விசாகன் அவளை எழுப்பவும் மயக்கம் தெளிந்து எழுந்தவள், அவனை மிக அருகில் பார்த்ததும் வீல் என்ற அலறலுடன் மறுபடி மயங்கி விட செய்வது அறியாது திகைத்து நின்றான்.
“ஏய் பொண்ணு…. இங்க பாரு… என்னை பாரு… அட இங்க பாருமா” மறுபடி தட்டி எழுப்பி விட இப்போதும் எழுந்து கொள்ளாமல் படுத்து இருந்தவளை கண்டு தலையில் கை வைத்த படியே எழுந்தவன்
“பச் என்ன இவ இப்படி மயங்கி போய் இருக்கா… பார்க்க சின்னபொண்ணா இருக்கு இங்க எப்படி வந்து இருப்பா அதுவும் இந்த ராத்திரி நேரத்துல” தனக்குதானே பேசியவன் அவளை அப்படியே எழுப்பி அமர வைத்து மறுபடியும் கண்ணத்தை தட்டினான்.
இப்பொது கொஞ்சம் தெளிந்தது போல் கண்களை மெல்ல திறக்க மறுபடியும் அவனை பார்த்து பயம்கொள்ள அதை புரிந்து கொண்டவனோ “பயப்படாத பயப்படாத உனக்கு ஒன்னும் இல்ல” அவளுக்கு புரிய வைக்க இருளை பார்த்து பயந்து நடுங்கியவள் அவன் கைகளை இறுக்கமாக பற்றி எச்சிலை கூட்டி விழுங்கியவளின் கண்களோ அக்கம் பக்கம் பார்த்து மருண்டு போய் இருந்தது.
விசாகனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் முழித்தவளிடம் “ஏம்மா…. உன்னத்தான் நீ யாரு?.. இங்க எப்படி வந்த?” என்றான் எரிச்சல் நிறைந்த குரலில்
அவன் கடுகடுவென இருந்த முகத்தை பார்த்து பயந்தவள் “அது வந்து… அது வந்து…” கண்களில் நீர் திரள துடிக்கும் அதரங்களுடன் “நான் நான் அந்தியூர் கிராமம் பக்கத்து ஊர்தான் பிரெண்ஸ்களோட கோவிலுக்கு வந்தேன். பஸ் பஞ்சர் ஆகிடுச்சி இங்க தான் உட்கார்ந்துட்டு இருந்தேன்… பஸ்ல டையர மாத்திட்டு போகும்போது” என்றவள் மெல்ல விசம்பலுடனே “பஸ்ஸை தவற விட்டுட்டேன்… என் கண் எதிரிலேயே பஸ் போயிடிச்சு பின்னாடியே ஓடுனேன் பிடிக்க முடியல…. சுத்தி சுத்தி பார்த்தேன் இந்த இடமே ரொம்ப பயங்கரம இருந்துச்சி பயத்துல என்ன நடந்துச்சினே தெரியல….. எனக்கு பயமா இருக்கு” சிறுபிள்ளையின் வடிவில் இரு கைகளாலும் கண்களை கசக்கி அழுதிட அவனுக்கு என்னவோ போல் ஆனது.
அவள் அழுகை அதிகரிக்கவே பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவன் “இவ்வளவு பயம் இருக்குள்ள அப்புறம் எப்படி பிரெண்டுகளோட தனியா வந்த அதுவும் இவ்வளவு லேட்டா கிளம்பி வந்து இருக்கீங்க” விசாகன் சற்று அதட்டலாக கேட்கவும்,
“ப்ளீஸ் ப்ளீஸ் என்னை எப்படியாவது எங்க வீட்டுல விட்டுடுங்களேன்… இந்த இடத்தை பார்த்தாலே பயமா இருக்கு” மேலும் உச்சஸ்தாயில் கத்தி அழுதவளை கண்டு “ஷ் ஷ் அழாத… அழாத” அவளை சமாதானப்படுத்த முயன்றான். எதற்குமே அழுகையை நிறுத்தாதவளை கண்டு எரிச்சலானவன்
“பச் வாய மூடு இனி அழுத அப்படியே விட்டுட்டு போயிட்டே இருப்பேன். இப்போ எதுக்கு இந்த அழுக” என்றான் கடுப்புடன். மருந்துக்கும் அவன் பேச்சில் மென்மை என்பது துளிக்கூட இல்லை…
“இல்ல முதல்லையே சினிமாக்குன்னு சொல்லி தான் வீட்டுல வாங்கி கட்டிக்கிட்டேன்… இப்போ இந்த ராத்திரி வேளையில உங்க கூட போய் நின்னன்னா… அய்யோ கடவுளே என் கழுத்தை திருகி காக்காக்கு போட்டுவாங்களே .!!!” விழிகளை உருட்டி நெஞ்சில் கைவைத்தவள் மீண்டும் அழ ஆரம்பிக்க
‘எங்க இருந்து வந்து சேர்ந்தா இவ அய்யோ’ என தலையில் கை வைத்துக் கொண்டான் விசாகன்.
இதற்கு மேல் இவளிடம் சாந்தமாக பேசிட முடியாமல், “சரி ஒன்னு செய்… என் கூட வர பயமா இருந்தா இங்கயே மரத்து மேல ஏறி உட்காந்துக்கோ காலையில விடிஞ்சதும் உன்னை தேடி உங்க ஆளுங்க வருவாங்க அப்போ இறங்கி போ” சாதரணமாக கூறியவன் தன் வண்டியில் நோக்கி கிளம்பினான்.
எதையும் யோசிக்காமல் அவன் சொல்லிற்கு சரி என தலையாட்டியவள் அவன் தன்னை கேலி செய்கிறான் என புரிந்ததுமே மீண்டும் தன் அழுகையை துவங்கி “என்னை விட்டுட்டு போய்டுவீங்களா??? எனக்கு பேய் பிசாசு கூட பயம் இல்லை இந்த இருட்டை பார்த்தாதான் பயமா இருக்கு.. நானும் நானும் வரேன்” என்றாள் கைகளை பிசைந்தபடி.
‘அட சே இவ்வளவு நேரம் ஒரு லுசு கிட்ட மாட்டிக்கிட்டேனே…. சரியான கிறுக்கா இருக்கு’ மனதில் எண்ணியபடியே “வண்டியில் ஏறு” என்றவன்
“என் கிட்ட போன் இல்லை இந்த வருஷம் தான் காலேஜ் சேர்ந்தேன்… எப்படியும் வாங்கிடுவேன்”. நம்பிக்கையோடு சொன்னவளை ‘இதுவேறயா’ என்ற ரீதியில் பார்த்த விசாகனிடம் அவள் தந்தையின் எண்களை கூறினாள்.
அவள் தந்தைக்கு அழைக்க அந்த பக்கம் சுவிச் ஆப் என்ற செய்தி வர இதற்கு மேலும் இங்கு இருந்து நேரம் கடத்த வேண்டாம் என நினைத்தவன், “சரி இந்தா மொபைல், உங்க அப்பா போன் சுவிச் ஆப் ஆகி இருக்கு… ஒரு பத்து நிமிஷம் கழிச்சி நீ டிரை பண்ணு… எடுத்தா நீ சேஃபா இருக்கன்னு சொல்லிடு” அவளிடம் அலைபேசியை கொடுத்தவன் தேவசேனாவை வண்டியில ஏற்றிக்கொண்டு அவள் ஊரை நோக்கி பயணமானான்.
நேரம் இரவு 9.30 யை நெருங்கி இருந்தது. அவள் தந்தைக்கு அழைத்து அழைத்து பார்க்க அது மறுபடியும் அதே தகவலை கூறியது.
தந்தை எடுக்கவில்லையே என்ற சோர்வில் இருந்தவள் அசதியில் கீழே விழுந்து விட போகிறது என கையில் இருந்த செல்போனை தாவணியின் தலைப்பில் வைத்து இடுப்பில் சொருகி கொண்டாள்.
இங்கோ பேருந்தில் இருந்து இறங்கிய அவளின் தோழியர்கள் அவரவர் வீடுகளுக்கு செல்ல சொல்லிக்கொண்டு பார்க்க, அப்போதுதான் தேவசேனா இல்லாததை கண்டனர். “ஏய் மேகலா எங்கடி தேவா உன்கூட தானே ஏறினா” என்றார் அன்னம் பதற்றம் நிறைந்த குரலில்.
“அக்கா அவ உங்க கூட இருக்கான்னு தானே நான் நினைச்சேன் அவ உங்க கூட இல்லையா?” அதிர்ச்சியாய் கேட்டாள் மேகலா.
“இல்லையேடி அவ என் கூட உட்காரலையே பஸ்ஸில் கூட்டம் இருக்கவும், பின்னாடி நிக்குறாளோன்னு நினைச்சிட்டு இருந்தேன்” படபடப்புடன் கூறிய அன்னம்,
“அய்யோ இப்போ என்ன செய்றது” பயந்து போனவர், இனியும் தாமதித்தால் நல்லது அல்ல என அன்னம், தேவாவின் வீட்டிற்கு வந்தார்.
“வா வா அன்னம்…. என்ன இவ்வளவு நேரம்… கடைசி பஸ் விட்டுட போறிங்கன்னு பயந்துட்டே இருந்தேன்.. நல்லவேளை வந்துட்டிங்க ஆமா எங்க தேவா?” அழுத கண்களோடு வந்த அன்னத்தை கேட்கவும் அவள் அழுகை இன்னும் அதிகமாக “என்ன அன்னம் ஏன் அழுகற?” என்றதும் படபடவென அனைத்தையும் கொட்டி விட்டாள் அன்னம்.
பெண்ணை காணும் என்ற செய்தி கேட்டதும் ஊரை கூட்டி அழுது தீர்த்து விட்டார் மரகதம் “ஏய் மரகதம் சித்த சும்மா இரு, ஒன்னும் ஆகி இருக்காது… புள்ள பஸ்ஸை தவற விட்டு இருக்கும். இரு நான் போய் கூட்டிட்டு வறேன்” தன் வண்டியில் ஏற போனவர் அழுதபடி இருந்த மனைவியை பார்த்து “மரகதம் தைரியமா இரு… அன்னம் பாத்துக்கம்மா” என்றபடியே அவசர அவசரமாக வெளியேற, அவருடன் ஊர் ஆட்கள் நான்கைந்துபேர் வண்டியுடன் கிளம்பி இருந்தனர்.
இங்கோ விசாகனின் வண்டியின் பின்புறம் அமர்ந்து இருந்தவள் அசதியில் கண்களை மூடியபடி இருக்க, மனமோ மாலை நடந்த நிகழ்வுகளையே சுற்றி வர தன்னையே திட்டிக்கொண்டாள். மாலையில் அவள் செய்த அலப்பறைகள் கண் முன் நிழலாடியது அவளுக்கு,
“அம்மா என் நீல பாவாடைக்கு மேச்சா இருந்த மஞ்சள் தாவணி எங்கம்மா?” என ஆரம்பித்து “என்னம்மா பூ இவ்வளவு தானா பறிச்ச!!!… நான் கட்டிவச்ச மல்லி பூ எங்க?…. அம்மா இந்த குடை ஜிமிக்கி நல்லா இருக்கா?…”என தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்து வந்தவள், இந்த ஒரு மணி நேரத்தில் துவண்டு போய் பயமுகமாக இருந்தாள்.
தாயை படுத்தி எடுத்து, கோவிலுக்கு வந்தவள், இங்கேயும் யாரையும் விட்டு வைக்க வில்லை அவ்வளவு வாய் அடித்தாள். அன்னமே “எப்படிதான் மரகத அக்கா உன்னை சமாளிக்குதோ..!! ஒரு இடமா இருக்குறியா ??, கூட்டமா இருக்கு தேவா எங்களோடவே இரு” அதட்டி உருட்டி தான் கூடவே நிறுத்தியும் இருந்தாள்.
நான் எல்லாம் அடங்கி விட்டாள் நாடு என்னாகிறது என்ற ரீதியில் பார்த்தவள் தன் வேலைகளை சிறப்புடனே, செய்து சாமி தரிசனம் முடிந்து, பிரகாரத்தில் வந்து உட்காரவே நேரம் இரவு 7.30 கடந்து இருந்தது.
“ஏய் தேவா அங்க பாருடி பிரசாதம் தராங்க” மேகலா கூறிவும்,
தேவா எழுந்துக்கொள்ள அவளின் கைபிடித்து அமர வைக்க முயன்ற அன்னம் “வேணாம்டி தேவா உன் ஆசைக்கு அங்க போய் நின்னு வர்ற பஸ்ஸையும் விட்டுடுவோம்டி” இதோட 8.30 தான் கடைசி பஸ்” என எச்சரிக்க
“நீ கவலையே படாத அக்கா பத்து நிமிஷத்துல உன் கண்ணு முன்னாடி இருப்போம்.” என்றவள் தன் சிநேகிதிகளுடன் வரிசையில் நின்று விட, அன்னம் கூறியது போலவே அந்த பேருந்தை தவற விட்டிருந்தவர்கள் கடைசி பேருந்துக்காக காத்திருந்தனர்.
அதுவரையிலும் சுற்றி ஆட்கள் இருக்க விளையாட்டு தனமாகவே இருந்த தேவாவிற்கு பயம் என்பது சுத்தமாகவே இல்லை. ஒரு மணி என்பது ஒன்றரை மணி நேரமாகி கடைசி பஸ்ஸும் வர கோவிலில் இருந்த மொத்த ஜனமும் ஏறியது.
ஒருவழியாய் இவர்களும் அடித்து பிடித்து பேருந்தில ஏறி விட, தேவாவின் போறாத நேரமோ என்னமோ ஊரை தாண்டி வரும் பாலத்தின் அருகில் வாகனம் பஞ்சர் ஆகிவிட்டது. தனியார் பேருந்து என்பதாலும் அதற்கு தேவையான உபகாரணங்களை வைத்து மேலும் அரை மணி நேர போராட்டத்தில் சரி செய்ய, அதுவரையிலும மக்கள் கீழே இறங்கி நிற்கும் போது தன் கை விரலில் இருந்த மோதிரத்தை போடுவதும் கழற்றுவதுமாக நேரத்தை கடத்தியவளின் கைகளில் இருந்து மோதிரம் தவறி கீழே விழுந்திட அங்கேதான் தொடங்கியது அவளது கெட்ட நேரம்.
இருளில் மோதிரத்தை தவற விட்டதால், பயத்துடன் அதை குனிந்து தேடிக்கொண்டு இருந்தவளுக்கு தோழி அழைத்தது கூட உறைக்காமல் போனது. மோதிரத்தை மும்மரமாக தேடி எடுத்து நிமிர்ந்து பார்த்தவளுக்கு அப்போதுதான் பேருந்து அங்கிருந்து கிளம்பியது தெரிந்தது.
தூரத்தில் புள்ளியாய் தேய்ந்து போன பேருந்தை துரத்தியவளுக்கு முற்றிலும் சோர்ந்து போய் மூச்சி வாங்கியது… பின் தான் நின்ற இடத்தை சுற்றி பார்வையை ஓட்டியவளுக்கு பயம் நெஞ்சை அழுத்த அடுத்த நொடி அதே இடத்தில் மயங்கி சரிந்தவள் தான், அதன் பிறகு விசாகன் எழுப்பியதும் பேந்த பேந்த விழிந்தாள்.
தன் விளையாட்டு தனத்தால் நடந்த விளைவுகளை நினைத்தபடி வந்தவளுக்கு, கவனம் தப்பி இருக்க எதிரே வந்த வாகனத்திற்கு, விசாகன் வழி விட சற்று ஒதுங்கிய போதுதான் அவள் கீழே சரிவது போல் உட்கார்ந்து இருப்பது தெரிந்தது.
உடனே வண்டியை நிறுத்த அதன் விளைவால் தேவாவின் தலை அவனுடைய ஹெல்மெட்டில் இடித்துக்கொள்ள ஸ் ஆ என்றபடி வண்டியை விட்டு கிட்டதட்ட கீழே குதித்து இருந்தாள்.
பொறுப்பு இல்லாமல் ஏனோதானோவென வண்டியில் உட்கார்ந்து இருந்தவளின் மேல் கோவம் சுறுசுறுவெனு ஏற கடுப்புடனே “முன்ன பின்ன வண்டியில போய் இருக்கியா இல்லையா? கீழே விழந்து கிழுந்து தொலைக்கபோற! ஒழுங்க உட்காரு” என சத்தமிட்டான்.
அவன் திட்டியதில் தேவாவிற்கு கண்களில் நீர் துளிர்த்தது. இருள் சூழ்ந்து இருப்பதால் அவள் கண்களில் உண்டான நீர் விசாகனுக்கு தெரியாமல் போக அவள் கரகரப்பான குரலில் “எனக்கும் பைக்குல உட்கார தெரியும் எங்க அப்பா அண்ணன் கூட எல்லாம் பைக்குல போய் இருக்கேன்” என்றாள் வீராப்புடன்.
“அதுசரி ம்… எங்க இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்த இன்னேரம் கீழே விழந்து இருப்ப இதுல வெட்டி வீராப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என்றபடி அவளை ஏசியவன் மீண்டும் வாகனத்தை உயிர்ப்பித்தான். இம்முறை “சரியா உட்கார்ந்தியா பக்கத்துல இருக்க கம்பிய பிடி” என்றபடி கட்டளையாக கூறியவன் பயணத்தை தொடர்ந்தான்.
முக்கை உறிஞ்சியவள் ‘ரொம்பத்தான் பண்றாங்க ஏதோ உதவி செய்றதால சும்மா விடுறேன் இதுவே வேற சமயமாக இருந்த உண்டு இல்லன்னு பண்ணி இருப்பேன்’ மனதில் அவனுக்கு கவுன்டர் கொடுத்தவள் ‘அடியேய் மூதேவிகளா!!! உங்களையெல்லாம் நம்பி வந்தேன் பாரு இதுவும் வேணும் இன்னுமும் வேணும் எவன் எவனோ என்னை திட்டுராண்டி… .எல்லாமே உங்களாலதான்” தன் சிநேகிதிகளை வறுத்தபடி பயணமானாள்.
இப்ப ஊருக்குள்ள வந்தாச்சி எந்த பக்கம் போறது என நினைத்தவன் “ம்…. இவ பேரு என்ன நியாபகபடுத்தியவன் சே அதுவா முக்கியம் எப்படி கூப்பிடுறது என யோசித்தவன் “இங்க பாரு… ஏய் ஏய் பொண்ணு” பின் பக்கம் குரல் கொடுத்திட எந்த பதிலும் இல்லாமல் போனதும் வண்டியை நிறுத்தியவன் பின்னாடி திரும்பி பார்த்தான்.
கண்களை மூடியபடி அவன் மேல் சாய்ந்து இருந்தவள் கருத்தில் பட “உஃப் இவளுக்கு இதுவேறயா ஏய் ஏய் பொண்ணு இங்க பாரு உன் ஊர் வந்துடுச்சி” அவளை எழுப்ப கனவில் இருந்து விழித்தவள் போல் ஆஹ் என விழித்தாள்.
தன் தலையை இடவலமாக ஆட்டியவன் ‘முழிக்கிறாளே என்னம்மா உனக்கு பாவம் பண்ணேன் இன்னைக்கு வைச்சி செய்யற’ கண்களை மூடி தன்னை சமன்படுத்தியவன் “இங்க பாரு…. உன் வீடு எங்க இருக்கு…. எந்த பக்கம் போகணும்… வழிய சொல்லு…. இல்ல அதுவும் மறந்துடுச்சா” கடுப்பாக கேட்டான்.
தன் ஊர் வந்துவிட்டது என்பதை அறிந்தவள் அவன் வண்டியில் இருந்த ஒரே தாவலில் எகிறி குதித்து “அப்பாடா!!! ஊர் வந்துடுச்சா!?! இதோ இதோ இந்த பக்கம் தான்” அவனுக்கு வழியை காட்டி வேகமாக அவன் வண்டியில் ஏறி அமர்ந்தவள் “போங்க” என உரிமையாய் அவன் தோள்மீது கை வைத்தாள்.
கடந்த இரண்டு மணி நேரமாக அவனுடனான பயணம் தந்த உரிமையோ இல்லை இனி எப்போதும் அவனிடம் உரிமை கொள்ள போகிறவள் அவள் என்பதால் வந்த உரிமையோ… எந்த வித விகல்பமுப் அல்லாமல் அவள் காட்டிய திசையில் வண்டியை திரும்பியவன் அவள் வீடு இருக்கும் தெரு பக்கம் போக அதே சமயம் அவள் தந்தையும் அவருடன் நான்கு ஐந்து பேருடன் பைக்கில் எதிர்பட்டனர்.
அவன் பைக்கை நிறுத்துவதற்கு முன்னறே அவன் பைக்கில் இருந்து குதித்தவள் அப்பா என அழுதுகொண்டு அவரை நோக்கி ஓடினாள்.
தன்னை நோக்கி ஓடிவந்த மகளை பார்த்ததும் வண்டியை விட்டு இறங்கி இருந்த சௌந்தரலிங்கம் மகளை வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டார்.
அவளின் தலையை ஆதுரமாக தடவி ஆறுதல் சொல்லி சமன்படுத்திட அவள் தேம்பலுடனே “அப்பா… அப்பா…” என சிறுபிள்ளையின் சாயலில் அழுதுகொண்டு இருந்தாள்.
தேவசேனா பைக்கில் இருந்து குதித்ததில் சற்று தடுமாறி பின் சுதாரித்தவன் ‘சரியான குரங்கா இருப்பா போல… எப்பவும் எகிறி குதிச்சிக்கிட்டே இருக்கா…’ அலுத்துக் கொண்டாலும் அவளின் தந்தை மகள் பாசத்தை பார்த்து கனிந்தது.
அதுவரை மகளிடம் கவனம் வைத்திருந்தவர், எதிரில் இருந்த நபரை கண்டதும் நடந்ததை யூகித்தவர் “ரொம்ப நன்றிங்க தம்பி… வாங்க தம்பி வீட்டுக்கு போய் பேசலாம்” என்றதும் “இருங்கட்டுங்க நான் கிளம்புறேன்” அவன் விடை பெற “இவ்வளவு தூரம் வந்துட்டிங்க வீட்டுக்கு வந்துட்டு போன நல்லா இருக்கும்” அவனை வற்புறுத்தி அழைக்க சரி என விசாகனும் சம்மதிக்க மகளையும் அழைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தார்.
அவர் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்தவன் அவன் பின்னே வண்டியினை இயக்கி செல்ல வாசலிலையே கூட்டம் கூடி இருந்தது. மரகதம் அருகிலேயே அன்னம் மற்றும் அவளின் தோழிகளும் நின்றிருந்தனர்.
மகளை கண்டதும் தாய் மரகதம் ஓடி வந்து அணைத்து கொண்டு அழுது தீர்த்து விட “ஏன்டி ஒரு இடம் போனா ஓழுங்கா வீடு வர தெரியதா? வயித்துல புளிய கரைச்சிட்டியே டி படுபாவி” அவளை திட்டவும் செய்தார்.
அதற்குள் அவன் தந்தையிடம் தன்னை அறிமுகபடுத்திக் கொண்டவன் தான் கிளம்புவதாய் கூறவும் “கொஞ்சம் இருங்க தம்பி” மனைவிக்கும் அவனை அறிமுகபடுதினார்.
“அய்யா சாமி என் கண்ணுக்கு நீங்க கடவுளா தெரியுறிங்க.. என் புள்ளைய நல்லபடியாக வீடு கொண்டு வந்து சேர்த்து என் வயித்துல பால வாத்துட்டிங்க.. இந்நேரம் அந்த இடத்துல உங்கள பாக்கமா நின்னு இருந்தா அய்யோ நினைக்கவே பயமா இருக்கு… உங்க பிள்ளை குட்டிக்கு ஏழேழு ஜென்மத்துக்கும் நல்லா இருக்கனும் யா” மனதார அவனை வாழ்த்தி சாப்பிடுமாறு உபசரிக்க
“இருக்கட்டும் மா… இவ்வளவு பெரிய வார்த்தையெல்லாம் எதுக்கு எல்லாம் ஒரு மனிதாபிமானம் தானே” எனக் கூறியவன் “வீட்டுல அப்பத்தா காத்துட்டு இருப்பாங்க நான் கிளம்புறேன்” அவரின் உபசரிப்பை மறுத்தவன் அவர்களிடம் கூறிவிட்டு தனது பைக்கில் கிளம்பினான்.
அதுவரையிலும் தன்னை திட்ட மட்டுமே வாய் திறந்து பேசி இருந்தவன் தன் தாய் தந்தையிடம் கனிவான வார்த்தைகளை பேசி கேட்டதும் தன் காதுகளையே நம்ப முடியாமல் அவனையே ஆச்சர்யம் அகற்றாமல் பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு, அன்னம் கேட்ட கேள்விகளோ இல்லை தோழிகள் கொடுத்த குரலோ எதுவும் அவள் சிந்தனையை திசை திருப்பவில்லை….
இவள் திட்டுவதற்கு பயன்படுத்திய எவன் எவனோ என்ற வார்த்தைகளை காற்றில் பறக்க விட்டவள் அவனையே விழியகற்றாமல் பார்த்திருந்தாள்.