இத்தனை யோசனைகள் மனதில் ஓடினாலும், அலருக்கு தன் மீது விருப்பம் இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றினாலும், அலரை ஒருக்ஷணமும் மனது நினைக்கவில்லை. ஏன் என்ற காரணம் யோசிக்க கூட மனம் விழையவில்லை.
இவன் வீடு வர பத்து மணியாக, வீடே விழித்து தான் இருந்தது யாரும் தூங்கப் போகவில்லை. ஏன் சாப்பிடவுமில்லை. சேதுபதி எட்டரை மணிக்கு உண்டு விடுவார். அவர் மட்டும். உண்டு இருக்க வேறு யாரும் உண்ணவில்லை. கருணாகரன் கூட உண்ணவில்லை இவனுக்காக காத்து இருந்தார்.
தாரகன் என்பவன் அவர்கள் எல்லோருக்கும் ஒரு வகையில் இன்றியமையாதவன். அவனின் மனது தாத்தாவின் முடிவினால் கஷ்டப் பட்டு இருக்குமோ என்ற எண்ணம் தோன்ற, யாருக்கும் அவன் வரும்வரை உண்ணப் பிடிக்கவில்லை.
அத்தனை பேரையும் ஏதோ ஒரு வகையில் இழுத்து பிடித்து வைத்திருந்தான்.
“டேய், என்னங்கடா எல்லோரும் சாப்பிடாம இருக்கீங்க, மாமா நீங்களுமா என்ன இப்படி?” என்று கடிந்தபடி உணவு மேஜையில் அமர, அடுத்த நிமிடம் ஜெகதா “டேய் உட்காருங்க எல்லோரும், பசிக்குது!” என்று அதட்டல் இட, ஆறு பேர் அமர இடமிருக்க, பாக்கி ஆளுக்கு ஒரு புறம் அமர, தனலட்சுமி பரிமாற நின்றார்.
“உட்காருங்கத்தை” என்ற விசாகன், அகிலனை கண்ணில் அழைக்க, அவர்கள் இருவரும் பரிமாற்ற நின்றனர். பிள்ளைகள் நால்வரும் செய்வர் சேதுபதி கருணாகரனை தவிர. பெண்பிள்ளைகள் இல்லை அப்போது பாட்டி அம்மா என்று எல்லோருக்கும் உதவுவர்.
அவர்கள் சொல்லவும் பெண்கள் அத்தனை பேரும் கூட உணவுண்ண அமர்ந்தனர்.
ஒரு வாய் உள்ளே போனதும் தாரகனுக்கு சட்டென்று நினைவு வர, “அவங்க மூணு பேரும் சாப்பிட்டாங்களா யாரும் அங்கே போய் பார்த்தீங்களா?” என்று கேட்டான்.
எல்லாம் முகத்தை முகத்தை பார்த்தனர் அதுவே சொன்னது யாரும் போகவில்லை என்று.
“என்ன அத்தை? நீங்க போயிருக்கணும் தானே இளவரசி அப்படி அழுதா, அவங்களும் இங்கே தானே இருந்தாங்க, சமைச்சாங்களோ இல்லையோ, இளவரசி சாப்பிடலைன்னா உடன் பிறப்பு ரெண்டும் அவளை பார்த்துட்டு இல்லை உட்கார்ந்து இருக்கும்” என்று சரியாய் கணித்து சொன்னான்.
உண்மையில் போகக் கூடாது என்றெல்லாம் இல்லை. அவர்கள் அத்தனை பேருக்கும் தாரகன் மட்டுமே கவனத்தில் இருக்க, அவன் வருவதற்கு பார்த்து அவனின் மனக் கஷ்டத்தை பேசிக் கொண்டிருக்க, அவர்கள் மூவரையும் மறந்தே விட்டனர்.
“நாங்க பரிமாறிக்கறோம், நீங்க ரெண்டு பேரும் போய் அவங்களை பாருங்க” என்று விசாகனையும் அகிலனையும் சொன்னான். தனலட்சுமி “நானும் போறேன்” என்று அவரும் சென்றார்.
சிறுவயதில் இருந்தே கூடுதல் பொறுப்புகள், சொந்த பந்தங்களை அரவணைத்து செல்லும் பாங்கு. இதனைக் கொண்டே இன்று அவனுக்காக அவனின் தாத்தாவிடமே சண்டையிட்டு சென்ற உறவுகள்.
அவனின் மனநிலை தெரியாமல் உண்ண மனமில்லாமல் அமர்ந்திருக்கும் உறவுகள்.
எல்லாம் அவனால் மட்டுமே! அவனுக்காக மட்டுமே!
சென்றவர்கள் வம்படியாய் மூவரையும் உணவுண்ண அழைத்து வந்திருந்தனர். அவர்கள் உண்ணாமல் தான் இருந்தனர்.
மூவரின் முகமும் சரியில்லாமல் இருக்க, அதுவே இங்கிருப்பவர்களுக்கு மனதை ஏதோ செய்தது. அந்த பிள்ளைகளை சென்று பார்த்திருக்க வேண்டும் அல்லவா?
இளவரசியின் முகம் அழுது அழுது வீங்கியிருந்தது. அவள் செய்தது சரியா தவறா என்று தெரியாமல், எல்லோர் முன்னும் தனக்கு இப்படி ஒரு நிலை வந்தது அவளுக்கு அவள் மீதே கழிவிரக்கமே.
“ம்ம், சாப்பிடுங்க முதல்ல” என்று தேவகி பாட்டி சொல்ல, தனலட்சுமி அவர்களுடனே அமர்ந்து கொண்டார்.
விசாகனும் அகிலனும் தான் பரிமாறினார். இளவரசிக்கு விசாகனை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை.
சூழலின் நிலைமை புரிந்த தாரகன் தான், “இளா சாப்பிடு, சும்மா அழாதே, எல்லாம் நல்ல படியா நடக்கும். எதுவும் தப்பா எல்லாம் நடக்காது. விசாகன் எல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டான். அவனுக்கு இந்த விஷயம் கூட தெரியாது. நீ சாதாரணமா இரு, யாரும் எதுவும் நினைக்க மாட்டோம்” என்று சொல்ல…
எபொழுதும் போல அலரின் பார்வை இவன் மேல் தான். இவனின் பைக் வெளியே சென்றதை கவனித்து இருந்தால், இப்போது திரும்ப வந்ததும் சத்தம் கேட்டது. ஊரடங்கி இருக்கவும், சத்தம் நன்கு கேட்டது. இவன் வந்த பிறகு இவன் சொல்லித் தான் வீட்டினர் பார்க்க வந்திருக்கின்றனர் என்று அனுமானித்தாள்.
அவளின் பார்வையை உணர்ந்த தாரகன் “அம்மாடி, இவ திரும்ப என்னை பார்க்க ஆரம்பிச்சிட்டா, இவளை என்ன பண்ண” என்று மனதிற்குள் நொந்து கொண்டான்.
இளவரசிக்காக சமாதானமாய் பேச ஆரம்பித்தான், “தாத்தாக்கு அவங்க வீட்ல குடுக்க இஷ்டமில்லை. என்ன பண்ணன்னு தெரியாம இப்படி பண்ணிட்டார். நல்ல பதிலா சொல்லுவார்” என்று தைரியம் கொடுத்தான்.
“ஆமாம் டா, உங்க பெரிய பாட்டி ரூம்ல போய் இந்த வயசுலயும் அவ உபயோகிச்ச சாமான் செட்ட பார்த்துக்கிட்டு ரெண்டு மணி நேரம் கூட உட்கார்ந்துக்கறான். சின்ன பசங்களை பிரிப்பானா இவன், அவன் முடியாதுன்னா சொன்னா நீ கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணி வெச்சிடு” என்று சங்கரி பாட்டி தாரகனை பார்த்து சொல்ல,
எல்லோருக்கும் சிரிப்பு தங்களின் தாத்தாவை இப்படி பேசுகிறார் என்று. கருணாகரன் ஜெகதாவிற்கும் கூட சிரிப்பு.
“பேசாம இருங்க அத்தை, எங்கப்பாவை டேமேஜ் பண்ணாதீங்க” என்று கருணாகரன் சலுகையாய் குறைபட, அதில் அவரின் தந்தைக்கான அன்பு மட்டுமே தெரிந்தது.
“ஆமாம், நீ உங்கப்பாவை விட்டு குடுப்பியா” என்று சங்கரி பாட்டி அவரை குறைபட, எல்லோர் முகத்திலும் புன்னகை.
ஆனாலும் அழைத்து போய் திருமணம் செய்து வைக்கச் சொல்வதா எல்லோரும் சங்கரி பாட்டியை தான் சின்னவர்கள் ஆச்சரியமாய் பார்த்தனர்.
இதற்கு கஜேந்திரன் அவர்கள் வைரி, ஆனாலும் இஷ்டப்பட்டவர்களை பிரிக்க எல்லாம் நினைக்கவில்லை சங்கரிப் பாட்டி. மாணிக்கவேலை பிடித்திருக்க, வைரவேலும் அவரின் மனைவியும் அப்படி ஒரு நம்பிக்கையை கொடுத்து சென்றிருந்தனர். இல்லையென்றால் சங்கரி பாட்டியின் வாயினில் அப்படி வராதே.
“அது என்ன சாமான் செட்டு?” என்று அலர் கேட்க…
“அதான் உங்க அப்பாவோட அம்மா, சாமிக் கிட்ட போன உங்க பெரிய பாட்டி, எங்க மாமன் பொண்ணு, அவ மேல அவனுக்கு அப்படி ஒரு லவ்வு, அவ ரூம் குள்ள நாங்க யாரும் போக மாட்டோம். அங்க இருக்குற கட்டில்ல இப்போவும் அவனுக்கு தோன்றப்போ போய் படுத்துக்குவான். அவ பொருள் அத்தனை கிடக்கு, யாரையும் தொட விட மாட்டான். ரெண்டு பீரோ முழுசும் இருக்கு, கதவை பூட்டிகிட்டு அதையெல்லாம் தொறந்து பார்த்துகிட்டு இருப்பான். வேற ஒருத்தியா இருந்தா என்ன சங்கதின்னு கேட்டிருப்பா? ஏதோ தேவகியா இருக்கவும் எல்லாம் அனுசரிச்சு போறா!” என்று தம்பியின் கதையை பிட்டு பிட்டு வைத்தார்.
சின்னவர்கள் எல்லோருக்கும் அப்படி ஒரு சிரிப்பு.
“அவரோட நான் வாழ வந்து, அது ஆச்சு அம்பது வருஷம் போல, இப்போ எதுக்கண்ணி அந்த பேச்சு” என்றார் தேவகிப் பாட்டி.
“ஆமாம், பொண்டாட்டி, புள்ளைங்க, பத்தாததுக்கு பவளக் கொடி மாதிரி அவன் பேரனுங்கன்னு யாரும் அவனை ஒரு வார்த்தை சொல்ல விடாதீங்க” என்று நொடிக்க
“பத்தாததுக்கு பவளக் கொடி” என்ற அவரின் சொலவடை பேச்சில் அப்படி எல்லோரும் சிரிக்க, இளவரசியும் சிரித்தாள்.
“டேய் யாருடா, அந்த பவளக் கொடி” என்று விசாகன் நக்கல் பேச, கபிலன் அகிலனை காண்பித்து “இவனா இருக்குமோ” என, “டேய், அது விசாகன் மாமாடா” என அவன் திருப்பி படிக்க… மூவரும் செல்லமாய் அடித்து புரண்டனர்.
“டேய், சாப்பிட்டு முடிச்சிட்டு அடிச்சிக்கங்கடா” என்று ஜெகதா பேச, தாரகன் அப்படி ஒரு சிரிப்போடு பார்த்திருந்தான்.
இப்படியான பேச்சுக்கள் இளவரசியின் மனநிலையை சற்று மாற்றியது. அவளின் முகத்தில் சிரிப்பு வர, அதுவே அதுவரை சுனங்கியிருந்த அலருக்கும் ஆதிக்கும் ஒரு தெம்பைக் கொடுத்தது.
கூடவே சங்கரி பாட்டியின் பேச்சு, என்னவோ அவரை வில்லி போல அலர் நினைத்திருக்க, அப்படி இல்லையோ அவரின் பேச்சு தான் அப்படியோ என்று தோன்றியது.
பின்னேயே நன்றாக உணவு உண்டனர். அவளின் பார்வை என்ன செய்தும் தாரகனை தீண்டித் தீண்டி செல்ல, “யாரும் பார்த்துடுவாங்களான்ற பயமில்லாம எப்படி பார்க்கறா? நமக்கு தான் யாரும் எதுவும் நினைச்சிக்குவாங்களோன்னு பயமா இருக்கு” என்று தோன்ற அவசரமாய் உணவுண்டு ஓடியே விட்டான்.
அகிலன் கண் என்று கேமரா இதை பதிவு செய்ய, மனமும் “இந்த அலர் தாரகன் மாமாவை அடிக்கடி பார்க்கறா” என்று பதிவு செய்தது.
முன்பானால் அகிலன் கவனித்து இருந்தாலும் பெரிதாய் எதுவும் நினைத்திருக்க மாட்டான். ஆனால் இன்று தாரகனை பேசும் போது அந்த ஜாடியை போட்டு அவள் உடைத்திருந்த தீவிரம், இப்போது அவளை கவனிக்க வைத்தது.