“தாலி கட்டு நேரத்துல இவ இங்க கூட இல்லாம அங்க போய் உட்கார்ந்துட்டாளே? அந்த மனுஷன் வேற கையை பிடிச்சுக்கிட்டு விடுவேனான்னு இருக்காரு…” என்று புலம்பிய வசந்தி,
“ரஞ்சி போய் கூப்பிடு அப்புவை. எல்லாரும் பார்க்கறாங்க…” என்றார் வசந்தி.
“வசும்மா, இப்ப என்ன பார்த்தா பார்க்கட்டும். முதல்ல இன்னைக்கு சுத்தி போடனும் ரெண்டுபேத்துக்கும். ம்மா நீங்க ஞாபகப்படுத்துங்க…” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் ரஞ்சனி.
“என்னக்கா?…” என பார்வதியிடம் திரும்ப,
“நீ இங்க கவனத்தை வை. அவ வரும் போது வரட்டும். எந்திச்சதுல இருந்து அவளும் அலைஞ்சுட்டே இருக்கா. இது மட்டும் அவருக்கு தெரிஞ்சா கைய்யோட கூட்டிட்டு போய்டுவாரு…” என்று பார்வதி எச்சரித்தார்.
“ம்க்கும், ஊர் உலகத்துல இல்லாத குடும்பம் தான் போங்க…” என்று சொல்லி நொடித்தாலும் மகள், மருமகன் ஜோடிப்பொருத்தத்தை எண்ணி சில்லாகிக்காமலும் இல்லை.
“ரஞ்சி சொன்னது சரித்தான். அம்புட்டு கொள்ளி கண்ணும் இவங்க மேலதேன். கண்ணை நோண்டி உடப்புல போட்டு எரிக்க…” என்று அங்கிருந்தே திருஷ்டி வழித்து சொடக்கிட,
“முதல் கண்ணு உன் மாமாவோடது தான். அங்க பாரு என்னமா பார்த்து முறைக்கிறாருன்னு?…” பார்வதி சொல்லவும் வசந்தியின் முகம் போன போக்கில் சிரித்துவிட்டார் அவர்.
சரியாக திருமாங்கல்யம் பூட்டும் வேளையில் பவித்ராவை மேடைக்கு அனுப்பி வைத்தவன் இங்கிருந்தே வாழ்த்திவிட்டு கிளம்பிவிட்டான்.
அங்கே தண்ணீர், உணவு என எதையும் அவன் எடுத்துக்கொள்ளவில்லை. மறுநாள் மறுவீடு என முடிந்ததும் பவித்ராவை அழைத்துகொண்டு ஊர் கிளம்பிவிட்டான்.
காரில் உடன் வந்த ஆகாஷ், பிரனேஷ் இருவரும் பொருமத்தான் செய்தனர் விஜய் செய்த அலும்பில்.
பாட்டை போட விடாமல், காரையும் அத்தனை நிதானமாக அவன் காரை ஓட்டிக்கொண்டு வர பாதியில் ஆகாஷின் கையில் காரை கொடுத்தவன் அவனை வாட்டி எடுத்துவிட்டான்.
“ஏன்டா இத்தனை வருஷம் கார் ஓட்டற? மேடு பள்ளம் பார்த்து ஓட்டிட்டு போக தெரியாதா?…” என்று வாய் ஓயாமல் விஜய் பேச,
“டேய் நீ ட்ரைவ் பண்ணேன்?….” என்று ப்ரனேஷிடம் கெஞ்சிவிட்டான் ஆகாஷ்.
“சும்மா இருங்க, நார்மலா தான போறாங்க. நீங்க ஏன் தொணதொணன்னு?…” என பவித்ரா சொல்ல,
“அப்படி சொல்லும்மா, உன் புருஷனுக்கு வரும் போது கூட்டிட்டு வந்த எங்களை எல்லாம் மனுஷங்களா தெரியாது. அப்ப ஸாருக்கு மேடுபள்ளம் தெரியாது. இப்போ மட்டும் ஆயிரம் குறை. குடும்பஸ்தன் பேர்ல அராஜகம் பன்றான்…” என்று சொல்லியவன் விஜய்யின் முறைப்பில் வாயை மூடினான்.
இப்படி பல பல கலாட்டாக்களுடன் சென்னை வந்து சேர்ந்தார்கள். பவித்ராவிற்கு பரிட்சை முடிந்ததும் வளைகாப்பு என்று சொல்லியிருக்க அதுவும் நல்லவிதமாய் எழுதி முடித்தாள்.
முடிக்க வைத்தான் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். அரியர்ஸ் வந்துவிட கூடாது என்பதில் அவளுக்கு மிக எளிமையாக பாடம் சொல்லி தர நல்லவிதமாகவே எழுதியிருந்தாள்.
“இனி அவங்க நினைப்பாங்க, இவங்க பார்க்கங்கன்னு சொல்லமாட்ட…” என்று விஜய் பெருமூச்சு விட்டான் கடைசி பரீட்சை அன்று.
அதன் பின்னர் என்ன செய்வதென்று அவளின் முடிவிலே அவன் விட்டுவிட முதலில் குழந்தை பிறக்கட்டும் என்று தள்ளிபோட்டாள் பவித்ரா.
வளைகாப்பு என்ற பேச்சில் வீட்டில் மீண்டும் முருங்கைமரம் ஏறினார் அருமைநாயகம்.
“என்ன நினைச்சுட்டு இருக்காங்க அவங்க? சம்பந்தின்னா ஒரு எல்லைக்கு தான். நமக்கென்ன ஒன்னுமில்லாமளா இருக்குது? அதெல்லாம் முடியாதுன்னு நீ வாயை திறந்து சொன்னா என்னடா?…” என்று பழனியப்பனிடம் வீட்டில் எகிறிக்கொண்டு இருந்தார்.
“அவங்க அக்கறையா எடுத்து நடத்தறாங்க. அதுக்கே என் பொண்ணு புண்ணியம் பண்ணிருக்கனும்…” என்று முடித்துக்கொண்டார் பழனியப்பன்.
“என்ன பெருசா புண்ணியம் பாவம்ன்னு? என் பொண்ணுக்கு நம்ம வீட்டுல தான் எல்லாம் நடக்கனும். இல்லன்னா அவன் வீட்டுல நடத்தி இங்க அழைச்சிட்டு வாங்க. அதை விட்டுடு சம்பந்தகாரங்க வீட்டுல வச்சு நடத்தினா நமக்கு மரியாதை இல்ல பார்த்துக்கோ…”
“அப்ப உங்க மரியாதைக்காகவும், உங்க சம்பந்தகாரங்க வீட்டுல உங்க பேரை காப்பாத்தும் தான் இந்த முடிவு எடுத்தீங்களா?…” என பழனியப்பன் கேட்டதும் வாயடைத்து போனார் அருமைநாயகம்.
“டேய் என்ன வார்த்தை பேசற?…” என்ற அதிர்ந்த பார்வை பார்க்க,
“பெரியமாப்பிள்ளையும், சின்னமாப்பிள்ளையும் முடிவு பண்ணிட்டாங்க. அதை மாத்த என்னால முடியாது. வளைகாப்பு பெரியமாப்பிள்ளை வீட்டுல தான் நடக்கும்…” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார்.
மற்றவர்களும் கலைந்து செல்ல அருமைநாயகத்தின் மனதிற்கோ அத்தனை கஷ்டமாய் இருந்தது.
யார் வீட்டு முறையை யார் செய்யறது என தாங்கமுடியாமல் அரற்றிக்கொண்டு இருந்தார்.
ஏற்கனவே ஊராரிடம் அத்தனை ஏச்சு பேச்சுக்கள் வேறு. ‘இவர் செய்ய வேண்டியதை இவர் சம்பந்தி எடுத்து செய்யறார் அவர் மனுஷன். இவரும் இருக்காரே?’ என அவரின் காதுபடவே பேசி சென்றார்கள்.
‘நான் என்ன மாட்டேன்னாடா சொல்றேன்? பக்கத்துலையே விடமாட்டேன்றானே?’ என புலம்பாத குறை தான் அருமைநாயகத்துக்கு.
எங்கும் நியாயம் சொல்கிறேன் என எந்த கருத்தையும் தூக்கிக்கொண்டு செல்லமுடியவில்லை.
‘முதல்ல உங்க குடும்பத்துக்கு நல்ல மனுஷனா இருங்க’ என நக்கலாக பேசிவிடுகின்றார்கள் என்று தன்னுடைய வட்டத்தை சுருக்க ஆரம்பித்திருந்தார்.
செல்லும் இடமெல்லாம் அவமானம். ஏதோ ராட்சசனை பார்ப்பதை போல தன்னை பார்த்து வைக்க உள்ளுக்குள் ஒடிந்து போனாலும் காட்டிக்கொள்ளத்தான் விருப்பமில்லை.
மனைவியிடம், மகனிடம் என பேசி ஜெகனிடம் கூட பேசிப்பார்த்தார். அவரின் பேச்சுக்கள் எடுபடவே இல்லை.
ஜெகனின் ஊரில் மண்டபத்தில் வைத்து வளைகாப்பு என்றும், வளைகாப்பு முடிந்து ஜெகனின் வீட்டிற்கு அழைத்து வருவதாகவும் சொல்லிவிட்டார்கள்.
ஜெகன் பவித்ராவின் தலைபிரசவம் தன் வீட்டில் என்றுவிட்டான் விஜய்யிடம். அவனின் தந்தையும் முடிவாய் அதை ஆமோதித்தார்.
“எந்த நிமிஷம் என் மகளை மாதிரின்னு சொன்னேனோ அவளுக்கு எல்லாம் நான்தான் செய்வேன்…” என சொல்லிவிட்டான் விஜய்யிடம். அவர்களின் அதீத அன்பில் எந்த தலையீடும் செய்யவில்லை விஜய்.
சொன்னபடி வளைகாப்பின் முதல் நாளே விஜய்யும் வேடச்சந்தூர் வந்துவிட்டான் பவித்ராவுடன்.
அங்கு உள்ள மண்டபத்தில் ஏற்பாட்டுகள் நடந்தேற அருமைநாயகமும் வந்து சேர்ந்தார் அன்று காலை.
வளைப்பூட்டு நல்லபடியாக நடந்து முடிந்திருக்க மதியஉணவு நேரம் அனைவரும் சென்றிருக்க பவித்ராவை அங்கிருந்த அறைக்குள்ளேயே ஓய்விற்கு அனுப்பிவைத்தனர்.
அங்கேயே சாப்பிட எடுத்து வருவதாக சொல்லி ரஞ்சனி வெளியேற விஜய் உள்ளே சென்றான்.
வெகுநேரம் அமர்ந்திருந்தது, தலையில் வைத்திருக்கும் அலங்காரம், பூவின் கனம் என்று அவளை சோர்வடைய செய்திருந்தது.
விஜய்யை பார்த்ததுமே கட்டிலில் சாய்ந்திருந்தவள் மெல்ல அசைந்து எழுந்து அமர்ந்தாள்.
அவளை அப்படி பார்க்க பார்க்க தெவிட்டவில்லை கொண்டவனுக்கு. கண்ணில் நிறைத்தபடி அவளருகே வந்தவன்,
“என்னடாம்மா, ரொம்ப டல்லா இருக்க?…”என கேட்டுக்கொண்டே கைக்குட்டையால் நெற்றியில், கன்னத்தில் என இருந்த சந்தனங்களை ஒழுங்குபடுத்தினான்.
“ஃபுல்லா துடைச்சிடாதீங்க. அக்கா அப்பவே சொன்னாங்க….” என அவனின் கை பிடித்து தடுக்க,
“ஓகே, ஓகே. கையை விடு முதல்ல…” என்று அவளின் கன்னத்தில் துடைத்தவன்,
“நைட் நான் கிளம்பறேன் கேர்ள். நீ மேனேஜ் பண்ணிப்ப தானே?…”
“எப்பவும் கேள்வின்னா கேள்வியா கேளுங்க. இப்படி அதுல பதிலையும் வச்சுட்டு கேட்கறது…” என்றவளை தோளோடு அணைத்துக்கொண்டவன்,
“உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் பழனி. உனக்கு புரியுதா?…” என்றான்.
ஒரு கை தோளை வளைத்திருக்க இன்னொன்றோ வயிற்றில் பதிந்திருந்தது. குழந்தை இங்குமங்கும் அசைய விஜய்யின் முகத்தில் அப்படி ஒரு பரவசம்.
“என் பேபி மூவ் பன்றா பாரு…” என்றான் அவளிடத்தில்.
அவனுக்கும் குழந்தைக்குமான அந்த நேரங்களில் பவித்ராவால் அவனிடம் பேசவே முடியாது.
அவனின் அந்த உணர்வுகளை எல்லாம் மிச்சமில்லாமல் கண்ணிமைக்காமல் உள்வாங்கிக்கொள்வாள்.
அன்றும் அவன் பேச பேச கேட்டபடியே தோள் சாய்ந்து இருந்தாள். ரஞ்சனியின் குரல் கதவின் ஓரம் கேட்டதும் மெல்ல இருவரும் விலகி அமர்ந்தனர். சாப்பாட்டை கொண்டுவந்தவள் சிரித்தபடி வைத்துவிட்டு,
“ரெண்டுபேருமே சாப்பிடுங்க. நிறையவே தான் எடுத்துட்டு வந்தேன். வேற எதுவும் வேணும்னா சொல்லுங்க…” என நகர போக,
“உங்களுக்கு கொண்டுவந்ததா இதெல்லாம்?…” என்றான்.
“ஆமா, ஆனா நீங்க சாப்பிடுங்க….” என சொல்லி அவள் சென்றுவிட இருவருமாக சாப்பிட ஆரம்பிக்கவும் ஜெகன் வந்துவிட்டான்.
“ஏன்டா உனக்காக நாங்க அங்க வெய்ட் பண்ணினா நீ இங்க சாப்பிட்டுட்டு இருக்க?…” என்று கேட்கும் போதே பாத்திரங்களில் உணவுகள் இங்கே வந்துவிட குட்டி விருந்தை போல அத்தனைபேரும் கூடிவிட்டார்கள் அந்த அறையில்.
பின் மாலை நேரம் மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு கிளம்ப சம்பிரதாயமாக விஜய் அறைக்குள் இருந்துகொண்டான்.
வீட்டிற்கு சென்றதும் வருகிறேன் என சொல்லி இருந்துகொள்ள சொல்லியதை போல விஜய் வந்தான்.
இரவு உணவை முடித்துக்கொண்டு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
செல்லும் வரை மனதே இல்லை. பவித்ராவின் மனது அவனின் வாட்டமான முகத்திலும், தடுமாற்றமான பேச்சிலும் என இருந்தது.
“அக்கா, அவங்க மனசே இல்லாம போறாங்க…” என ரஞ்சனியிடம் புலம்ப,
“எல்லாருக்கும் அதான். வளைகாப்பு முடிஞ்சி பொண்டாட்டியை பிரிஞ்சி தான் இருக்கனும். புதுசா நடக்கற மாதிரி புலம்பிட்டு இருக்காம படுத்து தூங்கு…” என்றார் வசந்தி.
பவித்ராவிற்கு துணையாக பார்வதி அந்த அறையில் படுத்துக்கொள்ள நள்ளிரவில் லேசாய் இடுப்பு வலிக்க ஆரம்பித்தது.
பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு நர்ஸை வரவழைத்து பார்க்க சூட்டுவலி தான் என்றதுமே அதற்கு கை வைத்தியம் செய்து முடித்தார்கள்.
பவித்ராவிற்கு வலி குறைந்து லேசாய் கண்ணயர வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம். ஜெகன் தான் பார்க்க சென்றான்.
“என்னடா ஊருக்கு போறேன்னு திரும்ப வந்துட்ட?…” என்று அந்த நேரத்தில் வந்திருந்த விஜய்யை பார்த்ததுமே கேட்டான்.
“அதிருக்கட்டும், இன்னும் யாரும் தூங்கலையா? எல்லாரும் முழிச்சிருக்கீங்க?…” என்று கேட்டதும்,
“எல்லாருமா?…” என திரும்பி பார்க்க பவித்ராவை தவிர வீட்டில் இருந்தவர்கள் அத்தனைபேரும் வாசலுக்கு தான் வந்திருந்தார்கள்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லமாட்டியாடா?…” என்றான் ஜெகன் மீண்டும்.
“பாதி போய்ட்டிருக்கும் போதே மனசு கேட்கலை. அதான் திரும்பி வந்துட்டேன். டயர்டா இருக்குண்ணா…” என்று விஜய் உள்ளே வர,
“முதல்ல அவன் ரெஸ்ட் எடுக்கட்டும்…” என ஜெகனின் தந்தை சொல்லவும் பவித்ராவின் அறைக்கு சென்றான் விஜய்.
அப்போதுதான் தூங்கியிருந்தாள் அவள். சப்தம் எழுப்பாமல் அவளை பார்த்தவன் மனைவியின் முகமெல்லாம் வியர்த்திருப்பதை கண்டு மீண்டும் வெளியே வந்தான்.
“என்னாச்சுண்ணா அழுதாளா?…” என ஜெகனிடம் கேட்க,
“ரொம்ப பன்றடா நீ. சூட்டு வலி எடுத்திருச்சு. அதான் வலி இருக்கும்ல…” என சொல்லவும்,
“பயப்படும்படி இல்லப்பா, இது எல்லாருக்கும் வரது தான்…” என பார்வதி அவனை சமாதானம் செய்தார்.