“இல்லை, நானே சொல்றேன். அப்போ வா…” என கூற இன்னும் கடுப்பாகிவிட்டாள்.
“ஒன்னும் தேவையில்லை. எனக்கு தோணும் போது வந்துப்பேன்…” என கோபத்துடன் போனை வைத்திருக்க வம்சிக்கு அத்தனை சிரிப்பு.
“நா பங்காரம்ரா நுவ்வு சந்திரமுகி…” என மெசேஜ் அனுப்பிவிட்டு அவளை கலாட்டா செய்ய ஷ்ராவணிக்குமே சிரிப்புதான்.
அதன்பின் எப்போது அவன் வருகிறான் என கேட்டவளுக்கு அவனுக்கு தெரியாமலேயே ஒரு வேலையை பார்த்து வைத்திருந்தாள்.
அவன் வரும் முன்பே தான் அங்கே டெல்லியில் இருப்பது என்று முடிவு செய்துகொண்டவள் அதனை செயல்படுத்த இதோ டெல்லியை நோக்கிய பயணம்.
“எல்லாமே ரெடியா? உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் வணி…” என அணைத்துக்கொண்டாள் குமுதா.
“நானும் க்கா. எனக்கு எவ்வளோ சப்போர்ட்டிவா இருந்திருக்கீங்க? நானும் மிஸ் பண்ணுவேன். டெல்லி வந்தா கண்டிப்பா நீங்க வீட்டுக்கு வரனும்…”
“பின்ன நிச்சயமா வருவேன். நீ அங்க இருக்கும் போது நான் ஏன் வெளில தங்க போறேன்?…” என வழக்கம் போல குமுதா சொல்ல அவளின் பேச்சில் மீண்டும் அணைத்துக்கொண்டாள் ஷ்ராவணி.
ஏர்போர்ட் வரை வந்து அவளை அனுப்பிவிட்டு தான் செல்வேன் என அன்றைக்கு விடுமுறையும் எடுத்திருந்தாள் குமுதா.
“ஓகே, நான் ட்ரெஸ் மாத்திட்டு வரேன். கிளம்புவோம். கார் வந்திருச்சு…” என்று சொல்லி குமுதா உள்ளே செல்லவும் தனது ஒற்றை ட்ராலியை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள் ஷ்ராவணி.
கிளம்பியிருந்த வேளையில் சந்துரு அழைக்க உடனே அட்டன் செய்தாள் அதனை.
“என்னடா இந்த நேரம் கூப்பிட்டிருக்க?…”
“நாளைக்கு அம்மாப்பாவுக்கு கல்யாண நாள் வணிக்கா…” என்றான்.
“தெரியுமேடா. இதை சொல்லனுமா நீ?…”
“இல்லை, சும்மா சொன்னேன்…”
“சும்மா எதுக்கு சொல்ல? என்ன விஷயம்?…”
“இல்லை இங்க ஒரு வேலை இருக்குன்னு சொன்னாங்க. போகட்டுமா?…” என்றான் தயக்காமாக.
ராமேஸ்வரம் சென்று வந்த பின்னர் வேலைக்கு சென்று தீருவேன் என ஏற்கனவே ஒரு வேலைக்கு சேர்ந்திருந்தான்.
மாலையிலிருந்து இரவு பதினோரு மணி வரை வேலைக்கு சென்றுகொண்டிருக்க அவனின் படிப்பிற்கும் அங்கே எந்தவித இடையூறும் இல்லை என்பதால் ஷ்ராவணி அதனை அனுமதித்திருந்தாள்.
ஆனால் இப்போது சந்துரு சொல்ல கேட்கும் பணி இரவு நேர பணியாக இருக்க கேட்டதும் அத்தனை கோபம்.
“உன்கிட்ட நான் பேசமுடியாது. எதுவானாலும் உன் அங்கிள்கிட்ட பேசிக்கோ…” என சொல்லிவிட,
“க்கா…” என இழுத்தான்.
“இப்ப ஏன்டா நீயும் படுத்தற? இந்த வேலை பத்தி எல்லாம என்கிட்டே பேசாத நீ. அவ்வளோ தான்…” என்றவள்,
“நான் டெல்லி கிளம்பிட்டேன் சந்துரு…” என்றாள் ஷ்ராவணி.
“எத்தனை நாள்க்கா? இது வீக்கென்ட் இல்லையே? அபிஷியலா?…” என கேட்க,
“இன்னைக்கு டெல்லி வந்திருவார் உன் அங்கிள். அங்க போய்ட்டு கூப்பிடறேன்…” என்றவள்,
“டேய் நீ எதாச்சும் உளறி வச்சிடாத நான் அங்க போறதை பத்தி. சர்ப்ரைஸ்….”
“நீ சொல்லவே இல்லையா அப்போ?…”
“ம்ஹூம், சர்ப்ரைஸ்ன்னா வேற என்ன?…” என சொல்லியவள்,
“ராமேஸ்வரத்துல இருந்து சென்னை கொண்டுவந்து விட்டுட்டு போனதோட சரி. அங்க போய் வச்சுக்கறேன்….” என நொடித்துக்கொண்டவள்,
“வணிக்கா மைன்ட் வாய்ஸ்ன்னு சத்தமா பேசிட்ட…” என்றவனின் கிண்டலில் அதற்கு மேல் அவனிடம் என்ன பேச என்று,
“சரி சரி. உன்கிட்ட சொல்லலாமேன்னு தான் சொன்னேன்…”
“அம்மாட்ட பேசிட்டியா?…”
“ம்ஹூம் இல்லை. அங்க போய்ட்டு பேசிக்கறேன். நீ சொல்லிடு…” என்று பேசிவிட்டு போனை வைக்க குமுதா வந்துவிட்டாள்.
“போகலாம்…” என்றதும் இருவரும் வெளியேறி கீழே வந்தனர்.
“என்னம்மா கிளம்பிட்டியா?…” வார்டன் கேட்க,
“ஆமா மேம். ப்ளஸ் பண்ணுங்க என்னை…” என்று காலில் விழுந்து எழவும் அவருக்கு என்னவோ போலானது.
ஷ்ராவணி வகுப்பெடுக்க வருவதை நிறுத்தியதும் சிறு வருத்தம் தான். அதற்கென்று அவளை பிடித்து வைக்க முடியாதென்பதையும் புரிந்திருக்க இப்போது அவள் ஆசிர்வாதம் வாங்கவும் கொஞ்சமிருந்த சுணக்கமும் சரியானது.
“நல்லா இரும்மா. சென்னை வந்தா என்னை வந்து பாரு…” என சொல்லிவிட்டு புன்னகைத்தவர்,
“உன் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டியா?…” என்றார்.
“ஆச்சு மேம். குமுதாக்கா பேக்கர்ஸ்ல அனுப்பிடுவாங்க…” என்றவள் சொல்லிக்கொண்டு புறப்பட விமான நிலையம் வரை குமுதாவிடம் பேச்சுக்கள் தான்.
எதையும் ஷ்ராவணி யோசிக்கவோ, சிந்திக்கவோ கூட நேரமில்லாத அளவிற்கு இடைவெளியின்றி பேசிக்கொண்டே தான் இருந்தாள்.
இருவருமாக விமானநிலையத்திற்கு வரும்முன் வெளியே உணவை வாங்கி உண்டுவிட்டு, அதுவும் குமுதாவிற்கு பிடித்தமானதாக தானே வாங்கி தர,
“இப்பலாம் தேறிட்ட நீ…” என சில்லாகித்தபடி தான் உண்டாள் குமுதா.
“பின்ன? நிறைய இந்த வாழ்க்கை கத்து குடுத்துருச்சே. என்ன பன்றதுக்கா? மாறனும்னும் போது மாறிடனும்…” என புன்னகையுடன் ஷ்ராவணி சொல்லியதில் உட்பொருள் இருக்குமோ என்று தோன்றியது குமுதாவிற்கு.
ஷ்ராவணி உள்ளே செல்லும் வரை குமுதா நகரவே இல்லை. அவளின் தலை மறையும் வரை இருந்து பார்த்துவிட்டு தான் கிளம்பினாள் குமுதா.
ஆரம்பத்திலிருந்து எந்தவித எதிர்பார்ப்பையும் வைத்துக்கொள்ளாத ஒரு நட்பு. அதனை நினைத்தபடி விமானத்தில் அமர்ந்தவளுக்கு எப்போதடா வம்சியை பார்ப்போம் என்றிருந்தது.
அவளுக்கு அவன் தகவல் கொடுத்திருந்தபடி பார்த்தால் அன்று இரவு வீடு வந்து சேருவான் என்றிருக்க அதற்குள் தான் அங்கிருப்போம் என நினைக்கவே உள்ளுக்குள் காதல் கூத்தாடியது.
கண்களை மூடி சாய்ந்து கொண்டவள் மனதில் இன்று வரை குடும்பத்தில் நடந்த மாற்றங்களும் வலம் வந்தது.
பணத்தை கொடுத்து கடனை அடைத்த பின்னர் சுலோச்சனாவிடம் சொல்லிவிட்டு அவரின் கையில் ஒரு தொகையை தந்துவிட்டு கிளம்பியிருந்தாள்.
சென்னை வந்த பின்னர் மகளிடம் தவறாது அழைத்து பேசிவிடுவார் சுலோச்சனா.
ராமன் அன்று சென்றவர் தான். அதன் பின் பேசவேண்டும் என நினைக்கவே இல்லை. முயலவும் இல்லை.
சுலோச்சனா மட்டுமே அவ்வப்போது கூறுவார் ‘உன்னை நினைச்சு ரொம்ப கவலைப்படறார். உன்னை கஷ்டப்படுத்திட்டோம்ன்னு நினைக்காருடி வணி’ என்பார்.
கேட்டுக்கொள்வதோடு சரி. அவரிடமே விசாரித்தும்கொள்வாள். வேறு எதையும் செய்வதாய் இல்லை.
சிவரஞ்சனி மீண்டும் வந்து சென்றது ரமேஷிற்கு தெரியவர நடந்ததை கேட்டு அத்தனை அடித்திருந்தான் அவளை.
இனி அவர்கள் உறவே கூடாதென்று சொல்லியிருந்தான். சிவரஞ்சனிக்கு தான் தாய் வீட்டிற்கு செல்லவும் பயந்து, தன் குடும்பத்தை பார்க்கவும் முடியாமல் அல்லாடிக்கொண்டிருந்தாள்.
அவள் வராததை பற்றியும் சுலோச்சனா மூலம் அறிந்துகொண்ட ஷ்ராவணி கசப்புடன் தான் எண்ணிக்கொண்டாள்.
எங்கே அவர்களை பார்க்கும் பொறுப்பும் வந்து சேருமோ என்று தான் இத்தனை தூரம் வராமல் இருக்கிறார்கள் என்று புரிந்து போனது.
அவள் மனதிற்கு ஒரே ஆறுதல் ராமன் மீண்டும் வேலைக்கு செல்வது ஒன்று தான்.
தன் வேலையுண்டு, தான் உண்டு என்று இருக்க ஆரம்பித்திருந்தார் ராமன். வேலைக்கு செல்ல அந்த பணத்தை வைத்து குடும்பத்தை நடத்த முயன்றார்.
சிவரஞ்சனி வருகை இல்லை என்பதால் வெகுவாய் செலவு குறைவாய் இருக்க இருவருக்கு போதுமானதாக இருந்தது அந்த வருமானம்.
மக்களின் மனதை தெளிவாய் புரிந்துகொண்ட ராமனுக்கு தன் தவறும் புரிந்திருக்க அது கொடுத்த குற்ற உணர்ச்சியே குடும்பத்தினர் யாரிடமும் முகம் கொடுத்து பேசவிடவில்லை.
ஒருவித ஒதுக்கத்துடன் தன்னை ஒடுக்கிக்கொண்டார். அதுவும் ஊரில் அத்தனைபேரும் இளைய மகளை தூக்கிவைத்து பேச பேச மூத்த மகள் வார்த்தைகளும் காதிற்குள் ஒலித்துக்கொண்டே இருக்க எதையும் மறக்கமுடியவில்லை அவரால்.