“ஹேய் கேர்ள், என்ன ட்ரீமா?…” என்றான் அவளின் கன்னத்தை தட்டி.
“ஹ்ம்ம், எப்படி சொல்லன்னு தெரியலை. அதை எக்ஸ்ப்ரெஸ் பண்ண தெரியலை. ஆனா ரொம்ப சந்தோஷமா இருக்குது…” அவளின் கண்கள் கூட லேசாய் கலங்கிவிட்டது.
பவித்ராவின் பேச்சில் பதிலின்றி அவளின் முகத்தை சிறுபுன்னகையுடன் பார்த்திருந்தான் விஜய்.
அவளின் சின்ன சின்ன விஷயங்களும் தன் இதயத்தில் எத்தனை முக்கியத்துவம் பெறுகிறது என ஆழ்மனதினால் உணர்ந்துகொண்டிருந்தான்.
சிறிது நேர மௌனம் இருவரையும் ஆட்கொள்ள பிரனேஷ் வந்துவிட்டான் அவர்களை சாப்பிட அழைக்க.
அன்றைய நாள் மாலை வரை அங்கேயே தான் கழிந்தது. அங்கிருந்த ஒவ்வவொரு இடத்திற்குள்ளும் பல கதைகள், அவை நினைவுகளாய் அவர்களின் மனதில்.
மாதவன் மூலம் தான் அந்த ஆயுர்வேத ஆசிரம மருத்துவமனையை அறிந்திருந்தார்கள்.
அதன் பின்னர் மதுவந்தி, விஜய் தொடங்கி அவனின் உறவுகள், நட்பின் இழைகள் என இப்போது வரை தொடர்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
“என்னம்மா? இந்த இடம் பிடிச்சிருக்கா? திரும்ப திரும்ப சுத்தி பார்த்துட்டே இருக்க?…” என்றான் பிரனேஷ்.
“ஆமாண்ணா, நல்லா இருக்குது…” என்றாள் பவித்ரா.
அதற்குள் ஆகாஷ், அவனின் குடும்பம் ஜெகன், ஜோதி, ரஞ்சனி என சூழ்ந்துகொண்டார்கள்.
விஜய் தாளாளர் மெய்யப்பனிடம் பேசியபடி இங்கேயும் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.
பார்வதி, வசந்தி, பழனியப்பன் மூவரும் நெடுமாறனுடன் அமர்ந்து மாதவனிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
ஜெகனின் மகள் தான் சத்தமில்லாமல் அவனின் போனில் இருந்து வீடியோகாலில் அருமைநாயகத்திற்கு அழைத்துவிட்டாள் அவன் சொல்லியதன் பெயரில்.
ஏற்கனவே கடைக்கும் செல்லாமல் வீட்டிற்குள் அடைந்துகிடந்தவருக்கு ஊரார், உறவுகளிடமிருந்து போன் மேல் போன். ‘இப்படியாமே? நீங்க போகவில்லையா?’ என கேட்டு.
தன்னை விட்டுவிட்டு சென்றுவிட்டனர் என்றா சொல்லமுடியும்? அங்கேயும் அவர்களிடத்தில் பெருமை பேசியிருந்தார்.
“ச்சீ, ச்சீ, அந்த கருமத்தை போய் வேற பார்க்கனுமா? ஏதோ போனா போகுதேன்னு இவங்களை அனுப்ப சம்மதிச்சேன். நான் போகலையே…” என்று தான் பேச,
“இல்லையே உங்களை வரக்கூடாதுன்னு அந்த பையன் சொல்லிட்டான் போல?…” என்றுவேறு கேட்டு அவரின் பிபியை கூட்டியிருந்தனர்.
இப்போது இப்படி போன் வரவும் அதுவும் மருமகனின் எண்ணிலிருந்து வரவும் எடுக்காமல் இருக்கமுடியவில்லை.
அட்டன் செய்ததுமே அங்கே அவர்கள் அடிக்கும் அரட்டையிலும், அவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியிலும் அடிவயிறு காந்த காந்த புகைந்துபோனார்.
தான் இங்கே தனியாக இருக்க அதை பற்றி கொஞ்சமும் எண்ணமில்லாது இப்படி சந்தோஷமாக இருக்கின்றனரே என்று பொசுங்கி போனார்.
அதிலும் வசந்தி முதற்கொண்டு தன் குடும்பத்தினர் மாதவனிடம் தன்மையாக எதையோ பேசிக்கொண்டிருக்க வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தார்.
போனில் ஒவ்வொருவருக்கும் காண்பித்து காண்பித்து கடைசியாக ஜெகன் எதிர்பாராதவிதத்தில் போனை விஜய்யின் கையில் கொடுத்துவிட்டாள் ஜெகனின் மகள்.
“யாருடா?…” என கேட்டுக்கொண்டே அவன் வாங்கி பார்க்க திரையில் அருமைநாயகம்.
“யோவ் மாமா, நீயா?…” என்றவன்,
“கொஞ்சம் கூட வெக்கமே இல்லைல. இப்பவும் இங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க போன் போட்டு பார்க்குறியே?…” என்று திட்டிவிட,
“என்ன? டேய்…” என்று குதித்தவரை கண்டுகொள்ளாதவன்,
“போனை வை…” என்று கட் செய்துவிட்டான்.
அவன் திடீரென பேசவும் திகைத்து போனவர் தான் திட்டும் முன் போனை வேறு அவன் வைத்துவிட அவனை பேசமுடியவில்லையே என்னும் ஆத்திரத்துடன் மீண்டும் ஜெகனின் எண்ணிற்கு அழைத்துவிட்டார் அருமைநாயகம்.
“சொல்லுங்க மாமா, போன் பண்ணிருக்கீங்க? என்ன இருந்தாலும் உங்க மனசே மனசு. எங்களை திட்டி அனுப்பினாலும் இங்க நடக்கறதை பார்க்க உங்க மனசு தவிக்குது இல்லையா. ரொம்ப பெருமையா இருக்கு….” என்றான் ஜெகன் நக்கலாக.
“மாப்பிள்ளை, இல்லை…” என்று அவர் பேசும் முன்,
“மாமா உன் பொண்ண குடு. அட ஆமா அத சொல்லி குடு. இது சாமி போட்ட முடிச்சு…” என்று ஆகாஷ், பிரனேஷ் இருவரும் பாட்டு பாட கூடவே ஜோதியும் சேர்ந்துகொண்டான்.
கோபமாய் பேச முயன்றவரை பேச கூட விடாமல் இங்கே விசிலும் பாட்டும் பறந்தது.
இவர்களின் அழிசாட்டியத்தை பார்த்தபடி விஜய் சிரிக்க அவனையும் கை நீட்டி அழைத்தார்கள். அவன் கையைசைத்து சிரித்தான்.
“இப்ப ஏன் அவரை வெறுப்பேத்தறீங்க? போதும்…” என ரஞ்சனி சொல்ல,
“பார்ரா, இது தெரிஞ்சிருந்தா உன்னையும் விட்டு வந்திருப்போம்…” என்றான் ஜெகன்.
வெறுத்து போய் போனை கட் செய்துவிட்டார் அருமைநாயகம். அதற்கும் ஒரு ஆர்ப்பரிப்பு எழுந்தது அங்கே.
மாலை கவிழவும் அனைவருமே ஆகாஷின் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். இரவு சடங்கிற்கு என விஜய்யின் வீட்டில் அவனறையை அலங்கரிக்கவேண்டும் என ஆகாஷ் சொல்ல மறுத்துவிட்டான் அவன்.
இன்னும் பழனியப்பன், வசந்தி, பார்வதி, நெடுமாறன் என அவன் யாரையும் அழைக்கவில்லை அங்கே. ஜெகன் சொல்லிவிட்டான் அவனாக அழைத்தபின் போகலாம் என்று.
அதற்காகவே முதலில் விஜய் வீட்டிற்கு விளக்கேற்ற என பவித்ராவும் விஜய்யும், ஜெகன் ரஞ்சனியுடன் மட்டும் சென்றுவிட்டு ஆகாஷ் வீட்டிற்கு வந்துவிட்டார்கள்.
விஜய்யின் மனதிற்கேற்ப அங்குள்ளவர்கள் நடந்துகொள்ள விஜய்க்குமே தான் அதிகப்படியாக செய்கிறோமோ என்ற எண்ணம் ஒருநொடி வந்தது தான்.
ஆனாலும் தன் வீட்டிற்குள் நுழைந்ததும் அது எல்லாம் மாயமாய் மறைந்தே போனது.
இரவு உணவும் ஆகாஷ் வீட்டில் வைத்து முடித்துக்கொள்ள சிறிது நேரம் பேசிவிட்டு விஜய் தன் வீட்டிற்கு கிளம்பும் நேரம் ஜெகன் தனியே அழைத்து பேசினான்.
“நாளைக்கு காலையில ஒரு சடங்கு இருக்கும் போலடா. இது வழக்கமா நடக்கறது தான். காலையில அஞ்சுமணிக்கு அத்தைங்க வருவாங்க. பவித்ராவை வெளில கூட்டிட்டு வர முடியாது அங்க உன் வீட்டுல வச்சு தான் செய்யமுடியும்…” என்றதும்,
“ஓகே, வரட்டும். அதனால என்ன?…” என்றுவிட்டான் விஜய்.
“நிஜமா தானா? உனக்கு ஒண்ணுமில்லையே?…” என ஜெகன் கேட்க,
“ண்ணா, அதான் சொன்னேன் தானே? அப்பறம் என்ன திரும்ப? திரும்பவும் நீங்க கேட்டா மாத்தியா சொல்ல போறேன்?…” என்று அவன் சொல்ல,
“ஏன்டா நிஜமான்னு கேட்டா ஆமான்னு சொல்லிட்டு போ. அதுக்கு ஏன் சுத்தி வளைச்சு என்னை திரும்பி கேள்வி கேட்கற?…” என நொந்துகொண்டான் ஜெகன்.
“ஓகே, விஜய். கிளம்பு. நல்லநேரம்ன்னு அம்மா சொன்னாங்க…” என ஆகாஷ் வந்தான்.
“ஆகாஷ் இத்தனை பேர் இங்க இருக்கோம். உனக்கொன்னும்…” என ஜெகன் அனைவரும் தங்குவதை பற்றி கேட்க விஜய் சிரித்தான்.
“ண்ணா, பதினாலு வயசு பொண்ணுக்கு அப்பாவா இருந்துட்டு இப்படி பேசறீங்க? என்னண்ணா நீங்க?…” என்று ஆகாஷ் அவனை வாரிவிட,
“இப்ப நான் என்ன கேட்டுட்டேன்? ஏற்கனவே பிரனேஷ் பேமிலியும் இங்க தான் இருக்காங்க. நாங்களும். நேத்து அவசரத்துக்கு தங்கினது ஓகே. அப்பவே கேட்கனும்னு நினைச்சேன்…” என்று ஜெகன் சொல்லவும்,
“என்கிட்டே நீங்க கேட்கனுமா? நீங்க நம்ம வீட்டுக்கு வரவேண்டியது தான? எப்பவும் அங்க தான வருவீங்க?…” என சொன்னான் விஜய்.
“எப்பவும் வரதும் இதுவும் ஒண்ணா? அதுவும் இன்னைக்கு…” என்று சொல்ல விஜய்க்கு அவன் சொல்லியவிதத்தில் சிரிப்பு வந்தது.
“இன்னைக்கு நான் தான் வெட்கப்படனும். நீங்க ஏன் நெளியறீங்க?…” என ஜெகனின் இடுப்பில் கிள்ளிவைக்க,
“அப்ப நான் மட்டும் என்ன வெங்காயத்தொக்கா?…” என்று மறுபக்கம் ஆகாஷ் கிள்ள இருவரின் கையையும் தட்டிவிட்டான் ஜெகன்.
“உங்ககிட்ட வந்து சிக்கினேன் பாருங்க…” என தலையில் அடித்துக்கொண்டான் ஜெகன்.
“விஜய் நீ இன்னும் போலயா ராசா? அங்க அம்மா சத்தம் போடறாங்க. கிளம்பு கிளம்பு…” என்று பிரனேஷ் வர,
“மாப்பிள்ளை…” என்று ஜோதியும் பின்னே வர,
“சொல்லுங்க மச்சான்…” என அவனை இடித்துக்கொண்டு விஜய் நிற்க,
“இவர் வேற…” என ஜெகன் பக்கம் நகர்ந்தான் ஜோதி.
“என்னவோ உங்களை பார்த்தாலே காந்தம் மாதிரி ஓட்டிடறேன்…” என்று விஜய் கேலி பேச இருவருக்குள்ளும் இலகுவான பேச்சுக்கள் போய்க்கொண்டிருந்தது.
“விஜய், உன் வொய்ப்…” என்று பிரனேஷ் அங்கே பூஜையறைக்கு அழைத்து செல்லப்பட்ட பவித்ராவை காண்பிக்க அவளை பார்த்து ஒரு மென்முறுவல் விஜய்க்கு.
“ஓகே டா. பை குட்நைட்…” என்று விஜய் சொல்லி கிளம்ப,
“குட்நைட்டா…” என்றனர் மற்ற நால்வரும்.
“உங்களுக்கு சொன்னேன். போங்க போங்க…” என கையை ஆட்டியபடி விஜய் கிளம்பிவிட்டான் அவனின் வீட்டிற்கு.
“வாங்கடா இன்னைக்கு நமக்கு ஹால் தான்….” என அங்கே படுக்கையை போட்டனர் ஆண்கள்.
ஆகாஷ் வீடு மிகப்பெரியது தான். அதனால் அத்தனை பேர் வந்திருந்தும் சமாளிக்க முடிந்தது அவர்களால்.
தன் வீட்டிற்கு வந்தவன் தண்ணீரை நிரப்பி அறைக்குள் வைத்துவிட்டு பாலை காய்ச்சி பிளாஸ்கில் ஊற்றினான்.
வெளியே கொலுசு சப்தம் கேட்க அங்கே வாசலில் ஆகாஷின் தாயும், ரஞ்சனியும் ஏதோ சொல்லிக்கொண்டிருக்க தலையசைத்தபடி நின்றாள். கையில் இருந்த பிளாஸ்க்கை டேபிளில் வைத்தவன் வாசலுக்கு வந்தான்.
“வாங்க…” என அவர்களை அழைக்க,
“இல்லை தம்பி. நாங்க கிளம்பறோம்…” என சொல்லிவிட்டு சென்றுவிட பவித்ரா அவர்களை பார்த்துவிட்டு விஜய்யிடம் திரும்பினாள்.
“உள்ள வான்னு சொன்னா தான் வருவியா பழனி?…” என்றான் விஜய்.
அவளுக்கு அத்தனை நடுக்கம். மறக்க முயன்றும் அவனின் முதல்முத்தம் ஞாபகத்திற்கு வர பயந்துகொண்டே உள்ளே வந்தாள்.
அவளின் கை பிடித்து உள்ளே அழைத்தவன் கதவை பூட்டிவிட்டு வருவதற்குள் ஆளில்லா அந்த வீட்டை பார்வையால் அளவிட்டாள்.
சென்னையில் கூட இத்தனை நாள் அவனுடன் இருந்த அந்த தனிமை அச்சுறுத்தவில்லை. இன்றைக்கு இந்த நாள் அவளை வெகுவாய் சோதித்தது.
“என்ன அப்படியே நின்னுட்ட? ஈவ்னிங் வரப்போ கூட இந்த வீட்டை நீ பார்க்கலை தானே?…” என்றவன் முதலில் அவளுக்கு குடிக்க தண்ணீரை தந்தான்.
“என்ன கைல?…” என கேட்க அதுவும் ஒரு ப்ளாஸ்க்.
“பால் குடுத்தாங்க. ஆறிடும்னு இதுல ஊத்திட்டாங்க. இங்க வந்து கிளாஸ்ல மாத்திக்க சொல்லி சொன்னாங்க…” என்றாள்.
“ஓஹ், நானுமே காய்ச்சி ப்ளாஸ்க்ல தான் ஊத்திருக்கேன்…” என்று அவளிடம் எடுத்து காண்பித்து சிரித்தான்.
இருவர் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் அந்த வீட்டின் கலைநயத்தில் மாலை வரும் பொழுதே மயங்கி இருந்தாள் அதன் அழகில். அப்போது கவனிக்காத ஒன்று இப்போது காதில் விழ என்னவென்று புரியவில்லை.
“ஏதோ பாட்டு கேட்டுட்டே இருக்கே?…” என அவனிடம் கேட்க,
“ஹ்ம்ம் ஆமா, வா பார்க்கலாம்…” என முன்னே நடக்க அவனுடன் சேர்ந்து சென்றாள்.