அலரின் பார்வை அவனை ரசித்து பார்த்தாலும், அதில் ஒரு ஆராய்ச்சியும் கூட இருந்தது. மனது சொன்னது அவன் சிரித்தாலும் அந்த சிரிப்பு என்னவோ அவன் மனம்விட்டு சிரிக்கும் மகிழ்வான சிரிப்பு போல தோன்றவில்லை. இதற்கு அவன் அதிகம் சிரித்து அலர் பார்த்ததில்லை, ஆனாலும் மனம் சொன்னது.
அவர்கள் எல்லோரும் சென்றதும், உறவுகள் சேதுபதியிடம் சொல்லிக் கொண்டு செல்ல உள்ளே வந்தனர். சேதுபதியிடம் அதிகம் யாரும் பேச மாட்டார்கள். ஆனாலும் சில சொந்தங்கள் “அதெப்படி பெரியவன் இருக்கும் போது சின்னவனுக்கு பேசுவீங்க” என்று கேள்வி கேட்டு விட்டனர்.
தாரகன் அங்கே தான் இருந்தான், ஆனால் சேதுபதி கவனிக்கவில்லை. வேறு கேள்வி என்றால் பதில் சொல்லியிருக்க மாட்டார். ஆனால் அவரின் பேரனுக்காக அவரிடமே சண்டையிடுகிறார்கள். அப்போது பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறார் தானே.
அதனால் “டாக்டர் பொண்ணு, நிறைய படிச்ச பெரிய வேலை இருக்குற பையனா எதிர்பார்த்து இருக்கலாம். அதனால சட்டுன்னு விசாகன் தோணினான். என்ஜினியருக்கு படிச்சிருக்கான், கூட பெரிய ஷோ ரூம் வெச்சிருக்கான், இளவரசி சம்மதம் சொல்லணுமேன்னு சொன்னேன். ஆனா எனக்குத் தெரியலை, அவளுக்கு அந்த பையனை இஷ்டம்னு” என்று பதிலுரைத்தார்.
முதல்ல “தாரகனுக்கு பொண்ணை பார்த்து முடிங்க, வயசாகுதுல” என்று சொல்லிச் சென்றனர்.
ஜெகதா முகத்தை தூக்கி வைத்து இருந்தவர் எல்லோரும் செல்லவும், சேதுபதியிடம் சண்டைக்கு வந்து விட்டார் “எப்படிப்பா நீங்க இப்படி பண்ணலாம், நேத்து வந்த பேத்தி உங்களுக்கு முக்கியமா போயிட்டா. அவ சம்மதம் சொல்லணும்னு அவசரமா விசாகன் பேரைச் சொல்லி, இப்போ என்ன ஆச்சு? பெரியவன் இருக்க சின்னவனுக்கு எதுக்குன்னு கேட்டு அதுக்கு நீங்க ஒரு பதில் சொல்லி, பெரியவன் மனசு என்ன பாடுபடும்?” என்று கேட்டு நின்றார்.
“மா, விடுங்க” என்று தாரகன் தான் சமாதானப் படுத்தும்படி ஆகிற்று. “அவர் பேத்திக்கு அவர் மாப்பிள்ளை பார்த்தார். அதுல நான் பொருந்தலை, அவ்வளவு தான்” என்று சாதாரணம் போல அவன் சொல்ல…
சேதுபதி அவனை தான் பார்த்தார். வீட்டினர் முன் பேச விருப்பமில்லை, தனியாய் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தார். தாரகன் புரிந்து கொள்ளுவான் என்று நினைத்தார். அவனுக்கு கோபம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. சேதுபதிக்கு அந்த நிமிடம் அந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்க என்று தான் ஓடியது.
எல்லோரும் தாரகன் முகத்தை முகத்தை பார்த்தனர். எதுவும் அவனிடம் இருந்து தெரியவில்லை.
உண்மையில் அவனுக்கு கோபமெல்லாம் இல்லை, வருத்தம் தான்.
“வேலையை பாருங்க, சும்மா என் முகத்தை முகத்தை பார்த்துட்டு” என்று அதட்டினான். ஏதோ ஒரு வகையில் எல்லோர் முன்னும் தாத்தா தன்னை விட்டுக் கொடுத்து விட்டதாகவே நினைத்தான்.
எந்த முடிவும் எடுக்கும் முன் எடுக்கலாமா என்று தன்னிடம் கேட்பவர், இன்று அது போல கேட்கவில்லை. ஏன் தான் மறுக்கக் கூடும் என்று நினைத்து தகவல் மட்டுமே சொன்னார். அதுவே அவனை பாதித்தது. ஆனால் எதுவும் காண்பித்துக் கொள்ளவில்லை.
பின் விசாகனிடம் “தாத்தா சொன்னதும் நீ எதுவும் மனசுல இளவரசியை நினைச்சுக்களையே” என்று கேட்க வேறு செய்ய,
“போடா டேய், யார் சொல்லியிருந்தாலும் உன் கல்யாணம் முடியாம நான் கல்யாணம் செஞ்சிருக்கவே மாட்டேன், இங்க வந்து முடியாதுன்னு தான் சொல்ல இருந்தேன். அதுக்குள்ள என்ன என்னவோ நடந்துடுச்சு. என்னோட எண்ணமெல்லாம் நீதான் இருந்த, இளவரசி, அவளோட எனக்கு கல்யாணம் எல்லாம் தோணவேயில்லை” என்றான் விசாகன்.
அதன் பின் தான் மனது சற்று ஆசுவாசமானது, கல்யாணம் அவனுக்கு ஒரு விஷயமில்லை, இப்போது இதோ உறவுகள் கேட்கின்றனரே பெரியவன் இருக்க சின்னவனுக்கு ஏன் செய்ய வேண்டும் என்று, இந்த விஷயம், தான் குறைத்து மதிப்பிடப்பட்ட விஷயம், உறவுகள் முன் கீழிறங்கி விட்ட விஷயம், மனதில் சொல்லொணா வலியை கொடுத்து இருந்தது.
இப்போது இன்னொரு விஷயம் அவனுக்குத் தெரிந்தாக வேண்டியிருந்தது. அந்த கண்ணாடி ஜாடியை யாராவது தள்ளி விட்டனரா? இல்லை தானாய் விழுந்ததா?
அகிலனை தனியாய் அழைத்து “எதுக்குடா அந்த ஜாடியை உடைச்ச?” என்று கேட்டான்.
அகிலன் அலரை விட ஒரு வயது பெரியவன், “நான் உடைக்கலை, அலர் தான் உடைச்சா. ஆனா நான் யார்கிட்டயும் சொல்லிக்கலை, யாரும் கவனிக்கலை, நான் தான் கவனிச்சேன்!”
“உடைச்சவ ஏதோ பேச வர, அவ பேசிடக்கூடாது பேசினா பிரச்சனை வேற மாதிரி ஆகும்னு தான் நான் பேசிட்டேன். இவ பேசி, நீயேன் பேசறன்னு அப்புறம் அந்த கஜேந்திரன் இவளை வம்பு செய்வான்னு நான் பேசிட்டேன்” என்றான் தெளிவாக.
“அப்போ எனக்காக பேசலை, உன் தங்கச்சி பேசக் கூடாதுன்னு பேசியிருக்க” என்று தாரகன் பேச்சை மாற்ற முற்பட்டான்.
“மாமா, உங்களுக்கு தெரியாததில்லை. ஊம்ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, அந்த கஜேந்திரன் மண்டையை உடைச்சிட்டு வர்றேன்” என்று ரோஷமாய் பேசினான்.
“ப்ச், எனக்கு தெரியாதாடா உன்னை” என்றவன், “பரவாயில்லை வளர்ந்துட்ட, சரியா ஹேண்டில் பண்ணிட்ட, அவ வேற ஒரு அதிகப் பிரசங்கி. அன்னைக்கு கிரௌண்ட்லயே அவளை கண்ட்ரோல் பண்ண முடியலை, இல்லை தேவையில்லாத பேச்சாகியிருக்கும்” என்று தாரகன் சொன்னவன்,
“வேற யார்க்கிட்டயும் சொல்லாதடா. அப்புறமா அவளைத் தட்டி வைப்போம். எல்லா இடத்துலையும் பேசிடக் கூடாது. அவளுக்கு இன்னும் நம்ம ஆளுங்களை புரியலை” என்றான் ஆதங்கமாக.
“அவங்க மூணு பேருக்குமே சொந்தங்களை பத்தி எதுவும் தெரியலை மாமா. தனியா வளர்ந்துட்டாங்க தானே. இளவரசிக்கா பரவாயில்லை. ஆனா மத்த ரெண்டு பேரும் அவங்களுக்கு தோணினதை தான் பண்றாங்க. பேசவும் யோசிக்கறதில்லை” என்று சரியாய் கணித்து சொன்னான்.
தாரகனுக்கு மனதில் பெரும் கவலையானது அகிலன் இவ்வளவு கவனித்து இருக்கிறான் என்றால், இந்த அலர் தன்னை அவ்வப்போது பார்ப்பதையும் கவனித்து இருப்பானோ என்று.
“என்ன செய்து கொண்டிருக்கிறாள் இவள்?” என்று அலர் மீது எரிச்சலாக வந்தது.
ஒரு க்ஷணம் கூட ஒரு பெண் நம்மை பார்க்கிறாள் என்ற ஒரு எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி, ஆணவம், எதுவும் இல்லை. “இவளை யாரு என்னை பார்க்க சொல்றா?” என்ற எண்ணம் தான்.
அகிலனிடம் ஒரு முன்னெச்சரிக்கையாய் சொன்னான். அவன் எதுவும் தப்பாய் எடுத்துக் கொள்ள கூடாதே, அதையும் மீறி தனக்கும் எதுவும் அலர் மீது ஆர்வம் என்று நினைத்துக் கொள்ளக்கூடாதே என்று.
“இளவரசிக்கு கல்யாணம் முடிஞ்சதும் இவளுக்கும் ஒரு நல்ல இடமா பார்த்து கட்டிக் குடுத்துடணும், இல்லை எந்த வம்பை எப்போ கொண்டு வருவான்னு தெரியாது, கொஞ்சமும் அச்சமில்லை” என்றான். ஆம்! மைதானத்தில் அத்தனை பேர் இருக்க, அவளுக்கு சிறிதும் அச்சம் என்பது இல்லையே, கண்கூடாக கண்டிருந்தான்.
அகிலனுடன் பேச்சை முடித்தவனுக்கு தனிமை தேவையாய் இருக்க, அதுவும் எல்லோரும் அவனின் முகத்தையே பார்ப்பது போன்று தோன்ற, “வந்துடறேன், சாப்பாடு வெச்சிடுங்க, வந்து சாப்பிடறேன்” என்று சொல்லி தோப்பிற்கு சென்று விட்டான்.
கயிற்றுக் கட்டிலில் வானத்தை பார்த்து படுத்தவனுக்கு ஏதேதோ யோசனைகள்.
“திருமணத்திற்கு பெண் பார்க்கலாமா” என்று அம்மாவும் தாத்தாவும் ஒரு வருடம் முன்பு கேட்ட போதே சரி என்று விட்டான். பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை, கல்யாணச் சந்தையில் தன் மதிப்பு குறைவு தான் என்று அவனுக்கு நன்றாக தெரியும்.
பெண் எப்படி இருந்தாலும் அனுசரித்து போகும் எண்ணம் தான். ஒருவகையில் விசாகனுக்கு அவசரமாய் எல்லாம் செய்ததன் காரணமும் அது தான். நாளைக்கு வருபவள் எப்படியோ? எப்படி இருந்தாலும் அவன் தன் தம்பிக்கு செய்யாமல் இருக்க முடியாது அல்லவா? ஆனால் மொத்தமும் தூக்கிக் கொடுக்க முடியாதே! இப்போது கொடுத்து விட்டானே!
அழகு, படிப்பு என்று எதிர்பார்ப்பும் இல்லை. தன்னோடு ஒத்து வாழ்ந்தால் போதும் என்று எண்ணம் தான். இப்போதைய திருமண வாழ்க்கைகள் அப்படித் தானே இருக்கின்றது. வருபவளுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து அதற்குள் தான் பொருந்தா விட்டால்.
உலக நடப்புகள் தெரியாதவன் அல்லவே!
இதுவே சேதுபதி தனக்கு ஒரு வேளை இளவரசியை பேசியிருந்தால், “தாரகன் என்ன படிச்சிருக்கான்? என்ன சொத்து இருக்கு? தனியா வேலை வெட்டி கிடையாது, இவங்க பார்த்து கொடுக்கற வருமானம் தான். அப்பா அம்மா இல்லைனதும் சுயநலமா அந்த பேத்தி வாழ்க்கையை இவனுக்கு கட்டி குடுக்க நினைச்சு இப்படி பண்றாரே” என்று குறை சொல்லியிருப்பர் அது நிச்சயம்.
வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இது என்று தெரிந்தவன்.
இவர்கள் இருப்பது சேதுபதியின் வீடு! என்ன இருந்தாலும் சுந்தரி பாட்டிக்கு அது தம்பி வீடு, ஜெகதாம்பிகைக்கு அது அப்பா வீடு, அவர்களின் வீடு அல்லவே!
இதற்க்கு வீட்டில் யாரும் சிறிது வித்தியாசம் பாராட்ட மாட்டார். ஜெகதாம்பிகை எடுப்பது தான் வீட்டின் முடிவுகள். சங்கரி பாட்டிக்கு ஊர்பட்ட வாய் இருந்தாலும் அத்தனை பேரும் அனுசரித்து போவர்.
இளையவர்கள் கூட எதுவும் சொல்ல மாட்டர். எல்லோரும் ஆண்மக்கள் என்பதால் தாரகனே அவர்களுக்கு முன் மாதிரி.
ஆனாலும் வருபவள் இந்த வீட்டில் எப்படி பொருந்துவால் என்று சொல்ல முடியாது. தனக்கு திருமணமானால் தனியாய் போய்விட வேண்டும் என்ற எண்ணம் தான், அப்படியும் ஒரு யோசனை!
திருமணம் பிறகு போனால் அவனின் வீட்டிற்கு அவனின் அம்மாவும் பாட்டியும் வருவது போல ஆகும், அப்போது மனைவிக்கு தானே முன்னுரிமை, அம்மாவும் பாட்டியும் மீண்டும் பின்னுக்கு போவர்! அதற்கு முன்பே போனால் தான் அம்மா பாட்டி வீட்டிற்கு அவனின் மனைவி வருவது போல ஆகும் என்ற யோசனை தான்.
விசாகனுக்கு தொழில் வைத்து கொடுத்த பிறகு இதைப் பார்க்கலாம் என்று யோசித்து இருக்க, அதற்குள் தான் தாய் தந்தை இறந்து இவர்கள் மூவரும் இங்கே வந்து விட்டனர்.
ஆறுமாதமாக இவர்கள் பெண் பார்க்க முயற்சிகள் எதுவும் எடுக்காமல் இருக்க இவனுக்கு வேறு யோசனை இல்லை.