“என்ன சிரிக்கிறீங்க?…” என்றாள் அவள்.
“ஏன் சிரிக்க கூடாதா பழனி?…” என்றான் பதிலுக்கு.
“என்னவோ இருக்கு. ஆனா வாயை திறப்பீங்களா நீங்க?…” என்றவளை கண்டு சிரித்தவன்,
“ஓகே ஜெகாண்ணா வீட்டுக்கு போகனும். இன்னைக்கு நாம கிளம்பறோம். நாளைக்கு அங்க போய்ட்டு அங்க இருந்து சென்னை…” என்றான் அவளிடத்தில்.
“விடாம ட்ரைவ் பன்றீங்க? முடியுமா? ரெஸ்ட் வேண்டாமா?…” என கவலையுடன் அவள் கேட்க,
“சென்னை போய் சேர்த்து ரெஸ்ட் எடுத்துட்டா போச்சு…” என்றான் அவனின் இடதுகையை நீட்டி அவளின் உச்சந்தலையில் கைவைத்து லேசாய் ஆட்டிக்கொண்டே.
“மாமா, அவங்களை நம்மோட கூட்டிட்டு போக முடியாதா?…”
முதல்நாளில் இருந்தே யோசித்துவைத்தது. இப்போது அவனிடம் கேட்டுவிட விஜய்க்கும் ஆசை தான்.
“எனக்கு மட்டும் தனியா இருக்கனும்னு ஆசையா? ஆனா வரமாட்டாங்க. இப்போ வீட்டுக்கு நம்மோட வச்சாலும் ஒரு நர்ஸ் வேணும் கண்டிப்பா. வீட்டுக்குள்ளயே நாலு சுவத்துக்குள்ள தான் இருக்கனும். அப்பா அதை விரும்ப மாட்டாங்க…”
“ஏன் நானும் இருக்கேனே? பார்த்துக்கலாம்…”
“இல்லம்மா, அப்பா வரமாட்டாங்க. ஒரு டாக்டர் சப்போர்ட் அவங்களுக்கு எப்பவும் இருக்கனும். இதுக்கெல்லாம் மேல ஒன்னு, அப்பா இந்த ஊரை, அந்த ஆஷரமத்தை தாண்டி எங்கயும் வர விரும்பமாட்டாங்க…” என்றவன்,
“எங்களுக்குள்ள இது ஒரு பழக்கம். இன்னொருத்தர் விருப்பத்துக்கு தடை சொல்லவும் மாட்டோம். அதே நேரம் திணிக்கவும் மாட்டோம்…” என முடித்தான்.
“நான் உங்க விருப்பம் இல்லை தானே அன்னைக்கு?…” என்றாள் பவித்ரா.
“எஸ், டெபனட்லி. அன்னைக்கு நீ அந்த குடும்பத்து பொண்ணுன்றதே நீ வேண்டாம்னு சொல்ல எனக்கு ரீசனா இருந்துச்சு. அதை நான் மறுக்கமாட்டேன். ஆனா இன்னைக்கு அப்படி இல்லை…” என்று சிரித்தான்.
அவன் இன்னும் வேறு ஏதாவது சொல்வான என அவனின் முகத்தையே பார்த்தவளை திரும்பி பார்த்து புருவம் உயர்த்த ஒன்றுமில்லை என தலையசைத்தாள்.
“ஒஹ்…” என்று அவன் தோள் குலுக்கிவிட ‘ஐயோ’ என்றானது இவளுக்கு.
“இன்னும் வேற ஒன்னும் சொல்லலையேன்னு தோணுச்சு. ஏதாவது சொல்லுவீங்களான்னு பார்த்தேன்…” என உண்மையை ஒப்புக்கொள்ள ஒரு இதழ்பிரியா புன்னகை விஜய்யினிடத்தில்.
“சொல்ல கூடாதுன்னு நினைப்பேன். ஆனா நீங்க இப்படி செய்யவும் தானா சொல்லிடறேன்…” என்று பவித்ரா தன் தலையில் தட்டிக்கொள்ள,
“ஓகே, சொல்லிட்டா போச்சு…” என விஜய் சொல்லவும் அவன் பக்கம் ஆர்வத்துடன் திரும்பி அமர்ந்தாள் அவள்.
“ஆனா இப்போ இல்லை…”
“பின்ன?…” பவித்ராவின் முகம் புஸ்சென்று போனது.
“கிட்ட வா சொல்றேன்…” என்றவன் ரகசியமாய் அவள் பக்கம் சாய்ந்து,
“இந்த பார்த்து, பார்த்து. அச்சோ இதெல்லாம் என்னைக்கு உன் வாய்ல இருந்து வராம இருக்கோ அன்னைக்கு…” என்று குறும்புடன் சொல்ல,
“போங்க, போங்க…” என அவனின் தோளில் தட்டினாள்.
“பின்ன என்ன? நேத்து இருந்ததுக்கு சிரிப்பு மூட்டிட்டே இருந்த நீ என்னை. கொஞ்சமாச்சும் பீல் பண்ணவாவிட்ட?…” என விஜய் அவள் பேசியதை எல்லாம் சொல்லி சொல்லி சிரிக்க காரை விட்டு இறங்கமுடியாமல் அவன் பேச்சையும் கேட்கமுடியாமல் முகத்தை மூடிகொண்டவள்,
“அச்சோ போதும் போதும்…” என்று கத்தினாள்.
“இப்பவும் அச்சோ?…” என அவன் அடக்கமாட்டாமல் சிரித்தான்.
அதற்குள் வீடு வந்துவிட காரைவிட்டு இறங்கி உள்ளே வர போக பார்வதி வாசலிலேயே நிறுத்தினார். ஆலம் சுற்றி உள்ளே வரவும் இருவரும் ஆகாஷின் வீட்டிற்கு வந்தனர்.
பவித்ரா உள்ளே சென்றுவிட வெளியே சேரில் அமர்ந்திருந்த தன் கூட்டணிகள் பக்கம் சென்றான் விஜய்.
விஜய்யை பார்த்த ஜெகன் வாயெல்லாம் பல்லாய் சிரிக்க அதை பார்த்தவனுக்கும் சிரிப்பு முட்டியது.
“அப்பறம் தம்பி, சௌக்கியம் தானே?…” என விஜய்யின் தோள் தட்டி ஜெகன் கிண்டலாய் கேட்க,
“இதெல்லாம் ஒரு பெரியமனுஷன் பேசற பேச்சா?…” என்றான் விஜய் வேண்டுமென்றே.
“என்னடா இப்படி கேட்டுட்ட? இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு?…” என்று ஜெகன் கேட்கவும் விஜய்யின் கண்ணடிப்பில் மற்றவர்கள் ஒன்றுசேர்ந்தார்கள்.
“அதானே? ஜெகாண்ணா, நீங்களா இப்படி?…” என்றான் ஆகாஷ்.
“என்னடா? எப்படிடா? இது நல்லதுக்கே இல்ல. இப்பலாம் ஓவரா ஓட்டுறீங்கடா…” என ஜெகன் சொல்ல ஜோதிக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது.
“அதானே? ஒரு பதினாலு வயசு பொண்ணுக்கு அப்பாவா இருந்துட்டு என்ன இது? அவனுக்கு சைகை காமிக்கறதும், ஜாடையா கேட்கறதும்? இன்னும் மூணு பேச்சிலர்ஸ் இருக்கோம்ன்ற ஒரு பயம் வேணாம்? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு?…” பிரனேஷ் ஒருபக்கம் ஆரம்பிக்க,
“காலையிலயேவா? அடேய்களா நான்லாம் எங்க ஊர்ல எப்படி தெரியுமா?…” என்று சட்டையை மடித்துவிட்ட ஜெகன்,
“ஜோதி சொல்லுடா மாமாவை பத்தி…” என்றான் பரஞ்ஜோதியிடம்.
“எனக்கு மறந்து போச்சு மாமா…” என்றான் ஜோதியும் அடக்கமாட்டாமல்.
“கிராதகா…” என்று அவனை பார்த்து ஜெகன் முறைக்க,
“நேரமாகுதாம். சாப்பிட்டு கிளம்பனும்னு சொல்றாங்க. வாங்கப்பா…” என்றார் ஆகாஷின் அம்மா.
“நீ எப்போடா வர? உன் ப்ளான் என்ன?…” என்றான் பிரனேஷ்.
“ப்ரேக்பாஸ்ட் முடிச்சுட்டு அப்பாவை பார்த்து சொல்லிட்டு அங்க இருந்து கிளம்புவேன்…” என விஜய் சொல்லவும் அனைவருமே அடுத்து எங்கே செல்வது என பேசி முடிவெடுத்தார்கள்.
ஆகாஷ், பிரனேஷ் சென்னைக்கு இப்படியே கிளம்ப விஜய் ஜெகனின் வீட்டிற்கு சென்றுவிட்டு மறுநாள் கிளம்புவதாக இருந்தான்.
ஜெகன் உறுதியாக சொல்லிவிட்டான் மறுநாள் ட்ரைவ் செய்ய கூடாது என்று. தானே ஒரு ட்ரைவரை கார் ஓட்ட ஏற்பாடு செய்வதாக சொல்ல விஜய்யும் சம்மதித்தான்.
காலை உணவு தயாராக இருக்க அனைவருமே கிளம்பி இருந்தார்கள் ஊருக்கு செல்வதற்கு.
“அம்மா எங்கப்பா? பார்க்கலை?…” என பழனியப்பனிடம் தேடினாள் பவித்ரா.
“அவளுக்கு காய்ச்சல் கண்டுடுச்சும்மா. என்னவோ உளறிட்டே இருக்கா. பயந்துபோய் இருக்கா போல…” என்று பழனியப்பன் சொல்லிவிட்டு,
“மாப்பிள்ளை உட்காருங்க, சாப்பிடலாம்…” என்றார் அவனிடத்தில்.
“இல்லை, நீங்க சாப்பிடுங்க. கொஞ்சம் நேரமாகட்டும்…” என்று சோபாவில் அமர்ந்துகொண்டவன்,
“பழனி தண்ணி…” என்றான் அவளிடத்தில் சொல்லவும் உள்ளே சென்றாள்.
அவனிடம் கொண்டுவந்து தம்ளரை நீட்ட வாங்கி குடித்தபடி திரும்பியவன் அங்கே போர்வையை போர்த்திக்கொண்டு வந்த வசந்தியை பார்த்தான்.
“வசும்மா மெதுவா. நடங்க. இப்ப ஹாஸ்பிட்டல் போய்டுவோம்…” என ரஞ்சனி அழைத்து வந்தாள். லேசாய் தடுமாறியவரை பார்த்த பார்வதி,
“வசந்தி பார்த்து பார்த்து…” என சொல்ல குடித்துக்கொண்டிருந்தவனுக்கு புரையேற தண்ணீர் தெறித்தது.
“டேய் உனக்கென்னடா ஆச்சு?…” என்றான் பிரனேஷ்.
“ஒண்ணுமில்ல…” என்று சிரித்தபடி விஜய் பவித்ராவை பார்க்க அவள் கெஞ்சலாய் இவனிடம் தலையசைத்தாள்.
ஆனால் சிரித்தது தன்னை கண்டுதான் என்று நினைத்த வசந்திக்கு அழுகையே வந்துவிட்டது.
“அப்பு பார்த்தியாடி, என்னை ஊருக்கு அனுப்பிடுன்னு சொன்னாலும் கேட்கமாட்டிக்காங்க. இங்க வேண்டாம்டி. என சோலி முடிஞ்சிரும் போலையே…” என அவர் உளற,
“ம்மா, என்ன பேசறீங்க?…” என்றாள் அவள்.
“அந்த வீடு வேணாம்டி…” என நடுங்கிக்கொண்டே சொல்லியவரை ஜோதி ஆகாஷுடன் சேர்த்து அழைத்துக்கொண்டு வெளியே சென்றான்.
“பக்கத்துல தான் ஹாஸ்பிட்டல். போய்ட்டு வந்திடறோம் இப்ப…” என்று சொல்லி செல்ல,
“நீ போகவேண்டாம்டா அப்பு. முதல்ல சாப்பிடு…” என்றார் பார்வதி.
பின் எத்தனைமணிக்கு கிளம்பவேண்டும் என்றெல்லாம் பேசி முடிக்க வசந்தி வந்துவிட்டார்.
“இப்போ எப்படி இருக்குது?…” என பவித்ரா வருத்தமாய் கேட்க,
“இன்னைக்கு வேணும்னா இருந்துட்டு காய்ச்சல் சரியாகவும் போகலாமா?…” என்றான் அவளின் கவலையை கண்ட விஜய்.
“இல்ல இல்ல, போலாம் இங்க வேண்டாம்…” என மீண்டும் பேசினார் பதட்டத்துடன்.
அவருக்கு அத்தனை பயம் மதுவந்தியின் குரலை கேட்டதில் இருந்து. நிஜமாகவே அவர் மதுவந்தி ஒரு ஆத்மாவாக அவ்வீட்டை சுற்றிக்கொண்டிருகிறார் என்று நம்பினார்.
ஆனால் வெளியே சொன்னால் அது மீண்டும் விஜய்க்கு கோபத்தை வரவழைத்து மகளை பாதிக்குமோ என்று பயந்துகொண்டே வாயை திறந்து சொல்லவில்லை.
அதன்பின் சாப்பிட்டு முடித்து அனைவரும் கிளம்ப விஜய் பவித்ராவுடன் மாதவனை பார்க்க சென்றான். மாலை வரை அங்கே இருந்துவிட்டு தான் வேடசந்தூர் கிளம்பினான்.
இப்போதாவது தன்னுடன் வரமாட்டாரா என்று ஆசை இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை அவன். தானும் மனம் சோர்ந்தாள் மாதவனால் தாங்க முடியாது என்று எதையும் தெரியப்படுத்தவில்லை.
அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு கிளம்பி மூன்று மணி போல கிளம்பியவர்கள் ஜெகனின் வீட்டை அடைய இரவு பத்துமணியானது.
இதில் அருமைநாயகத்திற்கு அத்தனை கோபம். அவர் பழனியில் இருக்க ஒருவரும் சொல்லவில்லை தாங்கள் வேடசந்தூர் வந்துவிட்டதை.
இன்னும் கேரளாவில் இருப்பதாக அவர் நினைத்துக்கொண்டு இருந்தார். இரவு போல விஷயத்தை சொல்லவென்று ஜெகனின் தந்தை அவருக்கு அழைத்தார். அதுவும் ஒரு மரியாதைக்காக.
“சொல்லுங்க சம்மந்தி…” என்றார் தன்மையுடன் அருமைநாயகம்.
“என்ன சம்பந்தி வீட்டுல இருக்கீங்களா?…” என்று கேட்டதும்,
“ஆமா சொல்லுங்க. வீட்டுல தான் இருக்கேன்…” என சொல்லும் பொழுதே அருமைநாயகத்தின் குரல் சோர்வாய் வந்தது.
அவரால் உறவுகளை, ஊராரை சமாளிக்க முடியவில்லை. இத்தனை நாள் திமிரில் ஆணவத்தில் கட்டிக்காத்துவைத்த மொத்த மரியாதையும் கலைந்துவிட்டதாகவே எண்ணினார்.
“வேற ஒண்ணுமில்லை சம்பந்தி, கல்யாணம் நல்லபடியா முடிஞ்சு பொண்ணு, மாப்பிள்ளை வந்திட்டு இருக்காங்க. நாளைக்கு நம்ம வீட்டுல விருந்து. அதான் உங்களையும் அழைக்கலாம்ன்னு கூப்பிட்டேன்…” என்றதும் இங்கே இவருக்கு ஆத்திரங்கள் கிளம்பியது.
ஆனால் பெண்ணை கொடுத்திருக்கும் சம்பந்தியாகிற்றே. வாயை திறக்கமுடியவில்லை.
“இல்லைங்க, நீங்களே பண்ணுங்க. எனக்கு செய்ய விருப்பமில்லை. நான் வரலை…” என்று வீராப்பாய் அருமைநாயகம் சொல்ல,
“ஓஹ், சரி சொல்லாம இருக்க முடியாதேன்னு தான் போன் பண்ணேன். வச்சிடறேன்…” என சொல்லி வைத்துவிட்டார் ஜெகனின் தந்தை.
“ஒரு பேச்சுக்காவது இந்த மனுஷன் கண்டிப்பா நான் வரனும்னு என்னை சொல்லுறாரா? இருக்கட்டும் பேசிக்கறேன்…” என்று இங்கே பொருமிப்போய் சுற்றினார் வீட்டிற்குள்ளேயே.
மறுநாள் விருந்து அமர்க்களப்பட்டது. ஊரில் உள்ள உறவுகள் முதற்கொண்டு வந்துவிட வாழ்த்துவிட்டே சென்றார்கள்.
ஜெகனும், அவனின் தந்தையும் அத்தனைபேரையும் அழைத்திருந்தார்கள். எப்போது இத்தனை ஏற்பாடு என்றே தெரியவில்லை. விஜய் திக்குமுக்காடி போனான்.
“எதுக்குண்ணா இத்தனை? சும்மாவே இருக்கமாட்டீங்க இல்ல?…” என்று ஜெகனிடம் நெகிழ்ந்துபோய் கேட்க,
“போடா போடா…” என்று அவனின் கன்னம் தட்டிவிட்டு பரபரப்பாய் வேலையில் மூழ்கினான்.