உருக்கம் – 25
பவித்ரா மௌனமாக தனது வேலைகளை பார்த்தபடி இருக்க விஜய் காலையில் இருந்து திட்டி திட்டி ஓய்ந்து போய் இருந்தான் அவளை.
“எவ்வளவு திட்டறேன். அசையாம இருக்க? கொஞ்சமாச்சும் கோவம் வருதா பாரு?…” என்று அவளிடம் கேட்க அதற்கும் பதிலில்லை.
அவன் எடுத்துவைத்த உடைகளை எல்லாம் மீண்டும் எடுத்து வாட்ரோபில் அடுக்கிக்கொண்டு இருந்தாள் அவள்.
அதில் தான் இன்னும் அவனுக்கு கோபம். சொல்ல சொல்ல கேட்கமாட்டேன் என்று அழுத்தமாய் இருக்கிறாளே என்னும் கோபம்.
“உன்னை திட்டி என் வாய் தான்டி வலிக்குது…” என்று சொல்ல,
“திட்ட திட்ட திண்டுக்கல்லு. வைய்ய வைய்ய வைரக்கல்லுன்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க. திட்டிக்கோங்க. வைஞ்சுக்கோங்க…” என்று அவள் சொல்ல,
“சேட்டை ரொம்ப கூடிப்போச்சு உனக்கு. உன்னை அங்கயே கல்யாணம் முடியற வரைக்கும் இருன்னு விட்டுட்டு வந்திருக்கனும்…” என்று அவன் சொல்லவும் திரும்பி பார்த்தவளுக்கு சிரிப்பு வர சிரித்துவிட்டாள்.
அதற்கு மேலும் கோபத்தை இழுத்து பிடிக்கமுடியாதவன் அவளை நெருங்கி அணைத்துக்கொள்ள,
“ரொம்ப தைரியம்டி. அப்படி கொண்டுப்போய் விட மாட்டேன்னு. நக்காலா சிரிக்கிற?…” என்று அவளின் கன்னத்தை நிமிண்டினான்.
“ஹ்ம்ம், பின்ன நீங்க கல்யாணத்துக்கு முதல்நாள் தான் வருவேன்னு சொல்றீங்க? இன்னும் பத்து நாள். எனக்கொண்ணும் இல்லை. உங்களுக்காக தான் பார்த்தேன்…”
“எனக்காக நீ பார்த்த? பார்த்து பார்த்து…” என்று விஜய் சிரிக்கவும்,
“ஹ்ம்ம்,…” என்ற சிணுங்கலுடன் அவனின் தோளில் இடித்தாள்.
“சொல்லாதீங்கன்னு சொல்லிருக்கேன்ல…”
“அப்போ நீ முதல்ல சொல்லாம இரு. இவ்வளோ நாளாகியும் இன்னும் அதையே பிடிச்சுட்டு இருக்க…” என்று தலையில் கொட்டியவன்,
“உன் அண்ணன் ரொம்ப பீல் பன்றான். அவன் கல்யாணத்துக்கு நீ முன்னாடியே இருக்கனும்னு. பத்து நாள் தானே? இருந்துட்டு வா…” என்றான்.
“நிஜமாவா? உங்களுக்கு ஒன்னுமில்லையா?…” என கேட்க,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ போ. நான் வேண்டாம்னு சொல்லமாட்டேன். ஆனா என்னை இப்பவே வர சொல்லாத. நான் மண்டபத்துக்கு கண்டிப்பா வருவேன். அதுக்கு மேல…”
“நான் ஒன்னும் எதிர்பார்க்கலை. இப்போ வந்து எப்பவும் போல ஜெகன் மாமா வீட்டுல இருக்கலாமே?…” என்று சொல்ல அதை அவன் காதில் வாங்கவே இல்லை.
“உனக்கு ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணா எடுத்து உள்ள வச்சுட்டு இருக்க? திரும்ப யார் பேக் பண்ண? நீயே வச்சுக்கோ…”
“நான் பார்த்துப்பேன்…” என்றவளுக்கு அவன் வருவான் என நம்பிக்கை இல்லை.
ஜோதியின் திருமண அழைப்பிதல் வைப்பதற்கு கூட அருமைநாயகத்தை வீட்டிற்கு வர அவன் அனுமதிக்கவில்லை.
பழனியப்பனுடன் பார்வதியும், ஜோதியும் வந்து வைத்துவிட்டு சென்றார்கள். அங்கே அருமைநாயகம் அப்படி ஒன்னும் அவன் வர தேவையில்லை என ஆடிக்கொண்டிருந்தார்.
அதை கேள்விப்பட்ட பவித்ராவிற்கு இன்னுமே வருத்தமாக போயிற்று. அத்தனைபேரும் விஜய்யை தங்களுடன் இயல்பாக ஒன்றுசேர்க்க முயற்சி எடுக்க அருமைநாயகம் மொத்தமாக அதை தடுத்துவிடுவாரோ என கவலைப்பட்டனர்.
“என்ன யோசனை பழனி?…” என்றான் அவளிடம்.
“ஹ்ம்ம், ஒண்ணுமில்லை…” என்ற உடை மாற்றி தயாராக வந்து சோபாவில் அமர்ந்தாள்.
அவளின் முகமே அவனை விட்டு பிரிவதற்கு சோர்வுடன் இருக்க பார்த்தவனுக்கும் தாளவில்லை.
“இப்படி மூஞ்சியை வச்சுட்டு நீ ஒன்னும் போக தேவை இல்லை. உன் மாமாவை வந்தவழியே திரும்பி போக சொல்லு…” என விஜய் அவளருகே வந்து போனை எடுக்க,
“அச்சோ சும்மா இருங்க மாமா. ஏன் இப்படி பன்றீங்க?…” என்றாள் சற்று கடுப்பாக.
“பின்ன ஊருக்கு போகனும்னா ஹேப்பியா போகனும். அதை விட்டுட்டு இப்படி இருக்க நீ?…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே ஜெகன் அழைத்துவிட்டான் இன்னும் ஒருமணி நேரத்தில் வந்துவிடுவதாக.
“இன்னும் ஒன் ஹாவ்ர்ல இருப்பாங்கலாம்…” என்றதும் காலை நீட்டி அவனின் மடியில் தலைசாய்க்க விஜய் மௌனமாய் அவளை வருடிக்கொடுத்தான்.
அனுப்பவும் மனமில்லை, ஆனாலும் அனுப்பாமலும் இருக்கமுடியவில்லை. திருமணம். அதை தொடர்ந்து சடங்குகள் என்று நிச்சயம் பவித்ரா அங்கே இருக்கவேண்டும் என பார்வதியும், ரஞ்சனியும் சொல்லியிருக்க மறுக்கமுடியவில்லை.
வசந்தி இன்னுமே விஜய்யிடம் நேரடி பேச்சுவார்த்தை இல்லை. யாரிடமாவது சொல்லி தான் சொல்லிக்கொண்டு இருப்பார். அதை எல்லாம் கண்டுகொள்வதும் இல்லை விஜய்.
இப்போது ஜெகனும் வந்துவிட பவித்ராவை வழியனுப்ப கீழே சென்றான். அத்தனை அறிவுரைகள். அவ்வளவும் ஜெகனிற்கு.
“நான் என்னடா பண்ணேன்? என்னை போட்டு படுத்தற?…” என புலம்ப,
“கூட்டிட்டு போறீங்க தானே? அப்ப நீங்க தானே பொறுப்பு. பார்த்துக்கோங்க…”
“இதுக்கு நீ அனுப்பாமலே இருந்திருக்கலாம்…” என்றான் ஜெகன்.
“யார் கேட்டா? இப்போ கூட ஒண்ணுமில்லிய. நீங்க உங்க மாமியார்ட்ட சொல்லிருங்க என்னோட இவ வரான்னு…” என்று விஜய் சொல்ல,
“உன்கிட்ட மனுஷன் பேசுவானா?…” என காரை கிளப்பிக்கொண்டு சென்றான்.
திருமணம் முடிந்து இத்தனை மாதத்தில் ஊருக்கு சென்றாலும் பவித்ராவுடனே தான் செல்வான். தாத்தாவின் இறப்பிற்கு பின் தான் பவித்ரா அவள் வீட்டிற்கே சென்றது.
அதுவரை ஜெகனின் வீடு தான் அவர்கள் போய் வந்து இருந்தது. அதுவும் இருமுறை மட்டுமே. இப்போதும் திருமணம் என்பதால் அத்தனை வேண்டி கேட்டுக்கொண்டார்.
மகளை அருகில் வைத்து பார்த்துக்கொள்ளவேண்டும் என வசந்தியும், பார்வதியும் ஆசைப்பட விஜய்க்கே கஷ்டமாக இருந்தது.
தன் பிடிவாதத்தினால் பவித்ராவின் கர்ப கால கவனிப்புகளை இழக்க வேண்டுமா என யோசித்தவன் சரி என்றுவிட்டான்.
ஏதோ அவளுக்காகென அனுப்பிவைத்தவனுக்கு அத்தனை மாதத்திற்கு பிறகான வெறுமை வீட்டில் இருக்கவிடவில்லை.
ஒருவாரம் தானே என நாட்களை எண்ணிக்கொண்டிருந்தவன் பல்லைக்கடித்துக்கொண்டு இருந்தாலும் திருமணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பே கிளம்பிவிட்டான் ஆகாஷ், ப்ரனேஷை கூட்டிக்கொண்டு.
“ஏன்டா உனக்கு மச்சான்னா நீ போயேன். எங்களையும் உயிரை வாங்கி ஏன்டா அழைச்சுட்டு போற?…” என கடுப்படிக்க அதை கேட்காத அளவிற்கு பாட்டு சத்தத்தை கூட்டிவைத்தபடி குஷியாய் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான்.
“நீ வாடா, நாம தூங்குவோம்…” என பின்னால் பிரனேஷ் படுத்துவிட ஆகாஷும் சென்றுவிட்டான்.
பழனிக்கு சென்றவர்கள் அங்கிருக்கும் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு தங்கி இருக்க ஜெகனுக்கு இரவானால் அவர்களுடன் சேர்ந்துகொள்வதுதான் வேலை.
போதாததிற்கு பவித்ராவை தன்னுடன் வந்து தங்கிக்கொள் என விஜய் அழைத்து வம்புசெய்ய அவளுக்கு தான் விழிபிதுங்கியது.
“எம்மாடியம்மா, நானும் பாத்தாலும் பாத்தேன். இப்படி ஒரு மனுஷன பாக்கலை. அப்பு புருஷன் பன்ற அழிசாட்டியம் இருக்கே? வேற யாருக்கும் வராது? முணுக்குன்னா போனு. இவ வேற இந்தா கிளம்பறேன்ற மாதிரியே நிக்கிறா….” என்று பார்வதியிடம் புலம்பிவிட்டார் வசந்தி.
“நம்ம பொண்ணு சந்தோஷமா இருக்காள்ல. அது போதும் வசு…” என்று பார்வதி தான் சமாதானம் செய்தார்.
விஜய்யை வீட்டிற்கு அழைக்க சொல்லி அருமைநாயகத்திடம் வந்து குடும்பத்தினர் பேச எகிறிவிட்டார் அவர்.
“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? அதெல்லாம் என்னால முடியாது. என்னை வீட்டுக்கு வரக்கூடாதுன்னுவான். அவன் இங்க வந்தப்போவும் மன்னிப்பு கேட்டு நான் உள்ள வான்னு கூப்பிட்டேன். எவ்வளவு எகத்தாளம்? என்னையே அவமானப்படுத்தினான்ல…” என சொல்லி மறுத்துவிட்டார்.
திருமணத்தன்று தான் இருவரும் நேரில் பார்த்துகொண்டது. அன்று வாசலில் வைத்து பார்த்ததுமே அருமைநாயகம் முகம் கடுகடுக்க,
“என்ன மாமா, வந்தவங்களை எல்லாம வான்னு கூப்பிடற பழக்கமில்லையா?…” என்று வேண்டுமென்றே விஜய் வம்பிழுக்க,
“உன்னையெல்லாம் கூப்பிட முடியாதுடா. நான் கூப்பிட்டா வந்த?…” என்று கேட்டவரின் கோபத்தை பார்த்தவனுக்கு சிரிப்பு பீறிட்டது.
“யோவ், எதுக்குய்யா இப்ப குதிச்சு குதிச்சு கொந்தளிக்கிற? எம்புட்டு எகிறினாலும் இருக்கிற உசரம் தான் உனக்கு. நீ கூப்பிட்டு உன்னை மதிச்சு நான் வருவேனா என்ன? போயா யோவ்…” என்று சொல்லி செல்ல,
“ஏன்டா சும்மா இருக்கற மனுஷனை வம்பிழுக்கற…” என வந்தான் ஜெகன்.
“கையை பிடிச்சா இழுத்தேன்? அந்தாள் முகராசி அப்படி. மூஞ்சியை மாத்த சொல்லுங்க…” என விஜய் ஜெகனையும் வாரிவிட்டு செல்ல,
“நீ இழுத்தாலும் இழுப்ப. சும்மா இருடா…” என்று விஜய்யை சொல்லிவிட்டு,
“டேய், பார்த்துக்கோங்கடா…” ஆகாஷ், ப்ரனேஷிடம் சொல்லி சென்றான் ஜெகன்.
பரஞ்ஜோதியை பார்த்து வாழ்த்திவிட்டு வந்தவன் முன் வரிசையில் தோழர்களுடன் அமர்ந்துகொண்டான்.
அவர்களுடன் பேசியபடி இருக்க ஒவ்வொரு உறவுகளாய் வந்து வந்து விஜய்யிடம் நலம் விசாரித்துவிட்டு செல்ல ஒற்றை வார்த்தை பதில் தான் அவனிடத்தில். அதிகமாய் சிரிப்பு கூட இல்லை.
“இது தப்பு விஜய், தேடி வந்து பேசறாங்க. நீ கொஞ்சம் நல்லா தான் சிரிச்ச முகமா பதில் சொல்லேன்…” என பிரனேஷ் கண்டிக்க,
“இத்தனை பேர் முன்னாடி தானடா அத்தனையும் நடந்துச்சு. அன்னைக்கு வேடிக்கை பார்த்துட்டு தானே இருந்தாங்க? யாராச்சும் முன்வந்து அம்மாவையோ, அப்பாவையோ, இல்லை ஆகாஷையோ பார்த்தாங்களா? ஒருத்தரும் இரக்கமா பார்க்கலையே?…” என்றான் சீற்றத்தை அடக்கிய குரலில்.
“சரிடா, விடேன்…” என ஆகாஷ் அவனின் தோளை அணைத்து சமாதானம் செய்தான்.
“கால்ல விழுந்தப்போவும் வேடிக்கை பார்த்துட்டு தான நின்னானுங்க. இப்போ வந்து பேசினா நானும் நல்லா பேசிடனுமா? வேணும்னா நீ சிரிச்சு சிரிச்சு பேசேன். பார்ப்போம்…” என்று சொல்ல இருவரும் கப்பென்று வாயை மூடிக்கொண்டனர்.
“ஓகே, ரிலாக்ஸ்…” என சொல்லும் பொழுதே பழனியப்பன் வந்துவிட்டார்.
அவர்களுக்கு ஏதாவது வேண்டுமா என கேட்டு வந்து நிற்க மறுத்து அவரை அனுப்பிவைத்தான்.
அவனின் முகம் இன்னுமே சரியில்லாததை போல இறுக்கமாக இருக்க அவனை கவனித்துக்கொண்டே இருந்த பவித்ரா வந்துவிட்டாள் இவனை தேடி.
“நகர்ந்துக்கோடா…” என்ற விஜய் பிரனேஷ் அமர்ந்திருந்த சேரில் அவள் வந்ததும் அமர்த்தினான்.
“ஹேய் கேர்ள், எதுக்கு இவ்வளவு வேகமா வர? மெதுவா நடக்க வேண்டியது தானே? நான் என்ன ஓடியா போக போறேன்…” என்று சிரிக்கவும் தான் பவித்ரா முகம் தெளிவாகியது.
“நீங்க பார்க்க கோவமா இருக்கற மாதிரி இருந்துச்சா அதான் என்னன்னோன்னு பயந்துட்டேன்…” என்று சொல்லவுமே விஜய்யின் முகம் மென்மையானது.
“நத்திங், சும்மா தான்…” என்று சொல்லி அமைதியாகிவிட்டான்.
பவித்ராவும் ஒன்றும் கேட்கவில்லை. தன்னை கண்டதுமே அவன் குளிர்ந்துபோவதை கண்டுகொண்டவள் அவனைவிட்டு நகரவில்லை.
“உன்னை மேடையில தேட போறாங்க பழனி. போ. நான் இப்போ சில் தான் கேர்ள்…” என்றான்.
“இல்லை இருக்கட்டும். தாலி கட்டும் போது போய்க்கறேன்…” என்று இருந்துகொண்டாள்.
அவளின் கையை தன்னோடு கோர்த்துக்கொண்டவன் மேடையை பார்த்து திரும்பி அமர்ந்தான்.
வசந்தி இதை பார்த்துவிட்டு பவித்ராவை பார்வதியிடம் திட்டிக்கொண்டு இருந்தார்.