அத்தியாயம் 30
“குட் ஈவ்னிங் சர்!” சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார் கமிஷனர். எதிரில் சுதர்ஷன் நின்றிருந்தான். “உட்காருங்க சுதர்ஷன்.” கமிஷனர் சொல்ல, அவருக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
“வாக்குமூலம் வாங்கியாச்சா சுதர்ஷன்?”
“வாங்கியாச்சு சர்.” சொல்லிவிட்டு தன் கையில் இருந்த காகிதத்தை அவரிடம் நீட்டினான்.
அதை வாங்கியவர், பிரித்துப் படிக்க ஆரம்பித்தார். காகிதத்தில் இருந்ததைப் படிக்கப் படிக்க, அவர் முகம் அதிர்ச்சிக்கும், குழப்பத்துக்கும் போனது. முழுவதையும் படித்து முடித்தவர்,
“என்ன சுதர்தன் இது?” என்றார் அதிர்ச்சியாக.
“அவங்க ஸ்டேட்மென்ட் சர்.” அமைதியாகப் பதில் சொன்னான்.
“அது தெரியுது சுதர்ஷன். ஆனா என்ன இப்படிச் சொல்லி இருக்காங்க? அவங்க தப்பிக்க முயற்சி செஞ்சப்போ தான் அவங்களுக்கு மண்டையில அடிபட்டதாகவும், வேற ஒன்னும் இல்லைன்னு சொல்லி இருக்காங்க?!”
“ஆமாம் சர். நாம தான் ஏதோ இருக்குன்னு தப்பா நினைச்சுட்டு இருந்தோம். இட் வாஸ் பியூர்லி ஆன் ஆக்சிடென்ட்.” இப்பொழுதும் அவனின் குரலில் ஒரு அமைதி.
சுதர்ஷனை கூர்மையாகப் பார்த்தார் கமிஷனர். அவரது விழிகளே கேட்டது, ‘இது வெறும் ஆக்சிடென்ட் தானா?’ என்று.
ஆனால் சுதர்ஷனின் பார்வையிலும், உடல் மொழியிலும் எந்த மாற்றமும் இல்லை.
சில நிமிடங்கள் அப்படியே பார்த்திருந்தவர், “அவங்க வாக்குமூலம் எழுதறப்போ, வீடியோ ரிகார்ட் செஞ்சீங்களா?” என்று கேட்டார்.
“செஞ்சோம் சர். ஆனா அதுக்கு அப்புறம் தான் பார்த்தோம், ரிகார்ட் பட்டன் ஆண் பண்ணவே இல்லைன்னு.” அப்பட்டமாகப் பொய் சொன்னான்.
கமிஷனருக்குத் தெரிந்துவிட்டது, அவன் ஒரு முடிவில் இருக்கிறான் என்று. பயிற்சியின் பொழுதில் இருந்தே அவருக்குச் சுதர்ஷனை தெரியும். அதன்பின் தொடர்பு இல்லையென்றாலும், கடந்த சில மாதங்களாக அவனுக்கு உயர் அதிகாரியாகப் பணியில் இருக்கும்பொழுது, அவன் கேஸ்களை ஹேண்டில் செய்யும் விதத்தைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்.
அவர் பார்த்தவர்களில் வித்தியாசமானவன் சுதர்ஷன்!
ஒரு பெரு மூச்சை வெளியேற்றியவர், “சரி கேஸ் ஃபைலை என்ன பண்ணப் போறீங்க?” என்றார்.
“த கேஸ் இஸ் கிளியர் சர். ஷார்ட் சர்கியுட்னால ஏற்பட்ட தீ விபத்து இது. இருபது பேர் டெட். பத்து பேர் இன்ஜியூர்ட், நாலு பேருக்கு மைல்ட் இஞ்சியுரீஸ். அவ்ளோதான். கேஸ் ஓவர் சர்.” நிறுத்தி நிதானமாகச் சொன்னான்.
‘அவ்ளோதான்??’ கேள்வியாக அவனையே பார்த்திருந்தார் கமிஷனர். பின் என்ன நினைத்தாரோ, “ஒகே சுதர்ஷன். கேசை க்ளோஸ் செஞ்சுடுங்க.” சொல்லிவிட்டு அந்தக் காகிதத்தை அவனிடமே திருப்பிக் கொடுத்தார்.
காகிதத்தை வாங்கியவன், எழுந்து கமிஷனருக்கு ஒரு சலுயுட்டை வைத்துவிட்டு, அறையில் இருந்து வெளியேறினான்.
அதன்பின் கமிஷனர் அலுவகத்தில் இருந்து, தன் காவல்நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான் சுதர்ஷன். அவன் விழிகள் சாலையை வெறித்தாலும், அவன் மனமோ சற்று முன்பு மருத்துவமனையில் நடந்ததை அசைப்போட்டது.
——————————————————————————–
கமிஷனரிடம் பேசிவிட்டு, மாதுரியின் அறைக்குள் வந்தவன் தான் கண்டக் காட்சியில் அதிர்ந்து போனான்.
கட்டிலில் அமர்ந்திருந்த மாதுரி, தன் கையில் இருந்த அவளின் வாக்குமூல காகிதத்தைத் துண்டுத் துண்டாகக் கிழித்துக்கொண்டு இருந்தாள்.
மிதுனும், சஞ்சனாவும் கூடப் பார்வையில் அதிர்ச்சியோடு மாதுரியை தான் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.
மாதுரியின் செயலைப் பார்த்து அதிர்ந்துப் போன சுதர்ஷன், “என்ன பண்றீங்க மாதுரி?” என்று கத்த, நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வையே சொன்னது, ‘என்ன பண்ணணுமோ, அதைத்தான் செய்றேன்.’ என்று.
“உங்களுக்கு என்ன பைத்தியமா? இந்தக் கேஸ்ல உங்களோட ஸ்டேட்மெண்ட் ரொம்ப முக்கியமின்றது, ஆஸ் எ லாயர் உங்களுக்கே தெரியும். அதைப் போய்க் கிழிச்சு போட்டுடீங்க?” கோபம் அவனது குரலில்.
பின்னே, இந்த வழக்குக்காக எத்தனை பேர் எத்தனை நாட்கள், உயிரை பற்றிக் கவலைப்படாமல் வேலை செய்து இருக்கின்றனர். இதோ இங்கு இருக்கும் மிதுனும், சஞ்சனாவுமே, அதற்கு ஒரு உதாரணம் ஆயிற்றே!
முழுவதையும் கிழித்து, பக்கத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டவள், பேப்பர், பேனாவை எடுத்து ஏதோ எழுதிவிட்டு அவனிடம் காட்டினாள். படித்தான் சுதர்ஷன்.
“ஆமாம் பைத்தியம் தான் நான். இத்தனை நாளும் என்னை இந்த உலகம் அப்படித் தான் சொல்லுச்சு. எப்படியும் பைத்தியம் சொல்ற வாக்குமூலம் கோர்டில எடுபடாதுன்றதால தான் இதைக் கிழிச்சிட்டேன்.”
“ப்ச்! ஏன் இப்படிப் பேசுறீங்க? நீங்க பைத்தியம் இல்லைன்றத, ஈசியா ஒரு மெடிக்கல் டெஸ்ட்ல ஃப்ரூவ் செஞ்சுடலாம். அப்படியே உங்க வாக்குமூலம் எடுப்படலனாலும், உங்களோட எவிடென்ஸ் போதும், தப்புச் செஞ்சவங்களை உள்ளத் தள்ள!” ஆதங்கத்துடன் சொன்னான் சுதர்ஷன்.
“அப்படி எத்தனை கேஸ்ல தப்புச் செஞ்சவங்களுக்குத் தண்டனை கிடைச்சு இருக்குன்னு சொல்லுங்க? கையும் களவுமா பிடிபட்டவங்களே கேஸ்ல் இருந்து ஈசியா வெளிய வந்து சுத்திட்டு இருக்காங்க. அந்த மாதிரி எத்தனையோ கேசை நான் பார்த்து இருக்கேன். ஒரு ரேப் கேஸ்லையே தீர்ப்பு கிடைச்சும் குற்றவாளிங்களைத் தூக்குலப் போட கிட்டத்தட்ட எட்டு வருஷம் ஆகுது. ஏன், ஒரு சின்னத் திருட்டு கேஸ்ல, திருட்டுப் போன பொருள் போனது தான். எத்தனை பேருக்குத் திருப்பிக் கிடைச்சு இருக்கு?!” வேகவேகமாகப் பேப்பரில் எழுதிக் காட்டினாள். அவள் கைகளில் இருந்த வேகத்துக்கு இணையாக, அவளது வார்த்தைகளில் உஷ்ணம் இருந்தது.
“மத்த கேசை விடுங்க மாதுரி. உங்க கேஸ்ல ஸ்ட்ராங் எவிடென்ஸ் இருக்கு. நிச்சயம் நியாயம் கிடைக்கும்.” அழுத்தமாகச் சொன்னான்.
“ஸ்ட்ராங் எவிடென்ஸா? இந்த வீடியோவா? அதைப் பொய்யாக்குறதுக்கு அவங்களுக்கு ஒரு செகண்ட் ஆகாது. நானும் கலக்டரும் ஆஃபீஸ் சம்பந்தமா பேசிட்டு இருந்ததை யாரோ வீடியோ எடுத்து, டப்பிங் கொடுத்து இருக்காங்கன்னு சொல்லி, அதுக்கு நாலு சாட்சியும் கொண்டு வருவாங்க? அப்போ என்ன பண்ணுவீங்க? இதே நரசிம்மன் மேல அஞ்சு கொலை கேஸ், நாலு கரப்ஷன் கேஸ் இருக்கு, அதுக்கு எல்லாம் தீர்ப்பு கிடைச்சுதா? ஏன், நானே அவன் மேல ரெண்டு கேஸ் போட்டுட்டு, நீதி கிடைக்க இன்னமும் நாயா பேயா அலைஞ்சுட்டு இருக்கேன். என்கிட்டே எல்லா எவிடென்ஸ் இருந்தும், கேசை ஒன்னும் இல்லாம ஆக்கிட்டாங்க. ஒரு சாதா குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்கவே பத்து வருஷம், இருபது வருஷம் ஆகுது. சி.எம் என்ன சும்மாவா? ஒரு விசாரணைக்குக் கூட அவர் கிட்ட நெருங்க முடியாது. இதுல எங்க அவரைக் குற்றவாளின்னு நிருபிச்சு, அரெஸ்ட் செஞ்சு, தண்டனை வாங்கிக் கொடுக்கிறது? கேஸ் போட்டதுக்காக, நான் மட்டும் கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நூறு தடவை அலையணும், அதுக்குள்ள என்னைக் கொன்னு போட்டுடுவாங்க. என் பொண்ணு அநாதை ஆகிடுவா. அவங்க, ஆண்டு அனுபவிச்சிட்டு செத்துடுவாங்க. இது தான் நடக்கும். பாதுகாப்பு இருக்கும்போதே, கொலை பண்ண ட்ரை பண்றாங்க, தனியா இருந்தேன்னா என்ன நடக்குமோ?”
“இதுக்கா ஓடி ஓடி எவிடென்ஸ் கல்கட் செஞ்சீங்க?” அதிர்ப்தியாய் கேட்டான் சுதர்ஷன்.
பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் மாதுரி.
“சரி, அடுத்து என்ன தான் செய்யப் போறீங்க?”
அதற்கும் அவளிடம் பதில் இல்லை.
எரிச்சல் அடைந்தவன், “வாக்குமூலத்தைக் கிழிச்சதுக்கு நான் உங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். நியாபகம் வச்சுக்கோங்க!” என்றான் எச்சரிக்கையாய்!
ஆனால் மாதுரியின் பார்வையே சொன்னது, ‘அதை எப்படி ஃபேஸ் பண்ணனும்னு எனக்குத் தெரியும்.’ என்று!
சிறுது நேரம் அவளையே பார்த்துக்கொண்டு நின்றவன், பின் வெளியே செல்ல திரும்ப, மாதுரி சைகை கொடுத்ததின் பேரில், அவனை அழைத்தான் மிதுன்.
“சுதர்ஷன் சர்!”
திரும்பி அவனைப் பார்த்தான். அவன் மாதுரியை கைகாட்ட, மாதுரி அவனிடம் இரண்டு காகிதங்களை நீட்டினாள்.
அதில், ஒன்றில் ‘நான் தப்ப முயன்றதால் பின் மண்டையில் அடிபட்டுவிட்டது என்றும். வேறு எந்த ஒரு விஷயமும் இல்லை.’ என்பதைச் சொல்லும் வகையில் ஒரு கற்பனை கதையைப் புனைந்து வாக்குமூலமாக எழுதி, கீழே கையெழுத்து போட்டு இருந்தாள்.
படித்ததும் கோபம் வர சற்றே கோபத்தோடு, ‘என்ன இது முட்டாள் தனமான காரியம்?’ என அவளை நிமிர்ந்து பார்த்தான், ஆனால் அவள் முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின் அடுத்தக் காகிதத்தைப் பார்த்தான். அதில், ‘உங்களோட உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன். ரொம்பத் தேங்ஸ்!’ என்று எழுதி இருந்தாள்.
ஒரு வித இயலாமையுடன் மீண்டும் அவளைப் பார்த்தான். இம்முறை அவன் விழிகளில் கோபம் இல்லை. மாறாக, ‘ஏன்! இப்படிச் செஞ்ச?’ என்ற கேள்வி தான், தொக்கி நின்றது. மாதுரியோ, கைகளைக் கூப்பி, ‘தேங்க்ஸ்’ என்று உதடுகளை அசைத்தவள், இதழ் பிரியாமல் புன்னகைத்தாள்.
வெகு நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருக்க, சில நிமிடங்கள் கழித்து, “என்னைக்கு எந்த ஹெல்ப் வேணும்னாலும், என்னைக் கான்டாக்ட் பண்ணுங்க. உங்க அண்ணாகிட்ட என்னோட ஃபோன் நம்பர் இருக்கு.” என்று சொன்னவன், மிதுன் பக்கம் திரும்பி, “நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாளைக்கு வெளியூர் இல்லனா வெளிநாட்டுல இருந்துட்டு வாங்க. அதுதான் உங்களுக்குச் சேஃப்.” என்று சொல்ல, ‘சரி’ என்பது போலத் தலை அசைத்தனர் இருவரும். பின் மாதுரி பக்கம் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், ஒரு பெரு மூச்சுடன் அறையை விட்டு வெளியேறினான்.
——————————————————
ஓட்டுனர் “சர்?” என்று அழைக்கவும், சுயநினைவுக்கு வந்தவன், கேள்வியாக அவனைப் பார்க்க, “ஸ்டேஷன் வந்துடுச்சு சர்!” என்றான். திரும்பி பார்த்தான் சுதர்ஷன். அந்த ரத்தசிகப்புக் கட்டிடம் அவனைப் பார்த்துச் சிரிப்பது போல இருந்தது. கவலையுடன் காரில் இருந்து இறங்கி, காவல்நிலையத்துக்குள் சென்றான்.
விஷயம் நந்தாவின் காதுக்கும் வந்தது. பயங்கர அதிர்ச்சிக்குள்ளானான். ‘மாதுரி எந்த எவிடென்சையும் போலீஸ்கிட்ட கொடுக்கல! மெண்டல் ஹாஸ்பிட்டல் ஃபயர் கேசும் மூடி வச்சுட்டாங்க! ஏன் அப்படிச் செஞ்சா? அவ லாயர் ஆச்சே, இதுக்குப் பின்னாடி ஏதாவது ப்ளேன் போட்டு வச்சுருக்காளா? இல்லை கௌஷிக் மண்டையில அடிச்சதுல உண்மையாவே பைத்தியம் ஆகிட்டாளா?’ மண்டை காய்ந்தது அவனுக்கு.
உடனே நரசிம்மனை தொடர்புகொண்டவன் அதுவரை நடந்த முழுவதையும் கூறிவிட்டு, “இப்போ என்ன பண்ண மாமா? அவ கையில எவிடென்ஸ் இருக்கே?” என்று கேட்க,
“என்கிட்டே முன்னாடியே சொல்லி இருக்க வேண்டியது தானே மாப்பிள்ளை. நம்ம ஆளுங்களை விட்டுக் காரியத்தை முடிச்சுருப்பேனே!” என்றவர், பின் சில நிமிட யோசனைக்குப் பிறகு, “இனி நீங்க எதுவும் பண்ண வேண்டாம் மாப்பிள்ளை. அமைதியா இருங்க. மறுபடியும் மறுபடியும், கொல்ல ட்ரை செஞ்சு, எங்கப்பன் குதருகுள்ள இல்லைன்னு, நீங்களே மாட்டிக்கப் போறீங்க.” என்றவர், ‘அப்புறம் உங்களால நான் மாட்டிக போறேன்.’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.
“ஒரு வேளை சோஷியல் மீடியால அப்லோட் செஞ்சுட்டா என்ன பண்ண மாமா?” அடுத்தக் கேள்வியைக் கேட்டான்.
“அவ என்ன ப்ளேன் போட்டு வச்சிருந்தாலும் சரி, அதை எப்படி ஒண்ணுமில்லாம ஆக்குறதுன்னு எனக்குத் தெரியும் மாப்பிளை. நான் இருக்கிற வரைக்கும் உங்களைத் தொட முடியாது.” அழுத்தமாகச் சொன்னார்.
“சரி மாமா!” சொல்லிவிட்டு ஃபோனை வைத்தவனுக்குத் தூக்கமே வரவில்லை.
‘அவள் என்ன செய்யப் போகிறாள்?’ என்று காத்திருக்க ஆரம்பித்தான்.
நாட்கள் வாரங்களாகக் கடக்க, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன மாதுரி, தான் நல்ல மனநிலையில் இருப்பதாகச் செர்டிபிகேட் வாங்கி அதன் உதவியுடன் மனநல மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதி வாங்கினாள்.
————————————————————-
மதுரையில் பணம் படைத்தவர்கள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், வசிக்கும் பகுதி அது. ‘ரத்தினசபாபதி’ என்று பித்தளையில் பெயர் பலகை இருந்த அந்தப் பிரம்மாண்ட வீட்டின் முன் ஒரு ஆட்டோ வந்து நின்றது. காவலாளி கேள்வியாகப் பார்க்க, கையில் ஒரு மஞ்சள் பையுடன், உள்ளே இருந்து இறங்கினர், ஒரு ஆணும், ஒரு பெண்ணும்.
“யார் வேணும் உங்களுக்கு?” வாட்ச்மேன் கேட்க,
“ரத்தினசபாபதி ஐயாவை பார்க்கணும்.” சொன்னான் அந்த இளைஞன்.
“நீங்க யாரு?”
“ஐயாவோட தூரத்துச் சொந்தம். கல்யாண பத்திரிகை கொடுக்க வந்துருக்கோம்.”
“ஒரு நிமிஷன் இருங்க. ஐயாகிட்ட கேட்டுட்டு வரேன்.” சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார் காவலாளி.
சிறுது நேரத்தில் வெளியே வந்தவர், “ஐயா உங்களை வரச் சொன்னாரு. உள்ள போங்க, ஹால்ல தான் இருக்கார்.” என்று சொல்ல, அவருக்கு ஒரு கும்பிடை போட்டுவிட்டு உள்ளே சென்றனர், இருவரும்.
அந்தப் பிரம்மாண்ட ஹாலில், விலையுர்ந்த சோஃபாவில் அமர்ந்திருந்தார் ரத்தினசபாபதி. வாட்டசாட்டமான உயரத்துடனும், அதற்கேற்ற உடலுடன், நடிகர் நெப்போலியனை நினைவுப்படுத்தினார்.
“வணக்கம் ஐயா!” சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார் ரத்தினசபாபதி. ஒரு இளம்பெண்ணும், இளைஞனும் நின்றிருந்தனர். அந்த இளைஞனை அடையாளம் தெரியவில்லை. ஆனால் பக்கத்தில் நின்றிருந்த பெண்ணின் முகம் எங்கோ பார்த்தது போல இருந்தது.
கேள்வியாகப் பார்த்தவரிடம் ஒரு விசிடிங் கார்டை நீட்டினாள் அப்பெண். வாங்கிப் படித்துப் பார்த்தார்.
மாதுரி மேத்தா, advocate. என்று போட்டு இருந்தது.
படித்ததும் அதிர்ந்து போய், அப்பெண்ணைக் கூர்ந்து பார்த்தார். ஆம்! மாதுரியே தான். அதுவும் கிராமத்துப் பெண் வேடத்தில், அடையாளமே தெரியாத அளவுக்கு மெலிந்து போயிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் மிதுன், கரைவேட்டி கரைசட்டையில் அச்சு அசல், கிராமத்து விவசாயி போலத் தெரிந்தான்.
ரத்தினசபாபதி, மாதுரியின் அப்பா அம்பரீஷின் நல்ல நண்பர். ஆனால் இது வெளி உலகத்துக்கு அவ்வளவாகத் தெரியாது, நந்தா, நரசிம்மன் உட்பட! ஏனெனில் பொதுவாக வெளியே இருந்து பார்பதற்கு, அம்பரீஷ் அரசியல்வாதீகளுடன் பழக்கம் வைத்திருப்பது இல்லை. உண்மையும் அது தான். ஆனால் இதற்கு விதிவிலக்கு ரத்தினசபாபதி மட்டும் தான்.
ஒருமுறை வியாபாரம் சம்பந்தமாகக் காஷ்மீர் சென்றிருந்த சமயம் தான், ரத்தினசபாபதியை சந்தித்தார் அம்பரீஷ். அவரின் நல்ல குணம் அம்பரீஷுக்கு பிடித்துவிடவே, இரண்டு குடும்பத்துக்கும் நல்ல நட்பு வளர்ந்தது.
ரத்தினசபாபபதி, அம்பரீஷின் நண்பர் என்று சொல்வதை விட முக்கியமான விஷயம், அவர் இறந்துபோன முன்னாள் முதல்வரின் சொந்த தம்பி. நரசிம்மன் இருக்கும் அதே கட்சியில் தான் உறுப்பினராக இருக்கிறார். அவர் அண்ணனை போலக் கட்சியில் செல்வாக்கு உள்ளவர். ஆயினும் அரசியல் பிடிக்காததால், ஒதுங்கி இருக்கிறார்.
அம்பரீஷின் இறுதி சடங்கிற்கு மட்டுமே வந்தார். அதுவும் வந்துவிட்டு உடனே சென்றுவிட்டார். அப்பொழுது மாதுரியை பார்த்தது. அதற்குப் பிறகு இன்று தான் பார்க்கிறார். மாதுரியின் தற்போதையை மெலிந்த தோற்றதை பார்த்துவிட்டு, அதிர்ந்து போனார்.
“மாதுரி! என்னமா இது கோலம்?! உனக்கு உடம்பி சரி இல்லை ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கன்னு பேசிக்கிட்டாங்க?”
அவரின் கேள்விக்குக் கைகூப்பி ‘வணக்கம்’ தெரிவித்தவள், ‘உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்’ எனச் சைகை செய்ய, அப்பட்டமான அதிர்ச்சி அவரின் முகத்தில்.
“ஏன் மா சைகையில பேசுற? உன் குரலுக்கு என்ன ஆச்சு?”
“அவங்களுக்குக் குரல் போய்டுச்சு ஐயா!” பதில் சொன்னான் மிதுன்.
“நீ யாருப்பா?”
“நான் அவங்களோட தம்பி மாதிரி. உங்கள பார்க்கணும்னு வந்திருகோம்.
இருவரையும் அதிர்ச்சியுடன் பார்த்தவர், மேலே தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே வைத்து, நடந்த அனைத்தையும் சொன்னான் மிதுன்.
“படுபாவி பய உன் புருஷன், அம்பரீஷை கொன்னதும் இல்லாம, உனக்கும் இவ்ளோ கொடுமை செஞ்சுருக்கான். ஆனா பார்க்க அப்பாவி மாதிரி இருக்கானே.” கோபத்தோடு சொன்னவர், “நீ ஏன்மா அன்னைக்கே என்கிட்டே வந்து சொல்லல?” ஆதங்கத்துடன் கேட்டார்.
என்ன சொல்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தாள் மாதுரி. அப்போது இருந்த சூழ்நிலையில் அவளுக்குச் சட்டம் பெரிதாகத் தெரிந்தது. இப்போழுது அடிபட்ட பின்?
‘மன்னிச்சிடுங்க அங்கிள்!’ கைகூப்பி உதட்டசைத்தாள்.
“உனக்குப் பெத்த அப்பா மாதிரி மா நான். என்கிட்டே போய் மன்னிப்பு கேட்டுகிட்டு. இப்போவாச்சும் என்கிட்ட சொல்லனும்னு தோனுச்சே? இனி அவனை என் கையில விட்டுடு, உனக்குச் செஞ்சதுக்கு, அவனை இருந்த இடம் தெரியம் ஆழிச்சிட்றேன்.” அழுத்தமாகச் சொன்னார்.
“அதுக்கு முன்னாடி நீங்க இன்னொரு விஷயத்தையும் பார்க்கணும் ஐயா!” சொன்ன மிதுன், முன்னாள் முதல்வரை கொல்ல நரசிம்மன் திட்டம் போட்ட வீடியோவை அவரிடம் காட்டினான்.
மாதுரிக்கு நடந்ததே அவருக்கு அதிர்ச்சி என்றால், தன் அண்ணனை கொன்றதே நரசிம்மன் தானா? கேட்டு அதிர்ந்து போனவர் வேகவேகமாக வீடியோவை வாங்கிப் பார்த்தார். பார்க்க பார்க்க நரசிம்மன் மேல் கொலைவெறி ஆனது.
“படுபாவி நரசிம்மா! எதிர்க்கட்சிகாரன் சதின்னு சொல்லி எல்லாரையும் நம்ப வச்சுட்டு, யாருக்கும் தெரியாம எங்க அண்ணனை கொன்னு இருக்கியே! உன்னைக் கண்டம் துண்டமா வெட்டி போட்டா தான் என் ஆத்திரம் அடங்கும்.” கர்ஜித்தார்.
“வேணாம் அங்கிள். இப்போ நீங்க அவனைக் கொண்ணீங்கன்னா, அப்புறம் அவன் தியாகி ஆகிடுவான். பதவில இருந்து செத்து போனதால, இருபத்தேழு குண்டு முழங்க அரசு மரியாதையோட அடக்கம் பண்ணுவாங்க.”
‘டைப் டு வாயிஸ்’ செயலி மூலம் அவரிடம் சொன்னாள் மாதுரி.
“பின்ன, அப்படியே விடச் சொல்றியா மா?” கோபம் அடங்கவில்லை அவருக்கு.
“விடச் சொல்லல அங்கிள். அவனை மொதல்ல, பல்லு பிடுங்குன பாம்பா ஆக்கணும். அதுக்கு அப்புறம் இருக்கு அவனுக்கு.” தீர்கமாகச் சொன்னாள் மாதுரி.
“பல்லு பிடிங்கின பாம்பா? புரியல மா?”
தன் திட்டத்தைச் சொன்னாள் மாதுரி. கவனமாகக் கேட்டுக்கொண்டார் ரத்தினசபாபதி.
முழுவதையும் கேட்டுக்கொண்டவர், “நீ கவலைப்படாத மா! கைவசம் நிறைய ஆள் இருக்கு. கூடிய சீக்கிரம் நீ சொன்னது நடக்கும்.” உறுதியாகச் சொன்னார். பின், “அது சரி, நீ ஏன்மா, இப்படி வேஷம் போட்டுக்கிட்டு வந்திருக்க?” என்றார் கேள்வியாக.
“நரசிம்மனும், இவங்க வீட்டுக்காரரும் இவங்களைக் கொல்ல முயற்சி பண்றாங்க ஐயா! ஏற்கனவே ஹாஸ்பிடல்ல வச்சு ஒரு தடவை நடந்துச்சு. அந்த நேரம் நான் அங்க வராம இருந்திருந்தா…..” பாதியில் நிறுத்தினான் மிதுன்.
கோபத்தில் முகம் சிவந்தார் ரத்தினசபாபதி. “நான் இருக்கிற வரைக்கும் உன் கிட்ட எந்தப் பயலும் நெருங்க முடியாது மா. இனி அவனுங்களை நான் பார்த்துக்கிறேன். நீ தைரியமா இரு.” தீர்கமாகச் சொன்னார்.
“அம்மாவும், அண்ணனும் எங்க மா இருக்காங்க?”
“சூரத்தில அங்கிள்.”
“பாப்பா?”
பதில் வரவில்லை அவளிடம் இருந்து.
“அது சம்பந்தமா உங்ககிட்ட ஒரு உதவி வேணும் அங்கிள்!”
“உதவின்னு கேட்காத மா. நீ செஞ்ச உதவிக்கு நான் என்ன கைம்மாறு செஞ்சாலும் பத்தாது. என்ன வேணும்ன்னு உரிமையா கேளு மா?”
கேட்டாள் மாதுரி.
“நிச்சயம் மா.” உறுதி அளித்தார்.
அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள் மாதுரி.
“இனி நீ என்ன செஞ்சாலும், உனக்கு நான் துணையா இருக்கேன் மா. நான் இருக்கிற வரைக்கும், நீ கவலைப்படாத!” அழுத்தமாகச் சொன்னார்.
அவரிடம் விடைபெற்றுக்கொண்டு பங்களாவை விட்டு வெளியே வந்தவள், தன் மொபைலை எடுத்து, யாருக்கோ மெசேஜ் செய்தாள். சில நிமிடங்களில் ஒரு கார் வந்து நிற்க, அதில் இருந்து இறங்கினான் குரு.