இதோ வெகு சிறப்பாக நிச்சயம் நடந்து கொண்டிருந்தது. மாணிக்கவேலிற்கும் இளவரசிக்கும்… ஒரு சனிக்கிழமை காலை நிச்சயம் நடந்து கொண்டிருக்க, திங்கள் காலை திருமணம்.
சேதுபதி பெண் வீட்டினறாய் எல்லா ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பாய் செய்திருந்தார். அப்பா அம்மா இல்லாததால் சரியாக எதுவும் நடக்கவில்லை என்று யாரும் ஒரு சொல் சொல்லக் கூடாது என்பது ஒரு புறம், இவர்கள் ஜீவாவின் மக்கள் என் பேரன், பேத்திகள் என்று ஊருக்கு காண்பிக்க வேண்டிய அவசியம் ஒரு புறம்.
எல்லாம் விட மிகப் பெரிய விஷயத்தை செய்திருந்தார். தனது மறைந்த மனைவியின் உடைமைகளை எதோ பொக்கிஷம் போல பாதுகாத்து வந்தவர், இப்போது அதை தனது இரண்டு பேத்திகளுக்கும் திருமணம் நிச்சயமானதுமே பிரித்துக் கொடுத்தார்.
ஒரு நாள் காலை வீட்டினர் அனைவரையும் அழைத்தவர், நடுக் கூடத்தில் ஜீவாவின் அம்மாவின் பொருட்களை கடை பரப்பினார்.
முதலில் வந்தது புடவைகள்…
அத்தனை பட்டுப் புடவைகள், கிட்ட தட்ட ஐம்பது ஆண்டு பழமை வாய்ந்தது, நைந்திருக்குமே என்று எல்லோரும் பார்க்க இல்லை, அப்போதெல்லாம் கைத்தறி பட்டுப் புடவை தானே உருக்கினால் தங்கமும் வெள்ளியும் நிச்சயம்.
“இதை உபயோகிப்பீங்கன்னா எடுத்துக்கங்க, இல்லை என்கிட்டயே இருக்கட்டும்” என்றார்.
அவர்களுடைய அப்பாவின் அம்மாவினது, அதுவே அந்த பெண்களுக்கு ஒரு சொந்தத்தை கொடுக்க, “கட்டுவோம் தாத்தா” என்றாள் இளவரசி.
அலரோ ஒரு படி மேலே போய், “உனக்கு எது கட்டினாலும் நல்லா தான் இருக்கும். நான் எடுத்துக்கிட்டது போக மீதி தான் உனக்கு” என்று அப்போதே சொல்லிவிட்டாள்.
ஆண்பிள்ளைகள் எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.
விசாகன் அகிலனின் காதை கடித்தான், “என்னடா ஒரே ஃபீலிங்க்ஸா இருக்கு” என்று.
“என்னா? என்னா பீலிங்க்ஸு?” என்று வடிவேலு பாணியில் அகிலன் நக்கல் அடித்தான்.
“அதான் பொண்ணா பொறக்கலைன்னு…” என்று விசாகன் இழுக்க….
“ஏன் பொண்ணா பொறந்தா நீ என்னை கட்டியிருக்க போறியா என்ன?” என்று அகிலன் சொல்ல,
“உன்னை கட்டிக்க எதுக்குடா பொண்ணா பொறக்கணும்?” என்றவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவனை இடையோடு கொண்டான்.
“ஒஹ், அவனா நீ” என்று அகிலன் சொல்ல…
அவசரமாய் கை எடுத்து “போடா, தூ, தூ.” என்று முகத்தில் துப்புவது போல விசாகன் சைகை செய்ய…
எல்லாம் அருகமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த தாரகனும் கபிலனும் சிரித்து விட, அங்கே ஒரு மகிழ்வான சூழல்.
ஆதி அக்காள்களின் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தான்.
அவன் திரும்பி பார்க்க “அங்க என்ன உட்கார்ந்து இருக்க எங்களோட வா” என்று அகிலன் கூப்பிட, ஆதி தயங்கித் தயங்கி வந்தான்.
“தம்பி டேய், அக்காங்க ரெண்டு பேரும் கல்யாணம் ஆகிப் போய்டுவாங்க. நாங்க தாண்டா உனக்கு, வாடா வா!” என்று அவனை அருகமர்த்தி கபிலன் தோளில் கை போட்டான்.
தாரகன் தான் அவனை கூப்பிடுங்கடா என்று கண்ஜாடை காண்பித்து இருந்தான். என்னவோ அவனை தங்களோடு ஒட்ட வைக்க தாரகன் என்ன முயற்சி செய்தாலும் ஆதி தள்ளித் தான் நின்றான்.
ஆண் பிள்ளைகளுக்கு எதுவும் வருத்தம் வருமோ என்று சேதுபதி நினைக்க அவர்களின் சிரிப்பு அவருக்கு ஆசுவாசத்தைக் கொடுத்தது.
புடவைகள் முடித்து வெள்ளி சாமான்கள் எடுத்து வர, ஒவ்வொன்றும் அவ்வளவு கணம். பெரிய வெள்ளி குத்து விளக்கு இரண்டு என்று ஆரம்பித்து, வெள்ளியில் என்ன என்ன பொருட்கள் இருக்குமோ அத்தனையும் இருந்தது. அதுவே தேறும் பத்து கிலோ போல.
“இதுல குத்து விளக்கு எடுக்க வேண்டாம், வேற சாமான் ஆளுக்கு ஒரு பத்து சாமான் மட்டும் எடுத்துக்கோங்க, பின்ன இருக்குறது என்கிட்டே இருக்கும். ஆதிக்குக் கல்யாணமான பிறகு அவன்க்கிட்ட குடுத்துடுவேன். அதுக்கு முன்ன எனக்கு எதுவும் ஆனாலும் அவனுக்கு போய்டும்” என்றார்.
தாரகன் தான் “ஏன் தாத்தா இப்படி எல்லாம் பேசறீங்க” என்றான்.
“நெருப்புன்னா வாய் வெந்துடாதுடா. என்னவோ எல்லாம் இன்னைக்கு சொல்லிடறேன்” என்றார்.
அவர் ஒரு முடிவோடு இருக்கிறார் என்று புரிய தாரகன் அமைதியாகி விட்டான்.
தேவகியோ கருணாகரனோ ஜெகதாவோ ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.
அந்த பிள்ளைகளுக்குக் கொடுப்பதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் கிடையாது. அது ஜீவாவின் அம்மாவினது இப்போது அவரின் மக்களுக்கு செல்கிறது.
ஆனால் அவர்கள் இதே வீட்டில் பிறந்தார்கள் வளர்ந்தார்கள் வாழ்ந்தார்கள். கணவன் என்ன வைத்திருக்கிறான் என்று மனைவிக்கோ, இல்லை மக்களுக்கோ தெரியாது, ஏன் சொந்த தாய் மாமன் மகள் தான் சங்கரி ஆனால் அவருக்கும் தெரியாது. இவர்களுக்கே தெரியவில்லை என்றால் தனலட்சுமிக்கு என்ன தெரியும். அவருக்கு பொதுவாய் கணவன் மக்கள் மட்டுமே உலகம்.
ஏதோ பூதம் காப்பது போல அதை காத்து வந்தவர் இன்று தூக்கிக் கொடுக்கிறார்.
தாங்கள் அவருக்கு ஒன்றுமில்லையோ என்று மனைவி மக்களுக்கு தோன்றுவது தடுக்க முடியவில்லை அவர்களுக்கு. ஆனால் எல்லாம் அவரவர் மனதினுள், அந்த மாதிரி தோன்றும் மற்றவரிடம் கூட இந்த உணர்வை பகிர்ந்து கொள்ள மாட்டார். கணவன் மேல் தந்தை மேல் அவ்வளவு பாசம்.
ஆனால் ஜெகதாம்பிகைக்கு மனதளவில் பெரிய அடி தான். ஒரு வலி, நிச்சயம் பொறாமை அல்ல. அவர்களுக்கு போகிறதே என்ற கெட்ட எண்ணமும் அல்ல. என்ன இருந்தாலும் எனக்கு பெரியம்மா தானே. என் மகள் வைத்துக் கொள்ளட்டும் என்று அவரின் பொருள் ஒன்றாவது கொடுக்க வேண்டும் என்று என் அப்பாவிற்கு தோன்றவில்லை.
அப்படி என்ன நான் சீரும் சிறப்புமாய் வாழ்ந்து விட்டேன். எதுவுமே இல்லையே. இப்படி எதுவுமே இல்லையே. இது நாள் வரை இவரின் நிழலிலேயே வாழ்ந்து விட்டேன். எனக்கு என் மகள் என்று அப்படி என்ன செய்து விட்டார் என்ற எண்ணம் தோன்றுவது தடுக்க முடியவில்லை.
எல்லாம் பெரியம்மாவின் பொருட்கள் தான், ஆனால் என்ன எல்லாம் அவரின் அம்மா வீடு மட்டுமே கொடுத்திருக்குமா என்ன இவரும் தானே வாங்கிக் கொடுத்திருப்பார். மகள் தானே கொடுக்க மனதில்லையே என்று தோன்றியது.
அப்படி எதுவும் தோன்றாமல் பார்த்துக் கொண்டிருந்தது சங்கரியும் தனலட்சுமியும்!
என்ன சாமான் என்று சங்கரி தான் கையில் எடுத்து எடுத்து பார்த்து, மற்ற பெண்களிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
“எனக்கு தெரியலை, நீங்களே பார்த்துக் குடுங்க தாத்தா” என்று இளவரசி சொல்ல, அலரை பார்த்து பார்வையை திருப்பினார் சேதுபதி.
அலர் அப்படி எல்லாம் சொல்லவில்லை, எந்த பிகு பாசாங்கு எதுவும் செய்யவில்லை. “நானே எடுக்கறேன்” என்று சொல்லி அவளுக்கு இளவரசிக்கும் இருப்பது போல சரி சமமாய் எடுத்து வைத்தாள்.
“பாருடா காசுல கெட்டி போல” என்றும், “உடை நகை என்றதும் ஆளாய் பறக்கிறாள்” என்றும் அங்கிருந்தவர்களுக்கு தோன்ற, தாரகனுக்கு அப்படி தோன்றவில்லை. “எதற்கு இப்படி செய்கிறாள்?” என்ற ஆராய்ச்சி பார்வை தான்.
சிறிது நேரத்திலேயே அதற்கு விடை கிடைத்தது.
எல்லாம் விடுத்து அடுத்து நகைகள் கொண்டு வந்தார், பெரிய பெட்டி. நகையை எடுத்து அவரே கடை பரப்பினார். ஒரு போர்வையை விரித்து அந்த நகைகளை வைக்க, போர்வை பத்தவில்லை.
எல்லாம் கல் வைத்த நகைகள், வெறும் தங்கத்தினால் ஆனது சிலது மட்டுமே.
அவர் பரப்பி முடித்ததும், “என்னால எல்லாம் இனிமே முடியாது, புடவையும் வெள்ளி சாமானையும் நான் தான் எடுத்தேன், நான் ரொம்ப டயர்ட் ஆகிட்டேன். இனி நீ தான் எடுக்கணும். உனக்கு என்ன எல்லாம் வேணுமோ அதை எடுத்துக்கிட்டு எனக்கு மிச்சம் வை” என்று சுவரோரம் கால் நீட்டி அமர்ந்து கொண்டாள்.
இளவரசிக்கு தங்கையின் சூட்சமம் புரிய, “ஓய் பிராடு, ஒழுங்கா வந்து எடுடி. அதான பார்த்தேன் இவ எப்ப புடவை சாமான்னு இஷ்டப் பட்டான்னு. நகையை என் தலையில கட்ட தான் இந்த விளையாட்டா?” என்றாள்.
“ஓஹ், இப்படியா?” என்று வீட்டினர் பார்க்க, “சரியான கேடி இவ” என்று தான் தாரகனுக்கு தோன்றியது. அவன் கேடி என்று நினைக்கிறான் என்று தெரிந்தால், “ஒஹ், நான் கேடியா? கேடி என்ன பண்ணுவாங்க தெரியுமா?” என்று அவனின் வாழ்க்கையையே புரட்டி கூடப் போடுவாள் என்ற அனுமானம் தாரகனுக்கு இல்லை. ஆம்! சொல் பொறுக்கவே மாட்டாள் அலர்மேல்விழி.