என்றைக்கும் இல்லாமல் அன்புக்கரசி பேசியதெல்லாம் அவரால் ஜீரணிக்கமுடியவில்லை. அதிலும் முகத்தை பார்க்க மாட்டேன் என்பதெல்லாம் அவரை தவிக்க செய்தது.
“அன்பு…” என குரல் நடுங்க அழைக்க,
“விமலா…” என்றார் மீண்டும் அன்புக்கரசி.
“போய்ட்டேன் போய்ட்டேன். நீ டென்ஷன் ஆகாத. போய்ட்டேன்…” என்று சொல்லிக்கொண்டே திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே செல்ல விமலாவின் மடியில் சாய்ந்திருந்தவர் கேட் திறக்கும் ஓசையில் தான் படக்கென்று எழுந்தமர்ந்தார்.
அவர் எழுந்த வேகத்தில் விமலாவிற்கு திக்கென்று ஆக புடவை தலைப்பால் முகத்தை நன்றாக துடைத்துக்கொண்டே அன்புக்கரசி தண்ணீரை குடித்துவிட்டு,
“போய்ட்டாரான்னு பார்த்துட்டு கேட்டை பூட்டிட்டு வா…” என சொல்ல ஆவென்று வாயை பிளந்தாள் விமலா.
“அட இவ ஒருத்தி, வேகமா போய் பூட்டிட்டு வாயேன். வந்திரகிந்திர போறாரு…” என்று விரட்டவும் வேகமாய் சென்று அவர் சொல்லியதை செய்தவள்,
“நிஜமாவே உங்களுக்கு படபடன்னு வரலையா அத்தை?…” என கேட்க,
“ஏன் வராம? கெட்ட கோபம் வந்துச்சு. ஆனாலும் காமிக்க முடியாதே. இன்னொன்னு வாசு இருந்தா இன்னும் தான் பேசுவாரு. பெரிய பிரச்சனை ஆகும். போகட்டும் வச்சு வாட்டுவோம்னு தான் கம்முன்னு இருந்தேன். நினைச்ச மாதிரியே வந்து அவிச்சிட்டியான்னா. அதான் பேசினேன்…”
“அத்தை…”
“ஆமாடி, இவரை இப்படியே விட்டா இன்னும் ஆடுவாரு. அப்பப்ப அதிர்ச்சி வைத்தியம் குடுத்துட்டே இருக்கனும். இனி கொழுக்கட்டை கொண்டா கொட்டாங்குச்சி கொண்டான்னு நிப்பாரா? வந்துட்டா கடிகாரத்தை வாங்கிட்டு. ஒரு அறிவு வேண்டாம் அவளுக்கும்…” என்று சொல்ல சொல்ல கண்கள் கலங்கியது.
“போறப்ப ஒரு வாய் சாப்பிட வாய்க்கலை என் புள்ளைக்கும், மருமகளுக்கும். என்னலாம் நினைச்சி போயிருக்கும்ங்க. அம்மான்னு நான் எதுக்கு இருக்கேன். அதான் மனசு ஆறலை. இவருக்கு மட்டும் தான் பேச தெரியுமோ? வாயாறாம பேசினாருல. இப்ப காதாறாம கேட்கட்டும்…” என கோபத்துடன் சொல்லியவர் பின் விமலாவை பார்த்து,
“இங்க பாரு விமலா, என்னைய மாதிரியே நீயும் பேத்தாரத்தனமா இருக்காத எல்லாத்துக்கும் மண்டையை ஆட்டிட்டு. அப்பப்ப நமக்கும் ஆட்ட வைக்கனும். இல்லைன்னா நம்மளை பொம்மையா வச்சிருவாங்க. பார்க்குற தான? ஒழுங்கா நாளைக்கு உன் புருஷனை ஆஸ்ப்பத்திரிக்கு கூட்டிட்டு போக பாரு…”
“அவரு வரனுமே அத்தை…” என கவலையாய் சொல்ல,
“இவ ஒருத்தி. அத நான் பார்த்துக்குவேன். சொல்றதை மட்டும் கேளு. இல்லைன்னா என் மூத்தவனையும் உன்னையும் அடுத்த அன்புக்கரசியா மாத்திருவாரு….” என்றதும் விமலா சிரிக்க,
“என்னைய பார்த்ததும் என்னமோன்னு நினைக்காத. உன்னை விட ஊமைக்கொட்டானா தான் என்னை வச்சிருந்தாங்க. இப்பப்பத்தான் பேச ஆரம்பிச்சேன். இதுவும் இல்லைன்னா மொட்டையடிக்க கூட யோசிக்கமாட்டாரு உன் மாமனாரு. பார்த்த தானே? வாசு போன கவலை இல்லாம கொழுக்கட்டை கேட்டு நின்னதை. இதான் அவரு…” என்றவர்,
“உனக்கு ஒரு நல்லது பன்றதுக்குள்ள என் ஆயுசு முடியாம இருக்கனும்…” என கண்ணை துடைக்க கலங்கிப்போனாள் விமலா.
“அப்படியெல்லாம் பேசாதீங்க அத்தை. மனசு வலிக்குது…” என்று அவரின் கையை பிடித்துக்கொள்ள,
“அதெல்லாம் நான் பேசினதுமே இந்தான்னு வந்து நின்றுவாரா அந்த எமதர்மன். அட போடீ. எப்ப போகனும்னு விதி இருக்கோ? ஆனாலும் இந்த மனுஷனை ஒரு வழி பண்ணாம போகமாட்டேன். சரி சரி அந்த மாவை எடு. அடுப்பை பத்தவை…” என சொல்ல,
“எதுக்கு அத்தை?…” என்றாள் விமலா புரியாமல்.
“வேஸ்ட்டா போய்ரும்ல. செஞ்சு கடை பசங்களுக்கு குடுப்போம்….”” என சொல்லி மாவை சிறு சிறு உருண்டைகளாய் உருட்ட,
“மாமா வந்துட்டா?…”
“வந்தா என்ன பயமா? வந்தா என்கிட்டே கேட்கட்டும். உனக்கென்ன? நான் பார்த்துப்பேன்….” என்றதும் கூட விமலாவிற்கு பயம் குறையவில்லை.
அதன்படியே செய்து கடை பையன்களை வர சொல்லி கொடுத்தனுப்ப முத்துவேல் தங்கை வீட்டிற்கு சென்றிருந்ததால் இது தெரியவில்லை.
பலகாரங்களை கூட அப்பொழுதே பவியிடம் கொடுத்து அனுப்பியிருக்க வேண்டுமோ என்று காலம் தாழ்ந்துதான் யோசித்தார் முத்துவேல்.
அன்புக்கரசியின் மிரட்டலில் ஆடிப்போனவர் பலகாரத்தையும் மறந்து ஒடி வந்துவிட்டிருந்தார். கொழுக்கட்டைக்கே மகனிடம் செல்கிறேன் என்றவர் பலகாரத்தை கேட்டால் என்ன ஆகுமோ என பயந்துபோனார்.
இரவு உணவை தங்கை வீட்டில் உண்ண சொல்லியதற்கு கூட வேண்டாம் என மறுத்து கடைக்கு கூட செல்லாமல் வீட்டிற்கு வந்துவிட சரியாக மருதுவும் வந்துவிட்டிருந்தான் கடையை சாற்றிவிட்டு.
“என்னடா அதுக்குள்ளே கடையை பூட்டிட்ட?…” என கோபமாய் அவர் கேட்க,
“ஏன் அவனும் வீட்டுக்கு வர கூடாதா உங்களுக்கு?…” என வரிந்துகட்டிக்கொண்டு வந்தார் அன்புக்கரசி.
“நான் எப்போ அப்படி சொன்னேன்?…” என அதிர்ந்து கேட்க,
“பின்ன கடைக்கு நீங்களும் போகலை. ஊர்ல இருந்து நேரா அவன் கடைக்கு போய்ட்டான். எப்பவும் சாத்துற நேரத்துக்கு ஒரு பத்து நிமிஷம் முன்னாடி சாத்திருக்கான். இப்ப என்ன அதுக்கு?…” என்றவர் மருதவேலை அருகில் அமர்த்திக்கொண்டு,
“நானே என் இளைய மகனை நினைச்சு வாடி போய் இருக்கேன். அதை பெரியவனை பார்த்தாச்சும் ஆத்திக்கலாம்னு பார்த்தா எனக்கு அந்த குடுப்பினையை நீங்க குடுக்கவே மாட்டீங்க போல…” என்று மீண்டும் சேலை தலைப்பால் கண்ணை துடைக்க முத்துவேலுக்கு வார்த்தையே வரவில்லை.
“அன்புக்கு என்னாச்சு இன்னைக்கு?” என மனம் அதிர அதிர பார்த்துக்கொண்டு நின்றார்.
“கையை கழுவிட்டு வாப்பா…” என்று மகனிடம் சொல்லியவர் மருமகளையும் அழைக்க முத்துவேலை கவனிக்காதது போல இருந்தார்.
“உட்காருங்க மாமா…” என விமலா சொல்ல பொம்மை போல அமர்ந்தார் முத்துவேல்.
“அவரு, அவரு தங்கச்சி வீட்டுல சாப்பிட்டுதான் வந்திருப்பாரு. நீ ஏன் இங்க சாப்பிட சொல்லி வற்புறுத்துற?…” என அன்புக்கரசி விமலாவை அதட்ட,
“அன்பு…” என முத்துவேல் ஆரம்பிக்க,
“ஏன்டி அவரு தான் நல்லா உரைக்கும்படியா தான சொன்னாரு பவிதான் உரிமைப்பட்ட மருமகன்னு. நீ மாமான்னு கூப்பிட்டா கோச்சுக்கிட்டு மருமக வீட்டுக்கு போயிட மாட்டாரா? அங்க அவ வீட்டு வாசலுக்கு போயி நான் கூட்டிட்டு வரனுமா? பேசாம இருக்க மாட்ட?….” என அன்புக்கரசி பேச அயர்ந்து போனார் முத்துவேல்.
“அன்பு நான் அங்க சாப்பிடவே இல்லை…” என சொல்ல,
“அப்ப சரி, இருங்க வரேன்…” என்றவர் உள்ளே சென்று ஒரு கிண்ணத்தில் சூடாக பால்கொழுக்கட்டையை போட்டு எடுத்து வர அதை பார்த்தவரின் முகம் சினந்தது.
“செய்ய மாட்டேன்னு சொன்ன? இப்ப செஞ்சிருக்க…” என்று கோபமாய் கேட்க,
“என் தலைவிதி செஞ்சிட்டேன். என் புருஷன் ராப்பகலா உழைச்சு கொட்டுறாரே. அதை வீணாக்க கூடாதேன்னு செஞ்சேன். அதுவும் உங்களுக்காக தான். நாளைக்கே என் காசு உனக்கென்ன கழனித்தண்ணியா கீழே வீசன்னு கேட்டாலும் கேட்பீங்க. அதான் செஞ்சு உங்க கடையில வேலை பார்க்கற பசங்களுக்கு குடுத்தனுப்பிச்சேன்…”
“என்ன அன்பு இது? உங்க கடைன்னு பிரிச்சு பேசற?…”
“ஆமா, சொல்லுவீங்கள்ள. பெத்த பிள்ளைட்டையே என் வீடுன்னு சட்டம் பேசினீங்க. நாளைக்கு படுக்கையில விழுந்ததும் வச்சு பாக்க போற மருமகட்டையே இன்னொருத்திய காட்டி மருமகன்னு பெருமைப்பட்டீங்க. யாரு கண்டா நாளைக்கே லட்சுமி உங்களை பவி பாக்கட்டும்னு சொன்னாலும் சொல்லுவா….”
“என்ன?” என திகைத்து போய் முத்துவேல் பார்க்க,
“ஆனா என்னால அப்படி இருக்க முடியுமா? கால் கஞ்சியா இருந்தாலும் அது எம்புள்ளைங்க சம்பாத்தியத்துல தான். அப்ப என் மருமகளுங்களை நான் அனுசரிச்சா தான் கிடைக்கும். அவளை நான் மதிச்சா தான் நாளைக்கு என்னை பார்ப்பா. என்னால இன்னொருத்திட்ட இடிபாடு வாங்க முடியுமா?…” என்று மீண்டும் மூக்கை உறிஞ்ச விமலா அவரின் தோளை தட்டிக்கொடுத்தாள்.
“ஏதோ இந்த மட்டுக்கு மருமகளுங்க புண்ணியவதிங்களா வந்து வாய்ச்சிருக்காங்க. இல்லைன்னா உங்களை நம்பினா என் பாடு திண்டாட்டம் தானே?…” என சொல்ல மருதவேல் ஒருபக்கம் அணைத்ததை போல நின்றுகொண்டான்.
எந்த வகையிலும் அன்புக்கரசியை அணுகவே முடியவில்லை முத்துவேலால். தன் கோபத்திற்கு கூட கட்டுப்படாமல் அவர் பேச பேச பயந்து தான் பார்த்தார். அதிலும் மகனும் மருமகளும் அன்புக்கரசிக்கு ஆதரவாய் நிற்பதிலேயே தெரிந்தது தன் நிலைமை.
“போதும் விடுடா. சாப்பிடு…” என்று மகனை அமர வைத்தவர்,
“நீங்களும் சாப்பிடுங்க. இல்லை இதை டப்பால போட்டு கொண்டு போய் உங்க மருமகளுக்கு ஊட்டிட்டு தான் சாப்பிடுவீங்களா?…” என்றவர் முத்துவேல் எதுவோ சொல்ல வாயை திறக்கும் முன்,
“என் மூத்தவன் சாப்பிடறதையாச்சும் கண்ணார பாக்கறேன். எனக்கு விதிச்சது இதுதான். என் இன்னொரு பிள்ளை வயித்தை வாட போட்டு அனுப்பிட்டேன்…” என்று மீண்டும் முகத்தை பொத்திக்கொள்ள முத்துவேல் வேக வேகமாய் கொழுக்கட்டையை சாப்பிட ஆரம்பித்தார்.
எங்கே சாப்பிடாமல் அமர்ந்திருந்தால் அதற்கும் அன்புக்கரசி பேசுவாரோ என்று சாப்பிட்டார். அவரை பார்த்த அன்புக்கரசிக்கு இன்னும் மனது ஆறவே இல்லை. அத்துடன் அவர் நிறுத்தவும் இல்லை.
மறுநாள் காலை உணவு வரைக்கும் அன்புக்கரசி வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. பேசுவார் என்று முத்துவேல் பேச்சுக்கொடுக்க அவரோ பேசவே தெரியாததை போல அமைதியாகவே இருந்தார்.
ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் வருத்தமாகவும் இருந்தது. இத்தனை வருடத்தில் அன்புக்கரசியின் இந்த அளவு பேச்சுக்கள் இதுதான் முதல் முறை.
ஆனால் அவர் நிம்மதி அதிக நேரம் நிலைக்கவில்லை. காலை உணவு முடியவும் மருதவேல் கடைக்கு கிளம்ப முத்துவேலும் சேர்ந்து செல்ல,
“மருது நில்லு…” என்று அவனை முத்துவேல் முன்பே அன்புக்கரசி அழைக்க அவரின் அழைப்பில் மருதுவுக்கு முன் நின்றது முத்துவேல் தான்.
“என்ன அன்பு?…” என அன்பாக முத்துவேல் கேட்க,
“அவனை அவன் பொண்டாட்டியை கூட்டிட்டு இன்னைக்கு ஆஸ்ப்பத்திரிக்கு போக சொல்லுங்க….” என்று முத்துவேலிடமே விரைப்புடன் சொல்ல,
“என்ன?…” என்று உறுத்து விழித்தார் முத்துவேல்.
“அப்ப கடையை யாரு பார்க்கிறதாம்?…” என அவர் கேட்க,
“அவன் பொண்டாட்டியை அவன் தானே கூட்டிட்டு போகனும்? எனக்கென்ன நாலு காலா இருக்கு? நானே வயசானவ. ரெண்டு காலை நாலா இழுத்து பிடிச்சு தவந்துட்டு இருக்கேன். இதுல கூட்டிட்டு சுத்த முடியுமா?…” என்றவர்,
“ராத்திரி முழுக்க தூங்கவே இல்லை வாசுவை நினைச்சு. என் மகன் கண்ணுக்குள்ளவே இருக்கான். அவனை பார்த்தா தான் நிம்மதியா இருக்கும் எனக்கு. தூக்கமில்லாம உடம்பே ஒரு மாதிரியா இருக்கு….” என்று விடாமல் பேச பேச முத்துவேலுவுக்கு தலைசுற்றியது.
“டேய் பெரியவனே, நீயாவது இந்த அம்மா பேச்சை கேளுடா. இல்லை நீயும் என்னைய ஒண்ணுத்துக்குமில்லாதவளா நினைக்கிறியா? அம்மா சொல்றேன் கேளு. இனி நீ தான் உன் பொண்டாட்டியை பார்த்துக்கனும். உனக்கு கடைசி வரைக்கும் வர போறவ அவ தான். என்னை மாதிரி ஆக்கிடாத. அம்புட்டு தான் சொல்லுவேன்…”
முத்துவேலுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அன்புக்கரசி அவரை பேசவே விடவில்லை. வாய் திறக்கவிடாமல் மொத்தத்திற்கும் அவரே பேச பேச முத்துவேல் அலண்டு போனார் உள்ளுக்குள்.
பெரிய மகனை திரும்பி பார்க்க அவனும் தந்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் அன்புக்கரசி அருகே சென்றவன்,
“எத்தனை மணிக்கு போகனும்மா?…” என கேட்க அடுத்த அதிர்ச்சி முத்துவேலுக்கு.
“என்னை கேட்காம நீயா முடிவெடுப்பியா?…” என்று அவனிடம் எகிற,
“அப்ப என் பேச்சை கேட்க கூடாதுன்னு சொல்றீங்க? அப்படித்தான? சரித்தான். பெத்த புள்ளையவே வெளிய போக சொன்னீங்க. நான் எம்மாத்திரம். விமலா அந்த பையை கொண்டா இங்க. இந்த வீட்டுல என்னைய மனுஷியா இவரும் மதிக்கமட்டாரு. மக்களையும் மதிக்க விடமாட்டாரு…” என சொல்ல,
“என்ன நீ நேத்துல இருந்து இதையே சொல்லிட்டு இருக்க அன்பு. நான் எங்க அவங்களை போக சொன்னேன்?…”
“இப்ப என்னைய சொன்னீங்கள்ள. அப்படித்தான் அவனையும் சொன்னீங்க. மருமகளை பேசினீங்க. போகாம இங்கயா இருப்பாங்க?…” என்று சொல்ல,
“உன்னை போக சொன்னேனா?…” சத்தியமாய் குழம்பி போனார் முத்துவேல்.
“அம்மா, விடுங்க, எத்தனை மணிக்கு போகனும்…” என அவன் கேட்கவும்,
“பத்தரை மணிக்கு டைம் வாங்கியாச்சு…” என்றவர் முத்துவேல் பேசும் முன்,
“விமலா தண்ணி குடுடி…” என்றார் நெஞ்சை பிடித்துக்கொண்டு.
பேச வந்தவரும் வாயை கப்பென்று மூடிக்கொண்டார். அன்புக்கரசி நெஞ்சை பிடித்துக்கொண்டாலே பயந்துபோகிறார் முத்துவேல்.
“அம்மா நீங்களும் வாங்களேன். உங்களுக்கும் ஒரு செக்கப் பண்ணிருவோம்….” என அழைக்க,
“எனக்கு என் சின்னவனை பார்த்தாலே படபடப்பு போயிரும். மனசு கிடந்து அடிச்சுக்குதே. ஒருக்கா பார்த்துட்டா நிம்மதியா வந்திருவேன். யாரு கூட்டிட்டு போவ? நினைச்சதும் போற மாதிரியா இருக்கு என் நிலைமை…” என ஓயாது புலம்ப,
“போய்ட்டு எப்ப வருவ?…” என்றார் முத்துவேல்.
மருதவேலும் விமலாவும் அதிசயமாய் பார்க்க அன்புக்கரசியோ மூச்சுவாங்கியபடி லேசாய் நிமிர்ந்து பார்த்து,
“அங்க என்ன குடியிருக்கவா போறேன். குருவிக்கூடாட்டம் இருக்கு. போயி என் கையால ஒரு வாய் ஆக்கி போட்டேன்னா மனசு நிம்மதியாகும். கொஞ்சம் படபடப்பு குறையும்…” என சோர்வாக சொல்ல,
“பெரியவனே ஹாஸ்பிட்டல் போறதுக்கு முன்னாடி உன் அம்மாவை அவன் வீட்டுல விட்டுட்டு போ. வரப்ப கூட்டிட்டு வா. சீக்கிரம் வந்து சேருங்க…” என்று சொல்லி கடைக்கு கிளம்ப,
“மத்தியான சாப்பாடு?…” என ஆர்வத்தை குறைத்துக்கொண்டு அன்புக்கரசி கேட்க,
“ஒன்னும் தேவையில்லை. வெளில பார்த்துப்பேன். கிளம்புங்க…” என சொல்லி கிளம்பவும் அவர் சென்றதும்,
“அம்மா இப்படியே கிளம்புவோமா?…” என மருதவேல் கேட்க வேகமாய் எழுந்துகொண்ட அன்புக்கரசி,
“இருடா. வேற சேலை மாத்திட்டு வரேன். முகம் பாரு டயர்டா இருக்கு…” என துள்ளிக்கொண்டு சென்றார் அன்புக்கரசி.
விமலாவும் மருதவேலும் ஒருவருக்கொருவர் பார்த்து புன்னகைத்துக்கொள்ள,
“சிரிச்சுட்டே நிக்காதீங்க, வாசு வீட்டுக்கு பலகாரங்களை எல்லாம் எடுத்து வச்சிருக்கேன். எடுத்து கார்ல வைங்க…” என சொல்லிவிட்டு செல்ல,
“இதை எப்ப பேக் பண்ணினாங்க அம்மா?…” என மருதவேல் ஆச்சர்யமாய் கேட்க,
“நைட்டே ரெடி பண்ணிட்டோம்…” என விமலாவும் சொல்ல,
“எல்லாம் ஒரு கூட்டாளிங்க. அந்த மனுஷன் அரண்டு ஓடுறார்…” என்றான் மருதவேல் சிரித்தபடி.
ஒரு வழியாக அரக்கப்பரக்க கிளம்பி மூவருமாக வாசுதேவகிருஷ்ணன் இல்லம் நோக்கி காரில் பறந்தனர்.