“ஏய் என்னை பேசு மேன். அங்க என்ன?…” என்று ரமேஷின் முன் நின்றவன்,
“பேசினா அதை செய்யனும். கட்ஸ் இருக்கா மேன் உனக்கு?…” என்று வம்புக்கு பேச ரமேஷ் தன்னிடம் வம்சி நெருங்கி நிற்கவுமே பின்னே நகர தான்.
அதனை பார்த்த வம்சி தன் முழங்கையால் ரமேஷை வலிக்க ஒரு இடி இடித்து திரும்பியவன்,
“தப்பா எடுத்துக்காதீங்க. இவன்கிட்ட சொல்லி வைங்க. இந்த பொண்ணு ஆபத்துல இருக்கேன்னு தான் ஹெல்ப் பண்ணேன். மத்தபடி நத்திங். முதல்ல இந்த ஆளை வீட்டுல சேர்க்காம இருங்க…” என்று மனதில் பட்டதை சொல்லிவிட்டு வெளியேறிவிட பின்னோடு சென்றார் ராமன்.
இப்படி பேசுபவனிடம் என்ன சொல்ல என்று தெரியாமல் அவர் விட்டுவிட ஓரளவு அவர் பேச வருவதை கணித்தவன் ஒரு பெருமூச்சுடன் தனது விசிட்டிங் கார்டை நீட்டினான்.
“இதுல என்னோட நம்பர் இருக்கு. அவசர உதவின்னா என்னை காண்டேக்ட் பண்ண சொல்லுங்க. நான் அங்க அவேலபிள்னா ஹெல்ப் பண்ணுவேன்….” என்று சொல்லிவிட்டு காரில் ஏறிக்கொண்டான்.
தெரிந்தவர் என்ற விதத்திலான ஒரு பாவனை மட்டுமே அவன் முகத்தில். அதை தாண்டி வேறு எதுவும் தெரியவில்லை.
ராமனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. அந்த கார்டை சந்தோஷத்துடன் பார்த்துவிட்டு உள்ளே வர,
“அவரை முன்னாடியே தெரியுமாப்பா?…” என்றான் சந்துரு.
“ஆமாப்பா, உள்ள வா பேசுவோம்…” என சொல்ல,
“நான் கிளம்பறேன். இங்க மதிப்பில்லைன்னு தெரிஞ்சும் பதறிட்டு வந்தேன்ல. தேவை தான் எங்களுக்கு…” என சிவரஞ்சனி சொல்லிக்கொண்டிருக்க ராமன் உள்ளே வந்துவிட்டார்.
ரமேஷ் விறுவிறுவென்று வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் அவர் உள்ளே வரவும்.
“மாப்பிள்ளை…” என்று அழைத்துக்கொண்டு பின்னே செல்லும் முன் உள்ளே மகளின் ஓலம் வேறு அதிகமாய்.
“ஏன்ம்மா?…” தளர்ந்துபோய் மகளிடம் கேட்டார்.
“என்ன என்னம்மா? போங்கப்பா. சின்ன மக சம்பாத்தியம் பண்ண போறான்னு தலைகால் புரியலை உங்களுக்கு. அவசரம்ன்னா நாங்க தான வரனும்…” என சொல்லிவிட்டு கிளம்ப,
“சிவா நான் கேட்டது…” சுலோ மகளை நிறுத்த,
“அதெல்லாம் முடியாதும்மா. போறவ இருக்கறதை போட்டுட்டு போக சொல்லுங்க. இங்க நல்லதுபொல்லதுன்னா நான் எதை போட்டுக்க?…”
“என்னடி இப்படி சொல்ற? அவ மெட்ராஸ்ல வேலைக்கு போறாடி. நல்லதா நாலு உடுப்பு வேண்டாமா? அவளிதையும் நீ உன் கல்யாணத்தப்போ எடுத்துக்கிட்ட. நீ என்ன விசேஷ வீட்டுக்கு சுடிதாரா போட போற? சேல தான?…”
“நான் என்னத்தையும் போட்டுக்கறேன். உங்களுக்கு என்னவாம்?…” என்று இரைந்துவிட்டு கிளம்பினாள்.
“இப்ப என்னத்துக்கும்மா அவக்கிட்ட மல்லுக்கு நிக்கிற? விடு. இருக்கறது போதும். கஞ்சி வச்சு தேய்ச்சுவிட்டா புதுசு மாதிரி இருக்க போகுது. எனக்கு அந்த மாவு மட்டும் ரெடி பண்ணி குடு. அங்க போனா தேவைப்படும்…” என சொல்லிக்கொண்டு இருந்தாள் ஷ்ராவணி.
“ப்பா நான் கேட்டேனே? இப்ப வந்தவரை பார்த்துட்டு அத்திம்பேர்க்கு மூஞ்சியே இல்ல பார்த்துக்கோங்க..” என சிரித்தான் சந்துரு.
“நேத்து ஒருத்தருக்கு திதி செய்ய போய்ட்டு காசு கொண்டுவந்தேன்ல. குறைக்காம தாராளமா குடுத்தாருன்னு உங்கம்மா கூட சொன்னாளே? அது இந்த தம்பியோட அம்மா, அப்பாவுக்குத்தான்…”
“பெத்தவங்க இல்லையாமா?…” சுலோச்சனா தாடையில் கை வைத்து உச்சுக்கொட்ட ஷ்ராவணி மனது அவனுக்காக பரிதாபம் கொண்டது.
“ஆமாடி, அம்மா, அப்பா தவறி சில வருஷமாச்சு போல? யாரோ சொல்லி இந்த திதில இங்க வந்து அவங்களுக்கு மரியாதை செஞ்சா நல்லதுன்னு கேள்விப்பட்டு வந்திருக்காரு. தெரிஞ்சவா மூலமா நேத்து கோவிலுக்கு அழைச்சிட்டு வந்தாங்க…”
“நான் தான் எல்லாம் ஏற்பாடு பண்ண, மாப்பிள்ளை அங்க வந்து நான் திதி சடங்கு செய்யறேன்னு நிக்கிறாரு….”
“பின்ன? நம்ம மாப்பிள்ளை பேச்சுதான் தெரியுமே? அவர் அதிகாரமா பேச இந்த மில்ட்டரி தம்பி கோவத்துல உங்கட்ட தானே முதல பேசினேன். நீங்க பண்ணி குடுங்க. இல்லைன்னா வேண்டாம்ன்னு சொல்லிட்டாரு மூஞ்சில அடிச்சதாட்டம்…”
“பொறவென்ன? நானா தான் செஞ்சு குடுத்தேன். அதுக்குள்ளே மாப்பிள்ளைக்கு வேற ஆள் வரவும் போயாச்சு. ஆனாலும் கோவம் தான்…” என்றார்.
“பாவம் தாய் தகப்பனில்லாம, கூட பொறந்தவங்க?…”
“யாருமில்ல போல? நெல்லூராம் சொந்த ஊரு. வேலை சென்னையிலன்னு பேச்சுவாக்குல சொன்னாரு…” என்ற ராமன்,
“அடடா மறந்துட்டேன் பாரேன்….” என்று சட்டை பையில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்தவர் சின்ன மகளிடம் நீட்டினார்.
“என்னப்பா?…”
“அந்த தம்பி குடுத்த கார்ட் பாப்பா. நீ அங்க வேலைக்கு போகவும் அவசரம்ன்னா கூப்பிட சொல்லி தந்தார்…” என்று சொல்ல சந்துரு தந்தையை கண்டனமாய் பார்த்தான்.
“என்னப்பா சொல்றீங்க?…” ஷ்ராவணி தயங்க,
“ஆமாப்பா, நீ அங்க வர போறதை சொன்னேன். உதவி செய்ங்கன்னு கேட்கலை. அவரே தான் தந்தார் அவசரம்ன்னா கூப்பிடுங்கன்னு…” என்று சொல்ல அதனை வாங்கிக்கொண்டாள்.
“இவ்வளவு உதவி செய்யறார், நேரடியா பேசறார். நல்லமாதிரி தான்…” என ராமன் சொல்ல ஷ்ராவணி ஒன்றும் சொல்லவில்லை.
அக்கம்பக்கத்தில் இருந்து ஷ்ராவணியை பார்த்துவிட்டு செல்ல என்று ஒருசிலர் வந்து நலம் விசாரித்து, பார்த்து இருக்க வேண்டாமா? என அறிவுரை வேறு சொல்லிவிட்டு சென்றனர்.
பெரிதாய் ஏதோ நடக்கவிருக்கிறது என்று நினைக்க எதுவுமே இல்லை என்பதை போலானதில் ஏக வருத்தம் அவர்களுக்கு.
அதிலும் ரமேஷ் காலையில் இருந்து செய்த அலப்பறையில் நிஜமாகவே அப்படித்தான் போல என நினைக்க இப்போது அதற்கு நேர் மாறாய் ஒரு நிகழ்வு.
“வணியை தெரியாதா? கஷ்டம் அறிஞ்சு நடக்கற பிள்ளை…” என காலை பேசிய அதே நாக்கு பிரண்டது.
“அக்கா உனக்கு போன், உன்னோட இண்டர்வ்யூ அட்டன் பண்ணின அக்கா பேசறாங்க….” என சந்துரு சொல்லவும் தான் ஷ்ராவணி அந்த இடத்தை விட்டே எழுந்தாள்.
இன்னும் ஒருவாரத்தில் சென்னை பயணம் மீண்டும். வம்சி சைத்ரயேஷ் தந்த விசிட்டிங் கார்டை மறக்காமல் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
அவனின் அலைபேசி எண் அவளிடம் மட்டுமல்ல, ராமன், சுலோச்சனா என இருவரும் கூட பதிந்து வைத்துக்கொண்டனர்.
சென்னை வந்து வேலையில் சேர்ந்தவள் ஹாஸ்டலில் தங்கி என எல்லாம் பார்த்துவிட்டு ராமன் சொல்லியதற்கு இணங்க வம்சிக்கு அழைத்தாள்.
“இவ்வளவு தூரம் உதவி செஞ்ச பிள்ளை. மரியாதைக்கு ஒரு வார்த்தை சொல்லி வை பாப்பா. காசை குடுக்கனும்னு சொல்லியிருந்த தானே? அதனால பேசிடு…” என்று சொல்ல அந்த காரணமே அவனுக்கு அழைக்க செய்தது.
முதலில் அழைப்பு சென்றுகொண்டே இருக்க மீண்டும் முயற்சிப்போமா வேண்டாமா என யோசனையுடன் அவளிருக்க விரல்கள் தானே பட்டு அழுத்திவிட்டது.
அழைப்பை துண்டிப்பதற்குள் இந்த முறை அவன் ஏற்றுவிட்டான் அந்த அழைப்பை.