உருக்கம் – 3
மண்டபத்திலிருந்து வீடுவந்து சேர்ந்தவர்களின் முகங்கள் எல்லாம் அச்சத்தில் தத்தளித்தது.
“அப்புக்குட்டி நீ உள்ள போய்டுடா. இல்லன்னா உன் பெரியப்பா…” என்று பார்வதி சொல்லும் பொழுதே,
“இப்படியே செல்லம் குடுத்தே அவளை இந்த நிலைமைக்கு கொண்டுவந்துட்டீங்க. இன்னும் என்ன? இவ இங்கயே மூலையில உட்கார்ந்துடனுமா?…” என்ற வசந்தியின் பேச்சில் அத்தனைபேரும் அதிர்ந்து போய் பார்த்தார்கள்.
“வசும்மா, என்ன பேச்சு இது?…” என ரஞ்சனி சத்தம் போட,
“என்ன பேச்சுன்னா? என் மக வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே? வேற என்ன பேச? இப்படித்தான் பேச முடியும்…” என்றவரின் சத்தம் வீட்டிற்கு வெளிய வரை கேட்டது.
பவித்ரா ஒருவார்த்தை வாயை திறக்கவில்லை. மண்டபத்தில் வைத்து பேசியதோடு சரி. அவ்வளவு தான். அடுத்து எங்கே பேச முடிந்தது?
கூடியிருந்த சொந்தங்களும் ஆளுக்கொன்றாக பேச பார்வதியால் அங்கே சகஜமாக நடமாடமுடியவில்லை.
எங்கோ ஓரிடத்தில் ஒதுங்கி நிற்பதை போல அவர் நின்றதே அவரின் பிள்ளைகளுக்கு தாளவில்லை. அதே நேரம் வசந்தியையும் விட்டுக்கொடுக்க முடியவில்லை.
அவரின் வருத்தமும், வேதனையும் தெரிந்தது தானே? அதில் தவறில்லை என்பது எத்தனை உண்மையோ அதே நேரத்தில் பார்வதியாலும் அன்று அவ்விடத்தில் வேறென்ன செய்திருக்கமுடியும்?
நடந்ததை நடத்தியவர் அவரல்லவே? அன்று அங்கே இருந்தவர்கள் அனைவருக்குமே கையறு நிலை தானே?
“ஜோதி அப்பா வந்தாச்சு…” என்று வெளியே கார் சத்தம் கேட்டதும் ரஞ்சனி சொல்ல வெளியே சென்று எட்டி பார்த்தான்.
பெரிய மரத்தினாலான கேட்டை திறந்துகொண்டு அந்த கார் உள்ளே நுழைய எட்டி பார்த்தவன்,
“ரஞ்சிக்கா, அது மாமா கார்…” என்றான் அவளிடத்தில்.
“அச்சோ அவர் வராருன்றதையே மறந்துட்டேன். வேலையை முடிச்சுட்டு லேட்டா வரேன்னு சொன்னார். நடந்த கலவரத்துல இவர் எங்க வந்திட்டிருக்கார்ன்னு கேட்கவே மறந்துட்டேன்…” என ரஞ்சனி சொல்லிக்கொண்டிருக்கும் போதே வாசலுக்கு முன்னால் வந்து நின்றது கார்.
வெளித்திண்ணை தூணை பிடித்தபடி கணவனை எதிர்பார்த்து நின்ற ரஞ்சனியை பார்த்துக்கொண்டே இறங்கினான் ஜெகநாதன்.
“வாங்க மாமா…” என்ற ஜோதியின் அழைப்பிற்கு சிறு தலையசைப்பை தந்தவன் காரின் பின் கதவை திறந்துவிட உள்ளே அமர்ந்திருந்தார் அருமைநாயகம்.
“இறங்குங்க மாமா…” என்ற மருமகனின் பேச்சை தட்டமுடியாமல் அவர் கீழே இறங்க மறுபக்கத்தில் இருந்து பழனியப்பன் இறங்கி வந்தார்.
“ஜோதி, உள்ள கூட்டிட்டு போ…” என ஜெகன் சொல்லவும் அமைதியாக அவர்கள் உள்ளே செல்ல பின்னோடே வந்த சொந்தங்களும் உள்ளே சென்றனர்.
“எப்போ வந்தீங்க?…” என்றாள் அனைவரும் சென்ற பின்னர் தன் கணவனை பார்த்து.
“இப்போ ஒரு அரைமணி நேரம் முன்னாடி. நேரா மண்டபத்துக்கே போய்ட்டேன். அப்போ தான் விஷயம் தெரிஞ்சது…” என்றான்.
“நானும் நீங்க கிளம்பியாச்சான்னு கேட்கலாம்னு தான் இருந்தேன். ஆனா இங்க இருந்த சூழ்நிலை…” என்று சொல்லும் பொழுதே உள்ளே காச்மூச் என்று அத்தனை பெரிய சத்தம்.
“ஐயோ என்னாச்சு?…” என்றபடி பதறி உள்ளே ஓடினான் ஜெகன். அவனோடு ரஞ்சனியும் ஓடினாள்.
உள்ளே சென்றால் அங்கே ஆண்கள் அருமைநாயகத்திய பிடித்து நிறுத்தியிருக்க பவித்ராவை பார்வதி தன் தோளில் சாய்த்திருந்தார். அவரோடு பெண்கள் கூட்டம் கூடி நின்றது.
அங்கே அருமைநாயகம் பவித்ராவை கோபத்துடன் அடிக்க பாய்ந்திருக்க அத்தனை பேரும் பயந்து போனார்கள்.
“என்ன பன்றீங்க மாமா?…” என்று ஜெகன் சத்தம் போட,
“உங்களுக்கு தெரியாது மாப்பிள்ளை. அத்தனை பேர் மத்தியில என் மூக்கை அறுத்துட்டா. பொண்ணு பொண்ணுன்னு வச்சு தாங்கினதுக்கு நல்லா கூலி குடுத்துட்டா…”
அவர் பேச பழனியப்பன் அங்கே தான் செய்வதாகாததை போல மகளையும் அண்ணனையும் பாவமாய் பார்த்துக்கொண்டு நின்றார்.
“அடிக்கட்டும், இன்னும் நாலு அடி வாயிலையே அடிகட்டும். இனி கல்யாணம்ன்னு ஒன்னு இவளுக்கு நடக்குமா? இவளே இவ தலையில மண்ணை அள்ளி போட்டுக்கிட்டா. இனிமே இந்த வீட்டுல ஒரு மூலையில உட்காரவேண்டியது தான்…” என்று வசந்தி ஆர்ப்பரிக்க,
“அத்தை நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க…” என ஜெகன் சொல்ல,
“எப்படி மாப்பிள்ளை பொறுமையா இருக்க? பெத்த வயிறு எரியுதே? ம்ஹூம், எனக்கு தெரிஞ்சு போச்சு. இனி இவ வாழ்க்கை முடிஞ்சிருச்சு. இனி வருசமெல்லாம் இவளை இப்படி பார்த்தே நான் போய் சேர்ந்திருவேன்…” என்று தலையில் அடித்துக்கொண்டு அழ மீண்டும் அருமைநாயகம் வேகம் கொண்டார்.
மகள் கலங்கி நிற்க, வசந்தியும் அடிக்கட்டும் என்பதை போல பார்த்து நிற்க மகளுக்கு கொஞ்சமும் பக்கபலமாய் நிற்கமுடியாது அடங்கி நின்றார் பழனியப்பன்.
“அத்தன ஆம்பளைங்க இருக்கோம், இவளுக்கென்ன துடுக்குத்தனம். வந்து கல்யாணம் வேண்டாம்ன்னு பேச எவ்வளவு தைரியமிருக்கனும்? நானே அவன்கிட்ட என்னத்தையாச்சும் பேசி அந்த சம்பந்தத்தை முடிச்சுப்புடனும்னு இருந்தா அம்புட்டுக்கும் மண்ணை போட்டு நெப்பிட்டா…”
“யோவ் நாயகம், நீ என்னப்பா பேசற? அந்த புள்ள நீ குறுகி நிக்க ஆத்தமாட்டாம தான வந்து தம்மேல பழிய போட்டு கல்யாணத்த வேண்டாமின்னது? அந்த பய சாமானியமா நடத்த விட்டிருக்கமாட்டானே? நேரம் செண்டிருந்தா இன்னும் நமக்குத்தான மருவாத குறவு…”
அந்த சொந்தத்தில் மூத்தவரான அவர் பேச நாயகம் பல்லை கடித்துக்கொண்டு அமைதியாக நின்றார்.
“அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே அப்பறம் என்ன? இப்ப வயசு பொண்ண அடிச்சு என்னத்த சாதிப்ப? போயி ஆகவேண்டிய சோலிக்கழுதைய பாப்போம்….” என்று அவர் அமைதிப்படுத்த,
“மாமா, இப்ப எதுவும் பேசவேண்டாம். நாளைக்கு ஆற அமர பேசிக்கலாம். நீங்க போங்க…” என்று சொல்லிய ஜெகன்,
“ஜோதி, எல்லாருக்கும் சாப்பிட ஏற்பாடு பண்ணு. மண்டபத்துல தூங்கறவங்க அங்க தூங்கட்டும்…” என சொல்லவும் பரஞ்சோதி விழித்தான்.
“இல்ல மாமா, மண்டபத்தை காலி பண்ணிட சொல்லி நம்ம கணக்குப்பிள்ளைட்ட பொறுப்பை குடுத்துட்டேன். எல்லாம் அவர் பாத்துப்பார்…” என சொல்ல ஒரு நொடி யோசனையானவன் அங்கிருப்பவர்கள் அப்போதைக்கு கிளம்புவதை போல தெரியவில்லை என்பதால்,
“சரி, இப்ப என்ன? இங்க வீட்டுல இடம் பத்தாதுன்னா ஆம்பளைங்க நாம மாடில படுத்துப்போம். மத்த எல்லாரும் கீழே தூங்கட்டும். மடிக்கு ரெண்டு பேனுக்கு மட்டும் வாடகைக்கு சொல்லிரு…”
ஜோதியை துணைக்கு வைத்துக்கொண்டு படபடவென அந்த சூழ்நிலையை ஜெகன் கையிலெடுத்துக்கொண்டு கவனிக்க அத்தனை பேரும் ஒன்றும் பேசவில்லை.
தங்களுக்கென்ன என்று உறவுகள் சாப்பிட்டுவிட்டு கூடி கூடி இது அப்படி இருந்திருக்கலாம், இப்படி நடந்திருக்கலாம் என்று பேச வீட்டினருக்கு கேட்டாலும் ஒன்றும் எதிர்த்தும் சொல்லமுடியவில்லை. மறுத்தும் பேசமுடியவில்லை.
ரஞ்சனியின் பாடு தான் திண்டாட்டமாக போனது. வசந்தியிடமும் பேசி, பார்வதி, பவித்ராவிடமும் பேசி வீட்டில் தங்கியிருப்பவர்களையும் கவனித்து என ஓய்ந்து போனாள்.
நல்லவேளையாக மகளை அழைத்து வரவில்லை. வந்திருந்தால் பிள்ளையின் கேள்விக்கு பதில் சொல்வதா, இருப்பதை கவனிப்பதா இல்லையா என்பதிலேயே நேரம் போயிருக்கும்.
இரண்டு நாட்கள் இப்படியே கழிய ஆண்கள் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாய் பேசி பேசி அருமைநாயகத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்திருந்தார்கள்.
அதற்காகவே அத்தனை பேரும் தங்கியிருந்து பேசி முடிக்க வேறு வழியின்றி சம்மதித்தார்.
“நான் ஒத்துக்கறேன். ஆனா அவன் இந்த வீட்டு படியேற கூடாது…” என்று ஆரம்பித்த இடத்தில் மீண்டும் போய் நிற்க,
“என்ன மாமா பேசறீங்க நீங்க? அதெப்படி வீட்டு மாப்பிள்ளையை வரக்கூடாதுன்னு சொல்ல முடியும்? என்னை சொல்லிருவீங்களா நீங்க?…” என்ற ஜெகன்,
“இங்க பாருங்க உங்க ஒருத்தருக்கு கட்டுப்பட்டு பெத்தவங்க எப்படி நிக்கறாங்கன்னு. அவங்களுக்கும் பொண்ணு குடும்பமா வந்து போய் இருக்கனும்னு ஆசை இருக்காதா?…” என்றான்.
“மாப்பிள்ளை, என்ன வேணா சொல்லுங்க, நீங்களும் அவனும் ஒன்னும்னு மட்டும் சொல்லாதீங்க. ஏற்கனவே நாலு வருஷம் முந்தி கூடியிருந்த அத்தனை சொந்தத்துக்கு மத்தியில அசிங்கம் பண்ணிட்டு போய்ட்டான். திரும்பவும் வந்து கழுத்தை பிடிக்கிறான்…” என்று கொந்தளித்தார்.
“மாமா, திரும்ப பழசையே பேசாதீங்க. அது போகட்டும். இப்போ என்ன நடக்கனுமோ அதை பார்ப்போம். நமக்கு பொண்ணோட எதிர்காலம் தான் முக்கியம். நேத்து நிச்சயம் நல்லபடியா நடந்திருந்தா அதுவே வேற. இப்போ அப்படி இல்லையே…” என்றான் ஜெகன் கவலையுடன்.
அருமைநாயகம் தம்பியையும் தம்பி மனைவியையும் மாறி மாறி பார்த்தவருக்கு உள்ளுக்குள் வலித்தது.
இப்போது வரை அத்தனை உரிமை, பொறுப்புகளை தன்னிடம் கொடுத்துவிட்டு தன்னுடைய முடிவே அவர்களின் வேதமென நிற்பவர்களுக்கு தான் என்ன செய்துவிட முடியும்? முடிவெடுத்துவிட்டார்.
“ஹ்ம்ம், சரி. வரட்டும். அவனா வரட்டும். வந்து முறையா பேச சொல்லி கல்யாணத்துக்கு கேட்க சொல்லுங்க. பொண்ணு கேட்டு அவன் வந்தா நான் சம்மதிக்கிறேன்…” என்று சொல்லிவிட,
“மாமா, என்ன பேசறீங்க? நீங்க நிசமாத்தான் சொல்லுறீங்களா?…” என்றார் வசந்தி நம்ப முடியாமல்.
“ஆமாம்மா, வேற என்ன செய்ய? அவனும் விடமாட்டான். இப்போ நம்ம பொண்ணே ஊர் பேசும்படி செஞ்சுவச்சுட்டா. இனி நமக்கு வேறு வழி இல்லையே?…” என்றவர்,
“சொன்னது ஞாபகம் இருக்கட்டும். ஒழுங்கா வரனும் அவன். இந்த எடக்குமடக்கு பேச்சு எதுவும் இல்லாம சத்தமில்லாம வந்துட்டு போகனும். மீறி எதாச்சும்…” என்று அத்தனைபேரையும் எச்சரிக்க அங்கே பேசிய விஷயம் பழனி மட்டுமல்லாது வெளியூர் சொந்தங்களுக்கும் பரவியது.
அவரின் சம்மதத்துடன் பேச்சுக்கள் திருமணம் வைத்துக்கொள்வது வரை நீண்டு அடுத்த வாரத்திலேயே விஜய்யை வரவழைத்து பழனிமலை முருகன் கோவிலில் வைத்து திருமணத்தை முடித்துவிடுவது என்றுவரை திட்டமிட்டுவிட்டனர்.
பவித்ராவை திருமணம் செய்ய விஜய்யை வரசொல்லியிருக்கிறார் அருமைநாயகம், மறுவாரம் திருமணம் என்று செய்தி பரவ அத்தனைபேரும் விஜய்யின் வரவுக்காக காத்திருக்க அப்படி ஒன்று நடக்கவே இல்லை.
விஜய்யிடம் பேச பொதுவான இரண்டு பேரை ஜெகன் கேட்க அந்த சொந்தத்தில் ஒவ்வொருத்தரும் நான் இல்லை நீ இல்லை என்று பின்வாங்கினார்கள்.
“அதுக்கெல்லாம் ஒரு ஆள் இருக்கனும்ப்பா, நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்…” என்று அருமைநாயகத்திடம் பஞ்சாயத்து செய்தவர்கள் எல்லாம் விஜய்யிடம் பேச யோசிக்க ஜெகனிற்கு விழி பிதுங்கியது.
“ஏன்டா ஜோதி, பேசத்தான கூப்பிட்டேன். இவ்வளவு பீதியாகறாங்க?…” என்றான் ஜெகன்.
“மாமா, உங்களுக்கு தெரியாதுல. அதான் கூலா பேசறீங்க. அவனோடது வாயே இல்லை. சீரியஸா பேசினா இடக்கு பண்ணுவான். சரின்னு அவன் போக்குல பேசினா சீரியஸா பேசுவான். நமக்கே டார்ச்சராகிரும்…” என்று ஜோதி சொல்ல,
“நீயெல்லாம் பொண்ணோட அண்ணன். அப்படி எதுக்குடா பயம்?…”
“இவ்வளவு பேசறீங்க? நீங்க பேசவேண்டியது தானே?…”
“ஏன்டா அது தெரியாமலா உன்னை கேட்டுட்டு இருக்கேன்? நான் பேசினதில்லையேடா? அதோட பெரியவங்க பேசினா கொஞ்சம் மதிப்பா தன்மையா பேசுவான்னு நினைச்சேன்…”
“நல்லா மதிச்சான்?…” என ஜோதி பொறும,
“சரி விடு. நீயும் நானும் பேசுவோம். துணைக்கு நம்ம உன் பெரியப்பாவை வச்சுக்கிடுவோம். அவர் தான் குடும்பத்துல பெரியவர்…” என்று முடிவெடுத்த ஜெகன் அவரை வைத்தே அன்றே பேச்சுவார்த்தையை விஜய்யிடம் ஆரம்பித்திருந்தான்.
“அப்படியெல்லாம் நீங்க கூப்பிட்டதும் வர நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரனா? அதெல்லாம் முடியாது முடியாது. வேணும்னா கொண்டு வந்து இங்க விடட்டும்…” என்றவன்,
“எத்தனை தடவை தாலி கட்ட? அதான் ஏற்கனவே கட்டிட்டேனே?…” என்றும் கேட்டான்.
“தம்பி இப்படி சொன்னா எப்படி?…” என்று அந்த பெரியவர் திணற,
“உள்ளதை சொன்னேன். அதை வேற எப்படி சொல்ல?…” என்று எதிர்கேள்வி கேட்க ஸ்பீக்கரில் கேட்டுக்கொண்டிருந்த ஜோதிக்கு கடுப்புகள் கூடியது.
“பார்த்தீங்களா?…” என்று ஜெகனிடம் முணுமுணுக்க,
“ப்ச், பொறு. கேட்டுட்டு தானே இருக்கேன்…” என்றான் அவன்.
“இப்ப முடிவா என்ன சொல்றீங்க?…” என பெரியவர் பேச்சுவார்த்தையை இறுதிக்கட்டத்திற்கு கொண்டுவர,
“இனிமே நானா அந்த வீட்டுக்கு வந்து நிக்கமாட்டேன். ஏற்கனவே கால்ல விழுந்தே கெஞ்சி கூப்பிட்டாச்சு. திரும்ப திரும்ப இறங்கி வர என்னால முடியாது. அவரை உங்க அருமைபெருமையை கூட்டிட்டு வந்து விட சொல்லுங்க. நான் வேண்டாம்னு சொல்லலை. அவ்வளோ தான்…” என்றவன்,
“இல்லைன்னாலும் பிரச்சனை இல்லை. அவ அங்கயே இருக்கட்டும் என் பொண்டாட்டியாவே…” என இலகுவாக சொல்லி வைத்துவிட்டான் விஜய்.
“இதுக்குத்தான், இதுக்குத்தான் நாமலும் இறங்கி போகவேண்டாம்ன்னு சொன்னேன். யாராச்சும் கேட்டாங்களா? இப்ப பாரு எம்புட்டு எகத்தாளம் அவனுக்கு?…” என்று பேசிய அருமைநாயகம்,
“போதாக்குறைக்கு ஊரெல்லாம் வேற தம்பட்டம் அடிக்காத குறையா பேசிருக்காங்க இதை. அவனவன் போனை போட்டு நல்ல முடிவுன்னு சொல்றான். இப்போ நான் இறங்கி போகனுமா? மரியாதையா அவனையே வந்து கூட்டிட்டு போக சொல்லு….”
அருமைநாயகம் ஆடு ஆடு என்று ஆடித்தீர்க்க அங்கே உயிரும் உணர்வும் உள்ள ஒருத்தியை பற்றி யாருமே யோசிக்கவில்லை
முகம் வெளுத்துவிட்டிருந்தது பவித்ராவிற்கு. தான் என்ன பொருளா? நீ வாங்கிக்கோ, நீயே கொண்டுவந்து தா என்று பேச என்று மனதளவில் நொடிந்து போனாள்.
இனி அவ்வீட்டில் தன் முடிவை சொல்லவும் முடியாது போக நொந்து வெந்துபோய் அமர்ந்திருந்தாள் மொட்டை மாடியில்.