உருக்கம் – 2
அந்த மண்டபத்தினுள் நுழைந்தவனை கண்டதுமே அருமைநாயகத்தின் முகம் வெளிறியது.
அவரை அழுத்தமான பார்வை பார்த்தபடி வந்த விஜய்யின் ஒவ்வொரு எட்டுக்களும் அவரின் நெஞ்சில் மிதிப்பதை போலவே இருந்தது.
எச்சிலை கூட்டி விழுங்கியவர் பார்வை இப்போது எதிரே கலகலப்புடன் பேசிக்கொண்டிருக்கும் மாப்பிள்ளை வீட்டினரை பார்த்தது.
அதை தொடர்ந்து சுற்றிலும் இருந்த உறவுகளை பார்க்க அந்த ஊரில் இருந்த சில உறவுகளுக்கு விஜயை தெரிந்திருந்தது.
“பார்வதி பார்வதி, நாந்தான் கேட்டேனில்ல, அந்த பயலுக்கு தெரியுமான்னு? இப்ப பாரு அவனே நெடுநெடுன்னு நடந்து வந்திட்டிருக்கான்…” என்று கரூர் சித்தி வந்து சொல்லவும் வசந்திக்கு மூச்சே நின்றது.
“என்னத்தா சொல்ற?…” என பார்வதி வசந்தியை பார்த்தபடி பதற,
“அவன்தான். மண்டபத்துக்குள்ள இப்பத்தான் வரான். பார்த்துட்டு தான வெரசா உங்கட்ட ஓடியாறேன்…” என்றவர் கண்கள் சேரில் அலங்காரத்தோடு அமர்ந்திருந்தவளை பார்த்தது.
“இனி எங்க நிச்சயம் நடக்க? என் புருஷன் அன்னைக்கே சொன்னாரு. இன்னைக்கு அதுமாதிரியே ஆகிடுச்சு….” என்று பெருமூச்சுடன் வெளியே என்ன நடக்கிறது என பார்க்க சென்றவிட வசந்தி அழவே ஆரம்பித்துவிட்டார்.
“போச்சு, போச்சு. இனி அரசல்புரசலா தெரிஞ்சவங்களுக்கு மத்தியில வெளியூர் சம்பந்தகாரங்க முன்னாடி இப்படி மானம் போகனுமா? நாக்குமேல பல்ல போட்டு அத்தனை கேட்க போறாங்க. போச்சு…” என்று தலையில் கைவைத்து மூலையில் அமர்ந்துவிட்டார்.
“வசும்மா, அழாம இருங்க. இப்ப என்ன? அந்த பையன் வந்திருக்கான். அவ்வளோ தானே? என்ன நடக்குதுன்னு பார்ப்போம்…”
“இன்னும் பார்க்க என்னடி இருக்குது? அதான் எல்லாமே முடிஞ்சு போச்சே? அன்னைக்கே அவ்வளவு ஆங்காரமா பேசினானே? எங்க இருந்தாலும் என் பொண்டாட்டியா மட்டும் தான் இவ இருப்பான்னு. மாத்த நினைச்சா வந்து நிப்பேன்னு…”
“ஒருவேளை மனசு மாறியிருக்கலாமே இப்போ? சும்மா கூட கேள்விப்பட்டு நடந்ததுக்கு வருத்தப்பட்டு கூட வந்திருக்கலாம். நீங்க அழாதீங்க?…”
“என்னது வருத்தப்பட்டா? இல்ல, அவன் சென்மத்துக்கும் மறக்கமாட்டேன்னு அடிச்சு சத்தியம் பண்ணிட்டுல போனான். மறக்கறவனா?…” என்றார்.
அத்தனையையும் பார்த்தபடி பார்வதி நிற்க அவரின் பக்கம் கூட திரும்பவில்லை வசந்தி. அதுவே பெரும் வலியை தந்தது அவருக்கு.
அன்று நடந்ததை தான் வேண்டுமென்றே செய்ததை போல அல்லவா இவர்கள் நினைத்து தன்னிடம் முகம் காண்பிக்கிறார்கள் என்று நினைத்தார். அந்த இவர்களில் அருமைநாயகமும் அடக்கம்.
அவரும் இன்றுவரை மன்னிக்க தயாராக இல்லை மனைவியை. அந்தளவிற்கு விஜய்யை பற்றிய எண்ணம் வந்தால் அன்று அவ்வளவு தான். எண்ணெய் சட்டியில் போட்டு வாட்டி எடுத்துவிடுவார்.
அதற்கு பயந்தே சில நேரம் கண்ணில் படுவதே இல்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்துகொள்பவருக்கு ஆறுதல் பவித்ரா மட்டுமே.
இப்போது பெரியன்னையின் கையை பற்றிக்கொண்டவள் அவரின் முகத்தையே பார்த்திருந்தாள்.
“அப்புக்குட்டி, பெரியம்மா வேணும்னு செய்யலைடா. உனக்கு தெரியும் தானே? அன்னைக்கு…”
“ப்ச், ம்மா, சும்மா இருங்க…” என்றவள் எழுந்து அந்த அறையின் கதவருகே சென்று நின்றாள்.
“அப்பு உள்ள வா. ஏன் அங்க போய் நிக்கிற? அப்பா பார்த்தா அவ்வளவு தான்…” என ரஞ்சனி சத்தம் போட அவள் அசையவே இல்லை. அவளருகே பார்வதியும் வந்து நிற்க இப்போது ரஞ்சனியும் வந்து நின்றாள்.
“அன்னைக்கு மாதிரியே கோபமாவா வந்திருக்கான்? ஒன்னும் தெரியமாட்டிக்குதே?…” என ரஞ்சனி முணங்க பவித்ராவும் பார்வையை அவனிடத்தில் தான் வைத்திருந்தாள்.
விஜய்யின் முகத்தை வைத்து எதையும் கணிக்கமுடியவில்லை. புயலை அடக்கிய அமைதி இருந்தது.
இங்கு இவர்கள் வந்து நின்றதை எதையும் கவனியாத அருமைநாயகம் கோபத்தை முகத்தில் காட்டாமல் இருக்க படாதபாடுபட்டுப்போனார்.
“இவன் எங்க இங்க வந்தான்?…” என்று முணுமுணுத்தபடி தன் மகனை பார்த்தவர் தலையசைத்து தன்னருகே அழைத்தார்.
“ஜோதி என்னன்னு போய் பாருடா…” என்று சொல்லவும் அவனும் வேகமாய் வந்தான் விஜய்யை நோக்கி.
பரஞ்சோதி வருவதை விஜய்யுமே கவனித்துவிட்டான். ‘வாடா வாடா’ என நக்கலுடன் பார்த்தவன்,
“இங்க உட்காருங்கடா. நான் போய் நிச்சயத்தை தலைமை தாங்கிட்டு வரேன்…” என்று நண்பர்களை பார்வையாளர்களுடன் அமர சொல்ல இருவருமே தயங்கி பார்த்தனர் அவனை.
“விஜய் சொன்னா கேளுடா…” என்ற ஆகாஷின் கையை பிடித்த பிரனேஷ்,
“வாயை வச்சிக்கிட்டு இருக்கியா? போனா போய்ட்டு வரட்டும். சொன்னா வேணும்னே கூட கூட எதாச்சும் வில்லங்கம் செய்வான்…” என்று அடக்கினான்.
இருவரையும் ஒரு சிரிப்புடன் பார்த்தவன் ‘அமர்ந்துகொள்’ என்பதை போல சைகை காட்டிவிட்டு முன்னே செல்ல அதற்குள் பரஞ்ஜோதி வந்து விஜய்யை வழி மறிப்பதை போல நின்றான்.
வேண்டுமென்றே அவனை நெஞ்சோடு இடித்துக்கொண்டு சென்ற விஜய் அவனை முட்டிக்கொண்டு நிற்க,
“கண்ணு தெரியலைன்னா கண்ணாடிய கழட்டிட்டு நடக்கனும். உனக்கெதுக்கு இந்த கண்ணாடி எல்லாம்?…” என்று பரஞ்சோதி கோபத்துடன் கேட்க,
“மச்சான் பேச்சுக்கு ரெஸ்பெக்ட்…” என்றவன் கூலரை கழற்றி தன் சட்டையில் கோர்த்தவன்,
“தள்ளு மச்சான்…” என கை கொண்டு நகர்த்திவிட்டு நடந்து சென்று இரண்டிரண்டு படிகளாக தாவி மேடையில் அருமைநாயகத்தின் அருகிலேயே வந்து அமர்ந்துகொண்டான்.
மொத்த குடும்பமும் ஸ்தம்பித்து செய்வதறியாமல் முழித்துக்கொண்டு இருந்தார்கள்.
“ஹவ் ஆர் யூ மாம்ஸ்?…” என்று வேறு விஜய் அவரை கேட்க,
“டேய்…” என அவர் பல்லை கடித்தார்.
“மரியாதை மரியாதை…” என்றவன்,
“என்ன மாப்பிள்ளை எல்லாம் பார்த்திருக்கீங்க. ஒரு வார்த்தை உரிமைப்பட்டவனுக்கு சொல்லிவிடனும்னு தோணலையே?…” என்றான் நக்கலாக.
“ஊர்பேர் தெரியாதவன்லாம் உரிமை கொண்டாடிட்டு வர நினைக்கலாமா?…” என விஜய்யை முறைத்தார் அருமைநாயகம்.
“ஜோதி…” என மகனை திரும்பி பார்த்து அழைக்க,
“சில் மாம்ஸ், உங்க ஜோதி அங்கயே திகுதிகுன்னு எரியறான். இப்ப உங்களோட பேசறதை கேட்டா இன்னும் எரியமாட்டானா?…”
“நிச்சயத்தை நிறுத்தனும்னு ஏன்டா வந்த? அதான் எப்பவோ ஒட்டும் இல்லை, உறவும் இல்லைன்னு ஆகிடுச்சே….” என நாயகம் கேட்க விஜய்யின் முகத்தில் அப்படி ஒரு வலியுடன் கூடிய வெறி.
“உறவில்லையா? அதை நான் தான் இனி முடிவு பண்ணுவேன். அதையும் ஏற்கனவே சொன்னேனா இல்லையா?…” என சொல்லியவனை அடிக்க பாய்வதை போல பார்த்தார் அருமைநாயகம்.
“மிஸ்டர் பெருமைநாயகம் மாம்ஸ். இப்ப எதுக்கு வந்தேன்னா, இந்த பெருமைக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன். இந்த சவுண்டு எல்லாம் வேண்டாம். அருமை பெருமை இனி பொறுமையா தான் இருக்கனும். புரியுதா?…” என சிரிக்காமல் சொல்லி,
“நிச்சயம் பண்ண வந்திருக்கவங்கட்ட என்னை யாருன்னு சொல்லவேண்டியது தானே? இல்லை யாரோன்னு சொல்லவேண்டியது தானே? நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு பார்க்கனும்ய்யா….” என்று கேட்டவனின் கண்களில் அத்தனை வன்மமும், ஆக்ரோஷமும் போட்டிபோட்டது.
“எங்கடா ஓடி ஒளிஞ்ச? நீ ஆள் அரவமில்லாம போய்ட்டான்னு தான நிம்மதியா இருந்தேன்…”
“ஓஹ், அதான் கல்யாண ஏற்பாட்டை செஞ்சீங்களோ? அதாவது நான் இல்லைன்னு நினைச்சு? அப்படி ஒரு நினைப்பு வரலாமா மாம்ஸ்?…” என்றான் அவனும்.
“உனக்கு பயந்தா? நீ என்ன பெரிய இவனா? கண்ணுக்கே அகப்படாம ஒளிஞ்சுட்டு இன்னைக்கு வந்து வீரவசனம் பேசற?…”
“கண்ணுக்கு அகப்படாமலா? யோவ் மாம்ஸ் நீ என்ன நான் சைட்டடிக்கிற பொண்ணா? உன் முன்னாலையும் பின்னாலையுமா என்னை பார், என் அழகாய் பார்ன்னு உன்னை சுத்தி சுத்தி வர? எனக்குன்னு பொழைப்பு இல்லையா?…” என்று சொல்லவுமே அத்தனை ஆத்திரம் அருமைநாயகத்துக்கு.
“அப்பறம் என்ன சொன்ன? ஓடி ஒளிஞ்சேனா? உனக்கு கண்டுபிடிக்க முடியலன்னு சொல்லு. துப்புக்கெட்ட நாலு ரவுடிங்களை தண்டத்துக்கு தேடவிட்டு அவனுங்க கையை விரிச்சா நான் இல்லைன்னு ஆகிடுமா?…” என விஜய் பேச பேச தான் தேட அனுப்பியவர்கள் மீது கொலைவெறியனார் அவர்.
“எங்கயும் போகலை. ஆனா இத்தனை வருஷம் ஏன் வரலைன்னு தெரியுமா? நான் வராட்டியும் என்னை பத்தின நினைப்பு உனக்குள்ள, உன் குடும்பத்துக்குள்ள இருந்துட்டே இருக்கும்னு தான் வரலை. ஆனா அப்படி இல்லை போல?…”
அவரிடம் கேட்டபடி தாடையை தடவியவன் எதிரிருந்தவர்களையும் கூடியிருந்த கூட்டத்தையும் ஒருமுறை பார்வையால் வலம் வந்தான்.
“என்ன சொன்னேன் நான்? உன் பொண்ணு உன்கிட்ட இருந்தாலும் அவ என்னோட பொண்டாட்டியா தான் இருப்பான்னு சொன்னேன்ல? மீற நினைச்சா அன்னைக்கு நான் வருவேன்னு. இப்போ வந்துட்டேன். எங்க இங்க என்ன பன்றன்னு நானும் பார்க்கறேன்ய்யா…”
விஜய் மெல்லிய குரலில் பேச பேச அருமைநாயகத்தின் பக்கத்தில் இருந்த பழனியப்பனுக்கு அத்தனை வேதனை.
“தம்பி…” என்று கலங்கிய கண்களுடன் அவனை பார்க்க உணர்ச்சியற்று அவர்களை பார்த்தான் விஜய்யும்.
“கண்ணீர் எல்லாருக்கும் பொதுவானது தானே? அன்னைக்கு நாங்க வடிச்சோம். இன்னைக்கு நீங்க. இவ்வளோ தான் வித்யாசம்…”
“இப்படி சொன்னா என்ன அர்த்தம் தம்பி? ஊரே பார்க்க…” என்றவரின் பக்கம் கை நீட்டி நிறுத்தியவன்,
“அன்னைக்கு நீங்க எல்லாரும் வேடிக்கை பார்த்தீங்க. இப்போ வேடிக்கை பார்க்கற இடத்துல நான் இருக்கேன். எதை கொடுத்தீங்களோ அது தான் திரும்ப கிடைக்கும். அனுபவிங்க. ஆனா என்னோட இழப்புக்கு இது பத்தலையே…”
கொஞ்சமும் இரக்கமற்று அவரிடம் பேசியவன் பார்வை அருமைநாயகத்தை வஞ்சகத்துடன் பார்த்தது.
“அசையாம உட்கார்ந்தா எப்படி? நாம என்ன பேசறோம்ன்னே தெரியாம பார்த்துட்டு இருக்காங்க. ஹ்ம்ம், ப்ரசீட்…” என்றான் ஒரு சிரிப்போடு.
அத்தனை அழகாய் இருந்தவனின் புன்னகையின் பின்னால் இருக்கும் வன்மமும் கோவமும் அவர்கள் மட்டுமே அறிந்ததே.
“தம்பி யாரு?…” என எதிரே இருந்த மாப்பிள்ளையின் தந்தை கேட்க,
“நான் விஜயநெடுமாறன்…” என்ற பெயரில் அவரின் புருவம் யோசனையுடன் சுருங்கினாலும்,
“அப்படிங்களா? சந்தோஷம். தம்பி உறவுங்களா?…” என்று அடுத்த கேள்வியை கேட்க,
“அதை நானே எப்படிங்க சொல்லுவேன்? என் மாமா சொல்லுவார். பெரியவர் அவர் இருக்கும் போது நான் எப்படி வாயை திறக்க? அது மரியாதையா இருக்காது…” என்று பவ்யமாய் சொல்லியவன் அருமைநாயகத்திடம் திரும்பினான்.
“யோவ் பெருமை மாமா, கேட்கறாங்கல்ல. நான் யாருன்னு சொல்லு…”
“நீயெல்லாம் என்ன மனுஷன்டா? அதான் நிப்பாட்டன்னு வந்துட்டியே. அந்த கருமத்தையும் நானே சொல்லனுமா?…” என எரிச்சல் மிகுதியில் பேச,
“ம்ஹூம், நான் சொல்ல போறதில்லை. ஆனா நீ சொல்லனும். பார்க்கறேன். நீ என்னதான் உன் வாயல சொல்லுறன்னு கேட்கத்தான இத்தனை தூரம் கிளம்பி வந்திருக்கேன்…” என்று அவன் கிண்டலாக சொல்ல அருமைநாயகத்தின் முகம் கருத்தது.
அவர் எப்படி சொல்லுவார்? வாயை திறந்து பேசிவிட முடியுமா? அவன் எதற்கு இதை செய்கிறான் என்று அறிந்திருந்தாரே.
தன் கௌரவம் என்ன? இப்படி பொடிப்பயலிடம் எல்லாம் பேச்சை கேட்கவேண்டி இருக்கிறதே என்று குமைந்துபோனார்.
“நல்ல நேரம் போய்ட்டே இருக்குது. ஓலை வாசிச்சுட்டு தட்டை மாத்திடலாம்….” என ஐயர் சொல்ல தொண்டையில் நீர் வற்றியது அருமைநாயகத்திற்கு.
அவரின் இந்த தவிப்புகளை எல்லாம் ‘இது பத்தாது தனக்கு’ என்பதை போல பார்வையால் ரசித்துக்கொண்டிருந்தான் விஜய்.
“நீயெல்லாம் வாத்தியாராடா? புள்ளைங்களுக்கு நல்லதை சொல்லிக்குடுக்கற மனுஷன் இப்படியா இருப்பான்? இப்படி எங்க நிம்மதியையும், கௌரவத்தையும் நாசம் பன்றியே….” என்றார் அவர்.
இப்போது குரலில் முதலில் இருந்த ஆணவம், அகங்காரம் எல்லாம் தொலைந்து போய் ஒரு கையறு நிலை மனிதனை போல ஆற்றாமையுடன் அவர் கேட்க விஜய்க்கு இதழோரம் ஒரு சிரிப்பு.
கண்கள் பளபளப்புடன் அவரை அவரின் இந்த பரிதவிப்பை கொஞ்சம் கொஞ்சமாய் பருகிக்கொண்டவன் பார்வையை சுழற்றினான்.
மேடையின் எதிர்பக்கம் பார்த்தவன் இப்போது இடது வலது பக்கவாட்டில் என்று திருப்ப அங்கே நின்றிருந்தாள் அவள்.
தன் பார்வையை கண்டதும் உடனே விழியை தாழ்த்திக்கொண்டவள் மேல் ஒரு நொடிக்கதிகமாகவே தனது விழியை நிலைக்கவிட்டு அடுத்து பார்க்க அருகே பார்வதி கண்ணீருடன் நின்றார்.
அங்கே அவனுக்கு ஆதரவாக அன்று பேசிய ஒரே ஜீவன். தன்னுடைய போராட்டத்தை, யாசகத்தை நிராகரித்த நேரத்தில் தனக்காக அருமைநாயகத்திடம் பேசிய ஒற்றை பெண்மணி.
இறைஞ்சுதலுடன் தன்னை பார்க்கவும் விஜய்க்கும் விழிகள் லேசாய் கலங்கும் போலவே இருந்தது. நொடிப்பொழுதில் மனதினுள் தோன்றிய அந்த மஞ்சள் முகம் புன்னகையுடன் மின்ன உடனடியாக அருமைநாயகத்தை பார்த்தான்.
மெல்லிய இளக்கமும் இறுகி, விழி கசிதலும் நின்று சிவந்த கண்களுடன் அவரை பார்த்தான்.
கூடி இருந்தவர்களுக்குள் கசகசவென்ற பேச்சுக்கள் இப்போது இன்னும் சத்தமாகவே எழும்ப இனியும் அமைதியாக இருக்காது சூழ்நிலையை கையிலெடுத்தாள் பவித்ரா.
“அப்பா…” என்றவளின் சத்தமான அழைப்பு அனைவரையும் அவளின் பக்கம் திருப்பியது.
விஜயை தவிர அத்தனை பேரும் அங்கே பார்க்க அவனுக்கு தெரிந்தது அடுத்து என்ன நடக்கும் என்று. அலட்சியமாகவே அமர்ந்திருந்தான்.