விடியற்காலை பொழுதில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த சிவாவின் கனவில் தோன்றியது அதே மின் தூக்கிக் காட்சி.
கைப்பேசி வெளிச்சத்தில் அன்னத்தின் முகத்தைக் கண்டதும் அவனது மூளைக்குள் ஒலிக்கத் தொடங்கியது இப்பாடல்.
உறக்கத்தில் இருக்கும் அவன் முகத்தில் அத்தனை ரசனைப் பாவங்கள்!
அதிர்ந்து விழிக்கும் அந்தக் கண்கள், பயத்தில் படபடவெனப் பட்டாம்பூச்சியின் இறகாய் துடிக்கும் கண்ணிமைகள் என அவளை அத்தனை ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தான் கனவில்.
மின் தூக்கியிலிருந்து அவள் வெளியே செல்ல முனைந்த நேரம், ‘போகாதே! போகாதே’ என இவனின் நெஞ்சம் அடித்துக் கொள்ள, அவளின் கையினைப் பற்றி நிறுத்த முனைந்த நேரம், காற்றோடு கலந்தவளாய் மறைய முற்பட்டவளை, நிஜத்திலேயே கைகளால் பிடிந்திழுப்பது போல் தனது கைகளைக் காற்றில் அசைத்தவன் கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்திருந்தான்.
இரவு படப்பிடிப்பு முடிந்து காலை வீட்டிற்கு வந்து உறங்கிக் கொண்டிருந்தவனோ, உருண்டு விழுந்து விழித்த அதிர்வில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவனாய், “ச்சே கனவா!” எனத் தலையைத் தட்டிக்கொண்டான்.
நேரத்தைப் பார்த்தான். “படுத்து அரை மணி நேரம் தான் ஆகுதா” தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டவனாய், “லிப்ட்ல பார்த்ததுல இருந்து கண்ணுக்குள்ளயே நிக்கிறாளே இந்த வெள்ளைப்புறா!” வாய்விட்டுப் புலம்பினான்.
‘இவ்வளோ அழகான பொண்ணு கண்ணுக்குள்ள நிக்கலைனா தான் அதிசயம்’ இவனது மைண்ட்வாய்ஸ் கௌண்டர் கொடுக்க,
“ம்ப்ச் சினி ஃபீல்ட்ல இல்லாத அழகான பொண்ணுங்களா! இந்தப் பொண்ணு சம்திங் வித்தியாசமா தெரியுறா! மனசுக்கு நெருக்கமா ஃபீல் செய்ய வைக்கிறா” தனக்குத் தானே பேசிக் கொண்டவனோ,
“இதுக்கு மேல இதைப் பத்தி யோசிக்காதடா சிவா” என்று எச்சரித்துக் கொண்டவனாய் மீண்டுமாய்ப் படுக்கையில் படுத்துக் கொண்டான்.
அங்கு இரவு ஷிப்ட் முடிந்து காலை வீட்டை அடைந்த அன்னம், நேராகச் சென்று கட்டிலில் விழுந்தவள் தான், ருத்ரனும் செண்பாவும் எவ்வளவு எழுப்பியும் எழவேயில்லை அவள்.
இரவு ஷிப்ட்டிற்குச் செல்ல அவளை அனுமதித்ததே தவறோ என்று ருத்ரன் வருந்துமளவு உறங்கியிருந்தாள் அன்னம்.
காலை எட்டு மணியளவில் வீட்டை அடைந்தவள் அன்று மாலை ஐந்து மணிக்கு தான் விழித்தாள். அது வரை எதுவும் உண்ணவுமில்லை. ருத்ரனுக்குப் பெருத்த கவலையாகி போனது. அன்னத்தின் வீட்டினரும் ருத்ரனை அழைத்துப் பேசி உண்ணாது உறங்குபவளை எண்ணி கவலைக்குள்ளாகினர்.
வாட்ஸ்அப் குழுவில் அன்றைய நாளில் அன்னத்திடம் இருந்து எந்தக் குறுஞ்செய்திகளும் வராது இருந்ததில் பயந்து போயினர் மூன்று பெண்களும்.
“என்னடி ஆச்சு உனக்கு இன்னிக்கு? எந்த மெசேஜ்ஜும் செய்யலை? நைட் ஷிப்ட் போய்ட்டு வந்தியா இல்லையா?” என மீனாட்சி அந்தக் குழுவில் மதியம் இரண்டு மணியளவில் செய்தியனுப்ப, அதனைத் தொடர்ந்து “என்னடா அன்னம்? என்னாச்சு?” என்று நங்கையும், “என்னம்மா அன்னம்மா? ஆளையே காணோம்?” என்று கல்யாணியும் குறுஞ்செய்தி அனுப்பினர்.
அடுத்தச் சில மணி நேரங்களுக்கு அவளிடமிருந்து பதில் இல்லாமல் போகவும் அவளின் எண்ணிற்கு அழைத்தனர். தவறிய அழைப்புகளாகவே சென்றது அனைத்தும்.
மீனாட்சி தனது தந்தை ருத்ரனை அழைத்துக் கேட்க, அவர் தான் அவளின் உறக்க நிலையைப் பற்றிக் கூறினார்.
“சரியான தூங்குமூஞ்சு! ஒரு நாள் நைட் தூங்காம இருந்ததுக்கே இந்தப் பாடா! இவலாம் குழந்தை பெத்தா எப்படிப் பார்த்துப்பா?” என்று மீனாட்சி அந்த வாட்ஸ்அப் குழுவில் அவளை வசைப்பாடியவாறு அவளின் நிலையைத் தெரிவிக்க,
“மீனு நீங்க முதல் ஸ்டெப்பை விட்டுட்டு அடுத்த ஸ்டெப்பை பத்தி யோசிச்சுக் கவலைப்படுறீங்களே! இவ முதல்ல மொத ராத்திரில இப்படித் தூங்காம இருந்தா தானே குழந்தையே பொறக்கும்” என்று கண்ணில் நீருடன் சிரித்தவாறு இருக்கும் ஸ்மைலிக்களுடன் நங்கை குறுஞ்செய்தி அனுப்ப,
மாலை ஐந்து மணியளவில் விழித்த அன்னம், படுக்கையிலேயே உருண்டவளாய், தனது கைபேசியை எடுத்து பார்க்க ஐந்து மணியென அது நேரத்தைக் காண்பிக்க, “என்னது! அஞ்சு மணியா?” எனப் படக்கென எழுந்தமர்ந்தாள் அன்னம்.
வாட்ஸ்அப்பில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் குறுஞ்செய்தி ஒலியினால் அந்த ஸ்டைலிஷ் தமிழச்சி குழுவிற்குள் சென்று பார்த்தவள், அதில் இருந்த குறுஞ்செய்திகளைப் பார்த்தவாறு படுத்து விட்டாள்.
நங்கையின் குறுஞ்செய்தியைப் பார்த்து சிரித்தவளாய், “ஒரு நைட் ஷிப்ட் பாருங்க அண்ணீஸ்களா! அப்ப தான் என் கஷ்டம் உங்களுக்குப் புரியும்! கிண்டலா செஞ்சிட்டு இருக்கீங்க எல்லாரும்” என முறைக்கும் ஸ்மைலிக்களை அனுப்பிவிட்டு தவறிய அழைப்புகளைப் பார்க்க, இந்த மூன்று பெண்கள் அல்லாது, பல தவறிய அழைப்புகள் அவளது தாய் மற்றும் தந்தையிடம் இருந்து வந்திருக்க, அவர்களுக்கு அழைத்துப் பேசி சமாதானம் செய்தவள், குளித்து முடித்து முகப்பறைக்கு வந்தாள்.
சமையலறைக்குச் சென்று செண்பாவிடம் பேசியவாறு அங்கேயே மேடையில் அமர்ந்து சூடான தோசையை உண்டுவிட்டு வெளியே வந்தவள் ருத்ரனுக்கு அழைத்தாள்.
அந்த வீட்டின் பக்கத்து தெருவிலேயே பெயிண்ட்டிங் பொருட்களை விற்கும் கடையினை வைத்திருந்தார் ருத்ரன். மத்திய அரசாங்க பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றப்பின் மீனாட்சியின் திருமணம் வரை ஏதும் செய்யாது இருந்தவர், மீனாட்சியின் திருமணத்திற்குப் பிறகு இந்தக் கடையை வைத்தார். இக்கடையை வைப்பதற்கு வெகுவாக உதவி புரிந்தான் மீனாட்சியின் கணவனான ஈஸ்வரன்.
பணியாட்களை வைத்துக் கொண்டு கடையைக் கவனித்துக் கொள்பவர், கல்லாவில் அமர்ந்து கணக்கு வழக்கு பார்த்துக் கொள்வார்.
அன்னம் அவருக்கு அழைத்ததும் கடையை வேலையாட்களிடம் பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு வீட்டிற்கு வந்தவர், நேரே அன்னத்தின் அறைக்குச் சென்றார்.
அலுவலகத்திற்கான மகிழுந்து வர ஒரு மணி நேரமிருக்க, தலையை வாரிக் கொண்டிருந்தாள் அன்னம்.
அறைக்குள் வரும் போதே, “நீ இந்த மாதிரி உடம்பை கெடுத்துக்கிறதா இருந்தா, நான் உன்னை நைட் ஷிப்ட் அனுப்ப ஒத்துக்க மாட்டேன் அன்னம்” சற்றுக் கடுமையான குரலில் உரைத்தார் ருத்ரன்.
“நீயா பேசியது! என் மாமா நீயா பேசியது?” என்று அன்னம் பாட, சட்டெனச் சிரித்து விட்டார் ருத்ரன்.
“ஹ்ம்ம் இப்படிச் சிரிச்சா எவ்ளோ நல்லா இருக்கீங்க! அதை விட்டுட்டு மிலிட்டரி ஆபிஸர் மாதிரி உர்ர்ருனு வந்தீங்க” என்ற அன்னத்தின் முதுகில் தட்டியவராய்,
“வாலு! நான் மிலிட்டரி ஆபிஸர் மாதிரி இருக்கேனா” என அவளின் காதைத் திருகி விட்டார்.
“ஆஆஆ மாமா” என்று காதைத் தேய்த்துக் கொண்டவளாய், “அப்பா எதுவும் சொன்னாங்களா மாமா? என்னை நைட் ஷிப்ட் அனுப்ப வேண்டாம்னு?” எனக் கேட்டாள்.
“அவங்களுக்கு நீ உடம்பை கெடுத்துப்பியோனு தான் கவலை. அதுக்காக அவங்க வேலையை விடச் சொல்றதுல தப்பில்லையே” என்று ருத்ரன் கூறவும்,
“என்ன மாமா நீங்க! சேம் சைடு கோல் போடுறீங்க” என்று சிணுங்கிய அன்னம், “எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்கனு பார்த்தா அவங்களுக்கு சப்போர்ட் செஞ்சிட்டு இருக்கீங்க” எனக் கேட்டாள்.
“நீ இந்த வேலையைத் தொடர்ந்து செய்ய நான் ஒத்துக்கனும்னா நான் சொல்றதைக் கேட்கனும்” என்றவர் சொன்னதும்,
“சொல்லுங்க கேட்டுடுவோம்” என்றவாறு அவர் முன் சென்று நின்றாள் அன்னம்.
“என்னது குளிச்சிட்டு தூங்கனுமா?” என்று சிணுங்கியவளைப் பார்த்த ருத்ரன்,
“அப்ப நீ ஒன்னும் வேலைக்குப் போகத் தேவையில்லை” என்று ருத்ரன் சொன்னதும், “சரி சரி குளிக்கிறேன்! அடுத்த ரூல்ஸ்ஸை சொல்லுங்க” என்றாள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு.
“குளிச்சிட்டு முதல்ல இளநீர் குடிக்கனும். அதுக்குப் பிறகு தான் சாப்பிடனும்!”
“ரைட்டு! அப்புறம்”
“வாரத்துல ஒரு நாள் தலைக்கு எண்ணெய் வச்சி குளிச்சிடனும். இது நைட் ஷிப்ட்டுக்கு மட்டும் இல்லை. எந்த ஷிப்ட்ல வேலை பார்த்தாலும் இதைச் செய்யனும்” என்றார்.
சரி சரியென மண்டையை ஆட்டியவளைப் பார்த்து சிரித்தவராய், “மொத்தத்துல மூனு வேலையும் ஒழுங்கா சாப்பிட்டு உன் உடம்பை நீ கவனிச்சிக்கிட்டா போதும் எனக்கு” என்றார் ருத்ரன்.
“சரிங்க மாமா! இனி சாப்பிடாம தூங்க மாட்டேன்! போதுமா! சரி நான் ஆபிஸ்க்கு கிளம்புறேன்” என்றவள் அடுத்தச் சில மணி நேரங்களில் வாசலில் அலுவலக மகிழுந்து வந்து நின்றதும் ஏறிச் சென்றாள்.
முந்தைய நாள் இரவு மோகன் சொல்லிக் கொடுத்ததைக் கைபேசியில் பதிவு செய்து வைத்திருந்தவள், பயண வழியில் ஒலிவாங்கி மூலம் அதனைக் கேட்டவாறே பயணித்தாள்.
‘நான் காலேஜ் படிக்கும் போது கூடக் காலேஜ் பஸ் டிராவல்ல படிச்சதில்லைடா! இப்படி என்னைப் படிக்க வைச்சிட்டீங்களே! இந்த இன்பா வேற என்னலாம் கேள்வி கேட்பாரோ தெரியலையே’ எனப் புலம்பியவாறே மோகன் சொல்லிக் கொடுத்தவைகளை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள் அன்னம்.
இரவு எட்டு மணிக்கு மேல் அலுவலகத்தை அடைந்ததும், ஓய்வறைக்குச் சென்று முக ஒப்பனை செய்து கொண்டு அவளது பணியிடப் பகுதிக்கு சென்று கதவை திறக்க,
“நல்லா மேக் அப் செஞ்சிட்டு மினுக்கிட்டு சுத்த தெரியுதுல! வேலை ஒழுங்கா பார்க்க தெரியாதா?” என்று ஒரு கோபமான குரல் இவள் செவியைத் தீண்டியது.
சட்டென உள்ளம் அதிர, இன்பா தான் இப்படிப் பேசுகிறாரா எனக் குரல் வந்த திசையை நோக்கி திரும்பினாள் அன்னம்.
வேறொரு டீம் மேனேஜர் அவரது டீமில் உள்ள பெண்ணை நடுக் கூடத்தில் வைத்துத் திட்டியிருந்தார். அவ்விடத்தில் அவரது டீம் மட்டுமல்லாது பல குழுக்கள் இருக்க, அனைவரின் பார்வையும் அப்பெண்ணின் மீதே படிந்திருக்க, அவமானத்தில் கண்களில் நீருடன் நின்றிருந்தாள் அந்தப் பெண்.
அன்னத்திற்குள் இருக்கும் பெண்ணியவாதி விழித்துக் கொள்ள, ‘அவருக்குக் கீழே வேலை செய்வறங்கனா அவருக்கு அடிமையா என்ன?’ என்று மனதிற்குள் குமைந்தவளாய் அவரை நோக்கி செல்ல,
அந்நேரம் அந்த மேனேஜரின் பேச்சை கேட்டு அவரருகே வந்த இன்பா, “கூல் டவுன் செல்வா! வா பிரேக் போவோம்” என்று அந்த மேனேஜரிடம் உரைத்தவன், அந்தப் பெண்ணை அங்கிருந்து போகச் சொல்லி தலையை அசைத்தான்.
இன்பாவும் செல்வாவும் தேநீர் அருந்தி விட்டு அவரவர் இருக்கைக்குச் செல்ல, இன்பா முன் வந்து நின்றாள் அன்னம்.
“என்ன இருந்தாலும் நீங்க செஞ்சது தப்பு இன்பா! அவர் அப்படித் திட்டிட்டு இருக்கும் போது அது தப்புன்னு நீங்க கேட்டிருக்கனும். நீங்க அவரை அங்கிருந்து கூட்டிட்டு போகலைனா நான் கேட்டிருப்பேன்” என்றாள் அன்னம்.
அவளை அமைதியாய் கூர்மையான பார்வையுடன் நோக்கிய இன்பா, “திஸ் இஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ் அன்னம்” என்றான்.
கோபம் அதிகரிக்க, “எது இன்பா என் வேலை கிடையாது! தனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு பெண் தன்னை அழகுப்படுத்திக்கிறதை அசிங்கமா பேசுறதை கேள்வி கேட்குறது என் வேலை கிடையாதா! நியாயத்தை யார் வேணா கேட்கலாம் இன்பா. அதுக்கு நான் சமூகச் சேவகியா தான் இருக்கனும்ன்ற அவசியம் இல்லை. இப்ப நானே போய் அவர்கிட்ட சொல்றேன். நீங்க பேசினது தப்பு சார். போய் சாரி கேளுங்கனு நானே சொல்றேன்” என்றாள் அன்னம்.
அந்நேரம் உள்ளே நுழைந்தாள் அந்த மேனேஜரிடம் திட்டு வாங்கிய அந்தப் பெண்.