மணிகண்டனுக்கும் நீலகண்டனுக்கும் அத்தனை நெகிழ்ச்சி! அவர்கள் இல்லத்தில் நடைபெறும் நிறைவான திருமணம்.
ஐந்து பெண் பிள்ளைகளையும் திருப்தியான இடத்தில் கரை சேர்த்து விட்ட நிம்மதி ஒரு புறம் இருந்தாலும், முழுமையாக தங்களின் கடமைகளை சரியாக முடித்து விட்டோம் என்னும் சிறு கர்வமும் அவர்களிடம் இருக்கத்தான் செய்தது.
அதுவும் நீலகண்டனின் பெருமிதம் அவர் மீசையை முறுக்கிக் கொண்டு வளம் வருவதிலேயே தெரிந்தது.
தன் மகள் தடம் மாறிப் போய் இருந்தாலும், தம்பியின் மகள்களை நன்றாய் வளர்த்து, படிக்க வைத்து இதோ அவரவர்களுக்கு நல்லதோர் இடத்தில் மணம் முடித்தும் கொடுத்தாயிற்று எனும் கர்வத்தொடு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொந்த பந்தங்களின் மத்தியில் வளம் வந்தார் மனிதர்.
அதுவும் நேற்று வந்த சொந்தங்கள் அனைவரும் மாப்பிள்ளை இன்னும் வரலயாமே.. வந்துடுவாரா.. பெரிய இடம்னாலே இப்படித் தான்.. இஷ்டத்துக்கு ஆடுவாங்க.. என்று அவர்கள் போக்கில் பேசிக் கொண்டாலும்,
அவன் வேலையின் முக்கியத்துவத்தை விளக்கி, “நாளைக்கு மணமேடையில என் பையன் இருப்பான்” என்று வடிவேலனும் இன்பவள்ளியும் அழகாய் சமாளித்து இருந்தனர் அவர்களை.
சொந்தங்களின் நச்சரிப்பு எரிச்சலடைய செய்திருந்தாலும் சம்மந்தி வீட்டினரே தங்களை சங்கடம் கொள்ள வைக்காமல் அவர்களை எல்லாம் சமாளித்ததில் இன்னுமே பெருமிதம் தான் நீலகண்டனுக்கு.
“பாருங்கடா.. நாங்க சம்மந்தம் பண்ணி இருக்கும் இடத்தை” என்று மார் தட்டிக் கொள்ளாத குறையாக கர்வமாக நிமிர்ந்து நின்றார் மனிதர்.
அதுவும் ஒன்றிரண்டு பேர் “அஞ்சு பொண்ணுங்களையும் நல்லா படிக்க வச்சு கட்டியும் கொடுத்துட்டாங்கப்பா அண்ணனும் தம்பியும்” என்று பெருமையாகவே சொல்லிவிட, கையில் பிடிக்க முடியவில்லை இருவரையும்.
மணிகண்டனுக்கு கண்கள் கலங்கி விட்டது கடைசி மகளின் கல்யாண கோலம் கண்டு. செல்லமாய் வளர்க்கவில்லை தான்! இருந்தாலும் அவர்களின் அளவு கடந்த கட்டுப்பாடுகள் சற்றே தளர்ந்திருந்தது கீர்த்தியிடம் மட்டும் தான்!
ஏனோ இறுதி மகள் என்பதாலேயே அவள் மேல் சற்றே கூடுதல் பாசமும் ஒரு வித பிணைப்பும்! இனி அவளில்லாத வீடு… தங்களுக்கு எப்படி இருக்குமோ என்கிற கவலையும் அவரை ஆட்டிப் படைக்க, கலவையான உணர்வுகளை கட்டுப் படுத்திக் கொண்டு நெகிழ்ந்து போய் இருந்தார் மணிகண்டன்.
அனைவரின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டு சர்வேஷ்வரனும் கீர்த்தன்யாவும் மணமேடையில் நிற்க, வரிசையாக சொந்தங்கள் வர ஆரம்பித்தனர்.
வடிவேலனின் சொந்தங்கள் அனைவருமே வருகை தந்திருந்தனர் வளர்மதியின் குடும்பத்தினரை தவிர! அவர் வராதது சற்றே மன வருத்தம் தான் என்றாலும், வந்திருந்தாலும் நிச்சயம் நல்ல விதமாய் அவரின் ஒத்துழைப்பை காட்டி இருக்க மாட்டார் என்பதில் உறுதியாக இருந்தார் இன்பவள்ளி.
எனவே தான் மீண்டும் அவரை சமாதானம் செய்து அழைக்க நினைக்கவில்லை. மீறி அழைத்து வந்திருந்தால் நன்னாளில் எதாவது ஏடா கூடமாக பேசி விட்டால் அதன் வடு காலத்திற்கும் மாறாது என்று அடுத்து அவரை அழைக்கவே விரும்பவில்லை இன்பவள்ளி.
வடிவேலனுக்கும் அதே பயம் தான். எங்கே தங்கை வந்து எதாவது பேசி வைத்தால் மகனின் கோபம் எல்லையை கடந்து விடுமோ என்று அப்படியே விட்டு விட்டார்.
சொந்தங்களின் வருகை மதிய நேரம் வரை நீட்டிக்க சர்வேஷ்வரனுக்கு தலையை கழட்டி தனியே வைத்து விடலாம் போல் இருந்தது.
நேரம் ஆக ஆக அப்படி ஒரு தலை வலி! அதுவும் புகைப்படக் கருவிகளின் வெளிச்சமும், அந்த விளக்குகளின் ஒளியும் என கண்கள் வேறு மேலும் எரிந்தது.
சொந்தங்கள் வர வர புகைப்படம் எடுத்த வண்ணம் தான் இருந்தனர். அவனின் சோர்வையும், சிவந்த கண்களையும் கண்ட கீர்த்தன்யா “கொஞ்ச நேரம் உக்காரலாமா? நிகியை சேர் எடுத்திட்டு வர சொல்றேன்” என்று சொல்ல,
“இல்லடா.. இன்னைக்கு ஒரு நாள் தானே?” என்று மறுத்து விட்டான். என்ன தான் சோர்வாக இருந்தாலும் ஒரு நொடி கூட முகம் சுளிக்கபில்லை. புகைப்படத்திலும் புன்னகை முகமாகவே இருந்தான்.
காலத்திற்கும் இன்றைய தினம் அவர்களின் பொக்கிஷ நினைவுகளை அடக்கி இருக்கும் தினம் ஆகிற்றே. எனவே, முகத்தில் அயர்ச்சியை காட்டிக் கொள்ளவில்லை அவன்.
இறுதியில் உணவருந்தும் நேரம் வந்த பின்னர் தான் அமரவே முடிந்தது இருவராலும்.
கால்கள் எல்லாம் அப்படி ஒரு வலி கீர்த்தன்யாவிற்கு. மதிய பொழுது வரை மாலையும் கழற்றாமல் இருக்க, அது வேறு கனத்தது. கூடவே அனைவரையும் விழுந்து வணங்கி என உடலில் அப்படி ஒரு அசதி.
அதுவும் நன்றாக உறங்கி எழுந்த தனக்கே இப்படி இருக்கும் போது, கணவனின் நிலையை எண்ணி மிகவும் வருந்தினாள் கீர்த்தன்யா.
உணவை உண்ணாமல் தன்னை திரும்பி பார்த்தவளை கண்டு என்ன என புருவம் உயர்த்த, “வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துக்கலாம்” என்றாள் அவனின் முக வாட்டத்தை கண்டு.
அதில் புன்னகைத்தவன், “அதெல்லாம் ஒன்னும் இல்ல. கொஞ்சம் டயர்ட் அவ்ளோ தான். சாப்பிடு” என்றவனுக்கு சுத்தமாய் உணவு உள்ளே இறங்கவில்லை.
அவ்வளவு தலை வலியில் உணவை உட்கொள்ள முடியாமல் சிறிதளவு மட்டும் உண்டு விட்டு எழுந்து கொண்டான். அதையும் கவனித்த கீர்த்தன்யா “சரியாவே சாப்பிடல” என்று வருத்தம் கொள்ள,
“முடியலமா” என்று மெல்ல சொன்னவன், “டேப்லட் போட்டா சரி ஆகிடும்” என்று சதீஷ் கொடுத்த மாத்திரையை போட்டுக் கொண்டான்.
அனைவருக்குமே அவனின் சோர்வு அப்பட்டமாய் தெரிந்தது. எனவே, மதிய உணவு நேரம் முடிந்ததும் கோவில் சென்று வந்து பால் பழம் சாப்பிட பெண் வீட்டிற்கு அழைத்து சென்றனர் மணமக்களை.
அங்கே சடங்குகளை விரைவாக முடித்ததும் கிளம்பும் நேரம் வந்து விட, “இங்கேயே கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க மாப்பிள்ளை. சாயங்காலம் கிளம்பலாம்” என்றனர் கீர்த்தன்யாவின் குடும்பத்தினர்.
“இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும் சமம்மந்தி. மணி இப்பவே நாளாகப் போகுது. நல்ல நேரத்துக்குள்ள கோயம்பத்தூர் ரீச் பண்ணனும்” என்று வடிவேலன் சொல்லி விட, அவர்கள் பெண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்பும் நேரமும் வந்தது.
அதுவரை நெகிழ்ச்சியுடன் கர்வமாய் புன்னகைத்துக் கொண்டிருந்த கண்டன்கள் இருவரும் கண்ணீருடன் உடையும் நிலையில் இருந்தனர்.
தெய்வானை மகளை கட்டிக் கொண்டு அப்படி ஒரு அழுகை! தன்னோடு சரிக்கு சரியாக மல்லுக் கட்டும் கடைசி மகள்.. இப்போது திருமணமாகி புகுந்து வீடு செல்லும் நிலையில்….
இனி அவளில்லாத வீட்டில் அவர்கள் வாழ பழகத் தான் வேண்டும். கீர்த்தன்யாவிற்கு அத்தனை பரிதவிப்பு அன்னையின் அழுகையில்.
அவர் அணைத்ததும் அவளுமே அழுகையில் வெடித்து விட்டாள். அக்காக்கள் நால்வரும் ஒரு வழியாக அவளை சமாதானம் செய்ய, நர்மதாவை கட்டிக் கொண்டு மீண்டும் ஒரு அழுகை!
பிறந்த வீட்டு சொந்தங்கள் அனைவருமே கண் கலங்கி தான் போனார்கள். அதுவும் தெய்வானை “இனி நீயும் இல்ல.. என்ன செய்ய போறனோ இந்த ஆளில்லாத வீட்டுக்குள்ள. பைத்தியமே பிடிச்சிடும் கீர்த்தி” என்று குலுங்கி அழ, உணர்ச்சிப் போராட்டமாக போய் விட்டது சில நொடிகள்.
“சம்மந்தி… ஒரு அழுத்து அழுத்தினா ஒரு மணி நேரத்துல வந்தரலாம் கோயம்பத்தூருக்கு. இதுக்கு போய் கண்ண கசக்குறீங்க” என்று அவரை தேற்றிய இன்பவள்ளி,
“நான்லாம் எங்க வர்ஷினியை கட்டிக் கொடுத்தா அப்பாடி… விட்டது தொல்லைன்னு தான் இருப்பேன். வீட்ல அவளை சமாளிக்க முடியாம அல்லாடுறது எனக்கு தானே தெரியும்” என்று வேறு மகளை வார,
“அம்மா..” என்று பல்லைக் கடித்துக்கொண்டு சிணுங்கியவளை கண்டு அனைவரும் சற்றே சிரித்து சகஜமாகினர்.
“பொண்ணை பிரியிறது கஷ்டம் தான் சம்மந்தி. அதுவும் கீர்த்தி உங்களுக்கு கடைசி பொண்ணு. உங்க கைக்குள்ளவே இருந்தவ வேற” என்றவருக்கும் தெய்வானையின் மன நிலை புரிந்தது.
“நீங்களும் எங்களோட வாங்க. அதை விட்டுட்டு இப்படி அழுகாதீங்க சம்மந்தி” என்று அவரைத் தேற்ற நிதர்சனத்தை உணர்ந்து அவரும் தன்னை சமன் செய்து கொண்டார்.
“பத்திரம் கீர்த்தி. புகுந்த வீடை அனுசரிச்சு போகனும். மாப்பிள்ளை கிட்ட பக்குவமா நடந்துக்கணும்” என்று மகளுக்கு தாயாய் அறிவுரை வழங்கியவர் கண்ணீர் நிறைந்த விழிகளுடன் அவளுக்கு விடை கொடுக்க தயாராய் இருந்தார்.
நிகிதாவும் கீர்த்தன்யாவை கட்டிக் கொண்டு அழுது விட்டாள். “உன் ரோஸ்லாம் அப்படியே விட்டு போற” என்று அவளுக்கு நினைவு படுத்த மீண்டும் கண்ணில் கண்ணீர் கட்டி விட்டது கீர்த்தன்யாவிற்கு.
யாரின் வருகையையும் எதிர்பாராமல் தோட்டத்திற்கு ஓடினாள். அவள் அழுகையுடன் செல்வதை கண்ட அனைவருக்குமே நெஞ்சம் கனத்து போனது.
அதுவும் நீலகண்டனுக்கே அதைக் கண்டு முகம் வாடி கலங்கி விட்டது. என்ன தான் தோட்டம் வைத்து அத்தனை ரோஜா செடிகளை வளர்த்ததற்கு அவளை சாடினாலும் இனி அவளில்லாமல் அவைகளுக்கும் கஷ்டம் தானே எண்ணிக் கொண்டார்.
தோட்டப் பக்கம் வந்தவள் பூத்துக் குலுங்கி நின்ற ஒவ்வொரு செடிகளையும் கண்டு விம்மி விட்டாள். ஏனோ அனைத்து பூக்களும் அன்று நன்றாய் பூத்திருந்தது.
அவள் உயிருக்கு உயிராய் வளர்த்த செல்வங்கள் ஒவ்வொன்றும் அவளுக்கு மலர்ந்த முகத்துடன் விடை தருகின்றனர் போலும்!!!
பார்க்க பார்க்க அத்தனை அழுகை அவளுக்கு. அவளின் ஒவ்வொரு காலையும் விடிந்து.. பொழுது முடிவது இங்கே தான். இனி அதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைக்க நினைக்க அழுகை வெடித்தது.
அவள் அழுவது உள் வரை கேட்க, தெய்வானையும் கண்ணீருடன் நின்று விட்டார். “போய் அழைச்சிட்டு வா தெய்வா. நேரம் ஆச்சு” என்று சொன்ன மணிகண்டனின் குரலிலும் கண்ணீர் தான்.
இனி மகள் சென்ற பின் நிச்சயம் இத்தோட்டத்தை அவள் பராமரித்து பார்த்துக் கொண்டதை போல பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அந்த நொடி மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டார்.
தெய்வானை நகர எத்தனிக்க, “நான் போய் கூட்டிட்டு வரேன் அத்தை” என்று தோட்டப் பக்கம் நகர்ந்தான் சர்வேஷ்வரன்.
அவன் அங்கே வந்ததைக் கூட உணராமல் செடிகளின் மத்தியில் அமர்ந்து அவைகளை வருடிக் கொடுத்தபடி அப்படி ஒரு அழுகையில் இருந்தாள் அவனின் மனைவி. பார்த்ததும் அவனுக்கே நெஞ்சம் கனத்து விட்டது.
“கீர்த்து…” என்று மெல்ல அழைக்க, அதில் அழுகையை நிறுத்தி திரும்பியவளுக்கு கணவனை கண்டதும் மேலும் கண்கள் கலங்கியது.
உதடு கடித்து அதனை கட்டுப் படுத்திக் கொண்டவள் எழுந்து கொள்ள, “என்னமா இது?” என்றான் அவளை நெருங்கி.
“ஒன்னுமில்ல.. அது.. இதெல்லாம் விட்டுட்டு.. யோசிக்கவே முடியல” என்றவளுக்கு கண்ணீர் உடைப்பெடுக்க, “அழக் கூடாது கீர்த்து” என்றான் மெல்ல அவளின் கைகளை பற்றி.
“இல்ல.. அழல..” என்று மறுப்பாக தலை அசைத்தாலும் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது அவளுக்கு. அதை வைத்தே புரிந்து கொண்டான் மனைவிக்கு இங்கிருக்கும் மலர்களின் மீதான நேசத்தை!
“அழல… ஆனா, தண்ணி நிக்காம வருதே கீர்த்தி பொண்ணுக்கு” என்று மெல்ல அவளின் தாடையை பற்றி சொல்ல, மீண்டும் அழுகையில் உதடு பிதுங்கியது அவளுக்கு.
“இப்படி அழுதா என்னடாமா பண்றது?” என்றவனுக்கும் அவளின் தவிப்பை கண்டு தாளமுடியவில்லை. பெரு விரல் கொண்டு அவளின் கண்ணீரை துடைத்து விட, கணவனின் செயலில் உடைந்து போனாள் கீர்த்தன்யா.
அவன் மார்பில் சாய்ந்து அவனை அணைத்துக் கொண்டவள் “தினமும் காலைல எழுந்ததும் இங்க தான் முதல்ல வருவேன். ஒவ்வொரு நாளும் எனக்கு இங்க தான் ஸ்டார்ட் ஆகும். தண்ணி ஊத்தி, காய்ஞ்ச இலை எல்லாம் எடுத்து போட்டு, மருந்து விட்டு, சுத்தம் பண்ணி, பூத்த ரோஸ் எல்லாம் பரிச்சு.. அப்படியே டைம் போய்டும். இங்க வந்தா என்னையே மறந்திடுவேன். அவ்ளோ அமைதியா ஃபீல் பண்ணுவேன். அப்படியே இதுங்க கூட பேசிட்டே இருக்கிறது எவ்ளோ நல்லா இருக்கும் தெரியுமா? சில நேரம் சாங்ஸ் கேட்டுட்டு.. நிகி கூட பேசிட்டு.. நர்மதா அக்கா கூட பேசிட்டு.. அப்படியே பொழுது அழகா போகும்..” என்று அவள் ஒவ்வொன்றாய் சொல்லச் சொல்ல மனம் கனத்து போனது அவனுக்கு.
கூடவே, அவளுக்கும் இந்த தோட்டத்திற்கும் இருக்கும் ஒரு வித பிணைப்பை உணர்ந்து கொண்டவன், மனைவி இதில் இருந்து மீள்வது சற்று கடினமாக தான் இருக்கும் என்ற நிதர்சனத்தையும் உணர்ந்து கொண்டான்.
ஆசையும் அழுகையுமாய் முகம் கலங்கியபடி தன்னை அணைத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் சொன்னவளை தானும் இதமாக அணைத்துக் கொண்டு முதுகை வருடிக் கொடுத்தான்.
மெல்ல மெல்ல அழுகை நீங்கி விசும்பல் மட்டுமே அவளிடம் இருந்து வர, “கீர்த்தி பொண்ணு ஓகே வா..” என்றான் மார்பில் இருந்து அவளின் முகம் நிமிர்த்தி.
அப்போது தான் அவனை தான் அணைத்திருப்பதே கருத்தில் பதிந்தது அவளுக்கு. இறுக்கமாய் அவனின் சட்டையை பற்றிக் கொண்டு நெஞ்சில் முகம் புதைத்து அழுததை எண்ணி அவனின் முகம் பார்க்க முடியாமல் விலகப் பார்க்க அவனோ விடாமல்
“கீர்த்தி பொண்ணு நார்மல் மோடுக்கு வந்தாச்சா?” என்றான் குறும்பு மின்ன! “ஹ்ம்ம்” என்று மெல்ல தலை அசைத்தவள் அவன் தன்னை விடாமல் இருப்பது உணர்ந்து, “போகலாம்” என்று சொல்ல,
“ஹப்பா.. இப்ப தான் புருஷன் கூட வர ஐடியாவே வந்திருக்கு” என்றான் கோவைப் பழமென சிவந்திருந்த அவளின் மூக்கினை தன் நாசியால் உரசியபடி.
கணவனின் ரசனை மிகுந்த செய்கையில் சிலிர்த்து விட்டவளுக்கு முற்றிலும் மன நிலை மாறிப் போய் இருந்தது. அழுகையில் சிவந்து கிடந்த முகம் மெல்ல மெல்லக் வெட்கத்தில் சிவக்கத் துவங்க, தன்னை விடாமல் இடையை இன்னும் அழுத்தி அணைத்துக் கொண்டவனின் மார்பில் கை வைத்து தள்ளி,
“உள்ள எல்லாரும் இருப்பாங்க. போலாம்” என்று படபடக்க, மெல்ல அவளை நெருங்கியவன் “அங்க வந்து மறுபடியும் அழுக கூடாது கீர்த்தன்யா. சந்தோஷமா வரணும் என் கூட. கீர்த்தி அழுதா தாங்கல” என்றான் மனதை தொட்டு.
அதில் நெஞ்சம் அவன் மீதான நேசத்தில் விம்மி விட்டது. மெல்ல தலை அசைத்து “சாரி.. கொஞ்சம் அழுகை வந்திடுச்சு” என்று சொல்ல,
“இது கொஞ்சமா…?” என்று செல்லமாய் அவளை முறைத்தவன் “உன் அழுகை அங்க வரைக்கும் கேட்டுச்சு. அதான் தாங்க முடியாம நானே வந்தேன்” என்றான் அவளோடு இணைந்து நடந்தபடி.
இருவரும் வந்ததும் மகளின் முகம் அழுது வீங்கி இருந்தாலும், அதையும் மீறி தெளிவாக இருப்பதை கண்ட பெற்றவர்களுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.
ஒரு வழியாக அவளை மனம் நிறைந்த சந்தோஷத்துடனும் மெல்லிய கண்ணீருடனும் கோயம்பத்தூர் நோக்கி அனைப்பி வைத்தவர்கள், நாளை காலையே மீண்டும் மறு வீட்டு விருந்திற்கு வர சொல்லி அழைத்திருந்தனர் பொள்ளாச்சிக்கு.