தாமரை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை கதிர் திடீரென்று வந்து நின்று பேசவேண்டும் என்பான் என.
அலுவலகத்தின் மாடியிலேயே இருக்கும் காபி கஃபேயில் அவன் காத்திருக்க சோர்வுகள், தயக்கங்கள் எல்லாம் சென்று உற்சாகத்துடன் அவனை காண ஓடினாள்.
ஒருவாரம் முன்பு தான் பார்த்திருந்தாள். ஆனாலும் இப்போது அவன் தன்னை தேடி வந்ததும் பெரிய பற்றுகோல் கிடைத்துவிட்டதை போல தோன்றியது.
முதலில் அத்தனை குழப்பம். அங்கையின் வீட்டிற்கு வந்தவர் பேசி சென்றதும், அதன் பின் இந்த திருமணம் தேவையா என்னுமளவிற்கு யோசித்ததும் என தன்னையே வருத்திக்கொண்டு இருந்தாள்.
விநாயகம் வந்தது திருமணம் பற்றிய பேச்சுக்கள், திருமணம் முடிந்ததும் மறுவீடு விருந்துக்கு என்ன செய்யவேண்டும் என்னும் விவாதங்கள் என குடும்பத்தினர் உற்சாகத்துடன் பேசிக்கொண்டு இருந்ததை பார்த்தவளுக்கு தன்னுடைய முட்டாள்தனம் புரிந்தது.
அனைத்திற்கும் மேல் இலகுவாய் திருமணம் வேண்டாம் என்று நினைத்தவளுக்கு கதிரை விட்டு விலகி இருக்க முடியுமா என்னும் நினைவு பிறக்க மனது தடம்புரண்டது.
அத்தனை யோசனைகளும் முன்தங்கி தனக்கானவன் மீதான விருப்பம் மேலோங்க விழி மூடி நிதானித்தவள் அவனுடனே சேர்ந்து குடும்ப சிக்கல்களை சரி செய்வது என முடிவிற்கு வந்தாள்.
அந்தளவிற்கு கதிரின் மீதும் நம்பிக்கை வலுவாய் இருந்தது. எனக்கானவன் என்னோடு நிற்பான் என்னும் சிந்தனை எங்கணம் பிறந்ததோ? அவள் முழுதாய் கதிருக்கானவளாக தன்னை உணர்ந்தாள்.
திருமணம் நடக்கட்டும். எது எதற்கோ ஏன் இதை நிறுத்த வேண்டும்? அத்தனைபேரையும் வருத்த வேண்டும் என உறுதியான முடிவிற்கு வந்த பின்னர் மனதும் தெளிவாகி மகிழ்ச்சியும் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.
நல்லவேளை இதை பற்றி வீட்டில் பேசி அவர்களையும் குழப்பவில்லை என்ற நிம்மதியுடன் அலுவலகம் புறப்பட்டு சென்றவளுக்கு கதிருக்கு பேசுவோமா வேண்டாமா என்று தோன்றிக்கொண்டே இருக்க அவனே வந்து சேர்ந்தது இன்ப அதிர்ச்சி தான்.
போன் செய்து அலுவலகத்தின் வெளியே நிற்பதாக சொல்லவும் துள்ளிக்குதிக்காத குறை தான் தாமரைக்கு.
உடனே கஃபேக்கு வர சொல்லிவிட்டு தானும் அங்கே செல்ல காலை அந்த நேரத்தில் ஆட்களின்றி அமைதியாக இருந்தது அவ்விடம்.
“ஹாய் கதிர்…” என முகம்கொள்ளா சிரிப்புடன் அவள் வந்து நின்றதும் நிமிர்ந்து பார்த்தவன்,
“ஹாய்…” என பதிலுக்கு சொல்ல எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.
“வாட் எ சர்ப்ரைஸ் கதிர்…” என இன்னும் நம்பமுடியாமல் தாமரை கேட்டாள்.
“ஹ்ம்ம், எல்லாமே சர்ப்ரைஸா தான் நடக்குது. என்ன பன்றது?…” என கதிர் சொல்லவும்,
“புரியலை…” என்றாள் குழப்பத்துடன்.
தன்னளவிற்கு கதிரின் முகத்தில் அந்த மகிழ்ச்சியோ, தன்னை பார்க்க வந்த துள்ளலோ எதுவும் இல்லை. முகத்தில் என்ன உணர்வென்றே கண்டுகொள்ளமுடியாத பாவனை.
“கதிர்?…” என்றாள் கேள்வியாய்.
“என்னை நீ கூப்பிடுவன்னு நினைச்சேன். ஆனா கூப்பிடாமலே நான் உன்னை பார்க்க இப்படி வருவேன்னு நினைக்கலை தாமரை…”
முகத்தை சாதாரணமாய் வைக்க முயன்று கோபத்தை அடக்கிய குரலில் அவன் பேச அவனிடம் முதல் முதல் தன்னை பார்க்க வந்தன்று பேசியதை போல இருந்தது தாமரைக்கு.
“என்ன சொல்றீங்க கதிர்?…”
“இன்னும் ஒருவாரம் இருக்கு கல்யாணத்துக்கு. யார் எப்போ என்ன பேசுவாங்களோ? உடனே உன்னோட பர்ஸ்ட் தாட் இந்த மேரேஜை நிறுத்தறது தான் இல்லையா?…”
“கதிர் நான்…”
“உன்கிட்ட இன்னும் எத்தனை தடவை சொல்லனும்னு எனக்கு புரியலை. கல்யாணம்ன்னா நீ மட்டும் தான்னு நினைச்சுட்டு இருக்கியா? அப்போ உன்னை பார்க்க வந்த நான், என் குடும்பம், உன்னோட குடும்பம் இது எதுவும் உன்னோட மைண்டுக்கு வரவே இல்லை…”
தாமரைக்கு அங்கை மூலமாக கதிரிடம் விஷயம் சென்றிருக்கிறது என புரிந்து போனது.
கதிரின் கோபம் ஏன் என கண்டுகொண்டவளுக்கு அவனை எப்படி சமாதானம் செய்ய என விழித்தாள்.
“நான் ஒரு விஷயத்தை ஒருதடவை தான் சொல்லுவேன். இங்க பாருங்க தாமரை…”
“என்ன?…” என்று அவனின் பன்மையில் மனதிற்குள் கலங்கி போனாள்.
“கதிர் ப்ளீஸ், நான் என்ன சொல்ல வரேன்னு கொஞ்சம் கேளுங்க….”
“எனக்கு தான் தெரியுமே உங்களோட முடிவு. இதுல இப்பவும் நீங்க அதை சொல்லி என் காது குளிர நான் கேட்கனுமா?…” என அவள் பேசவே அனுமதிக்கவில்லை அவன்.
“இங்க பாருங்க கதிர்….”
“நீங்க முதல்ல நான் சொல்றதை கேளுங்க. இது ஒன்னும் விளையாட்டு இல்லை. நினைச்சு நினைச்சு மனசை மாத்திக்கறதுன்னு. வேண்டாம்ன்னு எப்படி சொல்ல உங்களுக்கு மனசு வந்துச்சுன்னு எனக்கு தெரியலை…”
“என்னவும் இருக்கட்டும், யார் பேசினாலும் நீங்க அதை எல்லாம் கேட்பீங்களா? நாளைக்கு கல்யாணத்துக்கு பின்னாடியும் இதே மாதிரி யாராச்சும் பேசினா அப்பவும் சரின்னு விட்டு போக தான் பார்ப்பீங்க இல்லையா?…” என்றதும் திடுக்கிட்டு போனாள்.
“கதிர் என்ன நடந்துச்சுன்னு கேட்காம நீங்க பேசிட்டே போறீங்க…”
“லுக் தாமரை, இந்த மாதிரி விளையாட்டு இனி வேண்டாம். இந்த கல்யாணத்தை நிறுத்தனும்ன்ற எண்ணம் இனி உங்களுக்கு வர கூடாது…” என்றவன்,
“அப்படி என்ன உங்களுக்கு? ஒவ்வொரு தடவையும் வந்து நாங்க சொல்லிட்டே இருக்கனுமா? இதுக்கு மேல என்ன பண்ணனும்? ஏன் உங்களுக்கா யோசிக்க தெரியாதா?…”
“கதிர் ஸ்டாப் இட். பேசிட்டே இருக்கீங்க நீங்க…”
“நீங்க பேசினதை விட கம்மி தான்ங்க. நீங்க எங்க வீட்டுக்கு தானே வாழ வர போறீங்க? சும்மா ஊருல யார் என்ன சொன்னாலும் உடனே அதுக்கு உங்களையும் தண்டிச்சு, எங்களையும் பனிஷ் பண்ணுவீங்களா?…”
“இப்ப நான் என்ன பனிஷ் பண்ணிட்டேன் உங்களை? என்னோட நிலமையில இருந்து பாருங்க. அப்போ புரியும்…” இப்போது தாமரைக்கும் கோபம் மூண்டது.
“என்ன உங்க நிலமை? மரியாதைன்றது நீங்க எப்படி நகை, சீரோட வரீங்கன்றதுல இல்லை. எங்க வீட்டுல யாரும் அதை எதிர்பார்க்கவும் இல்லை. ஏன் உங்களுக்கு தெரியாதா? நிச்சயமா ஒன்னு சொல்லுவேன். உங்களை மாதிரி பொண்ணு கிடைக்க உங்கப்பாம்மா குடுத்து வச்சிருக்கனும்…”
“ஆனா நான், இல்லவே இல்லை. எந்த நிமிஷம் உங்களை பார்த்தேனோ பார்த்ததும் உங்க குடும்பமும் எங்களோடதுன்னு நினைக்க ஆரம்பிச்சேன். ஆனா உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் வரலைன்னு இப்ப புரிஞ்சுக்கிட்டேன்….”
தாமரைக்கு அவனின் இந்த பேச்சுக்கள் பொறுக்கவில்லை. தானே இப்போது அத்தனை குழப்பத்தையும் தூக்கி எறிந்துவிட்டு திருமணத்திற்கு காத்திருக்க இவனானால் இப்படி பேசுகிறானே என வருத்தத்துடன் பார்த்தாள்.
“நீங்க சொன்னதை வச்சு தானே பேசறேன்? இது யூகமா?…”
“தப்பு தான். எனக்கு இருந்த சூழ்நிலை. நான் அப்படி நினைச்சுட்டேன். ஆனா…”
“இதத்தான் நான் மென்ஷன் பன்றேன். அதெப்படி முடிவு பண்ணி பிடிச்சு பேசி பழகின பின்னால நிப்பாட்டனும்னு தோணும். அப்போ இன்னும் இந்த பாண்டிங் உங்க மனசுல ஒட்டலைன்னு தானே அர்த்தம்?…”
தாமரையின் சூழ்நிலையை புரிந்துகொண்டாலும் எப்படி அவளுக்கு இந்த திருமணத்தையும், தன்னையும் மறுக்கும் எண்ணம் வரும் என்ற நினைவில் மனதளவில் அடிபட்டு போனான் கதிர்.
“நான் இதை கேட்கனும்னு தான் வந்தேன். வார்த்தையாலையும் சொல்லியாச்சு, கூட இருந்தும் உணர்த்தியாச்சு. இனி வேற என்ன பன்றதுன்னு தெரியலை…” என கதிர் சொல்லவும் தாமரைக்கு மனதில் அவனின் மீதான பிடிப்பு இன்னும் அதிகமாகியது.
“உங்க சூழ்நிலை புரியுது தாமரை. ஆனா நான்…” என்றவன் அதற்கு மேல் பேசினால் இன்னும் கோபமாகிவிடுவோமோ என எழுந்துவிட்டான்.
இன்னும் இவளுக்கு தன்னை புரியவில்லையே என்ற ஆதங்கம் மேலோங்கியது கதிரின் மனதில்.
“இந்த வெடிங் வேண்டாம்ன்னு இப்பவும் தோணுச்சுன்னா அதை தூக்கி எறியற வழிய பாருங்க. அவ்வளோ தான்…” என கடைசியாக சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட தன்னை பேசவிடாமல் இப்படி பேசி செல்கிறானே என ஆயாசத்துடன் அவ்விடத்தில் அமர்ந்திருந்தாள் தாமரை.
ஐந்து நிமிடம் கூட சென்றிருக்காது தர்ஷன் எதிரே வந்து நின்றான் தாமரையின் முன்பு.
“என்ன தர்ஷன்?…” என தாமரை அலுவலக சம்பந்தமாக இருக்குமோ என நினைத்து கேட்க,
“உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? உங்களுக்கு வேணும்னா ஓகே, வேண்டாம்ன்னா நோ சொல்லுவீங்களா?…” என்று கோபமாய் கேட்க இவனுமா என தாமரை சலிப்புடன் பார்த்தாள்.
“அவன் பொறுப்புக்கு நீங்க எங்க வருவீங்க? இந்த நிமிஷம் நீங்க இது எனக்கு முடியலைன்னு சொன்னா உடனே செய்வான். உங்களோட செல்ப் ரெஸ்பெக்ட்க்காக தான் தள்ளி நின்னு பார்த்துட்டு இருக்கான்…”
“எங்கண்ணன் எப்படி பட்ட பொண்ணுங்களை எல்லாம் தட்டிவிட்டான் தெரியுமா? இப்ப வரைக்கும் அவன் சொன்ன மாதிரி நீங்க இல்லை. ஆனாலும் உங்களை பிடிச்சதால தான் கல்யாணத்துக்கு ஓகே சொன்னான்….” என பெருமையாக அண்ணனை பற்றி பேசியவன்,
“எங்கண்ணனை இப்படிலாம் கஷ்டப்படுத்தறீங்க. நானும் அண்ணின்ற ஒரு மரியாதைக்காக பேசாம இருக்கேன். சும்மா சும்மா எதாச்சும் நிப்பாட்டறேன்னு சொல்லி பாருங்க அப்பறம் இந்த தர்ஷன் யாருன்னு தெரியும்…”
மிரட்டுவதை போல தர்ஷன் பேச தாமரைக்கு உள்ளுக்குள் அப்படி ஒரு சிரிப்பு பொங்கியது. அதை கட்டுப்படுத்திக்கொண்டு,
“ஏன் என்ன பண்ணுவீங்க?…” என்றாள் எழுந்து தானும் நின்றபடி.
இத்தனை நாள் தர்ஷன் அலுவலகத்தில் இப்படியெல்லாம் பேசியதில்லை. கேட்டதற்கு பதில், வேலையை சிறப்பாக செய்வது, நண்பர்களுடன் அரட்டை என கலகலப்பாக பார்த்திருக்கிறாள்.
அதிகமான பேச்சுக்கள் தாமரையிடத்தில் இருந்ததில்லை. முன்பும் சரி, உறவாக போகும் நேரமாக இருக்கும் போதும் சரி.
தாமரையிடம் ஒரு எல்லையில் தான் நின்றிருந்தான். அவள் மேல் சிறிது பயம் என்றும் சொல்லலாம்.
மேலதிகாரி என்பதை தாண்டி தாமரை அங்கே முறைப்பும், விரைப்புமாக தான் இருப்பாள் என்பதனால் கூடுதலாக தர்ஷன் மட்டுமல்லாது யாரும் பேசிவிடமுடியாது அவளிடத்தில்.
இப்போது அண்ணனுக்காக தர்ஷன் வந்து நின்றதும், பேசியதும் தாமரையின் முகத்தில் புன்னகையை தோற்றுவிக்க,
“அண்ணனும், தம்பியும் அவசரக்குடுக்கை தான் இல்லையா?…” என்றாள் தர்ஷநிடத்தில்.
“மேடம், பார்த்து பேசுங்க…” என தர்ஷன் அதற்கும் எகிறிக்கொண்டு நின்றான்.
“அங்கை ஆன்ட்டி தான் நேத்து நான் ஏதோ குழப்பத்துல பேசினதை வச்சு பயந்து போய் சொன்னாங்கன்னா உங்கண்ணன் வந்தவரு என்னை பேசவிட வேண்டாமா?…”
“பேசினீங்களே நீங்க தான்…”
“நீ பார்த்தியா?…” என்றாள் அவனை ஒருமையில்.
“இங்க பாருங்க…”
“என்ன பார்க்கனும்? வந்தவரு என்கிட்டே என்ன ஆச்சுன்னு கேட்டாரா? இல்லை பொறுமையா தான் பேசினாரா? அவர் இஷ்டத்துக்கு நினைச்சுட்டு பேசறாரு. ஸ்டேபிள் மைண்ட் எனக்கு இல்லையாமா?…” என்றாள் கதிர் மேல் உண்டான கோபத்தை தர்ஷனிடமும் காட்டிக்கொண்டு.