காலை அலாரம் வைத்து எழுந்திருந்தாள் தாமரை. எப்போதும் வீட்டில் சரளா தான் வந்து எழுப்புவார். அதனால் தானால எழும் பழக்கமில்லாத தாமரை அங்கை சொல்லியதை ஞாபகம் வைத்து மொபைலில் அலாரம் வைத்துவிட்டாள்.
அதன்படி எழுந்து குளித்து கீழே சென்றுவிட சுத்தமாக கதிர் இதை எல்லாம் கவனிக்கவில்லை. எப்பொழுதும் சிறு சத்தத்தில் விழிப்பவனுக்கு எதுவும் தெரியவில்லை.
வெகுநேரம் கழித்தே அவனும் கண்விழித்தான் அந்த அறை தாமரை இன்றி இருக்க தானும் குளித்துவிட்டு கீழே கிளம்பி சென்றான்.
தாமரையின் தாய்மாமாவும், அவரின் குடும்பமும் வந்திருந்தார்கள். காலை உணவு நடந்துகொண்டிருக்க ஹாலில் பூங்காவனம், விநாயகம், தவசி மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க கதிரும் சென்று அமர்ந்தான்.
“உங்களுக்கா? எனக்கு கூப்பிட்டு நான் எடுக்கலையோ?…” என தனது மொபைலை எடுத்து பார்க்க அழைப்பு வந்திருக்கவில்லை.
“நான் தான் எனக்கு எதுனாலும் கால் பண்ணுன்னு சொன்னேன். அதன் உனக்கு கூப்பிடலை. இது ஒரு விஷயமா?…” என பூங்காவனம் சொல்லவும்,
“இப்ப என்திச்சதும் பேசற விஷயமா இது? அவன் சாப்பிட்டு மருமகளோட கோவிலுக்கு போக வேண்டாமா?…” என காபி கையுடன் வந்தார் யமுனா.
“சொல்லலைன்னா கதிர் கிளம்பி ட்ராவல்ஸ்க்கு போனாலும் போவானே? அதான் முன்னவே சொல்லிறலாம்ன்னு…” மனைவியின் கேள்விக்கு பதில் தந்தவர்,
“நான் பேசிட்டேன்ப்பா. ஒன்னும் பிரச்சனை இல்லை. நைட் பஸ் எல்லாம் டைம்க்கு கிளம்பிருச்சு. ரிட்டர்ன் வர பஸ்ல ஒன்னு மட்டும் இன்னைக்கு லேட்டா ஆகும்ன்னு சொன்னாங்க. ட்ரைவர்ட்டையும் பேசிட்டேன்…”
“ஓகே ப்பா, நன் கேட்டுக்கறேன்…” என கதிர் எழுந்துகொண்டான்.
“எங்க கிளம்பிட்ட கதிர்? சாப்பிடனும்?…” என தவசி சொல்ல,
“அதான் சித்தப்பா, வாங்க சாப்பிடுவோம்…” என உள்ளே சென்றான் கதிர்.
மற்றவர்களும் வந்துவிட கீழே தரையில் போர்வை விரித்து இலையை போட்டுக்கொண்டிருந்தார் அங்கை.
“தாமரை அந்த இனிப்பை முதல்ல எடுத்துட்டு வந்து வைம்மா…” என்று யமுனா சொல்லவும் தாமரையும் செய்துவைத்திருந்த பதார்த்தங்களுடன் வந்தாள்.
வந்தவள் அனைவருக்கும் பொதுவாக பரிமாற தன்னை பார்ப்பாள் என கதிர் நினைக்க அவள் நிமிரவே இல்லை அவனிடத்தில்.
‘இவ கோவமா இருக்களோ? என்னாச்சு பார்க்கலை?’ என குழப்பத்துடன் கதிர் அவளையே மீண்டும் மீண்டும் பார்த்தான்.
ம்ஹூம், தாமரை திரும்புவதாய் இல்லை. ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்தவன் வெளியே செல்ல முடியாமல் மீண்டும் மாடிக்கு சென்றுவிட்டான்.
மற்றவர்கள் உண்டுமுடித்த பின்னர் தான் தர்ஷன் கீழே இறங்கி வந்தான். முகம் இன்னும் உறக்கத்தில் தான் இருந்தது.
“குளிக்காமலா வருவாங்க. அதெல்லாம் குளிச்சுட்டேன்…” என்றான் தாமரையும் அவரருகில் இருப்பதை கண்டு சங்கடத்துடன்.
“இப்ப என்ன கேட்டுட்டேன்னு வெடுக்குன்னு பேசற?…” என முறைத்தார்.
“இப்ப இங்க என்ன ஆகி போச்சாம்? வெடுக்குன்னு பேசற தடுக்குன்னு பேசறன்னு. ம்மா பசிக்குதும்மா…” என அவரருகே சென்று நின்றான்.
“அதெல்லாம் குஷ்புவை தூக்கி அடுப்புல ஏத்தியாச்சு…” என யமுனா எப்பவும் போல சொல்லவும் தாமரை திகைக்க தர்ஷன் படக்கென்று தாமரையை பார்த்துவிட்டு யமுனாவின் வாயை பொத்தினான்.
“ம்மா…” என்று சொல்லவும்,
“அடேய் போடா அங்கிட்டு. வேலை இல்லையா? இப்ப வந்து கொஞ்சிக்கிட்டு நிக்கித?…” என தர்ஷனின் கையை தட்டிவிட்டார் யமுனா.
“அதென்னது அத்தை குஷ்பு?…” என தாமரை கேட்டதும் தர்ஷனின் முகம் போன போக்கில் தாமரைக்கு சுவாரசியமாய் இருந்தது.
“ம்மா…” என அவன் பேசும் முன்,
“இவனுக்கு இட்லி வெறுமனேன்னா ஆவாது. குஷ்பு இட்லின்னா தான் ஆவும். முன்னால ஒரே அடம். எனக்கு இட்லி குஷ்பு மாதிரி தான் வேணும்ன்னு. கடையிலேல்லாம் குடுக்காங்க. உன்னால செய்ய முடியாதான்னு கேட்டு அழுகை…”
“ஆஹாங், இதெல்லாமா?…” என கிண்டலாய் தர்ஷனை பார்த்தாள் தாமரை.
“அது அறியாத வயசு அண்ணி…” என அசடு வழிந்தான் தர்ஷன்.
தர்ஷனுக்கு என்னவோ தோசை என்றாலே ஆகாது. அதனாலேயே இட்லியின் ரசிகனாய் வாழ்ந்து வருகிறான்.
“தோசைன்னா மட்டும் தொண்டைக்குழி அடைச்சுக்கும். விக்கும், சிகும்ன்னு இல்லாதப்பட்ட பேச்செல்லாம் பேசி இட்லியை தான் கேட்பான். விட்டா குஷ்புவத்தை கூட்டிட்டு வரனும் குஷ்பு இட்லிக்கு…”
யமுனா அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டே செல்ல தாமரைக்கு யமுனா நீட்டிமுழக்கிய விதத்திலும் தர்ஷன் முழித்த முழியிலும் சிரிப்பை அடக்க படாதபாடு தான்.
“அண்ணி சிரிக்காதீங்க….” என தாமரையிடம் தர்ஷன் சொல்ல,
“அண்ணிதான, சிரிச்சா உனக்கென்னடா?…” என அதற்கும் யமுனா தான் மகனை பேசினார்.
“சரி சரி சிரிக்கலை. ஆமா ஹால்ல உன் அண்ணன் இல்லையே? எங்க?…” என்றாள்.
தர்ஷனுக்கு யமுனா தனக்கு தோசை தான் ஊற்றுகிறாரோ என பார்த்துக்கொண்டே,
“அவன் ஓடிட்டான் அண்ணி…” என்று உளறினான்.
“ஓடிட்டாரா? வீட்டை விட்டா ஊரை விட்டா?…” என தாமரை கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுதே,
“என்னடா நான் ஓடனும்னு ரொம்ப நாளா எதிர்பார்க்கிற மாதிரில தெரியுது?…” என வந்தான் கதிர்.
வந்தவன் தர்ஷனிடம் பேசினாலும் பார்வை தாமரையை தொட்டு தொட்டு மீள வேண்டுமென்றே அவனை சுற்றவிட்டாள் அவள்.
“இவளை…” என பல்லை கடித்தவன்,
“ம்மா, தலை வலிக்குது. டீ வேணும்…” என்ற டையனிங் டேபிளில் அமர்ந்தான்.
“இதோ போடறேன்ப்பா…” என யமுனா சொல்லவும் தாமரையே சென்று டீக்கு பாத்திரத்தை கேட்டு தானே வைத்தாள்.
யமுனாவிற்கு அதில் ஏக பெருமை. உடனே கதிரையும் தர்ஷனையும் ‘எப்படிடா?’ என்பதை போல பார்த்து சிரிக்க,
“அய்ய, ரொம்பத்தான்…” என்று வாய்விட்டுவிட்டான் தர்ஷன்.
“அடுப்புல இட்லி இன்னும் வெந்திருக்காதேடா. பார்த்து பேசு…” என கத்திரி அடக்கிய சிரிப்புடன் தம்பியிடம் கூற,
“உன்னை வச்சுக்கிட்டு. நீயே எடுத்து குடுப்படாஅண்ணா…” என்றவன் உடனே யமுனாவை பார்க்க அவர் முறைப்புடன் இடுப்பில் கை வத்து நின்றார்.
“ம்மா, அண்ணி சூப்பர். பிரமாதம். எக்ஸலன்ட். வாட் எ தெரசா?…” என்று வரிசையாய் அவிழ்த்துவிட,
“இன்னைக்கு நீ விரதம் தான தர்ஷ்…” என்று தாமரை சிரித்தாள்.
“அப்படித்தான் ஆகிடும் போல அண்ணி. நீங்க பார்த்து பெரியமனசு பண்ணுங்க…” என தாமரை பக்கம் சாய்ந்தான் தர்ஷன்.
“காலாங்காத்தால வந்து பேச்சை பாரு. எப்ப பார்த்தலும் லொட லொடன்னு…” என்ற யமுனா,
“ஏம்மா தாமரை, இவன் ஆபீஸ்லயும் இப்படித்தானா?…” என்று கேட்க தர்ஷனின் முகம் கலவரத்திற்கு மாறியது.
“ம்மா, இப்ப கல்யாண வீட்டுல எதுக்குமா ஆபீஸ் புராணம். நான் எவ்வளவு குட் பாய் உங்களுக்கு தெரியாது. அண்ணி சொல்லுங்க. ஆமா தானே?…” என்று தன்னை மாட்டிவிட்டுவிடாதே என்பதை போல் தாமரையிடம் மறைமுகமாக சொல்லிக்கொண்டிருந்தான்.
“நான் கேட்கும் போது அங்க என்னடா கண்ணை காட்டுற?ஒழுங்கா சொல்லு…” என தர்ஷனின் காதை பிடித்தார் யமுனா.
டீயை போட்டு முடித்தவள் கதிரிடம் நீட்டிவிட்டு அவனுடனே அமர்ந்துகொண்டாள் தனக்கும் ஒரு கப்பை எடுத்துக்கொண்டு.
“ம்மா, நான் சொல்வதெல்லாம் மெய். மேல வைக்காதீங்க கை….” என முன்னெச்சரிக்கையுடன் சொல்லியவன்,
“உன் கல்யாணத்துல டெண்டு வாய் இட்லி சாப்பிட முடியுதாடா அண்ணா? இதையெல்லாம் என்னன்னு நீ கேட்க மாட்டியா?…” என்று கதிரிடம் கேட்க,
“இப்போ என்ன உனக்கு தோசை ஊத்த சொல்றேன்…” என்று கதிர் சொல்ல,
“அண்ணி, இணைக்கு நீங்க சொன்ன மாதிரி நான் விரதம் தான் போல?…” என அழமாட்டாத குறையாக தர்ஷன் சொல்லவும் தாமரை வாய்விட்டு சிரித்தபடி எழுந்து அவனுக்கு இட்லியை எடுத்து வந்தாள்.
இத்தனை நாழி கதிரே அவளின் இப்படி ஒரு சிரிப்பை பார்த்ததில்லை. பொங்கி பொங்கி அவள் சிரிக்க விநாயகம் எழுந்து வந்துவிட்டார் அந்த அறைக்கு.
“என் மருமக இப்படி சிரிச்சு எத்தனை நாள் ஆச்சு?…” என கண்கலங்கி அவர் சொல்ல அவ்விடமே சட்டென அமைதி சூழ்ந்தது.
இறுக்கம் தளர்ந்து மனதெல்லாம் இறகாய் பறந்தது தாமரைக்கு. எப்போதும் ஒருவித அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும் காலை எழும் வேளையில்.
இந்த சில நாட்களில் அது இன்னும் அதிகமாக்கி இருக்க சிறு புன்னகை கூட அவளுக்கு அதிசயமாகி போனது.
இப்பொது இந்த காலை வேளையும், புது இடமென்று உணராதபடி இருந்த உறவுகள் கொண்ட சூழலும் அத்தனை குளிர்ந்த மனநிலையை தந்திருந்தது தாமரைக்கு.
மெல்லிய மென்னகையுடன் அனைவரையும் பார்த்தவள் விழிகள் கடைசியாக மனம் நெய்த நேசத்துடன் கொண்டவனை வட்டமிட்டது.
அவள் தன்னை பார்த்ததுமே ‘மேல வா’ என்னும் விதமாய் விழியசைவில் வழி காண்பித்தவன் தலையசைத்துவிட்டு சென்றுவிட்டான் மாடிக்கு.
அதன் பின் விநாயகம் குடும்பத்தினர் சற்றுநேரத்தில் கிளம்பிவிட்டார்கள். இன்னும் இரு நாட்களில் மறுவீடு அழைத்து செல்லலாம் என்னும் பேச்சுவார்த்தையுடன் கிளம்பியிருந்தார்கள்.
அத்தனை சொந்தங்களையும் வரவழைத்து பெண் வீட்டிற்கு சென்று திரும்புவதென்பது இப்போதிருக்கும் சூழ்நிலைக்கு ஒத்துவராது என்று சொல்லிவிட்டார் யமுனா.
வருபவர்கள் இன்னுமே வேதனைப்படுத்தும் படி பேச கூடும் என்பதால் யமுனா அதை தவிர்க்க நினைத்தார்.
ஏற்கனவே திருமணத்தில் சிலர் சோமநாதன் காதுபடவே இப்போதே வீட்டை இரண்டாக பிரித்து இரு பெண்களின் பெயரில் எழுதி வைக்க சொல் என்றெல்லாம் பேசியிருந்ததில் வெகுவாய் ரணப்பட்டு போனார் அவர்.
அதனால் எதற்கு கஷ்டத்தை விலைகுடுத்து வாங்குவானேன் என அவர் சொல்லிவிட்டார்.
அங்கைக்கும் காரணம் தெரிந்திருந்ததில் யமுனா சொல்லியது தான் சரி என அவரும் சரளாவிடம் பேசிவிட்டார்.
தங்களின் குடும்பம், அங்கை குடும்பம், பின் தாமரை வீட்டின் பக்கத்தில், அக்கம்பக்கத்தினர் இது போதாதா என்று சொல்லிவிட்டனர் கதிரை சேர்ந்தவர்கள்.
விநாயகத்திற்கு அத்தனை மனநிறைவு. இப்படி ஒரு சம்பந்தம் பார்த்து கொடுத்ததிற்கு அங்கைக்கும் தனி நன்றியை சொல்லியிருந்தார் அவர்.
மருமகளை சேர்ந்தவர்களின் மேலும் கரிசனத்தை தாண்டி அவர்களின் உணர்வுகளை புரிந்து சூழ்நிலை அறிந்து நடந்துகொள்பவர்கள் எத்தனை பேர் என வியக்காத நாளில்லை கதிரின் குடும்பத்தை நினைத்து.
நெஞ்சம் நிறைந்த சந்தோஷத்துடன் அவர் கிளம்பிவிட சரளாவிற்கு அழைத்து பேசினாள் தாமரை.
இவளின் அழைப்பிற்காகவே காத்திருந்ததை போல சரளாவும், நிவேதாவும், சோமநாதனும் ஆவலுடன் பேசினார்கள்.
மகளின் குரலில் நிரம்பி வழிந்த உற்சாகத்தில் அவளின் வாழ்க்கையை புரிந்துகொண்டனர் வீட்டினர்.
சற்று நேரத்தில் பூங்காவனம் தர்ஷனுடன் ட்ராவல்ஸ்க்கு கிளம்பிவிட, யமுனாவும், அங்கையும் பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர்களுக்கு எல்லாம் திருமண பலகாரம் கொடுக்க கிளம்பிவிட்டார்கள்.
“கோவிலுக்கு போகணும்ன்னா இப்பவே நேரமாகிருச்சு தாமரை. சாயங்காலம் போகலாம். நீ போய் கொஞ்சம் நேரம் தூங்கனும்ன்னா தூங்கு. இல்லைன்னா கதிர்ட்ட பேசிட்டு இரு. நாங்க வர ரொம்ப நேரம் ஆகும். எல்லாருக்கும் குடுத்துட்டு தான் வருவோம்…” என்றார் யமுனா.
“மதியத்துக்கு சமைக்கறதுக்கு அத்தை?…” என தாமரை கேட்க,
“கொஞ்சமா. அவ்வளோ பர்பெக்ட் குக்கர் இல்லை நான்…” என தலைசாய்த்து அவள் சொல்ல,
“நான் சும்மா தான் கேட்டேன். எனக்கு கல்யாணம் ஆகறப்ப அடுப்புல காபி கூட வைக்க தெரியாது. என் மாமியார் தான் எல்லாம் சொல்லி குடுத்தாங்க. அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை…” என்றவர்,
“சரி நீ மாடில இரு. நான் கதவை சாத்திட்டு போறேன். வெளில எங்கயும் போகனும்ன்னா இந்நேரம் போக வேண்டாம். அவன்கிட்ட சொல்லிரு…” என சொல்லி அங்கையுடன் கிளம்பிவிட்டார்.
“ஆன்ட்டி அங்கிளும் கிளம்பிட்டாங்களா?…” என தவசியை கேட்க,,
“ஆமாம்மா. வேலை இருக்குன்னு மாமா கூடவே கிளம்பிட்டாரு…” என அங்கை சொல்லவும்,
“இன்னும் என்ன ஆன்ட்டி சின்னத்தைன்னு கூப்பிடு. அவளும் சந்தோஷப்படுவால்ல…” என்றதும் அங்கையும் ஆமாம் என்பதை போல தான் தாமரையை பார்த்தாள்.
“நான் அப்படியே கூப்பிட்டுட்டே இருந்துட்டேனா? அதான். இனிமே அப்படியே கூப்பிடறேன்…” என்றதும் சிரித்துக்கொண்டே கிளம்பி சென்றார்கள்.
உள்ளே வந்தவள் மாடிக்கு செல்ல அங்கே அறையில் கதிர் இல்லை. காணாமல் வேறு அறைகளில் தேடிகொண்டிருந்தவளுக்கு மாடியில் ஏதோ சத்தம் கேட்க மொட்டை மாடிக்கு சென்றாள்.
முதல் நாள் வந்ததில் இருந்து மாடிக்கு செல்லவில்லை. இப்போது முதன்முறை செல்லவும் அங்கே குளிர்ந்த காற்று வெயிலையும் தாண்டி முகத்தில் அடித்தது.
“கதிர்…” என்றவளின் அழைப்பில் அவனும் திரும்பி பார்த்துவிட்டு,
“ரொம்ப சீக்கிரம் வந்துட்டீங்க தாமரை…” என்றான்.
அவன் பன்மையில் பேசும் போதே கோபத்தில் இருக்கிறான் என கண்டுகொண்டவள் அவனருகே சென்று நின்றாள்.
“கீழே எல்லாரும் வெளில கிளம்பிட்டாங்க. அதான்…” என அவள் என்ன செய்கிறான் என பார்த்துக்கொண்டு நின்றாள்.
மாதுளையும், எலுமிச்சையும், கொய்யாவும் பெரிய பெரிய தொட்டிகளில் வளர்ந்திருந்தது.
கனகாம்பரம், மல்லிகை என அதற்கும் தனி தனி தொட்டிகள். பராமரிப்புகள் எல்லாம் செய்துகொண்டிருந்தனர் என்பதற்கு ஆதாரமாக அத்தனை நேர்த்தியுடன் இருந்தது.
தோட்டம் என்றும் சொல்லமுடியாத அளவிற்கு சிறியது என்றாலும் பார்க்க நன்றாக இருந்தது.
கதிர் மாதுளை செடியில் இருந்த காய்ந்த சருகுகளை பிய்த்து கீழே போட்டுக்கொண்டு இருந்தான். இலைகளின் மேல் தண்ணீரை தெளித்துக்கொண்டும் நின்றான்.
“இதை எல்லாம் நீங்களா மெய்ண்டெய்ன் பன்றீங்க கதிர்?…” என தாமரை கேட்க,
“அம்மா தான் எல்லாம் பன்றாங்க. நான் எப்பவாவது நேரமிருந்தா தான். இந்த நேரம் எல்லாம் ட்ராவல்ஸ்ல தான் இருப்பேன். இப்போ போக முடியாதில்லையா? அதான் இங்க வந்துட்டேன்…”
“நான் வர லேட்னதும் கோபமா?…” என கேட்டதும் கத்திரி சிரிப்புடன் பார்த்தான் அவளை.
“உனக்கு என்ன ஆச்சு? ஏன் காலையில வான்ட்டடா என்னை அவாய்ட் பண்ணின? நான் பார்க்காதப்போ பார்த்தது பார்க்கும் போது என்ன கவனிக்காத மாதிரி?…” என அந்த சுற்று சுவற்றில் சாய்ந்து நின்று கேட்டான்.
“கோவம் தான். நீங்க பொண்ணு தேடின விஷயம் தெரிஞ்சதுல இருந்தே கோவம் தான். அதுவும் நேத்து பேசலாம்ன்னு நினைச்சா பேசவே விடலை. அதான் சும்மா ஒரு போக்கு காமிச்சேன்…” என்றாள் சரளமாக.
முதல்நாளின் வெட்கங்களின் சுவடுகள் முகத்தில் ஒளிந்திருந்தாலும் அதனை கவனமாக மறைக்கும் விதமாக இருந்தது அவளின் பேச்சு.
“நீ பேசனும்னு சொன்னாலே பிரஷர் ஏறுது எனக்கு. நேத்தும் வந்து எதாச்சும் பேசி, நான் ரியாக்ட் பண்ணி. அதான் தூங்கிட்டேன்…” என்றதும் அவனின் தோளில் லேசாய் அடித்தவள்,
“உங்க தூக்கத்தை தான் பார்த்தேனே? மூஞ்சியை அப்பாவி மாதிரி வச்சுட்டு என்னை…”
“வா கீழே போகலாம்…” என சொல்லி கதிர் அவளின் பேச்சை நிறுத்திவிட்டு நடக்க,
“ஏன் இங்க என்னவாம்?…” என்று அங்கேயே நின்றாள் தாமரை.
“இங்க சுத்திலும் வீடுங்க. நம்மளை வேடிக்கை பார்க்கிறதை கூட நாம கவனிக்க முடியாது. யார் வேணாலும் பார்த்துட்டு இருப்பாங்க…”
“அதனால என்ன? பேசிட்டு தானே இருக்கோம்…”
“ஆனா உன்கிட்ட என்னால தள்ளி நின்னு பேச முடியலையே. அதன் கீழே போறேன்…” என சொல்லி கதிர் இறங்கிவிட்டான்.
தாமரையின் முகமும், அகமும் வெம்மை கொள்ள இதழ்களை சூழ்ந்த புன்னகையுடன் அவனை பின்பற்றி கீழே இறங்கினாள்.
அறைக்குள் நுழையும் முன்னரே கதிர் வேகமாய் வெளியே வந்தான் காதில் போனை வைத்துக்கொண்டு.
“நிஜமா தான் சொல்றீங்களா? தேங்க் யூ சோ மச் ஸார். இப்பவே கிளம்பி வரோம்…” என்று சொல்லியவன் தாமரையை பார்த்ததும் இறுக்கமாய் அணைத்துக்கொண்டான்.
“நிஜமாவா? நிஜமா தான் சொல்றீங்களா? என்னால நம்பவே முடியலை…” என அவள் விழிகள் கலங்க,
“ஹேய் என்ன இது? சந்தோஷமா சொல்லிட்டு இருக்கேன். அழுதுட்டு இருக்க?…” என அவளின் கண்ணீரை துடைத்தவனின் முத்தங்கள் முகத்தை நிறைத்தது.
“இனி நீ நிம்மதியா இருப்ப தானே?…” என சொல்லியவன் அவளின் பதிலை கேட்காமல் கீழே இறங்கினான்.
“நீ வீட்டுல இரு. நான் உன் மாமாவுக்கு கூப்பிடறேன். உன் அப்பாவுக்கு போன் போடு. கிளம்பனும்…” என்று வேக வேகமாய் பேச, தாமரைக்கு இன்னும் அந்த சந்தோஷத்தில் இருந்து வெளிவரமுடியவில்லை.
அப்படியே நின்றிருந்தாள். அந்த உணர்வில் இருந்து வெளிவர முடியாதளவிற்கு மனதில் இருந்த அழுத்தம் எல்லாம் பனியாய் கரைவரை போல இருந்தது அவளுக்கு.
சத்தமே இன்றி கண்ணீர் கரைபுரள மீண்டும் அவளை பார்த்தவன் தன்னருகே கை நீட்டி அழைத்தான்.
“நாம இப்பவே போகனும் தாமரை….” என சொல்லிக்கொண்டே விநாயகத்திற்கு அழைத்துவிட்டான்.
அவர் போனை எடுத்ததுமே விஷயத்தை கேள்விப்பட்டு சோமநாதனுடன் காவல் நிலையத்திற்கு வந்துவிட்டதாய் சொல்லி வைத்துவிட்டார்.
அவளின் சந்தோஷம், அழுகை எல்லாம் நின்று இப்போது முகத்தில் கலவரம் வந்திருந்தது.
“என்னாச்சு தாமரை? ஏன் என்னவோ போல இருக்க?…” என்றான் கதிர்.
“அவன் கிடைச்சுட்டான்னு தான் சொன்னாங்களா?…” என கேட்டதும்,
“நீ என்ன சொல்ற?…” என குழம்பினான்.
“ஸ்டேஷன்ல இருந்து என்ன சொன்னாங்க? நகை கிடைச்சதுன்னு சொன்னாங்களா? இல்லை திருடன் கிடைச்சுட்டான்னு சொன்னாங்களா?…” என்றாள்.
“திருடனை பிடிச்சாச்சுன்னு தான்…” என்றவனுக்கு தாமரை என்ன யோசிக்கிறாள் என பிடிபட்டது.
“நீ ஏன் அப்படி நினைக்கிற? நகையோடவே கிடைச்சிருக்கலாம் தானே?…” என கேட்கும் போதே அவனின் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
“எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் நம்பறேன். நகை கிடைச்சுடனும். பணத்தோட கிடைச்சாலும் சரி. இல்லை நகை மட்டுமாவது கிடைச்சாலும் சரி. நகை கிடைக்கனும்…” என்றவளின் தலையை ஆறுதலாய் வருடினான்.
“நீ பயப்படற மாதிரி எதுவும் இருக்காது. கண்டுபிடிச்சிருவாங்க தாமரை…” என்று சமாதானம் சொல்லி அவளை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு யமுனாவிடம் சொல்லிவிட்டு தான் மட்டும் கிளம்பி சென்றான் கதிரவன்.