நிஜம் – 16
தன் முன்னே வாசுதேவகிருஷ்ணன் அமர்ந்திருந்த தோரணையை பார்த்ததுமே நெஞ்சை பிடித்தபடி பூங்கோதை அதிர,
“ஆப்பம் வேணுமா அத்தை? கேட்டா செஞ்சிட்டு போறேன். ஏன் மகிழ்ட்ட சொல்லிட்டு இருக்கீங்க? நான் உங்க மருமகன் தானே?…” என சொல்ல தலையை தலையை ஆட்டினார் அவர்.
“சொல்லுங்க என்ன வேணும்?…” என்றான் மீண்டும்.
“அடேய் வாடா இங்க…” என மருதவேல் அழைக்க,
“ப்ச் இருடா அண்ணா…” என்றவன் மீண்டும் பூங்கோதையை பார்க்க,
“இல்ல எதுனாலும் சரித்தான்…” என்று சொல்லவும் தான் அங்கிருந்து எழுந்தே சென்றான்.
அவன் நகர்ந்ததும் தான் பூங்கோதைக்கு மூச்சே வந்தது. விமலாவும் அபூர்வாவும் ஒன்றும் சொல்லமுடியாமல் பார்க்க,
“எனக்கு படபடன்னு வருது. நான் உள்ள போறேன். என்னமோ பண்ணுங்க…” என எழுந்து சென்றுவிட்டார் பூங்கோதை.
“அம்மா…” என அவரை நிறுத்த முயன்ற அபூர்வா கணவனை முறைக்க அவன் நிமிர்ந்து பார்த்து கண்ணடித்ததும்,
“பார்க்க கூட விடறதில்லை…” என்ற முணுமுணுப்போடு திரும்பிக்கொள்ள,
“அப்பறம் ஏன் பார்க்கற? பார்க்கனும் போல இருக்கோ?…” என்று மகிழ் கிண்டல் பேச,
“அதானே? பார்க்காத மாதிரி தான்…” என விமலாவும் சேர்ந்து கொள்ள,
“அங்க என்ன வெட்டி அரட்டை? இங்க வந்து எல்லாம் கட் பண்ணி குடுங்க…” என்று வாசுதேவகிருஷ்ணன் அவர்களையும் தங்களின் சமையலில் இழுத்து கொண்டான்.
மதிய உணவிற்கு கீ ரைஸ், ஸ்டஃப்ட் ஆபோஜின், ஹனி சிக்கன், ஆலு பரோட்டா, பனீர் பட்டர் மசாலா, தயிர்சாதம், உருளைக்கிழங்கு சிப்ஸ் என ரெடி செய்துவிட வாசனை மூக்கை துளைத்தது.
செய்தவற்றை எல்லாம் போட்டோ எடுத்து அன்புக்கரசிக்கு அனுப்பிவிட்டு அவரை வீடியோ காலில் அழைத்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“இப்ப எதுக்குடா எனக்கு போன் பண்ணின?…” என்றார் எடுத்ததும்.
“நாங்க சமைச்சிருகோம். அதை காமிக்கத்தான் கூப்பிட்டா என்னவோ சாப்பிட கூப்பிட்ட மாதிரி பிகு பன்றீங்க…” என இளைய மகன் சொல்ல அவரின் பார்வை பெரியவனை ஆராய்ந்தது.
“அம்மா, நானும் தம்பியோட சமையல் செஞ்சேன்…” என்றான் மருதவேல் என்னவோ பெரிதாய் சாதித்தது போல. பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அன்புக்கரசிக்கு.
“யாரு போன்ல?…” என சாப்பிட கை கழுவ சென்ற முத்துவேல் வந்து அமர்ந்து கேட்க மகன்களை பார்த்து சைகை செய்த அன்புக்கரசி,
“எல்லாம் உங்க பசங்க தான். இன்னைக்கு அவனுங்க சமையலாம். அதை காமிக்க எனக்கு போன் போட்டிருக்கானுங்க…” என்றவர்,
“இது பார்த்து நான் என்னடா செய்ய போறேன்? எனக்கென்ன மகளா? மருமவனா? என்னைய உக்கார வச்சு ஆக்கி போட. எம்புருஷனுக்கு நான் தான் சமைக்கனும். நான் தான் பார்த்துக்கனும். செத்த உக்காருன்னு தட்டுல வச்சு நீட்ட எனக்கு இங்க நாதியில்ல…” என்று முத்துவேலுக்கு பரிமாறிக்கொண்டே அவரை ஓரக்கண்ணால் பார்த்தவர்,
“என்னத்த சொல்லு, வருசமெல்லாம் நானே சமைச்சு நானே சாப்பிட்டு. ரெண்டு வாய்க்கு மேல தொண்டையில இறங்க மாட்டிக்கு. ஹ்ம்ம். சரி சரி எல்லாரும் நல்லா சாப்பிடுங்க…” என்று வைத்துவிட வாசுதேவகிருஷ்ணன் சிரிப்பை அடக்கியபடி மொபைலை வைத்தான்.
“இப்ப என்னத்துக்கு இம்புட்டு புலம்பற?…” என முத்துவேல் கத்த,
“என்னமோ வயசானவ ஆத்தமாட்டாம பேசிட்டேன். இனி பேசல சாமி. நீங்க கோவிச்சுக்காதீங்க…” என்று பயந்ததை போல சொல்ல,
“சரி, சரி வச்சு சாப்பிட வேண்டியது தான? என்னத்துக்கு என் மூஞ்சியை பாக்குற?…” என அதற்கும் முறைக்க,
“அதான் சொன்னேனே? சாப்பிட முடியலைன்னு. அப்பறமா சாப்பிட்டுக்குவேன்…” என்று சொல்ல அமைதியாய் சாப்பிட்டு முடித்தார் முத்துவேல்.
“இதுக்குத்தான் அவளை இருக்க சொல்லுன்னு சொன்னேன். யார் கேட்கறா? பெரியவனும் அவன் பொண்டாட்டியும் வரட்டும். இப்பவாச்சும் உன் புள்ளைங்க லட்சணத்தை தெரிஞ்சுக்கோ…” என சொல்லிக்கொண்டு மீண்டும் சட்டையை மாட்டியவர்,
“கடைக்கு கிளம்புறேன். ராத்திரிக்கு ஒன்னும் ஆக்க வேண்டாம்….” என சொல்ல,
“ஆக்காம எத சாப்பிடறதாம்? எனக்கு ஒண்ணுமில்லை, பட்டினி கிடந்த உங்க உடம்புக்கு ஆகாதுன்னு தான் பார்க்கறேன்…” என சொல்லவும் முத்துவேல் முகம் லேசாய் கனிந்தது.
“ஆக்க வேண்டாம்னா காரணமா தான சொல்லுறேன். எப்பவும் உன் இளையவன் ஒரு கடையில பிரியாணி வாங்கிட்டு வருவான்ல உனக்கு…” என்றதுமே “ஐயோ இவருக்கு எப்படி தெரியும்” என விழிக்க,
“அங்க இருந்து வாங்கிட்டு வரேன். அவனுங்க வகையா வச்சு சாப்பிட்டா என்ன? உனக்கு நான் இல்லையா?…” என்று வசனம் பேச செல்ல கன்னத்தில் கை வைத்து கவலையாகிவிட்டார் அன்புக்கரசி.
மீண்டும் மகனுக்கு அழைத்தவர் அவன் லைனில் வரவும் விஷயத்தை சொல்ல விழுந்து விழுந்து சிரித்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“சிரிக்காம கேளு வாசு. இந்த மனுஷன் பிரியாணியை மோப்பம் பிடிச்சிருக்காரு பாரேன். இப்படி என்னென்னத்தை கண்டுபிடிச்சாரோ? அதான் கவலையா இருக்கு. இதுல உனக்கு நான் இருக்கேன்னு வேற சொல்லிட்டு போறாருடா…” என சொல்ல,
“நான் அவருக்கு காட்டிட்டு தான் வாங்கிட்டு வருவேன். இல்லைன்னா அவருக்கு தெரிய வாய்ப்பே இல்லை…” என சொல்ல,
“அப்ப முதல்ல அவரை வெறுப்பேத்தி தான் பிரியாணி என்கிட்டே வருதா?…”
“சரி விடுங்க. நீங்க முதல்லையே அவரோட சேர்ந்து சாப்பிட வேண்டியது தானே?…” என கேட்க,
“இன்னைக்கு வெந்தையக்குழம்பும், கோஸ் பொரியலும் போதும்னு சொல்லிட்டாருடா. எனக்கு தான் கோஸ் பொரியல் இறங்காதே. அவர் கிளம்பவும் ரெண்டு ஆம்லேட் போட்டு சாப்பிடலாம்னு இருந்தேன்…” என பாவமாய் சொல்ல,
“அந்த ஆம்லேட் அவருக்கு போட்டு குடுத்தா ஆகாதா?…”
“ரெண்டு பேருக்கு எத்தனை செய்வன்னு கத்துவாரே. இதுக்கு இந்த பொரியல்ன்னு சொன்ன பின்னால முட்டையுமா போட? அதான் கிளம்பவும் போட்டு சாப்பிடலாம்னு இருந்தேன்…”
“சரி சரி, அதான் பிரியாணியே வர போகுதே….” என கிண்டல் பேச,
“போங்கடா போங்கடா…” என சொல்லி வைத்துவிட்டார் அன்புக்கரசி.
சிரிப்புடன் போனை வைத்துவிட்டு சாப்பாடுகளை எடுத்து வைத்தான். சாப்பிட அழைக்க சென்ற அபூர்வாவிடம் பூங்கோதை உள்ளிருந்தே அதன் பெயர்களை கேட்டு தெரிந்து கொண்டார்.
“என்ன வாடைடி லட்சுமி. மூச்சு இழுக்க முடியல. சீனிப்பாகு கருகின மாதிரி இருக்கே. என்னமோ புது வாடையா இருக்கே. என் சமையக்கட்டு அம்புட்டுதானா? ஆனா சாப்பாடு சமைச்ச மாதிரி ஒரு வாசனையும் வரலையே?…” என மூக்கை நிமிண்டியபடி வர இவர்களுக்காக கீழே பாய் விரிக்கப்பட்டு இலை போடப்பட்டிருந்தது.
“யாரும் உட்காருமுன்ன வெறும் இலையை விரிக்க கூடாதுன்னு உனக்கு தெரியாதா லட்சுமி?…” என்று கேட்க,
“என்னங்க அத்தை?…” என்று வாசுதேவகிருஷ்ணன் வரவும்,
“இப்பத்தான் இவரு இல்லன்னு நினைச்சேன்” என உள்ளுக்குள் புலம்பியவராக,
“நீங்க எல்லாரும் சாப்பிடுங்க. எனக்கு நேரமாகும் மாப்பிள்ளை…” என தப்பிக்க பார்க்க,
“இன்னைக்கு நீங்க எல்லாரும் சாப்பிடறீங்க. நாங்க பரிமாறறோம்…” என்றவன்,
“அண்ணா நீ அண்ணிக்கு வை. மச்சான் நீ தங்கச்சிக்கு வை. என் பொண்டாட்டிக்கும் அத்தைக்கும் நான் வைக்கறேன்…” என்றதும் அவர்கள் இருவரும் கழன்று கொண்டனர்.
மருதுவுக்கு இவை எல்லாம் மனதிற்கு சந்தோஷமாகவும் புதுமையாகவும் இருந்தது. இனி விமலாவை வருடத்திற்கு ஒரு முறையாவது எங்காவது அழைத்து செல்ல வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்டான் அவளின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்து.
பார்த்து பார்த்து பரிமாறினான் அவளுக்கு. விமலாவிற்கோ ஒரே வெட்கம். அதிலும் ஒருவரும் மற்றவர்கள் அறியாமல் புதுமணத்தம்பதிகள் போல அவ்வப்போது ரகசிய பார்வை பரிமாற்றத்தில் தனி உலகத்தை உருவாக்கிக்கொண்டு இருந்தனர்.
அதை விட இந்த வீடு அத்தனை பிடித்தது. ஏதோ ஒரு இறுக்கம் தளர்ந்து நிம்மதியான சூழலால் இருவருக்குமிடையே ஒரு நெருக்கமும் முளைத்திருந்தது.
தினேஷ் மகிழிற்கு வைக்க அபூர்வாவிற்கு வாசுதேவகிருஷ்ணன் பரிமாறிவிட்டு பூங்கோதையிடம் வர,
“அம்மாவுக்கு நான் வைக்கறேன். எனக்கு நீங்க வச்சுட்டீங்கல்ல. போதும்….” என அபூர்வா சொல்ல,
“அதெப்படி?….” என்றவனை பார்த்தவள்,
“அது அப்படித்தான். சாப்பிடனுமா வேண்டாமா?…” என கேட்க,
“இந்தா கழுத, நான் இருக்கும் போதே எல்லாரையும் வச்சுட்டு அவர எதிர்த்தா பேசுற. நாக்குல நாலு போடறேன் பாரு….” என முணுமுணுப்பாக மகளை கண்டிக்க,
“அப்ப அவரே பரிமாறுவாரு. சாப்பிடுங்க…” என்றுவிட்டாள் அபூர்வா.
“அத்தை இது கீ ரைஸ்….”என்று ஒவ்வொன்றாய் சொல்லி வைத்துவிட்டு நகர்ந்து சென்றுவிட பூங்கோதை மகளிடம் ஹனி சிக்கனில் இருந்து சந்தேகம் கேட்க ஆரம்பித்துவிட்டார்.
“என்னடி இது அணிலு சிக்கனு. ஒரே இனிப்பா இருக்கு? உப்பு உரப்பே இல்லாம? நல்லா மிளகாயை கிள்ளி போட்டு வறுத்துருக்கலாம்ல…” என ஹனி சிக்கனை எடுத்து பார்த்துக்கொண்டே கேட்க ஒரு ஆர்வத்தில் சத்தமாய் கேட்டுவிட்டார்.
“இந்தாங்க அத்தை உப்பு, உரைப்புக்கு ஊறுகாய்…” என இரண்டையும் கொண்டு வந்து வைக்க,
“ஐயோ இல்லை நான் என்னன்னு தான் கேட்டேன்…” என்றவர் அதனை அப்படியே வாயில் போட முகம் அஷ்டகோணலாய் மாறியது. வாசுதேவகிருஷ்ணனுக்கே பாவமாகிவிட,
“பிடிக்கலைன்னா வச்சிருங்க. வேற சாப்பிடுங்க…” என்றான்.
“சரி நீங்க போய் உட்காருங்க. நாங்க போட்டுக்கறோம்…” என அபூர்வா சொல்லவும் ஆண்கள் மூவருமே நகர்ந்து சோபாவில் சென்று அமர்ந்தனர்.
மருதவேல் விலகி சென்று அமர்ந்தாலும் மனைவி என்ன சாப்பிடுகிறாள், என்ன குறைகிறது என்று விமலாவை கவனித்துக்கொண்டே தான் இருந்தான்.
“இதென்ன கத்தரிக்கா மேல வெள்ளையா நாராநாரா வருது?…” என கத்தரிக்காய் மேலே இளகி இருந்த சீஸை பார்த்து அடுத்த சந்தேகம் தோன்ற,
“இதுதான் சட்டுன்னு ஆப்பம் சட்னி…” என மகிழ் எடுத்துக்கொடுக்க,
“வாயை மூடுடி…” என்றவர்,
“லட்சுமி, இது என்னமோ மாதிரி இருக்கேடி. இத எப்படி சாப்புடற நீ?…”
“ம்மா, புதுசா சாப்பிட்டு பாருங்க. எப்ப பழக நீங்க? என்னைய பார்க்க வரப்ப இதை சமைச்சா சாப்பிடனும்ல…”
“அதெதுக்கு? நான் வாரப்பவே கட்டுச்சோறு வேணா கட்டிக்கிட்டு வருவேனே தவிர இந்த வாழநாரு காயெல்லாம் எனக்கு இறங்காது…” என்றவர் அடுத்ததாக,
“வாழை நாரா?…” மகிழ் பார்க்க,
“அதான் எடுக்க எடுக்க நூலா வருதே? அதான் நாரு…” என விளக்கம் வேறு அதற்கு மெதுவாய் சொல்லி மருமகனுக்கு கேட்டுவிடாமல் பார்த்துக்கொண்டார்.
“ஆத்தீ தயிர்ச்சோறுல எதுக்குடி இம்புட்டு பழம் உதிர்த்து போட்டிருக்கு? மாதுளையும், கொடிமுந்திரியும்…” என பாவமாக பார்க்க,
“அம்மா இதுக்கு தான் உருளைக்கிழங்குல சிப்ஸ் போட்டிருக்காங்க. சாப்பிடுங்க…” என சொல்ல தயிர்சாதத்தில் இருந்த பழங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாய் எடுத்தவர் மொத்தமாய் பழங்களை மட்டும் முதலில் சாப்பிட்டு தண்ணீரை குடித்துவிட்டு அதன் பின்னர் தயிர்சாதத்தை சாப்பிட ஆரம்பித்தார்.
“உள்ளுக்குள்ள என்னவோ நறிச்சு நறிச்சுன்னு கடிபடுது இனிப்பா. அது என்னன்னே தெரியலையே கண்ணுக்கு…” என தேடி தேடி பார்த்தார்.
“அம்மா அது ஆப்பிள், தோலை சீவி ரொம்ப குட்டியா கட் பண்ணி நான் தான் குடுத்தேன்….” என சொல்ல,
“முதல்லையே இத ரூம்ல வச்சு சொல்லியிருந்தா நான் விரதம்னு சொல்லிருப்பேன்ல…” என திணறிக்கொண்டே சாப்பிட பாவமாய் இருந்தது அபூர்வாவிற்கு.
தங்கள் வீட்டில் இவை எல்லாம் பழக்கம் இல்லை என்பதால் பூங்கோதை சாப்பிட முடியாமல் தவிக்க,
“அம்மா ஆலு பரோட்டா இருக்கு. சாப்பிடேன். கொஞ்சம் உரைப்பா இருக்கும்…”
“ராவுக்கு சாப்பிடற ரொட்டியை இப்ப சாப்பிடனுமா? போடி போ…” என்று இலையில் இருந்ததை மட்டும் சாப்பிட்டு முடித்து எங்கே மீண்டும் வைத்துவிடுவானோ என பார்க்க,
“ஒரு நிமிஷம் அத்தை…” என்று உள்ளே சென்றவன் மீண்டும் வரும் பொழுது அவனின் கையில் பெரிய தட்டும் அதனுள் சிறு கிண்ணங்களும் இருந்தது. அதை பார்த்ததுமே இன்னுமா என்று பயந்து போனவர்,
“இல்ல, சாப்பிட்டேன் மாப்பிள்ளை. போதும். இது போதும். நிறைஞ்சிருச்சு. எல்லாமே நல்லா தான் இருந்துச்சு…” என சொல்ல,
“இருக்கட்டும். இதையும் பாருங்க…” என கீழே வைக்க அதில் வெள்ளை சாதமும், ரசமும், துவையலும் இருந்தது.
“எதுக்கும் இருக்கட்டும்னு இதையும் கடைசியா செஞ்சேன். ட்ரை பண்ணி பாருங்க. நாங்க குளிச்சுட்டு வரோம்…” என்றவன் மருதவேலை கூட்டிக்கொண்டு மாடியேற, தினேஷ் தன் அறைக்குள் சென்றுவிட அவர்கள் சென்றதும் ரசத்தை கையில் ஊற்றி சுவை பார்த்தவரின் கண்கள் விரிந்தது.
“நல்லாருக்கு லட்சுமி…” என சொல்லி இலையை தள்ளி வைத்துவிட்டு தட்டை போட்டு ரசம் சாதத்தை ஒரு பிடி பிடித்தார் பூங்கோதை.
“இந்தா இவளே, அதை சாப்பிட்ட வரைக்கும் போதும். ஒழுங்கா இதை சாப்பிடு. அப்பத்தான் செரிக்கும்…” என மருமகளுக்கும் சொல்ல மறக்கவில்லை.
“ஆனாலும் உன் மாமியாரை இம்புட்டு கொடுமைப்படுத்த கூடாது நீ…” என மருதவேல் சொல்ல,
“ஏன்டா என் மாமியாருக்கு என் கையாள சாமிச்சு போடனும்னு நான் நினைக்க கூடாதா? இப்ப கூட அவங்களுக்காக தான் ரசம் துவையல் செஞ்சேன்…”
“அதை முன்னாடியே நீ வச்ச்சிருக்கனும். சாப்பிட முடியாம சாப்பிட்டு கடைசியில குடுக்கற. இரக்கமே இல்லைடா உனக்கு…” என்றவனின் தோளை தட்டியவன்,
“நீ ஹேப்பியாடா அண்ணா?…” என்றான் அவன்.
“எனக்கென்ன நான் எப்பவும் ஹேப்பி தானே?…”
“மொத்த சிக்கனையும் உன் வாய்க்குள்ள தான் திணிப்பேன். பொய்யா சொல்ற?…” என மிரட்ட,
“சரி சரி, நல்லா சந்தோஷமா தான் இருக்கேன். இதுவரை இருந்ததை விட. போதுமா?…”
“அப்போ அண்ணியோட எங்கையாச்சும் ட்ரிப் போய்ட்டு வாயேன்…”
“இல்லை அது சரிவராது வாசு. இதுக்கே அப்பா கோபமா இருக்காங்க. இனி அவரை எப்படி சமாளிக்கன்னு தெரியலை. போவேன் போகாம எங்க போக போறேன். நானே ஒரு முடிவுல தான் இருக்கேன். இனி வருஷத்துக்கு ஒருக்கானாச்சும் விமலாவோட எங்கையாவது வெளியூர் போகனும்னு…”
“சந்தோஷமா இருக்க வெளியூர் போனா மட்டும் போதுமா அண்ணா?…” என்றான் வாசு இதுவரை இருந்த விளையாட்டை எல்லாம் கை விட்டவனாய் தன் அண்ணனை பார்த்து.
“வேற என்ன பண்ண முடியும்? நம்ம வீட்டுல…”
“ஏன் யாருமே சந்தோஷமா இல்லையா? நம்ம வீடுன்னா அந்த வீட்டு வைப்ரேஷனோட தான் வாழனுமா? சந்தோஷமா இருக்க நாலு சுவரு கூட தேவையில்லை. ஒரு சின்ன சிரிப்பு போதும். அண்ணிக்கு அதை குடு நீ. உனக்கு நான் தம்பி என்னை சொல்ல வைக்காத…”