“கோவமா இருப்பீங்கன்னு நினைச்சேன். இல்லையா?…” என்றாள் அவளாகவே.
“எதுக்கு கோவம்?…” என்றவனுக்கு பதில் சொல்லும் முன் ஆகாஷ் வந்துவிட்டான்.
“வாடா, மெசேஜ் பண்ணதும் என்னவோன்னு பயந்துட்டேன்…” என்றவன் விஜய் பவித்ரா பக்கம் கண்ணை காண்பிக்கவும் புரிந்ததை போல தலையசைத்தான்.
“இறங்கு பழனி…” என விஜய் சொல்ல,
“நீங்க பேசிட்டு வாங்க. நான் கார்லயே இருக்கேன்…” என்றவள் சாய்ந்து கண்ணை மூடி வாகாய் சாய்ந்துகொள்ள அவள் பக்கமாக வந்து கதவை திறந்தான் விஜய்.
“படுத்துறடி. வா, உனக்கு தான் பார்க்க வந்திருக்கோம்…” என்று ஆகாஷிற்கு கேட்காம அவளிடம் சொல்ல,
“சரியா தூக்கமில்லன்னா இப்படியெல்லாம் இருக்கும். முன்னாடியும் காலேஜ்ல அப்படி தூங்கிருக்கேன்…” என வீம்பாய் இறங்காமல் தான் சொல்லியதிலேயே நிற்க,
“இப்ப நீ வரலை, நான் என்ன செய்வேன்னே தெரியாது…” என்று அவன் முறைக்கவும் தான் வழிக்கு வந்தாள்.
“சொல்றதை மட்டும் கேளு. சின்ன செக்கப் தான். வா…” என்று கையை பிடித்து அழைத்து செல்ல,
“எனக்கொண்ணுமில்லை, அங்க என்னாச்சுன்னு கேட்டாங்கன்னா உங்களை தான் சொல்லுவேன். அப்பறம் என்கிட்டே குதிக்க கூடாது…” என அவள் பங்கிற்கு பேச அவளை திரும்பி பார்த்தான்.
தான் கணித்த அளவிற்கு கூட அவளுக்கு இன்னும் விஷயம் விளங்கவில்லை என்பது புரிந்தது அவனுக்கு.
‘எங்கே? வேறு எதையாவது யோசிக்கும்படியாகவா அவளை வைத்திருந்தேன்?’ என தன்னை குறித்து நினைக்கும் பொழுதே அவன் பார்வை ரசனையுடன் படிந்தது அவள் மேல்.
“இங்க இருந்து நேரா வீட்டுக்கு தானே? போனதும் தூங்கனும். விடலைன்னா திரும்ப இப்படித்தான் ஆகும். அப்பறம் உங்களை தான் எல்லாரும் பேசுவாங்க…” என்றவள்,
“இதுக்கே என்னென்ன பேசிட்டு இருக்காங்களோ. போச்சு போச்சு…” என கையை உதறிக்கொண்டு இருந்தாள்.
“கொஞ்சம் நேரம் சைலன்ட்டா வா கேர்ள்…” என்றான்.
“உள்ள போ விஜய். நான் பேசிட்டேன்…” என்று ஆகாஷ் வெளியே நின்றுகொள்ள அந்த பெண் மருத்துவரின் அறைக்குள் நுழைந்தார்கள் இருவரும்.
அங்கே சென்றதுமே அடிநாக்கு வரை கசந்துபோகும் உணர்வு. முகத்தை ஒவ்வாமையுடன் வைத்துக்கொண்டாள்.
“வாமிட் எதுவும் வருதாம்மா?…” என விஜய் அவளிடம் கேட்க,
“இல்லையே? ஏன்?…” என்றாள் பவித்ரா.
“இல்ல, உன் முகத்தை ஏன் இப்படி வச்சிருக்க? அதான்…”
“ஓஹ், ஹாஸ்பிட்டல் வரவும் இந்த பீல்க்கு டேப்லட் சாப்பிட்ட மாதிரி தோணுச்சா? தொண்டை எல்லாம் கசக்குது…” என்றதும் அவளை முறைத்தவன்,
“டேப்லட் போட்டுக்கமாட்டியா?…” என்றான்.
வந்ததும் இருவரும் பேசிக்கொண்டே டாக்டரை கவனிக்காமல் தங்களுக்குள்ளேயே வார்த்தை பரிவர்த்தனையை வைத்திருக்க,
“எக்ஸ்க்யூஸ்மி…” என்றார் மருத்துவர்.
“ஹலோ டாக்டர்…” என விஜய் உடனே அவரிடம் பேச,
“ஹலோ…” என்றவர்,
“ஆகாஷ் ப்ரென்ட் ரைட்…” என்று கேட்கவும்,
“ஹ்ம்ம், எஸ்…” என்றான்.
“சொல்லுங்க…” என்றவர் பவித்ராவை பார்க்க,
“இவங்க என்னோட வொய்ப். மிஸஸ் பவித்ரா விஜயநெடுமாறன்…” என்று அவன் அறிமுகப்படுத்தவும் விஜய்யை பார்த்து இதழ்விரித்தாள்.
அவளுக்கு அத்தனை பிடிக்கும் தனது பெயரை அவனுடன் சேர்த்து சொல்வதில். அதில் ஒரு அலாதி சுகம் அவளுக்கு.
அப்படி சொல்லும் நேரம் அந்த முகத்தில் வந்துபோகும் பாவனைகளுக்காகவே அவளையே பார்த்திருப்பான் விஜய். இன்றும் தான் சொல்ல அதே போலொரு பாவனை.
“ஹாய் சொல்லும்மா, என்னை பார்க்கற?…” என்றான் அவளிடத்தில்.
“ஹலோ டாக்டர்…” என்று சொல்லவும் விஜய் அவளின் சோர்வையும், மயங்கி விழுந்த விஷயத்தையும் சொல்ல செக்கப்பிற்கு அழைத்து சென்றார்.
டாக்டர் மீண்டும் வந்து அவரின் இருக்கையில் அமரும் வரை அவரின் சிரித்த முகத்தை பார்த்துக்கொண்டிருந்தவன்,
“இட்ஸ் ட்ரூ…” என்றான் விஜய்.
“எஸ், கரெக்ட், கங்க்ராட்ஸ்…” என்று அவர் சொல்லவும் விஜய்யின் முகத்தில் மத்தாப்புகள்.
உடையை சரி செய்து வந்த பவித்ராவும் அவனையே பார்க்க கை நீட்டி அவளை அழைத்தவன் தன்னருகே அமர்த்திக்கொண்டன்.
“எல்லாமே நார்மலா இருக்குது. விட்டமின் டேப்லட்ஸ் குடுக்கறேன். அதை எடுத்தா போதும். ஃபூட்ல கொஞ்சம் கான்ஷியஸா இருங்க. ப்ரூட்ஸ் நிறைய எடுத்துக்கோங்க. ஹெல்தியா நம்மாலி வச்சிக்கிட்டாலே போதும். அப்பறம் நல்லா தூங்கனும்…”
அவர் ஒவ்வொன்றாய் சொல்ல சொல்ல கடைசியாக சொல்லியதில் பவித்ரா வாய்விட்டே சிரித்துவிட்டாள்.
“ஹேய்…” என்றான் விஜய்யும் சிரிப்புடன்.
பின் அவரிடம் பேசிவிட்டு எழுந்து வெளியே வர ஆகாஷும் வந்துவிட்டான். அவனிடம் விஷயத்தை சொல்ல உடனே பிரனேஷ், ஜெகன் என்று தகவல் பறந்தது.
அத்தனைபேருக்கும் அப்படி ஒரு சந்தோஷம். வீட்டிற்கு வருவதற்குள் அத்தனைபேருக்கும் போன் செய்துவிட வசந்தி இப்போதே மகளை பார்க்கவேண்டும் என்று ஆர்ப்பரித்தார்.
அருமைநாயகத்திற்கு மகிழ்ச்சி தான் என்றாலும் விரைப்புடன் சுற்றிக்கொண்டிருந்தவரிடம் இனிப்பை கொண்டுவந்து ஜோதி நீட்ட,
“போ போ. என்னமோ பெருசா கொண்டாடிட்டு…” என்று அவனை விரட்டினாலும் அவன் தந்ததை எடுத்துக்கொள்ளாமல் இல்லை.
திருமணத்திற்கு சென்று வந்தபின்னர் பழனியப்பனிடம் கடை சம்பந்தமான பேச்சுக்கள் மட்டும் தான். வசந்தி விஜய்யை பற்றி ஒரு வார்த்தை வாயை திறக்கவில்லை.
உண்மையில் அருமைநாயகத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர் என்னவோ தான் அத்தனைபேரையும் ஒதுக்கிவைப்பதாக முதலில் நினைத்திருக்க அப்படி அல்ல என்று அத்தனைபேரும் ஒதுங்கி நின்று அவரை தள்ளி வைத்தார்கள்.
முதலில் போங்கடா என்பதை போல இருந்தவர் பின் கொஞ்சம் கொஞ்சமாய் கோப முகத்துடனே வார்த்தையை பிடுங்க பார்க்க அங்கேயும் தோல்வி தான.
இப்படியே தனியாகிவிடுவோமோ என்று பயம் வந்தாலும் வறட்டு பிடிவடஹம் அவரை இறங்கி செல்ல விடவில்லை.
இப்போது இந்த விஷயம் கேள்விப்பட்டு மகிழ்ச்சி இருந்தாலும் அதனை பகிர்ந்துகொள்ள ஆளில்லாமல் தவித்துதான் போனார். யாருமில்லாததை போன்ற ஒரு பிரம்மை அவரை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருந்தது.
இங்கே மாறி மாறி உறவுகளுக்கு போன் செய்து பேசுவதும் பவித்ராவிடம் பார்வதியும், வசந்தியும், விசாரிக்கவும் இருக்க இங்கே இவருக்கு நிலைகொள்ளவில்லை.
“போதும் வசும்மா, அவளை ப்ரீயா விடுங்க…” என்று ஜோதி சொல்லியும் போனை வைக்கவில்லை.
போன் பேசி பேசியே களைத்து போனாள் பவித்ரா. விஜய்யும் அவளை பார்த்துக்கொண்டே காரை செலுத்தியவன் ஒருகட்டத்தில் போனை பிடுங்கிவிட்டான்.
“போதும் பேசினது. என்கிட்டே பேச சொல்லு. நீ போனை எடுத்த பார்த்துக்கோ…” என்று சொல்ல மறுபக்கம் இருந்த வசந்தி பதறிபோய் போனை பார்வதியிடம் நீட்டிவிட்டார்.
“தம்பி, விஜய்…” என்று அவர் அழைக்க காதில் வைத்தவன்,
“சொல்லுங்க, அவ ரொம்ப டயர்டா இருக்கா. நானே அப்பறமா பேச சொல்றேன்…” என்று சொல்லவும் சரி என போனை வைத்துவிட்டார்.
இன்னும் உறவுமுறைகள் சொல்லி அழைக்க ஆரம்பிக்கவில்லை விஜய். அது பார்வதியாக இருந்தும் கூட விஜய் வாங்க, போங்க என்பதில் தான் இருந்தான்.
போனை வைத்துவிட்டு பவித்ராவை பார்க்க அவளோ கண்ணை மூடிய பாவனையில் தலைசாய்ந்திருந்தாள்.
“என்ன நடிப்புடி?…” என்று அவளின் கன்னத்தை பிடித்து கிள்ள,
“வலிக்குது…” என்று தேய்த்துக்கொண்டவள் அவனிடம் சிணுங்கினாள்.
“பின்ன அப்பறம் பேசறேன்னு சொன்னா என்ன உனக்கு? இப்படி மூச்சுவாங்க பதில் சொல்லனுமா?…” என கடுப்படித்தான்.
அதற்குள் வீடும் வந்துவிட சாவியை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றவள் அவன் வரும் முன்பே உடை மாற்றிவிட்டு சாப்பிட எடுத்துவைத்தாள் கொண்டுசென்ற பாக்ஸ்களை பிரித்து.
“பசிக்குதா பழனி?…” என்று வந்தவன் கதவை பூட்டிவிட்டு கையை கழுவி அவனருகே அமர்ந்தான்.
கொண்டுவந்திருந்த மாத்திரைகளை எல்லாம் பிரித்து தனிதனி டப்பாக்களில் போட்டவன் அதன் மேலே எந்த தேதியில் ஆரம்பித்து எப்போதும் முடியும் என்பதை எழுதியும் வைக்க பவித்ராவிற்கு விழிபிதுங்கியது.
“எல்லா டேப்லட்டும் ஒழுங்கா எடுத்துக்கனும். ஏமாத்தற வேலையே இருக்க கூடாது. புரியுதா?…” என்று சொல்ல தலையை அசைத்தாள்.
“ஓகே, சாப்பிடு முதல்ல…” என்று தானும் அமர்ந்துகொண்டான்.
“காலேஜ்ல நாளைக்கு கேட்டா என்ன சொல்ல?…” என உணவை அளந்துகொண்டே அவள் கேட்க,
“என்ன சொல்லன்னா? சொல்லேன்…” என்றான் சிரிப்புடன்.
“அதான் என்னனு சொல்லுவேன்? ம்ஹூம்…” என்றவளின் வெட்கம் கூட அவனுக்கு புன்னகையை தர,
“ஓகே இப்போ யோசிக்க வேண்டாம். நீ ரெஸ்ட் எடு. நாளைக்கு பேசுவோம்…” என்று சொல்லி அப்போதைக்கு அதனை ஒத்தி வைத்தான்.
அன்றிரவு மாதவனுக்கு அழைத்தவன் பவித்ராவுடன் விஷயத்தை சொல்ல அவருக்கு வார்த்தையே வரவில்லை.
விழிகள் கலங்க நெஞ்சை பிடித்துக்கொண்டவர் ‘மது’ என்றார் ஆழ்ந்த குரலில். விஜய்யும் தந்தையின் உணர்வுகளை கொண்டவனாய் உணர்வுக்குவியலாய் தான் மாறியிருந்தான்.
அவனின் அணைப்பு லேசாய் அழுத்தம் கூட்ட பவித்ராவிற்கு புரிய அவனை ஆதரவாய் பிடித்துக்கொண்டாள்.
“ரொம்ப ரொம்ப சந்தோஷம்ப்பா…” என்றவரின் விரல்கள் நடுங்கியபடி திரையை வருட இங்கே மகனுக்கு சிலிர்த்தது.
“ப்பா…” என்றவனின் ஒற்றை வார்த்தையும் அவருக்கு ஆறுதலை தர பேசி முடித்து வைத்த பின்னும் அந்த அறையிலேயே வெகுநேரம் பவித்ராவுடன் இருந்தான் அவளின் மடியில் தலைசாய்ந்து.
அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்திருந்தான் தனக்குமே சேர்த்து. அதன் பின்னே கல்லூரிக்கு செல்ல பவித்ரா யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை.
ஆகாஷின் அம்மா இன்னும் இரண்டு மாதம் போன பின்னால் சொல்லலாம் என்று சொல்லியிருக்க அதன்படி மெய்யப்பனை தவிர்த்து அங்கே ஒருவரிடமும் சொல்லவில்லை.
ஐந்தாம் மாதம் நெருங்க அதற்கிடையில் ஒருமுறை ரஞ்சனி, பார்வதியும், வசந்தியுடன் வந்திருந்து பார்த்துவிட்டு சென்றனர்.
லேசாய் வயிறு தெரிய ஆரம்பித்த பின்னர் யாரும் கேட்டால் மட்டுமே பதில் கூறி இருந்தால் பவித்ரா. முதலில் கூச்சத்துடன் தயங்கியவளை விஜய் அழைத்து செல்ல போக போக பழகி போனது.
ஐந்தாம் மாதம் நடந்துகொண்டிருக்க பரந்ஜோதிக்கு பெண் பார்க்கப்பட்டு இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் என்றிருக்க இந்த நிலையில் நெடுமாறனின் இழப்பு முற்றிலும் எதிர்பாராத ஒன்று.
அழுது சிவந்த விழிகளுடன் தன்னருகே வந்துகொண்டிருந்தவளை பார்க்கவே கஷ்டமாய் இருந்தது விஜய்க்கு.
ஆறுதல் சொல்லிக்கொண்டே தான் அவளை அழைத்து வந்துகொண்டிருந்தான். வந்தவன் தன் எல்லையில் நின்றுகொண்டது தான் அங்கிருந்தோரின் அதிர்ச்சி.
ஆம், வந்தவன் வீட்டிற்குள்ளும் செல்லவில்லை. எதையும் தேடி செய்யவில்லை. என் மனைவிக்காக வந்துவிட்டேன் அவ்வளவு தான் என்பதை போல நின்றுகொண்டான்.
எந்த இடத்தில் வைத்து அருமைநாயகத்தின் காலில் விழுந்தானோ அந்த இடத்தை தாண்டி அவன் செல்லவில்லை.
பவித்ராவும் அழைத்து பார்த்து, வந்திருந்தவர்கள் எல்லாம் சொல்லி அத்தனைபேரின் கோபமும் அப்போது அருமைநாயகத்தை பதம் பார்த்தது.
அத்தனைபேரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். உன்னால் தான், போய் மன்னிப்பு கேள் என்பதாக. மாற்றி மாற்றி சொல்லவும் வேறு வழியின்றி விஜய்யின் அருகே செல்ல அவரை வெறுமையுடன் பார்த்தான் விஜய்.
இப்படி ஒரு இழப்பில் தானே தன்னுடைய இழப்பும் சேர்ந்துகொண்டது என்ற எண்ணம் தாம் அவனிடம்.
“மன்னிச்சிடுப்பா, எனக்கு வேற என்ன சொல்லன்னு தெரியலை. தயவுசெஞ்சு உள்ள வா…” என்றவரை அழுத்தமாய் பார்த்தவன்,
“இது நீ உன் மனசார கேட்கலைன்னு எனக்கு தெரியும். அதே நேரம் உன்னோட மன்னிப்போ எந்த கருமமும் எனக்கு தேவை இல்லை. என்னை கூப்பிடறத விட்டுட்டு உங்க வேலையை பார்க்கலாம்…” என்றான் விஜய்.
“இல்ல, நான் நிஜமா தான் சொல்றேன். நிறைய தப்பு பண்ணிருக்கேன். இப்போவும் என்னோட பிடிவாதத்தை வச்சு என்ன செய்ய போறேன்?…” என்று அருமைநாயகம் கண் கலங்க விஜய்க்கு கொஞ்சமும் அதை ஏற்கமுடியவில்லை.
“இப்பவும் நீ இந்த ஊருக்காக தான் இதை பன்றன்னு தெரியும்ய்யா. நான் இங்க இருக்கறது என்னோட வொய்ப்காக தான். திரும்ப திரும்ப உன்னோட இந்த வேஷத்தை என்கிட்டே காட்டாத. அவ்வளோ தான்…” என்று அவன் சொல்ல அருமைநாயகம் செய்வதறியாமல் நின்றார்.
விஜய் உள்ளே வரவில்லை என்றால் அதற்கும் பேசுவார்களே தன்னை என்ற கோபமும், இப்போதும் தன்னை நம்பமாட்டேன் என்கிறானே என்னும் எரிச்சலும் உண்டாகியது.
“என்ன பார்க்கற? நான் கண்டுபிடிச்சுட்டேனா? உனக்கு மனசு மாறிருந்தா அது எங்கம்மாவோட நெத்தில ரத்தத்தை பார்த்த அன்னைக்கே மாறியிருக்கும். அவங்க செத்ததை கூட நீ சந்தோஷமா தான கேட்ட? இரக்கமில்லாத நீ இப்போ மாறிட்ட, நான் நம்பனும்….” என்றவன்,
“என்னோட அம்மாவுக்கு இல்லாத இந்த உரிமை எனக்கும் தேவை இல்லை. இப்போ இருக்கற இந்த உறவும் கூட என் மனைவியால வந்தது. அதுக்கான மதிப்பு மட்டும் தான் நான் குடுப்பேன். இது என்னோட தாய்வழி சொந்தம் இல்லை….” என்று தெளிவாய் சொல்லியவன் நகர்ந்து நின்றுவிட்டான்.
அருமைநாயகம் ஊருக்காக புதிப்பிக்க நினைத்த உறவையும், உரிமையையும் அறவே தரமுடியாதென உறுதியாய் நின்றான் விஜயநெடுமாறன்.