தந்தையின் வார்த்தைகளில் சிக்குண்டு இருந்த, தேவசேனாவின் மனது அன்றைய நாள் முழுவதும் அவனுடைய சிந்தனையிலேயே கழிந்தது.
கடந்த சில நாட்களாகவே விசாகனை பற்றிய எண்ணங்கள் அவளின் மனதில் ஆழ வேறுன்றி இருக்க, கல்லூரிக்கு செல்லும் போது கூட அவன் எங்காவது தெரிகிறானா என கண்கள் அலைபாய்ந்து அவனை தேடியது.
“ஏய் என்னடி நானும் கொஞ்ச நாளா பார்த்துக்கிட்டு தான் இருக்கேன், முன்னாடி பாக்குற… பின்னாடி பாக்குற… உன் கண்ணு எதையோ சுத்தி சுத்தி தேடுது என்ன வேணும்…? ம்..?.” மேகலா சந்தேகத்துடன் கேட்ட,.
“ம் என் மாமனை தேடுறேன்… பேசாம வருவியா…. எப்போ பார்த்தாலும் கேள்விக்கு பொறந்தவ மாதிரி கேள்விய கேட்டுக்கிட்டே இருப்பியா…? நானும் உனக்கு பதில் சொல்லி சொல்லியே களைச்சி போயிடுறேன்…” மேகலாவிடம் காய்ந்தவள், பஸ்ஸை விட்டு இறங்கி வேகமாக கல்லூரிக்குள் நுழைந்தாள்….
“ஹேய் நில்லு புள்ள…. நில்லு புள்ள… இவ என்ன ஓட்ட பந்தயத்துக்கு ஓடுற மாதிரி இந்த ஓட்டம் ஓடுறாளே….. உன்னை… ஹேய் வரேன் இருடி… என்னால ஓட முடியல…” மேகலா பேசிக்கொண்டே அவளை பின்னால் துரத்தியபடியே சென்றாள்.
வகுப்புக்குள் நுழைந்ததும் மேகலாவிடமிருந்து தப்பித்து தோழிகளுடன் கலந்துவிட்டவள், பிறகு தப்பி தவறி கூட மேகலாவின் புறம் திரும்பவில்லை.
எது எப்படியோ வகுப்பு ஆரம்பித்ததும் தன்னுடைய அனைத்து சிந்தனைகளையும் மூட்டை கட்டி வைத்தவள், உன்னிப்பாய் பாடத்தில் கவனம் செலுத்தினாள்.
மதிய இடைவேளையின் போதும் கூட மேகலாவுடன் தனித்திருக்கும் தருணத்தை கஷ்டப்பட்டு தவிர்த்து வந்தாள்… அவனை காண தான் மனம் ஏன் இவ்வளவு அலை பாய வேண்டும், அவன் சிந்தனைகள் ஏன் மூளையை செயல்பட விடாமல் வேலை நிறுத்தம் செய்கிறது. என்று அவளுக்கே தெரியாத போது தோழியின் ஒவ்வொரு கேள்விக்கும் எப்படி தன்னால் பதில் சொல்ல முடியும். என்ற காரணத்தினால் தான் அவளுடன் இருக்கும் சந்தர்ப்பங்களை தவிர்த்தாள்.
தோழியின் தடுமாற்றத்தை மனதில் குறித்துக் கொண்ட மேகலா, அவளை முறைத்தபடியே கல்லூரி முடிந்ததும் பேருந்து நிறுத்தத்திற்கு இருவருமாக சேர்ந்து வந்தனர்.
தோழியின் கொலைவெறி முகத்தை பார்த்த தேவா, இதற்கு மேல் அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் “ஹீ.. ஹீ.. என அசடு வழிந்து கொண்டே என்னடி ரொம்ப ஆசையா பாக்குற?” என்றாள்.
அவள் கேட்டதும் தன் பின் புறமும், பக்கவாட்டு புறமும், திரும்பி திரும்பி பார்த்தவள், சைகையிலேயே என்னையா என்று கையை தன்னை நோக்கி காட்டி தலையை ஆட்டி கேட்டாள்.
“அட ஆமாடி… உனக்கு பின்னாடி என்ன பத்து பேரா நிக்குறாங்க!! உன்னைத்தான் கேட்கிறேன்” என்றாள் தேவா கேளியாக
“ஆச்சர்யமா இருக்கு!!! உனக்கு என்னை தெரியுமா…? இது எனக்கு தெரியாம போச்சே….!!! நீங்க யாரு..? என்னை எப்படி உங்களுக்கு தெரியும்…?” என்றாள் மேகலா நக்கல் தோணியில்.
“ஏண்டி ஏதோ மாதிரி பேசுற… என்னை யாருன்னு உனக்கு தெரியாதா…?!?” என தேவா பாவமாக முகத்தை வைத்து கொண்டாள்.
“அம்மா தாயே உன் சங்காத்தமே வேணாம்… உன் போக்கே வரவர சரியில்ல… உன் வீட்டை பத்தியும் தெரியும்… நம்ம ஊரை பத்தியும் தெரியும்… அப்படி இருந்தும் உன் கண்ணும், உன் செயலும், எனக்கு வேற என்னத்தையோ சொல்லுது” என்றவாறு தோழியிடம் தன் அக்கறையை வெளிப்படுத்தினாள் மேகலா.
அவளிடம் தன் மனதில் நிகழ்ந்துள்ள மாற்றத்தை எவ்வாறு கூறுவது என்ற தடுமாற்றத்துடன் முழித்தவள், “நீ என்னன்னமோ வாய்க்கு வந்தபடி உளறாத கலா… நான் சாதாரணமா பாக்குறது கூட உனக்கு வேற மாதிரியா தெரியுது… நான் என்ன சொல்லி உன்னை நம்ப வைக்கிறது சரி விடு நாம பேசி பேசியே இது இப்படியே பெருசா போகுது” தோழியை சமாதானம் செய்தாள் தேவசேனா.
தோழியின் கையை பிடித்து பெருமுச்சு ஒன்றை வெளியிட்ட மேகலா “சரி எதுவும் கேக்கல… ஆனா கவனமா இரு… அவ்வளவு தான் சொல்வேன்… ” மேகலா மனதில் இருந்ததை கூறிவிட, அதை ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாது தவித்தாள் தேவா. தங்கள் சிந்தனையில் சுழன்ற இருவரும் பேருந்தின் வரவிற்காக காத்திருந்தனர்.
அவர்களை அதிக நேரம் சோதிக்காமல் பேருந்தும் வந்துவிட கல்லூரி மாணவ மாணவியரின் கூட்டம் ஏறியபடி இருந்தது.
அப்போது அவ்வழியாக தேவசேனாவை கடந்து விசாகனின் பைக் செல்ல தன் கண்கள் சில நாட்களாகவே தேடிய உருவத்தை கண்டதும், தோழி பேசிய அனைத்தையும் மறந்து, அவனையே பார்த்து கொண்டு இருந்தவள், பேருந்து படிகளில் கால் வைக்க, கால் இடறி கீழே விழுந்து விட்டாள்.
விசாகன் தான் வேலை விஷயமாக சுந்தரனுடன் வந்தவன் ஊர் திரும்பும் போது தான் அவ்வழியாக சென்றது.
தூரத்தில் இருந்து வரும்போதே அவளை பார்த்து விட்டவன், அவளை கவனியாது சென்று விட, பின் இருக்கையில் அமர்ந்து இருந்த சுந்தரனின் கண்களில் தேவசேனா பட்டவுடன் அவள் நடவடிக்கைகளை பார்த்தவாறு இருந்தவன், அவள் பேருந்தில் ஏறி கீழே விழுந்ததை கண்டுவிட்டான்.
“அதான் டா காபி ஷாப்ல கூட வந்து உன் பெயரை கேட்டுச்சே அந்த பொண்ணுடா”
சட்டென வண்டியை நிறுத்தி திரும்பி அவர்களை பார்த்தவன் சிறிது நேரம் கழித்து “பெருசா எதுவும் இருக்குது டா… எழுந்து போயிடுவாங்க” என்றான் சாதாரணமாக
“சின்னதா கூட இருக்கட்டும்… தெரிஞ்ச பொண்ணு பஸ்ஸில இருந்தது விழுந்துடுச்சி டா என்னன்னு கேக்க வேணாமா?? அதுவும் உனக்கு நல்லா தெரிஞ்சவரோட பொண்ணு” என்றதும்,
“இது காலேஜ் டா அவங்க பிரெண்டுங்க இருப்பாங்க… நாமா பாட்டுக்கு அங்க போய் நின்னா சங்கடமாகிடும்” நண்பனிடம் கூறினாலும் அவ்விடத்தில் இன்னும் கூட்டம் அவளை சூழ்ந்துள்ளதை கண்டு ஏன் இன்னும் எழுந்து கொள்ளவில்லை என பார்த்தான்.
“அப்படிங்குறியா…!? சரி வா வண்டிய எடு போலாம் யாருக்கு என்ன ஆனா நமக்கு என்ன வா போகலாம்…” விசாகனுக்கு உரைக்க வேண்டுமென சுந்தரனும் விட்டேத்தியாக கூறினான்.
சுந்தரனின் பேச்சில் அவனை முறைத்தவன் கண்களை இறுக்க மூடி திறந்து “உன்னை திருத்த முடியாது வா போய் பாக்கலாம்” சுந்தரனை அழைத்துக் கொண்டு அவள் இருக்கும் இடத்திற்கு விரைந்தான் விசாகன்.
கீழே விழுந்த தேவசேனா வலியை கட்டுப்படுத்த முடியாமல் யார் அவளை நெருங்கி தூக்கினாலும் கத்திக்கொண்டும் திட்டிக்கொண்டும் இருந்தாள்.
“ஒன்னுமில்ல தேவா, ஆஸ்பிட்டல் போனா சரியாகிடும்… உன்னை தூக்க விடுடி இப்படி கத்தினா என்ன செய்றது… ” மேகலா சமாதானமாக கூறிட்டாலும் வலியில் தேவா யாரையும் அவளை தொட கூட விடவில்லை.
கூட்டத்தை விலக்கி வலியில் அவள் செய்யும் அலப்பறைகளை பார்த்தவன், அவளை சுற்றி உள்ளவர்களிடம் “நீங்க போங்க நான் பாத்துக்குறேன் எனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்” அவர்களை விலக்கி விட்டு அவளை கை கொடுத்து எழுப்ப முயற்சித்தான்.
“இல்ல இல்ல வேணாம் என்னால நிக்க கூட முடியாது… ப்ளீஸ் என் கால் ரொம்ப வலிக்குது என் பக்கத்துல கூட வராதிங்க” அவனை தடுக்க, தலையை இருபுறம் ஆட்டியவன் “ஒன்னும் இல்ல சின்ன அடிதான் சரியாகிடும்” என அவளை தூக்க முயன்றான்.
“நீங்க தூக்க போறீங்களா!!!” கண்கள் விரித்து அவனை வியப்புடன் பார்த்தவள் அவன் செய்ய போகும் காரியம் மூலைக்கு உரைத்ததும் “வேணா வேணா தூக்காதிங்க வலி உயிர் போகுது… இப்படியே இருக்கட்டும் ப்ளீஸ் கை வைக்காதீங்க ஸ்… அம்மா” என கால்களை பிடித்துக் கொண்டு கத்தினாள்.
அவள் கத்த கத்த தேவாவை இருகைகளிலும் ஏந்தியவன், ஆட்டோவை நிறுத்தி, தேவாவை அமரவைத்திட, அவளுடன் மேகலாவும் ஏறி கொண்டாள். டிரைவரிடம் ஆஸ்பிட்டல் போக கூறியவன், பைக்கில் தானும் அவளை பின் தொடர்ந்தான்.
விசாகனின் கைகள் தேவாவை தாங்கியதும் இதுவரையில் அடம் பிடித்திருந்தவள், முயல் குட்டி என அவன் கைகளில் அடங்கிட, படபடவென பேசிய வாய் தாழிட்டுக்கொண்டது, கண்களோ அவன் முகத்தையே பார்த்திருக்க, மனமோ ‘என்னடி நடக்குது இங்க வந்தாரு பூவை தூக்குறாப்போல கைல தூக்கிட்டாரு… அட கடவுளே நான் கனவுலையா இருக்கேன். இல்ல உண்மையாவே இப்படி நடக்குதா! எனக்கு ஒன்னும் புரியலையே’ தேவா கற்பனையில் மிதந்து கொண்டு இருந்தாள்..
ஆட்டோவில் அமரவைத்த பின்னும் தன் சுய உணர்வில் வெளி வராத தேவா அப்படியே கனவுலகில் அவனுடன் சஞ்சரித்து கொண்டு உதட்டில் உறைந்த புன்னகையுடன் இருந்தாள்.
ஒருவழியாக மருத்துவரிடம் வந்தவர்கள் அடிபட்ட காலை பரிசோதிக்க உள்ளே சென்றனர்.
“டாக்டர் ரொம்ப வலிக்குதுன்னு சொல்றாங்க… என்ன ஆச்சு டாக்டர் பெரிய காயமோ?” விசாகன் தன் ஐயத்தை வினவினான்.
“காயம் இல்ல… ஆனா தசை பிசகி இருக்கு அதனால தான் இவ்வளவு வலி வேற ஒன்னும் இல்ல ஊசி போட்டு மாத்திரை எடுத்துக்கிட்டா இரண்டு நாளில் சாதரணமா நடக்க ஆரம்பிச்சிடுவாங்க… அதுவரைக்கும் கால் கொஞ்சம் ஸ்ட்ரெய்ன் பண்ணாம இருக்கனும்” மருத்துவர் கூறிவிட்டு செவிலியரை அழைத்து ஊசி போடுமாறு கூறவும் உள்ளே இருந்து அவள் கத்துவது அவனுக்கு தெளிவாக கேட்டது.
“சிஸ்டர் சிஸ்டர்… ப்ளீஸ் சிஸ்டர்… எனக்கு ஊசி னா சத்தியமா பயம் எனக்கு ஊசி எல்லாம் வேண்டாம் இதோ இந்த மாதிரி பெரிய பெரிய மாத்திரையா இருந்தாலும் பரவாயில்லை தாங்க நான் போட்டுங்குறேன்” என அடம் செய்தாள்.
“அட என்னம்மா நீங்க சாதாரண ஊசிக்கு போய் இப்படி பயப்படுறீங்க… இப்போ எல்லாம் சின்ன குழந்தைகளே அழாம போட்டுக்குவாங்க இது சின்ன ஊசிதான் வலி எல்லாம் இருக்கவே இருக்காது” நர்ஸ் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல்,
“ப்ளீஸ் ப்ளீஸ் இந்த ஒரு முறை நான் சொல்றத கேளுங்களேன் சிஸ்டர்… எனக்கு ஊசி எல்லாம் செட் ஆகவே ஆகாது, சாதாரண அடி தான் இதுக்கு போய் இவ்வளவு பெரிய ஊசியை கொண்டு வர்றீங்களே” ஊசியை அருகே கொண்டு வராமல் அவரை தடுத்தாள்.
“இல்ல இல்ல எனக்கு வேணாம் சிஸ்டர் என் கால் வலியை விட இந்த இன்ஜெக்ஷன் வலிதான் பெரிசா தெரியுது… ப்ளீஸ் வேண்டாம்” என அலப்பறை செய்து கத்திக்கொண்டு இருந்தாள்.
டாக்டரிடம் பேசியபடியே இவையனைத்தும் கேட்டு கொண்டிருந்த விசாகனின் இறுக்கம் நிறைந்த இதழ்களில் கூட அவளை நினைத்து சிறு புன்னகை தோன்றியது.
பக்கத்தில் இருந்த சுந்தரனோ ‘ஆளு செம கெத்தா பேசி நானும் ரவுடிதான்னு எபெக்ட் கொடுத்தாலும் ஊசிய காமிச்சே வழிக்கு கொண்டு வந்துடலாம் போலியே’ சிறுபிள்ளை தனமான அவள் செயலை நினைத்து சிரித்தான்.
மருத்துவமனையை ஒரு வழியாக்கி தோழியின் தோள்களில் கையை போட்டு தாங்கி தாங்கி நடந்து வெளியே வந்தவளின் வாய் மட்டும் ஓயவே இல்லை ‘
‘ஒரே ஏத்து ஏத்திட்டாங்களே… கடவுளே அடிபட்ட வலியோட ஊசி போட்ட வலி தான் அதிகமாக இருக்கும் போலயே… எல்லாம் அவனால் தான் உன்னை ஒருத்தி பாக்குறேன் தெரியும் போது பைக் ஸ்லோ பண்ண முடியாதா…? உன்னை பார்த்துக்கிட்டே படியில கால வைச்சேன்னு நினைச்சி கீழே விழுந்து வாரி வைச்சேனே’ என மனதில் நினைக்க முகம் அதன் உணர்ச்சிகளை பிரதிபலித்து இருந்தது.
அவள் முகத்தில் பிரதிபலித்த உணர்வுகளை அவன் காணும் முன்னே மறைத்தவளின் முகம் வலியின் சாயலை பெற்றிட,. அவளையும் காலையும் மாறி மாறி பார்த்தவன் “இப்போ எப்படி போவீங்க ஒரு ஆட்டோல போயிடுறிங்களா” என்றான் விசாகன்.
“இல்ல இல்ல ஆட்டோலாம் வேண்டாம் பஸ்லயே போயிக்கிறோம்” சட்டென பதில் வந்தது தோவாவிடமிருந்து, இன்னும் அவன் அருகாமையில் இருந்தால் மனதில் இருப்பதை எல்லாம் உளறி விடுவோம் என எண்ணியவள், இங்கிருந்து சென்றாள் போதுமென நினைத்தாள்.
“அதெல்லாம் பெருசா ஒன்னும் இல்ல ணா…. என்ன இங்க அடிபட்டவுடனே கால் வீங்கி போகவே பயம் வந்துடுச்சி அதிர்ச்சியில கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்” அவனை பார்த்து அசடு வழிய சிரித்தபடியே கூறியவள்,
“அப்போ நாங்க கிளம்புறோம் ” அவர்களிடம் விடைபெற்று ஒரு அடி எடுத்து வைக்க வலியில் ஆ… என முனங்கியபடியே தடுமாறி நடந்தாள்.
அவள் தடுமாற்றத்தை பார்த்தவன் “கொஞ்சம் இரு…” அவளை தாங்கி சொல்லும் மேகலாவை நிப்பாட்டிவிட்டு,
“மாப்ள ஒரு ஆட்டோ கூட்டிட்டு வாடா” சுந்தரனிடம் கூறியவன், “நடக்கவே முடியல இதுல பஸ்ஸ எல்லாம் போகவே முடியாது… இப்போ வர்ற ஆட்டோல வீட்டுக்கு போங்க” அவர்களிடம் அதட்டலுடன் கூறியவன், ஆட்டோ வந்ததும் இருவரையும் ஏற்றி விட்டு அதன் பின்னே இவனும் சுந்தரனும் பைக்கில் தொடர்ந்து சென்றனர்.
‘போய் பாக்கவே மாட்டேன்னு சொன்னான் ஆட்டோல பின்னாடி பாலோவ் பண்ணிட்டு போறான்.. ம் நல்ல டெவலப்மென்ட் தான் மாப்ள… நான் எதுவும் பண்ணலனாலும் விதியே உங்களை சேர்த்துடும்’ என மனதில் நினைத்தவன் “மாப்ள அவங்க ஊர் வரைக்கும் போகறோமா இல்ல வீடு வரையும் போறோமா” என்றான் சந்தேகமாக,
“என்ன பொண்ணுடா அவ??? எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு சிக்கல மாட்டிக்கிட்டு கிடக்கிறதே வேலையா வைச்சி இருக்கா… இன்னைக்கு பார்த்துட்டோம் ல வீடு வரைக்கும் போய் தான் ஆகணும். பார்த்த ல ஆஸ்பிட்டல்ல பண்ண ஆர்பாட்டத்தை… அவளோட நடவடிக்கை எல்லாம் விசித்திரமா இருக்கு, இதுல ஊர் கிடக்குற அழகுல இவங்கள எப்படி தனியா ஆட்டோல அனுப்பறது வேற ஏதாவது வம்பை இழுத்து விட்டு வச்சா அது வேற பிரச்சனை ஆகிடும்”
விசாகன் சலித்துக் கொண்டாலும் அவள் மருத்துவமனையில் பேசிய பேச்சை நினைத்து உதட்டில் உறைந்த புன்னகையுடன் அவர்களை பின் தொடர்ந்தான்..
விசாகனின் வார்த்தைகளை கேட்டவனுக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சர்யம் ஊர் வரையும் கொண்டு விடாலம் என கூறுவான் என்று தான் பார்த்தான். ஆனால் வீட்டிற்கே கொண்டு விடுவான் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.
இன்னும் அவன் ஆச்சரியம் பட நிறைய இருக்கு இதுக்கே அதிர்ச்சியான எப்படி….