ஒரு மாதம் கடந்திருந்தது. ரொம்பவே மெலிந்து போயிருந்தாள் மாதுரி. என்புதோல் என்று சொல்லும் அளவுக்குப் பார்க்கவே எழும்பும் தோலுமாகக் காட்சி அளித்தாள். உடல் அளவில் மட்டுமில்லை மனதளவிலும் ஓய்ந்து போயிருந்தாள். போராடி போராடி ஓய்ந்து போயிருந்தாள். உண்மையைச் சொன்னால் கேட்பதற்குக் காதுகள் இல்லாதபோது யாரிடம் சொல்வது? முற்றும் துறந்த முனிவர் நிலை தான். தான் உண்டு தன் வேலை உண்டு என்று! அப்படி ஆக்கியிருந்தனர் அங்கிருந்த கயவர்கள்.
அங்கே சித்தார்த்தோ, போகப் போக வியாபாரம் பள்ளத்தை நோக்கிச் செல்ல, கடன் ஆளையே மூழ்கடிக்கும் நிலைக்கு வந்து விட்டிருந்தது. எவ்வளவோ போராடிப் பார்த்தவன், முடியாமல் போகவே, இருந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டுக் கடனை அடைத்துவிட்டு, மிஞ்சிய சில லட்சங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று திண்டாடியபொழுது தான், குஜராத்தில் இருந்த அவன் பெரியப்பா சூரத் வரும்படி சொல்ல, ராஜேஸ்வரியிடம் கேட்டான்.
அவரோ மகளை விட்டு வர மனமில்லாமல் இருக்க, நந்தாவிடம் ஆலோசனை கேட்டார். அவனோ, சூரத் செல்வது தான் சிறந்தது என்று சொன்னவன், மாதுரிக்கு குணமடைய இன்னும் மாதங்கள் ஆகும் என்று மருத்துவர் சொன்னதாக ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டான்.
ரொம்பவே குழம்பி போன ராஜேஸ்வரி, மகனின் எதிர்காலம் பாழாகிட வேண்டாம் என்று நினைத்து மகனுடன் சூரத் புறப்பட்டுச் செல்ல முடிவெடுத்தார். மகள் குணமடைந்ததும் மீண்டும் சென்னை வந்துவிடத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அங்கே சூரத்தில், அம்பரீஷின் ஒன்றுவிட்ட அண்ணன், சித்தார்த்திடம் இருந்த கொஞ்சநஞ்ச பணத்தையும் பிசினெஸ் என்ற பெயரில் தன் கடை முதலீட்டில் போட்டு அவனை ஏமாற்றிவிட, நடுத்தெருவுக்கு வந்தது அம்பரீஷின் குடும்பம்.
அடுத்து என்ன செய்ய என்று தவித்தபொழுது, அம்பரீஷின் தூரத்துச் சொந்தம் வழியில் தெரிந்த ஒருவரின் உதவியுடன், ஒரு சிறு கிராமத்தில் குடி பெயர்ந்தனர் சித்தார்த்தும், ராஜேஸ்வரியும். தாயை அங்குத் தங்க சொல்லிவிட்டு, பக்கத்து டவுனில் இருந்த நகை கடையில் மாத சம்பளத்திற்கு வேலையில் சேர்ந்தான் சித்தார்த்.
மாதுரியின் குடும்பம் குஜராத் சென்றதுமே, தெரிந்த வக்கீலை வைத்துக் கோர்டில் விவாகரத்து வழக்குப் பதிவு செய்தான் நந்தா. மனைவி மனநலம் பாதிக்கப்பட்டு முற்றிய நிலையில் இருப்பதால், குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேறு திருமணம் செய்ய வேண்டும் என்றும், அதற்காக மாதுரியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்ற காரணத்தைக் கூறியவன், கௌஷிக் மூலம் போலியாகத் தயாரிக்கப்பட்ட அவளின் மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்ததோடு மட்டுமில்லாமல், கௌஷிக் வந்து சாட்சியும் சொல்ல, விசாரணை செய்த நீதிமன்றம், மாதுரியின் நிலைமையைத் தெரிந்துகொண்டு, ஹிந்து திருமணச் சட்டம் செக்க்ஷன் பதிமூன்றின் படி, நந்தாவை இந்தத் திருமணப் பந்தத்தில் இருந்து விடுவித்து டிவோர்ஸ் கொடுத்தது.
மாதங்கள் கடக்க, மாதுரி இப்பொழுதெல்லாம் அமைதியாக இருப்பதால், அவளை ரொம்பக் கட்டுப்படுத்தாமல் கொஞ்சம் இலவுகாகக் கையாள ஆரம்பித்திருந்தனர். சில சமயங்களில் மற்ற நோயாளிகள் இருக்கும் அறையில் அவர்களோடு சேர்த்து பூட்டி வைக்கப்பட்டாள். அவளின் அமைதி கௌஷிக் மூலம் நந்தாவுக்குத் தெரியவர, ரொம்பவே சந்தோஷப்பட்டான்.
“ஆஞ்சு ஓய்ஞ்சு போய்ட்டா! கூடிய சீக்கிரத்தில முழுப் பைத்தியம் ஆகிடுவா!” என்று கணக்கு போட்டான்.
புலி பதுங்குவது பாய்வதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து என்று அவனுக்குத் தெரியாது.
அன்றைய தினம் தீபாவளி என்பதால், நோயாளிகளைப் பார்க்கவென உறவினர்கள் வந்திருக்க, மனநல காப்பகம் சற்றே கூட்டமாகக் காட்சி அளித்தது. வழக்கம்போலக் காலை குளிக்க அழைத்துச் செல்லப்பட்டனர் நோயாளிகள். அவர்களோடு ஒருவளாகச் சென்றாள் மாதுரி.
பெண் நோயாளிகள் குளித்துக் கொண்டிருக்க, அப்பொழுது காவலுக்கு நின்றிருந்த செவிலியர் ஒருவர் தெரிந்த பெண் ஒருத்தி வந்திருந்ததில், பேச்சு ஆர்வத்தில் அங்கிருந்து சற்று தள்ளி நகர்ந்துவிட, அந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட மாதுரி, நைசாகக் குளியல் அறையில் இருந்து வெளியேறி யார் கண்ணிலும் படாமல் சற்று தள்ளி வந்தவளின் கண்ணில், மரத்திண்டில் இருந்த பை தென்பட்டது.
யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தவள், மெதுவாகச் சென்று அந்தப் பையைத் திறந்து பார்த்தாள். யாரோ தன் மகளுக்காகப் புதுப் புடவை, ப்ளவுஸ், பாவாடை எல்லாம் வாங்கி வந்திருக்கிறார்கள் போல! சட்டென்று அந்த ஆடைகளை எடுத்து மறைத்துக் கொண்டவள், மரங்கள் அடங்கிய புதருக்கு அந்தப்பக்கம் சென்று தன் பச்சை கவுனை கழட்டி எறிந்துவிட்டு, மறைத்து எடுத்து வந்திருந்த புடவையை மடமடவென உடுத்திக் கொண்டாள். பின் முந்தானையைத் தலை முழுவதும் போர்த்திக்கொண்டு விறுவிறுவெனக் காப்பகத்தின் மெயின் கேட்டுக்கு வந்தாள். அங்கே ஒரு குடும்பம் தங்கள் பாசை காட்டிவிட்டு வெளியேற அவர்களுடன் கலந்து வெளியே சென்று விட்டாள்.
வெளியே வந்ததும் திரும்பி நடைமேடையில் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள். சிறுது தூரம் சென்றவள், வழியில் நின்றிருந்த ஒரு ஆட்டோகாரனிடம் கெஞ்சி, பக்கத்தில் இருந்த காவல்நிலையத்திற்கு வந்தாள்.
“தேங்ஸ் அண்ணா!” ஆட்டோக்காரனிடம் சொல்லிவிட்டு விறுவிறுவெனக் காவல்நிலையத்துக்குள் சென்றவள், அங்கிருந்த உதவி இன்ஸ்பெக்டரிடம்,
“சர், என்னோட ஹஸ்பன்ட் என்னை அடைச்சு வச்சுக் கொடுமை படுத்துறார். நான் எப்படியோ தப்பிச்சு வந்துட்டேன். மறுபடியும் வீட்டுக்கு போனா, என்னைக் கொன்னு கூடப் போட்டுடுவார். கொஞ்சம் வந்து என்னைக் காப்பாத்துங்க சர்.” என்று பொய்யாக் ஒரு கதையைக் கூறினாள்.
அப்படிச் சொல்லி அவர்களைத் தன் அபார்ட்மெண்ட் வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் ஆதாரங்களை எடுக்க அவள் திட்டம் போட்டு இருந்தாள்.
அவரோ, “இன்ஸ்பெக்டர் வெளிய போயிருக்கார். அவர் வந்ததும் உங்க புகார சொல்லுங்க மா. இப்போ அப்படிப் போய் உட்காருங்க.” என்று சொல்ல, வேர்த்து வழியும் தன் முகத்தைத் துடைத்தபடி எழுந்து பக்கத்தில் இருந்த பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டாள்.
சப் இன்ஸ்பெக்டர், உடனே இன்ஸ்பெக்டரை அழைத்து விஷயத்தைச் சொல்ல, “ஆமா! இவளுங்களுக்கு வேற வேலை இல்லை.” என்று சலித்துக் கொண்டவர், “இதோ வரேன்னு சொல்லுயா!” என்று சொல்லிவிட்டு, “டிரைவர் கொஞ்சம் சீக்கிரம் போ!” என்றார் ஓட்டுனரை பார்த்து.
அப்பொழுது அவருக்கு ஒரு வாட்சப்ப் குறுஞ்செய்தி வந்தது. எடுத்துப் பார்த்தார். கமிஷனர் அலுவகத்தில் இருந்து வந்திருந்தது. அதில் மாதுரியின் புகைப்படம் இருக்க, அதற்குக் கீழே, மனநலம் சரியில்லாத இந்தப் பெண் தப்பி ஓடிவிட்டதாகவும், அவளைக் கூடிய சீக்கிரம் கண்டிபிடிக்கும்படியும் செய்தி போடப்பட்டிருந்தது. கூடவே, இந்தச் செய்தி ரகசியமாக இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
“இருக்கிற தொல்லையில இது வேற!” எரிச்சலில் கத்தினர்.
பத்து நிமிடத்தில் காவல்நிலையம் வந்து சேர்ந்தார் இன்ஸ்பெக்டர். எதிரில் வந்து கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டரை பார்த்துவிட்டு, “எங்கையா அந்த லேடி?” என்றார்.
“உள்ள உட்கார்ந்து இருக்கு சர். பச்சை கலர் புடவை.” பதில் சொன்னார் அவர்.
“சரி, நீ அந்த மர்டர் கேஸ் ஃபைலை எடுத்துட்டு என் ரூமுக்கு வா.” சொல்லிவிட்டு விறுவிறுவென்று காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். நுழைந்தவர், சப் இன்ஸ்பெக்டர் சொன்ன பெண்ணைத் தேடினார். அப்பொழுது பக்கவாட்டில் இருந்த பெஞ்சின் கடைசியில் அமர்ந்திருந்த மாதுரி அவர் கண்ணில் பட்டாள். மிரண்டு போனார். “இந்தப் பொண்ணு அந்தப் பைத்தியக்கார பொண்ணுல!” தனக்குள் சொல்லிக்கொண்டவர், உடனே தனது மொபைலை எடுத்துப் பார்த்தார். புகைப்படத்தில் இருந்த பெண்ணும் அங்கு உட்கார்ந்திருக்கும் பெண்ணும் ஒன்று என்பது தெரிந்தது.
மாதுரி ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பது தெரிந்ததும், அவளை நெருங்க சற்றே பயந்தார். பைத்தியம் ஆயிற்றே, கடித்துகிடித்து வைத்துவிட்டால்? அவள் பார்க்காத நேரம், வெளியே வந்தவர், சப்-இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் போட்டார்.
“சொல்லுங்க சர்?”
“யோவ்! கொஞ்சம் முன்னாடி சொன்னியே அந்த லேடி, அது எப்படிப் பேசுச்சு? நல்லா பேசுச்சா? இல்லை ஒரு மாதிரி மரம் கழண்ட மாதிரி பேசுச்சா?” தயங்கி தயங்கி கேட்டார்.
“நல்லா தான் பேசுச்சு சர். ஏன் சர் கேட்குறீங்க?”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, கமிஷனர் ஆபிஸ்ல் இருந்து ஒரு மெண்டல் பேஷன்ட் மிஸ்ஸிங்ன்னு மெசேஜ் வந்துது யா. அந்தப் போட்டோல இருந்த பொண்ணு தான் நீ சொன்ன பொண்ணு.”
“சார்? உண்மையாவா? படிச்ச பொண்ணு மாதிரி நல்லா பேசுச்சே சார்?” அவர் நடுங்கி போனார்.
“நீ வேற, பைத்தியம் எல்லா நேரமும் பைத்தியமா இருக்காது யா! சரி இப்போ என்ன பண்ண?!”
“வேற ரிஸ்கே வேண்டாம் சர். உடனே ஹாஸ்பிடலுக்கு ஃபோனை போட்டு வரச் சொல்லுங்க!”
“நீ சொல்றது தான் சரி.” என்றவர், தன் மொபைலில் இருந்து மனநல காப்பகத்தின் டீனை தொடர்புகொண்டு விஷயத்தைச் சொல்ல, அவர்களோ உடனே வருவதாகச் சொல்லிவிட்டு வைத்தனர்.
பின் சப் இன்ஸ்பெக்டரிடம் ஃபோனில் பேசிய இன்ஸ்பெக்டர், “யோவ்! அந்தப் பொண்ணு கேட்டுச்சுனா, சர் இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவாருன்னு ஒரு பொய்யை சொல்லி வை, சரியா!”
“சரி சர்!”
ஃபோனை வைத்துவிட்டு, மாதுரியின் கண்ணில் படாத தூரத்தில் சென்று நின்று கொண்டவர், காப்பக வண்டிக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்.