அடுத்த மூன்று நாட்களும் காய்ச்சல் வாட்டி எடுத்து விட்டது சர்வேஷ்வரனை. உடலும் அத்தனை அலுப்புற்றிருக்க உடல் நலம் சீராகும் வரை ஓய்விலேயே தான் இருந்தான்.
மறு நாள் விருந்திற்கு வர முடியாது என்று இன்பவள்ளி போன் செய்து அனைத்தையும் சொல்ல, கீர்த்தன்யாவின் மொத்த குடும்பமும் அவனைக் காண வந்து விட்டனர்.
மாப்பிள்ளைக்கு உடல் நலம் சரியில்லை என்றதும் அனைவருமே வந்திருக்க, அத்தனை பேரும் ஒன்றாக வந்ததும் தான் மணிகண்டன் அதனை உணர்ந்தார்.
அதுவும் மகளுக்கு திருமணமான மறு தினமே இப்படி சம்மந்தி வீட்டிற்கு நான்கு மாப்பிள்ளைகளின் குடும்பத்தோடு வந்து நிற்பது சிறிது சங்கடமாக இருக்க வடிவேலனிடம் “மாப்பிள்ளைக்கு முடியலன்னதும் அவசரத்துல ஒன்னும் புரியல சம்மந்தி. அதான் எல்லாரும் வந்துட்டோம்” என்று சங்கடமாய் சொல்ல,
“இதிலென்ன அண்ணே இருக்கு? இவளோ சொந்தமும் வர என் பையன் தான் கொடுத்து வச்சிருக்கணும். இதுக்கு போய் சங்கடப் பட்டு விளக்கம் சொல்லிக்கிட்டு” என்று இன்பவள்ளி உரிமையுடன் சொல்ல, அத்தனை ஆசுவாசம் அனைவருக்குமே.
சர்வேஷ்வரனால் நம்பவே முடியவில்லை அனைவரும் வந்திருப்பதை கண்டு. மனைவி அவன் பார்வையிலேயே புரிந்து கொள்ள, “அது.. கல்யாணமான அடுத்த நாளே இப்படில்ல… அதான் எல்லாரும் வந்துட்டாங்க. பயந்திருப்பாங்க” என்றாள் கீர்த்தன்யாவும்.
“அது ஓகே கீர்த்து.. சாதாரண காய்ச்சல் தானே.. அதுக்கு ஏன் இவளோ பதறனும் எல்லாரும்” என்றவன் லகுவாய் சொல்லி விட,
“உங்களுக்கு சாதாரண காய்ச்சல்! ஆனா, எங்க எல்லாருக்கும் சாதாரண காய்ச்சலா எடுத்துக்க முடியாது. இப்படி கல்யாணத்தனைக்கே இழுத்து வச்சிருக்கீங்க” என்று சிறு முறைப்புடன் சொல்லியவளின் பாவனையில் சிரித்து விட்டான் சர்வேஷ்வரன்.
“சிரிக்ககாதீங்க நீங்க! டென்ஷன் ஆகுது. கண்ணெல்லாம் இன்னும் சிவந்து போய் தான் இருக்கு. நல்லா ரெஸ்ட் தேவை” என்று அவனுக்கு பாடம் எடுக்க,
பெரு மூச்சை விட்டுக் கொண்டு “ஆமாமா…. ரெஸ்ட் தேவை தான். அப்ப தானே அடுத்து பிரிஸ்க்கா எல்லா வேலையும் செய்ய முடியும்” என்று சொன்னவனின் குரல் மாற்றமும் விஷமமான பேச்சும் பிடிபட,
“உங்களை….” என்றவளுக்கு வெட்கத்தில் அடுத்து பேச்சு வரவில்லை. அவனின் சீண்டல்களும், பேச்சுகளும் முகம் சிவக்க வைத்தாலும் உள்ளுக்குள் அவனின் உடல் நிலையை எண்ணி மனவருத்தம் தான்.
“சரி நீங்க ரெஸ்ட் எடுங்க. மேக்சிமம் நைட் தான் எல்லாரும் கிளம்புவாங்கன்னு நினைக்கிறேன். அது வரை வீட்டை சுத்தி காட்டி, அக்காங்க பசங்க கூட விளையாண்டு பொழுதை போக்க வேண்டியது தான்” என்று உற்சாகமாய் சொன்னாள் கீர்த்தன்யா.
“கல்யாணமான பொண்ணு.. விளையாடப் போகுது” என்று சர்வேஷ் கிண்டல் செய்தாலும் அவளின் தனிமையை உணர்ந்து கொண்டான்.
தானும் இல்லாமல் அவளும் மிகவும் சிரமமாக தான் உணர்கிறாள் என்று புரிந்தது. எனவே, அன்னையிடம் சொல்லி சில மணி நேரங்களில் கிளம்ப இருந்தவர்களை இரண்டு நாட்கள் தங்கி விட்டுத் தான் போக வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தான்.
அவன் சொல்வதற்கும் முன்பே இன்பவள்ளி இதனைச் தெய்வானையிடம் சொல்லி இருக்க, அவர் பாவம் என்ன செய்வார்?
கணவனிடம் சென்று சொன்ன போது, “ரெண்டு நாள் இவளோ பேரும் இங்க இருந்து அவுங்களுக்கு தொந்தரவு தரக் கூடாது தெய்வா. நைட்டு கிளம்பிடனும்” என்று சொல்லி விட்டார்.
தெய்வானையும் இதை யோசித்து தான் இன்பவள்ளியிடம் பதில் சொல்லி இருக்க, “அதெல்லாம் ஒரு சிரமமும் இல்லை. பம்பரமாக வேலை பாக்க ஆளுங்க இருக்காங்க. எங்க ஹோட்டல் சமையல் நீங்க சாப்பிட்டது இல்ல தானே. ரெண்டு நாள் இருந்து சாப்பிடுங்க. இதென்ன வந்தன்னைக்கே கிளம்புறது” என்று சொல்லியும் விட, யாராலும் மறுக்க முடியவில்லை அவரின் அன்புக் கட்டளையை.
ஆனால், இரண்டு நாட்கள் இருக்கவும் முடியாது என்று உறுதியாக சொல்லி விட்டவர்கள் அன்று இரவு மட்டும் இருந்து விட்டு மறு நாள் காலை கிளம்பி இருந்தார்கள்.
மூன்றாம் நாள் காலை சர்வேஷ்வரனின் உடல் நிலை சீராகி இருந்தது. மறுவீட்டு விஷேத்திற்கு இருவரும் அன்று கிளம்பி இருக்க, தானே காரை ஓட்டிச் செல்வதாக சொன்னவனிடம் “ட்ரைவர் வரட்டுமே. உனக்கு இப்ப தான சர்வா சரி ஆகி இருக்கு” என்றார் இன்பவள்ளி.
“இட்ஸ் ஓகேமா. பொள்ளாச்சி கொஞ்ச நேரம் தான் டிராவல். ட்ரைவ் பண்ண முடியும்” என்றவன் மனைவியுடன் கிளம்பி விட்டான்.
பொள்ளாச்சியில் விருந்து தடல்புடலாக இருந்தது. அத்தனை கவனிப்பு மகளுக்கும் மாப்பிள்ளைக்ககும். சிறப்பாகவே விருந்தும் முடிய, மீண்டும் கண்ணீருடன் தாய் வீட்டை விட்டு பிரிந்து வந்தாள் கீர்த்தன்யா. கிளம்பும் நேரம் கணவனிடம் “ரெண்டே ரெண்டு செடிங்க மட்டும் எடுத்திட்டு வரட்டுமா” என்று பாவமாக கேட்க, உருகி விட்டது அவனுக்கு.
இந்த செடிகளுடன் அவளின் நெருக்கத்தை கண்டவனுக்கு அந்த பூக்களின் மேல் சிறு பொறாமை கூட வந்து விட்டது.
“கீர்த்தி…” என்று மணிகண்டன் மகள் கேட்டதில் கண்டிப்புடன் அதட்ட, “இதிலென்ன மாமா” என்றவன், “எவ்வளவு எடுத்துட்டு வரணுமோ வா கீர்த்துமா” என்று சொல்லி விட்டான் கணவன்.
இரண்டு செடிகளை மட்டுமே எடுக்க வேண்டும் என்று எண்ணியவள் ஆறு செடிகளை தூக்கிக் கொண்டு கணவனின் உதவியுடன் காரின் பின்னே வைத்தாள்.
“அங்க போய் கீழ கார்டர்ன்ல வச்சுக்கலாம்” என்று சர்வவேஷ்வரன் சொல்லி விட, அத்தனை மகிழ்ச்சி அவளுக்கு.
சொன்னது போலவே இல்லம் வந்ததும் அந்த பூந்தொட்டிகளை எல்லாம் கீழே உள்ள கார்டர்னில் கணவனின் உதவியுடன் வைத்தும் விட்டாள். அங்கேயும் சிற்சில செடிகள் இருந்தது தான். ஆனால், எதுவும் ரோஜாக்கள் இல்லை. பூக்கள் இல்லை. அனைத்தும் பச்சை நிறம் கொண்ட அலங்கார செடிகளாக மட்டுமே இருந்தன.
இப்போது அவைகளுக்கு மத்தியில் ஆறு பூந்தொட்டிகளை வைத்ததும் அத்தனை அழகாய் இருக்க, “அழகா இருக்குள்ள” என்றவள் கையோடு அதனை புகைப் படமும் எடுத்துக் கொண்டாள்.
அதனைக் கண்டவன், “நீ நில்லு உன்னையும் சேர்த்து எடுக்கிறேன்” என்று சொல்லி அவளையும் எடுக்க, அவனோடு இணைந்து நின்று செல்ஃபியும் எடுத்துக் கொண்டாள்.
அப்போது தான் கல்லூரி முடித்து வீட்டிற்குள் வந்த சக்ரவர்ஷினி அண்ணனும் அண்ணியும் நின்று புகைப்படம் எடுப்பதை கண்டு “விருந்துக்கு போய்ட்டு வந்தாச்சா” என்றபடி அவர்களை நெருங்கியவள், ரோஜா செடிகளை கண்டு
“ஹை இங்கேயும் ரோஸ்ஸா.. இன்னும் நிறைய வாங்கி வைக்கலாம் அண்ணி. இந்த வீக் சண்டே நர்சரி போய் வாங்கிட்டு வரலாம்” என்று சொல்ல, கீர்த்தன்யா முகத்தில் அத்தனை சந்தோஷம்.
“கொடுங்க அண்ணி.. நான் பிக் எடுக்கிறேன் நீங்க அண்ணா கூட நில்லுங்க” என்றவள் இருவரையும் இணைத்து புகைப்படங்கள் எடுத்தாள்.
எடுத்ததும் அவளின் கண்ணே அதனை ரசிக்க, “சுத்தி போடணும் அம்மா கிட்ட சொல்லி. நானே கண்ணு வைக்கிறேன்” என்று வேறு சொல்ல, இருவரின் முகத்திலும் அவளின் பேச்சைக் கேட்டு புன்னகை அரும்பியது.
“அண்ணி இப்பவாச்சும் உங்க இன்ஸ்டாக்கு (Instagram) ரெக்வெஸ்ட் கொடுக்கவா?” என்று குறும்பாய் கேட்க,
“ஓ.. தாராளமா தரலாமே” என்ற கீர்த்தன்யா அவளை தன் நட்பு வட்டத்தில் இணைத்துக் கொள்ள, அவளின் கணக்கினை திறந்து பார்த்த சக்ரவர்ஷினி,
“ப்பா… எல்லாமே ரோஸ் தானா” என்று சொல்லி புன்னகைக்க, ஆமாம் எனும் விதமாய் தலை அசைத்த கீர்த்தன்யா கணவன் பார்ப்பதை உணர்ந்து, “உங்க கிட்ட காட்டணும்” என்க, மெல்ல தலை அசைத்துக் கொண்டான்.
மூவரும் பேசியபடி வீட்டிற்குள் செல்ல, சிறிது நேரம் ஓய்வெடுத்து கொண்ட பின்னர் அன்றைய இரவு சாந்தி முகூர்த்தத்திற்கான ஏற்பாட்டினை செய்திருந்தார் இன்பவள்ளி
மருமகளை இன்பவள்ளியே அலங்கரித்து தயார் செய்தார். அவளிடம் இருந்த மெல்லிய பயமும் படபடப்பும் கண்டு “சர்வேஷ் நிச்சயம் புரிஞ்சு நடந்துப்பான் கீர்த்தி” என்று சொல்ல, மெல்ல தலை மட்டுமே அசைத்துக் கொண்டாள் கீர்த்தன்யா!
திடமாய் தன்னை காட்டிக் கொள்ள முயன்றாலும் ஏனோ சிறு பயம் அவளுள்! நல்ல நேரம் பார்த்து அறைக்கு வந்ததும் கால்களை எட்டி உள்ளே வைக்கவே அத்தனை தயக்கம்!
இன்று விருந்திற்கு சென்ற போது தாய் வேறு அத்தனை அறிவுரைகள் இதனை குறித்து வழங்கி இருக்க, மெல்ல வியர்க்க ஆரம்பித்தது.
நகர மறுத்த கால்களை இழுத்து செல்லும் படி மெல்ல கதவினை திறக்க, உள்ளே அலங்காரம் வஞ்சனை இன்றி இருந்தது.
அதைக் கண்டதும் இன்னும் படபடக்க, கண்களால் மெல்ல கணவனை துழாவினாள். பால்கனி கதவும் மூடி இருக்க, “எங்க ஆளைக் காணோம்?” என்று வாய் விட்டே சொன்னபடி முன்னே அடி எடுத்து வைக்க,
“இங்க தான் இருக்கேன் கீர்த்து” என்றபடி பின்னே இருந்து அவனின் எதிர் பாராத அணைப்பு அவளை திகைக்க செய்து துள்ளி குதிக்க வைத்தது.
கூடவே, “அம்மா..” என்று மெல்ல அலறி இருந்தாள். கணவனின் எதிர் பாராத செயலில் மேலும் படபடப்பு கூடிப் போக, உடலில் மெல்லிய நடுக்கம்!
அவளின் இடையில் பதிந்திருந்த கரங்கள் அதனை உணர, “ஹே கீர்த்து.. இப்படியா பயப்படுவ?” என்று மெல்ல சிரித்தபடி அவளை தன் புறம் திருப்ப, மனைவியின் முகம் எல்லாம் வியர்வை முத்துக்கள்!
“இப்படி பயம் காட்டுறீங்க?” என்று அவள் பாவமாய் சொல்லியே விட, “ஊஃப்… நானும் பாக்குறேன்? வந்தன்னைல இருந்து இதான் சொல்றா இந்த கீர்த்தி பொண்ணு! நான் என்ன பயம் காட்டுறேன் உன்னை? காய்ச்சல் வந்தா பயம் காட்டிட்டேன்னு சொல்ற? இப்ப கட்டிப் புடிச்சாலும் பயம் காட்டுறேன்னு சொல்ற?” என்றவன் குறும்பாய் தலை சாய்த்து கேட்க,
“இப்படியா சொல்லாம கொள்ளாம..” என்றவள் அதற்கு மேல் முடிக்காமல் மௌனமாகி விட, “ஹ்ம்ம்… அப்ப சொல்லிட்டு கட்டிக்கிட்டா ஓகேவா கீர்த்தி பொண்ணுக்கு” என்று லகுவாக கேட்க, அவனைப் போல் அவளால் சுத்தமாய் லகுவாக இருக்க முடியவில்லை.
அவளின் பதட்டம் உணர்ந்தவன், “சரிடா வா..” என்றபடி கட்டிலுக்கு நகர்த்தி அழைத்துச் சென்றான். அமர்ந்ததும் சற்றே ஆசுவாசம் கொண்டவள், கையில் இருந்த பாலை அவனுக்கு கொடுக்க, “நீ குடி” என்று அவளுக்கு கொடுத்து தானும் குடித்துக் கொண்டான்.
அவள் கைகளை பற்றிக் கொண்டவன், “மூணு நாள் ரொம்ப படுத்திட்டனா?” என்று கேட்க, “கொஞ்சம்…” என்றவள் இப்போது நெற்றியில் கழுத்திலும் பட்டென்று கை வைத்துப் பார்க்க, அடக்கமாட்டாமல் சிரித்து விட்டான் அவளின் செயலில்.
தொட்டுப் பார்த்த அவளின் கைகளை எடுத்து இதழில் ஒற்றிக் கொண்டவன் அவளையும் அருகிழுத்து மடியில் அமர்த்திக் கொண்டான்.
அவன் செயலில் கண்கள் அவனில் அலைபாய கைகள் அவன் மார்பில் பதிந்து கொண்டது. “காய்ச்சல் இல்ல கீர்த்து. போய்டுச்சு” என்றவன் அவளின் முகத்தை நெருங்கி “இப்படி வியர்க்குது?” என்று புன்னகைக்க,
“ப.. பயம் தான்” என்றவள் மெல்ல அவன் மார்பிலேயே சாய்ந்து கொண்டாள். பயம் கொண்டவனிடமே தஞ்சம் புகுந்து கொண்ட அவள் செயலில் உள்ளம் நெகிழ்ந்தவன்,
“ஹ்ம்ம்… சரி சொல்லு மருதமலை முருகன் கிட்ட அப்படி என்ன அன்னைக்கு வேண்டிக்கிட்ட?” என்று கேட்க, சட்டென்று அவனிடம் இருந்து விலகி அவனைப் பார்த்தவளுக்கு அன்றைய தினத்தின் நியாபகம்!
“அன்னைக்கு என்னை பாத்தீங்களா நீங்க?” என்று ஆச்சர்யம் விலகாமல் கேட்க, “ஹ்ம்ம்.. ஏன் பாக்காம? எதிர்லயே தான் நின்னேன்! நீ கண்ணை மூடிட்டு எதோ தீவிரமா வேண்டிக்கிட்டு நின்ன! உன்ன மட்டுமே பாக்க வச்ச!” என்றவன்,
“ப்பா..அன்னைக்கும் சேரில எவ்ளோ அழகு தெரியுமா நீ?” என்று சொல்லியவன் உணர்வுகள் கட்டுக்குள் நில்லாமல் வெளிய வர, அதன் கனம் தாங்காமல் அவள் கன்னத்தில் இதழ்களை அழுத்தமாய் பதித்துக் கொண்டான்.
கணவனின் கன்னத்து முத்தம் மயக்கியது! கண்களை மூடிக் கொண்டவள் அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மறந்து போனவளாய் அவன் மேல் சாய்ந்து கொள்ள,
“பயம் போய்டுச்சா” என்று மெல்ல அவள் செவிகளில் தன் இதழ் உரச கேட்டவன் அவளை தன்னிலை இழக்கச் செய்து கொண்டிருந்தான்.
மெல்ல மெல்ல கைகள் மனைவி மீது இடம் மாறி தடம் மாற, “கேட்ட கேள்விக்கு பதில் வரலயே கீர்த்தி பொண்ணு கிட்ட இருந்து?” என்றவனின் செயல் அவளை இந்த உலகிலேயே இருக்க செய்யவில்லை!
பாவை கிறங்கி அவனிடம் சரண் புகுந்திருக்க, அவன் கேட்டவை எங்கே நினைவிருக்க?
“என்ன சர்வா கேட்டீங்க?” என்று மெல்ல அவள் கழுத்து வளைவில் இருந்தபடி கேட்க, “ஹோய்…” என்று அட்டகாசமாய் சிரித்தவனுக்கு அவள் குரலில் இருந்த மயக்கமும் கிறக்கமும் தான் கேட்டதையும் மறக்க செய்தது.
“ஐயம் லூசிங் மைசெல்ப் கீர்த்து” என்றவன் இதழ்கள் மெல்ல மெல்ல ஊர்ந்து தன் இணையை தேடி ஒட்டிக் கொள்ள, உடலில் உள்ள மொத்த இரத்தமும் முகம் வந்து சேர்ந்தார் போல் சிவந்து போனாள் கீர்த்தன்யா.
கைகள் அவன் கழுத்தில் மாலைச் சரமாகி இருக்க, உணர்வுகள் அவன் தந்த முத்தத்தில் எல்லைகள் மீறத் துடிக்க, முதல் காதலாட்சி அங்கே இருவரையும் ஆளத் துவங்கியது.
“சமாளிப்ப தான கீர்த்துமா” என்றவனின் ரகசிய கேள்வியில், மேலும் அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள் கீர்த்தன்யா!
அவளின் ஸ்பரிசம் அவனுக்கான பதிலை சொல்லி இருந்தாலும் “பதில் வரலயே…” என்றவன் அவளின் முகம் நிமிர்த்த முயல, “சமாளிக்க முடியாத மாதிரி நீங்க நடந்துக்க மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கை” என்றவளுக்கு நாணம் பிண்ணிக் கொண்டது.
“கீர்த்தி பொண்ணு நம்பிக்கையை காப்பாத்தனுமே…” என்றவனின் கூற்றில் அவளின் புன்னகை அவன் இதயத்தை தீண்ட, மொத்தமாய் சொக்கித் தான் போனான் அவளிடம்.
ஆசைகளின் ஆர்ப்பரிப்பில் கையோடு கை கோர்த்து மெய்யொடு மெய் சேர்த்தான்!
மொழி பேசும் அதரங்களில் மையலுடன் மையம் கொண்டவனின் முற்றுகை கீர்த்தன்யாவை திண்டாட வைத்தது.
நிஜமாகவே அவனின் இந்த பரிமாணத்தை சமாளிக்க முடியுமா என்னும் கேள்வி அவளுள் எழ, கைகள் நடுக்கத்தோடு அலைபாய்ந்தது அவனில்!
கீர்த்தன்யாவின் இடைவிடாத சிணுங்கலும், மெல்லிய மறுப்புகளும் சர்வேஷ்வரனை அவளுள் இருந்து மீள முடியாமல் திளைக்கச் செய்தது!
அவளின் நெருக்கங்கள் அவனை மொத்தமாய் பித்தம் கொள்ள வைக்க கீர்த்தன்யாவின் வெட்கச் சிதறல்கள் இன்பமாய் அவனைத் தழுவிக் கொண்டது.
இடையிடையே மெல்லிய வலி தந்த உணர்வில் அவனிடம் இருந்து விலகப் பார்த்தவளை இடைவிடாமல் இடைவெளிகளை நிறைத்து அவளின் தலை கோதி “விலகாதடாம்மா” என்று அவளிதழில் அவன் தவிப்பை முடிக்க, காயங்கள் தந்த வலியில் அவள் கண்களில் மெல்லிய நீர்ப்படலம்!
கண்ணீரும் சுவை சேர்க்கத் தான் செய்தது அந்த காதல் இரவிற்கு!
“ஹர்ட் பண்றனா?” அந்த நிதானம் இழந்த நிலையிலும் கணவனின் பதட்டமான கேள்வி உள்ளத்தில் மகரந்தத்தை பரப்ப,
“ஹ்ம்ம்.. ஆனாலும் என் சர்வாவை சமாளிக்கலாம்” என்றபடி அழகாய் அவனைத் தாங்கிக் கொண்டாள். அவள் வார்த்தைகள் மேலும் மேலும் அவள் மேல் காதலை அருவியாய் பொழிய வைக்க,
“ஐயம் லூசிங் மைசெல்ஃப் ஈவன் மோர் கீர்த்து!!” என்றபடி இடைவெளிகளை குறைத்து இன்னும் நெருக்கம் கொண்டவனின் மேல் கீர்த்தன்யாவின் தவிப்புகள் அனைத்தும் காயங்களை பதியனிட்டது.
அவள் செயலில் அழகாய் புன்னகைத்தவன், அவள் காதில் சொன்ன ரகசியத்தில் வெட்கி, சிணுங்கி, தவித்து, துடித்து அவனோடு இணைந்து தன்னை இழந்து அவனை மீட்டிருந்தாள்!
ஆலிங்கனம் மிக்க இரவு இனிமையாய் இருவரையும் தாங்கி இருக்க, மொத்தமாய் கொள்ளை கொண்ட இன்ப நிகழ்வுகள் ஒவ்வொன்றும் பூஞ்சாரலாய் அவர்களை நனைத்து விடியும் வரை அவர்களின் ஆலிங்கனத்தை அரங்கேறச் செய்தது!