மருந்து கொடுக்கும் விழா நல்லவிதமாக நிறைவேறிவிட ஏழாம் மாதம் வளைகாப்பை செய்துவிடலாம் என அன்றே இரு குடும்பத்தினரும் பேசி முடிவெடுத்துக்கொண்டார்கள்.
மாலை வரை இருந்துவிட்டு சோமநாதன் குடும்பம், அங்கையின் குடும்பத்துடன் கிளம்பிவிட்டார்கள்.
வீட்டில் தாமரையை விட்டுவிட்டு அருகே ஒரு விசேஷ வீட்டிற்கு பூங்காவனமும் யமுனாவும் கிளம்பிவிட தர்ஷனும் வெளியே சென்றிருந்தான்.
கதிர் அன்று வெளியே செல்லாமல் நல்ல உறக்கத்தில் இருக்க இருவருக்குமாக டீ வைக்கலாம் என உள்ளே சென்றாள் தாமரை.
வந்த விருந்தினர்கள் எல்லாம் நிவேதாவின் திருமணம் பற்றி பேசியதில் சோமநாதனும் யோசிப்பதை போன்று இருக்கவும் தாமரைக்கு கோபமாகிவிட்டது.
தனியே தாயையும், தந்தையையும் அழைத்து வந்தவள் அவர்கள் இருவரையும் ஒரு பிடி பிடித்தாள்.
“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?…” என ஆரம்பிக்க,
“என்னம்மா, என்ன சொல்ற? புரியலையே?…” என்றனர் இருவரும்.
“என்ன புரியலை? எல்லாரும் நிவி கல்யாணத்தை பத்தி பேசறாங்கன்னா நீங்களும் தலையாட்டுவீங்களா?…” என்றதும் தான் மகளின் கோபம் புரிந்தது.
“இல்லம்மா…” என சோமநாதன் பேச,
“சும்மா இருங்கப்பா. ஆளாளுக்கு ஆயிரம் சொல்லுவாங்க. அதுக்குன்னு நீங்க சரின்ற மாதிரி இருப்பீங்களா?…” என்றாள்.
“நாங்க சரின்னு ஒன்னும் சொல்லலையேம்மா? எல்லாரும் பேசினாங்க. அதான் ஒன்னும் மறுக்காம இருந்தோம்…” சரளா தான் மகளை சமாதானம் செய்ய முயன்றார்.
“ம்மா, சும்மா இருங்க. நான் பார்த்துட்டு தான் இருந்தேன். வந்தவங்க சொல்ல சொல்ல உங்களுக்குள்ள செஞ்சிறலாம்னு ஒரு எண்ணம் வந்திடுச்சு தானே?…” என்றதுமே இருவரும் திருதிருத்தனர்.
அதிலும் மகள் தங்களை கண்டுகொண்டதை போல பேசவும் அவளை சமாளிக்க முடியாமல் திணறலுடன் நின்றார்கள்.
“தாமரை இப்ப எதுக்கு அப்பாக்கிட்ட நீ கோவிச்சுக்கற? அவருக்கு எப்படியாவது உனக்கு மாதிரியே ஒரு நல்ல இடமா பார்த்து நிவிக்கு குடுக்கனும்னு ஆசை…”
“ம்மா நீங்க தான் புரியாம பேசறீங்க? நிவிக்கு நல்ல இடமா கண்டிப்பா பார்ப்போம். ஆனா இப்போ இல்லை. அவ இப்ப தான் தேர்ட் இயர் கம்ப்ளீட் பண்ணிருக்கா. இன்னும் அவ முடிக்க வேண்டியதிருக்கு…”
“ஒரு பேச்சுக்கு தானே சொல்றோம்? பார்க்கறதா இருந்தாலும் உடனேவா முடிச்சுட போறோம்?…”
“இப்படித்தான் சொல்லுவீங்க. அப்பறம் நல்ல இடம். தேடினாலும் கிடைக்குமா? அப்படி குடும்பம். தட்டி போயிட கூடாதுன்னு எங்க மண்டையை கழுவுவீங்க…”
“இப்படி சொன்னா எப்படிம்மா தாமரை?…” என சோமநாதனுக்கு மகளின் பேச்சில் சிரிப்பு வந்துவிட்டது.
“அவ படிப்பு முடியட்டும்மா. அவக்கிட்ட கூட இதை பத்தி பேச வேண்டாம். முதல்ல நல்லா படிச்சு முடிக்கட்டும். படிக்கும் போதே கல்யாணம் செஞ்சு வச்சு அவளோட கவனத்தை திசை திருப்ப வேண்டாம்…”
“ஹ்ம்ம், என்னவோ சொல்ற. சரிம்மா…” என்று அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டார்கள்.
இருவரின் மனதிலும் ஒரு எண்ணம் தனது இளைய பெண்ணையும் தர்ஷனுக்கு கொடுத்து இரு பிள்ளைகளையும் ஒரே வீட்டின் மருமகளாக வாழ வைத்தால் என்ன என்னும் ஆசை துளிர்த்தது.
ஆனால் தாங்களாக இதை எப்படி கேட்க என அமைதியாக இருந்துவிட தாமரையும் இப்படி பேசியிருக்க அதன் பின் எங்கே இந்த பேச்சை எடுப்பது?
ஆனால் அவர்கள் அறியாதது அந்த வீட்டிலேயே தர்ஷனையும், நிவியையும் வைத்து பார்வையும் பேச்சுக்களும் வலம் வர ஆரம்பித்த பொழுதே தாமரை கண்டு கொண்டாள் என.
முதலில் தன் காதுபட தர்ஷன், நிவியை பேசவுமே தனது திருமணத்திற்கு முதல் வாரம் அங்கை வீட்டில் வைத்து பேசிய அந்த பெண்மணி தான் ஞாபகத்திற்கு வந்தார்.
அதிலிருந்து இருவரையுமே பார்த்துக்கொண்டே தான் இருந்தாள். சாதாரண பேச்சுக்கள் கூட தர்ஷன், நிவியிடத்தில் இல்லை.
அப்படி கலகலப்பாக பேசியும் அவள் இத்தனை மாதங்களில் பார்த்திராததால் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இன்றோ பார்வை மொத்தமும் அவர்கள் இருவரிடத்திலேயே தான் இருந்தது தாமரைக்கு.
தாமரை முகத்தில் புத்துணர்ச்சி குறையாமல் இருந்தாலும் அதையும் மீறிய யோசானை அவளிடத்தில் தெரிய கதிருக்கு என்னவென்று புரியவில்லை
கூட்டத்தில் வைத்து கேட்கவும் முடியாது போக அனைவரும் கிளம்பட்டும் என்று இருந்தவன் நேரம் செல்ல செல்ல விசேஷம் முடிந்தும் இன்னும் சிலர் கிளம்பாதிருந்தார்கள்.
“ம்மா, ரொம்ப தலை வலியா இருக்குது. நான் போய் தூங்கறேன். நீங்க பார்த்துக்கோங்க. கொஞ்சம் நேரம். வந்திருவேன்…” என சொல்லியவன் தாமரையிடமும் சொல்லிவிட்டு சென்றான்.
இத்தனை நாளில் இப்படி அவன் தலைவலி, உடல்நிலை சரியில்லை என சொல்லியதில்லை. அதனால் சற்று பதட்டமாகியது.
“இல்லம்மா, அதெல்லாம் வேண்டாம். நீ இங்க பேசிட்டு இரு. யார்ட்டையும் சொல்ல வேண்டாம். எல்லாரும் அப்பறம் என்ன ஏதுன்னு ஆரம்பிப்பாங்க…” என சொல்லி மாடிக்கு சென்றுவிட்டான்.
அவன் கிளம்பி பத்து நிமிடங்கள் கழித்தே வீட்டினர் கேட்டுக்கொண்டு இருக்க அதற்கும் தர்ஷன் கதிரவனை பார்த்துவிட்டு வந்திருந்தவன்,
“அண்ணா தூங்கறான் மாமா…” என்றான் சோமநாதனிடம்.
“ஒரு மாத்திரையை போடுடான்னா கேட்காம போய் படுத்துட்டான்…” என பேச்சுவாக்கில் யமுனா சொல்லிவிட,
“என்னாச்சு? என்ன மாத்திரை?…” என்றார்கள் தாமரை வீட்டினர்.
“பதறாதீங்கண்ணே, லைட்டா தலை வலி. அவ்வளோ தான்…” என்றார் சாதாரணமாக.
“ஓஹ், வேலை வேலைன்னு ரொம்ப ஓடறார்…” என சரளா சொல்லவும் ஆமோதிப்பாய் பூங்காவனமும், யமுனாவும் தலையசைத்தார்கள்.
அதன் பின்னர் அவர்களும் கிளம்பிவிட கிளம்பும் முன்னர் கதிரை எழுப்பவா என தாமரை கேட்டாள்.
“தூங்கினார்ன்னா எழுப்ப வேண்டாம்மா. ரொம்ப வலி போல. அதான் எழுந்துக்கலை. நீ சொல்லிரு. நாங்க நாளைக்கு பேசிக்கறோம். நாளைக்கு ஆபீஸ்க்கு வேற சீக்கிரம் போகனும்…” என சொல்லிக்கொண்டு குடும்பத்தினருடன் கிளம்பினார் சோமநாதன்.
சோமநாதன் இன்னமும் வேலையை விடவில்லை. கதிர் சொல்லி பார்த்தும் மறுத்துவிட்டார். அப்போது வி.ஆர்.எஸ் வாங்கினால் கிடைக்கும் பணமும் மிக சொற்பமே.
நிச்சயம் கடனுக்கு கூட பத்தாது என நினைத்தவர் அதையும் சொல்லி இனி உடல்நிலையை பார்த்துகொள்வதாக சொல்லியே வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தார்.
அவரின் பேச்சை மற்றவர்களால் மறுக்கவும் முடியவில்லை. சரி அவரின் விருப்பம் என்று விட்டுவிட்டார்கள்.
ஆனாலும் அவரை முன்பை விட அதிக சிரத்தை எடுத்து கவனித்துக்கொண்டார் சரளா.
“அப்ப நாங்களும் புறப்படறோம் யமுனாக்கா…” என அங்கையும் அவர்களுடனே கிளம்பிவிட்டார்.
தர்ஷன் அருகில் வெளியே சென்றுவிட்டு வருவதாக சொல்லி கிளம்ப யமுனாவும், பூங்காவனமும் விசேஷ வீட்டிற்கு கிளம்பினார்கள்.
“அவன் எந்திச்சா சொல்லிரும்மா. அவனே வரட்டும். நீ மாடிக்கு போகாத. கீழே இரு…” என சொல்லிவிட்டு மருமகளுக்கு தேவையானவற்றை காண்பித்துவிட்டு கிளம்பி சென்றார் யமுனா.
எவ்வளவு நேரம் தான் அங்கேயே அமர்ந்திருப்பது என வீட்டிற்குள்ளேயே சிறிது நேரம் நடந்துகொண்டு இருந்தாள் தாமரை.
தொண்டையெல்லாம் என்னவோ செய்ய சூடாக எதையாவது குடித்தாள் போதும் என கிட்சனுக்கு சென்றாள்.
முதலில் பாலை காய்ச்சி குடிக்கலாம் என நினைத்தவள் பின் டீயை போட ஆரம்பித்தாள்.
யமுனா இருந்தால் விட்டிருக்கவே மாட்டார். தாமரைக்கு டீயை கொடுக்க வேண்டாம் என டாக்டர் சொல்லியிருக்க அவர் கண்ணிலேயே காண்பிப்பதில்லை அவளுக்கு.
எப்போதாவது ஆசைக்கு கால் கப் போல தீர்த்தம் மாதிரி கொடுத்து தாமரையின் பாவமான முகத்தை பதில் வாங்கிக்கொள்வார்.
“இதெல்லாம் அநியாயம் அத்தை. இதுக்கு நான் குடிக்காமலே இருந்துப்பேன்…” என அவளின் பேச்சுக்கள் எதுவும் யமுனாவிடம் எடுபடாது.
ஒவ்வொரு மாத செக்கப்பிற்கும் தானும் உடன் செல்வார். என்ன கொடுக்கவேண்டும் என்பதை எல்லாம் கவனமாக கேட்டுக்கொள்வார். யமுனாவின் பேச்சில் டாக்டருக்கே தலை சுற்றும்.
“உன் மாமியார் என்ன இவ்வளோ கேள்வி கேட்கறாங்க?…” என தாமரையிடம் தான் ஒவ்வொரு முறையும் புலம்புவார்.
யமுனாவிடமே கேட்டதற்கு அவரின் பதில் அப்படி இருந்தது. கேள்வி கேட்க வேண்டியது தான்.
ஆனால் கேள்விக்குள் ஒரு கேள்வி, அதற்குள் ஒரு கேள்வி என தனது சந்தேகங்களை எல்லாம் கேட்க மருத்துவருக்கே சந்தேகம் வந்துவிட்டது தான் சரியாக தான் சொல்கிறோமா என?
“ம்மா, இவ்வளவு கேட்டா அவங்க ஓடியே போய்ருவாங்க…” என கதிர் வெளியே வந்து தாயிடம் சொல்ல,
“டாக்டர்ஸ் பதில் சொல்லனும் தானே? சந்தேகம்னா யார்க்கிட்ட கேட்பாங்களாம்? அத்தையை ஏன் செய்ய கூடாதுன்னு சொல்றீங்க? அப்போ நீங்க கேட்பீங்களா?…” என தாமரை வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிடுவாள் யமுனாவை பேசினால்.
இப்படி மருமகளுக்கு உணவை கூட பார்த்து கவனித்து தான் செய்து தருவார். அலுவலகத்திற்கு தர்ஷன் தான் எடுத்து செல்ல வேண்டும்.
தாமரை உண்டாகும் முன்பு வரை தர்ஷனோடு பைக்கில் சென்று வருபவள், கதிர், தாமரை அவர்களின் குழந்தையை சுமந்திருக்க தர்ஷனுடன் காரை ஏற்பாடு செய்துவிட்டான்.
இருக்கும் சூழ்நிலையில் புதிதாக வாங்க முடியாதென்று ஏற்கனவே ட்ராவல்ஸ்க்கென வைத்திருக்கும் காரில் ஒன்றை நிரந்தரமாக வீட்டிற்கு என நியமித்துவிட்டான்.
இப்படி வரப்போகும் வாரிசுக்காக ஒவ்வொருவரும் அத்தனை கவனமாக இருக்க தாமரை அதை எல்லாம் நினைத்தபடி டீ தண்ணீரை பார்த்தாள்.
பின் மனதிற்கு ஒப்பாமல் அதனை அப்படியே தூக்கி தள்ளி வைத்துவிட்டு பாலை மட்டும் காய்ச்சிக்கொண்டிருக்க,
“நீ மட்டுமா இருக்க வீட்டுல?…” என்றான் கதிர்.
நிசப்தமான அந்த வீட்டில் அவனின் குரல் சத்தமாய் எதிரொலிக்க ஏற்கனவே யோசனையில் இருந்தவளுக்கு திடீரென்ற அந்த குரலில் தூக்கிவாரி போட்டது.
“அம்மா…” என பதறிவிட்டாள்.
“ஹேய், ரிலாக்ஸ் தாமரை. என்ன இது?…” என அவளுக்கு குடிக்க தண்ணீரை தந்தவன் அவளின் பதட்டத்தை தணிக்க முயன்றான்.
கொடுத்த நீரை முழுமூச்சாய் குடித்துவிட்டு இன்னும் படபடப்பு குறையாமல் அவனின் தோளில் சாய்ந்துகொண்டே தன் நெஞ்சை நீவிக்கொண்டிருந்தாள்.
“சரியா போச்சா? தாமரை, வா ஹாலுக்கு போலாம்….” என்றான்.
“சொல்லிட்டு வர மாட்டீங்களா? இல்லை மெதுவா பேச வேண்டியது தானே? பயந்துட்டேன்…” என அவனிடம் கோபம் கொள்ள,
“நிஜமாவே நீ பயந்துடுவன்னு நான் நினைக்கலையே. எப்பவும் போல கீழே வந்தா ஒருத்தரையும் காணும். ஹால்ல லைட் கூட போடலை. அதான் என்னவோன்னு வந்தேன்…” என்றவன் முகம் அதப்பாய் இருந்தது.
தலைவலிக்கு உறங்கி எழுந்ததற்கு கண்கள் சிவந்து போய் இருந்தது. முகத்தை கழுவி தலையை கையாய் கோதியிருப்பான் போலும். அப்படியே காட்டிக்கொடுத்தது.
“சரியாவே துடைக்கலை. கழுத்துல எல்லாம் தண்ணி. என்ன இது?…” என அவனின் ஈரத்தை சுட்டி காட்டினாள்.
“அதை விடு, எல்லாரும் எப்போ கிளம்பினாங்க? எழுப்பிருக்கலாம் தானே?…” என டையனிங்கில் இருந்த சேரை எடுத்து அவளுக்கு போட்டவன் அடுப்பில் இருந்த பாலை இறக்கி அவளிடம் நகர்த்தினான்.
“ஏன் அதுல சுகர் போட்டு ஆத்தி குடுத்தா என்னவாம்?…” என்றபடி தாமரையே செய்ய,
“எனக்கும் டீ…” என்றான் கதிர்.
“உங்களோட முடியலை. எத்தனை தடவை சொல்றது? இதையாச்சும் கத்துக்கோங்கன்னு. கேட்கறதே இல்லை…”
“ஹேய் தாமரை சத்தியமா ஞாபகத்துல இல்லம்மா. நான் போட்டா சொதப்பிரும். அது அப்பறம் வேஸ்ட் ஆகிரும். அதுக்கு தான் உன்கிட்ட கேட்கறேன்…”
“ஆமா சொதப்புது? இது ஒரு சாக்கு…” என்றவள் ஏற்கனவே டிகாஷன் கலந்து வைத்திருந்த பாத்திரத்தை அடுப்பில் ஏற,
“இது யாருக்கு போட்டது?…” எனவும் தாமரையின் முழியில் அவளை முறைத்தான்.
“அடங்கவே மாட்ட இல்ல?…” என அவளின் தலையில் கொட்டு வைக்க,
“ஆசையா இருந்துச்சு. ஆனா குடிக்கலை தெரியுமா?…” என்றவளின் முகத்தின் பாவனையில் இவன் புன்னகைக்க,
“சிரிக்காதீங்க. அப்படியே பேச்சை மாத்தறது. கல்யாணத்துக்கு முன்னாடி உங்களுக்கு சமைக்க எல்லாம் வரும்ன்னு அங்கை அத்தை எங்க வீட்டுல அவ்வளோ பெருமையா பேசினாங்க தெரியுமா? இங்க உங்களுக்கு ஒரு வெந்நீர் வைக்கவே கை நடுங்குது…”
தாமரையின் இந்த வழக்கமான கிண்டலில் கதிர் இடுப்பில் கைவைத்து முறைத்தவன்,
“நான் உன்கிட்ட சொன்னேனா? என்னவோ நானே சொல்லிட்ட மாதிரி எப்ப பார்த்தாலும் இதையே சொல்ற? எங்க உனக்கு என்னலாம் சமைக்க தெரியும் சொல்லு. சொல்லு….” என வந்தான்.
“ஏன் தெரியாம? நல்ல டீ போடுவேன். அவசரத்துக்கு என்ன செய்யனுமோ அந்த சமையல் செய்ய தெரியும். போதாதா?…”
“உன் அவசர சாப்பாடு யாருக்கு வேணும்?…”
“உங்களுக்கு வேண்டாம்ன்னா போங்க. என்னவோ உங்களுக்கு உடனே நாங்க செஞ்சு குடுக்க போற மாதிரி தான். எனக்காவது இவ்வளவு தெரியுதேன்னு சந்தோஷப்படுக்கோங்க. உங்களுக்கு இதுவும் தெரியலை…”
“ஏன் நான் தெரிஞ்சு என்ன பண்ண போறேன்?…”
“என்ன பண்ண போறேனா? உங்க பிள்ளைக்கு செஞ்சு குடுக்கனும்னு எல்லாம் ஆசையே இல்லையா?…”
தாமரையும், கதிரும் மாற்றி மாற்றி வாக்குவாதத்தில் இருக்க அடுப்பில் அவனுக்கு மட்டும் என வைத்திருந்த அரை டம்ளர் டீயும் வற்றி அடிப்பிடிக்க ஆரம்பித்திருக்க,
“என்ன ஒரே புகைச்சலா இருக்கே?…” என உள்ளே வந்தான் தர்ஷன்.
“அடேய்களா இதுதான் வீடு பத்தி எரியறதா? இங்க என்ன பஞ்சாயத்து?…” என தர்ஷன் வந்து கேட்க,
“வந்து வேடிக்கை பார்த்து கேள்வி கேட்டுட்டு நிக்கற? உன்னைய போய் என்னன்னு பாருன்னு வேகமா அனுப்பினேன் பாரு. என்னை சொல்லனும்…”
அவன் பின்னோடே வந்த யமுனா அடுப்பை அணைத்து பாத்திரத்தை சிங்கில் போட்டுவிட்டு தர்ஷனின் தலையில் வலிக்கும் படி நான்கு கொட்டு வைத்தார்.
“அதான பாத்தேன். சண்டை போட்டது இவங்க ரெண்டு பேரும். என்னை போய் உருட்டிட்டு இருக்கீங்க? போங்கம்மா…” என்றான் தர்ஷன்.
“இங்க உங்களுக்கு என்னாச்சு?…” என யமுனா கேட்க,
“என்னாச்சு? ஒண்ணுமில்லையே?…” என தோளை குலுக்கிய கதிர்,
“தாமரைக்கு பால் காய்ச்ச வந்தேன். அப்படியே எனக்கும் டீ போடனும்னு…” என சொல்லவும்,
“ம்மா, நம்பாதீங்க. இதத்தான் சோத்துல வெள்ளரிக்காயை மறைக்கிறதுன்னு சொல்றது…” என மீண்டும் இடையிட்டன தர்ஷன்.
“என்னடா உளர்ற? வெள்ளரிக்காயா?…”
“ஆமா, இது நீ சொன்ன பொய்யோட வெய்ட். அதை பொருத்து தான் காயை சொல்லுவோம். உன் இஷ்டத்துக்கு எல்லாம் பூசணிக்காய் சொல்ல முடியாது. விலைவாசி ஏறுது ப்ரோ…” என பின்னே கை கட்டி எங்கோ பார்த்துக்கொண்டு சொல்ல,
“முதல்ல வெளில போங்க எல்லாரும். கொஞ்சம் நேரம் வீட்டை விட்டு போனா இந்த பாடா?…” என யமுனா மூவரையும் விரட்டினார்.
“பால்…” என தாமரை பார்க்க,
“அதான் ஆறிடுச்ச. நானே சூடு பண்ணி எடுத்துட்டு வரேன்…” என்று அவர்களை அனுப்பி வைத்தார்.
“அம்மா எங்கடா இவ்வளவு சீக்கிரம் வந்தாங்க. லேட் ஆகும்ன்னு நினைச்சேன்…” என கதிர் தர்ஷனிடம் கேட்க,
“அதை ஏன் கேட்கற? கிளம்பும் போது உனக்கும் தலைவலி. அண்ணியும் தனியா இருக்காங்கன்னு தோணிட்டே இருந்துச்சாம். அதான் அப்பாவை அங்க இருக்க சொல்லிட்டு எனக்கு போன் பண்ணி வந்து கூட்டிட்டு போன்னு சொன்னாங்க. வாசல்ல பைக்கை நிப்பாட்டினா புகையிற ஸ்மெல்…”
“நான் ஒண்ணுமில்லை. உங்கண்ணன் தான். அங்க கேளு. சமைக்க தெரியலை. ஆனா சமாளிக்கறார்…”
“அண்ணி சமைக்க தெரிஞ்சவன் மனுஷன். அதை சமாளிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன். என் அண்ணன் பெரிய மனுஷன் அண்ணி…” என்றவன்,
“என்னடா அண்ணா?…” என கேட்க,
“நீயெல்லாம் மனுஷனே இல்ல தெரியுமா?…” என கதிர் அவனிடம் பேசிக்கொண்டிருக்க யமுனா வந்துவிட்டார்.
தாமரைக்கு பாலும், மகன்களுக்கு டீயும் என வந்தவர் ஒரு பாத்திரத்தில் நிறைய பச்சை பட்டாணியை கொண்டுவந்து வைத்தார்.
“தர்சா இத கொஞ்சம் கை பாரேன்…” என சொல்லவும்,
“இதுக்கு தானா எனக்கு கேட்காமலே டீ?…” என முறைத்தான் அவன்.
“இல்லனா எனக்கு என்ன செஞ்சீங்கன்னு நீ கேட்பியே? அதான் போட்டு குடுத்துட்டு அப்படியே இதையும் கொண்டு வந்தேன்…” என்று பதில் சொல்லி அதற்கு இன்னொரு பாத்திரம் எடுக்க உள்ளே சென்றார்.
“நான் சொல்லலை அண்ணி. எங்கம்மா அவுட் ஆஃப் தி வேர்ல்ட்…” என்றான் தாமரையிடம்.
“இங்க என்ன கிரிக்கெட்டா நடக்குது அவுட்டு வெளாடுன்னு. வாயாடாம வந்து பாருடா…” என யமுனா மீண்டும் சொல்லவும் நால்வருமாய் அதை கை பார்க்க சற்று நேரத்தில் கதிர் கிளம்பிவிட்டான்.
இரவு அவன் வரவும் இதை பற்றி பேசவேண்டும் என தாமரை நினைத்திருக்க மாலை நடந்த கலாட்டாவில் இதை மறந்துவிட்டிருந்தாள் தாமரை.
அதன் பின் நாட்கள் துரிதகதியில் ஓட ஏழாம் மாதம் வளைகாப்பு முடிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டவள் ஆண் குழந்தையை ஈன்றெடுத்து அடுத்த மூன்றாம் மாதத்தில் தான் வந்தாள் தன் குழந்தையுடன்.
அதன் பின்னர் குழந்தையை பார்க்கவே சரியாக இருக்க தர்ஷன் நிவேதா விஷயத்தை முழுதாய் மறந்தேவிட்டிருந்தாள்.
கதிர், தாமரை மட்டுமல்லாது அவர்களின் மொத்த குடும்பத்தையும் குழந்தை துருவ் கை பற்றி இருந்தான்.
அதனால் வேறு எந்த நினைப்புமில்லாது அத்தனை பேரும் குழந்தை குழந்தை என அதில் மட்டுமே கவனத்தை செலுத்தி வந்தார்கள்.
ஆனால் தாமரை மீண்டும் இதை நினைக்கும் முன்பே தர்ஷன் நிவேதா திருமணத்தை பற்றி யமுனா பேசிவிட்டார் கதிரிடம்.
அனைவருக்குமே இதில் பயங்கர சந்தோஷம். முதலில் இதை தாமரையிடம் பேசிவிட்டு அதன் பின்னர் சோமநாதனிடம் சொல்லலாம் என யமுனா சொல்லியிருந்தார்.
ஆறு மாதம் கழித்தே திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்றும், இப்போதைக்கு முடிவு மட்டும் செய்துகொள்வோம் என்றும் யமுனா சொல்ல பூங்காவனமும் எங்கே மறுக்க?
அவருக்கு அதில் பரம திருப்தி. அத்தனை சந்தோஷத்துடன் சரி என்றார் பூங்காவனம்.
ஆனால் அவர்கள் சம்மதிப்பார்கள் என எதிர்பார்த்த இருவரிடமிருந்து வந்தது எதிர்பாராத அந்த மறுப்பும், எதிர்ப்பும்.