நிஜம் – 20
கண் விழிக்கும் போதே வாசுதேவகிருஷ்ணன் முகம் தன் முகத்தருகே தெரிய ஒரு நொடி அசையாமல் பார்த்தவள் பின் வேகமாய் எழுந்து கொள்ள முற்பட்டாள். அவளின் அசைவில் தூக்கம் கலைய,
“ப்ச், என்னை எழுப்பாம இரு பூர்வி…” என்று அவளை எழ விடாமல் இறுக்கி அணைத்துக்கொண்டான்.
“போலீஸ்காரன்னா எல்லாரும் விடியும் முன்ன எந்திச்சு எக்ஸர்சைஸ் பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். நீங்க என்னன்னா ஒருநாள் கூட பண்ணி நான் பார்க்கலை…” என்று அவனின் கையை கிள்ள,
“என் வாயை கிளறாதே பூர்வி…” என்றவன் சொல்ல வருவதை புரிந்தவள் கோபத்துடன் அவனை முறைக்க அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன்.
“வாயே திறக்க கூடாது நீங்க. என்னால கேட்க முடியலை…” என அபூர்வா அவனின் வாயிலேயே அடிக்க,
“வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் பூர்வி. உனக்கு தெரியாதா என்ன?…” என்று அவளை வம்பிழுத்தான்.
“போதும், போதும். நல்லா பிழைச்சேன். விடுங்க என்னை…” என திமிற,
“உன்னால நைட் ஃபுல்லா நான் தூங்கவே இல்லை கண்மணி. அதனால என் கூட கொஞ்சம் நேரம் நிஜ தூக்கம் தூங்கு…” என்று கண்ணடிக்க,
“இன்னொரு தடவை தூக்கம், நிஜ தூக்கம்னு பேசுங்க. கடிச்சுடுவேன்…” என்று கடுப்பாய் சொல்ல,
“சாஃப்ட்டா ஹேண்டில் பண்ணனும்னா உனக்கு வைல்ட் தான் இன்னைக்கு செட் ஆகும் போல. கடிப்பேன்ற…” என்றவனின் மிரட்டும் பேச்சில் அவள் மிரட்சியுடன் பார்க்க அதில் புன்முறுவல் பூக்க,
“பயந்துட்டியா பூர்வி?…” என்று மென்மையாய் அவளின் கன்னம் தடவினான். இப்படியே விட்டால் இவன் தன்னை விடமாட்டான் என உணர்ந்து,
“நான் பாத்ரூம் போகனும். ப்ளீஸ்…” என சொல்ல, சிரிப்புடன் நெற்றியில் முட்டியவன் அவளின் இதழ்களை லேசாய் உரசிவிட்டு விட்டுவிட கண்மூடி அதனை உள்வாங்கியவள் சட்டென உருண்டு கட்டிலை விட்டு கீழே இறங்கி பாத்ரூமினுள் நுழைந்துகொண்டாள்.
“பூர்வி ட்ரெஸ்…” என்றதும் அவனின் சத்தத்தில் உடை எடுக்க மறந்ததில் ஐயோவென தலையில் அடித்துக்கொண்டு மீண்டும் வெளியே வந்து மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு அதே வேகத்துடன் ஓட,
“அந்த நைட்டியை லேசா தூக்கி பிடிச்சுதான் போயேன். தடுக்கி விழ போற நீ…” என சொல்வதை கண்டுகொள்ளாமல் அவள் பாத்ரூம் உள்ளே நுழைந்துகொள்ள அடக்கமாட்டாமல் வெடிச்சிரிப்பு சிரித்தவன்,
“இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே கண்மணி…” என இன்னும் சத்தமாய் சொல்லி எழுந்தமர்ந்தவன் மொபைலை பார்க்க ஆரம்பித்தான்.
நேரம் காலை எட்டு மணி தான் என கடிகாரம் சொல்லியது. ஆனாலும் மனது என்றைக்கும் விட அத்தனை ரம்யமாய் இருந்தது. கூடலில்லா முதல் ஊடல். அது தந்த உவகை. “ஜஸ்ட் இன்ட்ரெஸ்ட்டிங்” என மனது கும்மாளமிட்டது.
போனில் தனக்கு வந்திருக்கும் செய்திகளை பார்த்துக்கொண்டே எழுந்து வெளியே வந்தவனுக்கு அழைப்பு வர,
“ஹலோ சுபாஷ்…” என்று இவன் பேச மறுமுனையில் சொல்லிய தகவலில்,
“ஓகே, நைன் தர்ட்டி நாங்க வந்திடுவோம். எஸ், முடிச்சிடலாம்…” என சொல்லியவன் மனதினுள் சிலபல கணக்குகளை போடலானான்.
அபூர்வா குளித்துவிட்டு வெளியே வரும் பொழுது கண்ணை மூடி சோபாவில் அவன் அமர்ந்திருக்க பார்ப்பதற்கு அயர்ந்து உறங்குவதை போலவே இருந்தது.
இருந்தாலும் நம்ப முடியாமல் நிஜமாகவே தூங்கவில்லையோ? அதனால் தான் இந்த தூக்கமோ? என நினைத்து அவனின் கண்களின் அருகே மிக நெருக்கமாக குனிந்தவள் மூடியிருக்கும் இமைகளுக்குள் விழிகள் அசைகிறதா என நோட்டமிட,
“தூங்க வைன்னு சொல்றப்போ விட்டுட்டு இப்ப பக்கத்துல வந்து உசுப்பேத்தற பூர்வி…” என்றவன் குரலில் திடுக்கிட்டு பின்னால் சாயவிருந்தவள் சுதாரிக்கும் முன் கைகளுக்குள் அள்ளி மடியோடு சேர்த்து அணைக்க,
“பயந்துட்டேன். எப்பவுமே என்னை பயம் காட்டுறீங்க. பாருங்க படபடன்னு அடிச்சுக்குது…” என பதட்டத்துடன் பேச,
“எங்க அடிச்சுக்குதாம்?…” என்றவனின் கள்ளபுன்னகையுடன் கேட்க சட்டென அவனின் கைகளை பிடித்தவள்,
“உங்க மேல கோவம் கோவமா வருது. நீங்க இப்படி செய்ய செய்ய. என்னை வெறுபேத்தறீங்க…” என்று கோபமாய் சொல்ல,
“கோவமா இருக்கிறவ எதுக்குடி என் பக்கத்துல இப்படி வந்து நிக்கிற? அப்ப நானும் இதை தான் செய்வேன்…” என்று அவளின் கழுத்தில் முத்த ஊர்வலம் நடத்த,
“இன்னும் குளிக்கலை நீங்க. எனக்கு பசிக்குது. போய் குளிச்சுட்டு வாங்க. சாப்பிடுவோம்…” என்று அவனிடமிருந்து விடுபட,
“குளிக்காம இதுவரைக்கும் உன்னை டச் பண்ணினதே இல்லையாக்கும்? ரொம்ப பன்ற நீ…” என்ற அத்தோடு நிறுத்தாமல் இன்னுமின்னும் பேச முதலில் காதை மூடிக்கொண்டவள் கையை எடுத்தவன் இன்னுமே பேச பின் அவனின் வாயை மூட எதுவும் முடியாமல் கடைசியாக அவனை இறுக்கமாய் கட்டிக்கொண்டாள்.
“ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ். எதுவும் பேச கூடாது. பேசவே கூடாது. இன்னைக்கு உங்க அராஜகம் ரொம்ப அதிகமா இருக்கு. உங்க பேச்சு என்னால கேட்கவே முடியலை…” என்று அவனை கட்டிக்கொண்டே மிரட்டலும், கெஞ்சலுமாய் அவள் சொல்ல வந்த சிரிப்பை அடக்கியவன்,
“நேத்து உன் பேச்சு கூடத்தான் என்னால காது குடுத்து கேட்க முடியாத அளவுக்கு இருந்துச்சு. நான் கேட்கலையா? உனக்கொரு நியாயம், எனக்கொரு நியாயமா?…” என்று வாதாட அவனை விடுத்து முகம் பார்த்தவள்,
“நான் பேசினதும், நீங்க பேசினதும் ஒண்ணா?…” என்றாள் கடுப்பாக,
“நீ கேட்டதை நீ பேசின. நான்…” என்றவனின் வாயை பொத்தியவள்,
“சத்தியமா கடிச்சிடுவேன். இதுக்குமேல பேசினா…”என்று மிரட்ட கண்களால் சிரித்தவன் அவளின் கையை எடுத்துவிட்டு,
“நீ இப்படிலாம் பண்ணுவன்னு தெரிஞ்சோ என்னவோ நான் பவானி ஆத்துல கூட குளிச்சதில்லை…” என்று வம்பிழுக்க,
“இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா? என்னை என்னன்னு நினைச்சீங்க? சந்தேகப்பேய்ன்னா…” என்று அவனிடம் முறைக்க,
“நீ சொன்னாலும் சொல்லுவடி. பவானின்ற பேர் இருக்கறதாலையே கூட நீங்க அந்த ஆத்தை தேடி போய் குளிச்சிருப்பீங்கன்னு….” என்று அவளை தெளியவிடாமல் வார்த்தையாட பதில் பேச முடியாமல் அயர்ந்து நின்றதென்னவோ அவள் தான்.
“இப்பவும் நான் கேட்டதுக்கு பதில் சொல்லலை. ஆனா என்னை டைவர்ட் பன்றீங்க நீங்க…” என்று மூக்கு விடைக்க சொல்ல,
“அப்பவும் நீ என்னை தான் நினைக்கனும்னு உன்னை என் பக்கமா தான டைவர்ட் பன்றேன். பொண்டாட்டி புருஷனை பார்க்கனும். புருஷன் பொண்டாட்டியை பார்க்கனும். ரெண்டுபேருமா இந்த உலகத்தை ஒண்ணா பார்க்கனும்…”
“இப்ப என்னை விட்டா நான் வேலையை பார்ப்பேன். போய் டிபன் ரெடி பன்றேன்…” என்று சொல்ல,
“நான் ஒன்னும் உன்னை பிடிச்சுக்கலை. நீதான் என்னை கட்டிட்டு என் மடியில உட்கார்ந்திருக்க…” என்று சொல்லிய விதமும் அவனின் புன்னகையும் அவனிடம் மூழ்கிவிட செய்தது பெண்ணவளை.
ஆம், அபூர்வாவின் கைகள் இரண்டும் அவனின் கழுத்தில் மாலையாய் கோர்த்திருக்க மடியில் மகாராணியாய் அமர்ந்திருந்தாள்.
“செய்யிறதையும் செஞ்சிட்டு, என்னையே சொல்லுங்க…” என்று அவனிடமிருந்து எழுந்து கொள்ள,
“ப்ரேக்பாஸ்ட் ரெடி பண்ண வேண்டாம். டீ மட்டும் போடு பூர்வி. நான் ஆடர் பண்ணிட்டேன்…” என்று அவள் எழுந்ததும் தானும் எழுந்து நின்று கைகளை தலைக்குமேல் தூக்கி நெட்டிமுறிக்க,
“ஏன் ஆடர் பண்ணுனீங்க? கோபத்துல சமைக்கமாட்டேன்னு நான் சொன்னேனா?…” என்று அதற்கும் வரிந்துகட்டி அவள் நிற்க,
“சொன்னா தான் ஆடர் பண்ணனுமா? டயர்டா இருக்குமேன்னு…”
“நான் டயர்டா இருக்கேன்னு உங்கட்ட சொல்லவே இல்லை…” என்று வார்த்தைகளை விட,
“அதுதான் எனக்கு தெரியுமே. நான் சொன்னது எனக்கு…” என்றான் குறும்புடன் மாயக்கண்ணனாய் வாசுதேவகிருஷ்ணன்.
தலையை பிடித்துக்கொண்டாள் அபூர்வா. எங்கே சுற்றினாலும் கடைசியில் தன்னை வாயடைக்க செய்யும் அவனின் வித்தைகளில் மனம் மயங்கத்தான் செய்தது. ஆனாலும் வீம்பாய் வீராப்பாய் இருந்தாள்.
தனது கோபத்தை அவன் பொருட்படுத்தவே இல்லை என்பதே இன்னும் கஷ்டமாய் போனது அவளுக்கு. கோபத்தை தணிக்க பார்க்கிறானே தவிர களைய முற்படவில்லை என்பதே மிகப்பெரும் கவலையாய் போனது.
அவனை முறைத்துவிட்டு கிட்சனிற்குள் செல்ல வாசுதேவகிருஷ்ணனும் குளிக்க சென்றான்.
டீக்கு பாலை காயை வைத்தவள் வேலை எதுவும் இல்லாமல் போக மொபைலை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள். வழக்கம் போல கைகள் அவனின் முகநூல் பக்கத்திற்கு செல்ல முதல்நாள் விழுப்புரத்திலிருந்து வரும் வழியில் இளநீர் கடையில் எடுத்துக்கொண்ட போட்டோவை பதிவேற்றி இருந்தான்.
அவனின் புகைப்படத்திற்கு ஆயிரத்திற்கும் மேலான லைக்குகள் அதிகமாய் இருக்க என்றைக்கும் இல்லாமல் கமெண்ட்ஸ் பகுதிக்கு செல்ல அதில் அவனை பாலோ செய்யும் ரசிக ரசிகைகளின் கமெண்ட்ஸ் பார்த்து அபூர்வாவின் பார்வையில் மொபைல் பொசுங்காதது ஒன்றுதான் குறை.
“இத்தனை பேர் வளைச்சு வளைச்சு ரசிச்சு புகழ்ந்தா இந்த மனுஷன் ஏன் ஆடமாட்டாரு. கம்பு சுத்தினது ரொம்ப கம்மி. ஹார்ட்டின் தான் லீடிங்க்ல இருக்கு…” என்று சொல்லி சொல்லி புகைந்தவள் வேக வேகமாய் தனது ஹார்ட்களை எல்லாம் கம்பு சுத்த விட்டு கோபத்தை ஆற்றிக்கொண்டாள்.
“கேட்கட்டும் பேசிக்கறேன்…” என சிறுபிள்ளைத்தனமாக நினைக்க அவள் அமர்ந்திருந்ததையும் அவளின் மொபைலில் தெரிந்த பேஸ்புக் பக்கத்தையும் சத்தமில்லாமல் வந்து எட்டி பார்த்தவன் உடனே தனது மொபைலை எடுத்து பார்த்தான்.
ஹார்ட்டுகள் எல்லாம் ப்ளூ கலர் கம்புகளாய் அம்புவிட்டிருக்க கடுப்புடன் “இவளை” என நினைத்துக்கொண்டு வெளியே வந்தவன்,
“என்னடி உன் பிரச்சனை? உடனே எல்லாத்தையும் மாத்திருக்க. இன்னும் என்னலாம் மாத்துவ? சொல்லு…” என்று திடுதிப்பென அவளின் முன்னால் வந்து ஈரம் சொட்ட சொட்ட வந்து நிற்க,
“முதல்ல போய் துவட்டுங்க. தண்ணியா இருக்கு…” என்று சொல்லியவள் டவலை எடுக்க போக,
“நில்லுடி, ரொம்பதான் அக்கறை…” என நிறுத்தியவன்,
“என்ன இது?…” என கேட்க திருதிருவென முழித்தாள். உடனே கண்டுகொள்வான் என்று எதிர்பாராதவள் பாவமாய் பார்க்க,
“ஏன் என் ப்ரபைலுக்கு ஹார்ட் விட்டா என்னவாம்? எல்லாத்தையும் எடுத்துட்டு வெறும் கம்பு சுத்தியிருக்க…” என கேட்க,
“அது சும்மா கை பட்டு….” என்றாள் பதில் சொல்ல முடியாமல்.
“அது எப்படி தெரியாம போகும்? ஏன் ஹார்ட் போட்டா என்னவாம்?…” என்றான் மீண்டும்.
இதற்கு போய் சண்டைக்கு நிற்கிறானே என்கிற கோபத்தில் அபூர்வாவும் வார்தையாட ஆரம்பித்தாள்.
“அதுக்குத்தான் ஏகப்பட்ட பேர் இருக்காங்களே? என்னமோ யாருமே உங்களுக்கு ஹார்ட் போடாத மாதிரி. பவானி கூட போட்டிருக்கா…” என்றாள் இவளும் இடக்காய். அவளின் நக்கலில் தானும் சிரித்தவன்,
“ஹ்ம்ம், ஆனா என் பொண்டாட்டி நீ மட்டும் தானே?…” என அவளை வளைத்து பிடித்தவன் அவளின் கன்னத்தோடு உரசி கேட்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறினாள்.
பின் அவளிடமிருந்து மொபைலை பறித்தவன் தானே தன்னுடைய அனைத்து போட்டோக்களுக்கும் மீண்டும் ஹார்ட்டை தெறிக்கவிட்டான். வாவ் என வாயை பிளந்தான். நானிருக்கிறேன் என்று இருகரம் கொண்டு இதயத்தோடு அணைத்தான். அவனின் அழிச்சாட்டியத்தில் கடுப்பானவள்,
“இதெல்லாம் நானா போடனும்…” என சொல்ல,
“நான் போட்டா என்ன? நீயா போட்டா என்ன? ரெண்டும் ஒண்ணுதான். இனி கம்பு சுத்து. வச்சிக்கறேன்…” என்று அவளின் கன்னத்தில் அழுத்தமாய் கடித்து வைக்க காலிங் பெல் அலறியது.
“ஃபூட் வந்திருச்சுன்னு நினைக்கேன். நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன். நீ போய் வாங்கி வை. ஏற்கனவே பே பண்ணிட்டேன்…” என சொல்லிக்கொண்டு அறைக்குள் சென்றுவிட கடுப்புடன் கதவை திறந்து சாப்பாட்டை வாங்கி டைனிங் டேபிளில் வைத்தாள்.
இரண்டு நிமிடத்தில் வந்தவன் அவள் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு இருவருக்குமான தட்டுகளை எடுத்து வந்து பார்சலை பிரித்து,
“சாப்பிடு பூர்வி, இப்ப ஒரு முக்கியமான வேலையா போகனும் நாம. சாப்பிட்டு தலையை சீவிக்கோ. நம்ம சண்டையை வந்து போட்டுக்கலாம்…” என்று சாப்பிட ஆரம்பிக்க மௌனமாய் உண்டு முடித்தனர்.
“எங்க போறோம்னு கூட சொல்லலை…” என முணுமுணுத்துக்கொண்டே தலையை சீவியவள் மீண்டும் காலில்பெல் அடிக்க வெளியே வந்தாள்.
வாசுதேவகிருஷ்ணன் அன்றைய தினசரி நாளிதழில் தலையை புதைத்திருக்க தானே சென்று கதவை திறந்தாள். அங்கே ஒரு பெண்மணி பூவுடன் நின்றிருந்தார்.
“வணக்கம்ங்கம்மா. தம்பி இனி டெய்லி பூவுக்கு சொல்லிருந்துச்சு. அதான் கொண்டு வந்தேன். இன்னைக்கு இந்நேரம் கொண்டு வந்திருக்கேன். உங்களுக்கு காலையில வேணுமா, சாய்ங்காலமான்னு சொன்னா அதே நேரத்துக்கு வழக்கமா குடுத்துருவேன்…” என சொல்ல ஒரு நொடி யோசித்தவள்,
“இல்லை இந்த நேரமே கொண்டு வாங்க…” என சொல்ல,
“என்ன பூவுங்க…” என்று கேட்டு தெரிந்து கொண்டவர் கிளம்பி செல்ல கதவை பூட்டிக்கொண்டு மீண்டும் உள்ளே வந்தாள்.
பாதி மல்லிகை பூவை கட் செய்து தனக்கு கூந்தலில் சூடிவிட்டு மிச்சத்தை துண்டுதுண்டாய் வெட்டி பூஜை மாடத்தில் இருந்த தெய்வங்களுக்கு வைத்து சாமி கும்பிட்டவள் அவனுக்கும் வந்து கற்பூரத்தை ஒற்றி அவனின் நெற்றியில் திருநீரை பூசிவிட்டு செல்ல அவனின் முகத்தில் புன்னகை.
எப்பொழுதுமே பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் பொழுது முழுவதுமாய் அதில் ஆழ்ந்து போவான் வாசுதேவகிருஷ்ணன். பேனாவை வைத்து சில செய்திகளை மார்க் செய்து குறிப்பெடுத்து கொள்வது அவன் வழக்கம். இத்தனை நாளில் அதை நன்றாக அறிந்து வைத்திருந்தாள் அபூர்வா.