இரண்டு நாட்களில் கோர்ட்டுக்கு சென்று நகைகளை மீட்டு வர சென்றார்கள் சோமநாதன், கதிர், சரளா மூவரும்.
தாமரை அன்று தான் அலுவலகம் செல்கிறாள் என்பதால் அவள் வரவேண்டாம் என சொல்லிவிட்டான் கதிர்.
ஏற்கனவே நகைகளை பாலீஷ் செய்ய குடுத்திருந்த இடத்தில் வாங்கியிருந்த ரசீதுகள் எல்லாம் இருந்ததனால் ஓரளவுக்கு பார்த்து வாங்கிக்கொண்டு வர முடிந்தது அவர்களால்.
அதிலும் நூற்றில் நாற்பது சதவீத நகைகளே கிடைக்கபெற்றிருந்தது. அழுதுகொண்டே தான் வாங்கினார் சரளா.
அவரை தேற்றி அழைத்து வர தான் அத்தனை சிரமமாகிற்று. அங்கிருந்த காவலர்கள் இது எல்லாம் புதிதா என்பதை போல பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
கொள்ளையர்கள் விசாரணையில் தங்களிடம் இருந்ததை காவலர்களிடம் ஒப்படைத்தாகிற்று என கை விரிக்க, நாங்கள் கைப்பற்றியது இவ்வளவு தான் என அவர்கள் சொல்ல விசாரணை முடிந்தது.
நேர்மையும், நியாயமும் அங்கே நகையின் எடையில் காணாமல் போயிருந்ததை பறிகொடுத்தவர்கள் உணரவே நேரம் பிடித்தது.
இனி சாட்சிகளும் இல்லை. நியாயங்களும் இல்லை என்ற எண்ணத்துடன் வீடு வந்து சேர்ந்தார்கள் அவர்கள்.
“இன்னும் எவ்வளவு நேரம் தான் அழுதுட்டே இருப்ப சரளா?…” என அங்கை தேற்றிக்கொண்டு இருந்தார் சரளாவை.
நகைகளை பார்த்து பார்த்து கண்ணீர் விட்டவரின் கதறலில் அத்தனைபேரின் மனமும் கலங்கியது.
சோமநாதன் இனி அழுது என்ன செய்ய என்பதை போல இருந்தார். அழுவதற்கு கூட தெம்பில்லா அந்த மனிதரின் தோற்றம் கதிரை வாட்டியது.
“மாமா, நமக்காவது இத்தனை கிடைச்சது. ஒருசிலருக்கு ஒண்ணுமே கிடைக்கலை. அதை நினைச்சு நம்மளை தேத்திக்கனும்…” என சோமநாதனின் கையை பிடித்துக்கொண்டு அவன் சொல்ல தலையசைப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும் அவரால்.
அன்று தாமரையும் விரைவிலேயே வீடு திரும்பி இருந்தாள். தர்ஷனுடன் நேராக தன் வீட்டிற்கே வந்தவளிடமும் சரளா அழுது புலம்ப,
“ம்மா நீங்க இப்படி அழுதுட்டே இருந்தா எல்லாம் கிடைச்சிருமா?…” என்று அதட்டினாள் மகள்.
இரண்டு நாட்களும் அவள் யோசித்து வைத்ததெல்லாம் இதை தான். முதலில் பெற்றோரை தேற்றி கிடைத்த நகையை கொண்டு உருப்படியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்பதே.
“இப்படி உழைச்சு உழைச்சு இன்னொருத்தனுங்களுக்கு தூக்கி குடுக்கவா வம்பாடு பட்டு சேர்த்தோம்? உங்களுக்கெல்லாம் நல்லா கூட போட்டு பாக்கலையே நானு?…” என்று அழுது தீர்த்தார்.
“ம்மா, விடுங்கம்மா…” தாமரை சொல்ல சொல்ல தேம்பிக்கொண்டே தான் இருந்தார்.
“இப்ப நீங்க இந்த அழுகையை நிப்பாட்டலை. நான் கிளம்பிடுவேன்…” என்றவளின் மிரட்டலில் சரளா அப்படியே கப்பென்று வாயை மூட,
“என்ன பன்ற தாமரை? அவங்களை அமைதியா பேசி சமாதானம் செய்னா இப்படி மிரட்டிட்டு இருக்க?…” என்றான் கதிர்.
“இப்படி சொல்லலைன்னா உங்க மாமியார் இன்னைக்கு இல்லை இந்த வாரம் முழுக்க அழுதுட்டே தான் இருப்பாங்க…” என்றாள் கோபத்துடன்.
“ப்ச், நீ முதல்ல அமைதியா இரு…” என்றவன் சோமநாதனிடம் பொறுமையாக பேசிக்கொண்டு இருந்தான்.
ஓரளவு தைரியம் வர பெற்றவராக கதிரின் பேச்சுக்கு செவிமடுத்தார். முடிந்தளவு இனி தன் குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்னும் எண்ணம் தான் அவரின் மனதில் வியாப்பித்து இருந்தது.
நேரம் செல்ல இருளவும் வீட்டிற்கு கிளம்ப இருந்தார்கள் கதிர், தாமரை, தர்ஷன் மூவரும்.
நிவியிடம் முன்பே சொல்லியிருந்ததால் பெரிதாய் அவள் அதிரவில்லை. இந்தளவிற்கேனும் வந்ததே என்றே நினைத்துக்கொண்டாள்.
நல்லபடியாக படிப்பை முடித்துவிட்டு பின், தான் சம்பாதித்து தாயை, தந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற உத்வேகத்தில் தான் படிப்பில் மிகுந்த கவனத்துடன் இருந்தாள் நிவேதா.
அங்கிருந்து தர்ஷனை தாமரையை வீட்டிற்கு அழைத்து செல்லும் படி சொல்லிவிட்டு கதிர் தன்னுடைய இடத்திற்கு வந்துவிட்டான்.
நகை விஷயம் ஓய்ந்தது என்று நினைத்திருக்க மீண்டும் தாமரையின் குடும்பத்தினர் ஆரம்பித்தார்கள்.
மீட்டு கொண்டு வந்த நகையை தாமரைக்கு போட்டு விடலாம் என அவர்கள் பேசியிருக்க தாமரை மறுத்தும் அவர்கள் கேட்காததினால் கதிரிடம் கேட்டு சொல்கிறேன் என்றுவிட்டாள்.
கதிரிடம் விவரத்தை சொல்ல அவன் கேட்டுக்கொண்டு அன்று பேசாமல் மறுநாள் தான் தாமரையிடம் நகையை பற்றி பேசினான் கதிர்.
அன்று இரவு உணவு முடிந்து தங்களின் அறைக்குள் நுழைய தாமரை கதிர் என்ன சொல்வான் என எதிர்பார்த்து வந்தாள்.
“சொல்ல போனா நீ தான் இதை யோசிச்சு இருக்கனும். உனக்கு என்னாச்சுன்னு தெரியலை. ரொம்பவே குழம்பி இருக்க நீ…”
“எனக்கு என்ன சொல்ல வரீங்கன்னு தெரியலை கதிர். சொல்லுங்க புரிஞ்சுக்கறேன். ஆனா நீங்க சொல்றது உண்மை. என்ன செய்யறதுன்னு எனக்கு தெரியலை…” என சொல்லியவள் அவனின் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
“பேசாம இருக்க முடியலை. அட்லீஸ்ட் முக்கால்வாசி நகையாச்சும் கிடைச்சிருந்தா நிம்மதியா இருந்திருக்குமோ என்னவோ? பத்தியும் பத்தாம இந்த நகை எந்த கடனுக்கு உதவும்?…” என்றாள்.
“ஓகே, இப்போ என்ன வீட்டு கடன், நிவி படிப்பு தானே? அடுத்து பேங்க்ல இருக்கற நகையை திருப்பனும். ஏன் இதை உங்க ரெண்டுபேரால செய்ய முடியாதா என்ன?…”
“முடியும் தான்…”
“எஸ், முடியனும். ஆனா என்ன கொஞ்சம் டைம் எடுக்கும். அவ்வளோ தானே?…” என்றான்.
“ஹ்ம்ம், இப்போதைக்கு சமாளிச்சிடலாம். நிவி ஒரு வேலையில சேர்ந்துட்டா அவ அதுல ஸ்டெடி ஆகற வரைக்கும் தான். அதுக்கப்பறம் சிரமம் இல்லை…”
“அவ்வளோ தான். இப்போ இதை பத்தி மட்டும் யோசி. மத்ததை விடு. என்னால கூட ஹெல்ப் பண்ண முடியும்ன்னு சொல்லலாம். ஆனா மேடம் தான் தன்மான சிங்கம் ஆச்சே? அதோட நானும் இந்த லோன் எல்லாத்தையும் முடிச்சுட்டு ப்ரீ ஆனதும் மாமனாரோட ஹனிமூனுக்கு ஏற்பாடு பன்றேன்…”
“இதான் விஷயமா?…” என தாமரை கடைசியாக அவன் சொல்ல வருவதை கண்டுகொண்டாள்.
“ஹ்ம்ம், இப்போதைக்கு நாலு நாள் லீவ் எல்லாம் ஒத்துவராது தாமரை. கல்யாணம், ஸ்டேஷன், கோர்ட்னு ரொம்ப இழுத்தடிச்சிருச்சு இந்த கொள்ளை விஷயம். அதனால இப்போதைக்கு எங்கயும் நகர முடியாதும்மா…”
“நான் கேட்கவே இல்லையே? நோ ப்ராப்ளம்…” என்றாள் பளிச்சென்ற புன்னகையுடன்.
“ஓகே நெக்ஸ்ட்..”
“நீங்க தான் சொல்லனும். எனக்கு தெரியலை. என்ன செய்ய? நீங்களே சொல்லுங்க. ப்ராக்ட்டிக்கலா பேசலாம்ன்னு சொன்னீங்க?…” எனவும்,
“பொறு பொறு. இப்போ நாம வேண்டாம்ன்னு சொல்றதால அவங்க இன்னுமே ஒடுங்கி போவாங்க. உனக்கு எதுவும் செய்ய முடியலைன்றதே அவங்களை ஒடுக்கிரும். அதனால தான் சொல்றேன்…” என கதிர் சொல்லவும் மௌனமாய் இருந்தாள் தாமரை.
“உனக்கு செய்யறதை அவங்க கௌரவமா பார்க்கும் போது அதுக்கு மறுப்பு சொல்லி இன்னும் கஷ்டப்படுத்தாத தாமரை….”
அவன் சொல்வதில் இருந்த உண்மை புரிய அந்த மௌனமும் அவளின் கவலையை அவனுக்கு உணர்த்தியது.
“இதை நான் யோசிக்கலை கதிர்…”
“அதனால என்ன? அதான் இப்ப சொல்லிட்டேனே?…” என்றான்.
“நகை எல்லாம் எனக்கு குடுத்துட்டா?…”
“நீ ஏற்கனவே பேசினது தான். உன்னோட சேலரிய என்ன செய்யனுமோ அது உன் விருப்பம். முன்னவே எனக்கு அப்ஜெக்ஷன் இல்லன்னு சொன்னேன். இப்போ மாத்துவேனா?…” என சொல்லியவன்,
திட்டங்கள் எல்லாம் கணவனும் மனைவியும் பார்த்து யோசித்து செயல்படுத்த, அவர்களின் வேலைகள் கூட வழக்கம் போல அவர்களை உள்ளே இழுத்துக்கொள்ள வாழ்க்கையின் ஓட்டத்தில் கலந்துவிட்டார்கள்.
தேனிலவு அப்படி ஒன்றே ஞாபகம் இல்லாததை போல வாழ்க்கை அவர்களை வளைத்துக்கொண்டிருந்தது.
எத்தனை கஷ்டத்திலும் குடும்பத்தினர் ஒன்று கூடிவிட்டால் அத்தனையும் மறந்து போகும்.
தாமரையும் கதிரும் முதிர்ந்த மனநிலையுடன் குடும்பத்தின் கஷ்டங்களை எல்லாம் எடுத்து பார்த்துகொள்வதால் ஒருவரை ஒருவர் நல்ல புரிதலுடனே தான் இருந்தார்கள்.
சொல்லியதை போலவே கிடைத்த நகையில் இருந்து பாதியை மட்டும் தாமரைக்கு என்று தர கதிர் ஒப்புக்கொண்டான்.
யமுனாவின் பேச்சில் அவர்களால் அதை மீற முடியவில்லை. சரளாவையும், சோமநாதனையும் ஒற்றை வார்த்தையில் கட்டிவைத்தார்.
“என்னண்ணே இந்த நகையை போட்டாத்தான் நாங்க பொண்ணை நல்லா பாத்துக்குவோம்னு சொன்னோமா என்ன? இன்னொரு பொண்ணு இருக்கறதையே மறந்துட்டு பேசறீங்க? அதுக்கு என்னத்த பார்ப்பீங்களாம்? அதுவும் படிச்சும் முடியலை…”
யமுனா வந்து பேசிவிட்டு செல்லவும் சோமநாதன் தயங்க, சரளா சொல்லிவிட்டார் அவரிடம்.
“இம்புட்டு நாள் மருமகன், சம்பந்தியம்மா பேச்சை கேட்டோம் தானே? அவங்க சொன்னா சரியா இருக்கும். நம்ம குடும்பத்துக்காக இம்புட்டு யோசிச்சு செய்யும் போது நாம தலையாட்டனும். இல்லன்னா அவங்களுக்கு என்ன மரியாதையாம்?…” என்றார் சரளா.
அதற்கு சம்மதித்ததோடு தங்கள் நெருங்கிய உறவுகளில் சிலரை அழைத்துக்கொண்டு வந்து தாமரைக்கு தாலி பெருக்கி போட்டதுடன் நகையையும் சீராக செய்துவிட்டு சென்றார் சோமநாதன்.
அதன் பின்னர் தான் பழைய நிம்மதியும், சந்தோஷமும் பெண்ணை பெற்றவர்களுக்கு கிடைத்தது.
‘என் பெண்ணிற்கு செய்துவிட்டேன் பார்’ என்னும் ஒரு நிமிர்வு. செய்தவை சிறிதென்றாலும் அதை தனது கௌரவமாக பார்த்தார்.
தன்னுடைய கௌரவம் மகளையும் சேரும் என்பதால் அன்றைய சந்தோஷத்தை அளவிட முடியவில்லை அவரால்.
“என்னைக்கா இருந்தாலும் உங்க பொண்ணுக்கு தான நீங்க செய்ய போறீங்க? இப்பவே இத்தனை ப்ரஷர் எடுத்துக்கனுமா என்ன?…” என கதிர் அவரை இன்னுமே ஆறுதல்படுத்தினான்.
புகுந்த வீட்டின் சொந்தங்களின் மத்தியில் மூத்தமகளின் நிறைவு முகத்தில் மகிழ்ச்சியாய் மிளிர பெற்றவர்களின் அகம் நிறைந்துவிட்டது.
வருடம் ஒன்று செல்ல தாமரைக்கு ஐந்தாம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்விற்காக வந்திருந்தவர்கள் அங்கே கூடியிருந்த உறவுகளின் கேள்வியில் சற்று திண்டாடி தான் போனார்.
அத்தனை பேரும் அடுத்து நிவேதா தானே? என அவள் திருமணத்தை பற்றியே ஆரம்பித்திருக்க சோமநாதனின் மனதளவில் விரைவில் அதையும் செய்துவிட வேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டிருந்தார்.
இதே போல இளைய பெண்ணையும் ஒரு நல்ல இடத்தில் கொடுத்துவிட்டால் போதும் என்று நினைத்திருந்தவர் அந்த நிகழ்வுக்காக காத்திருந்தார்.
தன்னுடைய உடல்நிலை கருதி முடிந்தளவிற்கு நிவேதாவின் கடைசி வருட படிப்பின் பொழுதே நிவேதாவையும் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார்.