அத்தியாயம் 31
“தற்பொழுது கிடைத்த முக்கியச் செய்தி! தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் முதல்முறையாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஐம்பது எம்.எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா. ஆட்சி கவிழும் வாய்ப்பு!” செய்தியாளர் நியுஸ் வாசிக்க, தன் வீட்டுச் சோஃபாவில் அமர்ந்தாவாறு அச்செய்தியை பார்த்துக்கொண்டு இருந்தார் ரத்தினசபாபதி.
மீசையை முறுக்கிக் கொண்டவரின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.
அன்று மாதுரி வந்து பார்த்துவிட்டுப் போனதும், அவள் சொன்னபடி, கட்சியில் அவரின் அண்ணனின் ஆதரவாளர்களை ரகசியமாகச் சந்தித்தார். அவர்களிடம் நரசிம்மனின் வீடியோவை போட்டுக்காட்ட, அனைவருமே கொதித்து எழுந்தனர்.
“நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க அண்ண! அவனைக் கண்டன் துண்டமா வெட்டிப் போட்டுடறோம்.” என்று கர்ஜித்தனர் அனைவரும்.
“பொறுமையா இருங்கப்பா. அவனைக் கொன்னுட்டா, பெரிய தியாகி ஆகிடுவான். அப்புறம் பீச்ல சமாதி வச்சு, அதைக் கோவிலா ஆக்கிடுவாங்க. மொதல்ல அவனைப் பதவியில இருந்து இறக்கணும். அதுக்கு அவனோட ஆட்சியைக் கலைக்கனும். அதுவும் அவனுக்கே தெரியாம. அதுக்கு அப்புறம் அவனைப் போட்டுத் தள்ளுற வேலையை நான் பார்த்துக்கிறேன்.”
கேட்டவர்கள், “நீங்க ஒன்னும் கவலைபடாதீய அண்ணே! அண்ணனோட விசுவாசிங்க தான் முக்கால்வாசி எம்.எல்.ஏவா இருக்காய்ங்க. என்னவோ தகுடுத்தனம் செஞ்சு முதலமைச்சார் ஆகிட்டான், அந்த நரசிம்மன் பய. அதுலயே பல பேர் காண்டுல இருக்காய்ங்க. இதுல அண்ணனை கொன்னது அவன் தான்னு தெரிஞ்சது, கொலை வெறி ஆயிடுவாயங்க.” ஒருவர் சொல்ல,
“மிச்சம் சொச்சம் இருக்கிற ஆளுங்களும் நரசிம்மன் மேல, அதிருப்தியில தான் இருக்காங்க அண்ணே! நரசிம்மன்னோட நடவடிக்கை எதுவும் சரி இல்லை. ரொம்பக் கொள்ளை அடிக்கிறதா புகார் வருது. அதுவும் கட்சிக்கும் கொடுக்காம, ஆட்சிக்கு பயன்படுத்தாம, தனியா அமுக்குறானாம். பேசிக்கிறாங்க.” மற்றொருவர் ஆதங்கத்துடன் சொன்னார்.
“அண்ணே! யாருக்கு தெரியாம அவன் காட்டுக்குள்ள ஒரு பங்களா வச்சுருக்கான் போல. அங்கத்தான் கட்டுகட்டா பணம், நகை நட்டு எல்லாம் மறைச்சு வச்சுருக்கான்னு கட்சியில சிலர் பேசிக்கிறாங்க.” ரகசியமாக ஒருவர் கூறினார்.
“சரி, நீங்க நம்ம ஆளுங்களைக் கூப்பிட்டு பேசுங்க. இன்னும் ரெண்டு நாள்ல எல்லாரும் ராஜினாமா செய்யணும். அப்புறம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது, மீதி இருக்கிறவங்களையும் மடக்கிடலாம். நம்ம கட்சி ஆட்சியா இருந்தாலும், இப்போ நடக்கிறது நரசிம்மன்ற தனி மனுஷனோட ஆட்சி மாதிரி தான் தெரியுது. அவனை இந்த உலகத்தில இருந்து தூக்கினா தான், கட்சியோட பேரை காப்பாத்த முடியும். அடுத்தது தேர்தல் வந்தாலும், செலவை பத்தி கவலைப்படாதீங்க. நான் பார்த்துக்கிறேன்.” தீர்க்கமாகச் சொன்னார் ரத்தினசபாபதி
“நீங்க ஏன் அண்ணே செலவு பண்ணனும். அதான் அமுக்கி வச்சுருக்கானே கோடி கோடியா! அதை எடுத்துட வேண்டியது தான்.” சொல்லிவிட்டு சிரித்தார் ஒருவர்.
அதன்பின் வேலைகள் மும்முறமாக நடந்தது. ஏற்கனவே கட்சியில் ரத்தினசபாபதியின் அண்ணன், நெடுஞ்செழியன் பாண்டியனுக்கு நல்ல செல்வாக்கு உண்டு. கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து இருப்பவர். தற்பொழுது கட்சியில் இருக்கும் முக்கால்வாசி உறுப்பினர்கள் அவரின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் கட்சியில் உறுபினர்களாகச் சேர்ந்தனர்.
அவர் திடீரென்று இறந்து போனதில் பெரும் சோகத்தில் இருந்த அவரின் ஆதராவாளர்களிடம் எல்லாம், தான் முதல்வரின் தீவிர விசுவாசி என்பது போலக் காட்டிக்கொண்ட நரசிம்மன், எப்படியோ முதல்வர் ஆனான்.
தற்பொழுது அவர்களிடம் எல்லாம், ரகசியமாக விஷயம் பகிறப்பட, அப்படியே திட்டத்தையும் தெரிவித்தனர் ரத்தினசபாபதி ஆட்கள். கிட்டத்தட்ட அம்பது எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். விஷயம் கேள்விப்பட்டு அதிர்ந்து போனார் நரசிம்மன். ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அவசரமாகக் கட்சி பொதுகுழுவை கூட்டினார். ஆனால் சொற்ப அளவே உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
எதிர்க்கட்சி வேறு, உடனே ஆட்சியைக் கலைக்கும்படி கோர்டில் கேஸ் போட, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தார் தமிழகச் சட்டமன்ற சபாநாயகர்.
ஏற்கனவே சொல்லி வைத்திருந்ததின் பெயரில், முக்கால்வாசி எம்.எல்ஏக்கள் நரசிம்மனுக்கு எதிராக வோட்டுப் போட, ஆட்சியை இழந்தார் நரசிம்மன். எதிர்கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவைப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாததால், தமிழகச் சட்டமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தல் நடத்தும்படி, குடியரசு தலைவருக்குப் பரிந்துரைத்தார் தமிழகக் கவர்னர்.
குடியரசு தலைவரும், கவர்னரின் பரிந்துரையை ஏற்றுத் தமிழக ஆட்சியைக் கலைத்தவர், ஒரு மாத இடைவெளியில் மறு தேர்தல் நடத்தும்படி உத்தரவிட்டு கவர்னருக்குக் கடிதம் அனுப்ப, தமிழக ஆட்சியைக் கலைத்து அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டார் கவர்னர். அடுத்த நாற்பது நாளில் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.
நரசிம்மனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என்னென்னவோ வழிகளைக் கையாண்டு பார்த்தார். கட்சியில் அவருக்குச் சீட் கொடுக்க மறுத்துவிட்டனர். அதுமட்டுமில்லாமல், ரத்தினசபாபதியை கட்சியின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர். இது ஏதோ அரசியல் விளையாட்டு என்று தான் நரசிம்மன் நினைத்திருந்தார். ஆனால் இது மாதுரியின் விளையாட்டு என்று அவர் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
நரசிம்மனுக்கு அப்படி என்றால், நந்தா ஆடி போனான். “என்ன மாமா கட்சியே என் பின்னாடின்னு சொல்லிட்டு இருந்தீங்க. இப்போ இப்படி மொத்தமா கவுத்திட்டாங்க.” அதிர்ச்சியுடன் கேட்டான்.
“இதைச் சும்மா விட மாட்டேன். கூடிய சீக்கிரம் தனிக் கட்சி ஆரம்பிக்கப் போறேன். என்னை என்ன நினைச்சுட்டு இருக்கானுங்க. தனிக்கட்சி ஆரம்பிச்சு, அவனுங்க மூஞ்சியில கறியை பூசப்போறேன்.” கர்ஜித்தார்.
சொன்னபடியே தடல்புடலாகப் புதுக் கட்சியை ஆரம்பித்தார் நரசிம்மன். அவர் போடும் எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்டுச் சிலர் அவருடன் கட்சியில் சேர்ந்தனர்.
இதற்கிடையில் தமிழகத்துக்குத் தேர்தல் நடந்தது. ஒருபக்கம் ரத்தினசபாபதி பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்ய, மறுபக்கம் கட்சி உறுப்பினர்கள் தீயாய் வேலை செய்ய, அமோகமாக வெற்றிப்பெற்றது ரத்தினசபாபதியின் கட்சி. அதேநேரம் நரசிம்மன் கட்சி ஒரு சீட் கூடக் கிடைக்காமல் தோற்றுப்போனது.
“தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியானது. ஆளுங்கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. கட்சித் தலைவர் ரத்தினசபாபதி தமிழக முதல்வராக நாளை பதவி ஏற்பு!” தொலைகாட்சியில் செய்தி வாசிக்கப்பட,
அதைப் பார்த்துக்கொண்டு இருந்தாள் மாதுரி. அவள் தற்பொழுது வசிப்பது குருவின் வீடு. செய்தியை பார்த்துவிட்டு, ரத்தினசபாபதிக்கு குறுஞ்செய்தி அனுப்பித் தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தாள்.
“எல்லாம் உன்னால தான் மா!” பதிலுக்குத் தெரிவித்தார் அவர்.
“அடுத்து நீ சொன்ன திட்டம் தானே மா?” அவர் கேள்வியாகக் கேட்க,
“ஆமாம் அங்கிள்!” என்றாள்.
“நீ உன் பக்க ஏற்பாட்டைச் செய். நான் என் பக்க ஏற்பாட்டைச் செய்றேன்.” சொல்லிவிட்டு வைத்தார்.
அப்பொழுது “மேம்!” என்ற சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். குரு நின்றிருந்தான். அவன் கையில் ஒரு பென்றைவ்.
“நீங்க கேட்டது இதுல இருக்கு மேம்.” சொல்லிவிட்டு அவளிடம் நீட்ட, அதை வாங்கிய மாதுரி, “இப்போ அவங்க எங்க இருக்காங்க?” என்று சைகையில் கேட்டாள்.
“இருக்க வேண்டிய இடத்தில இருக்காங்க மேம்!” பதில் சொன்னான்.
“தேங்க்ஸ் குரு! புன்னகையின் வாயிலாகத் தன் நன்றியை தெரிவித்தாள்.
பதிலுக்குப் புன்னகைதான் குரு.
குரு நகர்ந்ததும், லேப்டாப்பில் அவன் கொடுத்த பென்றைவை போட்டுப் பார்த்தாள்.
திரையில் மாணிக்கம், நாகராஜ், மற்றும் நல்லசிவம் மூவரும் தாங்கள் செய்த குற்றங்களை வரிசையாகச் சொல்லிவிட்டு, இறுதியில் “நாங்க செஞ்ச தப்புக்கு மறுபடியும் அங்க வொர்க் பண்ண எங்களுக்குத் தகுதி இல்லை. எத்தனையோ உயிரை கொன்னு இருக்கோம். அந்தப் பாவத்துக்கு எல்லாம் ஒரே தண்டனை, எங்களோட இறப்பு. தயவு செஞ்சு எங்களைத் தேடாதீங்க!” என்று சொல்வதோடு காணொளி முடிந்திருந்தது.
தூரத்தில் நின்றிருந்த குருவின் கண்கள் மாதுரியை பார்த்திருந்தாலும், சென்னையில் வைத்து முதன்முதலில் தன்னைச் சந்தித்த நினைவு நியாபகம் வந்தது அவனுக்கு.
காலிங் பெல் அடிக்கக் கதவை திறந்தான் குரு. வாசலில் நின்றிருந்தாள் மாதுரி.
அவளின் மெலிந்த தோற்றம் பார்த்து அதிர்ந்து போனவன், “மேம்!” என்ற அதிர்வுடன் அவளை உள்ளே விட்டான். கூடவே மிதுன்.
நடந்த அனைத்தையும் மிதுன் சொல்ல, அழுது விட்டான் குரு. அதிலும் அவளின் குரல் போய் விட்டதில் அவனுக்கு உள்ளம் குமறியது.
“இதுக்குத் தான் அப்போவே சொன்னேன் மேம்! அவனைப் போட்டுத் தள்ளிடலாம்னு. இப்போ…..சத்தியமா உங்களை இப்படி ஒரு நிலமையில பார்க்கவே முடியல மேம். ஐயாவை இழந்துட்டோம், உங்களுக்கும் இப்படி….” சொல்லிவிட்டு அம்பரீஷின் நினைவில் கலங்கியவனை, என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியவில்லை.
மாதுரியோ, எங்கோ வெறித்தபடி கண்ணீரை சிந்திக்கொண்டு இருந்தாள். ‘இறந்து போனவரை மீட்டு வர முடியுமா? அப்படி ஒரு மெஷின் இருந்தா சொல்லுங்க கடவுளே!’ தந்தையின் நினைவில் திடீரெண்டு கேவல் வெடித்தது அவளிடம்.
வெகு நேரம் கழித்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட குரு, “இப்போ கூட ஒன்னும் கேட்டுப் போகலை மேம். இண்டர்நேஷனல் டான்ஸ் வரைக்கும் எனக்குத் தெரியும். இப்போவே அவங்களுக்கு ஃபோன் போடுறேன்.” சொல்லிவிட்டு மொபைலை எடுத்தவனைத் தடுத்த மாதுரி, “அவனை அவ்வளவு சீக்கிரம் கொல்லக் கூடாது குரு. அதுக்கு நான் ஒரு திட்டம் வச்சுருக்கேன்.” சொன்னவள் தன் திட்டத்தைச் சொல்ல,
“நீங்க கவலைப்படாதீங்க மேம். எல்லா ஏற்பாட்டையும் நான் பார்த்துக்கிறேன். இனி எப்போவும் உங்க கூட நான் வரேன் மேம். அதுக்கு மட்டும் பெர்மிஷன் கொடுங்க மேம் ப்ளீஸ்!”
நன்றியோடு சரி என்றாள் மாதுரி.
இதோ இன்றும் அதே புன்னகை அவளின் முகத்தில்! பார்த்துக்கொண்டே இருந்தான் குரு.
திடீரென்று அவனைத் திரும்பி பார்த்தாள் மாதுரி. அவள் தன்னை அழைத்ததைப் புரிந்து கொண்டு எழுந்து சென்றான்.
லேப்டாப் திரையைக் காண்பித்தாள். அவள் என்ன கேட்கிறாள் என்பது புரிந்து எல்லாவற்றையும் சொன்னான். “நீங்க சொன்ன மாதிரி, அந்த மாணிக்கத்தையும், நாகராஜையும், நல்லசிவத்தையும் பிடிச்சு விசாரிச்சதுல, இதுல நிறையப் பேர் இன்வால்வுட்ன்னு தெரியுது மேம். ஒரு பெரிய சர்கிலே இருக்கு. நீங்க சொன்ன மாதிரி மத்தவங்களை, போட்டுத் தள்ளிட்டோம். இவங்க மூணு பேரை மட்டும்…..” சொல்லாமல் முடித்தான்.
‘சரி!’ என்பது போலத் தலை அசைத்தாள்.
பின் மடமடவென ஒரு காகிதத்தை எடுத்து ஏதோ எழுதி, அத்தோடு இந்தப் பென்றைவை இனைத்து ஒரு கவரை தயார் செய்தவள், கவரின் மேல், மனித உரிமை ஆணையத்தின் முகவரியை எழுதி ஒட்டி, குருவிடம் கொடுத்துப் போஸ்ட் செய்யச் சொன்னாள்.
மனித உறுப்புகள் திருடப்படுவதாக மனநல காப்பகத்தின் மேல் ஒரு புகாரை, மொட்டை கடிதமாக எழுதி அனுப்பி இருந்தாள் மாதுரி.
அப்படியே அவர்களின் வாக்குமூலத்தை நெட்டில் அப்லோட் செய்தாள். தமிழ்நாடே பற்றிக்கொண்டு எரிந்தது. #savementallydisabled என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்டாக, பலர் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.
‘ரேப் செஞ்சவங்களுக்காகக் கூடப் போராட நாலு பேர் இருப்பாங்க. ஆனா மனநல கப்பாகத்தோட நாலு சுவருக்குள்ள பெண்களுக்கு நடக்கிற இந்த மாதிரி கொடுமைக்கு, போராட ஒருத்தரும் கிடையாதுன்ற நினைக்கும்போது…! தெரிஞ்சிக்கக் கூட நாம முயற்சி செஞ்சது இல்லையே..!’
‘எத்தனையோ தடவை அந்த ஹாஸ்பிடல் தாண்டி நடந்து போயிருக்கேன். அந்த நாலு சுவத்துக்கு அந்தப்பக்கம் இப்படி எல்லாம் நடக்குதுன்னு இப்போத்தான் தெரியுது.’
ட்விட்டர் கருத்துக்களால் நிரம்பி வழிய, மத்திய அரசின் உத்தரவின் பேரில் மனித உரிமை ஆணையம், விசாரணையில் இறங்கியது.
தேர்தலில் தோற்றத்தில் கடும் கோபத்தில் இருந்தார் நரசிம்மன். ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த தன் பண்ணை வீட்டில் அமர்ந்து வழக்கம் போல மதுவை பருகி கொண்டிருந்தார். எதிரில் நந்தா மற்றும் கௌஷிக்.
“என்ன மாமா! இப்படி டெபாசிட் கூட இல்லாம தோத்துட்டீங்க! நீங்க அவசரப்பட்டு இருக்ககூடாதோன்னு தோணுது.”
“பின்ன எம்.எல்.ஏ சீட்டு கொடுங்கன்னு அவனுங்களைக் கெஞ்ச சொல்றியா?” கர்ஜித்தார்.
“கெஞ்சுங்கன்னு சொல்லல. ஆனா கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்.” நந்தாவும் சற்றே சத்தமாகச் சொன்னான்.
“என்னை என்ன உன்ன மாதிரி காலை நக்கி பிழைப்பு நடத்திறவன்னு நினைச்சுட்டு இருக்கியா? சிங்கம் டா நான்!” குடி போதையில் அவர் வார்த்தையை விட,
“மாமா!!” பதிலுக்குக் கர்ஜித்தான் நந்தா!
“ஏய்! யாருக்கு யார் மாப்பிளை! என் தகுதி என்ன? உன் தகுதி என்ன? மாச சம்பளம் வாங்குற நாய்க்கு கோடீஸ்வரன் வீட்டுச் சம்பந்தம் கேக்குதா?” வார்த்தைகளின் எல்லையைக் கடந்து கொண்டு இருந்தார்.
கையில் இருந்த கிளாசை விசிறி அடித்துவிட்டு இருக்கையில் இருந்து கோபமாக எழுந்த நந்தா, “யோவ்! பணம் இருந்து என்ன பிரயோஜனம். பதவியும் இருக்கணும். அப்போ தான் மதிப்பு. எம்.எல்.ஏகூட இல்லாத நீ இப்போ ஒரு செல்லா காசு. நீ என் தகுதியை பத்தி பேசுறியா?!” கத்திவிட்டு வேகவேகமாக எழுந்து வாசலை நோக்கி நடந்தான்.
“சர்! சர்!” என்றபடி அவன் பின்னே ஓடினான் கௌஷிக். அவனுக்கு இப்பொழுது நரசிம்மன் தேவையில்லை. பதவியில் இருக்கும் நந்தா முக்கியமாகத் தெரிந்தான்.
தன் காரை நந்தா எடுக்க, அவனுடன் காரில் ஏறிக்கொண்ட கௌஷிக், அவனைச் சமாதனம் செய்ய முயன்றான்.
“இல்ல டா! என் கிட்டயே தகுதியை பத்தி பேசுறான் அவன். அவனுக்கு ஒரு பாடம் புகட்டாம விட மாட்டேன்.”
“என்ன செய்யப் போறீங்க சர்?”
“நாளைக்குத் தெரியும்!” சொன்னவன், அன்று இரவே தான் சொன்னதைச் செய்தான்.
அங்கே நரசிம்மனின் பண்ணை வீடு! நல்ல குடிபோதையில் இருந்த நரசிம்மன் நந்தாவை திட்டியபடி வீட்டிற்குள் சென்றவர், “டேய்! ராமசாமி சாப்பிட ஏதாவது கொண்டு வா டா!” என்று சொல்லிவிட்டு மேலே தன் அறைக்குச் சென்றார். சிறிது நேரத்தில் அவர் முன் வந்து நின்றான் அவன். சாப்பிடுவதற்குத் தேவையான உணவுகளை அடுக்கி வைத்தான்.
இருக்கிற பசியில், மடமடவெனச் சாப்பிட ஆரம்பித்தார் நரசிம்மன்.
“என்னடா குழம்பு கசக்குது?” சாப்பிட்டுக்கொண்டே கேட்டார்.
“இன்னிக்கு உங்களுக்குச் சரக்குக் கொஞ்சம் ஓவர் ஐயா! அதான் இப்படித் தெரியுது.” பதில் சொன்னான் அவன்.
“என்ன டா உன் குரல் வேற மாதிரி இருக்கு.” சாப்பாட்டை முழுங்கியபடி கேட்டார்.
“ஒண்ணுமில்லை ஐயா! ரெண்டு நாளா சளி, இருமல்! அதான்.” பவ்வியமாகப் பதில் சொன்னான்.
“என்னமோ போடா!” சொல்லிவிட்டுச் சாப்பாட்டில் தன் கவனத்தைச் செலுத்தினார். சிறிது நேரத்தில் சாப்பாட்டை முடித்தவருக்கு, தொண்டை என்னமோ செய்தது. தலை சுத்துவது போலத் தெரிந்தது.
“என்ன டா! என்னைக்கும் இல்லாம இன்னைக்குத் தலை சுத்துது. எவ்ளோ தண்ணி அடிச்சாலும் கன்னு மாதிரி இருப்பேன். இன்னைக்கு ரொம்ப ஓவரா போயிட்டேனா? இல்லை பழைய சரக்கா?” சொல்லியவர், சற்று நேரத்தில் தொப்பென்று மயங்கி விழுந்தார்.
அவனோ, வேகமாகச் சென்று அறை கதவை அடைத்தான்.
அடுத்த நாள், ஒன்றுவிடாமல் அனைத்து தொலைகாட்சியிலும் ஒலித்த பிளாஷ் நியுஸ் சத்தத்தில் தமிழ்நாடே முழித்துக் கொண்டது.
“முன்னாள் முதல்வர், நெடுஞ்செழியன் மறைவில் தற்போது திடிக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் நரசிம்மன் தான், நெடுஞ்செழியனை கொன்றதாக நிருபிக்கும் வகையில் வெளியாகி உள்ளது ஒரு வீடியோ. இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு!” செய்தியாளர் சொல்ல, நரசிம்மன் மட்டும் தெரியும் அந்த வீடியோ வெளியானது. அதில் அவர் முன்னாள் முதல்வரை கொல்ல சதித்திட்டம் போடுவது தெள்ளத் தெளிவாகப் பதிவாகி இருந்தது. ஆனால், நந்தாவின் குரல் மட்டுமே கேட்டது, அவனின் உருவம் தெரியவில்லை.
இது மாதுரியே எதிர்பார்க்காத செய்தி! அவர்கள் ஒரு திட்டம் போட்டு வைத்திருக்க, இப்பொழுது வெளியான இந்த வீடியோ அவர்களின் திட்டத்துக்குக் கூடுதல் பலம் சேர்த்தது. நினைத்தது போலவே நடக்கவும் செய்தது.
அடுத்தச் சில மணி நேரங்களில் மற்றொரு பிளாஷ் நியுஸ்!
“முன்னாள் முதல்வர், நரசிம்மன் மறைவு. வீடியோ வெளியனாதால், விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது.”
திரையில் ஓடியதை அதிர்ச்சியுடன் பார்த்தான் சுதர்ஷன். ‘தற்கொலை செய்ற அளவுக்கு அவ்ளோ மானஸ்தனா அவன்?’ நினைத்துக் கொண்டான்.
மிதுனும், சஞ்சனாவும் ‘இதை எதிர்பார்த்தோம்’ என்பது போலத் திரையை வெறிக்க, அங்கே குருவின் வீட்டில், மாதுரியும், குருவும் பார்வைகளைப் பரிமாறி கொண்டனர்.
அவர்களின் பார்வையே சொன்னது, ‘இன்னும் ஒரு வேலை பாக்கி இருக்கு. அதையும் முடிச்சிடனும்.’ என்று.
அடுத்த இரண்டு நாளில், ரத்தினசபாபதியிடம் இருந்து அவசரமாக் கிளம்பி வரும்படி ஃபோன் வரவும், குருவுடன் அவரின் வீட்டிற்குக் கிளம்பி சென்றாள் மாதுரி.
வந்தவளை தனக்குச் சொந்தமான பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்ற ரத்தினசபாபதி, அங்கு ஒரு அறையைத் திறந்து காட்ட, உள்ளே இருந்த பொருட்களைப் பார்த்து அதிர்ந்து போனாள்.
தங்க நகைகளும், வைர நகைகளும் கட்டிலில் கொட்டி கிடந்தது.
அவைகளை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவளிடம், “இதெல்லாம் நாங்க நரசிம்மனோட பண்ணை வீட்டில இருந்து எடுத்தது மா. தற்செயலா இந்த நகையோட பின்பக்கம் பார்த்த பின்னாடி தான் தெரிஞ்சுது, இதெல்லாம் உங்க கடையோட நகைன்னு.” பரபரப்பாக அவர் சொல்ல,
வேகமாகக் கட்டிலுக்கு அருகில் சென்றவள், ஒரு நகையை எடுத்துப் பார்த்தாள். மேத்தா ஜுவலர்ஸ் என்பதைக் குறிக்கும் வகையில் ‘MJ’ என்ற எழுத்துப் பொறிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஒரே சேர அவளைத் தாக்க, மடமடவென ஒவ்வொரு நகையாக எடுத்துப் பார்த்தாள். எல்லாவற்றிலும் அவர்களின் கடை சீல் இருந்தது. ஆம்! ரத்தினசபாபதி சொன்னது போல, அது அவர்கள் கடை நகை தான். ஆனால் நரசிம்மனின் வீட்டில் எப்படி? கேள்வியாக ரத்தினசபாபதியை பார்த்தாள் மாதுரி.
“அவனோட ரகசிய ஆளுங்களைப் பிடிச்சு விசாரிச்சதுல, கொள்ளை அடிக்க ஆள் ஏற்பாடு செய்துட்டு, அப்புறம் அவங்களுக்கே தெரியாம விஷம் வச்சு கொன்னு, புதைசிட்டான் நரசிம்மன். அவங்ககிட்ட இருந்து எடுத்த நகைங்களை அவனோட பண்ணை வீட்டில பூமிக்கு அடியில புதைச்சு வச்சுருக்கான் மா.”
நகைகளைப் பார்க்கப் பார்க்க கண்கள் பூரித்துவிட்டது மாதுரிக்கு. ‘தந்தையே ஆத்மாவாக வந்து இவற்றையெல்லாம் மீட்டுக் கொடுத்துள்ளதாகத் தோன்றியது.’ ரத்தினசபாபதிக்கு கண்ணீருடன் கைகூப்பித் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டாள். அவரும் மகளை அணைத்துக் கொண்டார்.
“அடுத்தது என்ன மா?” கேள்வியாக அவளைப் பார்த்தார்.
குரு அவளுக்காகப் பதில் சொன்னான். “அடுத்து எங்க டார்கெட் நந்தா, அப்புறம் கௌஷிக் ஐயா!”
“பேஷா நடத்து மா. இந்த அப்பா என்னைக்கும் உனக்குத் துணையா இருப்பான். ஆளுங்க தேவைனா சொல்லு மா. கைவசம் பயலுங்க நிறையப் பேர் இருக்காங்க.”
‘வேண்டாம்’ என்பது போலச் சைகை செய்தாள் மாதுரி.
“சரி மா! இந்த நகைங்க இங்க பத்திரமா இருக்கும். எப்போ வேணுமா வந்து எடுத்துட்டு போ. கூடிய சீக்கிரம் பழைய பொலிவோட மேத்தா ஜுவலர்ஸ் கடை அமோகமாக நடக்கணும்.” வாழ்த்தினார்.
அவருக்குத் தன் நன்றிகளைத் தெரிவித்துவிட்டு, வெளியேறினர் மாதுரியும், குருவும்.
“மேம்! மத்த எல்லாரோட முகத்தையும் மீடியா முன்னாடி காட்டியாச்சு. ஆனா நந்தாவை மட்டும் ஏன் ஒன்னும் செய்யாம இருக்கோம்?” குரு கேட்க,
“மத்தவங்க எல்லாம் நம்ம கைக்கு எட்டுற தூரத்துல இருக்காங்க குரு. அதனால அப்படிச் செஞ்சோம். ஆனா நந்தா அப்படி இல்லை. அவன் செஞ்ச தப்பை வெளியே சொன்னா, அப்புறம் விசாரணனை, கமிஷன், கேஸ், ஜெயிலுனு நேரடியா மத்திய அரசு கண்ட்ரோலுக்குக் கீழ போய்டுவான். அப்புறம் நாம நினைச்சாலும் அவனை நெருங்க முடியாது. அப்புறம் நாம நினைச்சது எப்படி நடக்க? அவன் நம்ம கையில சிக்க, இது தான் ஒரே வழி. அதுவும் அவனுக்குச் சந்தேகம் வராத மாதிரி.” உறுதி தெரிந்தது அவளின் முகத்தில்.
“அந்த நந்தா, கௌஷிக் ரெண்டு பேரையும் வாட் செய். சரியான சந்தர்ப்பம் கிடைச்சதும் தூக்கிடுவோம்.” செயலியில் பதில் சொன்னாள்.
“கண்டிப்பா மேம்!”
அவர்கள் திட்டமிட்டது போலவே, நந்தா, கௌஷிக் இருவரும் சென்ற காரை விபத்துக்குள்ளாக்கினர். அதில் இருவரும் உடல் நசுங்கி உயிர் இழந்ததாகச் செய்தி வெளியானது.
“அரசு விழாவில் கலந்துவிட்டுத் திரும்பிய சென்னை கலக்டர், லாரி மோதி உயிரிழப்பு. உடன் பயணித்த கௌஷிக் என்ற நண்பரும் மரணம்.”
அடுத்த நாளே, சென்னை குடும்ப நல கோர்டில் மகளைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி வழக்குப் பதிவு செய்தாள் மாதுரி. டிவோர்ஸ் வழக்கின்பொழுது சமர்பிக்கப்பட்ட சர்ட்டிஃபிகேட் போலி என்றும், தான் நல்ல மனநிலையுடன் இருப்பதாகவும் சர்டிஃபிகேட் தாக்கல் செய்தாள்.
மாதுரியை கோர்ட் சார்பாக மீண்டும் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் அவள் பாஸ் ஆகிடவே, “தந்தை இல்லாத பெண் குழந்தை தாயின் வளர்ப்பில் இருப்பதே சரி.” என்று தீர்பளித்த கோர்ட், “பிற்காலத்தில் மாதுரிக்கு மனநிலை சரி இல்லை என்று தெரியவந்தால், குழந்தையைத் தாத்தா பாட்டியிடமோ, அல்லது காப்பகத்திலோ ஒப்படைத்துவிடுவோம்.” என்று எச்சரித்து அனுப்பினர்.
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்துப் பார்க்கும் மகளை, கண்ணீர் வழியை, தூக்கி கொஞ்சி ஆசை தீர முத்தமிட்டாள் மாதுரி. தற்பொழுது அவளுக்கு இருக்கும் குடும்பம் அவள் மகள் தனிக்க்ஷா மட்டுமே.
அதன்பின் நகை பற்றியை செய்தியை குடும்பத்தாரிடம் சொன்னாள் மாதுரி. நகைகள் திருப்பிக் கிடைத்தது என்ற செய்தியை கேட்டு ஆனந்த கண்ணீர் வடித்தனர் சித்தார்த்தும், ராஜேஸ்வரியும். வேறு ஒரு வழக்கை விசாரித்த பொழுது, அவர்களின் நகைகள் மீட்கப்பட்டதாகத் தகவல் தெரிவித்தாள் மாதுரி. ராஜேஸ்வரி கணவரின் படத்தைக் கட்டிக்கொண்டு அழ, சித்தார் தாரை தாரையா கண்ணீர் வடித்தான்.
கிடைத்த நகைகளில் சிறு பகுதியை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு, சித்தார்த் பேரில், ஒரு பங்களாவை வாங்கிப் போட்டாள் மாதுரி. குடும்பத்துடன் அதில் குடியேறினர் நால்வரும்.
இரண்டு மாதம் கழித்து, கோலாகலமாகத் துவங்கப்பட்டது மேத்தா ஜுவலர்ஸ் நகை கடை! கூடவே மேத்தா பேஷன்ஸ்!
இரண்டு கடைகளிலும் இருந்த சுவற்றில், ஆளுயர போட்டோவில் கம்பீரமாகக் காட்சி அளித்தார் அம்பரீஷ் மேத்தா!
வழக்கம் போல மாதுரியும், சித்தார்த்தும் இரண்டு கடைகளை நிர்வகித்தனர். லாயர் வேலையைத் தொடர முடியவில்லையே என்று மாதுரியின் மனதுக்குள் வருத்தம் நிறைந்து இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தாள்.