ஆசைகள் – 12
“ஹாய்…” என்று வந்தவனை பார்த்ததும் சிரித்தபடி வந்த தாமரை யமுனாவிடம் வந்து நின்றாள்.
“நல்லா இருக்கீங்களா ஆன்ட்டி?…” என கேட்க,
“ஆன்ட்டி நல்லாவே இல்லை…” என்றார் யமுனா சிரித்தபடி.
அவர் எதை சொல்கிறார் என தாமரைக்கு புரியாமல் விழிக்க பின் சரளா தான் மகளின் கையை கிள்ளி,
“அத்தை சொல்லு தாமரை. அண்ணி அதான் சொல்றாங்க…” என்றார்.
“ஓஹ், ஸாரி, அத்தை எப்படி இருக்கீங்க?…” என்றாள் அவரிடத்தில் உடனே மாற்றிக்கொண்டு.
“அமோகமா இருக்கேன். எப்ப என் மருமக வீட்டுக்கு வருவான்னு இருக்கேன். இவங்களோட பேசி பேசி போரடிச்சு போச்சு. அதான் நீ எப்ப வருவன்னு பார்த்துட்டு இருக்கேன்…” என்றார் படபடவென்று.
தாமரைக்கு என்ன பதில் சொல்லவென்றே தெரியாமல் சிரித்துக்கொண்டே அவர் பேசுவதை கேட்டு நிற்க,
“யமுனா என்ன பேசிட்டே இருக்க? அந்த இனிப்பை எடுத்து குடு…” என்றார் பூங்காவனம்.
“நல்லவேளை மறந்தே போய்ட்டேன்…” என்று தனது பையில் கையோடு கொண்டு வந்திருந்த சர்க்கரை பொங்கலை எடுத்து மருமகளுக்கு தர,
“என்ன அத்தை இது?…” தாமரை அந்த பாத்திரத்தை வாங்கி திறக்கவுமே அவ்விடம் நெய் வாசத்தில் நிறைந்தது.
“ஹ்ம்ம், அமேஸிங்….” என நிவி சொல்ல,
“வாவ் சர்க்கரை பொங்கல்…” என்றாள் தாமரை.
ஸ்பூனால் ஒரு வாய் எடுத்து போட்டுக்கொண்டவள் அதன் சுவையில் கண்மூடி நின்றாள்.
மற்றவர்களும் பொங்கலை எடுத்துக்கொள்ள அவர்களுக்கும் அத்தனை பிடித்திருந்தது.
“வாவ் அத்தை, உண்மைல என்ன சொல்லன்னே தெரியலை. ரொம்ப நல்லா இருக்கு. எங்கம்மாவும் செய்வாங்க. ஆனா அதை விட சூப்பரா இருக்கு…” என தாமரை அடுத்து சாப்பிட்டபடி சொல்லவும்,
“அண்ணி உங்களுக்கு தான் இது வாவ். எங்களுக்கு இது ஆவ்வ்வ்…” என்றான் தர்ஷன் கிண்டலாக.
“ஏன் தர்ஷ்? பொங்கல் பிரமாதமா இருக்கே. இதை விட டேஸ்ட்டா செஞ்சிட முடியுமா?…” என தாமரை யமுனாவிற்கு ஆதரவு கொடி பிடிக்க,
“அங்க தான் நான் சொல்ல வரதையே நீங்க கேட்கலை. பொறுமை அண்ணி…”
“நாளைக்கு நீ ஆபீஸ் போகனும்டா தர்ஷா…” என்றான் கதிர் இப்போது தம்பிக்கு எச்சரிக்கை விடுப்பதை போல.
“இவன் வேற…” என அண்ணனை முறைத்தவன்,
“எங்கம்மா எல்லா ஸ்வீட்டும் பிரமாதமா செய்வாங்க. ஆனா அம்மா சந்தோஷமாகிட்டாலே இந்த சர்க்கரை பொங்கல் தான். ஊருப்பட்ட இனிப்புவகை தெரியும். ஆனா ஆவூனா பொசுக்குன்னு பொங்கப்பானையை தான் கையில எடுப்பாங்க…”
தர்ஷன் கிண்டலாக பேச பேச யமுனா அவர்கள் முன்னிலையில் இளையமகனை ஒன்றும் சொல்லாமல் பார்த்து சிரித்துக்கொண்டு நின்றார்.
“சரி எவ்வளவு நேரம் தான் இங்கயே இருக்கறதாம்? சட்டுப்புட்டுன்னு இங்க வேலையை முடிச்சுட்டு அடுத்து பார்க்க வேண்டாமா?…” என பூங்காவனம் சொல்ல,
“ஆமா ஆமா…” என்று யமுனா நிவேதா சரளாவுடன் செல்ல ஆண்கள் தனி பிரிவிற்கு செல்ல தாமரையும் கதிரும் தனியே நின்றனர்.
“தாமரை நீ போய் முகூர்த்த புடவையை பாரும்மா. எந்த கலர் புடிக்குதுன்னு ரெண்டுபேரும் பாருங்க…” என்று அனுப்பிவைத்தார் யமுனா.
“ஹ்ம்ம், வா…” என கதிர் அழைக்கவும்,
“எங்க வா? நீங்க முன்னாடியே இங்க வந்திருக்கீங்களா?…” என்றாள் தாமரை.
“இல்லை. லேடீஸ் செக்ஷன் இதான் பர்ஸ்ட் டைம்…” என்றதும்,
“வாங்க. நாங்க ஏற்கனவே பார்த்துட்டு இருந்தோம். அங்க போகலாம்…” என திருமண பட்டுக்கள் இருக்கும் பிரிவிற்கு சென்றாள் அவனுடன்.
“எப்போ வந்தீங்க எல்லாரும்?…” என கதிர் கேட்டதும் புடவைகளை பார்த்துக்கொண்டே தாமரையும் பேசினாள்.
“நாங்க வந்து ஒருமணி நேரம் இருக்கும். வீட்டுல எல்லாருக்கும் ட்ரெஸ் எடுக்கனும். மாமாவுக்கு அத்தைக்கு எல்லாம். அதான் பார்த்து எடுத்து வச்சிட்டு இருந்தோம். நீங்களும் வந்தாச்சு…” என்றவள்,
“நான் நினைக்கவே இல்லை நீங்க சீக்கிரம் வருவீங்கன்னு…” என சொல்லவும் கதிரின் முகத்தில் புன்னகை மின்னியது.
“கொஞ்சம் மேனேஜ் பண்ணிட்டேன். அதான் கிளம்பி வந்தாச்சு. ஆனா புடவை செலெக்ட் பண்ண எனக்கு தெரியாது. உனக்கு பிடிச்சதை எடு…” என்றான்.
தாமரை ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து எடுக்க கதிருக்கு அது அவளுக்கு பொருந்தி வருகிறதா என பார்க்கவே சரியாக இருந்தது.
விரித்து பார்க்கையில் நன்றாக இல்லாத புடவை அவள் மேல் வைத்து காண்பித்ததும் பிடிப்பதை போல இருந்தது.
அவனுக்கே குழப்பம் இத்தனை புடவையில் எதை தேர்ந்தெடுக்க என்று. அவளுக்கு எப்படி இருக்குமோ? எதை தேர்வு செய்வாளோ? என நினைக்கையில் அது சுவாரஸியமாகவும் இருந்தது.
“இத்தனை புடவையில எது பிடிச்சிருக்கு உனக்கு?…”
“அதைத்தான் பார்த்துட்டு இருக்கேன்…” என்றவள் மயில் நிறத்திலான புடவையை தன் மேல் வைத்து அவனிடத்தில் காண்பித்து புருவத்தை உயர்த்தவும் கதிரின் விழிகள் விரிந்துகொண்டது.
“ஆசாம்…” என அவனறியாமல் சொல்லிவிட,
“செலெக்ட்டட்…” என்றாள் தாமரை.
“நிஜமாவா? எப்படி? இன்னும் அம்மா, அத்தை யாரும் பார்க்கலையே? பிடிச்சிருக்கா? இல்லை நான் சொன்னதுக்காக ஓகே பண்ணுனியா?…” என்றன கதிர்.
அவள் தேர்ந்தெடுத்துவிட்ட விதத்திலேயே புரிந்துகொண்டான் தன்னுடைய ரசனைகளை கொண்டு தன்னை கவனித்தபடி தான் அதுவரை புடவைகளை அவள் பார்த்துக்கொண்டு இருக்கிறாள் என.
“இது எனக்கு எப்படி இருந்தது? அதை சொல்லுங்க…”
“ஏற்கனவே சொல்லிட்டேனே?…”
“அதான் நானும். சொல்லிட்டேனே?…” என்றாள் அவன் சொல்லியதை போலவே.
“ஓகே, நான் போய் ஷர்ட் எல்லாம் பார்த்துட்டு வரேன். இங்க ஓகே பண்ணிட்டு டைம் இருந்தா மேல வா…” என்று சொல்லி அவன் எழுந்துகொண்டதும் நிவேதா, சரளா, யமுனா மூவரும் வந்துவிட்டார்கள் தாமரையிடம்.
“சூப்பர் கலர். அதுவும் டிசைன் பக்கா. அக்கா உனக்கு ஆப்ட்டா இருக்கும்…” என நிவேதா தாமரையின் மீது வைத்து பார்த்து குதூகலிக்க,
“ம்மா, புடவை நல்லா இருக்கா?…” என தாமரை சரளாவிடம் கேட்டாள்.
“கல்யாணம் உனக்கு. உனக்கு புடிச்சிருக்குல. அப்ப நல்லா தான் இருக்கும்…” என யமுனா அதை பில் போட சொல்லி அனுப்பிவிட்டார்.
வேறு புடவைகளை பார்த்துக்கொண்டே யமுனா நிவேதாவிடம் பேச, தாமரையை தனியே அழைத்து வந்த சரளா,
“நான் சொன்ன விலைக்கு தான எடுத்த தாமரை?…” என்றார்.
“ஆமாம்மா. ரொம்ப அதிகமா எடுக்கலை. புடவை விலையை பார்த்து தான் எடுத்தேன்….”
“நல்லதும்மா. அடுத்து எடுத்துட்டு கிளம்புவோம்..” என சரளா மீண்டும் புடவை தேர்வில் சென்றுவிட்டார்.
சற்று நேரத்தில் உடைகள் எல்லாம் எடுக்கப்பட்டு தனி தனியே பில் போடப்பட்டு வாங்கிக்கொண்டார்கள்.
“புடவை எங்கக்கிட்டையே இருக்கட்டும்…” என யமுனா சொல்லவும்,
“அதுதானுங்க அண்ணி முறை…” சரளாவும் ஆமோதித்தார்.
“சட்டை தைக்கிறது டிஸைன் வைக்கனும்னு அங்கை சொல்லிட்டு இருந்தா. உங்களுக்கு எந்த இடத்துல கச்சிதமா இருக்குமோ அங்கயே தைக்க குடுங்க. இல்லன்னா அங்கைக்கு தெரியும் நாங்க குடுக்கறது. அங்க குடுங்க. நல்லா டிஸைன் வைக்கும்…” யமுனா விவரம் சொல்லவும்,
“அங்க தான் நாங்களும் குடுக்கறோம் அண்ணி. நாளைக்கே போய் தைக்க குடுத்தா தான் கல்யாணத்துக்குள்ள தைக்க முடியும்…” சரளாவும் அவரிடத்தில் கூறினார்.
“ஆமா, அதுவும் இருக்குது. இந்த காலத்துல புடவையை கூட ஈஸியா எடுக்க முடியுது. சட்டை தைக்கத்தான் ஆளை தேடனும். அதுவும் நல்லா தைக்கனும்…” என கதை பேச ஆரம்பித்துவிட்டார் யமுனா.
“ம்மா, அடுத்து பார்க்க வேண்டாமா?…” என தர்ஷன் சொல்லவும்,
“ஆமா, வாங்க கிளம்புவோம்…” என்று வழக்கமாக நகை எடுக்கும் கடைக்கு சென்றார்கள் அடுத்ததாக.
“நாங்க இங்கதான் வழக்கமா நகை செய்யறோம். நம்பிக்கையா செய்யலாம்…” என யமுனா அந்த கடையின் உரிமையாளரை அறிமுகப்படுத்தியும் வைத்தார்.
அங்கேயே திருமணத்தன்று தாமரைக்கு போடவென மாப்பிள்ளை வீட்டு சார்பாக செயினும், மோதிரமும் அவளுக்கு பிடித்ததாய் எடுக்க சொல்ல சரளா குடும்பத்தினருக்கு அதிர்ச்சி.
இதை எல்லாம் அவர்கள் சொல்லவே இல்லையே தங்களிடம் என திகைத்து போனார்கள்.
ஏற்கனவே கதிருக்கும் செயினும், மோதிரமும் எடுக்கவேண்டும் என நினைத்திருக்க இப்போது இங்கே அவர்கள் சொல்லியதை பார்த்துவிட்டு அங்கேயே எடுத்துவிடலாமா என யோசித்தார்கள்.
“சரளா இப்படி வா…” என்று மனைவியை தனியே அழைத்தார் சோமநாதன்.
“சொல்லுங்க, பிள்ளைங்க அங்க இருக்காங்க…” என மகள்களை பார்த்துக்கொண்டே பேசினார் சரளா.
“இல்லை, நாமளும் மாப்பிளைக்கு மோதிரம், செயின் போடனும்ல. இங்கயே எடுத்துருவோமான்னு கேட்க தான் கூப்பிட்டேன்…”
“இப்ப கையில பணம் ஒன்னும் கொண்டு வரலையே? அதோட துணிமணிக்கே கொண்டுவந்தது காலி ஆகிருச்சு…”
“அதான் நகையை வச்ச பணம் இருக்கே சரளா. அதுல எடுப்போம்…”
“எடுக்கலாம்ங்க. இன்னும் செலவு எவ்வளவு வருதுன்னு தெரியலை. மத்த கணக்குவழக்கு எல்லாம் இருக்குது. அதுக்கு திடீர்ன்னு பணம் குடுக்க வேண்டியது வந்தா திரும்ப அந்த நேரம் நகையை அடகு வைக்க முடியாதுல…”
“இது நாம எடுக்க வேண்டிய முறை தானே?…”
“ஆமா, நான் நாம சீட்டு போட்டுட்டிருந்த நகைக்கடையில எடுக்கலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். அங்கன்னா இதுவரைக்கும் எவ்வளவு கட்டிருக்கோம்ன்னு பார்த்துட்டு மிச்சத்துக்கு பணத்தை குடுத்துக்கலாம்…” என்றார் சரளா.
“எங்கனாலும் செய்ய தான போறோம். இதுக்கு இன்னொருக்க மாப்பிள்ளையை அலைய வைக்க முடியாது. இங்க செய்யனும்னா ஆடர் கூட குடுத்துருவோம். உடனே காசு முழுசா குடுக்க வேண்டாம். இப்ப கொஞ்சம் முன்பணம் கட்டினா கல்யாணத்துக்கு நாலு நாள் முன்னாடி வந்து பணத்தை குடுத்துட்டு வாங்கிப்போம்…”
சோமநாதன் சொல்வதும் சரி என்று பட தலையசைத்தார் சரளா. உடனே கதிரை அழைத்து வந்து மோதிரத்திற்கு அளவெடுக்க சொல்ல அவனுக்கு சங்கடமாய் இருந்தது.
“இப்ப எதுக்கு இதெல்லாம்? வேண்டாம் மாமா…” என்று அவன் மறுக்க சோமநாதன் முகமே வாடிவிட்டது.
“இதுவும் முறை தான் மாப்பிள்ளை. நாம பேசிக்கலை அதை பத்தி. ஆனா எங்க முறையை செய்யனும்ல. நானே உங்க வீட்டுக்கு வந்திருப்பேன் உங்களை ஒரு நாள் கூட்டிட்டு போய் நகை எடுக்கன்னு…” என அவர் சொல்லவும்,
“கதிரு, போப்பா. இதுவும் வழக்கம் தான்…” என பூங்காவனம் சொல்லவும் தான் மோதிர அளவை கொடுத்தவன் எந்தவிதமான டிசைனை தேர்வு செய்வது என குழம்பி போனான்.
“ம்மா…” என தாயை அழைத்தவன் யமுனாவுடன் தாமரையும் வர,
“இங்க வா…” என்று அவளை அழைத்தான்.
“ஹப்பா, விடிஞ்சிருச்சு. இனி என் மருமக பாடு…” என யமுனா சொல்ல,
“ம்மா விடிஞ்சு இப்ப மொட்ட வெயில் பல்லை காட்டுது. இப்பத்தான் உங்களுக்கு விடியுதாக்கும்? அலைச்சல்ல எங்கியாச்சும் அடிபட்டிருச்சா?…” என தர்ஷன் தாயை கலாய்க்க,
“அட போடா டேய். இவன் என்னவோ சொல்ல என்னை கூப்பிட்டான். கூட தாமரை வரவும் அவளை அழைச்சுக்கிட்டான். இப்பவாச்சும் அவனுக்கு புத்தி வந்துச்சேன்னு சந்தோஷப்பட்டேன்…”
“அட இதுக்கா இவ்வளவு சந்தோஷம்? என் கல்யாணத்துல பாருங்க. உங்களை நிமிஷத்துக்கு நிமிஷம் எப்படி சந்தோஷமா வச்சுக்கறேன்னு?…”
“அதெப்படிடா?…”
“கூட கூப்பிட்டதுக்கே இவ்வளவு சந்தோஷப்படற என் தாய் நீங்க எனக்கு வர போற பொண்டாட்டியை என் கூடவே கை கோர்த்துட்டு சுத்தினா எவ்வளவு சந்தோஷப்படுவீங்க. அதை உங்களுக்கு எப்படி தரேன்னு மட்டும் பாருங்க…”
“முதுகு தோலு பிஞ்சிரும் படவா. சேட்டைய பாரு. அவனுக்கு ஒன்னும் தெரியாது. அதனால எனக்கு சந்தோஷம். உன்னையெல்லாம் நம்பவே முடியாது. நான் கூடவே தான் இருப்பேன். ஆமா…” என்று யமுனா மிரட்டலாக சொல்ல,
“யாருக்கு? அவனுக்கா ஒன்னும் தெரியாது? இத்தனை பேர் இருக்க அண்ணியை வான்னு கூப்பிட்டு பக்கத்துல உக்கார வச்சிருக்கான் அவனை நம்புவீங்க. என்னை நம்ப மாட்டீங்களா?…”
“மாட்டேன்…” என்றார் யமுனா வேகமாய்.
அவர் சொல்லவும் தர்ஷன் முறைக்க பின்னால் நின்ற நிவேதா சிரித்தவும் அவளை திரும்பி முறைத்தவன்,
“ஓய் என்ன கெக்கபிக்கே? ஓங்கி கொட்டினேன். இன்னும் அரையடி உள்ள இறங்கிருவ. ஆளைப்பாரு…” என மிரட்டி சொல்லவும் வாயை மூடிக்கொண்டாள் நிவேதா.
இதுவே வேறு யாருமாக இருந்தால் நிவி பேச்சே வேறாக இருந்திருக்கும். அக்காவின் புகுந்த வீட்டு மனிதர்கள். அதனாலேயே வாயை மூடிக்கொண்டாள்.
ஏற்கனவே சரளா சொல்லியே தான் அழைத்து வந்திருந்தார். அங்கே அளவாக பேசவேண்டும் என்று. அதனால் ஒன்றும் சொல்லாமல் தாயின் அருகே சென்று நின்றுகொண்டாள்.
‘அந்த பயம் இருக்கட்டும்’ என தன் அண்ணனை பார்த்தான் தர்ஷன்.
“ப்ச், இன்னும் ப்ளைனா இருக்கட்டும். டிஸைன் வேண்டாம் தாமரை…” என கதிர் அவளிடத்தில் சொல்லிக்கொண்டு இருந்தான்.
தனக்கு மோதிரத்தை அவளையே தேர்ந்தெடுக்க அழைத்துவிட்டு அவள் காண்பிப்பவற்றை எல்லாம் மறுத்துக்கொண்டே இருந்தான் அவன்.
முதலில் செயினை பார்த்தவள் அவன் இது வேண்டாம் அது வேண்டாம் என மாற்றி மாற்றி மறுத்து சொல்ல சரி மோதிரத்தை தேர்ந்தெடுத்துவிட்டு பின் செயின் பார்க்கலாம் என்று மோதிரத்தை பார்க்க சலித்து போனாள்.
தங்களை சுற்றி அத்தனை பேரும் நிற்க ஒன்றும் சொல்லவும் முடியாமல் அவனிடம் கேட்கவும் முடியாமல் அவள் திணற யமுனா தான் தலையசைத்து என்னவென்று மருமகளிடம் கேட்டார்.
‘ஒன்றுமே சொல்லவில்லை’ என உதட்டை பிதுக்கி அவள் சொல்ல கதிர் அமர்ந்திருந்த விதத்தையும் பார்த்துவிட்டு,
‘விடாத அவனை’ என வாயசைத்தவர்,
“சரி அவங்க பார்த்துட்டு சொல்லட்டும். வாங்க நாம இந்த பக்கம் பார்க்கலாம்…” என சொல்லி நகர அவரை புரிந்துகொண்டு மற்றவர்களும் நகர்ந்தார்கள்.
“எல்லாரும் போயாச்சு. இப்போ சொல்லுங்க. உங்களுக்கு எதுவுமே பிடிக்கலைன்னா இனி புதுசா டிஸைன் வரையத்தான் செய்யனும்…” என்றாள் கேலியாக.
“ஹே தாமரை. உண்மையை சொல்லனும்னா எனக்கு நகை போட்டுக்கற பழக்கம் இல்லை. இப்போன்னு இல்லை சின்னதுல இருந்தே…” என கதிர் சொல்ல,
“இதை முதல்லையே சொல்லலாமே? இவ்வளவு நேரம் தேடிருக்க வேண்டாம்…”
“அதுக்கில்லை. மாமா கூடவே நின்னாங்க. இதுவும் வழக்கம், கண்டிப்பா எடுக்கனும்னு அம்மாவும் சொல்லிட்டாங்க. அதான்…” என்றான்.
அவன் லேசாய் புருவம் சுருக்கி நெற்றியை நீவியபடி அசட்டு புன்னகையுடன் சொல்ல, தலை சாய்த்து அவன் சொல்லியதையே ரசனையுடன் பார்த்தாள் தாமரை.
“ஹலோ என்ன நான் பேசிட்டே இருக்கேன். நீ இப்படி பார்க்கற?…” என அவன் கேட்டதும் தான் தன்னுணர்வு வந்தாள்.
“ஹ்ம்ம், நத்திங்…” என்று சிரித்தவள்,
“ஓகே, இப்போ பார்க்கனுமா வேண்டாமா?…” என்றாள்.
“வேற வழி இல்லை. பார்த்து தான் ஆகனும். ஆனா ரொம்ப உறுத்தாம மெல்லிசா. லைட் வெய்ட்டா…” என அவன் அடுக்க,
“அப்போ நீங்களே செலெக்ட் பண்ணுங்க…” என்று மோதிரங்கள் அடங்கியிருந்த கேட்லாக்கையும், மோதிர ட்ரேயையும் அவன் பக்கம் நகர்த்த,
“உனக்கு நான் சேரி செலெக்ட் செய்ய ஹெல்ப் பண்ணேன்ல. இதை நீ தான் பன்ற…” என்றான் அவள் புறம் நகர்த்தி.
“ஹ்ம்ம், அப்போ நான் எதை சூஸ் பண்ணாலும் ஓகே சொல்லனும்…”
“இது பயங்கரமா இருக்கே. ஆனா பிடிக்கலைன்னா நோ தான் சொல்லுவேன்…” என்றான் கதிர்.
பின் அவன் சொல்லியது போலவே உறுத்தாதவண்ணம் தேர்வு செய்து அவனின் அளவையும் எடுத்துக்கொண்ட பின்னர் தான் எழுந்தாள்.
“எப்படியும் லாக்கர்ல தூங்க போகுது. அதுக்கு எத்தனை மெனக்கெடல்?….” என சொல்லியபடி அவன் எழுந்துகொள்ள,
“அதை நான் பார்த்துக்கறேன். எடுத்தா போடாம இருக்க கூடாது கல்யாணம் ஆனதும் கொஞ்சம் நாளாவது போடனும்…” என தாமரை சொல்லவும்,
“ஓஹ், அதுக்குள்ளயா?…” என்றான் ஒரு அர்த்த புன்னகையுடன்.
தாமரை பதில் சொல்வதற்குள் குடும்பத்தினர் வந்துவிட தேர்வு செய்ததை காண்பித்தவள் எத்தனை சவரன் என்றும் அவளே சொன்னாள்.
“என்னம்மா இது? இப்படி புல்லுப்போல செயினை போட்டா என்ன நினைப்பாங்க?…” என சோமநாதன் கவலையுடன் மகளை பார்த்தார்.
“அவன் இதை போடறதே பெருசுங்க அண்ணே. அவன் தான் இது வேணாம். அது வேணாம்ன்னு சொல்லிருப்பான். நகையே பிடிக்காது. விடுங்க. இது போதும். செய்யனும்னு நினைக்கிற மனசு இருந்தாலே போது. சரி வாங்க கிளம்புவோம்…” என யமுனா சமாதானமாக சொல்ல அவர்களுக்கு தலையசைத்து ஒப்புக்கொண்டனர்.
திருமாங்கல்யத்திற்கு பொன் உருக்க கொடுத்துவிட்டு நகைகளுக்கும் ஆடர் கொடுத்துவிட்டு அருகில் இருந்த உணவகத்திற்கு சாப்பிட சென்றார்கள்.
அங்கே வைத்தே மற்ற பேச்சுக்களும் பேசி முடித்துக்கொண்டார்கள் இரு குடும்பங்களும்.
“நாளைக்கு பத்திரிக்கை வந்திரும். நீங்க உங்க குலதெய்வ கோவில்ல வச்சு கும்பிட்டு பத்திரிக்கை குடுக்க ஆரம்பிப்பீங்களா இல்லை இங்க கோவில்ல வச்சு கும்பிடுவீங்களா?…” என யமுனா கேட்க,
“நாங்களும் குலதெய்வம் கோவிலுக்கு தான் போவோம். ராமேஸ்வரம் தான் எங்க குலதெய்வம் கோவில் இருக்கற ஊர்…” என சரளா சொல்ல யமுனாவும் தாங்களும் செல்வதாக சொன்னார்.
இன்னும் இரு வாரங்களே இடையில் இருக்க முதலில் பத்திரிக்கையை குலதெய்வத்திற்கு வைத்துவிட்டு மற்றவர்களுக்கு வைக்க ஆரம்பிக்க வேண்டும்.
கதிரின் குடும்பமே அனைத்திற்கும் ஏற்பாடு செய்துவிட்டபடியால் பத்திரிக்கை வேலைகள் மட்டுமே இருந்தது சோமநாதனுக்கு.
அவருக்கு எந்த சிரமத்தையும் வைக்காமல் அவர்களே அத்தனையையும் பார்த்துவிட்டு மறக்காமல் தங்களிடம் பகிர்ந்துகொள்ள எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ என அகமகிழ்ந்து போனார்கள் தாமரையை சேர்ந்தவர்கள்.
இப்போது தான் நகைகளை லாக்கரில் இருந்து எடுத்து மகள் சொல்லியதை போல சரளாவினுடையதையும், தாமரைக்கு போடுவதாக இருந்த நகையில் பாதியையும் பேங்கில் வைத்து பணம் பெற்றிருந்தார்கள்.
அன்று இரவு ராமேஸ்வரம் கிளம்புவதாக இருக்க மாலை சோமநாதன் வரும் பொழுதே கையில் பேக்குடன் வந்தார்.
“என்னங்க இது பாலிஷ் போட குடுத்த நகையாச்சே?…” என சரளா கேட்க,
“எல்லாம் ரெடியா? பஸ்க்கு அரைமணி நேரத்துக்கு முன்னமே கிளம்பனும். அப்பத்தான ட்ராபிக் இல்லாம போக முடியும்…” என்ற சோமநாதன்,
“ஆபீஸ் விட்டு கிளம்பும் போதே போன். நம்ம நகை பாலீஷ் பண்ண குடுத்திருந்த கடையில இருந்து கூப்பிட்டுட்டார். நகை எல்லாம் ரெடி ஆகிருச்சுன்னு. அதான் வர வழியில வாங்கிட்டும் வந்துட்டேன். உள்ள வை…” எனவும் சரளாவும் வாங்கிக்கொண்டார்.
“உன் அண்ணன் எந்நேரம் கிளம்பறாராம்?…” என கேட்க,
“சொல்ல மறந்துட்டேன். அண்ணே மத்தியானம் வந்தாங்க. பணம் குடுத்துட்டு போயிருக்காங்க. தெரிஞ்சவர்ட்ட சொல்லிருந்தாங்களாம். அவங்க கையில இருந்ததை இப்போதைக்கு குடுத்திருக்காங்க. அதான் வீட்டுக்கு போறப்போ நம்மட்ட குடுத்துட்டு கிளம்பிட்டாங்க. அவங்க நேரா பஸ்க்கு வந்திடறேன்னு சொல்லிட்டாங்க…”
“அப்ப சரி. கிளம்புவோம். பொண்ணுங்க எங்க?…”
“ரெண்டுபேரும் மாடில இருக்காங்க…” என்று சொல்லியவர் நகையும், பணத்தையும் பத்திரப்படுத்துவிட்டு கிளம்பினார்.
கோவிலுக்கு செல்லும் முன்பு அங்கையிடம் சொல்லி வீட்டை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
திரும்பி வந்த நேரம் வீட்டு கதவு உடைக்கப்பட்டு நகையும், பணமும் கொள்ளை போயிருந்தது.