காரில் ஏறிக் கொண்டதும் அவளின் கைகளை பற்றிக் கொண்டபடி சீட்டில் சாய்ந்தவன் தான். இல்லம் வரும் வரை அப்படி ஒரு உறக்கம் சர்வேஷ்வரன்.
அவனின் அசதியை உணர்ந்து யாரும் அதிகம் சத்தமாய் பேசிக் கொள்ளவும் இல்லை. இல்லம் வரும் வரை அமைதியாகவே வந்தனர்.
தன் இடது கரத்தினை பற்றிக் கொண்டு அசந்து உறங்கும் கணவனை கண்டவளுக்கு அவன் தோள் சாய்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது.
தோட்டத்தில் அழுத போது தன்னை அரவணைப்பாய் தாங்கிய விதம் மனதை மென் சாரலாய் நனைத்திருக்க, உறங்கும் அவனை விழி அகலாமல் பார்த்தபடி தான் வந்தாள்.
அண்ணியின் பார்வையில் சக்ரவர்ஷினி சிரிப்புடன் அன்னையிடம் கண்களை காண்பிக்க, மகளை பார்வையாலேயே கண்டித்தவர் அமைதியாய் வரும் படி சைகை செய்தார்.
இல்லம் வந்தும் கூட விழிக்கவில்லை அவன். அயர்ச்சியில் நன்கு உறங்கி இருந்தான். பாவமாக போய் விட்டது கீர்த்தன்யாவிற்கு.
இன்பவள்ளி மருமகளிடம் “எழுப்பு கீர்த்தி. வீடு வந்தாச்சு” என்று சொல்லி இறங்கிக் கொள்ள, மெல்ல அவன் தோள் தொட்டு அவனை அசைத்தாள்.
சிரமம் கொண்டு கண் விழித்தவன் இல்லம் வந்ததை உணர்ந்து “வந்தாச்சா” என்று கேட்க, “ஹ்ம்ம்” என்று தலை அசைத்து கொண்டாள்.
“வெல்கம் கீர்த்து” என்று அசதியை மீறி அவளை வரவேற்றவன் “வா..” என்றபடி அவளோடு இணைந்து இறங்கினான். ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றதும் மருமகளை பூஜை அறையில் விளக்கேற்ற சொன்னார் இன்பவள்ளி.
வீட்டின் பிரம்மாண்டத்தை பார்வையால் உள் வாங்கிக் கொண்டே பூஜை அறை சென்றவள் இன்பவள்ளி சொன்னது போல் குத்து விளக்கை ஏற்றினாள்.
கண் மூடி பிரார்த்தித்தவளுக்கு அனைத்து சூழ்நிலைகளிலும் ஒருவருக்கு ஒருவர் துணை இருந்து சர்வேஷுடன் கை கோர்த்து தன் வாழ்க்கையை அழகாய் கொண்டு செல்ல வேண்டும் என்பதை தவிர்த்து வேறெதுவும் இல்லை!
பூஜை அறையில் இருந்து வந்ததும் “நீ போய் ரெஸ்ட் எடு சர்வா. கீர்த்தியையும் அழைச்சிட்டு போ. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வாங்க” என்று சொல்ல, சர்வாவும் அவளை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றான்.
அறைக்குள் நுழைந்ததும் உடை கூட மாற்றாமல் நேராக கட்டிலில் சென்று விழுந்தான் சர்வேஷ்வரன். அதிலேயே அவனின் உடல் சோர்வு தெரிந்தது.
“ட்ரெஸ் மாத்திக்கல?” என்று அவனை நெருங்கியவள் அவன் முகம் காட்டிய அயர்வில், “சரி தூங்குங்க…” என்று எழுந்து கொண்டாள். “நீயும் தூங்குறதுன்னா தூங்கு கீர்த்து” என்றவனால் அதற்கு மேல் சுத்தமாய் பேசக் கூட முடியவில்லை.
கண்கள் சொக்க உறங்கிப் போனான். அவன் உறங்கியதும் என்ன செய்வது என்று தெரியாமல் அறையை சுற்றிப் பார்க்க, சுவற்றில் மாட்டப் பட்டிருந்த அவனின் புகைப்படங்களில் சிறிது நேரம் லயித்து நின்றவள், அதன் பின்னர் ரெஸ்ட் ரூம் பார்த்து சென்று வந்ததும் கீழே வந்தாள்.
சக்ரவர்ஷினி தான் ஹாலில் இருக்க, “தூங்கலயா அண்ணி?” என்றாள் கீர்த்தன்யாவை பார்த்து.
“இல்ல வர்ஷி.. தூக்கம் வரல” அவள் தன்னை அழைத்த விதத்தில் சக்ரவர்ஷினியின் இதழ்களில் புன்னகை!
“அண்ணாவும் இப்படி தான் வர்ஷின்னு கூப்பிடுவாங்க. நீங்களும் அப்படியே கூப்பிடுறீங்க” என்று சிரித்தவள், “நிகி சொன்ன மாதிரி ஒருத்தருக்கு ஒருத்தர் மேட் ஃபார் ஈச் அதர் தான்” என்று சொல்லி சிரிக்க, கீர்த்தன்யாவிற்கும் புன்னகை.
“லக்கேஜ் எல்லாம் எடுக்கலாம்னு வந்தேன் வர்ஷி. ட்ரெஸ் சேஞ் பண்ணனும்” என்று சொல்ல, இன்பவள்ளியும் வந்து விட்டார்.
“தூங்கி இருக்கலாம் தானே கீர்த்தி” என்றவரிடம் “இல்ல தூக்கம் வரல அத்தை. ட்ரெஸ் மாத்திக்கணும். அதான் லக்கேஜ் எடுக்க வந்தேன்” என்றாள்.
“சரி மாத்திட்டு போய் தூங்கு கீர்த்தி வெள்ளனவே முகூர்த்தம். நல்ல அசதியா இருக்கும்” என்றவர் வந்திருந்த சொந்தங்களை கவனிக்கச் சென்றார்.
உடை மாற்ற கீழேயே அவள் அறையை பார்க்க, “என்ன அண்ணி?” என்றாள் வர்ஷினி அவள் பார்வையில்.
“இல்ல மேல போனா அவுங்களை டிஸ்டர்ப் பண்ற மாதிரி இருக்கும். கீழ எந்த ரூம்ல மாத்திக்க?” என்று கேட்க, “என் ரூமுக்கே வாங்க அண்ணி” என்று அவளை அழைத்துச் சென்றவள் அவள் உடை மாற்ற உதவினாள்.
சக்ரவர்ஷினியின் அறையை சுற்றி பார்த்தவளுக்கு தலை சுற்றியது. அனைத்தும் களைந்து, பொருட்கள் எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இரைந்து கிடக்க, கணவவனின் நேர்த்தியான அறைக்கும் அவன் தங்கையின் அறைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உண்டான வித்தியாசம்.
அண்ணியின் பார்வையை வைத்தே உணர்ந்து கொண்ட சக்ரவர்ஷினி அசடு வழிய “அண்ணா அளவுக்கு எல்லாம் நானும் சதீஷ் அண்ணாவும் இல்ல அண்ணி. அண்ணா எப்பவுமே பெர்பெக்ட் மேன்! நாங்க இம்பெர்பெக்ட்னு பேர் போன ஆளுங்க” என்று சிரிக்க,
கணவனை பற்றி அவன் தங்கையின் வாயிலாக கேட்டதில் தானும் சிரித்தவள், “இப்ப அரேஞ் பண்ணலாமா?” என்று சுற்றி பார்வையை ஓட்டியபடி கேட்க,
“அண்ணி…” என்று மெல்ல அலறிய சக்ரவர்ஷினி “நீங்களும் அண்ணாக்கு ஏத்த பெர்பெக்ட் அண்ணியா இருப்பீங்கன்னு மணிக்கு ஒரு முறை நிரூபிக்கணுமா?” என்றவள்,
“அதெல்லாம் வேணாம். அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான். வந்தன்னைக்கே என் மருமகளை வேலை வாங்குறியான்னு டின்னு கட்டிடுவாங்க” என்று சொல்ல, அதற்கு மேல் கீர்த்தன்யாவும் கேட்கவில்லை.
சிறிது நேரம் அவளோடு அமர்ந்து கதை பேசத் தொடங்கி விட்டாள் கீர்த்தன்யா. மணி எட்டை நெருங்கியதும் வந்திருந்த சொந்தங்களும் கிளம்பி இருக்க, வீட்டினர் மட்டுமே எஞ்சி இருந்தனர்.
“சர்வாவை எழுப்பி விடுமா. அடுத்து சடங்கிருக்கில்ல” என்று இன்பவள்ளி சொல்லிச் செல்ல, இரவிற்கான ஏற்பாடு தான் என்று புரிந்தது அவளுக்கு.
அறைக்கு சென்று அவனை எழுப்பவே மனம் வரவில்லை. ஆனாலும் இன்பவள்ளி சொல்லிச் சென்றதால் மறுக்க முடியாமல் அவனை எழுப்ப அறைக்குச் சென்றாள்.
இன்னுமே தூங்கிக் கொண்டு தான் இருந்தான். மெல்ல அவனை நெருங்கியவள் அவனிடம் இருந்து வந்த மெல்லிய குரலில் வேகமாக அவனருகில் செல்ல, அவனின் அணத்தல் குரல் அப்போது தான் புலப்பட்டது அவளுக்கு.
“என்னங்க…” என்றபடி அவனை நெருங்கி தோள் தொட, பட்டென்று கைகளை எடுத்துக் கொண்டவள் பதறிப் போனாள். காய்ச்சல் கொதித்தது அவனுக்கு.
நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்துப் பார்த்தவளின் கைகள் கனலாக கொதிக்க, கண்கள் சட்டென்று கலங்கி விட்டது. “சர்வா…” என்றபடி பதறியவள், வேக வேகமாக கீழே ஓடி வர,
கண்ணீருடன் ஓடி வந்த மருமகளை கண்டு இன்பவள்ளியும் பதறிப் போனார். அவரிடம் விஷயத்தை சொல்ல வீடே பரபரப்பாகி விட்டது.
இன்பவள்ளி வந்து மகனைப் பார்க்க, காய்ச்சல் கொதித்தது கண்டு அவருக்குமே பதறி விட்டது. எழுந்து கொள்ளக் கூட முடியவில்லை அவனால்.
வடிவேலன் மருத்துவருக்கு சொல்லி வரவழைக்க கீர்த்தன்யா அழுதே விட்டாள். “அண்ணி.. ஒன்னும் இல்ல அண்ணி. சரி ஆகிடும் அண்ணாக்கு” என்று சக்ரவர்ஷினி அவளைத் தேற்ற, மருத்துவர் அவனை பரிசோதித்து பெரும் அதிருப்தியுடன்,
“ஹை ஃபீவர். நல்ல ரெஸ்ட் தேவை. இஞ்செக்ஷன் போடுறேன். கவனமா பாத்துக்கோங்க. ரெண்டு நாளைக்கு ரசம், கஞ்சி இந்த மாதிரி கொடுங்க” என்றவர் ஊசியை செலுத்தி மருந்தினையும் கொடுத்து விட்டுச் சென்றார்.
மருத்துவர் சென்றதும் மகனுக்கு கஞ்சியை தயார் செய்து வந்து கொடுத்த இன்பவள்ளி, “இதுக்கு தான் சொன்னேன்.. மும்பை போக வேண்டாம்னு. எவனாவது அடுத்த நாள் கல்யாணம் வச்சிட்டு முதல் நாள் இப்படி மும்பை போய் நடு ராத்திரி வருவானா? இப்பப் பாரு.. நெருப்பா கொதிக்குது” என்று திட்டித் தீர்த்து விட்டார்.
“அம்மா…” என்று சர்வேஷ்வரன் மெல்ல அவரை அழைக்க, “எதாவது பேசுன பாத்துக்க! அப்படி என்ன பெரிய பொடலங்கா மீட்டிங்! இப்ப பாரு எப்படி சுடுதுன்னு.. ஐய்யோன்னா வருமா.. அம்மான்னா வருமா” என்று வழக்கத்திற்கு மாறாக மகனை அன்று அவர் காய்ச்சி எடுத்து விட்டார்.
மெல்லிய சிரிப்புடன் அவரை பார்த்தவன் கலங்கி போய் நின்றிருந்த மனைவிக்கு கண்ணாலேயே ஆறுதல் சொன்னான்.
அனைவரும் சென்றதும் இன்பவள்ளி மருமகளிடம் “இன்னைக்கு சடங்கு எதுவும் வேண்டாம்மா. அவனுக்கு உடம்பு சரியானதும் பாத்துக்கலாம். உங்க வீட்ல போன் பண்ணி நான் சொல்லிடுறேன். சார்வாக்கு சரி ஆனதும் ரெண்டு பேரும் மறு வீட்டுக்கு போங்க” என்று சொல்லி விட்டுச் சென்றார்.
அவர் சென்றதும் கண்ணீருடன் இருந்த மனைவியை தன்னருகே தலை அசைத்து அழைத்தான்.
“இப்போ எதுக்கு அழுகை?” என்று அவளின் கைகளை பற்றிக் கொள்ள, இன்னுமே சூடாக தான் இருந்தது.
“பயந்தே போனேன் தெரியுமா?” என்று மெல்ல விசும்பியவளை “ப்ச்.. டிராவல் டயர்ட் தான் கீர்த்துமா. இன்னைக்கு ஃபுல்லா அலைச்சல் வேற” என்று அவளை சமாதானம் செய்ய ஒவ்வொன்றாய் சொல்லியவன்,
“இஞ்செக்ஷன் போட்டிருக்கு தானே. சரி ஆகிடும்” என்றான் அவள் கைகளை வருடிக் கொடுத்தபடி.
“ஹ்ம்ம்” என்றவள் அவனுக்கு கஞ்சியை எடுத்துக் கொடுக்க, “பாலும் பழமும் சாப்பிட வேண்டிய நேரத்துல சுடு கஞ்சி… சத்திய சோதனைடா சர்வா” என்று சொன்னவன் குறும்பாய் புன்னகைக்க,
“சாப்பிடுங்க முதல்ல. டேப்லெட் போடணும்” என்று பேச்சை மாற்றினாள் கீர்த்தன்யா.
“ம்ம்.. விவரம் தான்” என்றவன் கஞ்சியை உண்டு முடித்ததும் மாத்திரையை கொடுத்தாள்.
“நீங்க தூங்குங்க” என்றபடி போர்வையை எடுத்து அவனுக்கு போர்த்தி விட, அவளின் கைகளை பற்றிக் கொண்டு கழுத்திற்கு அடியில் வைத்துக் கொண்டவன் “நீ சொன்ன மாதிரி இன்னைக்கு நாள் முழுசும் சமாளிக்க முடியாம போய்டுச்சே கீர்த்துமா” என்றான் கள்ளப் புன்னகையுடன்!
கைகளை உருவிக் கொள்ள முயன்றபடி “நல்லா ரெஸ்ட் எடுங்க நீங்க. இல்லேன்னா அத்தை திட்டின மாதிரி திட்டிடுவேன்” என்று மெல்ல அதட்ட, “ஓய்.. முதல் நாளே அதிகாரமா?” என்றவன் கண் சிமிட்ட,
“இல்ல.. முதல் நாளே பயம்! அத்தனை பயம் காட்டிட்டீங்க. நான் வந்து தொட்டதும் பேச்சு மூச்சே இல்ல. எப்படி துடிச்சு போனேன் தெரியுமா? அவ்ளோ சுட்டது உடம்பு. இப்பவும் பாருங்க.. கை சுடுது” என்று அவன் கழுத்திற்கு அடியில் பிடித்து வைத்திருந்த தன் கைகளை பார்த்து சொன்னவளுக்கு இன்னுமே குரலும் உடலும் நடுங்கியது.
கண்கள் மீண்டும் கலங்கும் போல் இருக்க, “டேய் கீர்த்து.. என்ன நீ?” என்று எழுந்து கொள்ள பார்த்தவனை தடுத்தவள், “ப்ளீஸ்… தூங்குங்க. நீங்க சரியான தான் எனக்கு நிம்மதியா இருக்கும். இப்படி சுருண்டு போய் உங்களை பாக்கவே முடியல. நல்லா தூங்குங்க. வேற எதுவும் பேசக் கூடாது” என்று அதட்டலும் அக்கறையுமாய் சொன்னவளை இப்போதே அள்ளிக் கொண்டு தனிமை கூடிய இடத்திற்கு சென்று விட்டால் என்ன என்று தான் தோன்றியது அவனுக்கு.
“சரிங்க மிசஸ். சர்வேஷ்வரன்” என்றவன் பற்றிய கைகளை விடாமல் இருக்க, அதில் அவனை பார்த்தவளிடம் “என்னைக்கும் விடுற எண்ணம் இல்ல கீர்த்துமா” என்றபடி புறங்கையில் இதழ்களை ஒற்ற, அப்படியே அவனோடு ஒட்டிக் கொண்டால் என்ன என்று தான் தோன்றியது அவளுக்கும்.
இப்படி பார்வையால்.. வார்த்தையால்.. அவளை கொஞ்சம் கொஞ்சமாக அவஸ்தை பட வைத்தவனிடம் உள்ளம் அதன் வசம் இழந்து போக, “தூங்குங்க” என்றாள் கைகளை விலக்கிக் கொள்ளாமல்.
“ஹ்ம்ம்…” என்றவன், “இன்னைக்கு சமாளிக்க முடியலன்னாலும் நான் தேறி வந்ததும் சமாளிச்சுக்கவ தானே?” என்று சீண்டியவனின் பேச்சில் முகம் சிவந்து விட்டது அவளுக்கு.
“என்ன நீங்க?” என்று சிணுங்கியவளின் அழகில் இன்று தனக்கு இப்படி உடல் நலமில்லாமல் இருக்க வேண்டாமே என்று தோன்றி விட, “ப்ச்… வெரி அன் லக்கி!” என்று சொல்லி உதட்டினை பிதுக்க,
“கண்ணை மூடுங்க” என்றவள் சொன்னதை செய்தும் காண்பிக்க, மின்னிய நட்சத்திரமாய் கண் முன்னே இருந்தவளை பார்வையால் வருடிக் கொள்ள மட்டுமே முடிந்தது அவனால்.
வேறு லகுவான புடவைக்கு மாறி இருந்தாள். கூந்தலில் மல்லிச் சரம் வாடியும் வாடாமலும் இருக்க, அவளின் வாசத்தோடு மல்லியின் வாசமும் மனதை மயக்கியது.
“அழகு கீர்த்துமா நீ!” என்று சொல்லி மீண்டும் புறங்கையில் இதழ் ஒற்ற, “தூங்கணும் நீங்க. ரெஸ்ட் தேவை” என்று முயன்று சாதாரண குரலில் சொன்னவளுக்கு தன் உணர்வுகளை உள்ளங்கை வழி அவளுள் கிடத்திக் கொண்டிருந்தான் சர்வேஷ்வரன்.
அவனோடு சரிந்து அருகில் படுத்துக் கொண்டவள் கைகளை மட்டும் விடவில்லை அவன். அவளும் பின்னிழுத்துக் கொள்ள முயலவில்லை.
இருவரின் முதல் இரவும் முத்தங்களின் சத்தங்கள் இல்லாத இரவாகிப் போய் இருந்தாலும், உள்ளங்களின் நேசச் சந்தங்களில் ஆனந்தமாய் திளைத்திருந்தது அந்த ஆலிங்கனத்தின் சிணுங்களில்லாத நிசப்த இரவு!