண்டியை ஓட்டியவாறு கேட்டாள் அன்னம்.
“கொஞ்ச நேரம் உன்கூட டைம் ஸ்பெண்ட் செய்யலாம்னு தான் வரேன். வேண்டாம்னா சொல்லு இப்படியே இறங்கிடுறேன்” அவன் இறங்குவது போல் செய்கை செய்ய,
வண்டியை நிறுத்தியவள், “இறங்குங்க” என்றாள்.
அவனின் முகம் வாடிப் போக, “நிஜமா இறங்கனுமா?” எனக் கேட்டான்.
“ஆமா இறங்குங்க” என்றாள் அன்னம்.
“என் மேல எதுவும் கோபமா வெள்ளப்புறா?” எனக் கேட்டவாறு இறங்கியவனைப் பார்த்து சிரித்தவளாய்,
“நீங்க வண்டியை ஓட்டுங்க!” என்று கூறியவாறு இறங்கினாள்.
“அய்யோ புல்லட் மாதிரி பெரிய வண்டியை ஓட்டிட்டு இப்படிச் சின்ன வண்டிலாம் ஓட்டினா கை கால்லாம் வலிக்கும். அதுவும் இவ்வளோ நேரம் டான்ஸ் பிராக்டிஸ்ல இருந்துட்டு வண்டி ஓட்டுனு சொன்னா உனக்கே நியாயமா இருக்கா பொண்டாட்டி” என்றான்.
“அப்ப ஓட்ட மாட்டீங்க?” அவள் அவனை முறைக்க, “ப்ளீஸ்டா பொண்டாட்டி! எனக்கு இப்ப ஓட்டுற மூட் இல்லமா! நீயே ஓட்டேன். நான் ஜாலியா பின்னாடி உட்கார்ந்துட்டு வரேன்” என்றான்.
“நீங்க ஒன்னும் வர தேவையில்லை! இப்படியே உங்க டான்ஸ் ஸ்கூலுக்குக் கிளம்பி போங்க! நான் வரேன்” என்றவாறு வண்டியில் ஏறி அவள் ஸ்டார்ட் செய்யவும்,
“சரி நீ பார்த்து போ!” என்றவன் சாலையின் மறுபுறம் சென்று, வந்த வழியே நடந்து செல்ல அருகே வந்து நின்ற பேருந்தில் ஏறிச் சென்றே விட்டான். இவளை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.
“இம்பூட்டு கோவக்காரரா இவரு! நான் கோவமா பேசினா இப்படித் தான் போவாரா?” இவளுக்குக் கண்களில் நீர் துளிர்த்து விட்டது.
வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்டியவளின் மனமோ புலம்பித் தள்ளியது.
‘நான் இப்ப என்ன சொன்னேன்னு இவ்வளோ கோபம். போனு சொன்னா போய்டுவாரா? இனி அன்னம்னு சொன்னா அன்னமும் சிவாவும்னு டயலாக்கா விட்டுட்டு நடு ரோட்டுல விட்டுட்டு போய்ட்டாரு! இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான். சும்மா வாய் சவடால் தான்’ மனம் கொதித்துப் போனது. கண்ணில் நீர் திரையிட்டுப் பாதையை மறைத்தது.
அவளின் நியாயமான மனசாட்சியோ, “நீ தானே போகச் சொன்ன! அதனால் தானே போனாரு! அப்புறம் எதுக்கு இப்படிக் கெடந்து தவிக்கிற” என்று கேட்டது.
வண்டியை ஓரமாய் நிறுத்தி கண்களைத் துடைத்து விட்டு, ‘ஆமா நான் தானே சொன்னேன். அதனால் தானே போனாரு! எதையும் யோசிக்காம ஒழுங்கா வீட்டைப் பார்த்து போவோம்’ என்றெண்ணியவளாய் நிற்க, அவள் முன் வந்து நின்றான் சிவா.
“என்னாச்சு? ஏன் நின்னுட்ட?” என்று கேட்டவாறு அவளருகில் அவன் வரவும்,
கண்களில் நீர் சரசரவென இறங்க, “நடுரோட்டுல விட்டுட்டு போனீங்கல! இப்ப எதுக்கு வந்தீங்களாம்? நீங்க ஒன்னும் வர தேவையில்லை” அவனின் கையில் சரமாரியாக அடித்தவள், வண்டியில் அமர்ந்தவளாய் நின்றிருந்த அவனது மார்பில் சாய்ந்து கண்ணீர் வடித்தாள்.
“ஹே அன்னம்மா! என்னடா? சும்மா விளையாண்டேன்டா உன் கூட!” தனது மார்பினில் இருந்த அவளது முகத்தை நிமிர்த்திக் கண்களைத் துடைத்து விட்டவன், “எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க. நாம கிளம்பலாம்” என்றவாறு அவளைப் பின்னாடி நகர்ந்து அமர சொன்னவன், முன்னே அமர்ந்து வண்டியை ஓட்டினான்.
“என்னை என்னமோ செஞ்சிட்டீங்க நீங்க! ஒன்னுமே இல்லாத விஷயத்துக்குச் சண்டை போடுறேன்! அழுறேன்! கோபப்படுறேன்! அதுவும் பப்ளிக்கா! அய்யோ எல்லாரும் பார்த்தாங்களா?” மனதினுள் நினைத்ததை எல்லாம் புலம்பியவாறு அவள் கூற,
“எல்லாம் காதல் படுத்துற பாடு” என்று சிரித்தவன்,
“நான் தான் தொப்பி மாஸ்க்லாம் போட்டிருந்தேன்ல! நீ தான் எல்லாருக்கும் தெரிஞ்சிருப்ப! யாராவது வீடியோ எடுத்திருந்தாங்கனா நடுரோட்டில் காதலியைச் சமாதானம் செய்த காதலன்னு வைரல் ஆக்கலாம். அப்படி ஒரு சீன் அது” என்றான்.
“அய்யய்யோ அப்படி எதுவும் வீடியோ போட்டு ஆச்சிக்கு தெரிஞ்சிது, என்னை வச்சி செஞ்சிடுவாங்க! கல்யாணம் ஆகுறதுக்குள்ள இப்படித் தான் ஒட்டிக்கிட்டு பழகுவியானு திட்டித் தீர்த்திடுவாங்க” பயந்தவளாய் அவளுரைக்க, அவளின் பாவனையில் சிரித்தான் இவன்.
“ஆமா ஆப்போசிட் பஸ்ல தானே ஏறுனீங்க! இங்க எப்படி வந்தீங்க?” எனக் கேட்டாள்.
“அது ஆப்போசிட் பஸ்ல ஏறினதும் மனசு கேட்கலை. விளையாட்டுக்குனாலும் இப்படி நட்ட நடு ரோட்டுல விட்டுட்டு வந்துட்டுயேடானு மனசாட்சி காரி துப்புச்சு. உடனே இறங்கி கிராஸ் பண்ணி ஒரு ஆட்டோல ஏறி உன் பின்னாடியே வந்தா மேடம் வண்டியை நிறுத்திட்டு அழுதிட்டு இருக்கீங்க” என்றவன் சொன்னதும்,
ருத்ரனின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவன், “நாளைக்குக் காலைல நான் திருச்சிக்கு கிளம்புறேன். அங்க ஈவ்னிங் ஒரு காலேஜ் ஃபங்ஷன்ல சீப் கெஸ்ட்டா கலந்துக்கிறேன்” என்றான்.
“வாவ் சீப் கெஸ்ட்டாலாம் கூப்பிடுவாங்களா உங்களை” என்று அவள் கேட்க,
“உன் புருஷன் மாஸ் செலிப்ரெட்டி இல்லைனாலும் கொஞ்சமே கொஞ்சம் பிரபலம் தான்மா நம்பு” என்றவன் சொன்னதும் சிரித்தாள் அவள்.
“சரி என்னைப் பத்தியே கனவு காணாம நல்லா தூங்கு” என்றவனாய் வண்டியை நிறுத்தி விட்டுக் கிளம்ப முனைய,
“நடந்து தானே போகனும். நான் வேணா உங்களைப் பஸ் ஏத்தி விட வரவா?” என்றவள் கேட்க, வேண்டாமெனத் தலையசைத்தவன் அவளை உள்ளே செல்லுமாறு கூறிவிட்டுக் கிளம்பினான்.
அவனுக்குக் கை அசைத்தவாறு உள்ளே வந்தவளுக்குத் தன்னையே எண்ணி ஆச்சரியமாய் இருந்தது.
“எப்படி இவர்கிட்ட இப்படி அட்டாச்டு ஆனோம்” எனத் தனக்குள்ளேயே பேசியவளாய் தனது அறைக்குச் சென்றாள்.
அன்றிரவு படுக்கையில் படுத்தவாறு அன்னமே பாடலுக்கு இவர்கள் ஆடிய காணொளியை உவகைப் பொங்க பார்த்திருந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.
******
மறுநாள் மாலை வேளையில் தனது அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவளை அழைத்தார் அவளின் தந்தை முருகன்.
“ஆச்சிக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை! உடனே கிளம்பி வர்றியா மா” என்று அவர் கவலையான குரலில் கூற,
அதிர்ந்து போனவளாய் பதட்டத்துடன், “ஆச்சிக்கு என்னாச்சுப்பா? எனக் கேட்டாள்.
“ஒன்னும் பெரிசா இல்லைமா! உன்னைப் பார்க்கனும்னு சொன்னாங்க. நீ கிளம்பி வா நேர்ல பேசிக்கலாம்” என்று இணைப்பை துண்டித்து விட்டார்.
ருத்ரனுக்கு அழைத்துப் பேச, அவரும் இவளுடன் கிளம்பி வருவதாய் உரைத்தார்.
மதுரையிலுள்ள தனது நண்பனுக்கு அழைத்து அங்குள்ள நிலவரத்தைப் பார்த்து அவர்களுக்கு உதவியாக இருக்குமாறு கூறிவிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போனான் சிவா.
ருத்ரனும் அன்னமும் மதுரை நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்க,
சிவாவின் நிகழ்ச்சி நிறைவுப்பெற்று மகிழுந்தில் ஏறிய சமயம் கைபேசியில் அவனை அழைத்த அவனது மதுரை நண்பன்,
“ஆச்சி நல்லா இருக்காங்கடா! அவங்களுக்கு ஒன்னுமில்ல. எதுக்குப் பொய் சொல்லி வர சொல்லிருக்காங்கனு தெரியலையே” என்றவன் சொன்னதும் குழப்பத்தில் ஆழ்ந்தான் சிவா.
தனது மதுரை நண்பன் உரைத்ததைக் கேட்டவனுக்கு குழப்பமாகிப் போனது.
“எதுக்கு திடீர்னு பொய் சொல்லி வர சொல்லிருக்காங்க. நம்ம கல்யாணத்தை வச்சி எதுவும் பிரச்சனை வந்திருக்குமா?” யோசித்தவாறே மகிழுந்தில் தலையைப் பின்னோடு சாய்த்தவாறு அமர்ந்திருந்தான் சிவா.
இதனை அன்னத்திடம் கூறி அவளையும் குழப்ப மனமில்லாமல் மதுரையை நோக்கிப் பயணித்தான் சிவா.
இரவு பதினொரு மணியளவில் ருத்ரனும் அன்னமும் மதுரையைச் சென்றடைந்தனர்.
தனது இல்லத்திற்குள் நுழைந்தவள், “ஆச்சி எங்கப்பா? அவங்களுக்கு என்னாச்சு?” எனக் கேட்டாள்.
“அவங்க நல்லாயிருக்காங்கமா! உள்ளே ரூம்ல இருக்காங்க. பின் கட்டுல தண்ணீர்ல கால் லேசா வழுகிடுச்சு. கால்ல தான் அடிபட்டுருக்கு” என்று முருகன் கூறவும்,
“இதுக்கா அடிச்சி பிடிச்சி வர சொன்னீங்க? நான் என்னமோ ஏதோனு பயந்தே போய்ட்டேன்” எனக் கூறும் போதே கண்களில் நீர் கட்டிக் கொண்டது அவளுக்கு.
“ஆச்சிக்கு வலி ஒரு பக்கம்! உன்னை உடனே பார்க்கனும்னு ஆசை ஒரு பக்கம்! இப்படி சொல்லலைனா நீ உடனே கிளம்பி வர மாட்டனு ஆச்சி தான் எதுவும் சொல்லாம இப்படி சொல்லி உன்னை வர வைக்க சொன்னாங்க” என்றார் முருகன்.
“எங்க அந்த ஆச்சி! நான் எவ்ளோ பதறி போய் வந்தேன் தெரியுமா” என கண்களில் நீர் துளிர்க்க ஆதங்கத்துடன் கேட்டாள்.
முருகன் இயல்பாக பேசினாலும் எவரின் முகத்திலும் திருமணத்திற்கான மகிழ்வு இல்லையே, வேறு எதுவும் பிரச்சனை இருக்குமோ என முருகனையும் அவரின் மனைவியையும் பார்த்தவாறு நினைத்தார் ருத்ரன்.
“நீங்க முதல்ல போய் முகம் கழுவிட்டு வாங்க! சாப்பிட்டுட்டே பேசலாம்” என ருத்ரனையும் அன்னத்தையும் அவரவர் அறைக்கு அனுப்பி வைத்தார் முருகன்.
இருவரும் கால் மணி நேரத்தில் உணவு மேஜையில் வந்தமர அங்கே அமர்ந்திருந்தார் ஆச்சி.
ஆச்சியைப் பார்த்ததும் கட்டிப்பிடித்து அழுது கரைந்த அன்னம், “என்ன ஆச்சி, பாதத்துல இவ்வளோ பெரிய கட்டு போட்டிருக்காங்க. பார்த்து நடக்க மாட்டியா நீ! ரொம்ப வலிச்சிதா” கண்கள் கலங்க காலை தடவியவாறு அன்னம் கேட்க,
“சரியாகிடும்! வலிக்கு மாத்திரை மருந்துலாம் கொடுத்திருக்காங்க. நீ ஏன் இப்படி அழுது வடியுற” என்று அவளின் கண்களை துடைத்தார் ஆச்சி.
இருவரும் உண்டு முடித்ததும், “அன்னம் நீ போய் தூங்கு மா! காலைல பேசலாம்” என்று அவளை மேலே இருக்கும் அறைக்கு அனுப்பிய முருகன், ருத்ரனிடம் தீவிரமாய் சில விஷயங்களை பகிர்ந்தார்.
“நேத்து இப்படி ஒரு மொட்ட கடுதாசி வரவும் ரொம்ப மனசு சங்கடமா போச்சு மாப்ள! அதை நினைச்சிக்கிட்டே பின்னாடி காய வச்ச துணியை எடுக்க போனப்ப தான் இப்படி ஆகிட்டு” என்று சொன்ன ஆச்சி,
“கல்யாண வேலை நடந்துட்டு இருக்க நேரத்துல இப்படி ஆகிடுச்சேனு கவலை வேற! அங்க கல்யாண கனாவுல இருக்க பொண்ணுக்கிட்ட போய் நாங்க விசாரிக்க வரைக்கும் சிவா தம்பிக்கிட்ட பேசாதனு எப்படி சொல்றது! அதான் மொதல்ல அன்னத்தை இங்கே வர வச்சிட்டு அப்புறம் சிவா தம்பியை பத்தி விசாரிக்கலாம்னு உங்களை வர வச்சோம்” என்றார் ஆச்சி.
“எனக்கு தெரிஞ்சி சிவா மேல எந்த தப்பும் இருக்காது அத்தை. மொட்டை கடுதாசி பொய்யா குத்தம் சுமத்தனும்னு நினைக்கிறவன் தான் போடுவான். நீங்க எதை நினைச்சும் கவலைப்படாம தூங்குங்க அத்தை. காலைல பார்த்துக்கலாம்! நீங்களும் போங்க மச்சான். கூட்டிட்டு போ தங்கச்சி” என்று அனைவரையும் அனுப்பியவர், தானும் சென்று ஓய்வறையில் படுத்துக் கொண்டார் ருத்ரன்.
அங்கே சிவாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் அன்னம்.
“ஆச்சிக்கு கால்ல அடிப்பட்டிருக்கு அத்தான்!” என்று அன்னம் அனுப்பியதும், மதுரை நண்பனின் இல்லத்தில் தங்கியிருந்த சிவா, “டேய் அவங்களுக்கு நிஜமாவே உடம்பு சரியில்லைடா. நீ எந்த ஆச்சியை போய் பார்த்துட்டு வந்த?” எனக் கேட்டான்.
“இல்லடா நீ சொன்னதும் ஹார்ட் அட்டாக், அது இதுன்னு பெரிசா யோசிச்சு அவங்க வீட்டுக்கிட்ட போனேனா, அங்க ஆச்சி சத்தமா யாரையோ வசைப்பாடிட்டு இருந்தாங்க. அதான் உடனே உனக்கு கால் செஞ்சி சொன்னேன். இப்படி கால்ல அடிப்பட்டதுக்குலாம் அவசரமா வர வைப்பாங்கனு எனக்கு எப்படி தெரியும்” என்றான் அந்த நண்பன்.
“உன்னை போய் அனுப்பி வச்சேன் பாரு! என்னை சொல்லனும்” என தலையில் அடித்துக் கொண்ட சிவா, மாடிப்படியில் ஏறியவனாய் அன்னத்திற்கு அழைத்தான்.
படுக்கையில் படுத்து கிடந்தவளாய் இணைப்பை ஏற்றவள், “என்ன அத்தான்! இந்த நேரத்துல கால் செஞ்சிருக்கீங்க?” எனக் கேட்டாள்.
“நான் மதுரை வந்துட்டேன். ஃப்ரண்ட் வீட்டுல தான் இருக்கேன்னு சொல்ல தான் போன் செஞ்சேன். அப்படியே உன்கிட்ட பேசலாம்னு தான். இன்னிக்கு நாள் முழுக்க டென்ஷன்லயே போய்டுச்சு” என்றான் சிவா.
“ஏன் என்னாச்சு? அங்க ஃபங்ஷன்ல எதுவும் பிராப்ளமா?” எனக் கேட்டாள்.
“இல்லமா! நீ ஆச்சிக்கு உடம்பு சரியில்லனு கவலையாய் கிளம்பவும் மனசு சரியில்லை! ஆச்சிக்கு என்னனு வேற சொல்லாம கிளம்பி வர சொன்னதும் நம்ம கல்யாணத்தை வச்சி எதுவும் பிரச்சனையோனு வேற கலக்கமாகிப் போச்சு” மனதின் கலக்கத்தை அவளிடம் பகிர்ந்து கொண்டான்.
“ஏன் அப்படிலாம் யோசிக்கிறீங்க? கல்யாணத்துல என்ன பிரச்சனை வந்துட போகுது” என்றாள்.
“நீ இல்லாம எனக்கு வாழ்க்கை இல்லைடா அன்னம்மா! என்னை விட்டு உன்னை பிரிச்சிடுவாங்களோனு வர்ற நினைப்பே மனசை ரணமா வலிக்க வைக்குது. என்னை விட்டு போய்ட மாட்ட தானே வெள்ளப்புறா” அவனின் குரல் கரகரப்புடன் ஒலிக்க,
“ஏன்ப்பா இப்படி பேசுறீங்க? நீங்க இப்படி சொல்றதை கேட்க கூட என்னால முடியலை. நீங்க வருத்தப்பட்டாலே எனக்கு கண்ணு கலங்கிடும். அதெல்லாம் உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன். நம்ம கல்யாணம் நல்லபடியா நடக்கும். நீங்க எதுவும் நினைச்சு கவலைப்படாம தூங்குங்க” என்றவள் மேலும் சில நிமிடங்கள் அவனிடம் பேசி விட்டு இணைப்பை துண்டித்தாள்.
‘சிவா ஏன் திடீர்னு இப்படி பேசுறாரு’ என்று யோசித்த வண்ணமே உறங்கிப் போனாள் அன்னம்.
*****
மறுநாள் காலை ஐந்து மணியளவில் சென்னையில் தனது படுக்கையறையில் எழுந்து அமர்ந்தாள் நங்கை.
அவர்களின் மகள் நந்திதா அவளது தாத்தாவுடன் அவரது அறையில் அன்று படுத்துறங்க, ராஜன் இங்கே நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.
உறங்கும் கணவனைத் தொந்தரவு செய்யாத வகையில் படுக்கையில் இருந்து இறங்கினாள். தனது கைப்பையினில் எதையோ எடுத்தவளாய் கழிவறைக்கு சென்று சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவளின் முகம் பூரித்துக் கிடந்தது.
ஒருக்களித்து படுத்தவாறு உறங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவள், “சுந்தர்” என அவனைத் தட்டினாள்.
லேசாய் அசைந்து விட்டத்தைப் பார்த்துப் படுத்தவனாய் மீண்டும் உறக்கத்திற்குள் செல்ல, மெல்ல எட்டி அவனின் முகத்தருகே சென்றவள் அவன் இதழில் தனது உதட்டை ஒத்தி எடுத்தாள்.
உதட்டைத் துடைத்தவனாய் மறுபுறம் அவன் சாய, அவனருகில் சென்று படுத்தவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு காதைக் கடித்தாள்.
ஆஆஆஆ என அலறியவனாய் கண்களைத் திறவாமலேயே அவளின் இடையோடு கையிட்டு தன்னோடு இறுக்கியவன், “என் பப்ளிமாஸ்க்கு காலைலயே என்ன வேணுமாம்” என்று அவளின் கன்னத்தைக் கடித்தான்.
அவன் தாடியைப் பிடித்திழுத்தவளாய், “கண்ணைத் திறந்து பாருடா” என்றாள்.
தன் மேலே அவளை இழுத்தவனாய் கண்களைத் திறந்து அவளைப் பார்க்க, “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
சிரித்தவாறு அவளையே அவன் பார்த்திருக்க, “என்னடா? எதுக்கு சந்தோஷமா இருக்கேன்னு கேட்க மாட்டியா?” எனக் கேட்டாள்.
ஆச்சரியமாக அவனை அவள் பார்க்க, “என்னோட எக்ஸ்ட்ராடினரி பெர்மாமென்ஸூக்கு (extra ordinary performance) பலன் கிடைச்சிருக்கு!” என்று கண் சிமிட்டியவாறு குறும்பாய் அவன் கூற,
“பேச்சை பாரு” என அவன் உதட்டினிலேயே ஒரு அடி வைத்தவள், இத்தனை நேரமாய் தனது கையில் பொதிந்து வைத்திருந்ததை அவனிடம் காண்பித்தாள்.
அதிலிருந்த இரண்டு வரியை பார்த்து உடலெல்லாம் புல்லரித்தது அவனுக்கு.
“சீக்கிரமா உன்னை மாதிரியே ஒரு குட்டி சுந்தர் வரப் போறான்! லவ் யூ டா” ஆனந்த கண்ணீருடன் உரைத்தவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
“லவ் யூ டா பப்ளிமாஸ்” என்றவாறு நெற்றியில் முத்தமிட்டவன் அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.