ஷ்ராவணியின் முகமானது தன் மனதிலோ, நினைவிலோ எங்குமில்லை என தான் ஆனந்த் பேசிய பொழுதுகளில் அத்தனை கேலி செய்திருந்தான்.
இப்போது இதோ அவளை பார்த்ததும் எங்கோ பார்த்த ஞாபகம் என்று கூட தோன்றவில்லை.
இந்த பெண் தானே அவள்? இப்படித்தான் சட்டென்று அவன் எண்ணம் அவள் பக்கம் சென்றது.
“என்ன வம்சி?…” என்ற ஆனந்தின் அழைப்பை கூட கவனிக்கவில்லை.
“அந்த பொண்ணு தான், இந்த ஏரியால என்ன பன்றா?…” என பார்த்தான்.
முழுதாய் மூன்று மாதங்கள் சென்ற பின்னரும் பார்த்ததும் கண்டுகொள்ளும் அளவிற்கா அவள் தன் ஞாபகத்தில் இருக்கிறாள் என ஆச்சர்யமாக இருந்தது.
“உன்னை தான் வம்சி? யார் அந்த பொண்ணு?…” என கேட்கவும்,
“அவ தான். அன்னைக்கு பேசின பொண்ணு, நிலா…” என சொல்லியவன் உடனே சுதாரித்து,
“ஆனா அவ தானான்னு ஒரு டவுட் வேற, சரி நாம கிளம்புவோம்….” என்றான் ஹெல்மெட்டை தலையில் மாட்ட முயன்று.
“டேய் இருடா. அந்த பொண்ணுன்ற. பேசாம எப்படி போக? இரு…” ஆனந்த் பை கீயை எடுத்து வைத்துக்கொண்டான்.
“ப்ச், அடி வாங்குவ ஆனந்த், குடு…” என கேட்க,
“ஒழுங்கா சொல்லு. அந்த பொண்ணு தானே?…” என கேட்டு பார்க்க அவளும் இங்கே தான் பார்த்தபடி வந்துகொண்டிருந்தாள்.
“போச்சு, பார்த்துட்டா…” என்ற வம்சி,
“அறிவிருக்கா உனக்கு? அந்த பொண்ணு இப்ப பணம் குடுக்கலையேன்னு கில்ட்டியா பீல் பண்ணும்….” என்று ஆனந்தை திட்டியவன்,
“இதுக்கு தான் உன் கூட வரலைன்னேன். உன் பொண்ணு தேடறான்னு பார்க்க வந்தேன்ல…” என்று ஆனந்தை முறைத்தான்.
“ஹாய் ஸார், எப்படி இருக்கீங்க?…” என அவனை நெருங்கிவிட்ட ஷ்ராவணி கேட்க,
“ஹாய் நிலா…” என்றான் வம்சி.
“நிலா இல்லை. ஷ்ராவணிதேவி…” அவள் திருத்த,
“எப்படி இருந்தா என்னம்மா? அதுவும் பேர் தான். இதுவும் பேர் தான். அவன் உன்னை தான் கூப்பிடறான்னு உனக்கு தெரியுதே? போதும்…” என ஆனந்த் சம்மன் இல்லாமல் ஆஜராக,
“அசிங்கமா எதாச்சும் சொல்றதுக்குள்ள போய்டு…” என சத்தமின்றி பல்லை கடித்தான் வம்சி.
“ஹலோ ம்மா, நான் ஆனந்த். இவனோட பெஸ்ட் ப்ரண்ட். அப்டின்னு நானே தான் சொல்லிப்பேன்..” ஆனந்த் கலகலப்பாக பேச ஷ்ராவணி புன்னகையுடன் தலையசைத்தாள்.
“இதோ இங்க தான் என் வீடு. என் குழந்தையை பார்க்க தான் வந்திருக்கான்…” என ஆனந்த் சொல்ல,
“பை ம்மா. இன்னொரு நாள் மீட் பண்ணுவோம்…” என்று சொல்லி ஆனந்த் செல்லவும்,
“இங்க என்ன பன்ற? இன்னைக்கு ஆபிஸ் லீவ் தானே?…” என்றான் வம்சி.
“ஹாங்…”
“ப்ச், எப்பவுமே ஷாக் மொமென்ட் தான் குடுப்பியா நீ?…” என கேட்க,
“இல்ல இங்க ஒரு வேலையா வந்தேன்…”
“ஓஹ், உன் ஆபீஸ், ஹாஸ்டல் ரெண்டும் இந்த பக்கம் இல்லையே? அதான் கேட்டேன்….”
“இங்க எங்க ஹாஸ்டல் வார்டனோட பொண்ணுக்கு மேத்ஸ் ட்யூஷன் எடுக்க வந்தேன். இப்ப தான் முடிச்சுட்டு ஹாஸ்டல் கிளம்பறேன்…”
“வாட்?…” என்றான் அதிர்ச்சியுடன்.
“ஹ்ம்ம், ரெண்டு மாசமா வரேன்…” என்றவள்,
“ஸாரி, நானே உங்களுக்கு இன்பார்ம் பண்ணனும்னு இருந்தேன். பணம் ரெடி பண்ணிட்டு உங்களை காண்டேக்ட் பண்ணலாமேன்னு. அதான். அடுத்த மாசம் கண்டிப்பா குடுத்திருவேன்…” என்ற பொழுதே அவளின் உடல்மொழியில் ஒரு குன்றல்.
சின்ன பெண், இப்படி தன் முன்னால் அவள் நின்ற விதமும், பேசியதும் வம்சியை கனிய செய்தது.
“ஓகே, கூல்…” என்றவன்,
“நான் அதை கேட்கலை, உன்னை பார்த்ததும் நீயான்னு ஒரு டவுட். இங்க என்ன பன்றன்னு தான் திரும்ப திரும்ப பார்த்தேன். வேற ஒண்ணுமில்லை…”
ஆனால் ஷ்ராவணிக்கு அப்படி தோன்றவில்லை. முதலில் அவனை கவனித்துவிட்டவள் தன்னை கண்டுகொண்டானா என்பதில் ஒரு சந்தேகம்.
ஆனாலும் வம்சி திரும்ப திரும்ப பார்க்கவும், தான் கவனிக்காததை போல செல்ல முடியவில்லை.
இந்த மூன்று மாதங்களாக முதல் மாத சம்பளத்தில் இருந்து அவன் அழைத்து பணத்தை கேட்டுவிடுவானோ இல்லையா? கேட்டால் என்ன செய்வது என்று நினைப்பு துவங்கிவிட அடுத்தடுத்த மாதமும் இதே குற்றவுணர்வு தான்.
பணத்தை தருகிறேன் என சொல்லியும் தராமல், அதன் தகவலையும் அவனிடம் சொல்லாமல் இருந்தவளுக்கு நாளும், பொழுதும் அவனின் நினைப்பில் தான் விடிந்து முடிந்தது.
ஜம்பமாக முதல் மாதமே வாங்கிக்கொண்டு தான் ஆக வேண்டும் என வற்புறுத்தி அவனை சம்மதிக்க வைத்ததும் தான் தானே என தலையில் அடித்துக்கொள்ளாத நாளில்லை.
பணத்தை அவனாக கேட்கவில்லை. ஆனால் அத்தனை முறை வேண்டி வேண்டி தருகிறேன் என சொல்லிவிட்டு இப்போது அதை தராமல், அவன் பார்த்த பின்னரும் கவனிக்காமல் ஓடினால் ஏமாற்றுவதை போலாகுமோ என நினைத்து வந்துவிட்டாள்.
“இங்க இருந்து ரெண்டு ஸ்டாப் மாறி போகனும்…” என்று நேரத்தை பார்த்தவன்,
“பை…” என சொல்ல தலையசைத்தாள்.
“இன்னொரு விஷயம்…” என்று நகர்ந்தவளை நிறுத்தியவன்,
“ஸார்…”
“உன் வார்டனுக்கு தெரிஞ்சவங்களாவே இருந்தாலும் கவனமா இருக்கனும். புரியுதா?…” என கேட்க,
“ஹ்ம்ம்…”
“என்ன ஹ்ம்ம்? தெரிஞ்சவங்க வீடுன்னு கேர்லெஸ்ஸா இருக்க கூடாதுன்னு சொல்றேன். ஈசியா தலையசைக்கிற?…” அதுவரை இருந்த கனிவு எங்கோ சென்று அதட்டல் வந்துவிட்டது அவன் குரலில்.
“சரின்னு சொன்னேன் ஸார். நான் பார்த்துக்கறேன்…”
“ஹ்ம்ம், ஏதாவது பிரச்சனைன்னா கால் பண்ணு. ஓகே…” என்றதும் தலையசைத்தவள் திட்டுவானோ என பயந்து,
“ஓகே ஸார், கண்டிப்பா கால் பன்றேன். இப்ப நான் கிளம்பறேன்…” என்றாள் விளக்கமாக.
“என்ன கிண்டலா? கிளம்பு, போ….” என்றான்.
அதுவரை கூட ஷ்ராவணிக்கு மனதில் பயம் என்று எதுவுமில்லை. வர, பாடமெடுக்க, செல்ல என்று தான் இருந்தாள்.
இப்போது வம்சி அக்கறையில் எச்சரிக்கையாக, கவனமாக இரு என்றது அவள் அடிமனதில் ஒரு பயத்தை கிளப்பிவிட்டிருந்தது.
பேயறைந்ததை போல அவள் நடந்து செல்ல பைக்கின் கண்ணாடியில் சென்றுகொண்டிருந்தவளை பார்த்தவன் பைக்கை உதைக்க உதைக்க அது கிளம்பவே இல்லை.
“ப்ச், இது வேற…” என முண்ங்கிவிட்டு மீண்டும் உதைக்க மேலிருந்து யாரோ விசிலடித்து அழைக்க ஆனந்தாக தானே இருக்கும் என்று நிமிர்ந்து பார்த்தான்.
“கீ என்கிட்ட இருக்கு மேன்…” என சொல்லி சிரித்தான் ஆனந்த்.
“இவனை வச்சுக்கிட்டு…” என கடுப்பாய் பார்த்தவன் சாவியை தூக்கி போடுமாறு சைகை காண்பிக்க,
“இதோ வரேன்…” என கீழே வந்தான்.
“ப்ச், தேவுடா…” என காத்திருக்க ஆனந்த் வந்து சிரிக்கவும்,
“அய்ய, அத்தனை பல்லும் தெரியுது…” என ஆனந்தின் கன்னத்தில் குத்தியவன் சாவியை பிடுங்க,
“நான் கூட நீ ட்ராப் பண்ண சாவியை கேட்பன்னு நினைச்சேன். அந்த பொண்ணை அம்போன்னு அனுப்பி வச்சிட்டியே வம்சி? நீ தேற மாட்ட….” உதட்டை பிதுக்க,
“தேவையே இல்லை. நீ தேறின வரை போதும் டா…” என சாவியை பிடுங்கிக்கொண்டு,
“அந்த பொண்ணு வந்த வீட்டை கவனிச்சியா? ஒரு கண் வச்சுக்கோ. இங்க தான் ட்யூஷன் சொல்லித்தர வந்துட்டு போறா போல? பாவம்…”
“நான் என்ன கவனிச்சு?…” ஆனந்த் பேசும் முன் வம்சி வண்டியை கிளப்பி சென்றுவிட்டான்.
எதிர்பாராத சந்திப்புகள் தான் வாழ்க்கையின் அடுத்தடுத்த நகர்வை கொண்டு செல்லும் என்பதற்கு இணங்க அடுத்த சந்திப்பும் நிகழ்ந்தது.
அது வம்சி ஷ்ராவணியை மீண்டும் கடுமையாக எச்சரிக்கும் விதமாய் அமைந்துவிட்டதில் தான் இருவருக்குள்ளும் ஒரு பாதிப்பை உருவாகியது.