உருக்கம் – 23
உறக்கம் வராமல் கணினியின் முன்பு அமர்ந்திருந்த விஜய் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பவித்ராவை திரும்பி பார்த்தான்.
மழையின் போது வேறு வழியின்றி அவளை தன் வீட்டிற்கு அழைத்து வந்தபொழுதும் சரி, அவள் தான் இனி என்று அழைத்து வந்தபொழுதும் சரி அவள் அப்படி உறங்கி கண்டதில்லை.
எப்போதும் அவள் இருந்த அவனறை ஒருக்களித்து தான் திறந்திருக்கும். புரண்டுபடுப்பவளின் கொலுசின் சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கும் ஹாலில் படுத்திருப்பவனுக்கு.
அதை கொண்டு ஓரளவு கண்டுகொண்டிருந்தான் அவளின் உறக்கமில்லா இரவுகளை.
இப்போது மிதமான புன்னகையும் கூட அவளை பார்த்ததும். இரவுமுழுவதும் எத்தனை பார்த்து பார்த்து, அச்சோ அச்சோ. நினைக்க சிரிப்பு பொங்கியது விஜய்க்கு.
தண்ணீர் தாகமெடுக்க பாட்டிலில் தண்ணீரும் முடிந்திருந்தது. நேரத்தை பார்த்தான். நான்கரையை தொட்டிருக்க எழுந்து கதவை திறந்து வெளியே வந்தான் விஜய்.
சடங்கு என்று எப்படியும் ஐந்துமணி ஆகிவிடும் என்பதால் மெதுவாக தான் அதற்கு வருவார்கள் என்று நினைத்தபடி கிட்சனிற்கு வந்தான்.
ஏற்கனவே ஜெகனிடம் சொல்லி ஆகாஷ் வீட்டில் கொடுத்திருக்கும் சாவியை கொண்டு திறந்து வருமாறு சொல்லிவிட்டிருக்க தான் போய் திறக்கவேண்டிய அவசியமில்லை என்று எண்ணியவன் பவித்ராவை இப்போதே எழுப்பி கிளப்பவேண்டும் என நினைத்தான்.
தண்ணீர் பாட்டில் நிரம்ப தானும் அங்கேயே குடித்துவிட்டு மீண்டும் தண்ணீரை நிரப்ப கதவு திறக்கும் ஓசை கேட்டது.
எட்டி பார்த்தவன் அங்கே ரஞ்சனியுடன் வசந்தி வந்திருக்க அவள் இன்னொரு அறையை காண்பித்துக்கொண்டிருந்தாள் அவருக்கு.
“வசுமா, இந்த ரூம்ல வச்சு பண்ணிடலாம். நான் போய் அம்மாவை கூட்டிட்டு வரேன். இங்க இருங்க வந்திடறேன்…” என்று ரஞ்சனி செல்ல,
“பூ மறந்துட்டோம் பாரு. அதையும் எடுத்துட்டு வா. நான் இங்க மஞ்சளை கலக்கறேன்…” என்று சொல்லி வசந்தி அந்த அறை வாசலில் நிற்க விஜய் செல்ல முடியாது நின்றான்.
மெல்லிய விளக்கு வெளிச்சம் என்றாலும் மேலே சட்டையும் இல்லாது, இப்படி சிறிய ஷார்ட்ஸில் எப்படி அவர்களை கடந்து தன்னறைக்கு செல்ல என இருட்டில் சங்கோஜப்பட்டவாரே வசந்தி உள்ளே செல்ல காத்திருந்தான்.
ரஞ்சனி செல்லவும் கதவு தானே மூடிக்கொள்ள வசந்தி வீட்டை சுற்றிலும் பார்த்துக்கொண்டே அந்த அறை வாசலிலேயே நின்றார்.
“மாறா…” என்னும் மதுவந்தியின் குரல் சட்டென ஒலிக்க விஜய்யும் இதை எதிர்பார்க்கவில்லை.
“நேரமாகிடுச்சோ?…” என முணங்கியபடி மெல்ல எட்டி பார்க்க வசந்தி அரண்டு போய் நின்றிருந்தார்.
“மாறா…” மீண்டும் மதுவந்தியின் குரல்.
“யாரு. யாரு பேசறீங்க? யாரு?…” என வசந்தி மெல்ல கேட்க விஜய்க்கு லேசாய் சிரிப்பு வந்தது.
என்னதான் செய்கிறார் என பாப்போம் என்று கவனித்தபடி அவன் அங்கேயே நின்றிருக்க மதுவந்தி, மாதவனின் அறை அருகே வரவும் சென்ஸாரில் அந்த அறையின் விளக்குகள் ஒளிர பின்னால் பயந்து நகர்ந்தார் வசந்தி.
மீண்டும் அணைந்துபோனது. பார்த்ததுமே பயம் பிடிக்க வசந்திக்கு கை கால்கள் எல்லாம் உதறியது.
“ரஞ்சனி, ரஞ்சனி…” என அலறிக்கொண்டே வாசலுக்கு ஓட கதவை திறக்கமுடியவில்லை.
“மாறா நேரமாச்சுப்பா. அம்மா சொல்றேன்ல…” என்றதுமே இன்னுமே சத்தமெடுத்து ஓவென அலற இங்கே பவித்ராவின் அறைக்குள் எதுவுமே கேட்கவில்லை.
அவரின் பயத்தை பார்த்துக்கொண்டே நின்ற விஜய் ஒன்றும் சொல்லவில்லை. கடைசியாக தன்னை வேதனையுடன் கண்ட தாயின் முகமே கண்ணுக்குள் வந்து நிற்க பார்த்தபடி இருந்தான்.
அதற்குள் ரஞ்சனி வந்து கதவை திறந்ததும் அலறிக்கொண்டு வெளியே ஓடினார் வசந்தி.
“வசும்மா, என்னாச்சு? என்னாச்சுன்னு கேட்கறேன்ல?…” என ரஞ்சனியும் அவரின் பின்னால் போக கதவும் அடைத்துக்கொண்டது. ஒரு பெருமூச்சுடன் தண்ணீரை எடுத்துக்கொண்டு தன்னறைக்கு சென்றான்.
வெளியே நடந்தது எதுவும் தெரியாமல் இன்னும் அசதியில் ஆழ்ந்த சயனத்தில் இருந்தாள் பவித்ரா.
“பழனி…” என்று அவளை நெருங்கி அணைத்துக்கொண்டவன் தன் மேல் புரட்டி நெஞ்சில் சாய்த்துக்கொள்ள,
“ஹ்ம்ம், டைம் ஆகிடுச்சா?…” என்றாள் முணுமுணுப்பாய்.
“ஆமா, எழுந்துக்கோ…” என்றான்.
“அப்போ இருந்து அத்தை கூப்பிட்டுட்டே இருக்காங்க. ஏன் அலாரம் ஆஃப் பண்ணலை?…” என்றும் கேட்க,
“பண்ணனும். நீ முழிச்சு வருவன்னு பார்த்தேன். தண்ணி இல்லையேன்னு ஃபில் பண்ண போனேன். நீ என்னடான்னா?…”
“ஹ்ம்ம், அம்மா வந்துருவாங்க. விடுங்க…” என்று அவனை விலக்கி எழுந்துகொள்ள பார்க்க,
“வந்து எழுப்பட்டும். அதுவரைக்கும் இப்படியே இரு…” என்று அவளை விடாமல் சாய்த்து பிடித்துக்கொண்டவன் கண்கள் லேசாய் மயங்க அப்படியே உறங்கியும் போனான்.
அவனின் கைகள் தளரவும் அவனை விட்டு விலகி எழுந்தவள் முதல்நாள் புடவையையே அணிந்துகொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
ஏற்கனவே விஜய் சொல்லியிருந்தவிதமாய் கணினியில் அலாரத்தை அமர்த்திவிட்டு வந்திருந்தாள்.
அவள் அறையை விட்டு வரவும் பார்வதி, ரஞ்சனியுடன் வரவும் சரியாய் இருந்தது.
“அப்புக்குட்டி…” என வேகமாய் ரஞ்சனி வர அவளின் கையை பிடிக்க போனவை கையில் இருந்த எண்ணெய் பாட்டிலால் தள்ளி நிறுத்தினார் பார்வதி.
“உதை வாங்குவ. இப்படிலாம் கட்டிபிடிக்க கூடாது. முதல்ல சடங்கு முடியட்டும்…” என்றவர் அவளின் கையில் இருந்த இரண்டு ப்ளாஸ்க்கையும் பார்த்துவிட்டு ரஞ்சனி காண்பித்த அறைக்குள் செல்லவும் ரஞ்சனி பவித்ராவிடம் திரும்பினாள்.
“என்னடி இது? நேத்து ஒன்னு தான கொண்டு வந்த?…” என கேட்க,
“இங்க அவங்க ஏற்கனவே எடுத்து வச்சிருந்தாங்க. அதான் இன்னொன்னு…” பவித்ராவின் நாணமுகத்தை கண்டு சிரித்தபடி,
“ரெண்டும் காலியா?…” என்று கேலி செய்ய,
“ரஞ்சிக்கா…” என்று சிணுங்கியவள் அங்கே நிற்கமுடியாமல் ப்ளாஸ்க்கை எடுத்துக்கொண்டு கிட்சனுக்குள் நுழைந்தாள்.
“இப்பவே கிளீன் பண்ணனுமா? நீ வா. முதல்ல குளிச்சிடலாம்…” என்று அவளை அழைத்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தாள்.
அங்கிருந்த பாத்ரூமில் ஒரு ஸ்டூல் போடப்பட்டிருக்க பெரிய பக்கெட்டில் நீர் நிரப்பப்பட்டு அதில் மஞ்சள் தூவி, பூக்களும் உதிர்ந்துகிடந்தது.
“உட்கார் இதுல…” என்று அவளை அமர வைத்த பார்வதியிடம்,
“அம்மா எங்க பெரிம்மா?…” என்றாள் பவித்ரா.
“இங்க இருட்டுல கதவு தானா பூட்டிடுச்சுன்னு பயந்துட்டா போல. அலறிட்டே இருக்கா. என்ன எதுன்னு சொல்லவேமாட்டேன்றா. சரி இருன்னு சொல்லிட்டு வந்துட்டேன் நான்…” என்று அவளின் கன்னத்தில் மஞ்சளும், சந்தனமும் கலந்திருந்த கலவையை பூசினார்.
உள்ளங்கை நிறைய எண்ணெய் ஊற்றி பவித்ராவின் உச்சந்தலையில் வைத்தவர் நன்றாக தேய்த்துவிட்டார். தலைக்கு வெதுவெதுப்பாக கலந்திருந்த நீரை விட்டு ஊற்றியவர்,
“இதை எல்லாம் தேச்சு முடிச்சு குளிச்சு முடி அப்பு. புடவையெல்லாம் நனைச்சு விட்டுடு. பெரிம்மா வெளில இருக்கேன். கடைசி தண்ணிய கீழே விட்டுடாத. கூப்பிடு…” என்று சொல்லி பாத்ரூம் கதவை லேசாய் சாற்றிவிட்டு வெளியே வந்து அமர்ந்துகொண்டார்.
“ம்மா, எல்லாம் கொண்டுவந்துட்டேன்…” என ரஞ்சனி சொல்ல,
“அடுக்களையில கொண்டுபோய் வை…” என்று சொல்லிமுடிக்க பவித்ரா அழைத்துவிட்டாள்.
மீண்டும் உள்ளே சென்றவர் அவளுக்கு திருஷ்டி எடுத்துவிட்டு கடைசி தண்ணீரை மூன்றுமுறை அவளின் தலையை சுற்றி சுற்றியவர் சுவற்றில் வீசினார்.
“வெளில கட்டில்ல புடவை வச்சிருக்கேன். மாத்திக்கிட்டு வா…” என சொல்லி டவலை நீட்டிவிட்டு அடுக்களைக்கு வந்துவிட்டார்.
பவித்ரா வர அங்கே தாம்பாளத்தட்டில் புது புடவை, மஞ்சள், குங்குமம், வளையல், பூ என இருக்க எடுத்து அணிந்துகொண்டவள் தலையில் கட்டிய துண்டுடன் வந்தாள்.
“பெரிம்மா நல்லா இருக்கா?…” என வந்தவள் கேட்க,
“அழகா இருக்குடா அப்பு. சரி, சரி, அந்த டேபிள்ல எண்ணெய் வச்சிருக்கேன். உன் புருஷனை எழுப்பி குளிக்க சொல்லு. இன்னொரு தாம்பாளத்துல துணியும் இருக்கு. எடுத்துட்டு போய் குடு…” என்று சொல்ல அவற்றை எடுத்துக்கொண்டு வந்து விஜய்யை எழுப்பினாள்.
“என்ன பழனி? உன் சடங்கெல்லாம் முடிஞ்சதா?…” என கேட்டு அவன் கவிழ்ந்து படுக்க,
“எழுந்து வாங்க, குளிக்க சொன்னாங்க. பெரிம்மா…” என்று தட்டி எழுப்பினாள் அவனை.
“நானா? நான் எதுக்கு? இது உனக்குன்னு தான சொன்னாங்க அண்ணா?…” என்றான் படக்கென்று திரும்பி இடதுகையை முட்டிக்கொடுத்து ஒருசாய்த்து படுத்தபடி.
“மெதுவா தான் திரும்புங்களேன்…” என்றவள்,
“ப்ளீஸ், பெரிம்மா சீக்கிரம் வர சொன்னாங்க…” என்று அவனுடைய உடையையும் காண்பிக்க கதவின் பக்கம் பார்த்தான்.
“ஏன் டோர் ஓபன்ல இருக்கு?…” என கையை தூக்கி நெட்டிமுறித்தவன்,
“ஓகே, என்ன செய்யனும்?…” என கேட்கவும் பவித்ராவும் சொல்ல,
“குளிக்கறதுக்கு இவ்வளவா?…” என அலுத்துக்கொண்டே எழுந்து சென்றான்.
“நான் கிட்சன் போறேன்…” என சொல்லிவிட்டு செல்ல அவனும் தயாராகி வர பூஜை அறையில் ஏற்ற எல்லாம் தயாராக இருந்தது.
அமைதியாய் வந்து பவித்ராவின் இருக்கே அவன் நின்றுகொள்ள அவள் விளக்கேற்றி இறைவனை வணங்கினாள்.
“அவ்வளோ தானே?…” என்று தனது வாட்சில் நேரத்தை பார்த்தான். இன்னும் முழுதாய் விடியவில்லை.
“இல்லை, சாப்பிடனும்…” என ரஞ்சனி சொல்லவும்,
“எங்க உங்க வீட்டுக்காரர்?…” என்றான் அவளிடத்தில்.
“இன்னும் எழுந்துக்கலை. போய் தான் எழுப்பனும்…. (Zolpidem) ” என ரஞ்சனி சொல்ல,
“தம்பி முதல்ல சாப்பிட்டு முடிச்சு பக்கத்துல கோவிலுக்கு எங்கியாச்சும் போய்ட்டு வரனும்…” என்றார் பார்வதி.
“இந்நேரம் சாப்பிடனுமா?…” என விஜய் பவித்ராவை பார்க்க,
“கொஞ்சமா. சம்பிரதாயம்…” என்றாள் அவளும் கெஞ்சலாய்.
“ஹ்ம்ம்…” என்று சொல்லி டைனிங் டேபிளில் அமர இருவருக்கும் இலை போடப்பட்டது.
“இந்த நேரத்துல என்ன சமைச்சீங்க?…” என்றான் பார்வதியிடம்.
“நான் செய்யலப்பா. அப்புக்குட்டி தான் செய்யனும். அதான் பருப்பு சாதமும், பால்பாயாசமும் செஞ்சா…” என்று சொல்லி இலையில் கொஞ்சமாய் சாதம் வைத்து உளுந்தபருப்பு கடைசலை ஊற்றி நல்லெண்ணெய் விட்டார் அதில்.
“கொஞ்சம் சாப்பிடுங்க. சம்பிரதாயம் தான்…” என்று சொல்லி இருவரையும் சாப்பிடவைத்து பாயாசத்தையும் கொடுத்தவர் கோவிலுக்கு அனுப்பினார்.
“உங்க ஊர் சடங்கு எல்லாம் முடிஞ்சதா? இல்ல இன்னும் இருக்கா?…” என்றான் விஜய் காரில் சென்று திரும்பும் போது.
குரலில் அத்தனை நக்கல் வழிந்தது. பவித்ரா அமைதியாக வந்தாள். அவள் வசந்தி எதை பார்த்து பயந்தாரோ என்ற நினைப்பில் இதை கவனிக்காமல் வர,
“ஹேய் கேர்ள், என்ன நினைப்பு வேற எங்கையோ இருக்கே?…” என்றான் விஜய்.
“ஹாங், இல்லை. காலைல அம்மா வரலை. எதையோ பார்த்து பயந்துட்டாங்கன்னு பெரிம்மா சொன்னாங்க. இப்போ போய் பார்க்கவும் முடியலை. அதான் என்னவோன்னு யோசிக்கிறேன்…” என்றதும் விஜய்யின் இதழ்கள் லேசாய் கேலிச்சிரிப்புடன் வளைந்தது.