கதிர் கிளம்பவும் தாமரை தனியே இருந்தாள் கதிர் சென்ற ஐந்து நிமிடத்தில் பக்கத்து வீதியில் இருந்த யமுனாவும், அங்கயும் வந்துவிட்டார்கள் வீட்டிற்கு.
“என்னம்மா போன் வந்துச்சாமே? என்ன சொல்லிட்டு போறான்?…” என யமுனா கேட்க,
“எனக்கு தெரியலை அத்தை. கொள்ளையடிச்சவனை பிடிச்சாச்சுன்னு போன் வந்தது. அதான் உடனே கிளம்பினாங்க…”
“அம்மாடி, இது போதும். அப்படியே அவன் கையை கால உடைச்சு அடுப்புல போட. என்ன ஆட்டம் காமிச்சுட்டானுங்க…” என யமுனா வேண்டுதலும் சாடலுமாக பேசிக்கொண்டே தாமரை பக்கத்தில் அமர்ந்தார்.
சரளாவுக்கு போன் செய்து யமுனாவும், அங்கயும் பேசினார்கள். அவருக்கும் நிம்மதியாக இருந்தது. ஆள் கிடைத்துவிட்டால் பணமும் கிடைத்துவிடும் என நம்பினார்.
“இன்னும் எவ்வளவு நேரம்? இந்த கதிருக்கு போனை போட்டா எடுக்கவே மாட்டேன்றான். உன் மாமாவுக்கு போட்டு கேப்போம்ன்னு பாத்தா அவருக்கும் விஷயம் தெரியலை…”
யமுனாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. எப்போதடா நகையும் பணமும் கிடைக்கும் என இருந்தது.
அத்தனை கஷ்டங்களை அனுபவித்ததை பார்த்துக்கொண்டு தானே இருந்தார் அவரும்.
உழைத்த காசு, எத்தனை கஷ்டத்தில் அதனை சிறுக சிறுக சேர்த்திருப்பார்கள் தாமரை வீட்டினர்.
அங்கையுடன் பேசியபடியே மதிய உணவும் செய்துமுடித்துவிட்டார். தாமரையை தேடவே இல்லை.
அவள் இன்னும் என்ன தகவல் என்ற படபடப்பிலேயே தான் இருந்தாள். வேறு சிந்தனையே இல்லை.
வெகு நேரம் ஆகிவிட்டதென்று தந்தைக்கு அழைக்காமல் கதிருக்கு அழைத்தாள். விஷயத்தை கேட்டுக்கொண்டு சோமநாதனிடம் பேசிக்கொள்ளலாம் என நினைத்தாள் தாமரை.
இரண்டு முறை அழைத்தும் அவன் எடுக்காது போக மீண்டும் தொந்தரவு செய்ய வேண்டுமா என போனை பார்த்தபடியே அமர்ந்துவிட்டாள்.
“எவ்வளவு நேரம் தான் இப்படியே உக்கார்ந்திருப்ப தாமரை? இந்தா கொஞ்சூண்டு மோர் குடி…” என அங்கை கொண்டுவந்து அவளிடம் தர,
“கூப்பிட்டிருக்கலாமே அத்தை?…” என வாங்கிகொண்டாள்.
“நீஏ டென்ஷன்ல இருப்ப. அதான் எதுக்குன்னு தான் கூப்பிடலை. முதல்ல கொஞ்சம் அமைதியா இரு தாமரை…” என ஓடிக்கொண்டிருந்த பேனை கூட்டி வைத்துவிட்டு வந்து அமர்ந்தார் அங்கை.
“அத்தை எங்க காணும்?…” என தாமரை கேட்க,
“வருவாங்க. வேலைக்கு அந்தம்மா வந்தாச்சு. அதான் சொல்லிட்டு இருக்காங்க…”
“ஓஹ், நான் பார்க்கலையே…”
“அதத்தான் சொல்றேன். ஒரு நியாபகத்துல இல்லை நீ. எப்படியும் கதிர் வீட்டுக்கு வந்து என்னன்னு சொல்லுவான்ல. முதல்ல எப்பவும் போல இரு. நல்லதே நடக்கும்…” என சொல்லிக்கொண்டிருக்க வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
“கதிர் தான் வந்துட்டான் போல?…” என அங்கை சொல்லவும் மோர் தம்ளரை அப்படியே வைத்துவிட்டு எழுந்து வாசலுக்கு ஓடினாள்.
“கதிர்…” என வேகமாய் வந்து முன்னே நின்றவளை பார்த்ததும் கஷ்டமாய் இருந்தது கதிரவனுக்கு.
“என்னாச்சு? நகை கிடைச்சதா?…” என கேட்க,
“ஹ்ம்ம், வா உள்ள போவோம் தாமரை. வாசல்ல என்ன பேச?…” என உள்ளே சென்றான்.
“என்னப்பா வந்துட்டியா? என்ன சொன்னாங்க? நகை கிடைச்சதா?…” என யமுனாவும் வந்தார்.
தாமரையின் முகத்தில் தெரிந்த தவிப்பும், கலக்கமும் கதிரின் மனதிற்கு சஞ்சலத்தை உண்டுபண்ணியது.
காலையில் தான் அத்தனை சிரித்து சந்தோஷமாய் இருந்தவள். இப்போது இந்த அழைப்பினால் முகத்தின் மலர்ச்சி மறந்து கவலை பொதிந்திருக்க வருத்தமாய் பார்த்தான்.
“கொஞ்சம் பொறுமையா இருங்கம்ம்மா…” என்றவன்,
“தாமரை நீ சொன்ன மாதிரி தான். ஆள் தான் கிடைச்சிருக்கான். நகை எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க முடியலை. வாயை திறக்கமாட்டேன்றான்…” என சொல்லவும் அதனை ஜீரணிக்கவே நேரம் பிடித்தது தாமரைக்கு.
“என்ன கதிர் சொல்ற? நகை அவன்கிட்ட தானே இருக்கும்? அவன் எங்க இருக்கன்னு விசாரிச்சு போக முடியாதா? தேடினா கிடைக்கும் தானே?…” அங்கை கேட்க,
“நாம ஈஸியா சொல்லிட்டோம் சித்தி. ஆனா இதை எல்லாம் விசாரிக்காமலா இருப்பாங்க?…” என்றவன் வெயிலில் பைக்கில் சென்று வந்ததில் வியர்வையில் நனைந்திருந்தான்.
வியர்வை நீரில் சட்டை அவனின் தோளோடு, மார்போடு ஒட்டியிருக்க முகமெல்லாம் வியர்வை பூத்திருந்தது.
“தண்ணி குடிங்க முதல்ல…” என தாமரையே முதலில் நிதானத்திற்கு வந்தாள்.
“நீ இரு. நான் கொண்டுவரேன்…” என யமுனா சொல்ல,
“இல்லத்தை. நான் எடுத்துட்டு வரேன்…” என நகர்ந்துவிட்டாள்.
அங்கேயே நின்றால் நிச்சயம் அவன் மேல் சாய்ந்து அழுதுவிடுவோமோ என்றிருந்தது தாமரைக்கு. அதனால் அவ்விடத்தை விட்டு நகர்ந்து வந்தாள்.
“ம்மா, நீங்க போங்க. நான் பார்த்துக்கறேன். அவ ரொம்ப எமோஷனலா இருக்கா…” என யமுனாவிடம் சொல்லியவன் தாமரையை தேடி சென்றான்.
“அவங்க பேசட்டும் அங்கை. நாம மத்த வேலையை பார்ப்போம். அப்பறமா வந்து என்னன்னு கேட்டுப்போம்…” யமுனாவும் ஹாலில் இருந்து முன் பக்கமாய் சென்றார்.
உள்ளே சீதா பாத்திரம் கழுவிக்கொண்டு இருக்க தாமரை தண்ணீரை எடுத்து தானும் குடித்துவிட்டு காத்திருக்கும் எடுத்துக்கொண்டு திரும்ப அபோதும் சீதாவை கவனிக்கவில்லை.
“யம்மா புது பொண்ணு…” என சீதாவே தாமரையை அழைக்க அதற்குள் கதிரும் வந்துவிட்டான்.
“என்ன கதிரு, உன் சம்சாரம் என்னன்னு கூட ஏறெடுத்து பாக்கமாட்டிக்குது? என்னையெல்லாம் சொல்லமாட்டியா யாருன்னு?…” என்று கதிரிடம் பேச,
“சொல்லிட்டா போச்சு…” என்றவன் தாமரையின் கையில் இருந்த தண்ணீரை வாங்கிவிட்டு,
“தாமரை இவங்க நம்ம வீட்டுல நமக்கு ஹெல்ப்பா இருக்கறவங்க. பேர் சீதா…” என அவரை அறிமுகப்படுத்தி வைத்தான்.
“அச்சோ, நான் நிஜமாவே கவனிக்கலை உங்களை. வேற ஒரு யோசனையில இருந்துட்டேன்…” என தாமரை அவரிடம் சொல்ல,
“இருக்கட்டும். புது பொண்ணுன்னா அப்படித்தான். யோசானை எங்கியாச்சும் சுத்திட்டே தான இருக்கும். அதுவும் கல்யாணம் ஆனா மறுநாளே புருஷன் பக்கத்துல இல்லன்னா…” என கிண்டலாய் பேச,
“போதும், போதும். பேச ஆள் கிடைச்சிட்ட கூடாதே? உடனே அரட்டை. முதல்ல தேசச பாத்திரத்தை கழுவு. எல்லாம் காய போகுது…” என்ற யமுனா,
“இங்க என்ன? வெளில இருங்க. சாப்பிடும் போது கூப்பிடறேன்…” என மகனையும், மருமகளையும் அனுப்பி வைத்தார்.
“தாமரை, உன்கிட்ட பேசனும். வா…” என சொல்லி அவனும் செல்ல பின்னே சென்றாள் தாமரை.
மனது முழுவதும் இப்போது தந்தையும், வீட்டினரும் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்னும் எண்ணமே வியாப்பித்து இருந்தது.
தானும் இல்லாமல் தந்தையின் வாட்டத்தில், தங்கையும் தாயும் அழுது கரைவரே என மனதிற்குள் தவித்தாள்.
ஆறுதல் சொல்லவும், தேற்றவும் கூட தான் இல்லையே என னியாநிக்கும் போதே கண்கள் கலங்கிவிட்டது.
இந்த யோசனையிலேயே வந்தவள் கதவை கவனிக்காமல் முட்டிக்கொண்டு நிற்க,
“ஹேய் பார்த்து வரமாட்டியா தாமரை? என்ன இது?…” என அவளை உள்ளே அழைத்து நெற்றியை தடவிவிட்டான்.
“வெய்ட் பண்ணு. கீழே பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் இருக்குது. போய் எடுத்துட்டு வரேன்…”
“அதெல்லாம் வேண்டாம். சரியா போய்டும்…” என கதிரின் கையை பிடித்துக்கொண்டாள்.
“ப்ச், தைலம் தேய்க்காம எப்படி சரியாகும்? ரத்தம் கட்டிட போகுது தாமரை…” என சொல்லிவிட்டு கீழே இறங்கி வந்தவன் மீண்டும் மாடிக்கு செல்ல பூங்காவனம் வந்துகொண்டிருந்தார்.
கதிரிடம் போலீஸ் ஸ்டேஷன் சென்றுவந்த விஷயமாக விபரம் கேட்கலாம் என்றால் அவன் வேகமாய் படி ஏறுவதை பார்த்துவிட்டு பேசாமல் இருந்துகொண்டார்.
“என்ன பார்த்துட்டே நிக்கறீங்க? இதுக்கு முன்னாடி நம்ம வீட்டு மாடியை பாத்ததே இல்லையாக்கும்?…” என யமுனா வரவும்,
“கதிர் போனான் அதான் பாத்துட்டு நின்னேன்…”
“அவன் இன்னைக்கு போறானா? இல்ல இன்னைக்கு தான் மாடி க்கு நடக்கறதை பார்க்கறீங்களா?…”
“தெரியாம பாத்துட்டேன். இப்ப என்ன செய்யனும்ன்ற?…” என பூங்காவனம் கேட்க,
“வந்தோமா கையை காலை கழுவிட்டு அப்பறமா நின்னு கதை பேசினோமான்னு இல்லாம வந்ததும் நடுவீட்டுல சிலையாட்டம் நின்னா வேற என்ன கேட்க?…”
“அவ்வளோ தான? இந்தா போய்ட்டேன்…”
“ம்க்கும், அப்படியே எல்லாம் நான் சோழி சொல்லி கேட்டுடற மாதிரித்தான்…” என தோளில் முகத்தை இடித்துக்கொண்டு சென்றார் யமுனா.
அங்கை வாய்திறக்காமல் சிரித்துவிட அதை கண்டும் காணாமல் சென்ற பூங்காவனம்,
‘எல்லாம் என் நேரம்’ என புலம்பியபடி தங்கள் அறைக்கு சென்றார்.
மாடிக்கு வந்த கதிர் தைலத்தை எடுத்து காயம் பட்ட இடத்தில் பூச அதன் எரிச்சலில் முகம் சுண்டினாள்.
“எரியுதா?…” என்றவனின் கரிசனாமான கேள்வியில் அவன் மேல் சாய்ந்து அணைத்துக்கொண்டவளின் கண்ணீர் அவனின் ஈரமான சட்டையை இன்னும் ஈரமாக்கியது.
துளி சத்தம் வராமல் விசும்பல் மட்டுமே தாமரையிடத்தில். கண்ணீர் மட்டும் வந்துகொண்டே இருந்தது.
எத்தனை நாள் அடக்கிவைத்த அழுகையோ? ஆனால் கதிருக்கு பொறுக்கவில்லை.
“ப்ச், அழுதா மட்டும் உடனே எல்லாம் கிடைச்சிடுமா? நீ தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன் தாமரை…” என்றான்.
“அழுகை எல்லாருக்கும் பொதுவானது. யார் அழுதாலும் கண்ணீரும் வரும். நான் என்ன இரும்பா? இல்ல கல்லா? அழாம இருக்கறதுக்கும், அழுதா கண்ணீர் வராம இருக்கறதுக்கும்…” என்றவள்,
“ஏன் உங்களுக்கு வர போற வொய்ப் இப்படித்தான் இருக்கனும்னு பல கண்டிஷன் போட்ட மாதிரி அதுல இதுவும் ஒன்னோ?…” என்றாள் நகர்ந்து அமர்ந்து அவனை பார்த்து.
அவள் அதனை கேட்கும் பொழுதே லேசாய் முறைத்துக்கொண்டு கேட்க கதிரின் முகத்திலும் புன்னகை மீண்டது.
“ஆமான்னு சொன்னா?…” என்றான் அவன் வேண்டுமென்றே.
தர்ஷன் தான் அன்றே சொல்லிவிட்டானே தன்னை பற்றி எல்லாம் சொல்லியிருந்ததாக.
அதனால் கதிரும் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை. தாமரை இப்போது மற்றதை விடுத்து இதை கேட்கவும் சற்று நிம்மதியாகவும் இருந்தது.
கோபத்தை எப்படியும் சமாதானம் செய்யலாம். ஆனால் அழுகையை நிறுத்துவது அவனளவில் இயலாத காரியம்.
தனக்கு அதற்கு பொறுமையும் இருக்காது என நினைத்தான் கதிர். அழுது வேலைக்காக போவதில்லை என்று தெரிந்து ஏன் அழவேண்டும் என்ற எண்ணம் அவனுள் எப்போதும் உண்டு.
நடந்து முடிந்துவிட்ட ஒரு விஷயத்தை எண்ணி எண்ணி அழுதுகொண்டே இருப்பதில் என்ன பயன் என தான் நினைப்பான்.
அழுததெல்லாம் போதும். இனி அடுத்ததை கவனிக்கவேண்டும் என்று அவன் நகர்ந்துவிட்டான். ஆனால் தாமரையினால் முடியுமா?
இப்போது அவள் பேச்சை மாற்றி தன்னையும் திருப்பி கேள்வி கேட்க கதிருக்கு அவளின் முறைப்பு சிரிப்பை தந்தது.
“ஏன் நான் அப்படி பொண்ணு தேடினதால என்ன குறைஞ்சு போச்சாம்? பொண்ணுங்க கேட்காலையாமா? நாத்தனார் வேண்டாம், மாமனார், மாமியார் வேண்டாம். தனி குடித்தனமுன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே அத்தனை திட்டமும் போடறாங்க. வித் வெல் செட்டில்ட் மாப்பிள்ளைக்கு தான் பர்ஸ்ட் பிரயாரிட்டி…”
மூச்சுவிடாமல் அவன் அடுக்கிக்கொண்டே போக தாமரைக்கு வந்ததை மறந்து அவனின் பேச்சில் கோபம் கூடியது.
“இருக்கலாம்…” என மழுப்பியவளுக்கு அதுதான் உண்மை என ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை.
“என்ன இருக்கலாம்? நான் ஒன்னும் அதை தப்புன்னு சொல்லலையே? பொண்ணுங்களோட கண்டிஷனை கேட்கும் போது எங்களுக்கும் இப்படி சில கண்டிஷன்ஸ் இருக்கறதையும் அக்சப்ட் பணிக்கோங்க…” என்றான்.
“எது முடி அதிகமா இருக்கனும், வெய்ட் போட்டிருக்க கூடாது, ஹைட் ரொம்ப கம்மியா இருக்க கூடாதுன்னு நீங்க போட்ட லிஸ்ட் எல்லாம் ரொம்ப ஓவர்…”
“என்ன ஓவர், எனக்கு வரப்போற போண்டடடி எப்படி இருக்கணும்ன்ற ஆசை எனக்கும் இருக்கும் தானே?…” என்றவன்,
“முடி அடர்த்தியே இல்லாம ரொம்ப ரொம்ப கம்மியா இருக்குது. கல்யாணத்துக்கு அப்பறம் நிறைய சேஞ்சஸ் வரும். அப்போ அதுவும் போச்சுன்னா? சொட்டையா இருக்கற பையனை எத்தனை பொண்ணுங்க ஏத்துக்கறீங்க?…”
“அதெல்லாம் இருக்காங்க…”
“எங்க இருக்காங்க? சொந்தத்துல தவிர்க்க முடியாம வேணா இருப்பாங்க. ஆனா அந்நியத்துல பார்க்கும் போது ஈஸியா அங்கிள் மாதிரி இருக்காங்கன்னு சொல்லி அவாய்ட் பண்ணிடுவாங்க…”
“யாரோ ஒரு சிலர் தான் அப்படி?…”
“தப்பிக்காத தாமரை. இந்த காலத்துல நிறையவே வெல் பர்சனாலிட்டி அன்ட் வெல் செட்டில்ட் மாப்பிள்ளை தான் அதிகமா விரும்ப படறாங்க. இல்லைன்னு மறுக்க முடியாது. அதே மாதிரி தான் நானும் எதிர்பார்த்தேன். தப்புன்னு இப்பவும் ஒத்துக்கமாட்டேன்…” என்றவன்,
“ஆனா ஒன்னு ஒத்துக்கனும். இதை இப்போ சொல்ல எந்த ஈகோவும் இல்லை எனக்கு. முன்னாடின்னா கண்டிப்பா சொல்லிருக்கமாட்டேன். ஆனா இப்போ சொல்லலாம். ஏனா நீ என்னோட வொய்ப்…”
“முதல்ல என்னன்னு சொல்லுங்க. அப்பறமா இதை பேசுங்க…” என தாமரை சொல்லவும்,
“நிஜமா உன்னை பார்த்ததும் உன்கிட்ட என்ன ப்ளஸ் அன்ட் மைன்ஸ்ன்னு தேட தோணலை.அதுதான் நிஜம். மத்த பொண்ணுங்களை பார்க்கும் போது என்னவோ செட் ஆகாதுன்னு நோ சொல்லத்தான் அத்தனை காரணத்தையும் தேடுவேன்…”
“ஆனா உன்னை பார்த்துட்டு…” என்றவனுக்கு அந்த உணர்வை அவளுக்கு எப்படி புரியவைப்பது என தெரியாமல் திணறினான்.
தாமரைக்கு அவனின் பேச்சும், முகத்தின் பாவங்களும் அத்தனை சுவாரஸியமாக இருந்தது.
அவளுக்கு தான் தெரியுமே தர்ஷன் மூலம் எல்லாம். ஆனாலும் தெரியாதை போல, அப்போது தான் அவனிடத்தில் கேட்பதை போல காட்டிக்கொண்டாள்.
“ஓகே விடு. உன்னை பிடிச்சு தான் கல்யாணம் செஞ்சேன். எந்த கண்டிஷனும் இல்லாம. அது மட்டும் உண்மை…” என்றவன்,
“ஸ்டேஷன்ல என்ன நடந்துச்சுன்னு பேச வந்துட்டு என்னவோ பேசிட்டு இருக்கோம்…” என்று பேச்சை திசைதிருப்ப அதுவரை புன்னகையுடன் இருந்தவள் வாட்டமாய் அவனை பார்த்தாள்.
“அப்பா எப்படி இருக்காங்க?…”
“ஓகே, தான். போகும் போது எதிர்பார்ப்போட தான் போனோம். ஆனா கிடைக்கலையே. என்ன செய்ய?…” என்றான்.
“அந்த திருடனை எப்படி கண்டுபிடிச்சாங்களாம்?…”
“அவனோட கெட்ட நேரம், அந்த நகைக்கடையில ரெண்டு நாளாவே நோட்டம் விட்டிருக்கான். ஏற்கனவே சிசி புட்டேஜ்ல உங்க ஏரியாவை தாண்டி போகும் போது பார்த்ததால நகைக்கடையிலையும் சொல்லி வச்சிருந்திருக்காங்க போல…”
“ஹ்ம்ம்ம்…”
“இவனும் வந்து நிக்கவும், நோட்டம் விடவுமா இருக்க முதல் நாள் கவனிக்காதவங்க ரெண்டாம் நாளும் அவன் சும்மா சுத்தறது மாதிரி சுத்திட்டு வர போலீஸ்ல கூப்பிட்டு சொல்லிருக்காங்க…”
“அவன் தான்னு எப்படி தெரிஞ்சதாம்?…”
“அவருக்குமே உறுதியா தெரியலை. ஆனா சரியில்லைன்னு மட்டும் தோணிருக்கு. அவனா கூட இருக்கலாம்ன்னு தான் கூப்பிட்டு சொல்லவும் உடனே வந்துட்டாங்க. மப்டில வந்ததால பிடிக்க முடிஞ்சது. வகையா சிக்கிட்டான்…”
“ஆனா நகை கிடைக்கலையே?…” என்றாள் குரல் தழுதழுக்க.
“ப்ச், என்ன இது? ஆளே கிடைச்சுட்டான். அவனை விசாரிக்கிற விதமா விசாரிச்சா ரெண்டு மூணு நாள்ல தகவல் வந்திரும்…”
“நகை கிடைச்சுடுமா கதிர்?…”
“இதுக்கு நான் என்ன சொல்ல? பொய்யா உன்னை சமாதானப்படுத்தவா? இப்போதைக்கு அதை வேணா செய்ய முடியும். ஆனா நீயே இப்படி நினைக்கும் போது உங்க வீட்டை நினைச்சு பாரு. அவங்களை யார் தேத்துவா?…” என்றான்.
அவனின் பேச்சில் தலையசைத்தவள் கதிரின் சொல்லுக்கேற்ப வீட்டிற்கு அழைத்து தைரியமாய் நம்பிக்கையுடன் அவர்களிடம் பேசினாள் தாமரை. பேசி முடித்து போனை வைத்தவள்,
“தேங்க்ஸ் கதிர்…” என்று அவனை அணைத்துக்கொள்ள,
“இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லுவியா நீ? எந்த புருஷனுக்கும் இப்படி ஒரு சூழ்நிலை வர கூடாது. கல்யாணம் ஆனதை என்ஜாய் பண்ணவும் முடியாம, பாதி சந்தோஷமும், மீதி சங்கடமுமா. ஹ்ம்ம்…” என பெருமூச்சு விட்டான்.
“இப்ப உங்க சந்தோஷத்துக்கு என்ன குறையாம்? நல்லா தானே இருக்கோம்…”
“கீழே போவோம். எல்லாரும் லஞ்ச்க்கு வந்திருப்பாங்க. எவ்வவளவு நேரம் ரூம்லயே இருக்கவாம்?…” என சொல்லவும் அவளின் கையை பிடித்து தடுத்தவன்,
“ஒரு டென் மினிட்ஸ் தாமரை…” என்றவனின் அணைப்பு இறுக அவனை விலகமுடியாமல், அவனுள் மூழ்கவும் முடியாமல் தாமரை அவஸ்தைக்குள்ளானாள்.
“கதிர் அத்தை கூப்பிடறது மாதிரி இருக்குது…” என்ற முணங்களில் அவளை விட்டவன்,
“ஓகே, நீ போ நான் வந்து குளிக்கலை. ஒரே ஸ்வெர்ட்டிங்…” என சொல்லி அவளின் முகத்தை நிறைத்துவிட்டே அனுப்பிவைத்தான்.
மாலை கோவிலுக்கு சென்றுவந்தவர்கள் தேனிலவிற்கென்று எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை.
எப்போது வேண்டுமென்றாலும் நகை பற்றிய விவரங்கள் கிடைக்கப்பெறும். அதனால் அதன் பின்னர் தான் எங்கும் நிம்மதியுடன், முழுமனதுடன் செல்லமுடியும் என கதிர் சொல்லிவிட்டான்.
அவர்கள் நினைத்ததை போலவே அடுத்த ஒரு நான்கு நாட்களில் நகை இருக்குமிடமும் தெரிந்துபோனது.
அந்த நகையையுமே கோர்ட்டில் சென்றுதான் வாங்க முடியும் என்பதால் அதற்கு ஒரு அலைச்சல் அவர்களுக்கு.
எல்லாம் முடிந்து நகையை கையில் வாங்கும் முன்னர் குடும்பம் மொத்தமும் பெரும் அலைகழிப்பிற்குள்ளானது.