“வாசு விடு இதை…”
“என்ன விடு? உன்னை அப்பா கூட சண்டை போட்டு வெளில போய் தனியா இருன்னு சொல்லலை. எப்பவும் போலவே இருக்காத. இது உன்னோட வாழ்க்கை மட்டுமில்லை அண்ணிக்கும் இந்த ஒரு வாழ்க்கை தான். அதை அனுபவிச்சு வாழனும். உன்னை நம்பி வந்தவங்களை சந்தோஷமா வச்சுக்க பாரு. இந்த ரெண்டு நாளும் அண்ணி முகத்துலயும் சரி உன் முகத்துலயும் சரி அவ்வளவு அமைதி…”
“ஏன்டா சந்தோஷம்னு சொல்லுவன்னு பார்த்தா அமைதின்ற?…” என மருது சிரிக்க,
“ஆமா அமைதி தான். இதுவே நம்ம வீடா இருந்தா அப்பா இல்லாத நேரம் தான் அண்ணி முகத்துல சிரிப்பு இருக்கும். அவர் இருக்கற நேரமும் கூட சிரிப்பாங்க தான். அது சும்மா ஒப்புக்கு தான். நீ மட்டும் என்னவாம்?. ஆனா இங்க உங்க ரெண்டு பேர் முகத்துலையும் எந்த கட்டாயமும் இல்லாத ஒரு நிம்மதி. அந்த நிம்மதி மனசுக்கு அமைதியை குடுக்கும். அமைதி தான் சந்தோஷத்தை காட்டும்…”
“பார்ரா பேச்செலாம் பெரிய மனுஷத்தனமா இருக்கே?…”
“அண்ணன் நீ என்னை விட இன்னும் சின்ன பிள்ளையா இருக்க. அதான்…” என வாசுவும் பேச,
“முயற்சி பன்றேன் வாசு. அப்படியே வளர்ந்துட்டேன். என்னால முடியலை. ஆனா ட்ரை பன்றேன்…”
“ஏன் முடியாது? அண்ணியும் அவங்க அப்பா வீட்டுல நல்லா கலகலப்பா தான வளர்ந்திருப்பாங்க. ஆசைப்பட்டதை வாங்கி, நினைச்சதை செஞ்சுன்னு. இப்ப உன்னை கட்டிட்டு உன்னை மாதிரியே வாழ கத்துக்கலையா? அப்படித்தான். உனக்கே பிடிச்சுருக்கு தானேடா அண்ணா…”
“ஹ்ம்ம், பிடிச்சுருக்குதான். ஆனா…”
“இன்னும் குளிக்கலையா நீங்க? உங்களை சாப்பிட கூப்பிடலாம்னு வந்தேன்…” என விமலா வர,
“இதோ அண்ணி, சாப்ட்டீங்களா நீங்க?…” என கேட்க,
“ஹ்ம்ம், எல்லாமே ரொம்ப நல்லா இருந்தது. ரசம் இன்னும் சூப்பர்…” என்று சொல்ல,
“ஓகே ஓகே…” என சொல்லிவிட்டு தன் அண்ணனையும் ஒரு பார்வை பார்த்தவன் குளிக்க சென்றுவிட்டான்.
“என்ன முகம் ரொம்ப யோசனையா இருக்கே?…” என விமலா கேட்க,
“ஹ்ம்ம், ஆமா…” என்ற மருதவேல்,
“உன்னை எப்படி சந்தோஷமா வச்சுக்கன்னு யோசிக்கிறேன்…”
“அடடா, வச்சுக்குவாராமே? போங்க போங்க. சும்மா கனவு காணாம? தீபாவளி பொங்கல் எல்லாம் வருஷத்துக்கு ஒருக்கா தான் வரும். நித்தமும் வரனும்னு நாம நினைச்சா ஆச்சா?…” என்று சாதாரணமாக சொல்லி,
“நான் போய் கீழே எல்லாத்தையும் எடுத்து வைக்கறேன். சாப்பிட வரலையேன்னு கூப்பிடத்தான் வந்தேன். சீக்கிரம் வாங்க…” என கீழே சென்றுவிட மருதவேலுக்கு பூமி நழுவும் உணர்வு.
“இவள் என்ன சொல்கிறாள்? என்னுடனான சந்தோஷம் நிரந்தரமில்லை என்றா? இல்லை இங்கிருப்பதை போல அங்கிருக்கமாட்டேன் என்றா?” என தோன்ற அந்த எண்ணமே கசந்தது.
“என்ன ஒரு வாழ்க்கையை நானும் வாழ்ந்து என்னை நம்பி வந்தவளுக்கும் கொடுத்திருக்கிறேன்?” என்று நினைத்தவனின் மனது உள்ளுக்குள் ஓலமிட்டது.
தன் தம்பியின் அறைக்குள் அவன் விசிலடிக்கும் சத்தம் கேட்க சட்டென தன்னுணர்வு வந்தவன் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அறை கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றுவிட்டான்.
அதன் பின்னர் மூவரும் சாப்பிட்டு முடிக்க மருதவேல் விமலாவுடன் வெளியே பந்தலுக்கடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். உடன் தினேஷும் மகிழும். பூங்கோதையை காணவே இல்லை.
அவர்களுக்கு குடிக்க தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற அபூர்வாவை பின் தொடர்ந்து உள்ளே வந்த வாசுதேவகிருஷ்ணன்,
“அம்மா வீட்டுக்கு வரவும் எவ்வளவு சந்தோஷம் உனக்கு. எங்க அத்தையை காணோம்? நாங்க சாப்பிடறப்பவே பார்க்கலை…” என கேட்க,
“உங்களுக்கு சாயங்காலத்துக்கு கேசரியும் வடையும் செய்ய போறாங்க அம்மா…” என சொல்லி அங்கிருந்த பெரிய சொம்பில் தண்ணீரை எடுத்தவள் குடிக்க தம்ளர்களை அடுக்கிக்கொண்டாள்.
“வாவ், நானே கேட்கனும்னு இருந்தேன்…” என்றவன்,
“ஆனா இப்பவே அதுக்கு எங்க போனாங்க? கேசரி வாங்கவா?…” என்று கிண்டல் செய்ய,
“ஏன் சொல்லமாட்டீங்க? அம்மா ரவை வாங்க போயிருக்காங்க. ரவை வாங்கினா இந்த தெருவுக்கே தெரிஞ்சிரும். அதனால நிறையவே செய்வாங்க. எல்லாருக்கும் குடுக்க. வடை, பஜ்ஜி ரெண்டும் செய்யறாங்க. தேவையான பொருள் எல்லாம் வாங்கிட்டு பேசிட்டு வருவாங்க…” என சொல்ல,
“ஆஹாங் கண்மணிக்கு என்ன செய்ய தெரியும்?…” என்றான் சிரிப்புடன்.
“எல்லாமே கத்து குடுத்திருக்காங்க. நல்லா செய்ய தெரியும்…” என்றாள் வெகு தீவிரமாய்.
“ஹ்ம்ம், நம்ப முடியலை…” என அசட்டையாக சொல்ல,
“நான் வேணும்னா நைட் டின்னர் செய்யறேன். சாப்பிட்டு சொல்லுங்க. சும்மா இப்படி கேலி பேச கூடாது…” என வீராப்பாய் சொல்ல,
“பார்ரா, நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே…” என்றவனின் பார்வையில் பின்னே சென்றவள்,
“தள்ளி போங்க, வெளியில எல்லாருக்கும் தண்ணி குடுக்கனும்…” என கையில் இருந்த தம்ளர்களால் அவனை நகர்த்த பார்க்க,
“போகலாம். போகலாம். போலீஸ்காரன் எனக்கு தண்ணி காமிக்கிறன்னு பார்த்தா எல்லாருக்கும் இதை தான் பன்ற…” என்றவன் அவளை நெருங்கி,
“எப்ப கண்டுபிடிப்பா பூர்வா? சீக்கிரம், சீக்கிரம் என் கண்ணுக்குள்ள உன்னை தேடேன்…” என்றவனின் குரலே அபூர்வாவை அசையவிடாமல் செய்ய அவளை பார்த்து மலங்க மலங்க விழித்தாள்.
“நிஜமாவே நீங்க சொல்ற கண்மணி நான் தானா?.எனக்கு புரியலை ப்ளீஸ்…” என்றாள் அவனின் எதிர்பார்ப்பு நிறைந்த குரலின் தாக்கத்தை தாளவியலாமல்.
“ஏன், நம்ப முடியலையா?…” என்றான் அவளுள் ஆழ்ந்து பார்த்து.
“என் கண்…” என்ற வாசுதேவகிருஷ்ணன் மேலும் பேசும் முன்,
“லட்சுமி…” என மகிழின் குரல் கேட்க,
“அண்ணி வந்துட்டாங்க…” என அவனை தாண்டிக்கொண்டு செல்ல,
“ஒரு தண்ணி எடுத்துட்டு வர இம்புட்டு நேரமா?…” என கேட்டுக்கொண்டே அவளின் கையில் இருந்ததை வாங்கிய மகிழ் அப்பொழுது தான் வாசுதேவகிருஷ்ணன் அவளின் பின்னே வருவதை கண்டாள்.
“ஐயோ, நான் கரடியா இப்போ?…” என தன் தலையில் தட்டிக்கொள்ள,
“நானுமே தண்ணி குடிக்க தான் வந்தேன் மகிழ். இவ இப்படி லேட் பண்ணுவான்னு தான் நானே வந்துட்டேன்…” என வேண்டுமென்றே சொல்லிவிட்டு அபூர்வாவின் முறைப்பையும் பெற்றுவிட்டு வெளியே சென்று அமர்ந்து கொண்டான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் பூங்கோதை வந்துவிட ஆறுபேரும் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு வீட்டிற்குள் சென்றார்.
வேகவேகமாய் வடைக்கு மாவை அரைத்துவிட்டு அதற்கு வெங்காயத்தை நறுக்குவதற்கு எடுக்க,
“எல்லாம் நறுக்கி ரெடியா இருக்குது. நீங்க கலந்தா போதும். கார சட்னி அரைச்சாச்சு. தேங்காய் சட்னி எடுத்து ரெடியா இருக்கு. அரைச்சிடுவோம். பஜ்ஜிக்கு மட்டும் தான் கரைக்கனும். வாழக்காய் சீவி தரேன்…” என மகிழ் வந்து நிற்க,
“உன்னை எவ இத செய்ய சொன்னா? வவுத்து புள்ளத்தாச்சி, உக்காந்து நறுக்குனியாக்கும்? சொல்லாதத எல்லாம் செய்…” என அவளை முறைத்துவிட்டு வேகமாய் சட்டியில் எண்ணையை காய வைத்தார்.
“நான் ஒன்னும் நறுக்கலை. நீங்க போகவும் லட்சுமியும், விமலாக்காவும் தான் நறுக்குனாங்க. நான் வெறும் தோலை மட்டும் தான் உறிச்சு குடுத்தேன். பாவம்…”
“என்ன பாவத்த கண்ட?…” என அதற்கும் பூங்கோதை திட்ட,
“ஆமா, அவுங்க வீட்டுல வெங்காயத்த நறுக்க எல்லாமே இருக்குது. இன்னைக்கு வாசு அண்ணன் வேற சமைச்சாங்க. நறுக்க எம்புட்டு கஷ்டமா இருந்திருக்கும்? நமக்கும் இருந்தா செலாத்தலு தானே? அதான் சொன்னேன்…”
“ஏன்டி சொல்லமாட்ட? நான் என்ன உன்னை நறுக்கவிட்டா வேடிக்கை பார்க்கிறேன்…”
“ஆனா என்னை வேடிக்கை பார்க்க வைக்கறீங்களே?…” என சொல்லிவிட்டு முகம் சுருங்க நிற்க,
“அடி கூறுகெட்டவளே? உனக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன்? நல்லா இருக்கற வரைக்கி ஆக்கி போடறேன். நடமாட்டமில்லாதப்ப நீ வச்சு பாரு. வேணாம்ன்னா சொல்ல போறேன்?…” என பேசிக்கொண்டே மாமியார் உளுந்துவடையை தட்டி அடுத்தடுத்து எண்ணையில் போட மருமகள் வாழைக்காய் தோலை நீக்கி பஜ்ஜிக்கு சீவி கொடுத்தாள்.
“இரு, ஒரு பக்கத்துல கேசரி செய்ய ஆரம்பிக்கறேன்….” என சொல்லிய நொடி,
“அத்தை கேசரி செய்ய போறாங்க விமலாக்கா…” என்ற குரலில் திடுக்கிட்ட பூங்கோதை,
“எதுக்குடி கத்துற? சும்மா இருக்கமாட்டியா?…” என சொல்ல,
“நீங்க செய்யறப்ப பார்க்கனும்னு சொன்னாங்க. அதான் கூப்பிட்டேன்…”
“வேலையை பாரு. சட்னியை போடு…” என்று சொல்லி ரவையை பாத்திரத்தில் போட்டு லேசாய் வறுக்க ஆரம்பிக்க,
“வறுத்த ரவை இல்லையா இது?…” என்ற குரலில் அலறி கரண்டியை கீழே விட்டார் பூங்கோதை.
“என்னாச்சு…” என விழுந்த கரண்டியை எடுத்து வாசுதேவகிருஷ்ணன் நீட்ட,
“இல்லை நீங்க ஏன் மாப்பிள்ளை அடுப்படிக்கெல்லாம்?…” என கேட்க,
“ரவை கருகிடாம…” என்று அடுப்பை குறைத்தவன்,
“உங்க கேசரி செம்ம டேஸ்ட். அதான் என்ன ட்ரிக் யூஸ் பன்றீங்கன்னு பார்க்க வந்தேன். நானும் நாளைக்கு பூர்வாவுக்கு செய்யலாம் பாருங்க…” என சொல்ல தாயாய் அவருள்ளம் குளிர்ந்து போனாலும் அவனை வைத்துக்கொண்டு வேலை செய்யவே வரவில்லை பூங்கோதைக்கு.
அடுப்பை அணைத்துவிட்டு ரவையை வறுக்க ஆரம்பிக்க சட்னியை மிக்ஸியில் போட்டு திரும்பிய மகிழ்,
“ம்க்கும், இன்னைக்கு கேசரி கிடைச்ச மாதிரி தான்….” என்று சிரிக்க,
“ஏனாம்?…” என்றான் அவனும்.
“அண்ணா நீங்க போங்க, செஞ்சு முடிச்சுட்டு கொண்டு வரேன்…” என்றவன் பூங்கோதையை கண்ணை காண்பிக்க,
“சரிங்கத்தை நீங்க பாருங்க. நாங்க வெளில இருக்கோம்…” என்று அவன் செல்லவும் தான் நிம்மதியானது பூங்கோதைக்கு.
வாசுதேவகிருஷ்ணன் வெளியே சோபாவில் வந்து அமர பெண்கள் மூவரும் அடுப்படியில் சென்று அரட்டையில் இருந்தனர்.
சுட சுட பஜ்ஜியும் வடையும் போட போட சட்னிகளுடன் உடனுக்குடன் காலியாகிக்கொண்டு இருந்தது. இனிப்பும், காரமுமாய் மாறி மாறி சாப்பிட்டு இடையிடையே சூடான டீ வேறு.
பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வாசு சொல்ல தினேஷ் இரவு காட்சிக்கு தியேட்டரில் டிக்கெட் புக் செய்ய சொல்லிவிட்டான்.
இரவு ஒருவருக்கும் உணவு வேண்டாம் என்று சொல்லிவிட இடியாப்பமும் தேங்காய் பாலும் மட்டும் என எளிமையாய் செய்தார் பூங்கோதை. அதை சாப்பிட்டுவிட்டு படத்திற்கு கிளம்பிவிட்டு வர இவை எல்லாம் மருதவேலுக்கு பேராறுதலாக இருந்தது.
விமலாவுடன் சேர்ந்து பார்க்கும் முதல் படம். வெகு வருடங்களுக்கு பின்னர் முழுமையாக பார்க்கும் படம். அதை ஏற்கனவே பார்த்திருந்த விமலா அவனிடம் அதனை பற்றி பேசி சிரிக்க அவனும் அனுமானத்துடன் அடுத்த காட்சி இப்படியா அப்படியா என்று கேட்க அவர்கள் பேச்சும் நேரமும் இனிமையாக கடந்தது.
மறுநாள் மதிய உணவை முடித்துக்கொண்டு சென்னை கிளம்பும் நேரம். அதுநாள் வரை அத்தனை கலகலப்பும் சந்தோஷமுமாய் இருந்த வீடு உணர்ச்சியும், கண்ணீருமாய் மாறியது.
நான்கு நாட்கள் தான். ஆனால் நான்கு யுகங்கள் வாழ்ந்துவிட்ட ஒரு சந்தோஷம் மருதவேல், விமலா முகத்தில் மிளிர்ந்தது. இப்படியே தங்கள் வாழ்க்கை தொடரவேண்டும் என்று மருதவேலும், இந்த நாட்களே போதும் எனக்கு என்று விமலாவும் நினைத்துக்கொண்டனர்.
அதற்கு மேல் எந்த ஆசையும் அவளுக்கு இல்லை. ஏனோ ஆசைப்பட தோன்றவும் இல்லை. உள்ளதும் கெடாமல் இருந்தாலே போதும் என்னும் நினைப்பு மனம் முழுவதும்.
“பார்த்து இருக்கனும் லட்சுமி. மாமியார், மாமனாரை அனுசரிச்சு போகனும். ஆனா உனக்கு சொல்லவே தேவையில்லை. உன் மாமியார் சொக்க தங்கம்…” என சொல்லி மேலும் அறிவுரைகள் பல சொல்லி மருமகனிடம் வந்தார் பூங்கோதை.
“என் பொண்ணை பார்த்துக்கோங்கன்னு சொல்லனும்னு அவசியமே இல்லாம என் பொண்ணோட நீங்க சந்தோஷமா வாழறதை பார்த்துட்டேன் மாப்பிள்ளை. ரெண்டு பேரும் என்னைக்கும் ஒத்துமையா வாழனும். அது போதும் எங்களுக்கு…” என்று சொல்லவும் அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு கிளம்பும் பொழுது,
“கண்டிப்பா அடிக்கடி வரனும் எல்லாரும்…” என சொல்லியே விடைபெற்றான் வாசுதேவகிருஷ்ணன்.
தாங்கள் வந்த காரிலேயே அவர்கள் ஊர் திரும்ப அதுவரை பேச்சும் சிரிப்புமாய் இருந்த வீடு சட்டென அமைதியாக இருந்தது.
போலீஸ்காரன் போலீஸ்காரன் என்று எந்தளவுக்கு பயந்தனரோ அவன் வீட்டில் இருந்தவரை எத்தனை சிரிப்பும் கொண்டாட்டமுமாய் இருந்தது என்பதை கண்கூடாக பார்த்தனர்.
இன்னும் நான்கு நாட்கள் இருந்துவிட்டு செல்ல கூடாதா என்னும் அளவில் சற்று ஏக்கமாகவும் கூட இருந்தது.
பூங்கோதையும் தான் பார்க்கிறாரே அக்கம் பக்கத்தினர் வீட்டில் மருமகன்கள் வந்தள என்ன நடக்கும் என்று. அந்தளவில் தன் குடும்பமும், தன் பெண்ணும் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்தனர்.