நடந்து முடிந்துவிட்டது அவர்கள் திருமணம். கதிர் காணாமல் அவனை கண்டவள் முகத்தில் ஆச்சர்யபாவமும், ஆசை மேகமும் கொஞ்சியது.
‘ஒரு மாதம் தான் ஆகிறதா இவன் என் வாழ்வில் வந்து?’ என நினைத்து வியக்காமல் இருக்கமுடியவில்லை அவளால்.
இருவரும் பார்த்த நாளில் இருந்து அத்தனை இலகுவாய் பேசிய நாட்களும், நேரங்களும் மிக மிக குறைவு.
திருமணத்தில் பெரிதாய் ஈடுபாடோ, விருப்பமோ இல்லாதிருந்தவளின் தற்போதைய மனநிலை செங்கதிரவனின் வெம்மையான ஒளிகற்றையிலும், அவனின் குடும்பத்தின் அரவணைப்பிலும் நெகிழ்ந்திருந்தது.
‘இந்த திருமணத்தை தான் தகர்த்திருந்தால்?’ நினைக்கும் போது நெஞ்சம் திடுக்கிட கைகள் தன்னை போல கதிரின் கையை பற்றியது.
உறவினர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தவன் என்னவென முகம் திருப்பி தாமரையை பார்த்தான்.
தன் கையை விலக்கிக்கொண்டவள் முகத்தின் நொடிநேர மாற்றத்தையும் அவதானித்தவன்,
“என்ன தாமரை?…” என்றான்.
“நத்திங், நான் சும்மா ஒரு சப்போர்ட்க்காக பிடிச்சேன்….” என சமாளித்தாள்.
அவனுக்கு தான் அது நம்பமுடியவில்லை. ஆனால் அங்கே வைத்து இல்லை என்றா சொல்லமுடியும்? ஒன்றும் சொல்லாமல் திரும்பிக்கொண்டான் கதிர்.
“சரி சரி பேசினது போதும். முதல்ல போய் சாப்பிட்டு வந்திருங்க. நேரமாகுது…” என பூங்காவனம் வந்து கதிர், தாமரையிடம் சொல்ல தர்ஷன் அவர்களை அழைத்துகொண்டு சென்றான்.
“தர்ஷ் ஆபீஸ்ல இருந்து ப்ரெண்ட்ஸ் வந்திருக்காங்க…” தாமரை சொல்ல,
“நான் பார்த்துட்டேன் அண்ணி, எல்லாரும் டையனிங் ஹால்ல தான் இருக்காங்க. நீங்க சாப்பிடுங்க. எல்லாரும் வந்திருவாங்க…” என சொல்லி அவர்களை சாப்பிட அமரவைத்தான்.
அவர்களுடன் நிவேதாவும் இணைந்துகொள்ள டிராவல்ஸில் இருந்து வந்திருந்தவர்களும் உண்டு முடித்து கிளம்பிக்கொண்டு இருந்தார்கள்.
கதிரிடம் வந்து சொல்லிக்கொண்டு செல்ல அவர்களிடம் பேசி அனுப்பிவைத்தான் கதிர்.
இருவரும் உணவை முடிக்கும் நேரம் தாமரையின் அலுவலக நண்பர்கள் வந்துவிட்டார்கள்.
பெண் தாமரை என்பதால் கொஞ்சம் அடக்கியே வாசித்தார்கள் அவர்கள். வேறு யாருமாக இருந்தல நிச்சயம் கலகலப்பிற்கு பஞ்சமிருந்திருக்காது.
ஒருவித மரியாதை தன்மையிலேயே பேசிக்கொண்டிருந்துவிட்டு வாழ்த்திவிட்டு சென்றார்கள்.
கதிர் பக்க உறவினர்கள் எல்லாம் அத்தனை சந்தோஷத்துடன் அதில் கலந்துகொள்ளவில்லை.
ஏதோ இருக்கவேண்டுமே என்னும் விதமாய் பங்கேற்றுவிட்டு சென்றுவிட்டார்கள். அத்தனை கோபம் யமுனா, கதிர் பேச்சுக்களில்.
தாமரையை சேர்ந்தவர்கள் கூட பெரிதாய் ஒன்றும் நக்கல் பேசவில்லை. சிலருக்கு புகைச்சல் கூட.
இப்படி ஒரு வாழ்க்கையா இவளுக்கு? என மனதை மறைத்து சிரிப்புடனே வளைய வந்தார்கள். சிலர் எப்படியோ நல்லபடியாக நடந்துவிட்டது என்று வாழ்த்திவிட்டார்கள்.
ஆனால் கதிரின் பக்கத்தில் அத்தனைபேரும் அங்கையிடம் தான் வந்து பொருமிவிட்டு சென்றார்கள். இதில் அங்கை தான் கஷ்டப்பட்டு போனார்.
“இருந்திருந்தும் இப்படியா நீ பார்த்து முடிப்ப? உன்கிட்ட இதை எதிர்பார்க்கலை அங்கை…”
“நல்லா பொண்ணு பார்த்து வச்ச? வரும் போதே ஒண்ணுமில்லாம பெத்தவர் வீட்டை துடைச்செடுத்தா மாதிரி ஒண்ணுமில்லாம வருது. இதுல யமுனா குடும்பம் விளங்கிடும் போ…”
“என்னவோ இந்த குடும்பம் நல்ல ராசில இல்லைன்னு தோணுது. அதுக்குத்தான் அத்தனை அறிகுறி காமிச்சிருக்குது. இந்த யமுனா சுதாரிச்சிருக்க வேண்டாமா?…”
“தேவை தான். அந்த பொண்ணு இப்படி வரும் போதே யமுனாவை கையில பிடிக்க முடியலை. சீர் செனத்தியோட வந்திருந்த ஆகாயத்துல போய் தான் குடும்பம் நடத்துவாங்க போல?…” என்று கடைசியாக பூங்காவனத்தின் தம்பி மனைவி வாசுகி பேச,
“நீயும் என்ன இப்படி பேசற வாசுகி?…” என்றார் அங்கை ஆற்றமாட்டாமல்.
“வேற எப்படி பேச? நேத்து என் வீட்டுக்காரர் என்னவோ பாவமேன்னு பேசினதுக்கு கதிர் வாய்க்கு வந்தபடி பேசிருக்கான். சித்தப்பான்னு ஒரு மரியாதை வேண்டாமா?…”
“கதிர் சின்ன பையன். ஏதோ ஆதங்கத்துல பேசிருப்பான் வாசுகி. அதுக்குன்னு தாலி கட்டி முடிச்சதும் கிளம்பறது நல்லவா இருக்குது?…”
“அப்படி எல்லாம் இருக்க முடியாது. ஏதோ கதிர் அப்பா கேட்டுகிட்டதால இன்னைக்கு வந்தோம். இல்லன்னா இதுக்கும் கூட வந்திருக்க மாட்டோம்…” என்றார் வாசுகி.
அத்தனை பேச்சும் அங்கையிடம் தான் இருந்ததே தவிர யமுனாவை திரும்பியும் பார்க்கவில்லை வாசுகி.
யமுனாவிடம் பேசினால் பதிலுக்கு பேசுவார் என்ற பயத்தில் வாசுகி அங்கையிடம் பொரிந்து தள்ள,
“மத்தவங்க தான் புரியாம பேசறாங்க. நாம இப்படி இருக்கலாமா? மறுவீடு விருந்து எல்லாம் இருக்கு…” அங்கை சமாதானம் செய்ய,
“எங்களுக்கு என்ன வீட்டுல ஒண்ணுமில்லாமலா இருக்குது? அதெல்லாம் வர முடியாது. ஏதோ மனசு கேட்கலைன்னு உன்கிட்ட வந்து சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன்…” என வாசுகி சொல்ல,
“இதோ அக்காவே வந்துட்டாங்க…” என்று அங்கையிடம் பேச வந்த யமுனாவை பிடித்துக்கொண்டார் அங்கை.
“பாருங்கக்கா, வாசுகி இப்பவே கிளம்பறேன்னு சொல்றா…” என்று அங்கை சொல்ல,
“வேலை இருக்கும். நமக்கு இந்த கல்யாண வேலை தான். அவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும் அங்கை. நம்ம சோலிக்காக அவங்களை நட்டப்படுத்தலாமா?…” என்ற யமுனா,
“நீ பார்த்து போய்ட்டு வா வாசுகி…” என சொல்லிவிட்டு,
“அங்கை வாசுகி கிளம்பினதும் மேல ரூம்க்கு வா. வீட்டுக்கு போறப்ப கொண்டுபோற பொருளை எல்லாம் எடுத்து வைக்கனும். உன்கிட்ட தான லிஸ்ட் பேப்பர் இருக்குது. மறந்துட போறேன்…”
யமுனா வந்த வேலை முடிந்தது என்பதை போல சொல்லி செல்ல அங்கை தான் வாசுகியை இறைஞ்சுதலாக பார்த்தார்.
“வாசுகி…”
“அட போ அங்கை. எனக்கு தெரியாதா யார் என்ன பேசுவாங்கன்னு? ஊசி குத்தற மாதிரி எப்படி சொல்லிட்டு போறாங்க பார்த்தியா? இதுக்குத்தான் இந்த மனுஷன்கிட்ட தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். அண்ணன் அண்ணன்னு வந்து நின்னு இப்ப பேச்சுக்காச்சும் இருன்னு சொல்றாங்களா?…”
“அவங்க ஒன்னும் தானா பேசலையே வாசுகி. எத்தனை மனகஷ்டத்துல இந்த கல்யாணம் நடக்குது. சொந்தக்காரங்க நமக்கு அந்த உறுத்து வேண்டாமா? நாமலே இளக்காரமா பேசினா யமுனாக்கா அப்படித்தான் இருப்பாங்க…”
“என்ன நீ அவங்களுக்கு பேசற அங்கை?…”
“பேசாம என்ன செய்ய? நாளைக்கே நமக்கு என்ன நடக்கும்ன்னு யாருக்கு தெரியும்? யாருக்கும் எந்த கஷ்டமும் நினைக்காத சோமு அண்ணன் குடும்பத்துக்கே இப்படின்னும் போது, ஒருத்தவங்க கஷ்டத்துல இடிச்சு பேசற நமக்கு அந்த ஆண்டவன் என்ன வச்சிருக்கானோ?…”
அங்கை சொல்லவும் கோபத்துடன் அங்கிருந்து கணவனையும் சேர்த்து அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார் வாசுகி.
“என்ன பெரிய மாநாடு போல?…” என கதிர் அங்கையிடம் கேட்க நடந்ததை சுருக்கமாய் சொன்னார் அங்கை.
“எங்களுக்கு உங்களை மாதிரியும் சொந்தம், அவங்களை மாதிரியும் சொந்தம். ஹ்ம்ம், அவங்களை எல்லாம் திருத்த முடியாது சித்தி. விடுங்க…” என்றான் கதிர்.
ஏற்கனவே பூங்காவனத்திடம் வாசுகி புலம்பியிருக்க அவர் யமுனாவிடம் சொல்வதற்கு பயந்து கதிரிடம் சொல்லியிருந்தார்.
“வாசுகிக்கு கோவம், எல்லாத்துக்கும் அங்கையை கூப்பிட்டு முன்னிறுத்தியே பேசறீங்க. செய்யறீங்கன்னு. வாசுகியையும் கூட வச்சுக்க சொல்லி சொல்லேன்ப்பா…” என்றார் மகனிடம்.
“அவங்க பேசின பேச்சுக்கு இது வேறையா? அங்கை சித்தி மாதிரியா இருந்தாங்க வாசுகி சித்தி? தானா இழுத்து போட்டு செய்யறாங்க அங்கை சித்தி. நாம சொல்றதுக்கு முன்ன நிக்கறாங்க. அதை விட்டு இவங்களை ஒன்னொண்ணுக்கும் கூப்பிட்டு நிறுத்தனுமோ?…” என்றான் கதிர்.
வாசுகி சொல்லியதை முழுவதும் பூங்காவனம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் கதிர் இன்னும் கோபமாகியிருப்பான்.
“தவசி என்ன உங்க கூட பிறந்த சொந்தமா? ஒண்ணுவிட்ட பிறப்பு தானே? என்னத்துக்கு சொந்தமான எங்களை விட்டு அவங்களையே எல்லாத்துக்கும் இழுத்து பிடிக்கறீங்க?…” என்றிருந்தார் வாசுகி.
இதை மகனிடமே சொல்ல முடியாதிருக்க மனைவியிடம் எப்படி சொல்வதென்று தெரியாமல் கதிரின் முன் நின்றார்.
“எப்பவும் எல்லா விசேஷத்துக்கும் பட்டுக்காம தானே இருப்பாங்க சித்தியும், சித்தப்பாவும். இதை எல்லாம எதிர்பார்க்க கூட மாட்டாங்களே? இப்ப என்ன புதுசா?…” என கதிர் கேட்கவும்,
“என்னவோ அவளுக்கு இப்ப தோணிருக்குது. உங்கம்மாட்ட நான் சொன்னா என்னை ஆஞ்சிவிட்டிருவா. அதான் நீ சொல்லேன்…”
“பின்ன புரிஞ்சும் ஏன் இதை பேசறீங்க? எல்லாத்துக்கும் மனசு வேணும். அங்கை சித்தி அளவுக்கு இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கனும்னு நினைக்கிற சொந்தம் யாருமில்லை. அதுதான் உண்மை. சும்மா தேடி தேடி போய் கூப்பிட முடியாது. நீங்க விட்டுடுங்க…”
“கதிரு…”
“இதெல்லாம் சொல்லி சொல்லி செய்யற விஷயம் இல்லை. தானா உரிமை எடுத்து செய்யறது. அதை விட்டு என்னப்பா நீங்க?…”
“சரிப்பா சரிப்பா…” என அமைதியாகிவிட்டார் பூங்காவனம்.
இப்போது நினைக்கும் போது கதிருக்கு அத்தனை கோபம். என்ன மனிதர்களோ என்று.
“சரி கதிர். வீட்டுக்கு கிளம்பனும். நான் போய் அம்மாவுக்கு உதவறேன். தனியா என்ன செய்யறாங்களோ? அப்பவே வர சொன்னாங்க. இங்க பேச்சுல விட்டுட்டேன்…” என்று சொல்லி அங்கை ஓட அவரை பார்த்தபடி மீண்டும் மேடைக்கு வந்தான் கதிர்.
தாமரை நிவேதாவிடம் தான் இல்லை என்னும் பொழுது எப்படி இருக்கவேண்டும் என ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டு இருந்தாள்.
நாள் நெருங்க நெருங்க இதை பேசவே நேரமில்லாது போய்விட இப்போது தங்கையிடம் அறிவுறுத்திக்கொண்டு இருந்தாள்.
நிவேதாவின் முகம் அத்தனை சீரியஸாக இருந்தது. தாமரை சொல்லியதே பெரிய பொறுப்பொன்று தலையில் ஏறிவிட்டதை போல கனத்தது நிவேதாவிற்கு.
இத்தனை நாட்கள் இவை எல்லாம் கண்ணில் பட்டாலும் பெரிதாய் தெரிந்தாலும் தந்தையும், தமக்கையும் இருக்கிறார்கள், பார்த்துக்கொள்வார்கள் என்னும் தைரியத்தில் இருந்துவிட்டாள்.
இப்போதோ தாமரை புகுந்தவீட்டிற்கு கிளம்ப வீட்டின் மகளாய் அடுத்த கடமை தன்னுடையது என நினைக்கும் பொழுதே சிறுபெண்ணிற்குள் கலக்கம்.
அது முகத்திலும் தெரிந்தது. பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு பிரிவின் கவலை என்று தோன்ற தாமரையின் முகமும் பேச்சும், அதற்கு நிவேதா தலையாட்டும் விதமும் என கதிருக்கு புரிந்துபோனது.
“இப்பவே ஏன் நிவியை பயம்காட்டுற நீ?…” என்றான் கதிர் வந்து அமர்ந்ததுமே.
“என்னைக்கா இருந்தாலும் அவளுக்கும் தெளிவா தெரியனும் தானே? அதான் சொல்லிட்டு இருக்கேன்…” தாமரையும் கதிரிடம் பதில் கூறினாள்.
வீட்டில் பெரிதாய் பண நிலவரம் பேசப்பட்டாலும் அதன் ஆழம் உணராமல் இருந்த நிவேதாவிற்கு இப்போது அக்காவும் இல்லாது, அப்பாவிற்கும் உடல்நிலை சரியில்லாது வீட்டின் நிலவரம் பூதாகாரமாய் பயமுறுத்தியது.
“நிவி தண்ணி கொண்டுவாம்மா…” என அவளை அங்கிருந்து அனுப்பினான் கதிர்.
தலையாட்டி அங்கிருந்து நகர்ந்த நிவேதா யோசனையும், குழப்பமுமாய் செல்ல கதிர் தாமரையிடம் திரும்பினான்.
“இதை இன்னைக்கே சொல்லனும்னு என்ன இருக்கு தாமரை. சின்ன பொண்ணு. அவ தலையில எல்லாத்தையும் ஏத்தின மாதிரி பன்ற நீ…”
“நிவிக்கு இப்போ இருக்கற ஒரே பொறுப்பு படிப்பு. அது எந்தவிதத்திலையும் டவுனாகிட கூடாது. நல்லா படிக்கிற பொண்ணு தான். இருந்தாலும் அவளுக்கு இதை எல்லாம் சொல்லிட்டா இன்னும் கொஞ்சம் மெனக்கெடுவா. அவளோட ப்யூச்சருக்கு தானே?…”
“அதோட நான் ஒன்னும் படிப்பை விட்டு குடும்பத்தை பாருன்னு சொல்லலை. அவளோட படிப்பு அவளுக்கு எந்தளவுக்கு முக்கியம்ன்னு சொல்லிட்டு இருந்தேன்…”
“ஆனா இன்னைக்கு நீ பேசிருக்க வேண்டாம். சந்தோஷமா இருந்த பொண்ணு. பார்க்கவே கஷ்டமா இருக்குது…” கதிர் சொல்லவும்,
“நான் கூட தான்…” என்றவள் பேச்சை நிறுத்திக்கொள்ள அதற்குள் பூங்காவனத்திற்கு தெரிந்தவர்கள் வந்துவிட்டார்கள்.
ஒருவழியாக திருமண சடங்குகள், உறவுகள் வரவுகள் எல்லாம் முடிந்து மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
முதலில் தாமரையின் வீட்டிற்கு சென்று பால் பழம் அருந்திவிட்டு பின்னர் கதிரின் வீடு வந்தார்கள்.
என்றோ யமுனா சொல்லியதை போல தாமரை அந்த நகைகளும், சீர்களும் இல்லாது அந்த வீட்டிற்குள் தடம் பதித்தாள்.
விநாயகம் தன் சத்திற்கு தகுந்தளவில் இரண்டுசவரன் நகை எடுத்து போட்டிருக்க ஏற்கனவே தாமரையின் கழுத்தில் கிடந்த மெல்லிய செயின் மட்டுமே அவளிடத்தில்.
சரளா தனது தாலி செயினை வைத்து வேறு செய்யலாம் என சொல்ல அங்கை மூலம் அறிந்த யமுனாவோ மறுத்துவிட்டார்.
நகை கிடைக்கும் போது கிடைக்கட்டும், இப்படி எல்லாம் செய்ய வேண்டாம் என கதிர் நேரடியாக சோமநாதனிடம் பேசிவிட்டான். அதனால் இன்னுமே அவர்கள் வருந்தினார்கள்.
இதற்கேனும் நகை கிடைத்துவிட வேண்டும் என்று வேண்டுதலை அதிகமாக்கினார்கள்.
தாமரை கதிர் இல்லம் வந்து சேர்ந்தவள் விளக்கேற்றி அந்த வீட்டின் மருமகளாய் யமுனா அருகே வந்து அமர்ந்துகொண்டாள்.
அங்கை தான் அடுத்து செய்யவேண்டியவற்றை யோசிக்க தாமரையின் அத்தையும் சேர்ந்துகொள்ள வந்தவர்களை கவனிப்பதோடு இரவு சடங்கிற்கும் ஏற்பாடு நடந்தது.
மாடியில் ஏற்கனவே ஒரு அறையில் தர்ஷன் தங்கியிருக்க இன்னொரு அறையில் தான் சடங்கிற்கு ஏற்பாடாகியது.
யமுனா சொல்லிவிட்டார் கதிரிடம். இனிமேல் மாடியில் தான் அவன் மனைவியுடன் இருக்கவேண்டும் என்று.
அதனால் அவனின் உடமைகள் முதற்கொண்டு எல்லாமே மாடிக்கு இடம் பெயர்ந்திருந்தது.
இரவு உணவை முடித்துக்கொண்டு மாடிக்கு சென்றுவிட்டான் கதிர். தாமரையை கீழிருக்கும் அறையில் வைத்து அங்கை தான் உடன் இருந்து பேசிக்கொண்டு இருந்தார்.
பொதுவாக அங்கே என்ன செய்வார்கள் என ஏற்கனவே பேசிய பேச்சுக்கள் தான். ஆனாலும் மீண்டும் அவளிடத்தில் சொல்லிக்கொண்டு இருந்தார்.
இதுபோன்ற நேரங்களில் உடன் இருக்க மற்ற சொந்தங்கள் இல்லாது போக அங்கையே அனைத்தும் செய்யவேண்டியதாகியது.
அங்கையின் பேச்சுக்கள் காதில் விழுந்தாலும் தாமரைக்கு படபடப்பாக இருந்தது.
அலுவலகம் வரை வந்து சண்டையிட்டு சென்றவன் தான் கதிர். அதன் பின்னர் இருவருக்குள்ளுமே சுமூகமான பேச்சுக்கள் இல்லை.
அன்று திருமண மேடையில் வைத்து அறிமுகப்படுத்தும் பேச்சுக்களும், நிவியின் பேச்சுக்களும் தான் இருந்திருக்க போனதும் என்ன பேசவேண்டும் என ஒத்திகை பார்த்துக்கொண்டு இருந்தாள் தாமரை.
தாமரையின் கவனம் தன்னில் இல்லாததை உணர்ந்த அங்கை சிரிப்புடன் நேரத்தை பார்த்தார்.
இன்னும் அவளை அனுப்ப பத்து நிமிடங்கள் இருந்தது. நல்ல நேரம் வந்த பின்னர் தான் அனுப்ப வேண்டும் என்பதால் காத்திருக்கும் நேரத்தில் பேசிக்கொண்டு இருந்தார் அங்கை.
“அங்கை…” என்ற யமுனாவின் சத்தத்தில் அவர் வெளியே எட்டி பார்க்க,
“நல்லா இருப்ப. நாங்க எங்க போய்ட போறோம்? இங்க தான இருக்கோம். எங்க ஆசிர்வாதம் எப்பவும் உனக்கு உண்டு…” என்று தலையில் கைவைத்தவர்,
“என்ன அங்கை நான் சொல்றது சரிதான? முதல்ல அனுப்பு. நேரமாகுது…” என சொல்லி சென்றுவிட்டார் யமுனா.
“அவங்க நீ வெக்கப்படுவன்னு ஓடறாங்க. நீ விடு…” என்றவர் தாமரையை அழைத்துக்கொண்டு மாடிக்கு சென்றார்.
“இதான் உன்னோட ரூம். பால் எல்லாம் உள்ளவே அப்பவே கொண்டுபோய் வச்சாச்சு. பார்த்து எடுத்து குடு தாமரை. காலையில பார்க்கலாம்….” என சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டார் அங்கை.
ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவளாக தன்னை சமன் செய்துகொண்டு அந்த அறையின் கதவை திறக்க அலங்கரிக்கப்பட்டிருந்த கட்டிலில் கதிர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
கதவை திறந்தவண்ணம் அவன் உறக்கத்தை பார்த்தவளுக்கு ஒரு நொடி அதிர்ச்சியும் தொடர்ந்த ஏமாற்றமும் தோன்ற உள்ளே வந்து கதவை அடைத்தாள்.
மெல்லிய விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருக்க கதிரின் சீரான மூச்சும், அசையாத விழிகளும் என அவனின் உறக்கத்தை அப்பட்டமாய் காண்பித்தது.
“சுத்தம்…” என நினைத்தபடி தன்னுடைய பெட்டியை திறந்து இரவு உடையை எடுத்துக்கொண்டு சென்று மாற்றிவிட்டு வந்து அந்த விளக்கையும் அணைத்துவிட்டு கதிரின் அருகே படுக்க அவனின் வலிய கரம் அவளை இழுத்துக்கொண்டது.
“அச்சோ…” என கத்த போனவளை ஒரு பிரட்டில் தன் பக்கமாய் திருப்பி அணைத்துக்கொண்டவன்,
“ஷ் கத்தாத தாமரை…” என்றான்.
“பயந்தே போய்ட்டேன். நீங்க தூங்கலையா?…” என எழுந்துகொள்ள பார்க்க,
“ம்ஹூம், தூங்கலை. நீ பேசாத…” அடுத்ததாய் அதற்கும் அவன் தடைவிதிக்க,
“ப்ச், ஏன் அப்பறம் தூங்கற மாதிரி ஆக்ட் பண்ணுனீங்க. ஏமாத்தினீங்களா? போங்க போங்க…” என்றவளை வளைத்துக்கொண்டான்.
“என்னை மட்டும் எவ்வளவு டென்ஷன் ஆக்கின நீ?…” அவனின் அணைப்பை மீறி வெளிவரமுடியவில்லை அவளால்.
“விடுங்க. லைட் போட்டுட்டு வரேன்…” என்றவளால் நகரவும் முடியவில்லை.
“கதிர்…” என்றவளின் அழைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய அவனிலிருந்து மீளவும் முடியாமல் அவன் ஆள மயங்கி போனாள்.
தன் ஆசைகளின் அணையுடைத்தவன் அவளின் நாணம் கலைத்து தன்னுள் நாணலாய் வளைத்த செங்கதிரவனின் தீண்டலில் அந்த தாமரை மலர்ந்தது.
மிச்சமின்றி அவளை அள்ள விரல் கொண்டு ஆரம்பித்தவனின் வித்தை உயிர் கொண்டு நிறைவை அடைய இருவரின் ஆசைகளும் கடலோடு கூடிய அலையாகியது.
“இதான் உங்க கோபம்ங்களா கதிர்?…” என அவனை கிண்டல் பேசினாள் தாமரை.
“நீயும் தானே என் மேல கோபமா இருக்க. எங்க காமியேன். பாப்போம்…” என்றான் சன்னமான சிரிப்போடு.
இருளில் அவனின் முகம் தெரியவில்லை என்றாலும் அவனின் பேச்சில் வழிந்த விஷமத்தில் தலையணை எடுத்து மொத்தினாள் கதிரவனின் தாமரை பெண்.