விஜய்யிடம் பேசி அவன் அவனின் முடிவிலிருந்து இறங்கமாட்டேன் என்பதை போல பிடிவாதமாக இருக்க இங்கே சொந்தங்களின் நச்சரிப்பிலும், அவர்களின் கேள்வியிலும் கோபத்தின் உச்சிக்கு சென்ற அருமைநாயகமும்,
“அவனை தேடி கொண்டு போய் என் பொண்ணை விட்டா நான் அவன்கிட்ட தோத்த மாதிரி ஆகிரும். அதோட இந்த ஊர்ல எவனும் என்னை மதிக்கமாட்டான். அவனை தேடி நான் போறதா?…” என்று மறுத்துவிட யாருக்கும் அதை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை.
அதன் பின்னர் சொந்தங்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தும் அருமைநாயகம் மனமிறங்கவில்லை.
பழனியப்பனிடம் வந்து பேச அவரோ அண்ணனின் முடிவு தான் இங்கே அப்போதும் என்பதையே நிரூபித்தார்.
பேசி பேசி ஓய்ந்தவர்கள் பவித்ராவை பரிதாபமாக பார்த்துவிட்டு செல்ல அதற்கே ஒடிந்துபோனாள்.
“யாரும் வேண்டாம். எதுவும் தேவையில்லை. இவங்க பாவமா பார்த்தா நான் அப்படி ஆகிடுவேனா?…” என வாய்விட்டே பொருமினாள்.
“பவி…” என்ற ஜெகனின் அழைப்பில் வேகமாய் திரும்பி பார்த்தவள் அந்த திண்டில் இருந்து இறங்கி நின்றாள்.
மாடியில் இருண்ட ஒற்றை அறையின் விளக்கு வெளிச்சத்தில் அவளின் கசங்கிய முகம் தெரிய பார்க்கவே கஷ்டமாக இருந்தது. ஜெகன் ஒன்றும் பேசாமல் அவளை பார்த்தபடி இருக்க,
“வாங்க மாமா…” என்று அவளே ஆரம்பித்தாள்.
“நீ இன்னும் சாப்பிடலைன்னு ரஞ்சு சொன்னா…” என்றவன் கொலுசு சத்தத்தில் பின்னால் திரும்பி பார்க்க ரஞ்சனி வந்தாள் உணவுடன்.
“வாங்கி சாப்பிடு…” என்று அவன் சொல்ல,
“இல்லை, பசிக்கலை…” என மறுத்தாள்.
“ஏன்? இதுக்காக நீ சாப்பிடாம இருப்பியா?…” என்று அவன் கேட்டதும் ஒருநொடி மூச்சை இழுத்து விட்டவள் தட்டை வாங்கி வேகமாய் சாப்பிட்டு முடித்து கையை அங்கேயே கழுவிவிட்டு அவனின் முன்னால் வந்தமர்ந்தாள்.
“என்ன பேசனும் மாமா?…” என கேட்க,
“ரஞ்சு ஜோதிக்கு போன் பண்ணி மாடிக்கு வர சொல்லு…” என சொல்லவும் ரஞ்சனியும் செய்ய அவன் வரும் வரை எந்த பேச்சும் இல்லை.
“உட்கார் ஜோதி…” என்று வந்ததும் அவனை அமர சொல்லிய ஜெகன்,
“உன் அப்பாக்களை விடு. இந்த வீட்டு மூத்த மகனா, பவிக்கு அண்ணனா என்ன முடிவு பண்ணியிருக்க நீ?…” என அவனிடம் கேட்க ஜோதி திகைத்தான்.
“இதுல நான் என்ன பண்ணமுடியும் மாமா? எனக்கு புரியலை…” என்று சொல்ல,
“நீ என்ன நினைக்கிற ரஞ்சு?…” என மனைவியை கேட்க,
“இதுல நினைக்கிறதுக்கு என்னங்க இருக்குது? அப்பு நல்லா இருக்கனும். அவளோட எதிர்காலம் விஜய் கூடன்னும் போது அது நல்லபடியா அமைஞ்சா போதும். வேற என்ன வேணும்?…” என்றாள் பளிச்சென்று.
“பார்த்தியா? உன் அக்காவை மாதிரி உன்னால ஏன் இதை சொல்ல முடியலை?…” என்று ஜோதியை அதிருப்தியுடன் பார்த்தான் அவன்.
“வந்து மாமா, அப்பாவை மீறி…”
“அப்போ உன் மனசுலையும் அதே வறட்டு பிடிவாதம் தான் இல்ல?…” என கண்டனத்துடன் பார்த்தவன்,
“இங்க காரியம் பெருசா வீரியம் பெருசான்னா காரியம் தான் பெருசு. நமக்கு வீண் ரோஷத்தால இழப்பு தான். அது புரியுதா? எல்லாத்துக்கும் தலையாட்டி பழகாத ஜோதி…” என்றவனின் பேச்சில் ஜோதி அமைதியாக ஜெகனும் கொஞ்சம் நிதானித்தான்.
“எங்க வீட்டுல கூட நிச்சயத்துக்கு போக கூடாதுன்னு சொன்னாங்க. இங்க போக்குவரத்தை குறைக்கனும் அது இதுன்னு பேசத்தான் செய்யறாங்க. நான் அதுக்கெல்லாம் தலையாட்டிட்டு இருந்தா இங்க உன் அக்காவுக்கு பிறந்த வீடு இல்லாம போயிரும்…” என்றதும் திக்கென்றது அவனுக்கு.
“நாம ஆம்பளைங்க, எங்க நீக்குபோக்கா போகனுமோ அப்படித்தான் போகனும். பவிக்கப்பறம் உனக்கும் கல்யாணம் ஆகும். உன்னை நம்பி வர பொண்ணுக்கும் இந்த வீட்ட பழக்கம் அப்படியே இருக்கனும்னு நினைக்க கூடாது. எங்க இறங்கனுமோ இறங்கிக்கோ. எங்க பேசனுமோ பேசு…”
“என்ன பதிலையே காணும்? உன் தங்கச்சிக்கே நீ ஒன்னும் பேசாம இருக்க, கல்யாணம் ஆனதும் வர பொண்ணுக்காக என்ன பண்ணுவ நீ?…” என்றான்.
“என்னங்க இது? இப்பவே இதை எல்லாம் பேசனுமா? அவன் ஏற்கனவே கஷ்டத்துல இருக்கான்…” என ரஞ்சனி தம்பிக்கு ஏந்துகொண்டு வர,
“அப்ப குடும்பமா வருஷம் பூராம் உக்கார்ந்து வருத்தப்பட்டுட்டே இருங்க. இவளும் இப்படியே இருக்கட்டும்…” என்றவன்,
“நாளைக்கு உன் தங்கச்சி இப்படி இருக்கும் போதே உன்னால கல்யாணம் செஞ்சுக்க முடியுமா?…” என்று வரிசையாய் கேள்விகளை தொடுக்க,
“என்னை என்ன செய்ய சொல்றீங்க மாமா? அதை சொல்லுங்க. எனக்கு தெரியலை. அப்பா, சித்தப்பான்னே பார்த்து வளர்ந்துட்டேன். எனக்கு இதுல அவங்களை மீறி எதுவும் செய்யமுடியும்னு தோணலை…”
“நீ உன் அப்பாவை சொல்லுடா, எதுக்கு அந்த அப்பாவி மனுஷனை இழுக்கற? அவர் பாவம் ஒத்த பொண்ணை பெத்துட்டு உங்கப்பா முகம் பார்த்து நிக்கறார். இதுவே உன் கூடப்பிறந்த தங்கச்சியா இருந்தா இப்படி அவங்க சொல்லட்டும்னு இருப்பியா?…” என்றதும் ரஞ்சனிக்கும் பரஞ்ஜோதிக்கும் தூக்கிவாரி போட்டது.
“மாமா…” என பதறி போனான் ஜோதி.
உடனே பவித்ராவை பார்க்க அவள் எதுவும் பேசாமல் மௌனமாகவே தான் இருந்தாள் அவர்கள் பேசுவதை கேட்டுகொண்டு.
“அப்படிலாம் இல்ல மாமா. இப்படி பிரிச்சு பேசி மனசை கஷ்டபடுத்தாதீங்க…” என்றவன்,
“அப்புக்குட்டி, இங்க வாடா…” என தங்கையை தன்னருகே அழைத்துக்கொண்டான். அவளின் கையை பிடித்துக்கொண்டவன்,
“எனக்கு ரஞ்சிக்காவும், அப்புவும் வேற வேற இல்ல மாமா. ரொம்ப கஷ்டமா இருக்குது உங்க பேச்சு…” என்றான் வேதனையுடன்.
“இன்னைக்கு இதை நான் சொல்றேன். நாளைப்பின்ன சொந்தக்காரங்கள்ல இருந்து ஊரே பேசும். இப்படி விட்டுட்டானேன்னு. அதை தான் நான் முதல்லையே சொல்றேன்…” என ஜெகன் இன்னும் கடினத்துடனே பேச,
“சரி மாமா, யாரும் பேசட்டும். இப்போ நீங்க சொல்லுங்க. என்ன பண்ணனும்னு….”
“என்ன பண்ணனும்னா? நீ பேசு அந்த பையன்கிட்ட…” என சொல்ல திகைத்து போய் பார்த்தான்.
“நானா?…” என விழிக்க,
“நீயே தான். எடுத்து சொல்லு. இந்த பகை, கோவம் எல்லாம் போதும். இனியாவது குடும்பம் நல்லபடியா ஒண்ணா இருக்கட்டும். உனக்கு துணைக்கு வேணும்னா நானும் ரஞ்சுவும் வரோம்…” என்றவன்,
“என்னம்மா, சரிதானே?…” என கேட்க அவளுக்கு கணவன் பேச்சே தைரியமூட்டுவதாய் இருந்தது.
“நீங்களே வரேன்னு சொல்லும் போது எனக்கென்ன? எங்க அப்பாக்களா நாமளான்னு பார்த்திருவோம்…” என அவளும் கை கோர்த்துக்கொள்ள,
“சரிங்க மாமா. பேசுவோம். ஆனா அப்பா என்ன சொல்லுவாங்கன்னு தான்…”
“சரியான மடையன்டா நீ. உங்கப்பாட்ட சொல்லிட்டா போக போறோம்…”
“போகவா? எங்க?…”
“அந்த பையன் வீட்டுக்கு…”
“அதுக்கு அட்ரஸ் வேணாமா? நேர்ல போறோம்ன்றதே ஷாக். இதுல எங்க இருக்கான்னே தெரியாம எங்க போய் தேட?…” என்றான் பரஞ்சோதி.
“போன் நம்பர் இருக்கு தானே? பேச வரோம்ன்னு சொல்லி அட்ரஸ் கேப்போம். நேர்ல பார்க்க வரோம்ன்னு பேசு. எங்க இருக்கார்ன்னு. இல்லைன்னா பவியோட வரோம்ன்னு கூட சொல்லி அட்ரஸ் கேளுடா. இதை கூடவா சொல்லி தரனும்?…” என்றான் ஜெகன் அலுப்புடன்.
“ஓஹ், சரி…” என்றவன் முகம் இன்னும் யோசனையை தாங்கி இருந்தது.
“இந்த போன் நம்பரே கிளம்பும் போது அவனோட பிரண்ட் அவனுக்கு தெரியாம குடுத்தது. என்ன நினைப்புல குடுத்தாரோ? குடுத்துட்டு போய்ட்டார்…”
“விஜய் ப்ரென்ட் உனக்கு அவர். விஜய் அவனா? முதல்ல இதை மாத்து…” என்று இவர்களாக பேசிக்கொண்டிருக்க பவித்ரா அமர்ந்தவிதம் அப்படியே இருந்தது.
“நாம தான் பேசிட்டு இருக்கோம். இவ வாயே திறக்கலையே…” என்றாள் ரஞ்சனி.
“ஓஹ், நானும் மறந்துட்டேன்…” என்ற ஜெகன்,
“நீ சொல்லு பவி. நீ என்ன நினைக்கிற?…” என்று கேட்டதும் அவனை ஒரு முடிவுடன் நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
“ஆக, என்னை கொண்டுபோய் விட்டா போதும். அப்படித்தான?…” என்று கேட்டவளின் குரலே வேறுவிதமாய் இருக்க,
“என்னடி பேசிட்டு இருக்க? உனக்காக தானே நாங்க பேசிட்டு இருக்கோம்…” என்று ரஞ்சனி அதட்ட,
“ப்ச் ரஞ்சு, கொஞ்சம் அமைதியா இரு. அவ பேசட்டும்…” என்றான் ஜெகன்.
“தப்பா எடுத்துக்காதீங்க மாமா, நீங்க என்னோட நல்லதுக்கு தான் இத்தனை மெனக்கெடறீங்கன்னு புரியுது. ஆனா இப்படி எனக்கு வேண்டாம், உனக்கு வேண்டாம்ன்ற மாதிரி மாத்தி மாத்தி என்னை பால் மாதிரி எட்டி உதைக்கிறாங்களோன்னு தோணுது…”
“நீ ஒரு முடிவுக்கு வந்திட்ட போல?…” என ஜெகன் கேட்க,
“ஆமா மாமா. இதை யார்க்கிட்ட சொல்லி புரிய வைக்கன்னு எனக்கு தெரியலை. யார்ட்டையும் பேசவும் முடியாது இங்க. இப்ப நீங்க கேட்டதும் சொல்றேன். எனக்கு எங்கயும் போகவேண்டாம்…”
“அப்போ இங்கையேவா இருந்துடுவ?…” என்றவனை மறித்து ரஞ்சனி எதுவோ பேச வர,
“ரஞ்சு, நீயும் ஜோதியும் கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க. அவ பேசட்டும்…” என்று தடுத்துவிட்டான்.
“எனக்கு இங்கயும் இருக்க வேண்டாம். அங்கயும் போக வேண்டாம். நான் படிக்கட்டுமா மாமா? வேண்டாத பொருளை வச்சிருக்கற மாதிரி எனக்கு பீல் குடுத்துட்டாங்க. அந்த அவரோட போனாலும் அங்கயும் இப்படித்தானே நான் இருக்கவேண்டியதா வரும்…”
“அனுப்பறதுனா முழுமனசோட இங்கயும் அனுப்ப போறதில்லை. அவங்க அந்த பிடிவாதத்தை விட்டு என்னை கூப்பிட வர போறதில்லை. அதோட என்னை நீங்க பேசி கொண்டு போய் விட்டாலும் எனக்கே ஒரு எண்ணம் இருக்குமே? யாருக்கும் வேண்டாம வந்திருக்கறதா?…”
அவளின் பேச்சுக்களும், அந்த தெளிவும் மற்ற மூவரையும் யோசிக்க வைத்தது. ஜெகனுக்கே கஷ்டமாகி போக,
“நீ ஏன் அப்படி நினைக்கிற பவி?…” என வருத்தத்துடன் கேட்க,
“நிஜம் தான் மாமா. நடந்தது உங்களுக்கு தெரியுமே? இந்த உறவு எப்படி ஆரம்பிச்சது. எதனாலன்னு தெரியும் தானே? எங்கயுமே பிடிக்குன்றதே இல்லை. எனக்கு அவங்களையும், அவங்களுக்கு என்னையும் எங்கயுமே பிடிக்கும்னு இல்லை. எதுக்காகவோ நடந்தது எங்கையோ முடிஞ்சு போச்சு…”
“பவி, இப்பவும் சொல்றேன். நீ…”
“மாமா, எதிர்த்து பேசறேன்னு நினைக்காதீங்க. இப்பவும் அவங்க என்னை விரும்பி கொண்டுவந்து விட சொல்லலை. எங்கயுமே என்னை பிடிக்கும்ன்னு சொன்னதில்லை. கொண்டுவந்து விட்டா இருந்துட்டு போகட்டும்னு பேசிருக்காங்க…” என்று சொல்லும் பொழுதே பவிக்கு கண்ணீர் முட்டியது.
“எனக்காக, ப்ளீஸ். நான் படிக்கிறேன். என்னை படிக்க வைங்க. இது இப்போ வேண்டாம். பார்ப்போம். என்னதான் நடக்கும்னு? நான் எதிர்பாரமத்தான் எல்லாமே நடந்துச்சு. அப்படி எதாச்சும் நடக்குமான்னு தெரியலை. பார்ப்போம்….” என்றாள்.
மூவருமே அமைதியாகிவிட அவளுக்கு எந்த பதிலும் சொல்லமுடியவில்லை. ஜெகனுக்கும், ரஞ்சனிக்கும் பவியை நினைத்து கவலையாக பரஞ்ஜோதி இதை எப்படி வீட்டில் சொல்வது என்ற யோசனைக்குள் ஆழ்ந்துவிட்டான்.
“சரிம்மா, நீ போய் தூங்கு. இதை நான் வீட்டுல எப்படி பேசறதுன்னு யோசிக்கறேன். அதே நேரம் நான் சொன்னதையும் நீ பேசு. இப்ப உன்னோட விருப்பத்துக்கு நாங்க சம்மதிக்கிறோம்…” என்று அவன் சொல்ல,
“ரொம்ப தேங்க்ஸ் மாமா…” என்று அவள் முகம் மலர்ந்து சொல்ல,
“ஓகே, வாங்க கீழே போவோம்…” என்று சொல்லி பவித்ரா பின்னோடே அனைவரும் இறங்கி கீழே வர பவித்ரா அப்படியே தன்னறைக்குள் புகுந்துகொண்டாள்.
படுக்கையில் விழுந்தவளுக்கு உறக்கம் என்பதுதான் இல்லை. கண்ணை மூடி உறங்க முயன்றவளின் மனது கீறிவிட்ட காயத்தின் வலியை இப்போது காண்பித்தது.
அன்று அத்தனைபேரின் மத்தியிலும் கொஞ்சமும் அச்சமின்றி தன்னை அணைத்து ஆவேச முத்தம் பதித்தவனின் அழுத்தமான இதழ்களை இப்போதும் அவளின் முகம் சூடாக உணர்ந்தது.
மெத்தையென தன்னிதழ்களில் சரிந்த அவன் அதரங்களின் மீசை குறுகுறுப்பில் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தவளின் மனது கலங்கி போனது.
யாரும் எதிர்பாராத நேரம் விசேஷத்திற்கு ஊர் கூடி இருந்த நிமிடம் எதற்கும் பயப்படாது தன்னை இடைவளைத்து இறுக்கி அணைத்து, இதழணைத்து எதிர்பாரா முத்தம்.
இப்போது நினைத்தாலும் உடலெல்லாம் தகித்தது. அந்த ஆவேச தாக்குதலில் விஜய்யின் இறுக்கமான பிடியும், இம்மியளவும் அசையவிடாத ஆளுமையும் இப்போதும் பயத்தை தர அவனிடம் சென்றுவிடவே கூடாதென்று வேண்டிக்கொண்டாள்.
நுண்ணுணர்வுகளை கொண்டவளின் இந்த வலியை நுண்ணுயிரிகளை பற்றி பாடமெடுப்பவன் உணர்ந்து உருகி உறைவது சாத்தியமில்லை என்று அவளின் அடிமனம் அடித்து கூவியது.