ஈஸ்வரன் அடுத்த மூன்று நாட்களுக்குத் தேனிலவுக்காக வயநாடு செல்வதற்காகத் திட்டம் போட்டிருந்ததால், மூன்று நாட்களுக்குத் தேவையான காணொளியைத் தயார் செய்து விட்டு வருவதாய் உரைத்து மீனாட்சியை அவளது பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
இவனும் கடையின் பணிகளை முடித்து விட்டு அன்றிரவு பத்து மணிக்கு மேலே தான் வீட்டை வந்தடைந்தான்.
அந்த மணம் வீசும் அறையில் மீனாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவளருகில் படுத்தவன் உடல் அலுப்பில் உடனே உறங்கிப் போனான்.
நள்ளிரவில் தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்த மீனாட்சி, பதறிக் கொண்டு அலற போக, “ஹே மீனு! நான் தான்” என அவள் காதினில் கூறியவாறு அந்த அறையை விட்டு அவளை வெளியே தூக்கி வந்தான்.
“எங்கே தூக்கிட்டு போறீங்க என்னை?” தூக்கம் தொலைத்த பார்வையைச் செலுத்தி ஆர்வமுடன் அவள் கேட்க,
“வெயிட் அண்ட் சீ பொண்டாட்டி” என்றவன்,
அந்த ஏணி படிக்கட்டுக்குச் செல்லும் பாதாளத்தின் தொடக்கத்தில் அவளை அமர்த்தினான்.
வீட்டில் உள்ளோர் அனைவரும் அவரவர் அறையில் உறங்கிக் கொண்டிருக்க, “அய்யோ இங்க ஏன் என்னை உட்கார வச்சிருக்கீங்க?” என ரகசியக் குரலில் பதட்டத்துடன் வினவினாள்.
இவன் ஏணியின் கைப்பிடித்துப் பின்னோக்கி ஐந்து படிக்கட்டுகளுக்குக் கீழே இறங்கி நிற்க, இவளை அந்த அறையைப் பார்த்தவாறு தொடக்கத்திலிருந்து மூன்றாம் படிக்கட்டில் அமர வைத்தான். அவள் அமர்ந்திருக்க அவளின் முகத்தருகே தன் முகம் இருப்பது போல் சில படிகள் ஏறி அவளோடு ஒண்டியவாறு நின்றவன், அவள் இடையை வளைத்துக் கொண்டவனாய், “இப்ப பயமா இருக்கா பச்சக்கிளி?” எனக் கேட்டான்.
அவள் கண்கள் அச்சத்தில் கலங்க ஆமெனத் தலையசைத்தாள்.
“கண்ணை மூடுடா” அவள் காதோரமாய் உரைத்தான்.
அவள் கண்களை மூடியதும், தாயின் அசம்பாவித நினைவுகளே வந்து போக, மூடியிருந்த இமைகளில் உருண்டோடிய கருமணிகள் மூலம் அவளின் அலைப்புறுதலை உணர்ந்தவன், இமைகளில் முத்தமிட்டான்.
மூடிய இமைகளில் அவன் இதழ் பதிந்ததும் கண்ணீர் வெளியேற, அதையும் தன் முத்தத்தாலே அவன் துடைத்தெடுக்க, தொடர்ந்த அவன் முத்தங்களின் பயணத்தில், மெல்ல மெல்ல தாயின் நினைவுகள் பின்னோக்கிச் செல்ல, அவளின் உணர்வுகள் அவனின் செயல்களைக் கிரகிக்கத் தொடங்கின.
இதழில் நெடுநேரம் இளைப்பாறியவன், கழுத்தில் புதைந்து கொள்ள, கண் மூடிய நிலையிலேயே அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு முகத்தைத் தோளில் வைத்தவள், தன்னோடு அவனை இறுக்கிக் கொண்டாள்.
மோன நிலையில் இருவரும் இருக்க, மூடிய அவளின் விழிகளுக்குள் அவளின் அன்னை மகிழ்வுடன் சிரித்தவாறு இருவருக்கும் ஆசி வழங்குவது போன்ற காட்சி வந்து போக, சட்டெனக் கண் திறந்து சுற்றி முற்றி பார்த்தாள்.
“என்னாச்சு மீனு” என அவன் வினவ, அந்தக் கனவுக்காட்சியை விவரித்தவள், அவனை இழுத்து அருகில் அமர வைத்துப் புஜங்களைப் பற்றியவாறு தோளில் சாய்ந்து கொண்டாள்.
“என்னோட பயத்தைப் போக்குறதுக்காகத் தானே என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க! இனி இங்க இந்தப் படிக்கட்டைப் பார்க்கும் போது நாம சந்தோஷமா இருந்த இந்தத் தருணங்களும், அம்மாவோட மகிழ்வான முகமும், அவங்களோட ஆசிர்வாதமும் தான் நினைவுக்கு வரும் ஈஸூப்பா” நெகிழ்வாய் உரைத்து அவன் கன்னத்தில் இதழ் பதித்திருந்தாள்.
சிறிது நேரம் அந்தப் படிக்கட்டில் அமர்ந்து பேசி சிரித்து, வெட்கப்பட்டு, சீண்டி விளையாடி என வெகு மகிழ்வான மனநிலையுடனேயே அங்கிருந்து சென்றனர் இருவரும்.
மறுநாள் தேன்நிலவுக்காக வயநாடுக்குச் சென்றவர்கள் மூன்று நாட்களை இன்பமாய்க் கழித்து விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.
அடுத்த வந்த நாட்களில் இவள் ரிசப்ஷனுக்கான வேலையில் ஈடுபட, அவன் அலுவலகப் பணியில் பிசியாகி இருந்தான்.
அனைவருக்கும் பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்து பெரிய அளவில் பெரிய மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
ரிசப்ஷன் நெருங்கும் சமயம் பத்திரிகை வைப்பதற்காக மீனாட்சியுடன் சேர்ந்து சுந்தரராஜனின் வீட்டிற்குச் சென்றான் சுந்தரேஸ்வரன்.
அங்கு அவ்வீட்டினில் அவனின் சித்தப்பாவும் சித்தியும் அவனை மதியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்திருக்க, அங்கிருந்த மேஜையில் பழத்தட்டுடன் இருந்த பத்திரிகையை வைத்தவன், “நீங்க என்ன தான் என்னை அழிக்கனும்னு நினைச்சாலும், உங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாம தான் என்னுடைய எதிர்ப்பையும் பலத்தையும் காண்பிச்சிருக்கேன் இதுவரைக்கும். அதனால் தான் என் கல்யாணத்தை நீங்க தான் தடுக்கிறீங்கனு தெரிஞ்சும் உங்களை எதிர்த்துச் சண்டை போட்டு நிற்காம, யாருக்கும் சொல்லாம கல்யாணம் செஞ்சிக்கிட்டேன். நீங்க எனக்கு எவ்ளோ பெரிய நம்பிக்கை துரோகம் செஞ்சிருந்தாலும் உங்களை என்னிக்கும் என்னால பழி வாங்க முடியாது சித்தப்பா! அதுக்காகத் தொடர்ந்து ஒரண்டையை இழுத்தீங்கனா கோர்ட்டுக்கு போகவும் தயங்க மாட்டேன்ங்கிறதையும் மனசுல வச்சிக்கோங்க. கண்டிப்பா ரிசப்ஷனுக்கு வந்துடுங்க” என்று உரைத்தவன் மீனாட்சியின் கையைப் பிடித்தவாறு வெளியேறி இருந்தான்.
“நம்ம மகனுக்கு அமைய வேண்டிய வாழ்க்கையைத் தட்டிப் பறிச்சதும் இல்லாம என்ன பேச்சுப் பேசுறான் பார்த்தீங்களா? இவனைலாம் வீட்டுக்குள்ளேயே விட்டிருக்கக் கூடாது! இவன் நல்லாவா இருப்பான்” எனச் செல்வாம்பிகை சாபமிடுவது போல் பேசவும்,
“ஏய் வாயை மூடிட்டு கிடக்க மாட்டியா நீ! மத்தவங்களுக்கு நீ விடுற சாபம் உன் மகனுக்குத் தான் வந்து விடியும். ஏற்கனவே உன் பேச்சை கேட்டு நான் செஞ்சி வச்ச பாவமே நம்ம மகனை பாதிச்சிட கூடாதுனு கோவில் கோவில்லா சுத்திட்டு இருக்கேன்! இதுல கூடக் கொஞ்சம் பாவத்தைச் சேர்க்க வழி செய்றியோ ” என்று அதட்டி விட்டு வெளியேறினார்.
மகிழுந்தில் ஈஸ்வரனுடன் பயணித்துக் கொண்டிருந்த மீனாட்சி, “ஏங்க அவங்க சுந்தரோட அப்பா அம்மா தானே! எங்கே போறோம்னே சொல்லாம நீங்க பாட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டீங்க! உள்ளே போனதும் அந்தம்மா எதுவும் திட்டிடுவாங்களோனு பயமாகி போச்சு எனக்கு” என்றாள்.
“நான் இருக்கும் போது என்ன பயம் மீனு?” என்றவன்,
“ஆமா ராஜாக்கிட்ட நீ முன்னாடியே பேசிருக்கியா?” அவளின் இயல்பான சுந்தர் என்ற விளிப்பில் இதைக் கேட்டிருந்தான்.
“யாரு ராஜா?” கேள்வியாய் அவனை அவள் நோக்க,
“சுந்தர்! சுந்தரராஜன்” என்றான்.
“ஓ அவரை நீங்க ராஜானு தான் கூப்பிடுவீங்களா?” என்று இவள் கேட்க,
“ஆமா இரண்டு பேர்லயுமே சுந்தர் இருக்கிறதால வீட்டுல என்னை ஈஸ்வரன்னும் அவனை ராஜானும் கூப்பிடுவாங்க” என்றான்.
“நாங்க ஆபிஸ்ல சுந்தர்னு தான் கூப்பிடுவோம். ஆமா சுந்தர் உங்க குடும்பப் பேரா? உங்க அப்பா சித்தப்பா பேருல கூடச் சுந்தர்னு வரும்ல?” என்று அவள் தன் போக்கில் பேசி கொண்டே போக,
“ஹே நீ ராஜா ஆபிஸ்லயா வேலை பார்த்த?” என ஆச்சரியமாய்க் கேட்டான்.
“ஆமாங்க அவர் தான் என்னோட டீம் லீடர். உங்களுக்குத் தெரியாதா?” அதே ஆச்சரியப் பாவனையுடன் கேட்டாள் அவள்.
“நீ எப்ப என்கிட்ட சொன்ன?” என முறைப்பாய் வினவினான்.
அவனின் முறைப்பில் குரல் உள்ளே போக, “உங்களுக்குத் தெரியும்னு நினைச்சேன்” என்றாள்.
அதன் பிறகு அவளிடம் ஏதும் கேட்காமல் அவன் வண்டியை செலுத்த, “இவங்க தான் உங்க எதிரிங்கனு சொல்வீங்களே, அப்புறம் ஏன் இவங்களுக்குப் பத்திரிக்கை வச்சீங்க?” எனக் கேட்டாள்.
“ஹ்ம்ம் அது அவருக்கு நான் தரும் மரியாதை. அந்தம்மாவை நான் என்னிக்கும் உறவா நினைச்சது இல்லைனாலும் சித்தப்பாவை அப்பாவா நினைச்சிருக்கேன். ராஜாவை சொந்த தம்பியா நினைச்சி தான் பழகிருக்கேன். அதுவும் இல்லாம சித்தப்பா தான் எனக்கு இந்த வியாபாரத்தைக் கத்துக் கொடுத்தாரு. ஒரு வகையில் அவர் எனக்குக் குரு மாதிரி. குருவா ஒருத்தரை ஏத்துக்கிட்டோம்னா அவங்க மேல தப்பே இருந்தாலும் அவங்களை அவமரியாதை செய்யக் கூடாது. அவங்களுக்கான மரியாதையை எப்பவும் கொடுக்கனும்” என்றான்.
“சோ ஸ்வீட் ஈஸூப்பா நீங்க” என அவனின் கன்னம் கிள்ளினாள்.
அவன் அவளின் கையைத் தட்டி விட, “இப்ப என்ன என் மேல கோபம்?” என அவன் முகத்தை அவள் தன்னை நோக்கி திருப்ப,
“ம்ப்ச் கார் ஓட்டனும்! விடு மீனு” என அவள் கையை எடுத்து விட்டவன் சாலையின் மீது கண்ணைப் பதிக்கலானான்.
“சரி சரி கோபத்தோட கோபமா இதையும் கேட்டுக்கோங்க! சுந்தர் ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்ல சொன்னாரு. உங்க சித்தப்பா உங்களுக்கு எந்தத் தொந்தரவும் செய்யக் கூடாதுனு சத்தியம் வாங்கிட்டாராம் சுந்தர்! அதனால் உங்களுக்கு வந்த பிரச்சனைகள் எதுக்குமே அவங்க அப்பா காரணமில்லையாம். வேறு யாரு செஞ்சாங்கனு நீங்க யோசிச்சாலே உங்களுக்குத் தெரிஞ்சிடும்னு சொன்னாரு. யாரோ உங்களுக்குத் தெரிஞ்சவங்க தான் இதைச் செய்றதா சுந்தருக்குச் சந்தேகம் இருக்கும் போல” என்றவள் கூறி முடிக்க,
ஹ்ம்ம் எனக் கேட்டு கொண்டிருந்தவனின் புருவங்கள் யோசனையில் சுருங்கின.
மேலும் தொடர்ந்தவளாய், “நான் கிட்டதட்ட ஒரு வருஷமா சுந்தர்க்கிட்ட வேலை செஞ்சிருக்கேன்ங்க. அதுல அவரைப் பார்த்த வரைக்கும் சொல்றேன். அவர் ரொம்ப நல்லவர்! நீங்க சொல்ற மாதிரி மத்தவங்களை அழிக்கிற அளவுக்குக் கெட்டவராலாம் அவர் இருக்க வாய்ப்பில்லை” என்று தன் எண்ணங்களை உரைக்க,
“ஓ என் தம்பியை பத்தி என்னை விட உனக்கு நல்லா தெரிஞ்சிடுச்சோ! உனக்கு அவன் லீட் மட்டும் தான்! ஆனா எனக்கு அவன் தம்பி! எனக்கு நம்பிக்கை துரோகம் செஞ்ச தம்பி! இனி ஒருதரம் அந்தக் குடும்பத்துக்குச் சப்போர்ட் செஞ்சிட்டு என்கிட்ட பேசாத! அந்தக் குடும்பத்தினால நாங்க அனுபவிச்ச வலியும் வேதனையும் எங்களுக்குத் தான் தெரியும்” கோபமாய்ப் பொரிந்திருந்தான்.
அவனின் கோப வார்த்தைகளில் கண்களில் நீர் தேங்க, அமைதியாய் மறுபுறம் திரும்பி கொண்டாள் மீனாட்சி.
அவளை வீட்டினில் இறக்கி விட்டவன், கடைக்குச் சென்று விட்டான். ராஜன் கூறியதாய் மீனாட்சி கூறியவற்றைப் பற்றிச் சிந்தித்தவன், இவன் கடையில் இல்லாத நேரம் கணேசன் என்றைக்காவது வந்தானா எனப் பணியாளர்களை அழைத்து விசாரித்தான்.
கொரியர் பிரச்சனை வந்த நாளில் இருந்து இன்று வரைக்குமான சிசிடிவி புட்டேஜ்ஜை பார்வையிட்டான். அதில் ஒரு துப்பு கிடைக்க, அந்த வீடியோவை மட்டும் தனியே எடுத்துச் சேமித்து வைத்தான்.
அன்றைக்கான பணிகளை முடித்து அவன் வீட்டிற்கு வரும் போது இரவு பதினொரு மணி ஆகியிருந்தது.
அவனுக்கு உணவு பரிமாறுவதற்காக அவள் தான் விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவன் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காது கோபமாய் அவனுக்கு உணவினை பரிமாறினாள்.
இரவு படுக்கையில் படுத்ததும் அவளை அணைக்க முயல, அவன் முகத்தைப் பார்க்காது மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
“ஏன் என் பச்சக்கிளி சிகப்புக்கிளி மாதிரி முறுக்கிக்கிட்டு திரியுது” என ஒருக்களித்துப் படுத்திருந்தவளைப் பின்னோடு அணைத்து அவன் கேட்க,
“நான் தான் உங்க குடும்பத்துல ஒருத்தி கிடையாதே! நான் பச்சையா இருந்தா உங்களுக்கு என்ன? சிகப்பாக இருந்தா உங்களுக்கு என்ன?” எனக் கோபமாய்க் கேட்டாள்.
“நான் எப்படா அப்படிச் சொன்னேன்” என அவளைத் தன்னை நோக்கி அவன் திருப்ப,
“அந்தக் குடும்பத்தினால நாங்க அனுபவிச்ச வலியும் வேதனையும் எங்களுக்குத் தான் தெரியும்னு சொன்னீங்களே! குடும்பத்துல ஒருத்தியாக நினைச்சிருந்தா அந்த வலியையும் வேதனையையும் என்கிட்ட ஷேர் செஞ்சிருப்பீங்க தானே” கோபமாய்க் கேட்க நினைத்து அழுகையில் முடித்திருந்தாள்.
“ஹே உன்கிட்ட சொல்ல கூடாதுனுலாம் நினைக்கலைமா! நமக்கான நேரத்துல சந்தோஷமா பேசிட்டு இருக்கும் போது இது எதுக்குனு தான் சொல்லலை! கல்யாணத்துக்கு முன்னாடியே எங்க குடும்பத்தைப் பத்தி நானே குறையா பேசுற மாதிரி வேற இருக்கும்னு தோணுச்சு” என்றவன் அவளின் கண்ணீரைத் துடைத்து தனது மார்பில் சாய்த்துக் கொண்டு தலையை வருடியவன், இரு குடும்பத்தினருக்குள் இருக்கும் பகையைப் பற்றிக் கூறலானான்.