வீடு முழுக்க சொந்தம். அருகில் இருக்கும் காலி நிலத்தை செப்பனிட்டு பந்தல் போட்டு கறிவிருந்து தான்.
மதிய உணவு முடிந்து ஏனையோர் கிளம்பியிருக்க பவித்ராவை காலையில் இருந்து காணாமல் தேடிக்கொண்டிருந்தான்.
காலை குளித்து கிளம்பி வந்ததோடு சரி அவனை ஜெகன் தன்னுடன் வைத்திருக்க பவித்ராவை பெண்கள் பிடித்துக்கொண்டார்கள்.
இடையே சில பெரியவர்கள் தம்பதிகளை ஆசிர்வாதம் செய்யும் போது சேர்ந்து நின்றதோடு சரி.
“யாரைடா தேடற?…” என கேட்டான் ஜெகன் விஜய் சுற்றி சுற்றி வருவதை கண்டு.
“உங்க குடும்பத்துல நான் யாரை தேட போறேன்? எல்லாம் என் கேர்ள் எங்கன்னு தான் பார்த்துட்டு இருக்கேன்…” என்றான் விஜய்.
“இப்பத்தான் மாடிக்கு போனா. அங்க உன் மாமியாருக்கு சாப்பாடு குடுத்ததை எடுத்துட்டு வரேன்னுட்டு. போய் பாரு…” என்று சொல்லவும் விஜய் தேடி சென்றான்.
அவனுக்கு கிளம்பவேண்டும் என்று வேறு தோன்றியது. நேரமாகிக்கொண்டே இருக்க அவளை கிளப்பினால் தானே உண்டு.
“என்ன பன்றீங்க இங்க?…” என்ற சத்தத்தில் திரும்பினால் கையில் பாத்திரங்களுடன் பவித்ரா.
“உன்னைத்தான் தேடிட்டு இருந்தேன். இப்பவே மணி நாலாகிடுச்சு பழனி. கிளம்ப வேண்டாமா?. ட்ரெஸ் எல்லாம் எங்க காய போட்ட? அதை கேட்கத்தான் தேடிட்டு இருக்கேன்…” என்றான் அவன்.
“அச்சோ, இருங்க. போய் எடுத்துட்டு வரேன். நீங்க ரூம்ல இருங்க…” என சொல்லிவிட்டு அவள் செல்ல அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தான் விஜய்.
பெட்டியை எடுத்து கட்டிலில் வைத்தவன் கலைந்துகிடந்த உடைகளை ஒன்றுபோல மடித்து அடுக்கினான்.
அதற்குள் பவித்ராவும் வந்துவிட அவளும் அந்த உடைகளை எடுத்து மடித்து வைத்தவள்,
“எத்தனை மணிக்கு போகனும்? அதை சொல்லலை?…” என்றாள்.
“ஹ்ம்ம், இன்னும் ஒருமணி நேரத்துல கிளம்பினா போதும். மிட்நைட்ல ரீச் ஆகிடலாம்…” என்றவனின் கரம் அவளை வளைத்தது.
“கீழே எல்லாரும் இருக்காங்க. சொல்லிட்டு போக வெய்ட் பன்றாங்க. விடுங்க…” என்றாள் அவனிடம் இருந்து நழுவியபடி.
“ஹ்ம்ம், போலாம். ஜஸ்ட் ஒன் மினிட்…” என்று அவளின் பேச்சை நிறுத்தியவன் அவனுக்குள் அவள் பேசியதை கண்டு,
“என்னடி இது கதவிடுக்குல மாட்டின எலி மாதிரி. முணங்கிட்டே இருக்கற? கொஞ்சம் நேரம் உன்னால சும்மா இருக்க முடியாதா?…” என்றான் அவளை விடுத்து.
“சொல்ல கூடாதுன்னு தான் நினைக்கறேன். ஆனா வந்திருது…” என பாவம் போல சொல்லியவளின் நெற்றியில் லேசாய் சிரித்தபடி முட்டியவன்,
“நீ பயந்ததா சொல்ற அன்னைக்கு கூட பேசாம கைக்குள்ள நின்ன நீ? ஆனா அதை வச்சு ஒவ்வொருதடவையும் படுத்தற போ…” என்று சொல்லி சிரித்தவனின் இதழ்கள் அவளில் தவழ வெளியே ரஞ்சனியின் அழைப்பு வசந்தி அழைப்பதாய்.
“ஹ்ம்ம், தள்ளுங்க. அம்மா கூப்பிடறாங்க போல. இல்லனா வந்திருவாங்க…”
“அதான் ஏற்கனவே பார்த்தாச்சே? வந்தா வரட்டும். ஷாக் எல்லாம் பர்ஸ்ட் டைம் மட்டும் தான். அப்பறம் அதுவே பழகிரும்…” என்று விஜய் சீண்ட அவனிடம் இருந்து விடுபட்டு வெளியே வந்தாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் லக்கேஜை எல்லாம் கீழே இறக்கிவிட்டான் விஜய். சொந்தங்கள் எல்லாம் பாதி கிளம்பியிருக்க இவர்களை வழியனுப்ப என்று சிலர் காத்திருந்தார்கள்.
அனைவரிடமும் பவித்ரா தனித்தனியே சொல்லிக்கொண்டு கிளம்ப விஜய் இதை எல்லாம் பார்த்தபடி நின்றான்.
கிளம்பும் நேரம் பொதுவாய் தலையசைத்து ஒரு விடைபெறும் பாவனை அவனின் முகத்தில்.
அவனை அறிந்திருந்த ஜெகனின் குடும்பத்திற்கு அது பெரிதாக தெரியவில்லை. மற்றவர்களுக்கோ அவனின் கோபம் ஏற்கனவே அறிந்திருந்தவர்கள் என்பதால் அவன் ஒட்டுதல் இல்லாமல் இருப்பதாகவும், அவனின் குணம் அதுவென்றும் தான் தோன்றியது.
அவர்கள் கிளம்பி சரியாக வாசலுக்கு வர அருமைநாயகம் மனது கேக்காமல் வந்திருந்தார் இங்கே.
போனால் போவதென்பதை போல பேர் பண்ணிக்கொண்டு இங்கே என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக வந்துவிட்டார்.
வந்ததும் எதிரே நின்றதென்னவோ விஜய்யும் அவனின் கைபிடித்து நின்ற பவித்ராவும் தான்.
ஒருநொடி அந்த கோலத்தில் இருவரையும் பார்த்தவருக்கு உள்ளுக்குள் கோபத்தையும் தாண்டிய ஒரு தொடுகை. ஆனாலும் அதை மேற்கொண்டு வந்ததென்னவோ வன்மம் தான்.
‘சாதிக்கிறானே?’ என விஜய்யை அத்தனை ஆத்திரமாய் பார்த்தார். வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை அவரால்.
விஜய்க்கு அருமைநாயகத்தை பார்த்ததும் அடங்கியிருந்த ஆவேசம் எல்லாம் ஒன்று கூட பவித்ராவின் கையை அழுத்தமாய் பற்றியவன்,
“போலாம்…” என்று வேகமாய் கூட்டி சென்று காரில் ஏறிவிட்டான்.
அவன் செல்வதையே பார்த்துக்கொண்டு நின்ற அருமைநாயகத்திற்கு அவமானத்தில் முகம் கறுத்துவிட்டது.
அதிலும் முக்கியமான நெருங்கிய உறவுகள் முன்னிலையில் இப்படி நடந்துவிட்டதில் கோபத்தை அடக்கமுடியாமல் நின்றவர் வந்த வேகத்தில் வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.
இங்கே விஜய்யின் காரில் ஜெகன் ஏற்பாடு செய்த ட்ரைவர் சீரான வேகத்தில் காரை செலுத்திக்கொண்டு இருக்க விஜய் அந்த ஊரை தாண்டும் வரை ஒன்றும் பேசவில்லை.
கண்ணை மூடி பின் இருக்கையில் சாய்ந்திருந்தவன் பவித்ரா தன்னை திரும்பி திரும்பி பார்த்தபடி வருவதை உணர்ந்தான்.
“என்னடி? எதுக்கு இப்படி பார்க்கற? உன் பெரியப்பாக்கிட்ட பேசவிடாம கூட்டிட்டு வந்துட்டேன்னா?…” என்றதும் அவள் பதறி போனாள்.
“இல்லை, அப்படி நான் சொல்லலையே…” என்றவளுக்கு நொடியில் வியர்த்துவிட ட்ரைவரையும் வைத்துக்கொண்டு ஒன்றும் பேசமுடியாதவன்,
“அண்ணே, கடை ஏதாச்சும் வந்தா காரை ஓரமா நிப்பாடுங்க…” என்றான் அமைதியாக.
அவனின் கைகள் அவளின் கையோடு கோர்த்துக்கொள்ள இன்னுமே பவித்ராவிற்கு பதட்டம் தணியவில்லை.
“இங்கயே நிறுத்துங்கண்ணே. போய் ரெண்டு வாட்டர்பாட்டில் வாங்கிட்டு வாங்க. அப்படியே டீ குடிக்கனும்ன்னா குடிச்சுட்டு மெதுவா வாங்க…” என பணத்தை நீட்டி அவரை அனுப்பினான்.
அவர் சென்றதும் மனைவியின் பக்கம் திரும்பியவன் அவளின் கன்னம் பற்றி தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டவன்,
“எதுக்காக இவ்வளோ டென்ஷன் ஆகற கேர்ள்? எனக்கும் கஷ்டமா இருக்குது. நான் சாதாரணமா கேட்டா கூட உனக்கு ஏன் பயமா இருக்கு?…” என்று சொல்லவும் அவனின் இடையை வளைத்துக்கொண்டாள் பவித்ரா.
“நிஜமா கோவமில்லாமலா கேட்டீங்க?…” என்று அவனை லேசாய் தலை கொண்டு அழுத்த,
“விளக்கம் வேற சொல்லனுமா? ஒருதடவை சொன்னேன் தானே?…” என்றான் ஆற்றாமையுடன்.
“அந்த ஆளை பார்த்ததும் சுர்ருன்னு எனக்கு ஏறினது உண்மை தான். ஆனா உன்கிட்ட கேட்டது கிண்டலா தான். அவர் மேல உள்ள கோபத்தை எப்பவும் உன்கிட்ட காண்பிக்க மாட்டேன்…” என்றவன்,
“இனி இதுக்கும் நிறைய யோசிக்கனுமோ?…” என்றான் அவளின் நாடிபிடித்து உயர்த்தி.
“இல்லை, அதெல்லாம் வேண்டாம்…” என்று அப்படியே சாய்ந்துகொள்ள,
“ஹேய் கேர்ள், ட்ரைவர் வராரு…”
“வரட்டும்…” என்றாள் இன்னும் வாகாய் சாய்ந்துகொண்டு.
“பழனி நீதானா? பார்ரா…” என்று அவன் வாய்விட்டு சிரிக்க,
“அதெல்லாம் இல்லை. நான் தூங்கிட்டேன்னு நினைச்சுப்பாங்க…” என்றாள்.
“அறிவே. அப்போ நானும் தூங்கறேன்…” என அவளை இறுக்கி அணைக்க,
“ஐயோ விடுங்க, விடுங்க. இது தூங்கறதா?…” என்று அவனிடம் இருந்து விலக அவளின் வேகத்தில் கண்சிமிட்டும் நேரத்தில் ஒரு அவசரமுத்தம் இதழ்முத்தமாக தந்தவன் கையை கோர்த்துக்கொண்டான்.
ட்ரைவர் வந்துவிட தண்ணீரை வாங்கிக்கொண்டவன் அவளுக்கு நீட்ட வாங்காமல் ஒற்றை கண்ணை மட்டும் திறந்தவள்,
“நான் தூங்கிட்டேன்…” என்றாள் கிசுகிசுப்பாய்.
அவளின் பாவனையில் விஜய்க்கு இன்னும் சிரிப்பு பொங்க தானும் நன்றாய் சீட்டில் சாய்ந்து கண்ணை மூடினான்.
“ஸ்வீட் ட்ரீம்ஸ் கேர்ள்…” என லேசாய் அவன் முணுமுணுக்க பவித்ராவிற்கும் புன்னகை.
அவனின் வரவின் பின் தன் வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள்? முதலில் ஆர்வமாய் அவனை கண்டு, அவனின் அதட்டலில் அடங்கி, அவன் காயத்தில் உருகி, அவனின் இழப்பின் தாக்கத்தில் உறைந்து இப்போது மொத்தமாய் அவனுள் கரைந்து போனதெல்லாம் எத்தனை எத்தனை!!!
இந்த வாழ்க்கைக்கு தானோ இத்தனை சோதனைகள் என்று எண்ணாத நாளில்லை அவள்.
‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொன்னவளை பத்திரமாய் பார்த்துக்கொண்டதென்னவோ விஜயநெடுமாறன் தான்.
இப்பொதெல்லாம அவனோடு சேர்ந்து மதுவின் குரலில் வாழ பழகி இருந்தாள். அந்த குரலுக்கு பதில் பேசுவதும், அதில் விஜய்யை சின்ன சின்ன குறை சொல்வதும், அதில் சமாதானம் ஆவதும் என்று பவித்ரா மொத்தமாக விஜய்யின் மனதாகவே மாறி போனாள்.
அந்த பதட்டம், பயம், சட்டென்ற சுணுக்கம் எல்லாம் அவளிடம் அப்படியே தான் இருந்தது இன்னும். அவரவர் குணஇயல்புகள் தொடர அதனைகொண்டே அந்த வாழ்க்கையில் சுவாரஸியம் கூட்டினார்கள்.
‘ஹேய் கேர்ள்’ திருமணத்தின் முன்பு அவன் இப்படி அழைக்கும் போதெல்லாம் ‘ஐய்யோ’ என்றிருக்கும். இப்போதும் அப்படித்தான். அதன் பரிணாமம் தான் வேறு.
முன்பு பயத்துடன் அவனை பார்ப்பாள் என்றால் இப்போது முகமெல்லாம் புன்னகையும், வெட்கமுமாய் ஏறிடுவாள்.
இரண்டிற்குமான வித்யாசம் அவள் மட்டுமல்ல அவனுமே அறிந்தது. கண்டிப்பு தாண்டிய ஒரு குளுமை அந்த குரலில் அவளை கட்டிபோடும்.
குழைந்து உருகி தேனாய் தீண்டும் அந்த வார்த்தையில் அவனை தவிர மற்றதெல்லாம் மறந்துபோகும்.
இருவரும் வார்த்தையில் வடிக்காத காதலை வாழ்க்கை கொண்டு வாழ்ந்து பார்த்து பார்த்து செதுக்கினார்கள்.