கதிர் மேஜையில் இருந்த அடுத்த ட்ரிப்க்கான பேப்பரை எடுத்து சரிபார்த்துக்கொண்டு இருந்தான்.
தனது லேப்டாப்பில் ட்ரிப்க்கு புக்கிங் செய்யப்பட்டிருந்தவர்களின் விபரங்களுடன் கையில் இருந்த பேப்பர் விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என பார்த்துக்கொண்டிருக்க தர்ஷனின் பொறுமை பறந்தது.
“என்னடா நான் வந்து இவ்வளோ சொல்றேன். ஒண்ணுமே நடக்காத மாதிரி நீ உன் வேலையை பார்த்துட்டு இருக்க?…” என்றான் தர்ஷன்.
“வேற என்ன செய்ய சொல்ற? அதான் அம்மாக்கிட்ட சரின்னு சொல்லிட்டியே?…”
“உனக்கு கல்யாணம் ஆனா பின்னால இன்னும் என்னை நோட் பன்றாங்க…”
“கொழுந்தன் ஒழுங்கா இருக்கானான்னு ஒரு அக்கறைடா தர்ஷா…”
“ண்ணா உன்னை கொன்னுட்டேன். இப்ப என் நிலைமையை நினைச்சு பாரு. வெறும் கொழுந்தனுக்கே அல்லு விடுது. ஒருத்தர்ட்டையும் முன்ன மாதிரி ஈஸியா பேச முடியறதில்லை. இப்ப தங்கச்சி புருஷன்னு வரும் போது சுத்தம்…”
“ஹா ஹா ஹா டேய் இதென்னடா இவ்வளவு பயப்படற?…” என்ற கதிருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“ஹ்ம்ம், ஏன் சிரிக்க மாட்ட? என் நிலமையில இருந்து பாரு புரியும்…” என்றான் தர்ஷன்.
“இப்போ என்ன உனக்கு பிரச்சனை? நிவியை கல்யாணம் பண்ணிக்கறதா? இல்லை நிவி அக்கா உன்னோட ஹெட்டா இருக்கறதா?…”
“ப்ச்…” என சலித்தவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“நிவியை பிடிக்கலன்னா சொல்லு. அம்மாட்ட பேசறேன்…”
“ஆணியே புடுங்க வேண்டாம். ஏற்கனவே அம்மா என் தலையை ஆட்டி முடிச்சுட்டாங்க…”
“இப்போ என்னதான் உன் பிரச்சனை?…” என கதிர் அதட்டவும் தர்ஷன் மௌனம்.
நிவியை பிடிக்கவில்லை என்றே அவன் யோசிக்கவில்லை. என்னவோ இப்போது எதற்கு இது என்று தோன்றியது.
அதுவும் படித்துகொண்டிருக்கும் பெண்ணை திருமணம் என இழுத்துவிடுவது சரியில்லை என நினைத்தான் தர்ஷன்.
“ஓகே, இதையாச்சும் பேசேன். நிவி படிப்பை முடிக்கட்டும். அப்பறமா பேசலாம். கண்டிப்பா எனக்கு ஓகே…” என்றான்.
கதிரின் திருமணத்தின் போதும், அதன் பின் நடந்த நிகழ்வுகள், அவ்வப்போது தாமரை பேசியது என எல்லாம் தர்ஷனில் பதிந்திருந்தது.
அதுவும் தாமரைக்கு மருந்து கொடுக்கும் விழா அன்று அவள் அவளின் பெற்றோரை கண்டித்து பேசியதும், நிவியின் படிப்பின் முக்கியத்துவத்தை சொல்லியதும் கூட தற்செயலாக அவன் கேட்டிருந்தான்.
இதுவரை யாரிடமும் அதை பற்றி பேசியிறாதவனுக்கு இப்போது மனதிற்கு ஒப்பவில்லை.
“கல்யாணத்தை தள்ளி போடறதை பத்தி நீ இவ்வளவு சொல்லும் போது யோசிக்கத்தான் வேணும். ஆனாலும் நிச்சயம் பண்ணிட்டு எத்தனை மாசம் தள்ளி வைக்க முடியும் சொல்லு?…”
“இந்தளவுக்காவது நீ யோசிக்கிறியே அதுவே போதும். பார்ப்போம் இந்த கேப்ல எனக்கு நிவியை பிடிக்க கூட செய்யலாம்…” என்றான் தர்ஷன்.
“என்னடா இப்படி பேசற? நிவியை பிடிக்காதா உனக்கு?…”
“அப்படி இல்லண்ணா. பிடிக்கிறதுனா கல்யாணத்துக்கு பிடிக்கிற அளவு சொல்றேன். அண்ணியோட தங்கச்சியா ஒரு நல்ல அபிப்ராயம் இருக்குது. மத்தபடி அதுக்கு மேல யோசிக்கலை…”
தர்ஷன் சொல்லவும் கதிருக்கும் புரிந்தது. அவன் சொல்வதும் சரிதானே என நினைத்தாலும் இதற்கு வீட்டில் எந்தளவுக்கு ஒப்புதல் தருவார்கள் என நினைத்தான் கதிர்.
அதுவே அவனுக்கு யோசனையை தர தலையை அசைத்தபடி அமர்ந்திருந்த விதமே தர்ஷனுக்கு நம்பிக்கையை தந்தது.
‘இன்னும் ஒரு வருடம் தானே? நிவேதா படிப்பை முடிக்கட்டும்’ என தர்ஷன் நினைத்தான்.
இந்த திருமணத்தை பெரிதாய் மறுப்பதற்கில்லை என்றாலும் சொன்னதும் அத்தனை அதிர்ச்சி தர்ஷனுக்கு.
உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறி தாயிடம் தான் முதலில் மறுப்பை தெரிவித்தான்.
அதுவும் தாமரையும், யமுனாவும் சென்று சோமநாதன், சரளாவிடம் பேசிவிட்டு வந்த பின்பு.
முதலில் அவர்களின் சம்மதத்தை தெரிந்த பிறகு சம்பிரதாய படலங்களை வைத்துக்கொள்ளலாம் என நினைத்திருந்தார்கள்.
அதனால் இருவரும் மட்டும் சென்று விஷயத்தை பேச தாமரையை சேர்ந்தவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி.
இதை அவர்களே எதிர்பார்க்கவில்லை என்பதை விட தாமரையின் முழு சம்மதத்தோடு என்னும் பொழுது இன்னுமே நிறைவு.
தாமரையே நிவேதாவிடம் பேச அவளுக்கு வீட்டினரின் பிடித்தம் தான் தன் விருப்பம் என்றுவிட்டாள்.
தாமரை தான் படிப்பு முதலில் என்று சொல்லிக்கொண்டிருக்க இப்போது அவளே இந்த திருமண பேச்சை எடுக்கிறாள் என்றால் யோசிக்காமல் செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கையில் சம்மதம் சொல்லிவிட்டாள் தாமரை விருப்பம் என்று.
“ம்மா, என்ன இது இப்படி சொல்றீங்க? அதுவும் நிவியை…”
“இல்லை நிவிக்கு ஒண்ணுமில்லை. எனக்கு தான் ஏதுக்க கஷ்டமா இருக்குது. என்னவோ சரிவராதுன்னு தோணுது…”
“இதை நீ ஏன் அன்னைக்கே சொல்லலை தர்சா?…” என கோபத்துடன் யமுனா கேட்டார்.
“இல்லை அன்னைக்கு ஷாக்ல இருந்தேன். என்ன சொல்லன்னு எனக்கு தெரியலைம்மா…”
“என்னடா பேச்சு இது? உன்கிட்ட சொல்லிட்டு தானே போனோம் நானும் உன் அண்ணியும். அவங்க வீட்டுலையும் பேசின பின்னாடி சாக்குல இருந்தேன், கோணில இருந்தேனுட்டு. நல்லாயில்ல தர்சா…” என்றார் கோபத்துடன்.
“ம்மா, ப்ளீஸ். பேச விடுங்க என்னை…”
“என்னத்த பேச விட? அன்னைக்கு உங்கிட்ட சொல்லிட்டு போய் அந்த பொண்ணு வீட்டுலயும் பேசி சம்மதிச்ச பின்னால நிச்சயத்துக்கும் நாள் குறிச்சுட்டு வந்தா நீ சாவாகாசமா பதில் சொல்ற. என்ன விளையாடறியா?…”
அத்தனை கோபத்துடன் யமுனா கேட்க தர்ஷனுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
“ம்மா, அப்படி எதுவும் இல்லைம்மா…” என்றவன் அதற்கு மேல் அவரிடம் பேசவில்லை இதை பற்றி.
யமுனாவிற்கு இளைய மகன் மேல் அத்தனை நம்பிக்கை. நிச்சயம் எந்த விஷயத்தையும் மறைப்பவனில்லை. அது போல விளையாட்டுத்தனம் இருக்குமே ஒழிய கள்ளத்தனம் இருந்ததில்லை.
அதனால் முழுமனதோடு எந்த சஞ்சலங்களும் இன்றி இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்.
இப்படி மறுக்கவும் கூட ஏதோ குழப்பத்தில் தான் சொல்கிறான் என நினைத்தார் யமுனா.
தன்னிடம் அவன் பேசியதை யாரிடமும் சொல்லாமல் இருந்தவர் கதிரை தனியே அழைத்து இப்படி என விஷயத்தை சொல்லி பேசும்படி கூறினார்.
இப்போது தர்ஷனே கதிரிடம் வந்து நிற்க அவனுக்கு யாரின் பக்கம் பேசவென்றும் கஷ்டமாக போனது.
“நான் பேசறேன்டா…” என்ற அண்ணன் மேல் நம்பிக்கை வைத்து தர்ஷனும் அவனுடனே கிளம்பி வீடு வர அங்கே பூங்காவனம், தாமரை, யமுனா மூவரும் எதையோ எழுதிக்கொண்டு இருந்தார்கள்.
“என்ன வேலை நடக்குது?…” என கதிர் கேட்க,
“முதல்ல போய் ப்ரெஷாகிட்டு வாங்க. வந்து பேசலாம்…” என்றாள் தாமரை.
பூங்காவனம் குழந்தையை வைத்துக்கொண்டு விளையாட்டு கட்டியபடி இருந்தார்.
கதிர் அங்கிருந்து நகர பார்க்க ‘பேசு’ என்பதை போல நிறுத்தினான் தர்ஷன். ‘வந்து பேசலாம்’ என தலையசைத்து கதிர் மேலே சென்றுவிட்டான்.
“நீ என்னடா? உனக்கு தனியா சொல்லனுமா?…” என யமுனா இளைய மகனை கேட்க,
“ஒன்னும் சொல்ல வேண்டாம்….” என சொல்லி தர்ஷனும் சென்றான்.
“இவனுங்களை சொல்றதுக்கு…” என அலுத்தபடி அடுத்த பெயரை சொன்னார் யமுனா.
சற்று நேரத்தில் கதிர் வந்துவிட மகன் அவனிடம் வர பாய்ந்துகொண்டு இருந்தான் பூங்காவனத்தின் மடியில் இருந்து.
“தூக்குங்க அவனை. எவ்வளவு நேரமா கையை காமிச்சுட்டே இருக்கான். விட்டா இறங்கி வந்திருவான் போல?…” என்று தாமரை சத்தம் போடவும் தான் கதிர் சிரித்தபடி தூக்கினான்.
“உனக்கு பொறாமைன்னு சொல்லு. நான் வரவும் என் மகன் என்னை இப்படி தேடறது உனக்கு பொறுக்கலை…” என்று தாமரையை வம்பிழுக்க,
“முதல்ல சாப்பிட வாங்க. வந்து பேசலாம்…” என யமுனா எழுந்துகொண்டார்.
“நீங்க தாமரைட்ட சொல்லிட்டு இருங்க. எழுதட்டும்…” என்று அவர் உள்ளே செல்ல,
“என்ன எழுதறீங்க அப்படி?…” என்றான் தர்ஷன்.
“கல்யாணத்துக்கு பத்திரிக்கைல பேர் போடறவங்க பேர் எல்லாம் எழுதிட்டு இருக்கோம் தர்ஷ்…” என்றாள் தாமரை.
“என்ன?…” என்று அதிர்ந்தவன் பின் அதனை முகத்தில் காட்டிக்கொள்ளாமல்,
“இருக்குது தான். அதையும் பார்த்துட்டோம். இப்போ அதோட பத்திரிக்கை அனுப்பறதுக்கு யார் யார் எந்த ஊர்ன்னு எல்லாம் எழுதிட்டு இருக்கோம்…” தாமரை சொல்ல,
“இப்பவேவா? ஏன் இவ்வளவு அவசரமா?…” தர்ஷனால் பேசவே முடியவில்லை.
“எங்க கல்யாணம் நடந்தது தான் உனக்கு தெரியுமே? நிறைய பேரை அழைக்கவே இல்லை. அதான் இப்பவே எழுதி வச்சுட்டா அந்த நேரம் ஈஸியா காப்பி பண்ணிக்கலாம் பாரு. அதான் எழுதிட்டு இருக்கோம்…”
தாமரை தர்ஷனிடம் சொல்லிவிட்டு பூங்காவனத்திடம் அடுத்த பெயரை கேட்டு எழுதியவள் போன் நம்பரையும் சேர்த்துக்கொண்டாள்.
“ஏன்டா உனக்கு என்ன தட்டு தாம்பாளம் வைக்கனுமா? இன்னும் அங்கயே நின்னுட்டு இருக்க? உனக்கு யாரையும் சொல்லனும்னா அப்பறமா சொல்லு. இப்ப வா..” என யமுனா உள்ளிருந்து குரல் தரவும் எரிச்சலுடன் சென்றான் தர்ஷன்.
“என்ன வைக்க? இங்க பாரு. மூஞ்சியை எங்கயோ வச்சுட்டு இருந்துட்டு அப்பறம் இதை ஏன் வச்சீங்க? ஏன் இட்லிக்கு பக்கத்துல சட்னியை ஊத்துனீங்கன்னு நொரநாட்டியம் பண்ணுவ…” என்றார் அவர்.
“ஒன்னும் கேட்கலை. இருக்கறதை வைங்க…” என்றவன் முகம் உர்ரென்று இருக்க யமுனாவிற்கு சிரிப்பு வந்தது.
இத்தனை சீரியஸாக மகனை பார்த்ததில்லையே. இப்போது பார்க்க புதிதாய் தெரிந்தது அவருக்கு.
“இப்பத்தான் மாப்பிள்ளை களை வந்திருக்கு இவன் மூஞ்சில…” என சொல்லி சிரித்துக்கொண்டே அவர் செல்ல,
“ம்மா…” என்றான் தர்ஷன்.
“என்னடா? முதல்ல சாப்பிட்டு வா…” என சொல்லி யமுனா சென்றுவிட கதிர் மகனுக்கு விளையாட்டு காட்டியபடி சிறிது சுவைக்கு அவனின் நாக்கில் லேசாய் விரல் கொண்டு வைத்துக்கொண்டிருக்க சப்புக்கொட்டியது குழந்தை.
“ண்ணா, காரம் இருக்க போகுது…” என தர்ஷன் சொல்ல,
“அதெல்லாம் இல்லைடா. அதான் குடுத்தேன்…” என்று சாப்பிட்டதும் அங்கே சென்று தந்தையின் அருகே அமர்ந்தான் கதிர்.
தர்ஷனும் பின்னால் வந்துவிட வந்தவன் தாயின் அருகே அமர்ந்து அங்கிருந்த பத்திரிக்கைக்கு கொடுத்தனுப்ப வேண்டிய மாதிரியை எடுத்து அசட்டையாக வாசித்தான்.
“இதென்னம்மா?…” என்று பின்னால் இருந்த பேப்பரை பார்த்து கேட்க,
“நிச்சயத்துல லக்கான பத்திரிக்கை வாசிக்கனும்ல. அதுக்கு உன்னோட பேர் எங்க பேர், தாத்தா பாட்டி பேர் எல்லாம் எழுதிருக்கோம்…” என்ற போதே அதனை வாசிக்க ஆரம்பித்தவனின் கண்கள் தெறிக்க அதை படித்தவன் எழுந்து நின்றான் கோவத்துடன்.
“என்ன பண்ணி வச்சிருக்கீங்க நீங்க?…” என ஆத்திரப்பட,
“என்னாச்சு தர்ஷ்?…” என்றான் தாமரை.
அவளிடம் சொல்ல முடியாமல் அவன் விழிக்க யமுனாவிற்கும், பூங்காவனத்திற்கும் புரிந்து போனது.