“அப்பாவை ஏன் பேசனும்? அப்பா பாவம் தானே? எனக்கு தாங்க முடியலை…” என அவனிடமே தஞ்சம் புக அவளின் தலையை மென்மையாய் வருடிவிட்டான் வாசுதேவகிருஷ்ணன்.
சற்றுமுன் அவனை அடிப்பதை போல கேள்விகளால் துளைத்தவள் இப்பொழுது அவனிடம் ஆறுதல் தேட அமைதியாக இருந்தான்.
“என் மேல கோபம்னா திட்டட்டும். வேண்டாம்னு சொல்லலை. என்னை பேசனும்னா உடனே என் அப்பா தான் கிடைச்சாங்களா?…” என பேச,
“ஓகே, ஓகே. அதான் நம்ம வீட்டுக்கு வந்துட்டோமே?…” என்று அவளை தட்டிக்கொடுக்க,
“நான் ஒன்னும் மாமா பேசினதால மட்டும் வரலை. உங்களாலதான்…” என சொல்ல வேகமாய் அவளின் முகம் பார்த்தவன்,
“எனக்கு தேவை தான்டி. நீ பேசு. பேசு…” என்று வேகமாக அவளின் முதுகில் அடி போட,
“நீங்க செஞ்சது தப்பில்லை. நான் கேட்டது தப்பாம்?…” என அவனை முறைக்க,
“எக்குத்தப்பா எதாச்சும் சொல்லிடுவேன் பார்த்துக்க. நிஜமா தூங்க போறியா இல்லையா? எனக்கு தூக்கம் வரலை…” என்றதும் கோபத்துடன் கண்களை மூடியவள் அவனை இன்னும் ஒட்டிக்கொள்ள வாசுதேவகிருஷ்ணன் முகத்தில் அப்பட்டமான புன்னகை.
“கோபமாம், ஆனா தள்ளி போக மாட்டாளாம்” என அவளை சத்தமில்லாமல் கொஞ்சிக்கொண்டவன் மனது அவளின் குற்றச்சாட்டில் சென்று நின்றது.
மாலை பவி வந்து சென்றதும் வீட்டிற்கு திரும்பியவன் உள்ளே நுழையும் பொழுதே ஒரு மெசேஜ் வந்துவிட அதை பார்த்துக்கொண்டே சத்தமில்லாமல் பக்கவாட்டில் இருந்த கல்பெஞ்சில் சென்று அமர்ந்து கொண்டான்.
அப்பொழுது தான் முத்துவேல் முதலில் அபூர்வாவை அழைத்து பின் அன்புக்கரசியை கோபமாய் அழைத்தது. அப்படி எதற்கு இத்தனை கோபம் என கேட்பதற்காய் சுற்றிக்கொண்டு வர எத்தனிக்க அபூர்வாவே வந்து பேச போலீஸ்காரன் புத்தி என்ன தான் நடக்கிறது என பார்க்க நின்று கொண்டான்.
வந்ததும் முத்துவேலும் அபூர்வவும் பேச பேச கோபம் வந்தாலும் மனைவியின் தெளிவான நிதானமான பேச்சில் ஆச்சர்யம் பொங்க நின்றவன் அவள் மாடிக்கு சென்றதும் தான் மெதுவாக உள்ளே வந்தன.
“என்னங்க இப்படி பேசிட்டீங்க? உங்களுக்கு எதுக்கு இத்தனை கோபம் வருது. அதுவும் வாசு வீட்டில இல்லாத நேரத்துல லட்சுமியை பேசறது தப்புங்க…” என அன்புக்கரசி சொல்லிக்கொண்டிருக்க,
“எங்க உன் மகனை என்கிட்டே சொல்ல சொல்லு பார்ப்போம். தப்பாம் தப்பு. என்னை சொல்லிட முடியுமா?…”
“ஆமா தப்புத்தான். நான் சொல்லுவேன். எங்க இல்லைன்னு சொல்லுங்க பார்ப்போம்…” என வாசுவின் குரல் கேட்டதும் திடுக்கிட்டு மூவரும் திரும்பி பார்க்க,
“மாறவே மாட்டீங்க தான? என்ன மனுஷன் நீங்க?…” என்று அவன் பேச அன்புக்கரசி அவனின் கையை பிடித்துக்கொண்டார்.
“நான் ஏன்டா மாறனும்? எனக்கே நீ சொல்லிகுடுக்கியா? சுயம்புடா நானு. நான் மட்டும் இல்லைன்னா உங்களால இந்தளவுக்கு வந்திருக்க முடியுமா?…”
“கண்ணு தெரியாதவன் கையில பத்து ரூபாய் இருந்தாலும் ஒண்ணுதான். பத்தாயிரம் ரூபாய் இருந்தாலும் ஒண்ணுதான். நீங்க செய்யறதும், நடக்கறதும் அப்படித்தான் இருக்குது. வளர்த்தீங்க உழைச்சீங்க. மதிக்கறோம். அதுக்காக எல்லாருக்கும் இதையே செய்யின்னு நீங்க ஆடர் போட முடியாது…”
“இது என் வீடு, அப்ப நான் ஆடர் போடத்தான செய்வேன். என் சொல்பேச்சு கேட்டு தான நடக்கனும். நான் இந்த குடும்ப தலைவன்…” என முத்துவேல் பேச,
“அப்ப சரி சொத்தை பிரிக்கிற நேரம் வந்திருச்சு. பிரிச்சிருவோம்….” என சாவாதனமாக அவன் சொல்ல,
“என்னது சொத்து பிரிக்கிறியா?…” என்று அவர் குதிக்க,
“ஆமா, உங்களோட எல்லாம் ஒரு வீட்டுல வாழ சுத்தமா முடியாது. எங்களுக்கு சேர வேண்டியதை பிரிச்சு குடுங்க. நாங்க போறோம்…” என்று வம்புக்கென்றே முத்துவேலை கோபமூட்டினான் வாசுதேவகிருஷ்ணன்.
“இது என் சொந்த சம்பாத்தியத்துல கட்டினது…” என்று கர்வமாக சொல்ல,
“இந்த வீட்டோட இந்த ஹால் உங்க அப்பா உங்களுக்கு குடுத்திட்டு போனது. இதை சுத்தி வேணும்னா நீங்க சொந்தமா சம்பாதிச்சாதா இருக்கலாம். ஆனா இது தாத்தா சொத்து. பேரனுங்களுக்கு தானே? கடையும் தான்…”
வாசுதேவகிருஷ்ணன் பேச பேச முத்துவேலுவுக்கு அவன் நிஜமாகவே சொத்தை பிரிக்கும் முடிவுடன் பேசுகிறானோ என்று தோன்றிவிட்டது. அன்புக்கரசிக்கும், விமலாவிற்கும் அவன் வேண்டுமென்று பேசுவது புரிந்தாலும் இந்த நேரம் இது எதற்கு என்று தான எண்ணினார்கள்.
ஆனால் வாசுதேவகிருஷ்ணன் அப்படி நினைக்கவில்லை. முத்துவேலின் பேச்சுக்களுக்கு இப்படி சில வழிகளில் அதிர்ச்சி வைத்தியம் போல செய்தால்தான் உண்டு.
“இங்க பாரு. இதுக்கு நான் சம்மதிக்கமாட்டேன்…”
“உங்க சம்மதம் எனக்கு எதுக்கு? என் பொண்டாட்டிக்கிட்டையே இப்படி பேசறீங்க. என்னன்னு கேட்ட என்கிட்டயும் சட்டமா என் வீடுன்னு பேசறீங்க. என்னவோ எங்களுக்கு உரிமை இல்லாத மாதிரி பேசறீங்க. நாளைக்கு நானும் சொல்லிக்கனும் தானே? என் வீடுன்னு…” என பொட்டில் அடித்ததை போல சொல்ல,
“இப்ப என்ன? நான் சொன்னதால என்ன ஆகிடுச்சாம் உன் பொண்டாட்டிக்கு? கௌரவம் குறையுதா? உனக்கு அது வருத்தமா போச்சாக்கும்? இப்படி நினைக்கிறவன் அப்பவே நான் சொன்னதை கேட்டிருந்தா ராஜா மாதிரி இருந்திருக்கலாம் தானே?…” என்று இளக்காரமாக பேசவும் அதுவரை கொஞ்சம் விட்டுபிடித்தவனுக்கு இப்பொழுது பயங்கர கோபமானது.
“வாயை மூடுங்கப்பா…” என்று அவன் இறைந்ததில் மாடியில் இருந்த அபூர்வாவிற்கு அப்பொழுது தான் அவன் வந்துவிட்ட விஷயமா தெரிய வேகமாய் அவனின் குரலில் கீழே இறங்கி வர,
“என்ன பேசறீங்க நீங்க? நீங்க சொன்னா எல்லாம் செஞ்சிறனும். விவரம் தெரிஞ்சதுல இருந்து பவி பவின்னு அவளை தான் கட்டிக்கனும்னு சொல்லி சொல்லி வளர்த்தீங்க. அதுக்கும் நான் தலையாட்டனும். உடனே அவங்களுக்கு ஒத்துவரலைன்னதும் இன்னொருத்தியை பார்ப்பீங்க. அதுக்கும் தலையாட்டி கல்யாணம் பண்ணிக்கனும். என்னை என்னன்னு நினைச்சிட்டு இருக்கீங்க?…”
“என் வாழ்க்கையை உங்க இஷ்டத்துக்கு ஏன் மாத்தனும்னு நினைக்கறீங்க?…” என்று அவன் கத்திய கத்தலும் அவன் குரலில் தெறித்த ஆக்ரோஷமும் அபூர்வாவின் கால்களை அங்கேயே நிறுத்தியது.
அவனின் கோபமும், பேச்சும், ஆவேசமும் அவளுக்கு இது அவனின் ஏமாற்றத்தின் வெளிப்பாடாகவே தெரிந்தது. வந்த சுவடே இல்லாமல் மீண்டும் மாடிக்கு வந்துவிட்டாள்.
அதன் பின் அவன் பேசியதையோ அங்கே நடந்ததையோ எதையுமே கேட்க விரும்பவில்லை. அந்த வீட்டில் இருக்கவும் விரும்பவில்லை.
கீழே வாசுதேவகிருஷ்ணன் குரல் வீடும் முழுவதும் எதிரொலிக்க பதறி போன அன்புக்கரசி,
“வாசு என்னடா இது?…” என்று கேட்க,
“பின்ன என்னம்மா? என்னை இந்த பாடு படுத்தறார்? படிக்க போராட்டம். பிடிச்ச வேலைக்கு போக போராட்டம். பவி வேண்டாம்னு சொல்ல சொல்ல ஊரெல்லாம் என் மகன் இவளை தான கல்யாணம் பண்ணிக்க போறான்னு சொல்லி சொல்லி என்னையும் வலுக்கட்டாயமா சம்மதிக்க வச்சாரு…”
“ஒருநாள் கூட அந்த நினைப்பு இல்லை எனக்கு. அவ என்னடான்னா. ப்ச். அதை விடுங்க. அவளை பிடிக்கலைன்னு சொன்னேனே காதுல வாங்கினாரா? எதுவும் இல்லை. என்னவோ உலகத்துலையே அவளை கட்டினாதான் நான் நல்லா இருப்பேன்ற மாதிரி பில்டப் குடுத்தாரு…”
“ஆனா அவ மதிச்சாளா? எனக்கு ஆரம்பத்துல இருந்தே ஒத்துவராதுன்னு ஒதுங்கி போனா விடாம இவர் இழுத்து பிடிச்சாரு. தேவையில்லாம அசிங்கப்பட்டப்போ கூட என்னை தானே பேசினாரு. அவளாம் ஒரு ஆளுன்னு தூக்கிவச்சு இப்பவும் கொண்டாடிட்டு இருக்காரு…”
“எப்படி எப்படி? நான் இன்னொருத்தன்கிட்ட கை கட்டி சேவகம் செஞ்சா எனக்கு உங்க தங்கச்சி புருஷன் பொண்ணை தரமாட்டாறாமா? சொடக்கு போடற நேரத்துல என்னால அந்த பிஸ்னஸ் நடந்ததுக்கான அறிகுறியே இல்லாம பண்ண முடியும். தெரியுமா?…” என முத்துவேலை பார்த்து சொல்ல,
“என்னோட பவர், என் பொசிஷன் இது எல்லாம் தெரிஞ்சும் அவர் பேச நான் கேட்டுட்டு நின்னதுக்கு ஒரே காரணம் நீங்க மட்டும் தான. உங்க ஒருத்தருக்காக தான் போன போகுதுன்னு விட்டு வச்சேன். போலீஸ் வேலையை விட்டுட்டு அவரையும் அவர் தொழிலையும் பார்த்தாதான் பொண்ணுன்னு எகத்தாளம் பேசினாரே…”
“அவளே வேண்டாம்னு இங்க நான் சொல்லிட்டு இருந்தா, நினைப்பு மனுஷனுக்கு நான் என்னமோ தவம் கிடக்கிற மாதிரி. எல்லாம் நீங்க குடுத்த இடமும், நீங்க பேசின பேச்சும். அன்னைக்கே உறவே வேண்டாம்னு முறிக்க பார்த்தா என்னையே வீட்டை விட்டு போன்னு நின்னீங்க….”
“மிரட்டல், அதுவும் என் கிட்ட. பொண்ணை கட்டினா வீட்டுல இருக்கனும், இல்லைன்னா எங்கயும் போன்னு. என்ன உங்க கால்ல விழுந்து கிடப்பேன்னு நினைப்பா உங்களுக்கு? அன்னைக்கே நான் பேசியிருப்பேன். பெத்தவருன்ற ஒரு காரணத்துக்காக தான் பேசாம வாயை மூடிட்டு போனேன்…”
“இன்னைக்கு அதே பவியை வரவழைச்சு அவளுக்கு என் பொண்டாட்டி வந்து டாட்டா காட்டனுமோ? அவளுக்கு மரியாதை குடுக்கனுமோ? என் பொண்டாட்டிக்கு மரியாதை குடுக்க இந்த ஊருக்குள்ள ஆயிரம் பேர் இருக்காங்க. இன்னைக்கு அபூர்வா வெளில இறங்கி போனா போலீஸ்காரன் பொண்டாட்டி இந்த வாசுதேவகிருஷ்ணன் பொண்டாட்டின்னு எல்லாரும் மதிப்பா பார்ப்பாங்க…”
“யாரும் கேட்டு குடுக்கவேண்டியதும் இல்லை. மிரட்டி வாங்க வேண்டிய இடத்துலையும் நாங்க இல்லை. தானா கிடைக்கும். இன்னொருவாட்டி பூர்வாவை எதாச்சும் இப்படி தங்கச்சி மகளை சீராட்டு பாராட்டுன்னு தப்பி தவறி கூட உங்க வாய்ல இருந்து வார்த்தை வர கூடாது…”
“வந்துச்சு அன்னைக்கு உங்க தங்கச்சி மாப்பிள்ளைக்கு பட்ட நாமம் தான். எந்தளவுக்கு நேர்மையா இருக்கேனோ அந்தளவுக்கு கிரிமினல் வேலையும் நல்லாவே தெரியும். உங்க மச்சானுக்கு குறுக்குவழியில கூட நான் எதுவும் செய்யனும்னு இல்லை. உங்களுக்கே தெரியும் அவர் செய்யற தகிடுதத்தம். எடுத்துவிட்டேன் நாறிப்போயிரும் நீங்க கொண்டாடுற அவர் பொழைப்பு…”
இதுவரை பேசாமல் அடக்கி வைத்திருந்த எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாய் அவன் கொட்டிமுடிக்க,
“பார்த்தியா அன்பு, உன் மகன் இம்புட்டு நாளும் இதை எல்லாம் மனசுல எப்படி வச்சிருந்திருக்கான்னு. நாளைக்கே பொண்டாட்டிக்கு ஒண்ணுனா நம்மளை பார்ப்பானோ என்னவோ. அவளை சொல்லவும் எம்புட்டு ரோஷம் இவனுக்கு…”
“ரோஷம் இருந்த அதான் மனுஷன். யாருக்காகவும் பணிஞ்சு போகனும்னு எனக்கு அவசியமில்லை. யாருக்கு பணிஞ்சு போகனும்னு ஒரு வரைமுறை இருக்கு. என் வேலையை, என்னோட ஆம்பிஷனை கிண்டல் பண்ணினதோட இல்லாம வேலையை விட சொல்லி உங்களோட சேர்ந்து பேசினாங்கல்ல. அவங்களை நான் ஏன் மதிக்கனும்?…”
“இப்பன்னு இல்லை எப்பவுமே எனக்கு அவங்க மேல எந்த மதிப்பும் வராது. இன்னைக்கு நீங்க இந்த அளவுக்கு வரவும் தான் உங்களை கூப்பிட்டு வச்சு மரியாதை குடுக்காரு உங்க தங்கச்சி வீட்டுக்காரர். இதே பழைய மளிகைக்கடை முத்துவேல் மகனா இருந்தா எந்த மதிப்பும் இல்லை. புரிஞ்சுக்கோங்க…”
“ராணி அத்தை அவங்களை சொல்லுங்க பாவம் தான். ஆனா அன்னைக்கு அவங்க கூட ஏன் அண்ணன் மகனை பேசறீங்கனு ஒரு வார்த்தை கூட கேட்கலை. உங்களோட சேர்ந்து அவங்களும் தானே என்னை பேசினாங்க. போதும் உங்க சொந்தத்தை நான் மதிச்ச வரைக்கும்…” என்றவனின் பேச்சுக்கு அன்புக்கரசி மனதிற்குள் சபாஷ் சபாஷ் என சொல்லிக்கொண்டே இருந்தார்.
“விமலா இப்ப தான்டி என் மனசு குளிர்ந்து போகுது. இப்படி கேட்காம இருக்கறதால தான் இந்த மனுஷன் வண்டி ரொம்ப வேகமா ஓடுச்சு. நட்டு கழண்டு போச்சுன்னு நிக்கிறாரு பாரு…” என அன்புக்கரசி விமலாவிடம் முணுமுணுக்க,
“அத்தை சிரிப்பு வருது…”
“அடக்கி வச்சு அப்பறமா சிரிச்சுக்கோ. இப்ப பேசாம வேடிக்கை பாரு…” என்று சொல்லி சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு நிற்க,
“இங்க பாருங்க. இன்னையோட இது என் வீடு என் வீடுன்னு பேசறதை நிறுத்துங்க. இன்னைக்கு மாதிரி என்னைக்கும் இருக்கமாட்டேன். கோவத்துல கோர்ட்டுக்கு போயிருவேன் வீட்டை பிரிக்க. அப்பறம் வீட்டுக்குள்ளயே சுவத்தை கட்ட வேண்டியது தான்….” என்று எச்சரித்தவன் மாடிக்கு சென்றுவிட,
“பாரு விமலா, வாசு எம்புட்டு பேசிட்டான்னு. கோடு போட்டா கூட கோதாவரின்னதும் ஒரு கோட்டை தான்டி வந்து உன் மாமனார் முன்னாடி நிப்பேன். சுவத்தை கட்டிட்டா சுத்திக்கிட்டு தான் வரனும். என் வயசுக்கு தாங்குமா? என் மகன் என்னை அவன் கூடத்தான வச்சுப்பான்…” என சொல்ல,
“கோதாவரியா?…”
“விசு படத்துல கோட்டுக்கு அங்கிட்டு நிக்கிறது கோதாவரி. இங்க அன்புக்கரசி. இதுக்கெல்லாம் விளக்கம் சொல்லனுமா?….” என விமலாவிடம் பேசிக்கொண்டிருக்க அவரே எதிர்பாராதது மகனும் மருமகளும் வீட்டை விட்டு கிளம்பி வந்தது.
மீண்டும் வாயை வைத்துக்கொண்டு அமைதியாக நில்லாமல் முத்துவேல் சவடாலாய் பேச அப்பொழுது தான் பயந்து போனார் அன்புக்கரசி. பிரச்சனை பெரிதாக வேண்டாம் என்று அவனை கிளம்ப சொல்லிவிட்டு முத்துவேலை வாட்டி எடுத்தார்.
வாசுதேவகிருஷ்ணனுக்கு இதில் அபூர்வாவின் கோபத்தில் கோபமும் சிரிப்பும் ஒருங்கே உண்டானது.
ஆனாலும் கோபம் அதிகம் தான். அவன் கொஞ்சி நிற்க இவளோ உணராமல் விஞ்சி நின்றாள்.
“விடியட்டும்டி யக்கா. உனக்கு இருக்கு. வாசுதேவகிருஷ்ணன்கிட்டயேவா?…” என்று மனைவியின் முகம் நோக்கி இறங்கியவன் அவளின் உறக்கம் கலையாமல் முகத்தில் முத்து முத்தாய் முத்த முத்துக்களை பதிக்க ஆரம்பித்தான் தாளமாட்டாமல்.
“சத்தியமா நிஜமாவே தூக்கம் வரலைடி கண்மணி…” என அலுங்காமல் அவளை கொண்டாடி திண்டாடினான்.