“நானும் சௌபி கூட ஷோரூம் போய்ட்டு என் பிராஞ்ச் போயிடறேன். நீ கிளம்பி உன் புருஷனை போய் பாரு. அவனுக்கு ஹெல்ப் பண்ணு. புரியுதா?…” என அதட்டிவிட்டு மருமகள் சரி என்றதும் கிளம்பி வெளியே வந்தார்.
இப்போது மகளின் முகம் பழையபடி மாறிவிட பெருமூச்சுடன் அந்த வாகனத்தின் சாவியை ஓட்டுனரின் கையில் இருந்து தான் வாங்கிக்கொண்டார்.
“நான் ட்ரைவ் பன்றேன்…” என்று சொல்லி அமர்ந்துகொள்ள சௌபர்ணிகா எதுவும் பேசவில்லை.
காருக்குள் அவ்வளவு அமைதி. வீதியை கடந்து போக்குவரத்தில் வாகனம் கலந்ததும் தான் சபர்மதி மகளை திரும்பி பார்த்தார்.
“சந்தனா பேசினதுல எந்த வருத்தமும் இல்லையே சௌபி…” என்று ஆரம்பிக்க,
“எனக்கென்ன வருத்தம்? எப்பவும் போல தானேம்மா?…” என இலகுவாய் அதனை சொல்ல,
“எப்பவும் இப்படி பேசாத இஷாந்த் ரொம்ப பேசிட்டான்…” என்றார் சபர்மதி யோசனையுடன்.
“எல்லாருக்குமே கோபமாக ஏதாவது ஒரு இடம் இருக்கும். அண்ணா பேசிட்டான். நீங்க இதை அண்ணாக்கிட்ட கேட்கக்கூடாது…” என சௌபர்ணிகா சொல்ல,
“இது தப்பில்லையா சௌபி. அவ வேணும்ன்னு பேசலை…”
“இருக்கலாம். ஆனா இது அவங்களுக்குள்ள. தப்பு, சரி எல்லாம் அவங்களே பார்த்துப்பாங்க. நீங்க பேசவேண்டாம்…” என்றாள் இன்னும் பிடிவாதமாய்.
“ஏன்? ஏன் கேட்க கூடாது? என் மகன் தானே?…” என மகளை பேச வைத்தார்.
“ஆமா, இன்னும் எவ்வளோ நாள் மகன் மகன்னு நீங்க போய் நிப்பீங்க? அதுவும் அவங்க பர்சனல் அது. அவன் வாழ்க்கைல வர பிரச்சனையை சமாளிக்க கூட தெரியாமலா இருப்பான்? அப்பறம் எதுக்கு கல்யாணம் எல்லாம்? அவன் உங்ககிட்ட வந்து நின்னா மட்டும் பேசுங்க. அதுவும் ஒரு லிமிட்…”
“அப்படியா?…” என்ற தாயின் குரல் பேதத்தை அவள் கவனிக்கவில்லை.
“ஆமா, அண்ணா அவனுக்கு தோணினதை அண்ணிட்ட சொல்லியிருக்கான். அதுவும் நம்மளை வச்சுக்கிட்டு இல்லை. எனக்காக பேசியிருந்தாலும் அது அவங்களோட தனிப்பட்ட விஷயம். அதுல நாம போய் நியாயம் சொல்ல என்ன இருக்கு?…” என்றவள்,
“இத்தனை வருஷம் சேர்ந்து வாழ்ந்தவங்களுக்கு தெரியாதா அதை எப்படி ஹேண்டில் பண்ணனும்ன்னு? அண்ணிக்குமே அண்ணா சொன்னதுல கில்ட்டியா இருந்திருக்கு. அவங்க அண்ணா சொல்ல வரதை புரிஞ்சு தான் அமைதியா இருந்திருக்காங்க. விடுங்க, அவங்க பார்த்துப்பாங்க…” என்று சௌபர்ணிகா சொல்லி முடிக்க,
“உன் அண்ணனோட வாழ்க்கையை இவ்வளோ பாஸிட்டிவா இதுதான், இப்படித்தான் இருக்கும்ன்னு சொல்ற நீ உன் வாழ்க்கையை ஏன் சிக்கலாக்கிக்கற சௌபி? அந்த தெளிவும், நம்பிக்கையும் ஏன் உன் விஷயத்துல உனக்கு இல்லை?…” என்றார் சபர்மதி.
சம்மட்டியால் அடித்ததை போல் தான் இருந்தது சௌபர்ணிகாவிற்கு. அவர் சொல்லியதன் உண்மை அதிகத்திற்குமே சுட்டுவிட்டது.
ஆசை தான். சமாளித்துக்கொள்ளலாம் என்னும் அளவில்லாத ஆசை தான். ஆனால் அது தன்மீதான ஆரோனின் காதலை அடியோடு சிதைத்துவிட்டால்?
ஈகோ, கோபம் இதனுடனே அவன் தன்னை விலகி சென்றது அவளுக்கு மரண வலியை தான் தந்துகொண்டிருந்தது.
அதையும் தாண்டிய தன் பார்வையின் மாற்றத்தினால் இருவரின் பிரிவு என்றால்?
அந்த காதல் செத்துவிடுவதற்கு முன் அவளல்லவா உயிரோடு மடிந்து போவாள்.
சபர்மதியிடம் எதுவும் பேசவில்லை. மௌனத்தை கேடையமாக்கிக்கொள்ள அடுத்த சில நாட்களுமே இருவருமாக கடைக்கு வருவதும், கிளம்புவதும் என்று வாடிக்கையானது.
ஒவ்வொரு நாளும் சௌபர்ணிகா அவளின் வட்டத்தை சுருக்கிக்கொண்டே தான் வந்தாள்.
நித்தமும் அவனை நினைக்க கூடாதென்று எண்ணினாலும் அவளறியாமல் கூட ஆரோன் ரிஷபனின் சம்பந்தப்பட்ட எல்லாம் அவளின் கவனத்திற்கு வந்துவிடும்.
நொடிக்கு நொடி நரக வேதனை. அதுவும் இப்போது இருவருக்குள்ளும் எதுவுமில்லை என்று அவன் சொல்லியதில் உண்டான ரணம் அவளை உயிரோடு எரித்தது.
“இந்த டைம் ரீ ஸ்டாக் பண்ணவேண்டிய சேரீஸ்…” என துளசி காண்பித்தது அனைத்தும் ஆரோன் ரிஷபன் அங்கே நடத்திய நிகழ்ச்சியில் அவன் கட்டிவிட்டு காண்பித்தது.
தலையை பிடித்துக்கொண்டாள் சௌபர்ணிகா. எங்கு காணினும் அவன் பிம்பம் மட்டுமே.
‘அத்தனை சீக்கிரம் என்னுலகை விட்டு வெளியேற விடுவேனா?’ என்பதை போல அவள் விலக நினைத்த பாதைகள் அனைத்தையும் புன்னகையால் கட்டிவைத்தான்.
மூச்சு முட்டியது. அதன் எதிரொலியாய் அவளின் கடுமை கூட முகத்தில் சிரிப்பென்பதே அரிதானது.
எல்லாவற்றிற்கும் மேல் அவன் அவளை தேடவே இல்லை. அழைக்கவில்லை. ஒருவேளை நினைக்கவே இல்லையோ? நெஞ்சம் துடித்தடங்கியது.
ஆரோன் ரிஷபனின் வலைதள கணக்கை பார்வையிட அது நண்பர்கள், அவனை தொடர்பவர்கள் மட்டுமே காணக்கூடியதாய் மாற்றப்பட்டிருந்தது.
அதை பார்த்தவளின் கண்கள் கண்ணீர் குளம் கட்ட சட்டென மனதை தேற்றிகொண்டு வெளியே வந்துவிட்டாள்.
‘கொஞ்ச நாள். அப்பறம் பழகிரும்’ என நினைத்தாலும் அதை நடைமுறைப்படுத்த இத்தனை சிரமங்களை மேற்கொள்ளவேண்டும் என நினைக்கவே இல்லை.
கடினப்பட்டு நாட்களை கடத்தியவளால் அதற்கு மேல் முடியாமல் மனதை அமைதிப்படுத்த தான் விரும்பும் இடம் நோக்கி புறப்பட்டுவிட்டாள்.
சௌபர்ணிகா சென்னையிலிருந்து சிரபுஞ்சி வந்து சேர்ந்து நான்கு நாட்களாகிவிட்டது.
எதற்காக அங்கே வந்தாளோ அந்த நினைவுகள் விடாமல் துரத்திக்கொண்டுதான் இன்னும் இருக்கின்றது.
அன்றைக்கும் ட்ரக்கிங் முடித்துவிட்டு ரோட்டோரம் இருந்த சிறிய உணவகத்தின் முன் இறங்கிக்கொண்டாள் சௌபர்ணிகா.
அங்கிருந்து தான் தங்கியிருக்கும் விடுதி அருகென்பதால் காரையும் அனுப்பிவிட லேசாய் மழை தூற ஆரம்பித்தது.
“சீசன் முடிய போகுது. ஆனாலும் இன்னும் மழை…” என முணுமுணுத்தபடி அந்த உணவகத்தின் முன்னிருந்த சேரில் தனது பேக்கை வைத்தவள் தனக்கு ஒரு நூடுல்ஸ் சொல்லிவிட்டு அமர்ந்தாள்.
அந்த உணவகம் வீட்டின் அமைப்பு. அதன் வெளியே பிளாஸ்ட்டிக் டேபிள், சேர் போடப்பட்டு சிறிய அளவில் நடக்கும் உணவகம்.
குளிர் காற்று மேனியை ஊசியாய் துளைக்க ஆரம்பித்தது. இரு கைகளையும் தேய்த்தபடி எழுந்தவள் அந்த இருக்கையை இரும்பு தடுப்பின் கீழ் போட்டு மழையில் இருந்து உள்ளே தள்ளி அமர்ந்தாள்.
சாரல் தான் இருந்தாலுமே பனிமூட்டமும், குளிர்ச்சியும் நடுக்கத்தை விதைக்க சூடாக டீ குடிக்கவேண்டும் போலிருக்க தனக்கு ஒரு டீயையும் சொல்லியவள் பணத்தை நீட்ட,
“பையா ஏக் சாய்…” என்ற குரலில் உடலெல்லாம் மின்சாரம் பாய்ந்த உணர்வு சௌபர்ணிகாவிற்கு.
சட்டென திரும்பி பார்த்தவள் விழிகள் பிரகாசமாய் விரிந்துகொள்ள அவளின் மகிழ்ச்சியை அந்த மலர்ந்த முகம் காண்பித்துக்கொடுக்க அருகிருந்தவன் அவளை கண்கொண்டும் பார்க்கவில்லை.
ஆரோன் ரிஷபன். தோளில் நீண்ட பேக்கை மாட்டியிருந்தவன் லேசாய் நனைந்திருப்பான் போலும்.
முன்னுச்சி முடிகளின் நுனியில் பனித்துளிகளாய் மழை துளிகள். அருகில், மிக அருகில் அவனை கண்டுவிட்டவளின் இதயம் தாளம் தப்பி துடித்தது.
“ரிஷபன்…”அவளறியாமல் அவள் குரல் சத்தமாகவே அவனிடம் சென்று சரண் புக, அவளை திரும்பி பார்த்தவன் பார்வையில் அறிமுகமற்ற தன்மை.
“ஆரோன் ரிஷபன்….” என்றான் அவளிடம்.
இதையும் எதிர்பார்க்கவில்லை. தன் மீது கோபம் இருந்தாலும் குறைந்தபட்சம் தெரிந்ததை போல பார்ப்பான் என்றால் அவளுக்கு பெருத்த ஏமாற்றம்.
அதையும் தாண்டி அழுத்தம் திருத்தமாக அவன் விரும்பிய அழைப்பை மறுத்து அவன் பெயரை சொல்லிய விதம்.
“நீங்க நீங்க எப்படி இங்க?…” என்று மனது கேட்காமல் அவள் கேட்க,
“ப்ரெண்ட்ஸ் கூட ட்ரிப்….” பட்டுக்கத்தரித்தார் போன்று அவன் பதில்.
உண்மைக்கும் இப்படி பேசுபவனிடத்தில் கோபம் தான் வந்திருக்கவேண்டும். மாறாய் தவிப்பில் உயிர் வதைபட, மனதினோரம் அவன் சொல்லியது பொய்யாக இருந்தால்?
தனக்காக வந்திருப்பானோ? நிஜமோ? என்று யோசனையுடன் அவனை பார்த்துக்கொண்டிருக்க இருவருக்கும் குடிக்க டீ வந்துவிட்டது சூடாக.
அதனுடன் சௌபர்ணிகாவிற்கு நூடுல்ஸ் சேர்த்தே வர அவன் முகத்தை பார்க்க அதற்குள் ஆரோனின் கைபேசி அழைப்பு.
“இடியட்ஸ், எங்கடா போனீங்க? இங்க தனியா மாட்டிக்கிட்டேன்….” என்று சீறியவனின் சீற்றத்தில் அவளின் மனது பொக்கென்று போனது.
“நான் இங்க ஒரு ஹோட்டல்ல இருக்கேன். ஹ்ம்ம், பக்கத்துல தான். நான் மேனேஜ் பண்ணிப்பேன். வந்து சேருங்க சீக்கிரம்…” என்று சொல்லி அழைப்பை வைத்தவன் அவளை கண்டுகொள்ளாமல் டீயை பருக சௌபர்ணிகாவிற்கு உணவு இறங்கவில்லை.
நூடுல்ஸ் ஆறியது. ஒரு ஸ்பூன் கூட இறங்கவில்லை. அங்கே அவளுக்கு பிடித்த இடம் அது.
இன்றைக்கு பெரிதாய் கனக்க உண்ண முடியாமல் தொண்டைக்குழி ஏறி இறங்க அந்த கிண்ணத்தில் இருந்ததை கிளறியபடி இருந்தாள்.
அதனை அவள் அறியாமல் கவனித்தவனுக்கு அவள் மீதான காதலும், கோபமும் பெருமளவு மூண்டது.
‘இந்த கஷ்டம், தவிப்பு தேவையா உனக்கு?’ என பல்லை கடித்தவன் அவள் உண்ணாமல் இருக்க கண்டு தனக்கும் ஒன்றை சொல்லி உணவு வரவும் வாங்கி உண்டவன் அவளுடனே எழுந்துகொண்டான்.
“ஹாங், வந்துட்டீங்களா? வரேன். சாப்பிட உக்கார்ந்துட்டேன். அதான்…” என வராத போனை காதில் வைத்து பேசியபடி எழுந்துகொள்ள சௌபர்ணிகாவும் எழுந்துவிட்டாள்.
அதற்கு மேல் அங்கே இருக்க முடியவில்லை. அவன் கண்முன்னும் இருக்க முடியாமல் எழுந்து நடக்க போனில் என்னென்னவோ பேசியபடி தான் நடந்தான் ஆரோன் ரிஷபன்.
இவன் தன்னை தான் தொடர்கிறானோ என யோசனையானவள் நடப்பதை நிறுத்தி நின்று பார்க்க அவளை தாண்டிக்கொண்டு அவன் செல்ல அதற்கும் மனம் சுணங்கியது.
“நிஜமாவே ப்ரெண்ட்ஸ் கூட தான் வந்திருக்கீங்களா?…” என்று வாய் நிற்காமல் அவனிடம் முறைப்புடன் கேட்க காதில் வைத்திருந்த போனை எடுத்தவன்,
“வாட்? கம் அகைன்?…” என்றான் அவளை போலவே முறைத்து பார்த்து.
அதில் திகைத்துவிட்டாள் சௌபர்ணிகா. இது இதுவரை அவள் பாராத அவனின் முகம்.
“ரிஷபன்…” என அவளின் அழைப்பு வர,
“ப்ச், கால் மீ ஆரோன் ரிஷபன் மேம். காட் இட்…” என்று சொல்ல கடுப்பாகி போனாள் சௌபர்ணிகா.
“ஹலோ மேன், அதுக்கும் அவசியமே இல்லை. உங்க இஷ்டமா என்ன? அதையும் நீங்களே வச்சுக்கோங்க. நீங்க சொல்ற மாதிரி எல்லாம் நான் ஏன் கூப்பிடனும்?…” என்று சொல்லியவள் வேகமாய் செல்ல அவளின் கோப சூட்டில் குளிரானவன் இதமாய் குளிர் காய இதழ்களில் மந்தகாச புன்னகை விகசித்தது.
“உன் மேன் தான்…” என்று சொல்லியவன் அவள் திரும்பி பார்த்ததும்,
“ப்ச், டேய் உன்னை தான்டா சொன்னேன். சும்மா, இங்க ஒரு டிஸ்டர்பன்ஸ். நீ சொல்லு….” என வேண்டுமென்றே அவளை வெறுப்பேற்றி முன்னே செல்ல செய்வதறியாது நின்றாள் சௌபர்ணிகா.