“சரி எல்லாரும் போய் தூங்குங்க. காலையில பேசிக்கலாம்…” என ஜெகன் சொல்லவும் மீண்டும் அந்த அறைக்குள் வந்து கதவை சாற்றினான்.
விடியற்காலை போல திரும்பி படுக்க பார்த்தவளுக்கு ஆச்சர்யம். அவனின் கைவளைவில் அவள் இருக்க விஜய் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான்.
சந்தோஷத்தில் அவனை இறுக்கமாய் கட்டிக்கொள்ள பார்த்து முடியாமல் அவள் திணற விழித்துவிட்டான் விஜய்.
“பேபியை வச்சுட்டு இப்பத்தான் உனக்கு இப்படியெல்லாம் தோணுமா கேர்ள்?…” என கேட்டபடி அவளை அணைத்துக்கொண்டே நெற்றியில் முட்ட,
“எப்போ வந்தீங்க? சொல்லவே இல்லை?…” என்றாள் லேசாய் கலங்கிய விழிகளுடன்.
“ஏய் ச்சீ, என்னடி இது? கண்ணை கசக்கிக்கிட்டு? காலாங்காத்தால சிரிச்சுட்டே இருக்கனும்…” என்று கன்னத்தை கிள்ளினான்.
“நேத்து நைட் வலி. ரொம்ப பயந்துட்டேன்…” என சொல்லும் பொழுதே அவளை ஆறுதலாய் அரவணைத்தவன்,
“அதான் நான் வந்துட்டேன்ல. ஒன்னும் பிரச்சனை இல்லை…” என்றான் அவளின் பயத்தை போக்கும் விதமாக.
மீண்டும் அந்த பேச்சிலும், அணைப்பிலும் பவித்ரா உறங்கிவிட அவளை நகர்த்தி படுக்க செய்தவன் வெளியே வந்து பேசியதில் வசந்தி குதிக்க ஆரம்பித்தார்.
“தலைபிரசவம் தாய் வீட்டுல தான் பார்க்கனும். இங்க அதுக்கும் வழியில்லனும் போது இங்கையாச்சும் பார்க்கலாம்ன்னா திடீர்னு கூட்டிட்டு போறேன்னு சொன்னா எப்படி?…” என விஜய்யை பார்க்காமல் அவர் புலம்ப,
“நான் பவித்ராவை யாரை கேட்டும் என்னோட அழைச்சுட்டு போகலை. எப்படி அவளை கல்யாணம் செஞ்சுக்கனும்னு முடிவு பண்ணினேனோ அதே மாதிரி அவளோட எல்லாமும் நான் பார்க்கனும்னு நினைக்கறேன். இதுல என்ன தப்பு இருக்கு?…” என்றவன்,
“இதுவே எல்லாம் உங்க சார்பா நடந்திருந்தா நீங்க கேட்கறதுல நியாயம் இருக்கு. ஆனா அப்படியா செஞ்சீங்க?…” என்றான் கோபத்துடன்.
அங்கே பிரச்சனை பெரிதாகிவிடுமோ என பயந்து போன ஜெகன் அவனின் தந்தையிடம் பேச,
“இல்லப்பா விஜய் அவன் இஷ்டப்படி செய்யட்டும். இப்போ என்ன நாம யாராவது போய் கூட இருந்து கவனிச்சுப்போம்…” என்று சொல்ல்விட்டார்.
அவருக்கு தெரிந்தது, முதல்நாள் இரவில் அவன் திரும்பி வரும் போதே இந்த முடிவுடன் தான் வந்திருக்கிறான் என்று. சொன்னாலும் மாறபோவதில்லை அவன். எனவே சம்மதித்தார்.
அவனின் உணர்வுகளும் புரிந்தது. தாயை கண்முன்னே அநியாயமாய் இழந்தவன்.
அவன் பவித்ராவை பார்த்துக்கொள்வதை பார்த்துக்கொண்டுத்தானே இருக்கிறார்கள்.
அவனின் விருப்பப்படியே செய்யட்டும் என்று சொல்லிவிட வசந்தி பேச இடமின்றி போனது. பின் விஜய்யாகவே தான் இதை சொன்னான்.
“நீங்க வந்து அங்க இருந்து பார்த்துக்கறதுல ஒரு ஆட்சேபனையும் இல்லை…” என சொல்லிவிட அன்று ஒரு ட்ரைவரை வைத்துக்கொண்டு சென்னைக்கு பவித்ராவுடன் கிளம்பிவிட்டான்.
மறுவாரமே பார்வதி, வசந்தியுடன் வந்துவிட்டார் பவித்ராவை கவனித்துக்கொள்ள என்று.
ஒன்பதாம் மாதம் வேறு. எப்போது வேண்டுமானாலும் பிள்ளை பிறக்கலாம் என பார்த்து பார்த்து கவனித்துக்கொண்டார்கள்.
வசந்திக்கு தான் அத்தனை பயம் மதுவந்தியின் குரலால். அதை அமர்த்தி வைக்கும் படி பவித்ராவிடம் அவர் சொல்லிக்கொன்டிருக்க அதை கேட்டுவிட்டவன்,
“இந்த வீடு இப்படித்தான். எங்கம்மாவோட குரல் எப்பவும் எங்களோடு தான் இருக்கும். முடிஞ்சா பழகிக்கோங்க. இல்லையா காதை மூடிக்கோங்க…” என்றுவிட்டான். பின் வசந்தி எங்கே பேச?
நினைத்ததை போலவே பெண்குழந்தை. அன்று விஜய்யின் மனநிலையையும், மாதவனின் உணர்ச்சிகளையும் வார்த்தைகளில் வடிக்க இயலவில்லை.
குழந்தையை கையில் ஏந்தியவன் மனைவியையும், மகளையும் மாறி மாறி பார்த்தபடியே இருந்தான் பவித்ரா மயக்கம் கலையும் வரை. அவள் லேசாய் கண் திறக்கவுமே,
“ஹேய் கேர்ள், மதும்மா…” என்று மகளை நீட்ட்டியவனின் விழிகளில் இருந்து இரண்டு நீர்த்துளிகள் கண்ணிலிருந்து உருண்டோட அதை பார்த்திருந்த குடும்பத்தினருக்கு அத்தனை நெகிழ்ச்சி.
மாதவன் வீடியோ காலில் பார்த்து பார்த்து பூரித்து போனார். வார்த்தைகள் தடுமாற கண்ணீரே அவர்களின் சந்தோஷத்தை சொல்ல நெஞ்சம் சந்தோஷத்தில் விம்மி வெடித்துவிடும் போலானது.
குழந்தையை அருமைநாயகம் தொடவும் அவன் அனுமதிக்கவில்லை. அத்தனைபேரும் வந்து பார்த்துவிட்டு செல்ல அவர் சென்னைக்கு வரவில்லை என்றாலும் பேர் சூட்டவென்று கோவிலுக்கு வந்திருக்க அங்கு வந்திருந்தார்.
“மதுவந்தி…” என விஜய் மகளின் காதில் சொல்ல அந்த பேரில் ஆட்டம் கண்டது அருமைநாயகத்தின் பிடிவாதம்.
லேசாய் எட்டி அந்த குழந்தையை பார்க்க முனைய பார்க்கத்தானே உன்னால் முடியும் என்று விஜய் கண்டுகொள்ளவில்லை.
அதன் பின்னர் ஒவ்வொரு விசேஷத்திற்கும் விஜய்யின் குழந்தைக்கு அத்தனையும் ஜெகனின் தந்தையும், ஜெகனும் செய்ய அருமைநாயகத்துக்கு பற்றிக்கொண்டு வந்தது.
“இதெல்லாம் நான் செய்யவேண்டியது…” என்று மனைவியிடம் பொருமுவார்.
ஆனாலும் என்ன செய்வது? அவருக்கு உறவிருந்தும் அருகே வரும் உரிமையை கூட தர மறுத்தான் விஜய்.
எந்தகாலத்திலும் அவரை மன்னிக்க தயாராகவே இல்லை. மாறவும் தயாராக இல்லை.
அருமைநாயகத்திற்கு அவனின் மகளை பார்க்க பார்க்க அப்படியே தங்கையே மீண்டும் பிறந்து வந்ததை போல ஒரு தோற்றம்.
ஆனால் உருவம் மதுவந்தியாக இருந்தாலும் அதே விரைப்பும், முறைப்பும் நிமிர்வும் என விஜய்யை கொண்டு பிறந்திருந்தாள் குழந்தை.
பழனியப்பனிடம் கூட ஒட்டிவிடும் குழந்தை அருமைநாயகத்தை பார்க்கும் பார்வை எல்லாம் விஜய்யை போலவே தான் இருந்தது.
‘என் பேத்தி’ என மார்தட்டிக்கொள்ள நினைத்தாலும் ஏளனமாய் பார்ப்போர்கள் தான் அதிகம் .
எண்ணங்களை வெளிப்படுத்தமுடியாத வலியில் தனக்குள் சுருங்க ஆரம்பித்தார் அருமைநாயகம். செய்தவை எல்லாம் கண்முன் வந்து குத்தி காண்பிக்க தேற்ற ஆளில்லாமல் தனிமையின் கொடுமையில் விழுந்தார்.
பவித்ராவும் விஜய்யும் தங்கள் பெண்ணை அப்படியே மதுவின் வார்ப்பாகவே அவளை வளர்த்தர்கள்.
“மாறாப்பா…” என்னும் குரலில் எப்போதுமே மனதிற்குள் கலங்கி போவான் அவன்.
“மாறா டைம் ஆச்சுப்பா..” என்னும் மதுவின் அந்த குரலுக்கு,
“மதும்மா நா மாறாப்பா எழுப்பி…” என தந்தைக்கு முன்னால் மகள் எழுந்துகொள்வாள்.
“மாறாப்பா மதும்மா கூப்பிட்டாச்சு. எம்பி எம்பி…” என்று அவனை லேசாய் தொட்டதுமே மகளை ஆசையுடன் வாரிகொள்வான் விஜய்.
பவித்ரா வந்ததும் மதுவின் குரலுக்கு பதில் குரலானாள். குழந்தை வந்ததும் மதுவே உயிராகி வந்ததை போல இருந்தது.
அதிலும் விஜய்யை கவனிக்கும் பொழுதுகள் எல்லாம் பவித்ராவிற்கு போட்டிக்கு வருவாள் குழந்தை. ‘என் மாறாப்பா நான் நான்’ என முந்திக்கொண்டு வர இருவரையும் அரவணைத்து செல்வதென்னவோ விஜய் மட்டுமே.
மாதவன் இன்றளவும் ஆசிரமத்தில் தான். அவரால் அதை விட்டு வரமுடியாது. ஆனால் இப்போது விடுமுறை என்று வந்துவிட்டால் அதிகமாக முழுவதும் கேரளா வாசம் தான் விஜய்க்கும், பவித்ராவிற்கும்.
அங்கிருக்கும் பொழுது நித்தமும் மகளுடன் ஆசிரமம் சென்றுவிடுவான். குழந்தைக்கும் மதும்மா, மாதவன் மாதுப்பா ஆக குடும்பத்தின் சந்தோஷம் மீண்டுவந்ததை போல ஒரு நிறைவு மாதவனுக்கு.
ஆகாஷ், பிரனேஷ் இருவருக்குமே திருமணம் ஆகியிருக்க முடிந்தளவு நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பங்களாய் சேர்ந்து கேரளாவில் தான் முற்றுகை.
விஜய்யுடன் ஆகாஷ், பிரனேஷ், ஜெகன், ஜோதி என அவரவர் குடும்பத்தை அழைத்துக்கொண்டு வந்துவிட வீடே ரெண்டுபடும்.
குழந்தைக்கு ஐந்து வயதாகிவிட அவள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததும் ஒருவருடமாக ப்ரனேஷின் லேபிள் தான் பவித்ரா பணிபுரிய ஆரம்பித்திருந்தாள்.
இந்தமுறை விஜய் முன்பே கிளம்பியிருந்தான் செமஸ்டர் விடுமுறையில். மற்றவர்கள் நேரம் பார்த்து வருகிறோம் என்று சொல்லியிருக்க இங்கே பரபரப்பாக பேக்கிங் நடந்துகொண்டிருந்தது.
“நீ உனக்கு சீக்கிரம் எடுத்து வை மதும்மா, இப்போ கிளம்பினா தானே அங்க போக கரெக்ட்டா இருக்கும்?…” என பவித்ரா மகளுக்கு சொல்லிக்கொண்டிருக்க அவள் தந்தையின் பெட்டியை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“மாறாப்பா…” என்று மகள் கத்த,
“வந்துட்டேன். மதும்மாவுக்கு என்னவாம்?…” என்று குளித்து முடித்து வெளியே வந்தவன் ஈரத்துடன் மகளை அள்ளி தூக்கிக்கொள்ள,
“உங்க ஸீ ப்ளூ டிஷர்ட் இல்ல…” என்று உதடுபிதுக்கினாள் குழந்தை.
“அப்பா இப்ப ட்ராவல்ல போட எடுத்து வச்சிருக்கேன் குட்டிம்மா…” என்றான் வாஞ்சையுடன்.
கன்னத்தில் விரல் வைத்து யோசித்தவள் உடனே அவனிடமிருந்து துள்ளி இறங்கி சென்று தனது பெட்டியை திறந்து அதே நிற உடையை எடுத்தாள்.
“ம்மா, நானும் இதே வியர் பண்ணிக்கறேன். போய் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்…” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.
இருவரின் அலப்பறைகளை பார்த்து தலையை அசைத்துக்கொண்டவள் தன்னுடையை குனிந்து பார்க்க ஒரு ஆரஞ்ச் நிற குர்தி அது.
அவள் நினைப்பதை கண்டுகொண்டவன் சிரிப்புடன் அறை கதவை மூடிவிட்டு அவளை கைவளைவில் கொண்டுவந்தான்.
“என்னவாம் என் கேர்ள் முகமே டல்லாகிடுச்சு?…” என்றபடி கழுத்தில் முகம் புதைக்க,
“உங்க பொண்ணு வந்திர போறா. தள்ளுங்க…” என்றாள் பவித்ரா.
“அதெல்லாம் இல்லை. நீ சொல்லு…” என்று அணைப்பை இறுக்கிக்கொண்டே கேட்டான்.
“பின்ன, ரெண்டு பேரும் மேட்சிங் ட்ரெஸ். நான் மட்டும் என்னவாம்?…” என்று முகத்தை தூக்கிவைத்துக்கொண்டாள்.
“நீயும் போடேன். நான் ஹெல்ப் பன்றேன்…” என்று விஷமத்துடன் அவன் சொல்ல,
“தேவையே இல்லை. நீங்களே போட்டுக்கோங்க…” என்று அவனை தள்ளிவிட பார்க்க,
“ஹேய் பார்த்து பார்த்து…” என்று அவளை பிடித்து நிறுத்த,
“இப்பலாம் நீங்க தான் அதிகமா சொல்றீங்க…” என கிண்டல் பேசினாள் பவித்ரா.
“நேரம்டி. எல்லாம் சகவாச தோஷம். உன்னை ஊருக்கு போய்ட்டு பேசிக்கறேன்…” என்றவன் உடையை மாற்றிவிட்டு வெளியே வர மகள் தாயிடம் உடை மாற்றி வருமாறு சொல்லிக்கொண்டு இருந்தாள்.
“மதும்மா அப்பாவோட மொபைல், சார்ஜர் பாரும்மா…” என்று மகளை அனுப்பியவன்,
“என்னமோ சொன்ன? பார்த்தியா என் பொண்ண?…” என்றான் பெருமையுடன்.
உண்மை தான். விஜய் எப்படியோ அப்படியே குழந்தையும் தன் தாயை பார்த்துக்கொள்வது. ஆனால் தகப்பன் என்று வரும் பொழுது கொஞ்சமும் விட்டுக்கொடுக்காத ஒரு குணம்.
பவித்ராவிற்கும் அதில் ஏக சந்தோஷம். தாயை மகள் வடிவில் அவன் காண்கிறான். வாழ்க்கை இப்படி வசந்தமென மாறும் என அவள் நினைத்ததில்லை. மாறிவிட்டது, மாற்றிவிட்டான்.
அதில் எப்போதுமே எல்லையில்லாத காதல் பெருகும் விஜய்யின் மேல். அதே போல விஜய்யும் பவித்ராவை எவ்விடத்திலும் விட்டுகொடுத்து இருந்ததில்லை.
இருவரின் புரிதல் மதுவந்தியின் வரவு என திகட்ட திகட்ட தான் சென்றது அவர்களின் வாழ்க்கை பயணம்.
“மாறாப்பா, ரெடி…” என மகள் தன்னுடைய குட்டி பேக்கை மாட்டிக்கொண்டு வர,
“ஓகே, அப்பா இப்ப லாக் பண்ணிடறேன்…” என்று சொல்லி கதவை சாற்றும் முன்,
“மதும்மா பை பை. ஊர்ல வச்சு நாம மீட் பண்ணுவோம்…” என்று சொல்லி முடிக்க புன்னகையுடன் அந்த வீட்டின் கதவை பூட்டிவிட்டு கிளம்பினான் விஜயநெடுமாறன்.
அவர்களிடையே மதுவந்தி இன்றளவும் அந்த குரலோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.
ரத்தமும், சதையுமாய் எலும்புகள் பொருத்தப்பட்ட ஐந்தடி உருவமாய் இல்லாமல் அக்குடும்பத்தின் நிரந்த சந்தோஷத்தின் உணர்வாய் அவர்களின் உயிருக்குள் இன்னொரு உயிராய் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.
விழியில் ஆரம்பித்து இதயத்தில் கலந்து தான் ஒரு உறவு ஆரம்பிக்கவேண்டும் என்பதில்லை. இங்கே வலியில் ஆரம்பித்த உறவு, கண்ணீரில் உருகி, உற்ற துணையாய் உறைந்து, ஓருயிராய் இணைந்தவர்கள் தீராத காதலில் சரணம்.
நிறைவு