“என்னடா? எதுக்கு கூப்பிட்ட?…” என மகளிடம் வந்தார் பழனியப்பன்.
“ப்பா, இந்த கல்யாணம் வேண்டாம். எனக்கு புடிக்கலைன்னு சொல்லிடுங்க…” என சொல்ல,
“என்னடி பேசிட்டு இருக்க?…” என எழுந்து திட்டினார் வசந்தி வேகமாக.
“ம்மா, கத்தாம பேசுங்க…” என வேகமாய் அறைக்குள் அவள் வர பின்னோடே பார்வதி, ரஞ்சனி, பழனியப்பன் என வர கதவை சாற்றியவள்,
“ம்மா, எப்படி இருந்தாலும் இது நடக்காது. நடத்த விடமாட்டாங்க. ப்ளீஸ். இது இந்தளவுல எனக்கு பிடிக்கலைன்றதோட நிக்கட்டும். அவன் பேசினானா வந்தவங்களும் நம்மளை நடந்ததை மறைச்சு கல்யாணம் பேசிருக்கோம்னு அவமானப்படுத்திட்டு போய்டுவாங்க…”
“அதுக்கு…” என்ற வசந்திக்கும் மகள் சொல்வது புரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
“என்ன என்ன இழவுடி இது? வாழவும் விடாம சாகவும் விடாமன்னு?…” என்று மீண்டும் அழ,
“அப்புக்குட்டி, அப்பா சொல்றதை கேளு. நான் கையில கால்ல விழுந்தாச்சும் அந்த தம்பிக்கிட்ட…”
“அப்பா…” என்று கத்தினாள்.
“யாரு யார் கால்லயும் விழ வேண்டாம். அன்னைக்கு அவங்க உங்க கால்ல, பெரிப்பா கால்லன்னு விழுந்தாங்களே, யார் மதிச்சீங்க? இல்லை தானே? இப்போ மட்டும்…” என்றவள் வார்த்தையை அடக்கினாள்.
“வேண்டாம்ப்பா. எனக்கு கல்யாணமே வேண்டாம். விட்டுடுங்க…” என்றவள்,
“நீங்க பேச வேண்டாம். நானே பேசறேன். இல்லைன்னா ஊர்க்காரங்களே எதாச்சும் இட்டுக்கட்டி பேசிருவாங்க…” என அவள் கதவை திறக்க போக,
“அப்போ பெரியப்பா முன்னாடி நின்னு பேசிருவியா நீ? என்ன பொண்ணை வளர்த்து வச்சிருக்கன்னு பேசுவாங்க….” என்று அதற்கும் சத்தம் போட்டார் வசந்தி.
“ம்மா, இப்போ நீங்க அமைதியா இல்லைன்னா நான் என்ன செய்வேன்னே தெரியாது. பெரியப்பாவை இன்னும் யாரும் எதுவும் பேச வேண்டாம்ன்னு தான் இத்தனை சொல்றேன்…” என்றவள் விறுவிறுவென மேடைக்கு வந்துவிட்டாள்.
“வணக்கம்ங்க…” என்று அத்தனைபேரையும் பார்த்தவள் மாப்பிள்ளையையும் அவனின் குடும்பத்தையும் பார்த்து,
“மன்னிக்கனும், இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லை. நான் வேண்டாம்னு சொல்ல நினைக்கிறதுக்குள்ள ஏற்பாடு பண்ணிட்டாங்க. இனியும் சொல்லாம இருந்தா நல்லா இருக்காதுன்னு தான் நானே வந்து மன்னிப்பு கேட்டேன்…” என்று கைகூப்பி நிற்க அத்தனைபேரும் எழுந்து நின்றுவிட்டனர்.
“என்ன பேசறா உங்க பொண்ணு? என்ன என்னங்க இதெல்லாம்?…” என மாப்பிள்ளையின் தந்தை அருமைநாயகத்திடம் கேட்க அவரோ பவித்ராவை உக்கிரத்துடன் முறைத்து பார்த்தார்.
“இங்க பாருங்க, இது என்னோட முடிவு தான். பெரியப்பாவுக்கு தெரியாது. ப்ளீஸ்…” என்றவள்,
“என்னை மன்னிச்சிடுங்க பெரிப்பா…” என்று சொல்லிவிட்டு வேகமாய் அவ்விடம் விட்டு சென்றுவிட நடப்பதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்பதை போல பேன்ட் பாக்கெட்டில் கை நுழைத்துக்கொண்டு அவன் நின்றிருந்த விதம் கொலைவெறியை கிளப்பியது அருமைநாயகத்திற்கு.
“நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்டடா…” என்றார் விஜய்யை.
“என்னங்க இதெல்லாம்? கூட்டி வச்சு அவமானப்படுத்தறீங்களா? எங்க சொந்தங்கள் எல்லாம் என்ன நினைப்பாங்க? இதை எல்லாம் முதல்லையே கேட்க மாட்டீங்களா?…” என அவரும் அவரின் சொந்தங்களும் தாம்தூமென்று குதிக்க,
“என்ன மாமா உங்க பொண்ணுக்கிட்ட சம்மதம் கேட்காமலா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு நிச்சயத்துக்கு ஏற்பாடு பண்ணுனீங்க? ச்சோ தப்பு பண்ணிட்டீங்களே?…” என எள்ளலாய் விஜய் மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒத்து பாட,
“நீ முதல்ல கிளம்புடா…” என்றார் அவனை.
“அதை நீங்க சொல்ல கூடாது. நீங்க கூப்பிட்டு நான் வரலை…” என்றவன் அங்கே நடப்பதை வேடிக்கை பார்க்கும் பார்வையாளனாக மாறி போனான்.
கிளம்பவும் இல்லாமல் நடப்பதையும் பெரிதுபடுத்தி அவன் நிற்க அவனையே பார்த்தபடி இருந்தாள் பவித்ரா. அவளின் பார்வையை உணர்ந்தவன் திரும்பி பார்த்து முறைத்துவிட்டு மீண்டும் அருமைநாயகத்தை பார்த்தான்.
“என்னடா இப்படி ஆகிருச்சு?…” என ஆகாஷ் கேட்க,
“ஆகனும்னு தான விஜய் வந்ததே. அதான். அவன் நினைச்ச மாதிரி ஆகிடுச்சு. என்ன ஒன்னு அவன் எதிர்பார்த்தது அந்த பெரியமனுஷனே இதை நிறுத்தனும்னு. அதுக்குள்ளே விஜய் வொய்ப் முந்திகிட்டாங்க…” என்றான் பிரனேஷ்.
“நீ அந்த பொண்ணை அவன் வொய்ப்ன்னு சொன்னது அவனுக்கு தெரிஞ்சது நீ காலிடா. அவசரப்பட்டு அவன்கிட்ட சொல்லிறாத…”
“எனக்கென்ன பைத்தியமா? எப்ப அவன்கிட்ட எப்படி பேசனும்னு எனக்கு தெரியாதா? உன்னை மாதிரியா உளறிட்டு மாட்டிக்க போறேன்…” என சொல்லிவிட்டு அங்கே நடப்பதை பார்க்க ஊரார் வேறு பேச ஆரம்பித்தனர்.
“இது இப்படித்தான் ஆகும்னு நாங்க அப்பவே நினைச்சோம்…” என்று ஆளாளுக்கு விஜய்யின் வருகையை வைத்து ஒருபக்கம் பேச அதையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் அருமைநாயகம் நிலைகுலைந்து போனார்.
அவர் எது நடக்க கூடாதென நினைத்திருக்க அதுவே இங்கே அரங்கேறி இருந்தது.
“இன்னும் இவருக்கு என்ன வீம்பு? அந்த புள்ளை உரிமையோட வந்திருக்குது. அதை விட்டுட்டு பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்த்தா நடக்குமா? அதான் அந்த பொண்ணே வேண்டாம்னு சொல்லிருச்சு…” என்று பேச்சுக்கள் இன்னும் இன்னும் திசைமாறிக்கொண்டே இருந்தது.
விஜய்யின் மேல் உள்ள விருப்பத்தால் தான் பவித்ரா இந்த திருமணத்தை நிறுத்தியதை போல அவர்கள் பேச தலைசுற்றி நின்றார் அருமைநாயகம்.
பெற்றவர்களை விட அவர் தான் தலைகுனிந்து நின்றார். யாருக்கும் பதில் சொல்லமுடியவில்லை. பேசுபவர்கள் பேச்சையும் நிறுத்த முடியவில்லை.
“ஜோதி…” என மகனை பாவமாய் அழைத்தவருக்கு சலசலவென வியர்க்க மகன் சென்று தாங்கிக்கொண்டான்.
“அப்பா…” என்று அவரை பரஞ்ஜோதியும், பழனியப்பனும் ஆளுக்கொரு பக்கமாய் பிடித்துக்கொள்ள விஜய்யின் கண்களுக்குள் தான் அன்று நிராதரவாக நின்றது தான் தோன்றியது.
மாப்பிள்ளை வீட்டார் அத்தனை ஆவேசத்துடன் சண்டையிட அமைதியாய் இதை பார்த்துக்கொண்டிருந்தவனின் முதுகை துளைத்தது ஒருவரின் பார்வை.
“விஜய்…” என்ற அழைப்பும் கூட தீனமாக கேட்க திரும்பவே இல்லை இவன்.
உடல்மொழியில் அத்தனை இறுக்கம். அனலின் மேல் கொதிக்கும் இரும்பாய் நின்றான்.
எதற்கும் இறங்குவதோ இளகுவதோ இல்லை என்பதை போலவே அவன் நின்றிருக்க இங்கே மாப்பிள்ளை வீட்டார் சண்டையோடு கலைந்து சென்றார்கள். அவர்களுடன் ஊராரும் ஒருசிலர் கிளம்பிவிட்டார்கள்.
“அண்ணே உட்காருங்க. இந்தாங்க தண்ணிய குடிங்க…” என பழனியப்பன் ஒவ்வொன்றாய் நீட்ட அத்தனையையும் வீசி எரிந்தார் அருமைநாயகம்.
மேடையை விட்டு கீழே வந்து ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டார். நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் இப்போது அவரை சூழ்ந்து நிற்க மேடையில் விஜய் நின்றுகொண்டு இருந்தான்.
“அவள வீட்டுக்கு கிளம்ப சொல்லு…” என்று அருமைநாயகம் பல்லை கடித்துக்கொண்டு சொல்ல,
“இங்க பாருப்பா நாயகம். இத்தனை நடந்த பின்னாலையும் இன்னும் பிடிவாதமா நீ இருக்கறது சரியில்ல. அந்த தம்பியே வந்திருக்குது. நம்ம குடும்பம் மட்டும் தான் இருக்கோம். பேசாம சத்தமில்லாம கோவில்ல வச்சு கல்யாணத்தை முடிச்சு பொண்ணை அவரோட வனுப்பி வச்சிடறது தான் முறை…”
சொந்தங்களில் முக்கியமானவர் சொல்ல அவரின் பேச்சை அத்தனைபேரும் ஆமோதித்தது தான் இன்னும் ஆத்திரத்தை கிளப்பியது.
“என்ன விளையாடுறீங்களா? யாருக்கு யார் வீட்டு பொண்ணை தரது?…” என்று மீண்டும் எழுந்து நின்று எகிற ஆரம்பித்துவிட்டார் அவர்.
அதற்கு மேலும் அங்கிருக்க விரும்பாதவன் போல முகத்தை சுழித்தபடி கீழே இறங்கி வந்தவன்,
“ஆகாஷ் கிளம்பலாம்…” என்றான் சத்தமாக.
“தம்பி ஒரு நிமிஷம்…” என ஒருவர் அழைக்க அவரை திரும்பி பார்த்தான் விஜய்.
“சொல்லுங்க…” என பார்க்க,
“நாங்க உங்களை பத்தி தான் பேசிட்டு இருக்கோம். நீங்க கிளம்பலாம்னு சொன்னா என்ன அர்த்தம்?…”
“என்ன அர்த்தம்ன்னா? கிளம்பறேன்னு அர்த்தம். நான் என் வேலையை பார்க்க போக வேண்டாமா?…” என்று எதிர்கேள்வி கேட்க அவனை எந்தவகையில் எடுப்பதென்றே புரியாமல் பார்த்தார்கள் அனைவரும்.
“நான்தான் சொன்னேன்ல, இவன் சாமானியப்பட்டவன் இல்லன்னு. நினச்சத சாதிச்சுட்டான்ல. அதான் கிளம்பறான்…” என அருமைநாயகம் குதிக்க,
“அட என்னப்பா நீ வேற சும்மா சும்மா கத்திக்கிட்டு. இப்ப சண்டைக்கு நிக்கிற நேரமா?…” என அலுத்துக்கொண்டார் அந்த குடும்பத்து மூத்தவர்.
“இங்க பாருங்க தம்பி…” என விஜய்யிடம் திரும்ப,
“அப்ப இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன். நீங்க பாருங்கன்னு மட்டும் தான் சொல்றீங்க. இன்னும் எப்படி பார்க்கனும் உங்களை?…” என்று இடக்காய் கேட்க அயர்ந்து பார்த்தார் அவனை.
“ப்ச், இது வேலைக்காகாது. நீங்க இருங்க சித்தப்பு நான் பேசறேன்…” என வேறொருவர் விஜய்யிடம் வந்தார்.
“இங்க பாருங்க தம்பி, ஆனது ஆகிபோச்சு. நீங்களும் வந்ததும் வந்துட்டீங்க. பிரச்சனை எல்லாம் போதும். இப்ப சுமூகமா போவோமா?…”
“எங்க போகனும் சுமூகமா? நான் ஊருக்கு போக வேண்டாமா? உங்க கூட வந்தா என் பொழைப்பை யார் பார்க்கிறதாம்?…” என்றான் அவன் பதிலுக்கு.
“சுத்தம், தம்பி நல்லா பேசறீங்க…”
“ஓஹ், அதுவே இப்பத்தான் தெரியுதா?…” என அதற்கும் அவன் ஒரு இக்கு வைக்க,
“அட என்னென்னே இவன் எகனைக்கு மொகனையா பேசிட்டு இருக்கான்?…” என்றுவிட்டார் விஜய்யிடம் பேசியவர்.
“பிரனேஷ், ஆகாஷ் டைம் ஆகுதுடா. கிளம்புவோம்…” என மீண்டும் இரண்டடி முன்னால் போக,
“டேய் ஒரு நிமிஷம் நில்லுடா. அவங்க என்ன சொல்ல வராங்கன்னு கேளேன்…” என்றான் ஆகாஷ்.
“என்ன சொல்ல வராங்கன்றதை சட்டுன்னு சொல்லனும். இவங்க என்னன்னா இழு இழுன்னு கைய்ய புடிச்சு இழுத்தியா பஞ்சாயத்தை பண்ணிட்டு இருக்காங்க. எனக்கு வேலைவெட்டி இல்லயா? நாள் பூராம் நின்னு பாடம் எடுத்தா தான் சம்பாத்தியம் எனக்கு…” என்றவன்,
“உட்கார்ந்த இடத்துல இருந்து நாலுவாய் அரிசியை அளந்து போடறவங்களுக்கு உழைப்போட அருமை பெருமை எல்லாம் தெரியுமா என்ன?…” என வேண்டுமென்றே குத்திக்காட்டி பேசி இன்னுமே அருமைநாயகத்தின் பிபியை ஏற்றினான்.
“ப்ச், எனக்காகடா…” என அவனருகே வந்து நின்றான் பிரனேஷ்.
“நீங்க சொல்றதை தான் சட்டுன்னு சொல்லுங்களேன்…” என ஆகாஷ் முடுக்க அவர்களும் தலையாட்டினார்கள்.
ஆனால் அந்த பேச்சே அருமைநாயகத்திற்கு பிடிக்கவில்லை. அப்படியென்ன இவன் பெரிய இவன். இவனுக்கு பயந்து பேசுவது என்று முறைப்புடனே நின்றார்.
“இங்க பாருங்க தம்பி, முடிஞ்சத விடுங்க. போதாத நேரம் அப்படி ஆகிருச்சு. இப்போ நல்ல மனசோட பொண்ணை கல்யாணம் செஞ்சு தரோம்….” என பெரியவர் சொல்லவும்,
“யார் பொண்ணை?…” என்றான் விஜய்.
“உங்க மாமா பொண்ணை தான்…”
“யார் மாமா?…”
“இவர் தான் தம்பி…”
“இவர் யாருன்னே எனக்கு தெரியாது. இவருக்கு நான் யாருன்னு தெரிஞ்சா சொல்ல சொல்லுங்க பார்ப்போம்…” என விஜய் மீண்டும் அருமைநாயகத்தை பார்க்க,
“நீ யாரோ தான்டா. எப்பவுமே நீ எங்களுக்கு யாருமில்லை. என் பொண்ணும் உனக்கில்லை…” என்று அவர் பொறுமையிழந்து கத்த,
“தட்ஸ் இட்…” என கையை விரித்தவன் ஒரு தோள் குலுக்கலுடன் கூலரை கண்களுக்கு அணிவித்துக்கொண்டே கையை தட்டிவிட்டு விறுவிறுவென வெளியேறிவிட்டான்.
சென்ற வேகத்தில் வெளியே இருந்த டிஜிட்டல் பிளக்ஸ் போர்டை எட்டி உதைத்தவன் மீண்டும் மண்டபத்தின் வாசலில் நின்று,
“யோவ் மாமா. இன்னைக்கு நடந்தது சாம்பிள் தான். திரும்ப மாப்பிள்ளை பார்க்கறேன், கல்யாணம் பேசறேன்னு நீ பேசு. அன்னைக்கு வருவேன், கண்டிப்பா….” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு அவன் வெளியேற அவனின் ஆவேசத்தில் அத்தனை பெரும் நிலைகுற்றி போய் பார்த்தார்கள்.
மொத்த நிம்மதியும், சந்தோஷமும் வற்றி போக தொய்ந்து போய் அமர்ந்தார் அருமைநாயகம்.