குமுதா நேர்முக தேர்விற்கு வந்த பொழுது ஷ்ராவணிக்கு பழக்கமாகி இருக்க அங்கிருந்து நட்பு ஆரம்பித்து, இப்போது ஒரே அலுவலகம், ஒரே விடுதி என இணைந்துகொண்டனர்.
“அது, இங்க தெரிஞ்சவர் ஒருத்தருக்கு கால் பண்ணேன்…”
“சரி, அதுக்கேன் முகம் வாடியிருக்கு?…”
“ஹ்ம்ம், அப்படியா?…” என கண்ணாடியில் பார்த்தாள்.
“நிஜமான்னு செக் பன்றியாக்கும்?…” என சிரித்த குமுதா,
“ட்ரெஸ் துவைச்சுட்டேன். போய் காய போட்டுட்டு வரேன்….” என அவள் கிளம்பவும் போனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
சென்னை வந்து ஒருவாரமாகி இருந்தது. வேலையும் அத்தனை சிரமமில்லாமல் இருப்பதால் பிடித்துவிட்டது. தினமும் சென்று வர பஸ் பாஸ் எடுத்துக்கொண்டாள்.
ஓரளவு சென்னையும், வேலையும் பழகவும் தான் வம்சி ஞாபகம். மீண்டும் சற்று நேரம் கழித்து அவனுக்கு அழைக்க அழைப்பு சென்றுகொண்டே தான் இருந்தது. எடுக்கவில்லை அவன்.
சலிப்புடன் போனை எடுத்து சார்ஜில் போட்டுவிட்டு தனது துணிகளை எடுத்துக்கொண்டு சென்றாள் மாடிக்கு.
“பேசிட்டியா வணி?…” குமுதா கேட்க,
“இல்லை க்கா, கால் போகலை. அதான் வந்துட்டேன்…” என பொய்யாய்.
“ம்ஹூம், எனக்கு முடியலை. டயர்டா இருக்கு. நான் வரலை குமுதாக்கா…”
“இப்ப என்ன கேட்டேன்னு முகத்தை இப்படி வச்சுக்கற? இங்க நாம தான் ஒன்னுக்கொன்னு போய் பார்த்து தெரிஞ்சுக்கனும். வேலை வேலைன்னு இந்த வீக் ஹாஸ்டல் வரவே சரியா இருக்கு. இன்னைக்கு மட்டும் தான்…”
“அதான் சொல்றேன். இன்னைக்கு மட்டும் தான். ரெஸ்ட் வேணும்…”
“ரூம்லயே இரு. நான் போறேன். ஆபீஸ்ல வேற புதுசுன்னு ஜூஸ் புழியறானுங்க. நான் ரூம்லயே இருந்தேன், மண்டை காய்ஞ்சிரும்…” என்றவள்,
“உனக்கெதாவது வேணுமா?…” என கேட்க,
“ம்ஹூம், எல்லாமே இருக்கு. வேண்டாம்…” என்றாள்.
“வேணுமான்னா வெளில இருந்து சாப்பிட ஏதாவது வேணுமான்னு கேட்டேன்…”
“இங்கயே சாப்பிட தராங்களே? போதும் குமுதா க்கா…” என சொல்லியவள் மனதிற்குள் வெளியில் என்றால் முன்னூறு ரூபாயாவது செலவாகிவிடுமே?
எண்ணி எண்ணி செலவழிக்கும் நிலையில் தான் அவள். முடிந்தளவு சம்பாத்தியத்தை கூட்டி செலவை சுருக்கவேண்டும்.
கடனை அடைக்கவேண்டும். அடுத்தடுத்து அக்காவிற்கு சீர்கள் என்று வரிசை கட்டிக்கொண்டு நின்றது செலவுகள்.
இதை எல்லாம் நினைக்க நினைக்க தொண்டைக்குழி கவ்விப்பிடித்தது ஷ்ராவணியை.
குருவி தலையில் பனங்காய் வைத்ததை போல. அவளின் தலையில் இத்தனை பெரிய சுமை.
“என்னடி உடனே ஸ்லீப்பிங் மோட் போய்ட்ட?…” குமுதா ஷ்ராவணியின் அமைதியில் கேள்வி எழுப்ப,
“ப்ச், ஒண்ணுமில்லை க்கா. யோசிச்சிட்டு இருந்தேன்…”
“வீட்டை பத்தியா?…” என்றவளுக்கு ஷ்ராவணியின் குடும்ப நிலை தெரிந்திருந்தது.
கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே மாதிரியான சூழ்நிலை தான். குடும்ப கஷ்டம்.
குமுதா தன் குடும்பத்தை பற்றி அத்தனையும் பகிர்ந்திருக்க அவ்வளவு இலகுவில் ஷ்ராவணி வெளிப்படையாய் சொல்லிவிடவில்லை என்றாலும் மேம்போக்காய் பேசியிருந்தாள்.
“விடு என்ன செய்ய? உன் தம்பி தலையெடுத்தா போதும்ல…”
“ஆமாக்கா, ஸ்கூல் முடியுது. அடுத்த காலேஜ் சேரனும். மெரிட்ல சீட் கிடைச்சுட்டா போதும்ன்னு இருக்கு. ஓரளவு சமாளிச்சிடலாம்…”
“அதெல்லாம் கிடைக்கும். அதுக்குன்னு இப்படியே நீ இருப்பியா? வா போய்ட்டு வருவோம். மைண்ட் செட் மாறும்…” என எத்தனை கேட்டும் அவள் மறுத்துவிட்டாள்.
“சரி சரி, இப்ப போனா தான் உண்டு. கொஞ்சம் மெடிக்கல் ஷாப் வேற போகனும். வரேன்…” என்று சொல்லி கீழே இறங்கிவிட மற்ற அறையில் இருக்கும் பெண்களும் மாடிக்கு ஒருசிலர் வந்து சேர்ந்தனர்.
புதிதாய் சிலரை அன்றுதான் கவனித்தாள் அவர்களை. அந்த பெண்களும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச சற்று நேரத்தில் வெறும் பக்கெட்டை தூக்கிக்கொண்டு கீழிறங்கினாள்.
“இன்னும் கிளம்பலையா க்கா?…” குமுதா அறையில் எதையோ தேடிக்கொண்டிருக்க,
“போகனும், இந்த சுடிதாருக்கான துப்பட்டாவை எங்க வச்சேன்னு தெரியலை. அதான் தேடறேன்…” என்று சொல்ல,
“தெய்வமே, தாடி முதல்ல…” என்று சிரிக்க உடனே எடுத்து தந்தாள்.
“இனி அவசரம்ன்னா உன்கிட்ட கேட்டுக்கலாம்…” என சொல்ல அதற்குள் வீட்டிலிருந்து குமுதாவிற்கு அழைப்பு.
“போச்சு வீடியோ கால்…” என்று கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.
‘சென்னை புதிது, வெளியில் சுற்ற கூடாது. வேலை விட்டால் ஹாஸ்ட்டல் என இருக்கவேண்டும்’ என்று அத்தனை அறிவுரைகள் அவளின் தாய், தந்தை, உடன் பிறப்புகள் என மாற்றி மாற்றி.
பேசி முடிக்கும் முன் ஷ்ராவணி உடை மாற்றி தலை சீவி வர குமுதா பேசி ஓய்ந்திருந்தாள்.
“பார்த்தியா என் நிலைமையை? ஊரு விட்டு ஊரு வந்தாலும் வீடியோ கால் பண்ணி அட்வைஸ் பன்றதை?…”
“அதுக்கென்னக்கா? நல்லதுக்கு தானே?…” என்று சொல்லிவிட்டு தனது பேக்கை எடுத்தாள்.
“ஆமா, நான் கூப்பிட்டப்போ வரலைன்ன? இப்ப நீ எங்க கிளம்பிட்ட?…” குமுதா ஆச்சர்யமாக கேட்க,
“இங்க அடுத்த வீதில இருக்கற கோவிலுக்கு க்கா. அம்மாப்பாவுக்கு இன்னைக்கு வெடிங் அனிவெர்சரி…”
“வாவ், விஷ் பண்ணியாச்சா?…”
“காலையிலையே…”
“அதானே எனக்கு முன்னாடி எழுந்துக்கற நீ…” என பேசியபடி தானும் கிளம்பினாள்.
அறையை பூட்டிக்கொண்டு பேசியபடி கீழே வர வார்டன் பார்த்தார் இருவரையும்.
“நீங்க எங்க போறீங்க?…” என கேட்க,
“கோவிலுக்கு மேம்…” ஷ்ராவணி சொல்லவும் அவர் குமுதாவை பார்க்க,
“ஆமா கோவிலுக்கு போறோம்…” என உடனே குமுதா.
“ரெண்டுபேருமா?…”
“ஆமா மேம்…” குமுதா அடித்து சொல்ல,
“ஹ்ம்ம் ஓகே…” என சொல்லி அனுப்பினார்.
“என்னக்கா மூஞ்சில லைட் எரியுது?…”
“பின்ன என்னடா, தேடி தேடி இந்த ஹாஸ்டல் வந்தா இங்க ஓவர் ரூலால இருக்கு. வீட்டுலையும் கெடுபிடி. இங்க வேலைக்கு வந்தா இங்கயும் இப்படி…” என புலம்பிக்கொண்டே வந்தாள்.
இருவருக்கும் மூன்று வருடங்கள் வயது வித்தியாசம். குமுதாவின் படபட பேச்சிற்கும், ஷ்ராவணிக்கும் நன்றாகவே ஒத்து போனது.
“சரி, நான் கோவிலுக்கு போய்ட்டு வந்திருவேன். நீங்க என்ன பண்ணுவீங்க?…” என ஷ்ராவணி சிரிப்புடன் கேட்டாள்.
அடுத்த தெருவில் கோவில். திறந்திருக்குமோ இல்லையோ என்னும் படபடப்புடனே தான் வந்தாள்.
திறந்திருந்தது. உடனே அர்ச்சனை சீட்டை வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தவள் கும்பிட்டுவிட்டு சிறிது நேரம் அமர்ந்திருந்துவிட்டு வெளியேறினாள்.
வேண்டிக்கொள்ள ஏகப்பட்ட விஷயங்களும், இறைவனிடம் கேட்டு நிறைவேற்றும்படி வாங்கிக்கொள்ள அளவில்லாத ஆசைகளும் இருந்தாலும் எதுவும் தோன்றவில்லை.
இப்போதிருக்கும் நிலை மாறி நிம்மதியாக, கஷ்டமின்றி வாழ்ந்தால் போதும் என்ற வேண்டுதல் மட்டுமே.
மெதுவாய் நடந்து ஹாஸ்டல் வர வார்டன் ரிசப்ஷனின் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
ஷ்ராவணி பிரசாதத்தை அவருக்கு நீட்ட தலையசைத்து எடுத்துக்கொண்டவர் பேச்சில் தான் கவனம்.
“சரி நான் விசாரிக்கறேன். வீட்டுக்கு வந்து தான் கணக்கு பாடம் சொல்லி தரனும். நம்பிக்கையாவும் இருக்கனும்ன்னா உடனே கிடைப்பாங்களா? பார்க்கறேன்….” என்றார் கண்டிப்பாக.
மாடிக்கு செல்லவிருந்த ஷ்ராவணியின் கால்கள் அப்படியே நின்றுவிட மீண்டும் இறங்கி கீழே வந்தாள். வார்டனும் பேசி முடித்திருக்க,
“மேம்…” என்றவள் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தார்.
குமுதா சொல்லி சென்றது கூட கவனத்தில் இல்லை அவருக்கு. அவள் வராததையும் கவனிக்கவில்லை.
“என்னம்மா?…” என போனை வைத்துவிட்டு எழுந்தவர் தனதறை நோக்கி சென்றார்.
“இப்ப பேசிட்டு இருந்தீங்களே?…”
“என்ன? எதை சொல்ற?…”
“இல்லை வீட்டுக்கு யாரோ பாடம் சொல்லி தர வேணும்னு…”
“ஆமா என்னோட தங்கச்சி பொண்ணுக்கு தான்….”
“நான் நான் அதை செய்யட்டுமா? எனக்கு மேத்ஸ் நல்லா வரும் மேம். காலேஜ்ல டாப்பர். உங்களுக்கு நம்பிக்கை இருந்தா எனக்கு ரெஃபர் பண்ண முடியுமா?…” என்றவளை யோசனையுடன் பார்த்தார்.
ஹாஸ்டல் வந்து சேர்ந்தே ஒருவாரம் தான் முடிந்திருக்க எந்த நம்பிக்கையில் இந்த பெண்ணை சேர்த்துவிட என யோசித்தபடி அறைக்குள் வந்துவிட்டார்.
“இங்க பாரும்மா, நீ பார்க்கற வேலை நேரம் இதுக்கு ஒத்துவராதே? அதோட இங்க இருந்து கொஞ்சம் தூரமும் கூட….”
“தூரம் எல்லாம் பிரச்சனை இல்லை மேம். ஆபீஸ் முடிஞ்சு நான் இங்க ஈவ்னிங் சும்மா தானே இருக்கேன். எனக்கொரு இன்க்கமா இருக்கும். ப்ளீஸ்…”
முகத்தில் உண்மையும், வேலை கிடைக்க வேண்டுமே என பரிதவிப்பும் மிதமிஞ்சி இருந்தது.
பரிதாபமாகவும் இருக்க அவர் சொல்லியதை போல நேரமும் ஒத்துவராது என நினைத்தார்.
“எனக்கு புரியுதும்மா. நீ ட்யூஷன் முடிச்சிட்டு இங்க வரவே பத்து மணியாகலாம். வயசு பொண்ணு, நான் எப்படி ரிஸ்க் எடுக்க?…”
“நீங்க மனசு வச்சா முடியும் மேம்…”
“புரியுதும்மா, நீ பார்க்கறது சாப்ட்வேர். டைமிங் உனக்கு முன்னபின்ன ஆனா அங்கயும் ஆகிடும். அதோட இதுக்கு நான் பொறுப்பேத்துக்கும் போது எனக்கும் பிரஷர்….”
அவளிடம் மறுக்கத்தான் நினைத்தார். நம்பிக்கை என்பது தாண்டி தேவையில்லாமல் எதற்கு என்று எண்ணம்.
“மேம் ப்ளீஸ், என்னை நீங்க நம்பலாம். நான் நல்லா சொல்லித்தருவேன். உங்களுக்கு நம்பிக்கை வரவரை நான் சும்மாவே எடுக்கறேன். ஒரு பத்துநாள் பாருங்க…” என்ற ஷ்ராவணி,
“என்னோட சர்டிபிகேட், வீட்டு அட்ரஸ், ஆபீஸ் அட்ரஸ் எல்லாமே உங்களுக்கு தெரியும். நம்புங்க மேம்…” என்று கேட்க,