ஆரோன் ரிஷபன் வந்து பேசிவிட்டு சென்று இரண்டு நாட்களும் வீட்டிற்குள்ளேயே தான் இருந்தாள் சௌபர்ணிகா.
அதற்கு மேல் தனித்திருக்க மூளையும், மனதும் மரத்துவிடுவதை போலிருந்தது.
திரும்ப திரும்ப அவளின் காதல் கண்முன் அவளை பயமுறுத்திக்கொண்டே இருக்க அதற்கு மறுநாள் கிளம்பிவிட்டாள் சௌபர்ணிகா.
வழக்கம் போல காலை கிளம்பி கீழே உணவுண்ணும் நேரத்திற்கு வந்து சேர்ந்தவளிடம்,
“இப்ப எப்படிம்மா இருக்க சௌபி?…” என்றார் ஜெயந்தன்.
சபர்மதி எதுவும் சொல்லாமல் மகளை பார்க்க அவளின் முகம் உணர்வுகளை துடைத்திருந்தது.
“ஹ்ம்ம்…” என்ற தலையசைப்பு மட்டுமே அவளிடத்தில்.
“ஷோரூம் கிளம்பிட்டியா சௌபி?…” என்றான் இஷாந்த்.
“ஆமாண்ணா…” அவனுக்கும் ஒற்றை வார்த்தையில் பதில்.
“ப்ச், அவ தான் வாயே திறக்கலையே. நீங்க ஏன்?…” என்ற சந்தனாவை இஷாந்த் முறைக்க,
“நீ சாப்பிடு சௌபி…” என்றார் சபர்மதி.
பெரியவர்களிடத்தில் சில நொடிகள் மௌனத்தில் கழிய இஷாந்தின் பிள்ளைகள் தான் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.
அவ்வப்போது சௌபர்ணிகாவையும் பேச்சில் இழுக்க அவளின் இறுக்கத்தை பிள்ளைகளிடம் காண்பிக்க முடியவில்லை.
மகளின் இளக்கம் அவர்களிடம் இருந்ததில், அளவளாவியதில் சபர்மதி நிம்மதியானார்.
ஆரோன் ரிஷபனின் பேச்சு கொடுத்த நம்பிக்கை ஒருபுறம் இருந்தாலும் சௌபர்ணிகா காட்டிய இந்த முகம் ஒருவிதத்தில் அவரை அச்சமூட்டியது.
முன்பைவிட அவள் இன்னும் உள்ளடங்கி போய்விட்டதை அவள் முகம் கண்டே கவனித்தார்.
“என்னம்மா, சௌபி இன்னும் அந்த ஆக்ஸிடன்டான ஷாக்ல இருந்து வரலையா?…” என்றான் தங்கை எழுந்துகொண்டதும் தாயிடம்.
“ஹ்ம்ம், சின்ன விபத்துன்றதால சரியா போச்சு. ஆனாலும் அந்த பயம் இருக்குமே இஷாந்த்…” என மகனுக்கு சொல்ல,
“இல்லைன்னாலும் கலகல தான் உங்க தங்கச்சி. அப்படியே சிரிச்சு சிரிச்சு உங்ககிட்ட பேசிட போறா…” சந்தனா வழக்கம் போல கேலி பேச இப்போது கோபத்தில் அப்படி முறைத்தவன் மனைவியிடம் எதுவும் பேசவில்லை.
சாப்பிட்டு முடித்து இஷாந்த் எழுந்துகொள்ள பிள்ளைகளும் கிளம்ப சந்தனாவிற்கு ஒருமாதிரியானது.
“என்னாச்சு?…” என கேட்டவளிடம் பதில் சொல்லவில்லை அவன்.
“ம்மா நான் குட்டீஸை ஸ்கூல்ல ட்ராப் பண்ணிட்டு கிளம்பறேன்…” என்று சொல்லிவிட்டான்.
சந்தனாவிடம் எதுவும் பேசாததில் அவள் முகம் வாடிவிட சபர்மதிக்கு மகளை கவனிப்பதில் அதை கவனிக்கவில்லை.
“பார்த்து போய்ட்டு வா…” என சொல்லி மகளிடம் சென்றார் அவர்.
“என்னங்க?…” என்று கேள்வியாய் அருகில் வந்தவளிடம் எதுவும் பேசவில்லை இஷாந்த்.
“என்னாச்சுங்க? என்ன எதுவும் பேசலை?…” என்று கேட்க பெருமூச்சுடன் நிமிர்ந்தவன்,
ஜெயந்தனும் எழுந்து சென்றுவிடவும் இஷாந்த் தள்ளி வந்து நிற்க அவனின் பின்னோடு சந்தனாவும் வந்து,
“ஏன் இப்படி அலையவிடறீங்க? இப்ப என்ன கோவம் என்மேல?…” என்று கேட்கையில் முகமெல்லாம் சிவந்து போனது.
“கொஞ்சநேரம் உனக்கு நான் முகம் காமிக்கிறதுக்கே இவ்வளோ பீல் பன்ற. டேபிள்ல என்ன பண்ணின?…” என்றான் கடுமையாக.
“நானா? என்ன? என்ன பண்ணேன்?…” என புரியாமல் விழிக்க,
“என்ன பண்ணேன்னு தெரியாமலா பேசின? சௌபியை கேலி பண்ணின தானே?…” என்று சொல்ல,
“அவ்வளோ தானா? நான் என்னவோன்னு நினைச்சிட்டேன்…” என்றதில் உண்மையில் இஷாந்த் அதிர்ந்து தான் பார்த்தான் அவளை.
“நான் உன்னை தப்பா கணிச்சிட்டேனோ சந்தனா?…” என்றதும் அவள் கண்கள் இடுங்கியது.
“என்ன பேசறீங்க?…”
“என்ன பேசனும்? நான் என்ன சொல்ல வரேன்னு கூட புரிஞ்சுக்காம அதையும் அலட்சியமா பேசற நீ? இதுவரைக்கும் என்னவோ பயத்துல விளையாட்டுக்கு கேலி பேசறன்னு நினைச்சா, அப்படி இல்லையோன்னு நினைக்க வச்சிட்ட இப்போ…” என்றவன்,
“இத்தனை நாள் பேசினது கூட பெருசா தோணலை. ஆனா இன்னைக்கு நீ பேசினது தப்பில்லையா சந்தனா?…” என்று சொல்ல அப்போதும் அவள் செய்தது அவளுக்கு புரியவில்லை.
“என்னங்க எப்பவும் போல தானே?…”
“அதத்தான் சொல்றேன். அப்போ இத்தனை நாளும் நீ பேசினதை நான் தான் ரொம்ப சகஜமா எடுத்துக்கிட்டேன் போல. முன்னாடியே கண்டிச்சிருந்திருக்கனும். தப்பு பண்ணிட்டேன்…” என்று சொல்ல சந்தனா முகம் மாறிவிட்டது.
“நீ ஹாஸ்பிட்டல்ல சௌபியை பார்த்த பின்னாடி இந்த ரெண்டு நாள்ல எத்தனை தடவை அவளை தேடி போய் பார்த்திருக்க?…” என்றதும் சந்தனா விழிக்க,
“என்னோட ஒருதடவை சௌபி ரூம்க்கு வந்த. அவ்வளோதான். அப்பறம் இன்னைக்கு பார்க்கற. பார்க்கும் போதாவது இப்ப எப்படி இருக்கன்னு கேட்டியா நீ?…” என்று சொல்ல சந்தனா திகைத்தாள்.
“இல்லங்க நான் எப்பவும் போல…”
“இதையே சொல்லாத சந்தனா. என்ன எப்பவும் போல? நான் கூடத்தான் உங்கம்மாட்ட அவங்க வாங்கன்னா தலையை மட்டும் அசைப்பேன். அவங்களுக்கு முடியாதப்பவும் அப்படியே இருந்தா உனக்கு எப்படி இருக்கும்? எப்பவும் போல இருக்கேன்னு நானும் இருந்தா?…”
அவன் சொல்லவருவதன் அர்த்தமே அத்தனை சொல்லிய பின் தான் சந்தனாவிற்கு உரைத்தது.
“இப்பவும் கூட நீ ஏன் சௌபியை விசாரிக்கலைன்னு நான் கேட்கவே இல்லை. ஆனா எந்தநேரம் எதை பேசனும்ன்னு உனக்கு தெரிய வேண்டாமா?…” என்றதும் கண்ணீர் வந்துவிட்டது அவளுக்கு.
“என் தங்கச்சி பேசறா, பேசறதில்லை விடு. ஆனா உனக்கு ஒன்னு தேவைன்னா அவகிட்ட தானே நீ நிக்கிற. இதை செஞ்சு குடுன்னு உரிமையா கேட்க மட்டும் தெரியுது. என்னை நச்சரிச்சு கூட்டிட்டு போய் என்ன வேணும்ன்னு இருந்து பேசற தானே? இப்ப என்னவாம்?…” என இஷாந்த் சொல்ல, விசும்ப ஆரம்பித்தாள் சந்தனா.
“ப்ச், இப்படி அழுது வைக்காத பார்த்துக்கோ. எல்லாமே அவங்கவங்களுக்கு நடந்தா தான் தெரியும். இப்பவும் நீ பேசினது சௌபிக்கோ, அம்மாவுக்கோ கேட்டிருக்காதா என்ன? நீ சொன்னியே எப்பவும் போல. அப்படித்தான் இதையும் எடுத்திருந்திருப்பாங்க…”
“ஆனா இந்த வீட்டு மருமகளா, சௌபிக்கு அண்ணியா என்ன பண்ணியிருக்க நீ? நம்ம பசங்க பேசறதும், விசாரிக்கிறதும் கூட நீ செய்யலை. எல்லாமே எல்லா நேரமும் விளையாட்டில்லை சந்தனா. பீலிங்ஸ் எல்லாருக்கும் பொதுவானது. உயிர் பயமும் தான். அவங்கவங்களுக்கு நடக்கும் போதுதான் தெரியும்…” என்று சொல்ல மௌனமாய் இருந்தாள் சந்தனா.
“உன்னை ஏன் விசாரிக்கலைன்னு யாரும் கேட்கலை. ஆனா இடம் பொருள் பார்த்து உன் கேலியை வச்சுக்கோ. எல்லா நேரமும் நான் ஈஸியா எடுத்துக்கமாட்டேன். அதுவும் சௌபி விஷயத்துல…” என்றவன் பார்வையின் எச்சரிக்கையில் சந்தனா முகம் இன்னும் கன்றிவிட்டது.
“இந்த வீட்டுல உன்னை நல்ல மருமகளா இல்லை, மகளாவே தான் நடத்தறாங்க. இங்க யாரும் உன்னோட ஆசைக்கும், சுதந்திரத்துக்கும் இடைஞ்சலா இல்லை. அது உன்னோட கையில. ஆனா மத்தவங்களோட உணர்வுகள் உனக்கு கேலி இல்லை. புரியுதா?…” என அத்தனை வருடத்திற்கும் சேர்த்து பாடம் நடத்திவிட்டு சென்றுவிட்டான் இஷாந்த்.
இதனை சௌபர்ணிகாவோடு வந்த சபர்மதியும் கேட்டுவிட ‘இது என்ன புது பிரச்சனை?’ என்று தான் நினைத்தனர் இருவரும்.
“என்னாச்சு இவனுக்கு?…” என்று சபர்மதி மகனிடம் செல்ல போக அதற்குள் இஷாந்த் கிளம்பிவிட்டான்.
“ஹாங், ஹ்ம்ம்…” என்ற சந்தனாவிற்கு இன்னும் குற்றவுணர்வு அதிகமாகியது.
‘ஆம், தான் கேட்டிருக்க வேண்டும். தவறு. தவறு’ என மானசீகமாய் தன்னையே கடிந்துகொண்டாள் சந்தனா.
“கிளம்பட்டுமா?…” என சௌபர்ணிகா கேட்க இன்னும் அதிசயமாய் இருந்தது சந்தனாவிற்கு.
“ஹ்ம்ம், ஓகே. பார்த்து ட்ரைவ் பண்ணனும்…” என தானாகவே இதையும் சொல்ல சபர்மதிக்கு சிரிப்பு தான் வந்தது மருமகள் இதையுமே நடுக்கத்துடன் சொல்லியதில்.
“இதை நீ அதட்டியே அவகிட்ட சொல்லலாம். எவ்வளோ நாள் இப்படி சொல்ல? எனக்கடுத்து நீ தானே பார்த்துக்கனும்? இப்படி இருந்தா உன்னை நம்பி விட்டுட்டு போகலாமா என் பிள்ளைங்களை?…” என்றதும் சந்தனா விழிக்க,
“என்ன பார்க்கிற? இன்னும் கொஞ்சம் சத்தமா பேசனும். புரியுதா?…” என்றும் அவர் சொல்ல,
“ஹ்ம்ம், சரிங்கத்தை…” என்றவள் எந்த பக்கம் ஓடலாம் என்று பார்க்க,
“நீங்க பேசிட்டிருங்க. நான் கிளம்பறேன்…” என்று சௌபர்ணிகா புன்னகையுடன் நகர்ந்துவிட்டாள்.