“அது அண்ணனுக்கு கோவம், நீங்க எப்படி கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லலாம்ன்னு…”
“நல்லா வந்துச்சு கோபம். நேத்து அது ஏதோ ஒரு வேகத்துல நான் பேசினது. ஆனா அப்பவே என்னோட நினைப்பை நான் மாத்திக்கிட்டேன். இன்னைக்கு கதிர் ஆபீஸ் வரவும் எவ்வளவு சந்தோஷமா அவங்கட்ட பேச வந்தா…” என தர்ஷனை முறைக்க அவன் திருதிருவென விழித்தான்.
“ஆடு திருடுனவன் மாதிரியே இருக்கு…” என தர்ஷனை சொன்னாள்.
“அப்ப ஒன்னும் பிரச்சனை இல்லைல. சரி நான் கிளம்பறேன்…” என்று தர்ஷன் நகர,
“நில்லு, எங்க போற? உன் அண்ணன்கிட்ட அப்படியெல்லாம் இல்லை. அண்ணி அதெல்லாம் நினைக்கலைன்னு சொல்லவா?…”
“இல்லையே. நான் ஏன் சொல்றேன்? நான் என் வேலையை பார்க்க போறேன்…”
“அது. இங்க உன்கிட்ட பேசினது அப்படியே இருக்கட்டும். இன்னைக்கு பேசின பேச்சுக்கு உன் அண்ணனும் அந்த கோபத்துலையே சுத்தட்டும்…”
“அண்ணன் கோபம் நியாயம் தானே? அதுல என்ன தப்பு இருக்காம்?…”
“என்ன நியாயம்? இல்லை என்ன நியாயம்ன்றேன்? நான் தான் ஏதோ பீலிங்ல பேசிட்டேன். அதுக்கு உன் அண்ணனும் எகிறிட்டு வருவாரா?…” என பேசிக்கொண்டிருந்தவள்,
“நீ ஏன் இங்க வந்த? அதுவும் இல்லாம எங்க சண்டையை வேடிக்கை பார்த்துட்டு என்கிட்டையே நீயும் சண்டைக்கு நிக்கற?…” என்றாள்.
“இல்லை, அண்ணாவோட பைக் பார்த்தேன். அவன் மாடிக்கு வந்திட்டு இருந்தான். அதான் என்னைத்தான் பார்க்க வரானோன்னு…”
“என்னோட நிலமையில இருந்து நினைச்சு பார்த்தா தான் எங்களோடது எத்தனை கஷ்டம்ன்னு தெரியும் தர்ஷ்…” என்றவள் முதல்நாள் நடந்ததை அவனிடம் பேச அங்கை சொல்லியதை தான் தர்ஷனும் சொன்னான்.
“எல்லார் குடும்பத்துலயும் இப்படியும் சிலர் இருப்பாங்க அண்ணி. அதுக்காக நம்மளோட வாழ்க்கையை சிக்கலாக்கிக்க முடியுமா? இந்த இடத்துல எமோஷனலா முடிவெடுக்கறதை விட புத்திசாலித்தனமா முடிவெடுக்கனும்…”
தர்ஷன் அப்படி சொல்லவும் தாமரை லேசாய் முறைப்பதை போல பாவனை செய்ய அய்யோ என வந்த காபியை வேகமாய் குடிக்க ஆரம்பித்தான்.
“ஓகே, லீவ் இட். எனக்கு புரிஞ்சது தர்ஷ். ஆனா உண்மையா கஷ்டத்துக்கு மேல கஷ்டம்ன்னு வரும் போது அந்த அடியில எமோஷனல் திங்கிங் தான் அதிகமா வெளிப்படுது. மனசு சொல்றதை தாண்டி அறிவு சொல்றதை கேட்க கொஞ்சம் தாமதமாகுது…”
“இப்போ உங்களுக்கு எந்த குழப்பமும் இல்லையே?…”
“இல்லை, உனக்கு நான் தான் அண்ணி. ஆபீஸ்ல மட்டுமில்ல, வீட்டுலையும் நான் உனக்கு ஹையர் ஆபீசர் தான்…” என தாமரை சிரிக்க,
“அண்ணனை தப்பா நினைச்சுக்க கூடாது நீங்க…” என்றான் அண்ணனுக்காக தர்ஷன்.
“இல்லை. எதுவும் நினைக்கலை. இது கூட ஒருவித பொசஸிவ் தான். ஆனா என்னை பேசவே விடாம அவர் பாட்டுக்கு பேசிட்டே போறதுக்கு நான் சும்மா விடமாட்டேன்…”
“என்ன இருக்குது? வந்து கோபமா பேசினதோட வாங்க, போங்கன்னு பேசறார். சும்மா விட சொல்றியா? நீ சைலன்ட்டா இருந்தா போதும். புரிஞ்சாதா?…” என சொல்ல தலையை ஆட்டினான் தர்ஷன்.
“ஹ்ம்ம், இன்னும் எவ்வளவு நேரம் கதை பேசறதா இருக்கீங்க மிஸ்டர் தர்ஷன். ஆபீஸ் டைம்ல இப்படித்தான் இருப்பீங்களா?…” என்றதும் மீதமிருந்த காபியையும் குடித்துவிட்டு இடத்தை காலி செய்தான் தர்ஷன்.
அவன் செல்லவும் அவனையும் சிரிப்போடு பார்த்திருந்தவள் தனது மொபைலில் கதிரை சற்று முன் எடுத்திருந்த போட்டோவை பார்த்தாள்.
“முறைப்பை பாரு…” என அதனை பார்த்து அதன் மூக்கில் ஒரு குத்துவிட்டவள்,
“இன்னைக்கு என்னை ரொம்ப டென்ஷன் பண்ணிட்டீங்க மிஸ்டர் சன். கல்யாணம் ஆகட்டும். பார்த்துக்கறேன். இதுல சார்க்கு பொண்ணுங்க சப்பி சீக்ஸ், டிம்பிள் சின் டைப்ல செஞ்சுவச்சது மாதிரி வேணுமா?…” என சொல்லிக்கொண்டாள்.
கதிரை பார்த்ததுமே தனது மொபைலில் அவனை படமெடுத்துக்கொண்டவள் சிறிது நேரம் பார்த்திருந்துவிட்டு அலுவலக வேலையை காண சென்றாள்.
மாலை தாமரைக்கு துணை போல அவளறியாமல் தர்ஷன் ஒரு வேலை என்று அந்த நகைக்கடைக்கு வந்தவன் அப்படியே அங்கை வீட்டிற்கு வருகிறேன் என பேர்பண்ணிக்கொண்டு தாமரையுடன் அவள் வீடுவரை வந்து சென்றான்.
சரளாவிற்கு தர்ஷன் வந்துவிட்டு சென்றதும் நிம்மதியானது. மகள் நல்லபடியாய் நகையுடன் வந்துவிட்டாள் என.
அலுவலக நேரத்திலேயே கதிர் போன் செய்து தர்ஷனிடம் தாமரையுடன் நகைக்கடைக்கு செல்லுமாறு சொல்ல தர்ஷனும் தாமரை பேசியதை சொல்லிவிட்டான் அண்ணன் மனம் வருந்த கூடாதென்று.
“நாங்க பேசினதை நீ ஏன்டா கேட்ட?…” என தம்பியிடம் கதிர் கேட்க,
“என் நேரம்டா. உங்க நல்லதுக்காக நான் பேசினா? ஒரே குஷ்டமப்பா…” என போனை வைத்துவிட்டான் கடுப்போடு. மீண்டும் கதிர் தர்ஷனுக்கு அழைத்து,
“ஓகே, என்கிட்டே சொன்னதை நீ உன் அண்ணிக்கிட்ட சொல்ல வேண்டாம். இப்படியே மெய்ண்டெய்ன் பண்ணு…” என சொல்ல,
“அண்ணா உன் மனசை சாந்திபடுத்தினதுக்கு எனக்கு எதாச்சும்?…”
“அவ்வளவு தானே? அம்மாக்கிட்ட சொல்லி சிறப்பா செஞ்சிடலாம்…” என்றான் கதிர்.
“ஆணியே புடுங்க வேண்டாம் ப்ரதர்…” என தர்ஷன் வைத்துவிட்டான்.
பின் கதிர் சொல்லியதை போலவே தர்ஷன் தாமரையுடன் நகைக்கடைக்கு அவளறியாமல் சென்று அங்கே வைத்து தற்செயலாக பார்ப்பதை போல பார்த்துவிட்டு பேசிக்கொண்டே அங்கை வீட்டிற்கு வந்துவிட்டு புறப்பட்டான்.
அந்த ஒருவாரமும் தாமரையும் கதிரும் போனிலும் பேசிக்கொள்ளவில்லை. அவனாக அழைக்கட்டும் என அவளும், அவளே பேசட்டும் என அவனும் இருந்தாலும் இருபக்கமும் கல்யாண வேலைகள் வேறு.
நாள் நெருங்க நெருங்க வீட்டின் முதல் கல்யாணம் என்பதால் பரபரப்புடன் சென்றது.
யமுனா அங்கையிடம் தெளிவாக சொல்லிவிட்டார். தாமரையின் குடும்பத்துடனே இருந்து ஏதேனும் தேவை என்றாலும் கூட அதை தன்னிடம் தெரிவிக்கும்படி.
“அவங்க வீட்டுல வாய திறக்கவே மாட்டாங்க அங்கை. நீ தான் எதுனாச்சும் சேதி சொல்லனும். சங்கட்டமில்லாம இந்த கல்யாணத்தை நடத்தனும். அவங்களுக்கும் மனசு குளிரனும். ஏற்கனவே நொந்துபோய் இருக்காங்க. ஐயோ முடியலையேன்னு நினச்சே வெம்மிட கூடாது பாரு…”
அத்தனைமுறை அங்கையிடம் சொல்லிக்கொண்டே தான் இருந்தார் யமுனா. தாமரையின் தாய்மாமாவான விநாயகத்திடம் நன்முறையில் பூங்காவனமும் உறவை வளர்த்திருக்க அவர்களிடையே நல்ல தோழமை உருவாக்கி இருந்தது.
இதனிடையே இருமுறை காவல்நிலையத்திற்கு சென்று நகை பற்றிய விவரம் கேட்டு வந்திருந்தான் கதிர்.
ஒன்றுக்கும் அகப்படவில்லை. கையை விரித்தார்கள். வழக்கம் போல தேடல் நடந்துகொண்டிருப்பதாக சொல்லியதையே தான் சொல்லிவைத்தார்கள்.
அதுவே சோர்வு தட்டியது சோமநாதன் குடும்பத்தினருக்கு. நகை திருமணத்திற்குள்ளேனும் கிடைத்துவிடாதா என்னும் ஆசையில் மண் விழுந்ததை போல தான் இருந்தது.
முதல்நாள் நிச்சயதார்த்தம் சிறப்பாய் நடந்து முடிந்திருக்க திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் இடையே நகை விவரமும், சீர்வரிசை என்னவென்னும் கேலி பேச்சுக்கள் பரவலாக பேசப்பட்டது.
பேச்சு சுற்றி சுற்றி வந்து கடைசியாக கதிரிடம் வந்து நின்றது. அவனிடமே நேரடியாக பேசினார் அவனின் சித்தப்பா.
“என்ன கதிர், நகையும் இல்லாம பணமும் இல்லாம இப்படி ஒரு கல்யாணம்?…” என மண்டபத்தில் வைத்து கேட்க பூங்காவனம் இது எதற்கு இப்போது இந்த பேச்சு என மகனி பார்த்தார்.
“ஏன் சித்தப்பா உங்களுக்கு இந்த விஷயம் இப்போ தான் தெரியுமா?…” என்றான்.
“இல்ல, அது வந்து எல்லாரும் பேசிகிட்டாங்க. அதான் உன்கிட்ட…”
“எல்லாரும் பேசினா நீங்களும் பேசுவீங்களா? இவ்வளவு அக்கறையா என் மேல?…” என அவன் பேசிய தொனியே வேறுவிதமாக இருக்க,
“கதிர் விடுப்பா…” என்றார் பூங்காவனம்.
“நான் ஒன்னும் ஆரம்பிக்கலையேப்பா? எல்லாரும் பேசறது வேற. இப்போ சித்தப்பா பேசறது…” என அவரை பார்த்தான்.
“என்ன நான் பேசிட்டேன்? நம்ம அண்ணன் பையனாச்சே, பாவமேன்னு…”
“வாட் ரப்பிஷ். நீங்க எனக்கு பாவம் பார்க்கறீங்களா?…” என கோபமாய் முறைத்தான் அவரை.
அவர் கதிரின் கோபத்தில் இன்னும் முறைத்து நின்றார். தான் பார்க்க வளர்ந்தவன் இப்படி பேசுகிறானே என நின்றார்.
“அவ்வளவு பாவமா இருந்தா என்னோட வொய்ப்க்கு நீங்க நகை போட்டு கட்டி வைங்களேன். உங்களோட வருத்தம் போய்டும்…” என்றதும் அவர் திணறினார்.
“நானா? நான் ஏன்? எனக்கென்ன தலையெழுத்தா யாருக்கோ என் உழைப்பை கொட்ட?…”
“இதான் நீங்க. யாருக்கோ ஏன் உழைப்பை கொட்டனும்னு யோசிக்கிற நீங்க இந்த பாவம் பார்க்கறது, பரிதாப பேச்சு எதுவும் வச்சுக்க கூடாது. தேவையில்லாம அடுத்தவங்களை பத்தி மட்டும் பேசலாமோ?…” என்றான்.
கதிர் இத்தனை கேட்க அவனிடம் பதில் பேச முடியாதவர் பூங்காவனத்திடம் திரும்பினார்.
“என்னண்ணே, நம்ம பையனாச்சேன்னு நான் பேசினா இவன் என்னையே எடுத்தெறிஞ்சு பேசறான். நல்ல மரியாதை. இதுக்கு தான் நான் வராமையே இருந்திருக்கனும்…” என அவர் சொல்ல,
“இப்படி ஒண்ணுமில்லாம நடக்கற கல்யாணத்துக்கு நீங்க வந்து உங்க கௌரவத்தை ஏன் குறைச்சுக்க பார்க்கறீங்க? இப்ப கூட ஒண்ணுமில்லை கிளம்புங்க…” என சொல்லிவிட்டு கதிர் நகர்ந்துவிட்டான்.
அவர் பூங்காவனத்திடம் மானம் போனது, மரியாதை தேய்ந்தது என்று அப்படி குதிக்க,
யமுனா வேண்டுமென்றே தான் வந்திருந்தார் அவ்விடத்திற்கு. அவருக்கு அத்தனை கோபம். ஆனாலும் காட்டமுடியாமல் இருக்க இப்போது வசமாக சிக்கினார் அவர்.
“இப்ப இங்க என்ன பெரிசா மரியாதை குறைவு ஆகி போச்சாம்? என் சம்பந்தியை மரியாதை இல்லாம ஒன்னுமில்லாதவர்ன்னு பேசியிருக்காரு உங்க தம்பி. அத கேட்காம சமாதானம் செஞ்சிட்டு இருக்கீங்க?…” என பூங்காவனத்திடம் கேட்க,
“நீங்க பேசினதுக்கு இது ஒன்னும் அதிகம் இல்லை தம்பி. கஷ்டம் எல்லாத்துக்கும் தான் வரும். எங்க கஷ்டத்துலையே நாங்க நம்ம மனுஷங்க யாருன்னு நல்லாவே புரிஞ்சிக்கிட்டோம். சும்மா இந்த பாசாங்கு எல்லாம் வேண்டாம். என் மகன் பேசினதுல எந்த தப்பும் இல்லை…” என முகத்திற்கு முன்னேயே சொல்லியவர்,
“அப்படியே எங்களுக்கு பாவம் பார்த்து நீங்க ஒன்னும் செய்ய போறதில்லை. உங்ககிட்ட நாங்க வந்து நிக்கபோறதும் இல்லை. நல்ல காரியம் நடக்கற இடத்துல சங்கட்டமான பேச்சு வேண்டாம்ன்னு தான் பொறுமையா பேசறேன்…” என சொல்லிவிட்டு பூங்காவனத்தை முறைத்துவிட்டு சென்றுவிட்டார் யமுனா.
அவரும் வந்ததில் இருந்து பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார். வந்திருக்கும் உறவுகள் சோமநாதனையும் அவர்கள் குடும்பத்தையும் தேடி சென்று பாவப்படுவதை போல குத்தி பேசிவிட்டு வருவதை.
பொறுத்து பார்த்தவர் அங்காங்கே சுருக்கென்று தைக்கும்படி பேசிவிட்டும் வந்துவிட்டார் யமுனா.
வந்தவர்கள் அப்படி வலிக்க செய்து தானும் வலி தாங்கி இந்த உறவு நீடிக்க வேண்டும் என்னும் அவசியமில்லை என்பதை போல் இருந்தது தாய் மகன் பேச்சுக்கள்.
மறுநாள் காலை குறித்த நேரத்தில் செங்கதிரவனின் மனைவியாய் தாமரை திருமாங்கல்யம் சூடினாள்.
இருவரின் மௌனங்களும் அங்கே ஒருங்கே சங்கமிக்க நொடிநேரம் கலந்த பார்வையை விலக்கிக்கொண்டு அடுத்த சடங்குகளுக்கு தயாரானார்கள்.